என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Wednesday, December 08, 2010

சன்மானம் முக்கியம், அமைச்சரே!

கொஞ்சமோ, நிறையவோ ஏதாவது ஒரு சன்மானம் இருக்கவேண்டும். இலவசமாக எதைச் செய்தாலும் அதற்கு சரியான மதிப்பு இருக்காது என்பது என் வாழ்க்கை அநுபவம்!

சமீபத்தில் ‘கல்கி’ யில் வெளிவந்த என் கதை, கட்டுரைகளுக்குக் காசோலைகள் தபாலில் வந்திருப்பதாக என் சென்னை உறவினர் போனில் சொன்னார். அமௌண்ட் எல்லாம் ஒன்றும் பெரிசாக இல்லையென்றாலும், சின்னச்சின்ன சன்மானங்கள்கூட எனக்கு உற்சாகம் அளிப்பதை மறுக்கமுடியாது.

இந்த அங்கீகாரம் எழுதுபவனுக்குப் பெரிய உற்சாக ஊற்று.

என் எழுத்துக்கு எப்போது சன்மானம் கிடைக்க ஆரம்பித்தது?

முதன் முதலாக என் சிறுகதை ஒன்று ஆனந்தவிகடன் பவழவிழா மலரில் (’வருகிறேன் தேவதையே!’) வெளிவந்தபோதா அல்லது அதற்கும் முன்பே கல்கண்டில் அல்லது தீராநதியில் எழுதிய சில கவிதைகளா? சரியாக நினைவில்லை. எப்படி இருந்தாலும், அந்தக் காசோலைகளைக் காசாக்காமல் பல நாள் வைத்திருந்தது நினைவில் இருக்கிறது.

ஆனால் குமுதம் ‘ஜங்ஷ’னில் பல கட்டுரைகள் வெளிவந்தும், சன்மானக் காசோலைகள் அனுப்பி இருப்பதாக அவர்களே பலமுறை சொல்லியும், அவற்றைக் கண்ணிலேயே நான் காணாமல் போனது மறக்கவில்லை!

எது பிரசுரமானாலும், தமிழ் பத்திரிகைகளிலிருந்து அதிகம் இல்லாவிட்டாலும் ரு. 300 அல்லது 500, என்று ஏதாவது வரும். விகடனிடமிருந்த வந்த முதல் செக் 600 என்று நினைக்கிறேன்.

கலைமகள் கி.வா. ஜெகந்நாதன் நினைவுப் போட்டி ஒன்றில் கட்டக் கடைசி நாளில் கலந்துகொண்டு முதல் பரிசு வாங்கியது மறக்கமுடியாத ஒன்று. ‘பங்கஜவல்லி’ எழுத ஆரம்பித்து முதல் பாரா முடித்தவுடனேயே என் மனைவியிடம் சொன்னேன், “இந்தக் கதையை எங்கே அனுப்பினாலும் முதல் ப்ரைஸ் வின் பண்ணும், பார்!” என்று. போட்டிகளுக்கெல்லாம் அனுப்பும் எண்ணம் அப்போது துளியும் இல்லை. ஒரு ஏளனச்சிரிப்பு + வலது முகவாயை இடது தோள்பட்டை இடியுடன் அவள் என்னைத் தாண்டிப் போனாள்..

சில வாரங்களில் சென்னை போய் இறங்கினேன்.

”கலைமகள் போட்டிக்கு ஏதாச்சியும் அனுப்பினீங்களா?” என்று பாரா கேட்டார். “என்ன கலைமகள், எந்தப் போட்டி?” என்று நான் பேந்தப்பேந்த விழித்தேன். ”அடாடா, உடனேயே அனுப்புங்க, நாளைக்கு லாஸ்ட் டேட்” பாராஜி என் எழுத்துக்கு ரசிகர் மட்டுமல்ல, எனக்கு ஊக்க டானிக். என்னை விரட்டி விரட்டி வேலை வாங்கத் தெரிந்த ஆசிரியர்.

கதை அனுப்பியதை எல்லாம் நான் மறந்தே போய்விட, சில பல வாரங்கள் கழித்து, நான் முதலிடத்தில் வெற்றி பெற்றதை, கதை பிரசுரம் ஆகி இருப்பதை என் நண்பன் பெங்களூர் சுமன் என்னிடம் ஒரு பின்னிரவில் சொல்லி என்னை சந்தோஷப்படுத்தினான். ரூ. 5000 என்று நினைக்கிறேன். இல்லை பத்தாயிரமா? அதுவும் நினைவில் இல்லை.

ராயல்டி செக்குகளும் திடீர் திடீரென்று கிழக்கிலிருந்தோ விகடனிலிருந்தோ வந்து என்னை குஷிப்படுத்தும்.

சினிமா சன்மானங்களும் அப்படியே. நான் அப்போது புதுமுகமாக இருந்தாலும், முதன்முதலில் ‘பன்னீர் புஷ்பங்க’ளில் நடிக்க என்னை அணுகியபோது, சரியான சினிமா பந்தாவோடு வெள்ளித் தட்டில் ரூ. ஆயிரம், பழங்களோடு ப்ரொடக்‌ஷன் மேனேஜர் ராமச்சந்திரன் என் வீட்டுக்கே வந்தது மறக்கமுடியாத புது அநுபவம்.

சமீபத்தில் நான் நடித்த ‘ஜக்குபாய்’ படத்திற்காகவும் எனக்கு நல்ல முறையில் சன்மானம் நிறையவே கொடுத்து, மிகுந்த மரியாதையுடன், போகவர ஏர்ஃப்ளைட் டிக்கெட்கள், முதல்தர ஹோட்டல் வசதிகள் என்று அமர்க்களப்படுத்தி விட்டார்கள் ராடன் நிறுவனத்தினர். அதுவும் ‘டப்பிங்’ பேசுவதற்காகவே என்னை இந்தியா தருவித்தது பாராட்டவேண்டிய தொழில் தர்மம். அந்தப் படம் சரியாக வியாபாரமாகாமல், ‘நெட்’டில் திருட்டு ரிலீஸ் ஆகி, மரண அடி வாங்கியது வருந்தத்தக்கது.

ஹாலிவுட்டிலும் இப்படியே. ஏதாவது ஷோவிலோ, சினிமாவிலோ, விளம்பரப் படங்களிலோ தலை காட்டினாலும் உடனே ஒரு நல்ல சன்மானம் கொடுத்து விடுகிறார்கள். ஒரு மைக்ரோசாஃப்ட் விளம்பரப் படத்தில் நான் நடித்து, அதை அவர்கள் வேறு எங்கேயோ ஒரு வருடாந்திர அறிக்கையில் பயன்படுத்திக் கொண்டதால், ஒரு திடீர் சர்ப்ரைஸ் செக், தபாலில்! 'ஜிம்மி கிம்மெல்' ஷோக்களில் அவ்வப்போது தலைகாட்டினால் வீட்டுக்குப் போகும்போது கை மேல் காசோலை கொடுத்துக் கைநாட்டும் வாங்கி விடுகிறார்கள்!

நான் ‘எல்லே’யில் இருப்பதால் சென்னையில் ஒரு நண்பனின் முகவரியை முதலில் பத்திரிகைகாரர்களிடம் கொடுத்திருந்தேன். என் செக்குகளை அவன் கண்டுகொள்ளாமல் எங்கேயோ போட்டுவைத்து அப்புறம் மொத்தமாக அவை காலாவதியான பின்னர் கொடுத்த கொடுமைகளும் நிகழ்ந்திருக்கின்றன.

சின்னச் சின்ன சன்மானங்களை மொத்தமாகத் தேற்றி, அந்தப் பணத்தை ‘உதவும் கரங்கள்’ மாதிரி நல்ல காரியம் பண்ணுகிறவர்களுக்குக் கொடுத்து விடுகிறேன்.

சந்தோஷமாக இருக்கிறது!

Friday, December 03, 2010

தேவை, கொஞ்சமாவது முதுகெலும்பு!

ஸ்பெக்ட்ரம் 2G Scam பற்றி எரிகிறது.

சர்வதேச சந்தைகளில் இந்தியாவின் ஊழல், நம்பகத்தன்மை பற்றிய பல ஆதாரமான அடிப்படைக் கேள்விகள் எழுந்துள்ளன.

வட இந்திய மீடியாக்கள் மட்டுமே இதை அதிகமாக, துணிச்சலுடன் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

நம் தமிழ்த் திருநாட்டில் “எங்கேயோ எண்ணெய் மழை பெய்கிறதாம்’ பாணியில் பல இருட்டடிப்பு வேலைகள் மீடியாவில் தொடர்கின்றன. அரசு ஆதரவு பத்திரிகைகளும், தொலைக்காட்சி மீடியாக்களும், இன்னும் சில அரசியல் பச்சோந்திகளும் வாய்மூடி மௌனிகளாக இந்த கேவலத்துக்கெல்லாம் ‘ஒப்புதல் சாட்சியம்’ அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆக்சிஜனுக்கு அடுத்தபடியாக செல்போன்கள் இன்றியமையாதவை ஆகிவிட்ட காலம் இது.

நம் எதிரி நாடுகளாக நம்முடன் சண்டையிட்ட, சண்டை போட்டுவரும் சைனா, பாகிஸ்தான் போன்ற விரோதி நாட்டு கம்பெனிகள் நேரடியாகவோ, பினாமிகள் மூலமோ இங்கே வந்து இந்திய டெலிகாம் துறையில் காலூன்றி விட்டார்கள் என்கிற தகவல் அதிர்ச்சி தரக்கூடியது. பல பந்நாட்டு நிறுவனங்களுடன் நாம் வர்த்தகம், தொழில் செய்வது வேறு. இது வேறு. மீடியா, டெலிகாம் துறைகளில் அமெரிக்காவில் இப்படி வேறு யாரும் காலூன்றி விடமுடியாது.

1985-ல் நியூஸ் கார்பரேஷன் என்கிற பலகோடி மீடியா நிறுவனத்தின் சேர்மன் தன்னுடைய கம்பெனி அமெரிக்காவில் காலூன்ற வேண்டும், பல அமெரிக்க மீடியா கம்பெனிகளிலும் முதலீடு செய்யவேண்டும் என்பதற்காகவே ஆஸ்திரேலியரான ரூபர்ட் மர்டாக் அமெரிக்கக் குடியுரிமைக்காக விண்ணப்பிக்க நேர்ந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

பல வெளிநாட்டு டெலிகாம் கம்பெனிகளுக்கெல்லாம் கேள்வி முறையில்லாமல் மானாவாரியாக இந்தியாவில் கோலோச்ச அனுமதி தந்திருப்பது நாட்டின் இறையாண்மைக்கே வெடி வைக்கும் அதிர்வேட்டு என்பது சாதாரண பாமரனுக்கும் புரிய ஆரம்பித்திருக்கிறது.

எப்படி இதெல்லாம் நிகழ்ந்தது என்கிற வேதனை ஒரு பக்கம். சரி, இனிமேலாவது ஏதாவது செய்து இந்த இழப்பையெல்லாம் சரிக்கட்ட முடியுமா என்று பார்ப்பது இன்னொரு பக்கம்.

Photobucket

”இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனத்தின் பெயரில் உரிமம் பெற்று, பிறகு வெளி நாட்டு நிறுவனத்துக்கு அதைத் தாரை வார்த்து இருக்கிறார்கள். ஒரு நிறுவனத்தின் பூர்வீகம் பாகிஸ்தான் என்கிறார்கள். தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தான் நாட்டு உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ... இவற்றுக்கும் அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்துக்கும் இடையிலான தொடர்பு பற்றி விசாரித்தார்களா? நம் நாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சக்திகளுக்கு ஆதரவு கொடுக்கும் நாட்டில் இருந்தபடியே, நமது நாட்டின் ரகசியங்களை அந்த டெலிகாம் சிஸ்டம் மூலம் இடைமறித்துக் கேட்க மாட்டார்களா?'' என்று டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி கேட்கிறார் விகடன் பேட்டியில்.

கையில் பல ஆதாரங்களை, ஆவணங்களை வைத்துக்கொண்டு தான் அவர் பேசுவதாகத் தெரிகிறது.

''அரசுக்கு வர வேண்டிய ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ரூபாய் நஷ்டம். சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. ஊழல் பணம் 10 சதவிகிதம் ராசாவுக்குப் போனதா? 30 சதவிகிதம் கருணாநிதி குடும்பத்தினருக்குப் போனதா? 60 சதவிகிதம் பணம் சோனியா வின் இரண்டு சகோதரிகளுக்குப் போனதா என்கிற கோணங்களில் சி.பி.ஐ. விசா ரிக்க வேண்டும். ஹவாலா மூலம் துபாய், மாலத் தீவு களுக்குப் பணம் போய் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். ஸ்பெக்ட்ரம் ஊழலில் வெளிநாட்டு வங்கிகளில் நடந்த பணப் பரிமாற்றம் குறித்த தகவல்களை அமெரிக்காவிடம் கேட்டு வாங்கலாம் என்று நம் பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். ஆனால், இந்தத் தகவல்களை நம்முடைய சி.பி.ஐ-யும், 'ரா' உளவு நிறுவனமும் ஏற்கெனவே வாங்கிவிட்டதாகக் கேள்விப்படுகிறேன். ஆதாரங்கள் கையில் வந்துவிட்டன. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்களா என்று பார்ப்போம்!''

மத்திய அரசாங்கத்தின் நேரடிப் பொறுப்பிலேயே சிபிஐயும் ராவும் இன்னும் பல உளவு நிறுவனங்களும் இருப்பதால் வீட்டைப்பூட்டி திருடனிடமே வீட்டுச்சாவியைக் கொடுத்திருக்கும் அவலம் இந்தியாவில் நிகழ்ந்திருக்கிறது.

ஏதோ சுப்ரீம் கோர்ட் என்று ஒன்று இருப்பதாலும், அங்கே கொஞ்சமாவது நீதிமான்கள் நிலைத்திருப்பதாலுமே, தள்ளாடினாலும் உண்மை, நேர்மை, சத்தியம் எல்லாம் இன்னமும் உயிருடன் இருக்கின்றன. அந்தக் குரல்வளையையும் நெறித்துவிடத் துடிக்கும் அசுர சக்திகள் அநேகம் உண்டு.

CBI, RAW போன்ற நம் நாட்டு உளவு, பாதுகாப்பு நிறுவனங்களில் முதுகெலும்பு, நேர்மை, நாணயம் உள்ளவர்கள் ஒரு சிலராவது இருப்பார்கள் என்று நம்புவோம்.

அடுத்த பூகம்ப விக்கிலீக்ஸ் இந்தியாவிலிருந்து வெடித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை!

Friday, October 22, 2010

உச்சரிப்பு முக்கியம் அமைச்சரே!

வரலாறு மட்டுமல்ல, உச்சரிப்பும் முக்கியம் அமைச்சரே!

Thursday, October 14, 2010

அவாளோட ராவுகள் -3

அவாளோட ராவுகள் -3
-------------------------------------

'கொலுப்படி' என்கிற வார்த்தை கேட்டதுமே நம் நாயகனின் காதுகள் விறைத்து, உடம்பு சிலிர்த்ததற்குக் காரணம் இருக்கிறது. அவன் பற்கள் தந்தி அடிக்க ஆரம்பித்தன. ஜூரம் வரும்போல் இருந்தது.

இந்திய வாசகர்களுக்கு இந்தப் படி கட்டுமானப் பணியின் அமெரிக்க தாத்பர்யம் சரியாகப் புரியாது என்பதால் இதைச் சற்றே விலாவாரியாகச் சொல்ல நேரிடுகிறது.

நம் இந்திய வீடுகளில் கள்ளுப்பெட்டி முதல் கண்டாமுண்டான் சாமான்கள் வரை எல்லாமே கொலுப்படிகளுக்கு ஆதார ஸ்ருதியாக நிற்கும். ஏகப்பட்டக் கெழ போல்ட் உறவினர்களில் யாரையாவது ஷிஃப்ட் முறையில் படியாக நிற்கச் சொன்னால் கூட அவர்கள் அதைச் சிரமெற்கொண்டு செய்தும் விடுவார்கள். அதைத்தவிர மர ஆசாரிகள், ஆணிகள் ஆங்காங்கே பொத்துக்கொண்டு குத்தினாலும், வெகு சுலபமாக மரப் படிகளைச் செய்து அடுக்கி விட்டும் போய் விடுவார்கள்.

அமெரிக்கக் கதையே வேறு. ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு வீட்டின் விஸ்தார கன பரிமாணச் சதுர அடிகள் வெவ்வேறு. பல இடங்களில் கார்ப்பெட் வேறு கழுத்தை அறுத்து வழுக்கும். ஐஸ் மழை கொட்டும். அல்லது சூறாவளிக் காற்றில், படிகளென்ன, வீடே பறக்கும்.

மேலும், அமெரிக்க அம்மாமிகள் 'தற்காத்துத் தற்கொண்டான் பிராணனை வாங்கி' அடக்கமாக வாசற்படி மாதிரி மூன்றே மூன்று படி போதும் என்பார்கள். அல்லது ஆகாசம் தொடும்படியாகப் பதிமூன்று படிகள் வரை அடுக்கடுக்காய் வேண்டுமென்றும் படுத்தி மகிழ்வார்கள். அதெல்லாம் அவர்களுடைய அந்தந்த வருஷ ’மூட்’, ஆத்துக்காரரின் வேலை இருத்தல்/இல்லாதிருத்தல், பசங்கள் பரீட்சையில் வாங்குகிற/கோட்டை விட்டு விட்ட மார்க், மூத்த பெண் வெள்ளைக்கார பாய்·ப்ரண்டோடு ஊர் சுற்றுகிறாளா/இல்லையா போன்ற பலவற்றைப் பொறுத்துப் படிகள் குறையலாம், படிகள் வளரலாம். பாடுபடுவது மட்டும் எப்போதும் மாமி கை பிடித்த பாக்கியசாலியே.

இங்கே ஒரு சின்ன ·ப்ளாஷ்பேக் -மாண்டேஜ்கள் கலந்த ·ப்ளாஷ்பேக்- போட்டுக் கொள்ளலாமா? 'யாரங்கே, திரையில் அந்தக் கருப்பு வெள்ளை கலந்த வட்ட வட்டமான ஊதுவத்திச் சுருட்களை ஓட விடப்பா'

காலம்: இரண்டு வருடங்களுக்கு முந்தைய வசந்த நவராத்திரி

பாத்திரங்கள்: நம் நாயகன், நாயகி, கோணாமாணாவென்று கூறு போடப்பட்ட பிரம்மாண்ட மரப் பலகைகள், ஆணிப் பெட்டிகள், சுத்திகள், டிராயிங் பேப்பர் பண்டில்கள், கலர் பென்சில்கள், டிஞ்சர் பாட்டில்கள், பேண்டேஜ்கள், வீக்கம் தணிக்கப் பல பாத்திரங்களில் ஐஸ்கட்டிகள், தாகம் தணிக்கத் திரவ பதார்த்தங்கள், அவ்வப்போது பசியாறத் தின்பண்டங்கள்.

"எதுக்குங்க நாம சிரமப்படணும்? நீங்களோ 'ஹாண்டிமேன்'. உங்களுக்குத் தெரியாததா? போன தடவை பாத்ரூம் கம்மோடு அடைச்சுக்கிட்டபோது நீங்களே தானே குச்சிய உள்ள விட்டுக் குத்திச் சரி பண்ணினீங்க. உங்க பலம் உங்களுக்கே தெரியாது. நம்ம வீட்டுக்குத் தகுந்த மாதிரி நீங்களே ஒரு கஸ்டம் கொலுப்படி கட்டிடுங்களேன். ப்ளீஸ்"

'உன் பலம் உனக்கே தெரியாது' என்று ஜாம்பவான் ஆஞ்சநேயனிடம் சொன்னதில் வஞ்சப் புகழ்ச்சி இல்லை. ஆனால் இது வேறுவகைப்பட்ட நயவஞ்சகப் புகழ்ச்சி.

தலையை ஒரு சிலுப்பு சிலுப்பிக்கொண்டு நம் நாயகன் அமெரிக்க மரக் கடைகளிலெல்லாம் பேய் முழி முழித்துக்கொண்டு அலைந்து பிரம்மாண்டமான கனடா தேச மரப் பலகைகளைக் கடையில் வாங்குகிறான். ($ 118.40)

சின்னஞ்சிறு காரில் அவற்றை ஏற்ற முடியாமல் பேரவதி. கால் சிராய்ப்பு, ரத்தம். 'டர்'ரென்ற பேண்ட் கிழிப்பு. காருக்குப் பெயிண்ட் சிராய்ப்பு ($ 328.90)

U Haul அல்லது Hertz-ல் வாடகைக்குப் பெரிய லாரி ஒன்று எடுக்கப்படுகிறது. ($ 59.00 + பெட்ரோல் $ 23.00)

பி.க.தே.ம. பலகைகளைக் கடையில் ஏற்றி, வீட்டில் இறக்க, வேலை தேடித் தெருவோரம் பல் குத்திக் குந்தியிருக்கும் மெக்சிகன் தேசத்துப் பணியாட்கள் தற்காலிகப் பணிக்கு அமர்த்தப் படுகிறார்கள். ($ (4X20) + டிப்ஸ் $ 20)

மரப் பலகைகளை வீட்டுக்குள் கொண்டு வர முடியாமல் வாசற் கதவைப் பலமாக நெத்தியதில் பிற்பாடு டச்சப், பெயிண்டிங் செலவு ($ 320)

வாங்க மறந்து போய்த் திரும்பத் திரும்பக் கடைக்கு ஓடிச் சேகரிக்கப்படும் பொருட்கள்: அறுவாள், சிற்றறுவாள், சிறு உளி, பேருளி,

அரம், ரம்பம், இழைப்புளி ($ 119.75)

க்ளோசப் ஷாட்டில் நாயகன்: மூன்று நாள் ஆபீசுக்குப் போகாத முள்தாடியுடன்.
கையில் பேப்பர், டார்ச் லைட், இஞ்ச் டேப், அழுக்கு ரப்பர், கலர் பென்சில்களுடன் பேய் முழி முழிக்கிறான். பின்புலத்தில் கால் மேல் கால் போட்டபடி, சோஃபாவில் சாய்ந்து, புன்முறுவலுடன் நாயகி ஆனந்த விகடன் ஜோக்குக்குச் சிரித்துக் கொண்டிருக்கிறாள்.

'கொலுப்படி வளர்வதெப்படி?' சப்டைட்டிலுக்குப் பல இன்சர்ட் ஷாட்டுகள்:
அடுக்கப்பட்ட மரப் பலகைகள் பிரமிட் மாதிரியும், குகை போலும், பனை போலும், 'பிரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வாய்' படத்தின் கடைசிக் காட்சி போலும் பல்வேறாகத் தொங்கியபடி காட்சி அளிக்கின்றன. ஆணி அடிக்க முயன்றதால் அமெரிக்க அட்டைச் சுவர்கள் கிழிந்து பரிதாபம் சொட்டுகின்றன. (இதற்கு இப்போது பட்ஜெட் தேவையில்லை. வேறு மராமத்துக் கணக்கில் 500 டாலராவது பிற்பாடு பழுத்து விடும்.)

ஓரளவுக்கு 7 3/4 படிகளில் கொலுப்படி மாதிரி ஒரு உருவம் நிழலாகப் புலப்படுகிறது. Freeze frame.

கையில் நாயகனுக்குக் காஃபியுடன், சிரித்த முகத்துடன் அவற்றைச் சோதனை செய்ய நாயகி வருகிறாள். மேற்படியின் 'weight bearing properties' தெரிந்துகொள்ளுமுகமாக அங்கே ஏறி அவள் அமர, அத்தனை படிகளும் அம்மணியின் பின்கனம் தாங்காமல் பக்கவாட்டில் சரிய, அவள் சீறலோடு சிராய்ப்புகளில் அலற, ஹவுஸ்கோட் கண்ட இடங்களில் கிழிய ...

இதற்கு மேல் சென்சாரில் வயலென்ஸ்+செக்சுக்காகக் கட் பண்ணி விடுவார்கள். அப்பீலுக்கெல்லாம் துட்டு அழுது அவர்கள் மேல் செல் போனை வீசும்படி ஆகி விடும். வேண்டாம்.

ஃப்ளேஷ்பேக்கிலிருந்து நாயகன் கண்களில் நீர் தளும்ப தற்காலத்துக்கு மீளும்போது, நாயகி நண்பிகளிடம் இரைந்து சொல்லிக்கொண்டிருக்கிறாள்:

"இவருக்கு அதெல்லாம் சரியா வரலைங்கறதுனால, வெறும் அட்டைப் பொட்டிங்களை வெச்சே 'நானே' போன வருஷம் எல்லாம் சரி பண்ணும்படி ஆயிப்போச்சு."

"அப்படியா? போன தடவை வெறும் அட்டைப் பொட்டிங்களை வெச்சேவா பண்ணியிருந்தீங்க? சூப்பரா இருந்திச்சே. நான் கூட போட்டோ எடுத்து வெச்சிட்டிருக்கேன்" -பச்சைப் பட்டுப் புடவையைக் கடனாக வாங்க வந்திருக்கும் ஒரு சூடிதார் அநியாய ஜால்ரா போட்டது.

"தேங்க்ஸ் பிங்கி. ஆனாக்க எந்தப் படிய எப்படி 'நானே கட்டினேன்'ங்கற டயக்ராம் தான் எங்கயோ போயிட்டுது"

'வட கொரியாவின் அணு ஆயுத விபரங்கள்' போன்ற மகா ரகசியங்கள் அடங்கிய அந்தப் பேப்பரைச் சென்ற வருடம் பக்கத்து வீட்டு சோனி நாய் தின்றதை நாயகன் கண்ணாரப் பார்த்து ரசித்திருக்கிறான். ஆனால் அது பற்றி அவன் இப்போது மூச்சு விடுவதாயில்லை.

"உங்க வீட்டுக்காரர் எஞ்சினியர் தானே. இந்த சுண்டைக்காய் அட்டைப்பெட்டி டயாக்ரம் எல்லாம் அவரே பாத்துப்பார்"- பைனாப்பிள் சுண்டல் ரிசிபி கேட்க வந்த மாமிக்கு எதற்கு இந்த வேண்டாத வம்பு?

நம் நாயகன் என்ன ஷாஜஹானின் கொத்தனாரா? அவன் தட்டி முட்டிப் படித்ததென்னவோ கம்ப்யூட்டர் எஞ்சினியரிங். கட்டிடக் கலையா அவன் பயின்றான்?

காது கூசும்படி, கண்களில் அருவி வரும்படி, அக் கண்ணம்மாவிடம் சுடச்சுடக் கேட்டிடத்தான் அவன் நினைத்தான். 'அடக்கு, அடக்கு' என்கிறது அவன் கூடப்பிறந்த வீரம். அடங்கினான்.

இருந்தாலும் 'சட்டுப்புட்டென்று இதில் நாம் இப்போதே தலையிடாவிட்டால் பிற்பாடு தன் தலை பலமாக உருட்டப்படும்' என்கிற தற்காப்புணர்வில் நாயகன் பிளிறுவான்: 'காமேஷ் வீட்ல வெறும் புக்ஸை வெச்சே சமாளிச்சுட்டாங்க. நம்ம வீட்ல திண்டி திண்டியா கம்ப்யூட்டர் மேனுவல்ஸ் நிறைய இருக்கு"

புத்தகங்களை வைத்து கொலுப்படி கட்டுவது பாவமாகாதோ? சரஸ்வதி தேவி கோபித்துக் கொல்ள மாட்டாளோ?

'ச. தேவி மாட்டுவாள், மாட்டவே மாட்டாள்' என்கிற பட்டி மன்றத்தின் பாதியில் நாயகன் எஸ்கேப்.

----------------------------- ------------------------ -------------------------

'நவராத்திரியும் அதுவுமா, ஆ·பிசில பத்து நாள் டூர் போகச் சொல்றாங்க' போன்ற சமயோசித சால்ஜாப்புப் பொய்கள் எடுபடவில்லை.

'வயிற்று வலி, ஜுரம், வாந்தி, பயம்' என்றெல்லாம் ஏதேதோ சொல்லிப் பார்த்தான். ம்ஹ¤ம்.

"ஆம்பளையா லட்சணமா ஒரு பதினோரு படி கட்டுங்க, பார்ப்பம். நான் போய் கேராஜ்ல இருக்கற ப்ளாஸ்டிக் பொம்மைங்கள எல்லாம் தொடச்சி வெக்கறேன்"

இந்த வருஷமும் இவனே படிக் கட்டுமானக் கொத்தனார் வேலை செய்ய நேர்ந்தது. தஞ்சை பெரிய கோவில் கட்டுவதற்கு ராஜராஜ சோழன் சாரப்பள்ளம் என்கிற ஊரிலிருந்து ஒரு சாரம் அமைத்து அதன் மேல் கருங்கற்களை ஏற்றிச் சென்ரதாகச் சொல்வார்கள்.

லிவிங் ரூமில் கொலுப்படி அமைக்கப் பெட் ரூம் சாரப்பள்ளம் ஆகியது.

சித்தாளேதுமில்லாமல் பெரியாள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. 'சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா? மேஸ்திரிக்குச் சின்ன வீடு புடிக்குமா, பெரிய வூடு புடிக்குமா? என்று தேஜாஸ்ரீ சிணுங்கிக் கொஞ்சுவதெல்லாம் திரையில் தான்.

"அய்யோ, இதைக் கொஞ்சம் புடிக்குறியாம்மா?" என்ற அவன் ஹீனக் குரல்கள் யார் காதிலும் விழாமல் தன்னந்தனியே தான் அவன் தன் தாஜ்மகாலை ரத்தக் களரியாகக் கட்டினான்.

சற்றே அசைந்தாடும் கால்கட்டுப் போடப்பட்ட உடைந்த ஸ்டூல்கள், பளு தூக்கும் பெஞ்ச், கணினிக்கோனார் நோட்ஸ்கள், டெலிபோன் டைரக்டரிகள், தமிழ்-ஆங்கில அகராதிகள், மாமனார் உபய எட்டு முழ வேட்டிகள், அங்கவஸ்திரங்கள் உதவியில்- மரப் பலகைகளே இல்லாமல்- ஏழு படிகளில் இந்த வருஷக் கொலுப்படி தயாராகி இருந்தது.

"நீங்கதான் உசரமா இருக்கீங்க. அப்படியே அந்த மேல் படிகள்ளல்லாம் பொம்மைங்களை அடுக்கிக் கொடுத்திருங்களேன்". அவள் சொன்னாள். அவன் செய்தான்.

"இந்தப் பித்தளை வெளக்குங்களைப் புளி போட்டு வெளக்கிக் கொடுத்திடுங்க. நான் ரொம்பப் பூஞ்சை. உங்களுக்குத்தான் நல்லா கை அழுந்தும்" மெல்லியலாள் சொன்னாள். வல்கைவில்லாளன் செய்தான்.

"வெள்ளிப் பாத்திரங்களுக்கு விபூதி யூஸ் பண்ணுங்க, பளிச்சுன்னு ஆயிடும். புளி போடக் கூடாது" அவனும் இளித்துக்கொண்டே செய்தான்.

"அப்படியே கடைசிப் படியில சின்னதா ஒரு ஸ்விம்மிங் பூல், மிருகக் காட்சிசாலை செஞ்சுடுங்க. பசங்க வெளையாடும்" குழந்தைகளின்

சிறு சிறு பொம்மைகளை வைத்து அவன் வண்டலூர் செய்தான். அவள் ஆலோசனைகள் மட்டும் சொன்னாள்.

"சக்தி விகடன்ல என்னென்னைக்கு என்ன சுண்டல் பண்ணணும்னு போட்டிருக்காங்க, படிச்சீங்களோ? இன்னிக்குக் கொண்டக் கடலையயை நீங்களே தண்ணியில ஊறப் போட்டுடுங்க. நான் நாளைக்குத்தானே குளிக்கறேன்"

சுடச்சுடச் சுண்டல்கள் பலவும் செய்தான், சுடர் மணி விளக்கேற்றினான், சுற்றி வந்து வணங்கினான். தினம் தினம் சுலோகங்களும் சொன்னான்.

----------- ---------------- -------------

புதுப்புது நவராத்திரி டிசைன்களில் கலர் கலரான புடவைகளிலும், பட்டுப் பாவாடைகளிலும் அவன் வீட்டில் பெண்டிர் குழுமியிருந்தார்கள். கீச்சுக்குரலிலும், கட்டைத் தொண்டையிலும், வசூல்ராஜாவிலிருந்தும் வக்காளியம்மன் நளவெண்பாவிலிருந்தும் பாட்டுக்கள் பாடப்பட்டன.

'க்ஷ¢ராப்தி கன்னிகே ஸ்ரீ மகாலஷ்மி' என்று புரந்தரதாசரை ஒரு மாமி ராகமாலிகையில் வம்புக்கு இழுத்தால், 'சரசிஜநாபசோதரி' என்று மற்றொரு பாட்டி முத்துஸ்வாமி தீக்ஷ¢தரை நாககாந்தாரியில் மிரட்டினாள்..

ஏழாவது படியில் கொலு வீற்றிருந்த அம்மன் இறங்கப் பயந்து எல்லோருக்கும் அங்கிருந்தே அருள் பாலித்தாள்.

எங்கும் ஒரே பெண்டிர் கூட்டம். ஏகப்பட்ட குதூகலம்.

"எல்லாம் நானே தான் செஞ்சேன். அவருக்கு இதுக்கெல்லாம் நேரம் எங்க இருக்கு? எப்பப் பார்த்தாலும் ஆ·பீஸ், ஆ·பீஸ்னு ஓடிக்கிட்டே இருக்காரு, பாவம்"

"எப்படிங்க நீங்களே தனியா கொலுப்படி கட்டினீங்க?"

"அய்யோ, அதையேன் கேக்கற, கிரிஜா. நானே ப்ளான் போட்டு, நானே டிசைன் பண்ணி, நானே அட்டைப் பொட்டிங்களை வெச்சே எல்லாத்தையும் கட்டி முடிச்சேன்"

"அட, என்ன ஆச்சரியம்! அட்டைப் பொட்டிங்களை வெச்சே கொலுப்படி கட்டிட முடியும்னு உங்களுக்கு எப்படிங்க தோணிச்சு?" பேட்டி ஆரம்பித்தது.

"ஓ, அதுவா? இதெல்லாம் எர்த்க்வேக் அடிக்கடி வர ஏரியா இல்லியா, அதனால தான்"

"ப்ளீஸ், அந்தப் படி டிசைனை நீங்க தயவுசெஞ்சு காப்புரிமை இல்லாம எங்களுக்குத் தரணும்"

"எப்படி நீங்களே எல்லா பொம்மைங்களையும் அடுக்கினீங்க?"

"என்னத்தப் பண்றது, பாமா? வீட்டுக்காரர் ஒண்ணும் சரியில்ல. ரெண்டு வருஷம் முன்னாடி மரத்துல படி கட்டறேன்னு அவர் அடிச்ச கூத்துல நான் பயந்தே போயி, அதான் இப்படி ஒரு ஐடியா. எல்லாம் நானே தான். எல்லாம் நானே தான். எல்லாம் நானே தான்."

-------------------- ------------------ ------------------

பூட்டிய பெட்ரூமில் தன்னந்தனியனாக ஜாவாவுடன் முட்டிமோதிப் பிறாண்டிக் கொண்டிருந்த நம் நாயகனுக்கு அந்தக் கணத்தில் தான் அந்த ஞானோதயம் பிறந்தது: 'நவராத்திரி என்பது அம்பாளைக் கொண்டாடிப் பெண்டிர் நோன்பு நோற்று மகிழும் பண்டிகையே அல்ல. அதை நம்பாதீர்கள். ஆணினத்தை அடிமைப்படுத்தி அவலப்படுத்துவதே இதன் முதற் பெரும் நோக்கம்.'

'ஹே லண்டி' என்று பெருங்குரலில் அவன் அலறினான்.

"என்னங்க சத்தம் உங்க வீட்டு பெட்ரூம்ல?

"ஓ, அதுவா? ஒண்ணுமில்ல. எங்க வூட்டுக்காரர் சண்டி பூஜை பண்றாருங்க சுத்த பத்தமா சத்தமா . ஆம்பளையா லட்சணமா நாம எதுவுமே பண்ணலியேன்னு அவருக்கு ஒரே வெட்கம். அதான் வெளியில வராமா தனியா உட்கார்ந்து பூஜை பண்ணிக்கிட்டிருக்காரு"

இப்போது சொல்லுங்கள். என்னுடைய சமூகவியல் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புக்காக எனக்கு நோபெல் பரிசு கிடைக்குமா, கிடைக்காதா?

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்


பி.கு. 3: நோபெல் பரிசுத் தொகையில் சரியாக 34,984,089,735.7894 மில்லியன் பேந்தா கோலிகள் வாங்க முடியுமென்பதை விஞ்ஞான பூர்வமாக விளக்கியிருந்த மொரீஷியஸ் ஆண் வாசக அன்பருக்கு: என் கையால் நானே ஊறவைத்து, நானே தேங்காய் துருவிப்போட்டு, நானே கிளறி, நானே தாளித்துக் கொட்டிய உளுத்தம்பருப்புச் சுண்டல் UPS மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. பயப்படாதீர்கள். என் சுண்டல் ஊசிப்போகாது. என் கை மணம் அப்படி.

பி.பி.கு: இத்துடன் இந்த மறு ஒளிபரப்பு நிறைவடைகிறது!

Wednesday, October 13, 2010

அவாளோட ராவுகள் -2

அவாளோட ராவுகள் -2
_______________________

பெண்ணினத்துக்கு விழிப்பியம் வந்தே விட்டது. பாரதி இனிமேல் தன் நீள் உறக்கத்தை நிம்மதியாகத் தொடரலாம்.

'நவராத்திரி என்பது அம்பாளைக் கொண்டாடிப் பெண்டிர் நோன்பு நோற்று மகிழும் பண்டிகையே அல்ல. ஆணினத்தை அடிமைப்படுத்தி அவலப்படுத்துவதே இதன் முதற் பெரும் நோக்கம்'- என்று நான் ஒரு ஆராய்ச்சி ஸ்டேட்மெண்ட் விட்டாலும் விட்டேன். அதற்கு இவ்வளவு பெரிய ரியாக்ஷன் வருமென்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

வீட்டு வாசலில் மலைமலையாய்க் கடிதங்கள். இருக்கிற போஸ்ட் பாக்சின் அளவு போதவில்லை என்று தபால்காரர், அடுத்த வீடு, அதற்கடுத்த வீடு, அடுத்த தெருவிலுள்ள பெட்டிகளிலெல்லாம் என் வாசகர் கடிதங்களைத் திணித்துத் திணித்து வைத்திருக்கிறார்.

"'சந்திரமுகி'யில் யார் நன்றாகத் திறமை காட்டுவார்கள், சிம்ரனா, ஸ்நேகாவா?' " என்கிற ஆன்ம விசாரத்தில் நாடே ஆழ்ந்து கிடக்கும்போது, என் போன்ற எழுத்தடியார் சிலர் அநாவசியமாக இண்டர்நெட்டில் என்னென்னவொ எழுதி எங்கெங்கோ போடுகிறோம். இதையெல்லாம் யாருமே படிப்பதில்லை என்பது சந்தோஷமாகத் தெரிந்த ஒன்று தான். அதனால்தான் இவ்வளவு அதிபயங்கர எதிர்விளைவுகளுக்குத் தயாராக இல்லாமல் நான் அசட்டையாக இருந்து விட்டேன்.

லாஸ் ஏஞ்சல்சில் இந்த நவராத்திரி நேரத்தில் வழக்கமாகச் சுண்டல் மழை பெய்யும். பாயச ஹைவேக்களில் ஊர்திகள் வழுக்கும். என் கட்டுரைக்குப் பிந்திய வானிலையில் வெப்பம் மட்டுமே மிக அதிகமாகச் சுடுகிறது.

எழுதியதற்கு மறு நாளிலிருந்து எனக்குக் காலை கா·பி கட் பண்ணப்பட்டு விட்டது. பழங்காலச் சமையல் பதார்த்தங்கள் ·ப்ரீசரிலிருந்து விறைத்து வந்து தட்டைக் குளிரில் நடுங்க வைக்கின்றன. முக்கியமான விருந்தாளிகளை அமரவைக்கும் ஸ்பிரிங் குத்தும் நடு ஹால் சோ·பாவிலே தான் என் வாசம் என்றாகி விட்டது. கிட்டத்தட்டப் போர் முனையிலிருந்து செய்திகளைச் சுடச் சுடத் தரும், துப்பாக்கிச் சூடுகளுக்கு நடுவே உயிர் தப்பிக்கும், சிப்பாய்ப் பத்திரிகையாளன் நிலையில் நான் இருக்கிறேன்.

இருப்பினும், எதிர்ப்புகள் எப்படி வரினும், ஒரு அதி முக்கிய சமூகவியல் விஞ்ஞான ஆராய்ச்சி அமுங்கிப் போய் விடக்கூடாதே என்கிற ஒரே ஒரு காரணத்தால் மட்டுமே நாம் இதைத் தொடர்கிறோம்.

---------------- -------------------- --------------------


ரிஷிமூலம், நதிமூலம் என்றெல்லாம் எரிச்சலில்லாத சில நான்-மெடிகல் மூலங்கள் இருப்பது நமக்குத் தெரியும். இந்த சமாச்சாரத்தின் ஆதிமூலம் என்னவென்பதை இப்போது அலசுவோம்.

நம் NRI நாயகன் -'கௌரவ ஜெயில்' கோது மாதிரி ஒரு அப்பிராணி- சின்னஞ்சிறு விடுப்பில் சென்னைக்குச் சென்றிருப்பான். இன்னும் இரண்டே நாட்களில் அமெரிக்கா திரும்பவேண்டுமே என்கிற பெருங் கவலையில் இளைத்துக் கருத்திருப்பான். நண்பர் குழாம் வலிந்தூட்டிய ரம்மும் கிங்·பிஷரும் சேர்ந்து பின் மண்டையில் இடி இடிக்கும், 'சங்கீதா'வும் 'சரவணபவனு'ம் அடிவயிற்றில் ரகளை பண்ணியிருக்கும். 'பொன்னுசாமி'யும் 'வேலு'வும் மேல்வயிற்ரில் தனி ஆவர்த்தனம் வாசித்திருப்பார்கள்.

சென்னையின் சுகந்தங்களை இவ்வளவு சீக்கிரம் மறந்து 'ஒரு செயற்கை வாழ்வைப் புலம் பெயர்ந்து அயல் நாட்டில் வாழத்தான் வேண்டுமா?' என்று மனச்சாட்சி கேள்வி கேட்டபடி தகிக்கும். ஒரு பெட்டியும் பூட்டாது. பூட்டுகிற ஒரே பெட்டியில் எலி பெருங்கடி கடித்திருக்கும். கைப் பைகளில் ஜிப்புகள் வாய் பிளந்திருக்கும். வீரம் களைத்திருக்கும். பாரம் கனத்திருக்கும்.

மிகக் குழப்பமான காலகட்டம் இது.

இருந்தாலும் ஒரு வழக்கமான அசட்டுத்தனம் செய்வான். அமெரிக்காவுக்குப் போன் போட்டு, "என்னம்மா, உனக்கு ஏதாவது எடுத்துட்டு வரணுமா?"

சம்பிரதாயமான சாதாரணக் கேள்வி தான். இதற்கு வசனம் தேவையில்லை. ஆனாலும், பல பெண்மணிகள் "மறந்துடாதீங்க, அப்பளம், கருவடாம், ஆவக்கா ஊறுகா, அக்கா கிட்ட சொல்லி என் அளவு ஜாக்கெட்' என்று ஆரம்பித்து அரை மணி நேரம் லிஸ்ட் கொடுப்பார்கள்.

ஏற்கனவே தலை சுற்றியிருக்கும் நம் நாயகனுக்குக் கொஞ்சம் மசக்கை மாதிரி வாந்தி கூட வரும்.

"ஹலோ, ஹலோ, லைன்ல இருக்கீங்கல்ல, வெச்சுட்டீங்களோனு பாத்தேன். அப்பறமா, அடுத்த மாசம் நவராத்திரி கொலு வருதே. நீங்க ஒண்ணு செய்யுங்க. எங்க அம்மாவோட கூடவே போய்க் கொஞ்சம் பொம்மை வாங்கிட்டு வந்துருங்க"

'ஏதோ சின்னக்குழந்தைக்குக் கிலுகிலுப்பை வாங்கி வரச் சொல்கிறாள், ஈதென்ன பிரமாதம்' என்கிற நினைப்பில் நாயகன் வழக்கம் போல், சரியாகப் புரிந்து கொள்ளாமல், முகம் கோணாமல், தலையாட்டுவான்.

ஆபத்து அங்கே தான் உருவாகும். அது தான் கொலுமூலம்.

மாமனார் வீட்டிலிருந்து ஒரு படையே பஸ்ஸிலும் ஆட்டோவிலும் பறந்துபோய், 'காதி கிராமோத்யோக் பவன், காதி கிரா·ப்ட், கர்நாடகா பஜார், கைரளி' என்று 'க' வரிசையில் ஆரம்பித்து '·' வரை வகை வகையாக அரை இஞ்சிலிருந்து ஆள் உயரம் வரை பொம்மைகள், படங்கள், பீடங்கள், சிலைகள், சீலைலள் என்று வாங்கி வந்து நடுக் கூடத்தில் அடுக்கி விடுவார்கள்.

அத்தானின் எதிரிலேயே அமெரிக்காவுக்குப் போன் போடப்பட்டு 'அத்தான் பாவம், ரொம்ப சமத்து. எல்லாத்தையுமே அமெரிக்காவுக்கு எடுத்துட்டுத்தான் போவேன்னு அடம் புடிக்குறாரு. நீ ரொம்பக் கொடுத்து வெச்சவடி, இவளே, அப்படியே இந்த நவராத்திரிக்கு ஆரெம்கேவியில 'புதுசு மாமா புதுசு'ன்னு ஒரு சீரிஸ் வந்திருக்கு. அதுல நாலு பொடவையும் அவரையே வாங்கியாரச் சொல்லு. அளவு ஜாக்கெட்டு என் கிட்டத்தானே இருக்குது"

நடுக்கூடமே கலகலக்கும். வளையல்கள் சிரிக்கும். வாண்டுகள் பறபறக்கும். நம் நாயகனின் பல் நறநறக்கும்.

யு கெட் தி பாயிண்ட், மை லார்ட்ஸ்?

சணல் கட்டிய அழுக்கு அட்டைப்பெட்டிகளில் தசாவதார செட்டையும், யாளிகளையும், யானைகளையும், கருடசேவை செட்டையும், கீதோபதேசத்தையும், சீதாராமலட்சுமணபரதசத்ருக்னசமேதஸ்ரீ ஆஞ்சநேயரையும் ஏர்போர்ட்டில் WMD போல் பார்ப்பார்கள். எந்த ஸ்டாண்டர்ட் ஏர்போர்ட் பெட்டிகளிலும் அடங்காமால் தஞ்சாவூர்ச் செட்டியார் சிரிப்பாய்ச் சிரிப்பார்.

"பொட்டிங்கள்லாம் செம வெய்ட் சார். எல்ஸ்ட்ரா பேமெண்ட் ஒரு இரண்டாயிரத்து முந்நூறு டாலர் ஆவுதே' என்று கவலைப்படாமல் ஏர்போர்ட் சிப்பந்தி கண்ணாடி வழியே மொழிவார்.

நம் நாயகனுக்குச் 'சொரேல்' என்று இழுக்கும். வெறும் மண் பொம்மைகளுக்கு இத்தனை அதிகப்படி சார்ஜா?

"வேணாம்னா கீழ எடுத்துப் போட்றுங்க. ஏய் பீட்டர், இதையெல்லாம் எடுத்துக் கடாசு. நெக்ஸ்ட்"

பீட்டர் எதையாவது எடுத்துக் கடாசி உடைத்து விட்டால் கலாசார யுத்தமே நிகழ்ந்துவிடும் பேரபாயம் இருக்கிறது. 'எல்லாவற்ரையும் அத்தான் பத்திரமாக எடுத்துப் போகிறாரா?" என்பதை வேவு பார்ப்பதற்காகவே ஒரு பெருங் கூட்டம் கண்ணாடி வழியே கண் கொத்திப் பாம்பாய்ப் பார்த்திருக்கும். எதையேனும் தூக்கிக் குப்பைத் தொட்டியில் வீசி விட்டால், பத்தாயிரம் மைல் தள்ளிக் கட்டாயம் வெடித்து விடக்கூடிய யுத்த பயத்தில் நாயகன் ஏர்போர்ட் ஆ·பீசரைக் கெஞ்சுவான்: வழிவான்.

கேவலமான காட்சி இது. "கஸ்டம்ஸ் ராமமூர்த்திக்கு இன்னிக்கு நைட்டூட்டி இல்லியா சார்? ஏர்போர்ட் மேனேஜர் கூட என் மாமனாரோட ஒண்ணுவிட்ட தம்பிக்கு ..."

நாயக ’பாவ’த்தைக் கேட்கத்தான் ஆள் இருக்காது.

பரமாத்மா மகாவிஷ்ணுவின் மர தசாவதாரம் அவருடைய பல கைகளாலேயே மடிக்க முடியாத மரப்பாச்சி செட். அற்பர்கள் இரண்டு சோனிக் கையாலா மடிக்கமுடியும்? சியட்டிலில் போயிங் 747 கட்டுபவர்களை நிற்கவைத்துச் சுட வேண்டும். கார்கோ ஹோல்டுக்குள்ளும் போகாமல், கையோடு விமானத்துள்ளும் எடுத்துப் போக முடியாமல், கடாசவும் குடியாமல் பன்னாட்டு விமான நிலையத்தில் பல நாயக நண்பர்கள் அழுது புலம்புவதை நான் கண்ணாரக் கண்டிருக்கிறேன்.

அடியேன் கதையையும் ஒரு முறை சொல்லி அழுது விடுகிறேன். அன்பு வாசகர்கள் உங்களிடம் சொல்லாமல் யாரிடம் நான் சொல்லி அழ? பப்பளக்கும் பலப்பல வைரவைடூரியப் போலி நகைகளுடன் பகவான் வெங்கடாசலபதியை நான் பட வீரப்பன் போல் திருப்பதியிலிருந்தே கடத்துகிறேன் என்று சந்தேகித்த கஸ்டம்ஸ் அதிகாரி ஒருவர் ஒருமுறை என்னைத் தன் மீசையை ஒதுக்கியபடி ஓரங்கட்டினார். நான் பவ்யமாக, 'சார், லார்ட், காட், ஸ்வாமி, உம்மாச்சி, கண்ணைக் குத்திடும்' என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்ததை அவர் கண்டுகொள்ளவில்லை. பூட்சைக்கூடக் கழட்டாமல், அகிலமெல்லாம் தரையில் புரண்டு அங்கப் பிரதசிணம் செய்து தொழும் ஆண்டவனை முதலில் படுக்கவைத்து எம்ஆர்ஐ மாதிரி ஏதோ செய்தார்கள். 'ஒரிஜினல் பாபாலால் டைமண்ட்ஸ்' என்றான் ஒரு ஜுனியர் கஷ்டம்ஸ் பிரகிருதி. நான் முறைத்தேன். 'ஓகோ' என்று பதிலுக்கு என்னை முறைத்து அங்கேயே ஐந்தாறு பேரோடு ஒரு அவசர மீட்டிங் போட்டான்.

பிலிப்ஸ் ஸ்க்ரூ டிரைவர் கிடைக்காமல் நெயில்கட்டர் மாதிரி எதையோ வைத்துப் பகவானை நெம்பி நெம்பிப் பார்த்தார்கள். உலலளந்த பெருமாள் அப்போதும் சிரித்தபடியே இருந்தார். நான் அழ ஆரம்பித்தேன். கடைசிச் சோதனையாக, அப் படத்தை அவர்கள் 220 வோல்ட்டில் செருகித் தீவிரமாக ஆராய முற்பட, அப்பிராந்தியமே பழைய எண்ணெயில் பப்படம் சுட்ட புகை போல கமற, பிரத்தியேகமாக அப்படம் 110 வோல்டேஜுக்காகத் தயாரானது என்கிற உண்மை எல்லோருக்குமே படு லேட்டாக என்னால் சொல்லப்பட.... வேண்டாம், என் சொந்த சோகங்களும், ஜோடித்த சோகங்களும் என்னோடே போகட்டும். நாயகன் கதைக்கே திரும்புவோம். பக்தர்களை ஆண்டவன் ரொம்பவும் தான் ஏர்போர்ட்டில் சோதிக்கிறார்.

அப்பாடு பட்டு அத்தனை சாமிகளையும் பொம்மிகளையும் நம் மதுரை வீரன் எடுத்து வந்து அமெரிக்க லிவிங் ரூம் கார்ப்பெட்டில் வைத்தால், அய்யகோ, அந்தக் காட்சி காண்பவர் எவரையுமே கலங்கடித்து விடும். கை போன கன்னியரையும், தலை இல்லாக் கடவுளரையும், வில்நசுங்கிய வீரராமரையும், வீணையின் தந்தி அறுந்த மீராபாயையும் கண்டு நாயகி பெருங்குரலில் கண்ணகியாய் ஓலமிடுவாள்:

"உங்களுக்குக் கொஞ்சமாவது ஒரு இது இருக்கா? லலிதா புருஷனப் பாருங்க, பெங்களூர்லேருந்து ஒர் சந்தனக் கட்டிலையே பண்ணிக் கொணாந்திருக்காரு. மேட்சிங்கா டைனிங் டேபிள் வேற. நம்ம நளினி புது வீட்ல ரோஸ்வுட் ஊஞ்சல், ஒரு கீறல் இல்லாம வந்து சேரலியா? உங்களுக்கு இதுக்கெல்லாம் சமத்தே போறாதுங்க. சும்மா ரெண்டே ரெண்டு பொம்மை கொண்டு வாங்கன்னா, எல்லாத்தயும் வாங்கி ஒடச்சிக் கூடையில மொத்தமாப் போட்டுக் கொண்டாந்திருக்கீங்க. எங்க அம்மா மனசு என்ன பாடு படும்?"

நம் நண்ப நாயக மனம் படும் பாடு பற்றி எவரும் கிஞ்சித்தும் கவலைப்படார்.

மறு நாள் முதல் ஆ·பீசிலிருந்தும், 'ஆபீஸ் டெப்போ' போன்ற கடைகளிலிருந்தும் கோந்து முதலான ஒட்டு சாமான்கள், குயிக் ·பிக்ஸ், பெயிண்ட் வகையறாக்கள் தருவிக்கப்பட்டு, முதல் உதவி, பேண்டேஜ், எமர்கென்சி அறுவை சிகிச்சை போன்றவை அதே நடுக் கூடத்தில் நடக்க ஆரம்பிக்கும்.

கடவுளர் மீண்டும் உயிர் பெறுவர். நடன மாது சிருங்காரச் சிரிப்புடன் தொட்டவுடன் மீண்டும் நடம் ஆடுவாள். குணப்படுத்தப்பட்ட்ட குதிரைகளேறிக் கண்ணன் மீண்டும் கீதோபதேசம் செய்வான்.

தானே தன் கையால் எல்லாவற்றையும் சரி செய்து விட்டதாக அம்மாவிடம் அவள் பீற்றோ பீற்றென்று பீற்றிக் கொள்ளும்போதும், 'அதனால பரவால்லம்மா, அடுத்த விசிட் இவர் வரும்போது கல்யாண செட்டு வாங்கிக் குடுத்துடுங்க' என்னும்போதும் நாயகன் காட்டவேண்டிய முக பாவம்: வெறும் 'கப்சிப் கபர்தார்' மட்டுமே.

வர்ஷ ருதுவின் புரட்டாசி ஆரம்பத்தில் ப்ரீ-நவராத்திரி வியூயிங் என்று ஒன்று ஐந்திரக் கண்டத்தில் உண்டு. இப்போது எது ·பேஷன், எந்தக் கலர் புடவைக்கு எந்த நகை மேட்சாகும் என்பது போன்ற அத்தியாவசியத் தகவல்கள் தவிர, எந்த சாமிக்கு இந்த வருஷம் மேற் படி ப்ரமோஷன், பார்பி, கென், பொம்மைகளை இந்துத்வாப் படிகளில் வைக்கலாமா, கூடாதா என்றெல்லாம் நங்கையர் கூடிக் கூடிப் பேசுவார்கள்.

எந்தெந்த பொம்மைகளை யார் யார் எப்படி உடைத்து எடுத்து வந்தார்கள், எந்த அன்னை தெரசா அதற்கு எப்படி வைத்தியம் பார்த்தார் என்கிற விபரங்களும் அலசப்படும்.

அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் தான் 'கொலுப்படி கட்டுவது எப்படி?' என்கிற பேச்சு எழுந்தது.

(ஹவாயியில் ஆயுத பூஜைக்குள் முடித்து விடலாம். கவலைப்படாதீர்கள்.)

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

பி.கு.2: முதல் பி.கு. வுக்கு வந்திருக்கும் அநேக பதில்கள் அலசப்படுகின்றன. பொறுமை, ப்ளீஸ்!

பி.கு: இது ஒரு மீள்பதிவு. நான் நினைவலைகளில் நீந்தி மூழ்கியதன் விளைவு, நீங்களும் அனுபவிக்கிரீர்கள், பாவம்!

Tuesday, October 12, 2010

அவாளோட ராவுகள் - 1

அவ(¡)ளோட ராவுகள் -1
__________________

ஊசி முனையில் அம்பாள் ஈஸ்வரனை நினைத்துக் கடுந்தவம் புரியும் இந்தப் புனித நவராத்திரி நோன்பு நாட்களில், ஒவ்வொரு நாளும் அம்பிகையின் ஒவ்வொரு குணாதிசயத்தைப் பௌராணிகர்கள் போற்றிப் புகழ்ந்து தேவி மகாத்மிய பாகவதம் பாடிக் கொண்டிருக்கும் புண்ணியமான பண்டிகை காலத்தில், இப்படிப்பட்ட ஒரு மலையாளப் படத் தலைப்புடன் இதை நான் எழுத நேர்ந்திருப்பது நிறையவே விசனிக்கத் தக்கது.

இதற்காக நான் வருந்துவது கொஞ்ச நஞ்சமில்லை. இருந்தாலும் என் கடமையே நான் செவ்வனே செய்தாக வேண்டும்.

தாரண வருட சரத் ருதுவின் துலா மாதப் புண்ணிய காலத்தில் இப்படியெல்லாம் அபஜருத்து மாதிரி எழுதுவதற்காக நான் அதல பாதாளத்துக்கும் கீழே ஒரு பயங்கர லோகத்தில் எந்த எண்ணெய்க் கொப்பரையில் எப்படி வெந்து 'தையா தக்கா' என்று குதிக்கப் போகிறேனோ தெரியவில்லை. நான் வாங்கிப் போட்டிருக்கும் என் புது ஜட்டியை அப்போது என்ன செய்வார்கள்? தலை தீபாவளிக்கு என் மாமனார் எனக்கு ஆசை ஆசையாய் வாங்கிப் போட்ட என் மைனர் செயின் (14 காரட்) என்ன ஆகும்? "இனிமே இப்படியெல்லாம் எழுதுவியா, மவனே? உனுக்கு இம்போர்ட்டட் மலேசியன் ச·போலாவா கேக்குது? கையேந்தி பவன் கருகல் எண்ணெய லாரி டீசலோட கலந்து கலாய்ல ஊத்துப்பா இவுனுக்கு" என்று எண்ணெய்க் கொப்பறை இன் சார்ஜ் எம கிங்கரர்கள் கை கொட்டிச் சிரித்து மகிழலாம்.

நான் செய்கின்ற பாவம் அவ்வளவு கொடியது தான்.

இருந்தாலும் சில உண்மைகளே, நோம் காலம், மீனம், மேஷம் பார்க்காமல், உடனே விளம்பத்தான்- உண்மை புரிந்தவுடன் சொல்லத்தான்- வேண்டும். இந்தப் பேருண்மையைப் புரிய வைத்ததற்காக ஆணினமே எனக்கு வருங்காலத்தில் பெருங்கடன் பட்டிருக்கப் போகிறது என்பதை நினைக்கையில் நான் கொஞ்சம் தெம்பாக விசும்புகிறேன்.

ஆமாம், இது என்ன இந்தக் கட்டுரைக்கு இப்படி ஒரு தலைப்பு?

அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

இதுவே என் நாடக ஸ்கிரிப்டாக இருந்தால் கடைசிக் காட்சியில் யாரையாவது இந்தத் தலைப்பை மூன்று முறை சொல்லவைத்து- என்னங்க சொல்றது அந்தச் செம்மொழி வார்த்தைக்கு? ஆஹா நினைவுக்கு வந்து விட்டது- 'ஜஸ்டி·பை' பண்ணியிருப்பேன். சினிமாவாக எடுத்திருந்தால் கே. பாலச்சந்தர் பாணியில் கரும்பலகையிலாவது இந்தத் தலைப்பை எழுதி அதே ஜ.வைப் பண்ணியிருக்கலாம். ஆனால் இதுவோ இணையக் கட்டுரை.

நல்ல நாளிலேயே மரத்தடியர்கள் இந்த மாதிரி ஆராய்ச்சிக் கட்டுரையெல்லாம் படிக்க மாட்டார்கள். காதல் கவிதை பற்றி யாராவது கிலோக் கவிஞர்கள் கருத்து தெரிவித்தால் கூர்ந்து கவனித்துப் பதிலுக்கு பதில் வெயிட்டாகக் கவிதை எழுதிக் கலாய்த்து மகிழ்வார்கள்.

'ஆராய்ச்சிக் கட்டுரையா? அதுவும் நவராத்திரி பற்றி இன்னோரு கட்டுரையா? சரி, சரி' என்று கொட்டாவி விட்டுக்கொண்டே மகாஜனம் 'மனைவி'யோ, 'மெட்டி ஒலி'யோ பார்க்கச் சென்று விடக்கூடிய மகா அபாயம் நிஜமாக இருக்கிறது.

இந்த அவசர யுகத்தில் இப்படி ஏதேனும் மலையாளப்படம் மாதிரித் தலைப்பு கொடுத்தால்தான் மரத்தடி மகாஜனங்கள் 'அட' என்று சொல்லி ஆழ்ந்து படிப்பார்கள்.

'எதற்காக இவ்வளவு பெரிய பீடிகை?' என்கிற கேள்வி உங்கள் அடி மனதில் துளிர் விட்டு இலை, தழை, காய், கனியெல்லாம் கனிய ஆரம்பிப்பது எனக்கும் தெரியும். நானும் மகா மரத்தடியன் தானே, எனக்கா தெரியாது?

கொஞ்சம் பொறுங்கள். நான் சொல்லப்போவது உங்களுக்குப் பேரதிர்ச்சி தரக்கூடிய உண்மை. இரவில் தனியே இதைப் படிக்க நேரிடுபவர்கள் மறு நாள் காலை வரை இதை ஒத்திப்போடுவது நலம். தனியே படிக்க நினைப்பவர்கள்- வேண்டாம், ப்ளீஸ்1 துணைக்கு ஒரு நாலைந்து ஆண்களைப் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

'ஆண்களை' என்று சொன்னதைக் கவனித்தீர்கள் அல்லவா?

சட்டுப்புட்டென்று விஷயத்தை ஆரம்பிக்கிறேன்.

நவராத்திரி என்பது அம்பாளைக் கொண்டாடிப் பெண்டிர் நோன்பு நோற்று மகிழும் பண்டிகையே அல்ல. அதை நம்பாதீர்கள். ஆணினத்தை அடிமைப்படுத்தி அவலப்படுத்துவதே இதன் முதற் பெரும் நோக்கம். இதை எந்த அகழ்வாராய்ச்சியாளரும் இது வரையிலும் மெசபடோமியாவிலோ, ஹரப்பாவிலோ தோண்டித் துருவிக் கண்டுபிடிக்கவில்லை. ஏன் என்பதைப்பற்றி எனக்கு இப்போது கவலையில்லை.

அ·து பற்றிப் பிறகு கவனிப்போம்.

ஆனாலும், வாயில் பெயர் நுழையாத யுவான் சுவாங், குலாய்ங் டுபாக்கூர், ஜான் மெக்·ப்ராட் என்று யாராவது வெளிநாட்டுக்காரன் இதைச் சொல்லியிருக்கிறான் என்றால் உடனே நம்பி உருப் போட்டு உருப்படியாகப் பரீட்சையில் மார்க் வாங்குகிற வழியைப் பார்ப்ப்£ர்கள். ஏழை எல்லே வில்லோன் என் சொல் அம்பலம் ஏற வேண்டுமானால் நான் இதை உடனே நிரூபித்தாக வேண்டும் என்று படுத்துவீர்கள். இல்லையா? தெரியும், செய்கிறேன்.

ரிலேட்டிவிடி பற்றி இப்படி ஏதோ குன்சாகச் சொன்ன ஐன்ஸ்டினையே 'ப்ரூ·ப் எங்க வாத்யாரே?' என்று கேட்ட பொல்லாத உலகமல்லவா இது? அவர் சொன்ன e=mcஸ்கொயர் விஷயம் எனக்கும் என் போன்ற மூன்று பௌதிக மெய்யடியார்களுக்கு மட்டுமே தெள்ளெனச் சுளீரென்று புரிந்தது என்பது வேறு விஷயம். இருந்தாலும் இன்று வரை அது ரொம்பப் புரிந்து விட்டாற்போல் எல்லோருமே தலையாட்டி வருகிறார்கள் இல்லையா?

என் மிகச் சமீபத்திய கண்டுபிடிப்பான 'அவ(¡)ளோட ராவுகள்' பற்றிய என் விஞ்ஞான ஆய்வுக் கட்டுரை இது.

(பயப்படுங்கள்- இது தொடர்ந்தே தீரும்)

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

பி.கு: ஒரு பம்பரம் 15 ரூபாய், பட்டம் 23 ரூபாய், மாஞ்சாக் கயிறு ஒரு கண்டு முப்பது ரூபாய் என்றால் இந்தக் கட்டுரைக்குக் கிடைக்கப் போகும் நோபெல் பரிசுத் தொகைக்கு எத்தனை கோலி வாங்க முடியும்? ஐன்ஸ்டின் மாதிரி யோசியுங்கள் நண்பர்களே!

பி.கு 2: இது ஒரு மீள் பிரசுரம்! (ஆறு ஆண்டுகளுக்கு முன் நான் இங்கே எழுதியது!)

Monday, October 04, 2010

எந்திரன், ஒரு மந்திரத் தந்திரன்!

ஷாருக், கமல், ஐங்கரன், சன் பிக்சர்ஸ், கிளிமஞ்சாரோ, 150 கோடி, தீபாவளி ரிலீஸ் தான், இல்லை இல்லை அதற்கும் முன்பே என்று மீடியாவில் ஏதாவது எல்லோருக்கும் தினந்தோறும் தீனி போட்டுக் கொண்டிருந்த 'எந்திரன்' வந்தே விட்டது!

இரண்டு மூன்று நாட்களாக, வழக்கமான கட்அவுட் பாலாபிஷேக கோலாகலங்கள் தமிழ்நாடெங்கும் நன்றாகவே நடைபெற்று முடிந்ததாகப் பத்திரிகைகள் சொல்கின்றன. ‘எல்லே’யில் வழக்கமாகப் படத்தை ஓட்டும் நபர்கள் கிட்டக்கூட நெருங்க முடியாத அளவுக்குப் படத்தின் வெளிநாட்டு விநியோக விலை ஏற்றப்பட்டதாகவும், அதைச் சரிகட்டும் முயற்சியாகவே டிக்கெட் விலைகளும் ஏற்றப்பட்டதாகவும் சால்ஜாப்பு சொன்னார்கள். நியூயார்க்கில் $50, லாஸ் ஏஞ்சல்சில் $30 என்று டிக்கெட் விலைகள் எக்குத்தப்பாய் இருந்தாலும், எந்திரன் பார்க்காமல் என்னால் இருந்துவிட முடியுமா?

Enthiran1

ஞாயிறு இரவு ஷோ என்பதாலா அல்லது மேற்சொன்ன டிக்கெட் விலை காரணமா, தெரியவில்லை: தியேட்டரில் 30 பேர் கூடத் தேறவில்லை. மற்ற தியேட்டர்களிலும் கூட்டம் குறைவென்றே சொன்னார்கள்.

”நீர் பட்டர் பாப்கார்ன் சாப்பிட்டது, பாத்ரூம் போனது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், படம் எப்படி?” என்கிறீர்களா?

வருகிறேன், வருகிறேன். அங்கேதானே வந்து கொண்டிருக்கிறேன்!

ஹிந்திக்காரர் ஒருவர் கௌண்டரில் “ஹிந்தி வர்ஷன் பார்க்கத்தானே நான் வந்தேன், அது எப்படி தமிழ் ப்ரிண்ட் ஆனது? சப் டைடில் உண்டா? ஆர் யூ ஷ்யூர்? அது என்ன மொழியில்?, ஏன் எல்லாமே ஆனை விலை, குதிரை விலை? இதெல்லாம் ரஜினிக்குத் தெரியுமா? யஹான் க்யா ஹோ ரஹா ஹை?” என்று அனத்தோ அனத்தென்று அனத்தி, சத்தம் போட்டு, வெள்ளைக்கார கௌண்டர் கிளார்க்கிடம் மயிர்பிடி சண்டை + அவர் மனைவி தலையில் அடித்துக்கொண்ட கலர்ஃபுல் ட்ரெய்லர் பார்த்தபோதே எனக்கு சந்தோஷம் பீறிட்டுக்கொள்ள ஆரம்பித்தது.

எல்லா ஜனங்களும் ‘ஹா’வென்று இந்த ஃப்ரீ ஷோவைப் பார்த்திருக்கையில், “உமக்கு வேண்டாமென்றால் அந்த டிக்கெட்களை என்னிடம் கொடும்” என்று என் மனைவி அந்த அனத்தருக்கு முன்னால் பாய்ந்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, மிஸஸ். தலையடியுடன் அவர் ஹிந்தியில் தொடர்ந்து திட்டியபடியே உள்ளே நுழைந்தார்.

ரிஷி தாடியுடன் ரஜினி ரோபோவை ரிப்பேர் செய்வதாக பாவ்லா, சந்தானம், கருணாசின் சப்பை காமெடி என்று படம் ஆரம்பத்தில் நத்தையாய் நெளிந்தாலும், ஐஸ் வந்தவுடன் திடீரென்று ஒரு ஜிலீர் சுறுசுறுப்பு பெற்று அதிர ஆரம்பித்தது.

அப்போது ஆரம்பித்த வேகம் தான், கடைசி வரையில் அந்த வேகம் குறையவே இல்லை. போலீஸ் மீட்டிங்கள், கோர்ட் காட்சிகள் என்று தமிழ் சினிமாவின் அரதப்பழசு இழுவை காட்சிகளைக்கூட ஸ்பீட் ராம்பிங், ஃப்ரேம்ஸ் அட்ஜஸ்ட்மெண்ட் மூலம் வேகமோ வேகப்படுத்தி இருப்பதே ஒரு விஷுவல் ஸ்டைல். ரத்னவேலுவுக்கு ஒரு சபாஷ்!

இது முழுக்க முழுக்க ரஜினி படம், ரஜினியின் ஸ்டைலே வேகம், எனவே எல்லாமே படு ஃபாஸ்ட் என்று முதலிலேயே இயக்குனர் ஷங்கர் புத்திசாலித்தனமான முடிவெடுத்திருக்கிறார். எடிட்டிங்கிலும் அதுவே தாரக மந்திரம்.

சுஜாதா அடிக்கடி சொல்லுவார்: “திரைக்கதையை What if? என்று ஒரே வரியில் சுருக்கிச் சொல்லமுடியுமானால் அது வெற்றி பெற சாத்தியம் அதிகம்” என்று.

எந்திரனில் What If: ஒரு ரோபோவுக்கு மனித உணர்ச்சிகளை உண்டாக்க முடிந்தால் என்ன நடக்கும் என்பதே. அப்பாவி சமர்த்து மெஷின் அசகாயசூரன் ஆகிறது, அடிதடி சாம்பியன் ஆகிறது. “நானே நினைச்சாலும் என்னால என்னை கண்ட்ரோல் பண்ணமுடியாது” ரேஞ்சுக்கு ஆட்டம் போடுகிறது.

அழுத்தமான களம் அமைந்துவிட்டதால் CGI, VFX என்று சீனுக்கு சீன் அட்டகாசம் செய்திருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராயை ஏதோ ஒரு ஊறுகாய் மாதிரி ஓரமாகக் காட்டாமல், படம் முழுக்கவே காட்டி இருப்பதில் படம் நிறைவாக இருக்கிறது. “அதெப்படி இந்தப் பொண்ணு மட்டும் இன்னும் அப்படியே இருபது வருஷமா இளமையாவே இருக்குது?” என்று பெண் ரசிகைகளின் காதிலெல்லாம் பொறாமைப் புகை!

க்ளைமேக்ஸ் காட்சிகள் சற்றே அதிகமென்று நினைத்தாலும், அந்த விருவிருப்பு, அவசரம், தடாலடி, நம்மைக் கட்டிப்போட்டு விடுகிறது.

ரஹ்மானின் இசையில் இன்னும் எதிர்பார்த்து ஏமாந்தேன். சண்டைக்காட்சிகளில் பின்னணி இசையில் கிளிமாஞ்சாரோ, கிளிமாஞ்சாரோ என்றெல்லாம் கத்தி இப்படி ஒரு கற்பனை வரட்சியைக் காட்டவேண்டுமா?

படம் முழுக்கவே திகட்டத்திகட்ட ரஜினியும் ஐசும் தான்! வேறென்ன வேண்டும் ரஜினி ரசிகர்களுக்கு? அக்டோபரிலியே தீபாவளி!

பல வட இந்திய, மற்றும் தமிழ் பத்திரிகைகளில் எந்திரனுக்கு 5 க்கு 3 அல்லது 3.5 என்று மார்க் போட்டிருந்தார்கள். ஏன் இந்த கஞ்சத்தனம்?

படம் சூப்பர், பாஸ்! 90 சதவீதத்துக்கும் மேலே!

Tuesday, August 10, 2010

ஐஃபோன், ஐயையோஃபோன்!

எனக்கும் ஆப்பிளுக்குமான பகை இன்று நேற்றல்ல, இருபது வருடத்துக்கும் மேலான ஜென்மப்பகை. மிகுந்த பாரம்பரியம் கொண்டது!

த்ரேதாயுகத்தில் நான் கம்ப்யூட்டர்லேண்ட் என்கிற நிறுவனம் நடத்திவந்தபோது, ஆப்பிளுக்கும் நாங்கள் பல கிளைகளில் டீலர்ஷிப் வைத்திருந்தோம். IBM, Compaq, HP, Zenith, AST, Leading Edge என்று பல கம்பெனிகளுடன் நாங்கள் நல்ல முறையில் வியாபார உறவு வைத்திருந்தாலும், ஆப்பிளுடன் மட்டும் எப்போதும் ‘க்‌ஷணச் சித்தம், க்‌ஷணப் பித்தம்’ தான்!

அவர்கள் அடாவடித்தனத்துக்கு எல்லையே இல்லை. ஹெர்குலிஸ் சைசுக்கு இருந்த IBM கம்பெனியை ’84ல் எதிர்த்த பொடிசு என்பதால் ஆப்பிளுக்கு எப்போதுமே ஒரு ரவுடி இமேஜ்தான். ஆப்பரேடிங் சிஸ்டத்திலிருந்து ஹார்டுவேர் வரை எல்லாமே ஒரு தனி ரூட். ’ஊருடன் ஒத்து வாழ்’ என்பதில் ஸ்டீவ் ஜாப்சுக்கு எப்போதுமே நம்பிக்கை இல்லை!

திடீரென்று நினைத்துக் கொள்வார்கள், மறுநாளே அத்தனை கிளைகளுக்கும், ஒவ்வொரு கிளைக்கும் $ 50,000 டாலருக்கு உதிரி சாமான்கள் (ஸ்பேர் பார்ட்ஸ்) வாங்குங்கள் என்று அதிரடி உத்தரவு போட்டுப் படுத்துவார்கள். ஸ்பேர்ஸ் என்ற பெயரில் அவர்களிடன் போணியாகாத அத்தனை கண்டாமுண்டான்களையும் எங்கள் தலையில் கட்டி விடுவார்கள். எதையும் திருப்பி அனுப்ப முடியாது, எதுவும் வியாபாரமும் ஆகாது. விலையோ, ஒவ்வொன்றும் யானை விலை, குதிரை விலை!

”எங்கள் ப்ராடக்சை நன்றாக விளம்பரம் செய்யுங்கள், பணம் தருகிறோம் என்பார்கள். சரி என்று நாம் முன் செலவு செய்து ஆயிரக்கணக்கில் நமக்குச் செலவான பிறகு, அவர்களிடமிருந்து ஒரு பைசா பேறாது. ஏதாவது சால்ஜாப்பு சொல்லி நம்மை அழவைப்பார்கள். HP எல்லாம் இந்த விஷயத்தில் மகா கௌரவமான கம்பெனி. டீலர்களை நஷ்டப்படவே விடமாட்டார்கள்.

‘89 என்று நினைக்கிறேன். ஒரு சுபயோக சுபதினத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, யார் வந்து Macintosh கம்ப்யூட்டர் கேட்டாலும், ஒரு ப்ரிண்டர், மென்பொருட்கள், உபகரணங்கள்- கிட்டத்தட்ட $ 3000 பெறுமான எல்லாமே- மூன்று மாதத்திற்கு இலவசமாகக் கொடுப்பதாக ஒரு பைத்தியக்கார ஸ்கீம்! பிடிக்கவில்லை என்றால் கஸ்டமர்கள் எல்லாவற்றையும் திரும்பக் கொடுத்து விடலாமாம்! மிகுந்த கட்டாயப்படுத்தி எங்களை இந்த ஸ்கீமை நடத்தவைத்தார்கள்.

மூன்று மாதம் கழிந்து அவனவனும் கேபிள், ரிப்பன் இல்லாத ப்ரிண்டர்கள், பேக்கிங் இல்லாத கம்ப்யூட்டர்கள், உடைந்த ஓட்டை உடைசல் டிஸ்க் டிரைவ்கள் என்று குப்பை குப்பையாய் திரும்பக் கொண்டுவந்தால் ‘எல்லாவற்றையும் கேள்வியே கேட்காமல் ரிடர்ன் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று எங்களுக்கு ஆப்பிளிடமிருந்து ஆட்டோவில் அன்புத் தாக்கீது! ஆனால், அத்தனை குப்பைகளையும் ஆப்பிளுக்குத் திருப்பி அனுப்பினால் எங்களுக்கு எல்லாவற்றுக்கும் முழு விலையில் சார்ஜ், ஃபைன்! என்ன அநியாயம்!

ஆப்பிள் முறைத்துக்கொள்ளாத டீலர்களே இல்லை. கம்பெனியை விட்டே ஜாப்சுக்கு கல்தா கொடுக்கப்பட்டு, பிறகு அவர் அடித்துப்பிடித்துத் திரும்பவும் அதே ஆப்பிளின் தலைவர் ஆனதெல்லாம் பெரும் பழங்கதை! கேவலம், ஒரு நூறு மில்லியன் கூடக் கையில் இல்லாமல் ஜென்ம எதிரி மைக்ரோசாஃப்டிடமே கையேந்திக் கடன் வாங்கும் நிலைமையில் கம்பெனி அப்போது கேட்பாரற்றுக் கிடந்தது.

ஸ்ட்ரெச்சரில் கிடந்த கம்பெனிக்கு ஐபாட் தான் அவர்களுக்கு ஆக்சிஜன் கொடுத்த முதல் தயாரிப்பு. ஆனானப்பட்ட ஐபிஎம், மைக்ரோசாஃப்டெல்லாம் ‘ஹா’வென்று வாய் பிளந்து கொட்டாவி விட்டுக்கொண்டிருந்த நேரத்தில், ஐபாட் ஒன்றை வைத்தே கம்பெனியை ஸ்திரப்படுத்தியது ஜாப்சின் புத்திசாலித்தனம்! ஐபாட் ஆப்பிளில் மட்டுமே ஸ்திரமாக ஒழுங்காக வேலை செய்யும். மற்ற ஆபரேடிங் சிஸ்டம்சுடன் எப்போதுமே சண்டைதான். திடீர் திடீரென்று பாட்டுகள் காணாமல் போகும், அல்லது எல்லாவற்றையுமே அழித்துவிட்டு கல்லுளிமங்கனாய் ஐபாட் ஜடமாய உட்கார்ந்திருக்கும்!

அடுத்ததாக ஐஃபோன் மிகப்பெரிய வெற்றியாம். ஆனால் ஆப்பிள் தன் மூடிய கட்டமைப்பைக் கிஞ்சித்தும் மாற்றுவதாயில்லை. நானும் ஐபோன் வாங்குவதாய் இல்லை! இப்போது ஐஃபோன் 4 ஏகப்பட்ட பிரச்னைகள் என்கிறார்கள்.

HTC Evo 4G உபயோகிக்கிறேன். பிரமாதமான ஃபோன், காமெரா, ஸ்பீட், கூகுள், ஜிமெயில், ஆண்ட்ராய்ட் கனெக்டிவிடி எல்லாமே!

இலவசமாக ஸ்டீவ் ஜாப்சே கெஞ்சிக் கொஞ்சிக் கொடுத்தாலும் அந்த ஐயையோஃபோன் எனக்கு வேண்டவே வேண்டாம்!

Friday, July 09, 2010

செவ்வடையான மசால்வடையே!

செவ்வடையான மசால்வடையே!
------------------------------

’செவ்வடையான மசால் வடையே!’ என்று இப்போது நாம் ஆர்க்கெஸ்ட்ராவோடு பாட்டுப் பாடலாம், ஆர்ப்பரிக்கலாம், கோடிகளைச் செலவழித்துக் குனியமுத்தூரில் கோலாகலமாகக் கொண்டாடலாம். ஜனாதிபதி முதல் ஜால்ரா கவிஞர்கள் வரை நேரே வரச்சொல்லி ஆர்டர் போட்டு, மசால் வடை புகழ் பாடச் சொல்லி ஆனந்த ஏப்பம் விடலாம்.

ஆனால் மசால் வடையின் செவ்வடை ஸ்டேட்டஸ் அவ்வளவு சுலபமாகப் பெறப்பட்டதல்ல!

ஆதிகாலத்திலிருந்தே பலப்பல தினுசு வடைகள் உலகெங்கும் மெயின் டிஷ்ஷாகவும், சைட் டிஷ்ஷாகவும் அசை போடப்பட்டு வந்தாலும், ’செவ்வடை அந்தஸ்து எந்த வடைக்கு?’ என்கிற கேள்வி மட்டும் பல டீக்கடைகளிலும், ‘பார்’களிலும் கேட்கப்பட்டுவந்த கேள்விதான்.

‘என்று தணியும் இந்த தயிர்வடை தாகம்? என்று மடியும் எங்கள் கீரைவடை மோகம்?’ என்று புரட்சி மகாகவி பாரதியாரையே புலம்பவைத்த மேட்டர் அல்லவா!

’செவ்வடையான மசால் வடை’க்குத்தான் எவ்வளவு எதிரிகள், எவ்வளவு அரசியல் உள்குத்துகள்?

இது பற்றிய நமது நிருபரின் கைப்பக்குவக் கிளறல்!

*************************

Photobucket

பாரெங்கும் ஆயிரக் கணக்கான வடைகள் இருந்தாலும், ஏன் இந்தியாவிலேயே பலாப்பழ வடையிலிருந்து, பம்பளிமாஸ் வடை வரை இருந்தாலும், தென்னகத்தில் புழங்கும், குறிப்பாகச் சென்னையில் மணக்கும் மசால் வடையே செவ்வடை அந்தஸ்துக்கு உரியது என்று இந்திய அரசும் அறிவித்திருக்கிறது. இதன் பின்னணி அரசியல் என்ன? ஆலூ வடை, தயிர் வடை, கீரை வடை, காலிஃப்ளவர் வடை, வெங்காய வடை போன்ற இந்திய வடைகளுக்குள்ளும் இந்த செவ்வடை ஸ்டேடசுக்குக் கடும் போட்டி. மற்ற எல்லா வடைகளையும் ஊசிப்போனவை, உப்பு போதவில்லை, ‘கப்’படிக்கிறது, காரம் போதவில்லை என்றெல்லாம் சொல்லித் துப்பி மசால் வடை மட்டுமே செவ்வடை ஏன்று வாய் கொள்ளாமல் எல்லோரையும் சொல்லவைத்தது எப்படி?

ஐக்கிய நாடுகள் சபை இது குறித்து வெளிபிட்ட குறிப்பொன்றில், ‘எவ்வடை செவ்வடை?’ என்பதையெல்லாம் இனிமேல் தீர்மானிக்க ஊசவடோ என்கிற ஜப்பானியர் ஒருவடை -மன்னிக்கவும், ஒருவரை- நியமித்திருக்கிறது என்பது தெரியவந்தது.

என்னடா இது மசால்வடைக்கு வந்த சோதனை, ஜப்பானுக்கும் மசால் வடைக்கும் என்னய்யா சம்பந்தம் என்றெல்லாம் கேட்டால் நாம் வடைத்துரோகி ஆகி விடுவோம் என்று பயமாகவும் இருக்கிறது. இருந்தாலும் அவரையே ஒரு முறை துணிந்து இதுபற்றிக் கேட்டுவிடுவோம் என்று அவரைத் தொலைபேசினேன்.

சம்பிரதாயமாக முதலில் ஏழெட்டு தடவை குனிந்து நிமிர்ந்து ’யூகோசோ இரஷாய் மாஷிடா’ என்று நாங்கள் வணக்கங்கள் சொல்லிக்கொண்ட பிறகு நான் முதுகுவலியுடன் என் சந்தேகத்தைக் கேட்டேன்:

”அறுவடைவீடுகொண்ட திருமுருகா’ என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு முருகன் ஆறு வடைகளை ஒரே நேரத்தில் எப்படி அபேஸ் செய்தார் என்கிற பிரமிப்பு வரும். நக்கீரரும் ஆறு வடைகளைப் பற்றித்தானே பொதுவில் புகழ்ந்திருக்கிறார், இதிலே மசால் வடைக்கு மட்டும் அப்படி என்ன தனி மகிமையை நீங்கள் கண்டீர்கள்? செவ்வடையாக மசால்வடையை மட்டும் எப்படி அங்கீகரித்தீர்கள்?”

ஊசவடோ ஒரு முறை ஜப்பானிய மொழியில் கனைத்துக் கொண்டார்.

”திருமுருகாற்றுவடையில் ஆறுவடைகளைப் பற்றிச் சொல்லி இருப்பதாகச் சொல்வதே முதலில் தவறு. 'ஆறு' என்றால் வழி; 'ஆற்றுப்படுத்துதல்' என்றால் 'வழிகாட்டுதல்'. 'ஆற்றுவடை' என்பது தமிழ்க் கவிதை வகைகளில் ஒன்று. ஒரு வள்ளலிடம் பரிசுகள் பல பெற்றுத் தன் வறுமை அழிந்த ஒருவன், வறுமையில் வாடும் இன்னொருவனை அந்த வள்ளல் இருக்கும் இடம், போகும் வழி, வள்ளலின் ஊர், பெயர், அவன் குணங்கள் யாவற்றையும் சொல்லி, "அங்கே போய் உன் வறுமையை நீக்கிக்கொள், பெரிய விருந்து இல்லாவிட்டாலும், வடையாவது கிடைக்கும்" என்று ஆற்றுப்படுத்துவது இப்பாடல் வகையின் இலக்கணம். திருமுருகாற்றுவடை என்ற நூலில் முருகன் இருக்கும் ஆறு தலங்களின் பெருமைகளைக் கூறி ஆத்மவடைக்கும் வழிகாட்டுகிறார் நூலாசிரியர் நக்கீரர்.

’ஆற்றுவடையில் சொல்லப்பட்ட ஆறு வீடுகள்’ என்ற வழக்கு மாறி, பின்பு படைவீடு, ஆறுபடை வீடு , ஆறு வடை வீடு என்று பேச்சு வழக்கிலும், நூல்களிலும் வரத் தொடங்கின என்பது தணிகைமணி செங்கல்வராய பிள்ளை போன்ற அறிஞர்களின் கருத்து. அருணகிரிநாதர் கூட 'ஆறுபடை வீடு' அல்லது ‘ஆறுவடை வீடு’ என்கிற சொற்றொடர்களைப் பயன்படுத்தாமல், 'ஆறு திருப்பதி' 'அறுபத நிலை' 'ஆறு நிலை' போன்ற சொற்றொடர்களையே பயன்படுத்தினார். குமரகுருபரர் கூட ஆறு வடை வீடு என்று சொல்லவில்லை. 'ஆறு திருப்பதி கண்டாறெழுத்தும் அன்பினுடன் கூறுமவர் சிந்தை குடிகொண்டோனே' என்கிறது கந்தர் கலிவெண்பா. குமரகுருபரர் 17-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். அதனால்... ஆறு படை வீடுகள் என்ற தொடர் கடந்த 400-ஆண்டுகளில் வந்த ஒரு சொற்றொடர் என்பது தெளிவாகிறது. ஆறுவடை என்கிற பதமே தற்காலப் புழக்கத்தில் இருக்கிறது”

இப்படிப் போட்டு சாத்து சாத்தென்று சுத்தத் தமிழில் சாத்தினால் நான் என்ன செய்வேன்? ’சயோனாரா’ கூடச் சொல்லாமல் லைனை உடனே கட் செய்துவிட்டேன்.

இந்த ஓட்டை வடை மேட்டர் இவ்வளவு சீரியஸான மேட்டர் என்பது தெரியாததால், வேறு யாரைக் கேட்டுத் தெளியலாம் என்று நான் யோசித்தேன்.

சுள்ளிக்காட்டுப் புலவர் ஒருவரை செல்போனில் பிடித்தேன்.

’எனக்கு டை பிடிக்கும், அடை பிடிக்கும், சொல்லடை பிடிக்கும், துடியிடை பிடிக்கும், நன்னடை பிடிக்கும், ஏன் எனக்கு செவ்வடையான மசால்வடையும் மிகப் பிடிக்கும்’

ஆஹா, யாப்பு, காப்பு, ஆப்பு என்று செமத்தியாக ஏதோ மாட்டிக்கொண்டேன் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.

’என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக மசால்வடை செய்யுமாறே’ என்று திருமூலரே திருமந்திரத்தில் என் புகழைப் பற்றிச் சொல்லி விட்டார்’ என்று சொந்த சரக்கைப் பற்றி ஆரம்பித்தார் சுள்ளிக்காட்டார்.

திருமந்திரத்துக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம், அவர் அப்படியா சொன்னார் என்று நான் திரு திருவென்று விழிக்கையில் அவர் தொடர்ந்தார்:

”மசால்வடையை மட்டம் தட்டிப்பேசுவது ஆரிய, பார்ப்பன சூழ்ச்சி. அது பலிக்காமல் போனதால் இப்போது மசால்வடையும் கைபர் கணவாய் வழியாக இங்கே வந்ததுதான் என்று ‘சோ’ போன்றவர்கள் சொல்லி வருவது கண்டனத்திற்குரியது. மாஷாபூபம் என்கிற மொத்தை வடையைத்தான் சவுண்டி பிராமணர்கள் காலம் காலமாகச் சாப்பிட்டு ஊரையே நாறடித்து வந்தார்கள் என்பதற்கு சிலப்பதிகாரத்திலேயே குறிப்பு இருக்கிறது.

’நீலவிதானத்து நித்திலப் பூப்பந்தர்க்கீழ்
வான் ஊர் மதியம் சகடனைய வானத்துச்
சாலியொரு மீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மசால்வடை காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார் கண் நோன்பென்னை’
என்று சிலப்பதிகார நூல் கண்ணகி_கோவலன் திருமணச் சடங்கைக் கூறுகிறது. அங்கே நெருப்பிலே இடப்பட்டது மசால்வடையே அன்றித் தயிர் வடையல்ல, சாம்பார் வடையுமல்ல. சாம்பாரையோ, தயிரையோ நெருப்பிலே போட்டால் அது அணைந்து போய் துர்சகுனமாகும் என்பது பகுத்தறிவுத் தமிழருக்குத் தெரியாததல்ல. மசால்வடை நின்று திகுதிகுவென்று எரியும், கமகமவென்று மணக்கும். எலிப்பொறியில் மசால்வடை மணத்துக்காக எலி சிக்குவது போல் என் அன்பினால், காதலினால் உன்னைக் காலம் காலமாகச் சிறை வைக்கப் போகிறேன் என்று மணமகன் சொல்வதாக இங்கே அது குறிப்பினால் உணர்த்தப்படுகிறது.

இங்கே இன்னொரு கருத்தையும் நான் சொல்லிவிடக் கடமைப்பட்டிருப்பதை நினைவு கூர்கிறேன். ‘மாமுது பார்ப்பான்’ என்பது மகா கெழபோல்ட்டான அய்யரைக் குறிக்கும். ஏன் அழகான பிராமண இளைஞனை அங்கே சடங்கு செய்யச் சொல்லாமல் வயதான முதியவரைக் கூப்பிட்டிருக்கிறார்கள், அவன் மேல் ஏன் பெண் வீட்டாருக்கு நம்பிக்கை வரவில்லை என்கிற முக்கியமான விஷயத்தை நான் உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன். இதற்கும் ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிபோலாமா?’வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

‘மசால்வடை காட்டிட’ என்கிற வரிகளை உற்றுக் கவனியுங்கள். தீப ஆராதனை கூட அந்தக் காலத்தில் இருந்தது கிடையாது. கையில் மசால்வடையை வைத்துக்கொண்டு தீப ஆராதனை போல் மேலும் கீழும் ஆட்டி ஆட்டி, நெருப்பையும் சுற்றிச் சுற்றி வருவதே பழந்தமிழர் வழக்கம். பிறகு தான் அது தாலியாகப் பெண்ணின் கழுத்தில் ஏறும். இதை வடைத்தாலி என்றும் கூறுவர். சமீபத்திய பெரும் இதிகாசப் படமொன்றில் நான் இந்த ஐடியாவைச் சொல்லி, பெரிய இயக்குனர் ஒருவரும் இதை ஒரு பாடல் காட்சியில் சேர்த்திருக்கிறார். உசிரே போனாலும் இந்த மாதிரி உதிரிக் காட்சிகளின் உள்குத்தை நீங்கள் ரசிக்காமல் இருக்கக்கூடாதென்பதை இங்கே சொல்லிக் கொல்வதும் என் கடமை. எடிட்டிங்கில் இது கட் பண்ணியிருக்கப்படலாம்., அமிதாபுக்கெல்லாம் இது புரியாது.

சொல்லப்போனால் தங்கத்தில் தாலி கட்டுகின்ற சடங்கு கூட சிலப்பதிகாரத் தமிழரிடையே இருந்தது கிடையாது. தங்கத்தின் விலை கன்னாபின்னாவென்று பிற்காலத்தில் எகிறப்போகிறது, ஒரு கிராம் தங்கம் வாங்கக்கூடக் காசில்லாமல் தமிழன் சிங்கி அடிக்கப் போகிறான் என்பது சிலப்பதிகாரத்திலேயே உட்கருத்தாய்ப் பொதிந்திருக்கிறது. பிற்காலத் தமிழருக்கும் பொருந்தும் வகையில் மஞ்சள் மசால்வடையில் மஞ்சள் நூலைக்கட்டி அதை மணாளன் மங்கையின் கழுத்தில் கட்டி, மங்கையும் அதையே மணாளனும் முதல் மசால் வடையுமே தன் பாக்கியம் என்றெடுத்துக் கண்ணில் ஒத்திக்கொள்கிற வழக்கம், ஒரு கடி கடிக்கிற வழக்கம்தான் (மணாளனை அல்ல, மசால் வடையை) தமிழ்ப் பெண்களின் வழக்கம். அதை விடுத்துத் தமிழ்ப் பெண்களின் கற்புக்கே மாசு கற்பிக்கும் வழியில் வடநாட்டுப் பெண்கள் இங்கே வந்து மசால் வடையாவது மண்ணாங்கட்டியாவது, கல்யாணத்திற்கு முன்பே மசால்வடையை ஒரு வெட்டு வெட்டுவதில் தப்பில்லை என்று சொல்வது விந்தையிலும் விந்தை.”

சார், சார்! போதும், போதும். நீங்க எங்கேயோ கோவில் கட்டற ரேஞ்சுக்குப் போயிட்டீங்க. அப்படியே நிப்பாட்டிக்கறது தான் உங்களுக்கும் எனக்கும் நல்லது”

வெளிநாட்டுக் கிழாரும் சொல்லிவிட்டார், உள்நாட்டுத் தமிழ்ப் புலவரும் சொல்லிவிட்டார், இன்னும் ஒரே ஒரு அரசியல்வியாதியைவாவது கேட்டு விடலாம் என்று தெருமாவைப் பிடித்தேன் போனில்.

**********************

”நாம் அன்றாடம் கலந்தடிக்கும் சாம்பார் வடைக்கும் தயிர் வடைக்கும் கூட செவ்வடை அந்தஸ்து கிடையாதா, தெருமா? இது அடுக்குமா?”

”கிடையவே கிடையாது. சிங்களவனின் சதியால் மல்லுங், சம்போல், சொதி போன்ற சிங்கள ஐட்டங்களுக்கும் செவ்வடை அந்தஸ்து கொடுக்கவேண்டுமென்று அலைகிறது ஒரு ராஜபக்‌ஷய பட்டாளம். இந்த சதிக்கு ’ரா’ போன்ற நம் உளவு நிறுவனங்களும் துணை போவதே நம் கேவலத்தை, அவலத்தை, வெட்கக்கேட்டை சுட்டிக் காட்டுகிறது. நீண்ட தூர இந்திய ரயில் பயணங்களில் இந்த ஐட்டங்களை செவ்வடை என்று பொய் சொல்லி விற்பதற்கான ஒரு ஒப்பந்தம் இலங்கையுடன் போடப்பட்டிருக்கிறதென்பது எனக்கும் தெரியும். இரயில்களில் செவ்வடை தவிர வேறு எதையாவது யாராவது விற்க முனைந்தால் சும்மா இருக்காது எங்கள் ’செவ்வடை காப்புப் படை’. தண்டவாளத்தைப் பெயர்த்தெடுத்தாவது நாங்கள் இந்த சதியை முறியடிப்போம். ஆனால் அதற்கு முன்னாலேயே எங்கேயாவது துருப்பிடித்த தண்டவாளங்கள் உடைந்து நொறுங்கி விழுந்தால் அதற்கும் எங்கள் செவ்வடை காப்புப் படைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நான் இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன். என் தம்பி கோமானின் கருத்தும் இதேதான் என்று போட்டுக் கொள்ளுங்கள்”

இவ்வளவு பேரைக்கேட்டுவிட்டு சினிமாக்காரர்கள் யாரையும் கருத்து கேட்காமல் விட்டால் எப்படி?

”வெளிநாட்டுப் படப்பிடிப்பிலே நான் இருந்தாலும் உள்நாட்டு செவ்வடை விடயங்கள் எனக்குத் தெரியாமல் போகலாமென்று மனப்பால் குடித்தவர்கள் சற்றே மனங்குமுறிக் கமற நேரிடலாம். ஏனென்றால் கருப்புச் சட்டை போட்டாலும் நானும் செவ்வடைக்காரனே என்பதை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்த லாபமும் இல்லையென்றாலும் அதைச் சொல்லாமல் விட்டுவிட்டால் பொருட்குற்றம் வந்துவிடுமோ என்று நான் பயப்படுவதாக யார் வேண்டுமானாலும் ஒரு நிலைப்பாடு எடுத்துக் கொள்ளட்டும். பரமக்குடி தமிழ்ப் பாட்டி சுட்ட வடையும் மசால்வடையேயன்றி மற்றேதுமில்லை. இது பற்றித் தென்னாப்பிரிக்காவிலே படமெடுக்க நான் ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்து வைத்துக்கொண்டு கிரேக்க நாட்டு ஃபைனான்சுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். அதிலே நான் செவ்வடை மசால்வடையாகவே நடிப்பதாக வரும் செய்திகளின் உண்மைத்தொனியை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் உங்கள் ஊகத்திற்கே விடலாமா என்று நான் யோசிக்கிறேன்”

இத்தனை பிரபலங்களைப் பேட்டி கண்டபின், சு. சுவாமியைப் பேட்டி காணாவிட்டால் எப்படி இதெல்லாம் பூரணமாகும் என்று நான் யோசித்துக்கொண்டே இருக்கும்போது என் செல்பேசி ஒலித்தது.

“இந்த மசால் வடை - செவ்வடை மேட்டர்ல நீங்க யார் யாரைப் பேட்டி கண்டேள், அவா என்னென்ன சொன்னாள்ங்கறதெல்லாம் நேக்கு எஃப்பிஐ ரிப்போர்ட்ஸ் கொடுத்துட்டா. இன் ஃபேக்ட் நான் இப்ப சான் ஃப்ரான்சிஸ்கோவில தான் இருக்கேன். நீங்க என்னைக் கேட்கலைன்னாலும் நான் சொல்றேன் எழுதிக்குங்கோ. ஜூனியர் கக்கன்ஜி தெரியுமில்லியா, அவரும் இப்ப என் கூடத்தான் வந்திருக்கார். அவர் தான் அடுத்த தமிழ்நாட்டு முதல்வர். அம்மாவும் ஓகேன்னு கொடநாட்லேர்ந்து சொல்லிட்டா.

இந்த செவ்வடை மேட்டர்லாம் சுத்த ஹம்பக். சோனியாவும் கருணாநிதியும் சேர்ந்து பண்ற அட்டகாசம். ஒபாமாவே என்னை போன்ல கூப்பிட்டுச் சொல்லிட்டார். நான் வோர்ல்ட் கோர்ட்ல இது பத்திக் கம்ப்ளெய்ன் பண்ணி இருக்கேன். ‘தி ஹேக்’ல ஆர்க்யூ பண்ண டேட்ஸ் கொடுத்துட்டா. முப்பது பில்லியன் நஷ்ட ஈடு கேட்டு போபால் விக்டிம்சுக்குத் தந்துடுவேன்.

செவ்வடையாவது, வெங்காய அடையாவது? எல்லாமே சுத்தப் பேத்தல். ஓட்டையே இல்லாத மசால் வடையிலே எப்படிப்பா தாலியை கோர்ப்பாளாம்?

இன் ஃபேக்ட் இந்த வடைக்கெல்லாம் ஆதிமூலமே அமெரிக்காள் சாப்டற பேகிள் (Bagel) தான். மாவுல ஓட்டை இல்லாட்டா பேகிள். ஓட்டை போட்டுட்டா அது டோநட் (doughnut). எங்க டோநட்டையும் சேப்பு டோநட்டுன்னு சொல்லுங்கோன்னு அமெரிக்காள் பிடிவாதம் புடிக்றாளா, என்ன? நம்மளோட இட்லி, தோசை, வடை எல்லாமே ரொம்ப ஹெவி வாயுப் பண்டம். இதையெல்லாம் ரெகுலரா சாப்டா, ராக்கெட் இல்லாமலேயே நாம் சந்திரனுக்குப் போய்டலாம்னு யாரோ தமிழ்நாட்ல தப்புத்தப்பா சொல்லிக் கொடுத்திருக்கா.

ஒரு ரகஸ்யம் சொல்றேன். சசிகலா கிட்டே மட்டும் சொல்லிடாதீங்கோ. டோநட்லேருந்து தான் வடையே வந்துது.

நான் திரும்ப வந்து ‘முருகன் டோநட் கடை’ன்னு ஆரம்பிக்கப் போறேன். அவஸ்யம் திறப்பு விழாவுக்கு வந்துடுங்கோ!”

எனக்கு வயிற்றைக் கலக்குவது போல் இருந்தது. நானே லைனை கட் பண்ணி விட்டேன்.

இவ்வடை தோற்கின் எவ்வடை ஜெயிக்கும்?!

************************ நன்றி: கல்கி

Friday, May 28, 2010

ஏப்ரல் சென்னையில் மூன்று வாரங்கள்!

சாதாரணமாக இந்தியா செல்ல நேரிடும்போதெல்லாம் “ஆஹா, ஜாலி!” என்று சந்தோஷப்பட்டு ஆர்ப்பரிக்கும் மனசு, இந்தத் தடவை கொஞ்சம் அடக்கியே வாசித்தது.


மார்ச் மாதத்திலிருந்தே சுட்டெரிக்கும் சென்னை சூரியன் பற்றி எனக்கு காபரா செய்திகள் வந்து கொண்டிருந்தன. சென்ற வருடம் ஏப்ரலில் காய்ந்து கருகி வியர்த்து, பாதி மாதத்திலேயே பாய்ந்தோடி எல்லே திரும்பியது நினைவில் சூடாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்!

‘வெயிலோடு உறவாடி, வெயிலோடு விளையாடி’ யெல்லாம் பாட்டில் கேட்க மட்டுமே ஆனந்தம். இந்த வருட 2010 வெயில் என்னை அந்த அளவுக்கு போட்டுச் சாத்தி விட்டது.

ஏப்ரல் முதல் வார சென்னையில் ஒரு பின்னிரவு நேரத்தில் வந்து இறங்கியபோதே எரிச்சல். ஹாங்காங்கிலிருந்து லக்கேஜ் கட்டக்கடைசியாக வந்து சேர்ந்தது. வழக்கம்போல் ஏர்போர்ட் மகானுபாவன்கள் ஏர் கண்டிஷனை ஆஃப் செய்து வைத்திருந்தார்கள். (டிபார்ச்சர் லவுஞ்சிலும் ஏசி, ஃபேன் எல்லாவற்றையும் இரவு நேரங்களில் எப்போதும் ஆஃப் செய்து- வேண்டுமென்றே ஃபேன் கனெக்‌ஷன்களைத் துண்டித்தும் வைத்து- பிரயாணிகளை நாறடிக்கும் ஒரே இண்டர்நேஷனல் ஏர்போர்ட் என்கிற பெருமை சென்னைக்குப் பல வருடங்களாகவே உண்டு).

வர வேண்டிய காரைக் காணோம். ஏழெட்டு தடவை போனுக்குப் பிறகு தூக்கம்+சப்பைக் கலக்கத்தில் டிரைவர் “சார், இன்னிக்கா வரீங்க? நாளைக்குன்னுல்ல நெனச்சேன்!”

என்றைக்குத்தான் அந்த ஏர்போர்ட்டைச் சரிசெய்வார்களோ, ஆண்டவனுக்கே வெளிச்சம். லக்கேஜை வெளியில் உருட்டிக்கொண்டு வரும்போதே கரடுமுரடான, மேடுபள்ளப் பாதையில் எல்லாமே சாய்ந்து கொட்டுகிறது. நான் மட்டும் தனியாக அல்ல, சக பிரயாணிகளும் இருட்டில் அல்லாடுகிறார்கள். ‘டிரைவரைக் காணோமே’ என்று இருட்டில் அலையும் என் போன்ற திக்கற்ற பார்வதிகளைக் குறிவைத்தே ஒரு கழுகு வியாபாரிக் கூட்டம் அலைகிறது. “சார், நம்ம வண்டில வாங்க சார்”, “டேய், என்கிட்ட மோதாதே, சாரு என்னியத்தான் மொதல்லியே பார்த்தாரு. இல்லியா சார்?”, “இப்ப இன்னான்ற நீயு?”- குப்பென்ற சாராய நெடி.


தலையில் அடித்துக்கொள்கிறேன்.

அங்கீகாரமில்லாத ஓட்டை வண்டி, செக்யூரிடிகளுடனும், பார்க்கிங் குத்தகைக்காரர்களுடனும் மல்லுக்கட்டும் லுங்கி டிரைவர், அநியாய விலை- எல்லா எரிச்சலையும் தாண்டி காஸ்மோபாலிட்டன் கிளப்புக்கு வண்டியை விடச் சொன்னேன். போகும் வழியில் ஒரு திடீர் யோசனை. தி. நகர் ஆபீசில் எட்டிப்பார்த்து விட்டுப் போனாலென்ன? 24 பை 7 தானே!



ஆபீசின் ஏசி சுகமும், கெஸ்ட் ஹவுசின் புதுப் படுக்கை, தலையணையும் காஸ்மோபாலிடன் ஐடியாவையே என்னை கேன்சல் செய்ய வைத்தன. தூக்கக் கலக்கத்தில் கிளப் ரிசப்ஷனிஸ்ட் “என்ன ரிசர்வேஷன்? ஏது ரிசர்வேஷன்? எதுக்காக ரிசர்வேஷன்” என்று அனத்தியதும் இன்னொரு காரணம்.


படுக்கும்போது கிட்டத்தட்ட விடிகாலை நாலு மணி ஆகிவிட்டாலும், அதிக நேரம் தூங்கமுடியவில்லை. சீக்கிரமே எழுந்து காஃபியைத் தேடி அலைய ஆரம்பித்தேன். ஆங்காங்கே ஒரு சில டீக்கடைகளில் கொஞ்சம் ‘மினுக் மினுக்’கென்று வெளிச்சம் தெரிந்தாலும், இந்த நகரம் விழித்துக்கொள்ள இன்னும் ஒரு இரண்டு மணி நேரமாவது ஆகுமென்பது தெரிந்து மேலும் மேலும் நடக்க ஆரம்பித்தேன்.

ஏழு மணி வாக்கில் முருகன் இட்லி உபயத்தில் ‘ஜகதோத்தாரணா’ என்று பாடமுடிந்தாலும், வெயில் சுளீரென்று பின் கழுத்தில் இறங்குவதையும், வியர்வை ஆறாகப் பெருகி ஓடுவதையும் நினைத்து, “ஆஹா, வசம்மா ம்ம்ம்மாட்டிக்கிட்டம்” என்று மனது அழுவாச்சியாவதை மறுக்க முடியவில்லை!

(தொடரும்)

Friday, March 19, 2010

வீட்டுத் தலைவனுக்கு ஒரு நாள் விடுமுறை!

அப்பாடா! இன்று லீவு! ப்ளாகை அப்டேட் செய்யவேண்டும், வெப்சைட்டில் அந்த ஜூரிக் கதையை எழுத வேண்டும், அப்புறம் அந்தப் புத்தகத்தைப் படிக்கவேண்டும், புதுக்கதைக்கு ஒரு சேப்டராவது ...

“ஏங்க, எத்தனை நாளாச்சு உங்ககிட்ட சொல்லி? என் வண்டியில ரைட் சைட் மிர்ரர் அட்ஜஸ்ட் பண்ணவே முடியாம அறுந்து தொங்குது. ஆக்சிஜன் சென்ஸார் மாத்தணும்னு வேற சொன்னீங்க. அப்படியே காரையும் கொஞ்சம் வாஷ் பண்ணி ...ம்ஹும். நான் சொல்றது என்னிக்குத்தான் உங்க காதுல விழுந்திருக்கு? ஏற்கனவே இருபத்தி நாலு மணி நேரமும் நெட்ல, இப்போ இந்த ட்விட்டர் சனியன் வேற வந்திருச்சா, வேற வினையே வேண்டாம்”

அம்மாவோடு பெண்ணும் பின்பாட்டில் சேர்ந்து கொண்டாள்.

“அப்பா, ஏன் என்னோட கார் ஸ்லோ ஸ்பீட்ல கொஞ்சம் உதறர மாதிரியே இருக்கு. இதுல இஞ்சின்னு ஒண்ணு இருக்கா, இல்லியா? போன மாசம் தானே மெகானிக் கிட்ட எடுத்துட்டுப் போனே? அவன் உன்னை ரொம்பவும் மொட்டை அடிக்கறாம்பா. அவன் கேரேஜ்ல வேலை செய்யுற கார், வெளியே வந்தவுடனே இந்தப் பாடு படுத்துது? இந்த வாரம் நான் ரொம்ப பிசி. அடுத்த வாரம் என்னிக்கு நீ இதை எடுத்துட்டுப் போயி சரி பண்ணலாம்னு நாளன்னிக்கு ஈவினிங் 4 டு 5 சொல்றேன்”

இருமுனைத் தாக்குதலிலிருந்து தப்பிக்க, சமயோசிதமாக, பையனைக் கூப்பிட்டேன், ‘அவதார்’ பார்த்து விடலாம் அவனுடன் என்கிற அடிமன நப்பாசையுடன்.

“ஹலோ, அப்பாவா? கூப்பிட்டிங்களா? என்ன விஷயம்? சீக்கிரம் சொல்லுங்க. மீட்டிங்ல இருக்கேன்”

“ இல்லடா, உன் கார் ஆயில் சேஞ்ச் பண்ணி ரொம்ப நாளாச்சே. அதான் அதைப் பண்ணிட்டு நாம ரெண்டு பேரும் ...”

“அதுக்கெல்லாம் இப்ப நேரம் இல்லைப்பா. என்னோட டிரக் சும்மா தான் நிக்குது. அதை வேணும்னா எடுத்துட்டுப் போய் டிங்கரிங் பண்ணிடுங்க. என் ஃப்ரண்ட்ஸ் எடுத்துக்கிட்டுப் போய் எங்கேயெல்லாமோ இடிச்சுட்டுக் கொண்டு வந்து சைலண்டா கொடுத்துடறாங்க. ஓகேப்பா. அப்புறம் பேசலாம். வேற கால் வருது. பை”

என் சொந்தங்களின் கார் புலம்பல்கள் இருக்கட்டும். என் சொந்தக் காரை எடுத்துக்கொண்டு போய் ட்யூன் பண்ணி, கொஞ்சம் அப்டேக் வால்வ் சத்தத்தை சரி பண்ணி, வாஷ் பண்ணி ...ஊஹும், அதற்கு இன்றும் நேரம் கிடைக்காது.

“ஏங்க, இன்னிக்கு உங்களுக்கு லீவு தானே?”

“இல்லியே, நான், வந்து, ஒரு அரை நாள், வந்து லேட்டா...”

“அப்ப ஒண்ணு செய்யுங்க. சண்டே பார்ட்டிக்கு ஒரு 40, 50 சேர்ஸ் தேவையா இருக்கும். பையன் டிரக்கை எடுத்துக்கிட்டு போய், எல்லாத்தையும் என் ஃப்ரண்ட் வீட்டில இருந்து கொண்டு வந்துட்டீங்கன்னா, 200 டாலர் மிச்சம்”

“இல்லம்மா, பையன் டிரக்ல ...”

”மசம்சன்னு ஏதாவது காரணம் சொல்லாதீங்க. சேர்களெல்லாம் டிரக்லயே கொண்டு வந்தப்பறமா, டேபிள்ஸ் எங்கேயிருந்து வரணும்னு சொல்றேன். பை”

ஆங்காங்கே நசுங்கிய பித்தளைச் சொம்பு மாதிரி இருந்த பையனின் புது டிரக்கில் அவன் நட்பு நாயகர்களின் ஆழம் தெரிந்தது. டிரக்கை எடுத்து வந்தபிறகு தான் அதன் பின்வாசலைத் திறக்க சாவி இல்லை என்பதும், அலாகாபாத் திருவேணி சங்கமத்தில் முழுக்கினால் கூட அதன் புற அழுக்கு போகாதென்பதும் தெள்ளெனத் தெரிந்தது.

கள்ளச்சாவிகள் எதுவுமே வேலை செய்யாமல் நாள் களைத்துப்போனபோது, 30 ஒற்றைச் சாவிகள் வீட்டு அலமாரிகளில் ஆங்காங்கே கிடைத்திருப்பதாகவும், அதில் எது வேலை செய்யலாமென்று பார்க்கும்படியும் ஒரு அவசர டெக்ஸ்ட் மெசேஜ்.

சாவி கிடைக்குமா, கிடைத்தாலும் அது வேலை செய்யுமா, அந்த வண்டியில் 40 நாற்காலிகளை ஒரேயடியாக ஒரே நேரத்தில் ஏற்றிவர முடியுமா? இதன் டைமென்ஷன்ஸ் என்ன? லாஜிஸ்டிக்ஸ் என்ன? போன்ற கேள்விகளெல்லாம் நானே என்னைக் கேட்டுக்கொண்டு பதிலும் தேடியாக வேண்டிய நிலமை.

இந்தக் கொடுமைக்கு ஆபீசுக்கே போய்த் தொலைத்திருக்கலாம்.

யார் செய்த புண்ணியமோ, டிரக்கின் சொர்க்கவாசல் எப்படியோ திறந்து விட்டது.

நாற்காலிகளை வண்டியில் ஏற்றலாம் என்று பார்த்தால், அத்தனையும் ராஜா ராணி சைசில், கை மடங்காமல், கால் மடங்காமல், பாரிசவாயு, பக்கவாதத்தால் பல்லிளித்து, பி. வாசு படத்து பண்டரிபாயாய் செண்டிமெண்டுடன் விறைத்து நின்றன. வெட்டைவெளியில் கிடந்த அந்த நாற்காலிகளில் ஆயிரம் குருவிகளும், ஐநூறு காக்காய்களும் லெட்ரின் கட்டி சுகபேதி வாழ்க்கை வாழ்ந்த செப்பேட்டு சுவடுகள் வெட்ட வெளிச்சத்தில் நாறித் தொலைத்தன.

“ஐ திங்க் ஒன்ஸ் யூ வாஷ் தீஸ் சேர்ஸ், எவ்ரிதிங் வில் பி ஓகே, ரைட்?”

தானமாய் வாங்கிய மாட்டை மட்டுமல்ல, நாற்காலிகளையும் அக்கணமே பரிசோதித்தல் அழகல்ல.

“நானே உங்களுக்கு ஹெல்ப் பண்ணணும்னு நெனச்சேன். ஆனா பாருங்க, என் வலது தோள்பட்டையில சுளுக்கு, இடது தொடையில எலும்பு பிசகி ..”

“வேண்டாம், வேண்டாம். நானே பார்த்துக்கொள்கிறேன்”

நாங்கள் கண்ணன் பரம்பரை அல்லவா? ‘ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜா’

எல்லா தர்மங்களையும், அதர்மங்களையும் கழிசடைகளையும் பொறுப்புகளையும் ஓட்டை சேர்களையும் என் தலையில் கட்டுங்கள், நான் எதற்காக இருக்கிறேன், ஒரு இளிச்சவாயன்? உங்கள் அனைவரையும் சந்தோஷமாக உட்கார வைத்து சந்தோஷப்படுத்துவதுதானே என் ஒரே வேலை?

எல்லா சேர்களையும் மொத்தமாக ஸ்விம்மிங் பூலில் அமிழ்த்தி விடலாமா அல்லது அவை மேல் பெட்ரோலைக் கொட்டி க்ளைமேக்ஸ் காட்சி மாதிரி ஏதாவது செய்து விடலாமா என்று யோசித்த வண்ணம், “ஓகே. ஐ வில் க்ளீன் தெம்” என்றேன்.

நடமாடும் கொலுவண்டி மாதிரி ஒருவழியாக அத்தனை நாற்காலிகளையும் டிரக்கில் மூன்றடுக்காய ஏற்றி ‘ஆடாது அசங்காது வா கண்ணா’ என்று மத்யமாவதியில் பாடியபடி ஃப்ரீவேயில் ஏறினால் இரண்டே நிமிடங்களில் டிரக் மக்கர் பண்ணி நின்று விட்டது.

அடாடா, என்னிடம் யார் எந்த வண்டியைக் கொடுத்தாலும் பெட்ரோலை சுத்தமாக உறிஞ்சி எடுத்தபின்னர் தானே கொடுப்பார்கள்? இந்த பால பாடம் இன்று மட்டும் எப்படி மறந்தே போனது?

இந்தப்பக்கம் 8 லேன்கள், அந்தப் பக்கம் 8 லேன்கள் என்று அசுர வாகனங்களும் 18 வீலர்களும் அலறிச் செல்லும் அமெரிக்க ஃப்ரீவேயில் பெட்ரோல் இல்லாமல் ஒரு ஓரமாக பேஸ்தடித்து நான் நின்றிருக்கின்ற முதல் நாள் இன்றுதான்.

எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.

AAA-வைக் கூப்பிட்டால் “16 டிஜிட் மெம்பர்ஷிப் நம்பர் என்ன? காரின் லைசென்ஸ்ப்ளேட் நம்பர் என்ன? கார் எஞ்சினில் பொறித்திருக்கும் ரகசிய எண் என்ன? என்று கே.பி. சுந்தராம்பாள் மாதிரி என்னென்னவோ கேள்விகள் மெஷின் குரலில் கேட்டபிறகு, மனிதக்குரலில் ”அங்கேயே நில்லுங்கள். ஜாக்கிரதை. வண்டியை விட்டு இறங்கவேண்டாம். அரை மணி நேரத்தில் வந்து விடுகிறோம்” என்கிற கரிசனம் வேறு.

தனிப் புலமபலை மனைவியிடம்தானே புலம்பமுடியும்? “என்னம்மா இது, சேர்ஸ் மகா த்ராபையா இருக்கும்போலே இருக்கே? வழக்கம் போல வாடகைக்கே எடுத்திருக்கலாமோ?”

“அவ வீட்ல இருக்கற சேர்ஸ் சுமாரா தான் இருக்கும்னு எனக்குத் தெரியாதாக்கும்? அதெல்லாம் மொதல்லயே யோசிச்சு வெச்சுட்டேன். நீங்க வீட்டுக்குப் போனப்பறமா, ஸ்பேர் ரூம்ல சேர் கவர்ஸ் மூடி வெச்சிருக்கேன். அதையெல்லாம் எடுத்து, வாஷ் பண்ணி, ஐயர்ன் பண்ணி, ஹலோ, ஹலோ, காலை கட் பண்ணிட்டீங்களா?”

போனில் கூட யாரிடமும் எதுவும் பேசப் பிடிக்காமல், “என்னடா இது எல்லேக்கு வந்த சோதனை?” என்று வெயிலில் களைத்து நிற்கும்போது இன்னொரு டிரக் என் முன் வந்து அவசரமாக நின்றது. அட, AAA அதற்குள்ளே வந்து விட்டதா? இல்லை, உற்றுப் பார்த்தால் ‘மெட்ரோ ஹெல்ப் லாஸ் ஏஞ்சல்ஸ்’ என்று ஏதோ எழுதி இருந்தது.

நாங்கள் கட்டுகிற மோட்டார் வரி உண்மையாகவே பலன் தரும் நேரம்.

“என்ன உதவி வேண்டும்? ஒரு கேலன் பெட்ரோல் தந்தால் அடுத்த பெட்ரோல் பங்க் வரை போய் விடுவீர்களா?”

“கண்டிப்பாக. எரிபொருள்தரு கோமானே, உங்கள் குலம் ஏற்றம் பெற்றுப் பல்லாண்டு வாழ்க”

லஞ்சம் கிடையாது. டிப்ஸ் சந்தோஷமாக வாங்கிக்கொள்ளப்பட்டது.

வண்டி சீறி எழுந்து, நான் “அப்பாடா” என்பதற்குள் ஆபீசிலிருந்து போன். “லேப்டாப் கையில வெச்சிருக்கீங்களா, சார்? முடிஞ்சா நெட்வொர்க் ஆக்செஸ் பண்ணி ...”

நான் ரிட்டையர் ஆனபின் காசி, ராமேஸ்வரம் எல்லாம் போவேனோ தெரியாது. கண்டிப்பாக இங்கே எனக்கு கார் மெகானிக் வேலை காத்திருக்கிறது.

ஒரே குறை. காசு மட்டும், பத்து பைசா கூட துட்டு பேறாது!



Thursday, February 18, 2010

ஆள், படை, அடியாள் சேனை, அடிப்படைத் தேவை!

சில வருடங்களாகவே தமிழகத் தலைநகரமான சிங்காரச் சென்னை, கொலைநகரமாக உருவெடுத்து வருவதைக் கவலையுடன் படிக்க வேண்டியிருக்கிறது.

துப்பாக்கிச்சூடுகள், என்கௌண்டர்கள், ரவுடிகள் மோதல், அசோக் நகர், அண்ணா நகர் போன்ற மேல்தட்டுக் குடியிருப்புகளில் கூட அடுக்கடுக்கான கொலை சம்பவங்கள், செயின் பறிப்பு, போதை மருந்துக் கும்பல் என்று பத்திரிகைகள் அன்றாடம் அலறுகின்றன.

ஆட்சியாளர்கள் காதில் இதெல்லாம் விழுகிறதா என்றே தெரியவில்லை. அவர்களுக்கு வால் பிடித்து ஜால்ரா போடவே போலீசுக்கு நேரம் போதவில்லை போலும்!

சென்னையில் எனக்குத் தெரிந்து பல நடிகர்கள், ரியல் எஸ்டேட் தொழில் பண்ணுபவர்கள் சின்னச்சின்ன அடியாள் கும்பல்களை வேலைக்கு வைத்திருக்கிறார்கள். தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறதோ இல்லையோ, கட்டைப் பஞ்சாயத்தில் நமக்குத்தான் அகில இந்தியாவிலும் முதலிடம்!

சென்ற வருடம், தி. நகரில் “எங்கள் வீட்டு வாசலில் காரை நிறுத்தாதே” என்று தாடி நடிகர் ஒருவரின் வீட்டு வாசலில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட அவர்கள் வீட்டு அடியாள் கும்பல், தயாராக வைத்திருந்த உருட்டுக் கட்டைகளுடன் கார்களை அடித்து நொறுக்கி, மிகவும் சாதாரண, நடுத்தர வர்க்க, பொறுப்புள்ள வேலைகளில் இருக்கும் குடிமக்களை அடித்து, உதைத்து, கை கால்களை உடைத்து விரட்டிய சம்பவம், என்னை சென்னை பற்றியே திகிலுறச் செய்கிறது.

அடிதடிகளில் கொஞ்சமும் பரிச்சமில்லாத என் நண்பன் ஒருவன், வாக்குவாதத்தை தடுக்கப்போய், தர்ம அடி வாங்க நேர்ந்த விழுப்புண்களை என் கண்முன் காட்டியபோது என்னால் நம்பவே முடியவில்லை. இத்தனைக்கும் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் ப்ளாட்ஃபாரம் ஓரமாகத்தான் காரை நிறுத்தியதாக அவர்கள் சொன்னார்கள். உருட்டுக்கட்டைப் போர்ப்படை வீரர்களை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை என்பது உண்மை.

டாடா சுமோவிலும் ஆட்டோக்களிலும் ஏதாவதொரு கட்சிக் கொடி போட்டுக்கொண்டு விட்டால் யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்யலாமா?

அசந்தர்ப்பமாக எங்கேயோ ஏதோ ஜோக் அடிக்கப்போய், அதையே ஒரு சாக்காக வைத்துக்கொண்டு நடிகர் ஜெயராம் வீடு தாக்கப்பட்ட நிகழ்ச்சி முடிவதற்குள்ளாகவே, அடுத்து இன்னொரு பயங்கரம்!

அஜீத் பெயரைச்சொல்லி ஒரு அடியாள் கும்பல் ஸ்டண்ட்மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்தின் வீடு புகுந்து காரை நொறுக்கியதாம்.

பத்திரிகைகளில் போடுகிறார்கள், டீவியில் காட்டுகிறார்கள் என்பதற்காகவே சில்லறைக் கட்சி சித்தர்கள் ஓவராக உதார் விடுவது, மகா கேவலம்!

என்று தணியும் இந்த தீவிரவாத மோகம் ?!

Thursday, February 11, 2010

(ஆதி கால) சாம்கோ!

எழுபதுகளில் சென்னை அயனாவரத்திலிருந்து நாங்கள் அபிராமபுரத்தில் புது வீடு கட்டிக்கொண்டு குடி வந்த உடனேயே எனக்கு ஆழ்வார்பேட்டை ‘சாம்கோ’ சகவாசம் ஏற்பட்டு விட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

தென்சென்னையின் அரசியல், கலாச்சார, ஆன்மீக, பாரம்பரிய பின்புலன் தெரியாத வெளியூர் வாசகர்களுக்கான ஒரு சிறு முன்னறிவிப்பு:

சென்னை என்றால் தென்சென்னை தான். தென்சென்னை என்றால் மைலாப்பூர் தான்! அபிராமபுரம் என்பது மைலாப்பூரை ஒட்டிய வளமான ஒரு சிறு பகுதி. ‘தம்மாத்துண்டு’ ஏரியா தான் என்றாலும் ஆழ்வார்பேட்டைக்கும் மைலாப்பூருக்கும் இடையே இருப்பதால் இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஏரியா ஆகிப்போனது.

அதுவும் இப்போது இருக்கும் ஆழ்வார்பேட்டை ரவுண்ட் தாணா பகுதி ஒரு அபத்தமான சின்ன ஃப்ளைஓவரின் கீழ் தற்போது மறைந்து கிடந்தாலும், அப்போது மேற்கு மூலையில் கமல் வீடு, கிழக்கு மூலையில் சாம்கோ ஹோட்டல். பாக்கி இன்னும் எல்லா மூலைகளிலும் பெட்ரோல் பங்குகள், ஆட்டோ ஸ்டாண்டுகள், பெட்டிக்கடைகள் என்று ‘ஷகரா’ன கலகலப்பான ஏரியா.

சமீபத்தில் எழுத்தாள நண்பர் ச.ந.கண்ணன் (சக சாப்பாட்டுராமன் என்பதறிக)சென்னையின் எந்தெந்த ஹோட்டல்களில் எந்தெந்த சைவ, அசைவ ஐட்டங்கள் நன்றாக இருக்கும், இருக்காது என்பது பற்றியெல்லாம் ஒரு திறனாய்வே எழுதி இருந்ததைப் படித்துக் கொஞ்சம் பொறாமை கலந்த பசியேப்பம் விடும் வாய்ப்பு / எரிச்சல் எனக்குக் கிடைத்தது.

வரலாற்று முக்கியம் வாய்ந்த ‘சாம்கோ’ பற்றி நாங்கள் தனி மடல்களில் சம்பாஷிக்கலானோம். தற்சமய சாம்கோ ரொம்பவும் மாடர்னாக ஆகி விட்டதாகவும் சர்வீஸ் அம்பேல் ஆகி விட்டதாகவும் அவர் புலம்பி இருந்தார்.

ஆதிகால சாம்கோ எப்படி இருந்தது?

அசைவ ஐட்டங்களுக்கு அது ஒரு மெக்கா என்பதாலும், மேல் மாடியில் ‘தெரிந்தவர்களுக்கு மட்டும்’ ஏர் கண்டிஷன், தாகசாந்திக்கான ‘பூத்’ வசதிகள் உண்டென்பதாலும் இளைஞர்களிடையே அப்போது சாம்கோ படு பிரசித்தம்.

என் நண்பர்கள் குழாமில் பலரும்- பிராமண நண்பர்கள் உட்பட - அசைவரே. சமோசா, பரோட்டா, ஆப்பம் போன்ற வெஜிடேரியன் ஐட்டங்கள் அங்கே என் அய்யர் குழாம் நண்பர்களிடையேயும் படு பிரசித்தம். அதுவும் சாம்கோ டீ என்றால் ஆண்டவனே அவ்வப்போது நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டு அங்கே வந்து, சர்வர் ‘மொஹமது’ கையால் இளைப்பாறி விட்டுச் செல்வது வழக்கம். ஓனர், சர்வர்கள் எல்லோருமே அப்போது மலையாளி முஸ்லிம்கள். விருந்தோம்புவது அவர்கள் ரத்தத்தில் ஊறிப்போன நல்ல விஷயம். அவசரத்தில் மணிபர்ஸ் கொண்டு வராவிட்டாலும் அடுத்த நாள் வந்து பில் பணத்தைக் கட்டிக் கொள்ளலாம்.

கொண்டாட்ட வைபவங்களுக்கு மாடி தான் வசதி. கீழே சாப்பிட வருபவர்களில் பலரும் அன்றாடத் தொழிலாளிகள் அல்லது அவசரத்திற்கு ஒரு சாயா அடித்து விட்டுப் போகிறவர்கள்.

ரெகுலர்சுக்காக, மாடியில் ‘பூத்’கள் நிறைந்து விட்டால் கொஞ்சம் நிழலாக வேறு ஏற்பாடுகள் செய்து கொடுப்பார்கள். அவசரத்திற்கு ஒரு எடுபிடி ஓடிப்போய் ஐஸ்கோல்ட் பியர் வாங்கி வருவான். அல்லது அசமஞ்சம் மாதிரி ஒரே ஒரு சிங்கிள் டீயுடன் உட்கார்ந்து நாற்காலி தேய்ப்பவர்கள் நாசூக்காக எங்களுக்காக விரட்டப்படுவார்கள். மொட்டை மாடி மாதிரி கொஞ்சம் திறந்தவெளி என்பதால் புகை போகவும் வசதி.

வாரக்கடைசிகளில் அங்கே இடம் கிடைக்க ஜாதகத்தில் குரு உச்சத்தில் இருக்கவேண்டும். அல்லது ஓனர் பாவாவின் அருட்கடாட்சம் வேண்டும்.

பிரியாணியோ, டீயோ, ஃபுல் கட்டோ, அவரவர் வசதிக்கேற்ப சாப்பிட்டு முடித்துக் கீழே வந்தால் சாம்கோவை ஒட்டிய பெட்டிக்கடையில் ஒரு பீடாவோ சோடாவோ சாப்பிடாவிட்டால் ஜென்மம் கடைத்தேறாது என்கிறது ஆழ்வார்பேட்டை தலபுராணம். ஜர்தா 120, 140 என்று சக்கைப்போடு போடும். 555, ப்ளேயர்ஸ் எல்லாம் கிடைக்கும்.

அவ்வப்போது கமலஹாசன் அங்கே வந்து போவது வழக்கம். சாம்கோவுக்கு எதிரே கமல் வீட்டை ஒட்டி இருந்த இன்னொரு பெட்டிக்கடை வாசலில் தான் நானும் கமலும் முதன்முதலில் அறிமுகமானோம். அறிமுகப்படுத்திய நண்பன் ‘கல்லி’ என்கிற கல்யாணசுந்தரம். நல்ல மனசுக்காரன். தடாலடியாக ஏதாவது சொல்வான். சில சமயம் செய்யவும் செய்வான். அப்படித்தான் ஒரு நாள் என்னை கமலிடம் அறிமுகம் செய்கிறேன் என்று அழைத்துப் போய் அதை செய்தும் காட்டினான். காந்தியும் நேருவும் சாய்ந்தாற்போல் பேசிக்கொள்ளும் கருப்பு-வெள்ளை புகைப்படம் ஒன்றை நீங்கள் பார்த்திருப்பீர்களே, அதே போல் கமலும் நானும் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை அந்தக் கடைக்காரர் அங்கே பல வருடங்கள் மாட்டிவைத்து, வேண்டாம், பீலாவின் சு.த. நெடி எனக்கே தாங்க முடியவில்லை. விட்டு விடுகிறேன்.

கமல் நல்ல நண்பரான பிறகு, என் ஸ்கூட்டரை அல்லது காரை அவர் வீட்டிலேயே விட்டுவிட்டுச் செல்லுமளவுக்கு எனக்கு சுதந்திரம் கிடைத்தது. அப்போது கமலின் செக்ரட்டரியாக இருந்த சேஷாத்ரி என்ன ஆனான் என்பது தெரியவில்லை. சில வருஷங்களுக்கு முன்பு கூட, சாம்கோ மேற்கு மூலைக்குக் குடி மாறிய பிறகு, கமல் சிம்ரனை அழைத்து வந்து தன் பால்ய நினைவுகளை அங்கே பகிர்ந்து கொண்டதாகச் சொன்னது ஒரு காற்றுவழிச் செய்தி.

நிற்க, இது கமல் புராணம் இல்லை, சாம்கோ புராணம் என்பதால் மீண்டும் சாம்கோ பற்றியே பேசுவோம்.

பல விடலைப் பசங்களுக்கு முதலில் தீர்த்தானந்த சிட்சை கிடைத்த புண்ணிய ஷேத்திரமே சாம்கோ தான். சாம்கோவில் வாந்தியெடுத்து ஞானஸ்நானம் பெறாதவர்களை நண்பர்கள் குழாமிலிருந்தே ஜாதிப் பிரஷ்டம் செய்து விலக்கி வைப்பதெல்லாம் அப்போது சர்வ சகஜம். சும்மனாச்சிக்கும் ”வயிற்றைப் பிரட்டியது, வாந்தி வருவது போல் இருந்தது” எல்லாம் செல்லுபடியாகாது. பத்து பேராவது பார்க்கும்படி பீச்சி அடித்தவர்கள் நண்பர் குழாத்தின் உள்வட்டத்துக்குள் அநாயாசமாக ப்ரமோஷன் ஆவார்கள்.

அப்போதெல்லாம் சென்னையில் ஃப்ரீயான குடியாட்சி கிடையாதென்பதால், திடீரென்று சாம்கோவும் மோடியின் குஜராத் மாதிரி அவ்வப்போது விறைத்துக்கொண்டு நிற்கும். உள்ளே நுழையும்போதே “ஏசி சர்வீஸ் கிடையாது சார்” என்பார்கள். ”ஓஹோ, மாசக் கடைசி, போலீஸ் தொல்லை போலிருக்கிறது” என்று நாம்தான் குறிப்பறிந்து புரிந்துகொள்ள வேண்டும்.

அப்போது கூட “எந்தா சேட்டா?” என்று மொகமது கோஷ்டியின் முகவாயைப் பிடித்துக் கொஞ்சி காரியங்கள் சித்தியாவதும் உண்டு. காவல்நிலைய நிர்ப்பந்தங்கள் அதிகமாக இருந்தால் அவர்களே ஆங்காங்கே சில ‘லுக் அவுட்’களை போஸ்டிங்கில் போடுவார்கள். எப்படிப்பட்ட நெருக்கடி, எமர்ஜென்சி நேரங்களிலும் நெருக்கமான பழக்கத்தால் எங்கள் குழாமுக்காக மட்டுமே சாம்கோ பின்னிரவு வரை திறந்திருந்ததும் உண்டு.

அசைவ ஐட்டங்கள் பிரமாதம் என்று அசைவ நண்பர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வட இந்திய வெஜ் ஐட்டங்களும் அட்டகாசமாகவே இருந்த நினைவு. விலையும் சல்லிசு தான்.

அந்த சாம்கோ பீடாக்கடைக்கும் ரஜினி விசிட் செய்து ஜர்தா வாங்கிச் சென்றிருப்பதாகச் சொல்வார்கள். நான் பார்த்ததில்லை.

சாம்கோ மேற்கு மூலைக்கு இடம் மாறியதும் ஓரிரு முறை போய் வந்திருக்கிறேன். பழைய camaraderie இல்லை. விலையும் அதிகம். இப்போது இன்னும் ஹை கிளாசாக, மோசமாகப் போய் விட்டதாகச் சொல்கிறார்கள்.

பாரதி இருந்த வீடு மாதிரி பழைய சாம்கோவை ஒரு வரலாற்றுச் சின்னமாக அறிவித்திருக்கலாம். ப்ச், செய்யவில்லை. தப்பு பண்ணிவிட்டோம்.

‘மார்பு துடிக்குதடி கண்ணம்மா’ என்று வேண்டுமானால் இப்போது புலம்பலாம்!

Thursday, February 04, 2010

சென்னையில் கொசு ஒழிப்பு போராட்டம்!

சென்னையில் அம்மா ஆரம்பித்து வைத்துள்ள கொசு ஒழிப்பு போராட்டம் எவ்வளவு வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை.

“ஆமா, எல்லா போராட்டமும் நடத்திக் கிழிச்சிட்டாங்க இந்தம்மா! இப்ப கொசு ஒழிப்பு போராட்டமா?!” என்று ஆளும் கட்சியினர் கிண்டல் செய்திருப்பதிலிருந்து இந்தப் போராட்டத்திற்கு அரசு ஆதரவில்லை என்பது தெரிகிறது.

எதை எடுத்தாலும் அதை அரசியலாக்கிவிடுகிற நம் கொள்கையை விடுங்கள்.

நிஜமாகவே சென்னையில் கொசுத் தொல்லை தாங்க முடியாத ஒரு கொடுமைதான்.

கூவத்தை சுத்தப்படுத்துகிறேன் என்று கோடிக்கணக்கில் செலவு செய்வதற்குமுன், ஏகப்பட்ட மருந்து, ரசாயனப் பொருட்களைத் தினமும் காற்றில் பரவ விடுவதற்கு முன் இப்படிச் செய்தாலென்ன?

ஒரு சில வகை மீன்கள் வளர்ப்பதால் கொசு உற்பத்தி தடுக்கப்படுவதாக நான் படித்தேன்.

சென்னை மாநகராட்சி கவனத்திற்கு:

http://www.redlasso.com/ClipPlayer.aspx?id=7124cc5f-6c6f-461b-b52d-728af0306334

Sunday, January 31, 2010

ப்ளாகரா, வோர்ட்ப்ரஸ்ஸா?

இரண்டு பெண்டாண்டிக்காரன் மாதிரி இது ஒரு அவஸ்தை என்று தெரியாமல், வோர்ட்ப்ரஸ்ஸிலும் www.writerlaram.com என்றொரு குடித்தனம் போட்டாயிற்று.

இத்தனை நாளாய் இங்கே வருபவர்களை அங்கே வாருங்கள் என்றும் அலைக்கழித்தாயிற்று. இதை இப்படியே ’அம்போ’ என்று விட்டுவிடுவது சரியல்ல, நம் வாசகர்களுக்கு அது நாம் செய்யும் துரோகம் என்று அந்தராத்மா இடித்துரைக்கிறது.

காலைச் சிற்றுண்டி கோபாலபுரத்தில், மதியச் சாப்பாடு சி.ஐ.டி காலனியில் என்றெல்லாம் முதல்வர் மாதிரி சமர்த்தாக வகுத்துக்கொள்ள எனக்குத் தெரியவில்லை. அங்கே இருந்தால் இந்த ஞாபகம், இங்கே வந்தால் அந்த நினைவு என்று அல்லாடுகிறேன்.

இரண்டு இடத்திலும் அதே சாப்பாடு என்று வைத்துக்கொண்டால், அஜீரணமாகி விடாதோ?

இங்கே எந்த மாதிரி மெனு, அங்கே எப்படி எப்படி என்று ஒரே குழப்பம்.

‘ரொம்ப குழப்பமாக இருக்கும்போது, ஜோக்கரைக் கீழே போடு’ என்று ரம்மியில் ஒரு சித்தாந்தம் இருக்கிறது. அப்படி ஏடாகூடமாகப் பண்ணி, இந்தப் பக்கத்து ஆள் முறைக்க, அந்தப் பக்கத்து ஆட்டக்காரர் தொடையில் கிள்ள, ஆட்டமே ரணகளமான நினைவுகளும் என்னை பயமுறுத்துகின்றன.

ஜெயகாந்தனின் பிரபல சிறுகதை தலைப்பு ஒன்றுதான் ஞாபகம் வருகிறது:

நான் என்ன செய்யட்டும், சொல்லுங்கோ?!

Friday, January 15, 2010

ஒரு ஜுரியின் டயரி - 1

Simulcast மாதிரி இது ஒரே நேரத்தில் இங்கேயும் Simulpublish பண்ணப்படுகிறது!

எங்கே?..> www.writerlaram.com

கைதிகள் மட்டும் தான் டயரி எழுத வேண்டும் என்பதில்லை. ஜூரிகளும் எழுதலாம்.

ஜூரி தெரியுமில்லையா, ஜூரி?

'ஜூரி என்றால் என்ன? பூரி மாதிரி ஏதாவது சாப்பிடுகிற பண்டமா? என்று கேட்கப்போகும் அஞ்ஞானிகளுக்கான ஜூரி பற்றிய ஒரு சின்ன ‘விக்கி’ (’விக்கி’ என்றால் என்ன என்று படுத்தக்கூடாது. அப்புறம் சைனாவுக்கே ஆப்பு வைத்துவிட்டு அங்கிருந்து கூகுள் எஸ்கேப் ஆவது போல், நானும் உங்கள் நெட்வொர்க்கை DoS அட்டாக் பண்ணி ப்ரௌவுசரின் டவுசரை அவிழ்த்து விடுவேன், ஜாக்கிரதை!)

மரியா கேரியைத் தெரியும், மர்லின் மன்ரோவைத் தெரியும், ஏஞ்சலீனா ஜோலியைத் தெரியும், ஆனால் ஜூரியைத் தெரியாதா?

என்ன இளிப்புங்கறேன்? ஜூரிங்கறது லேட்டஸ்ட் நடிகை இல்லைங்காணும், ஜுரிங்கறது ஒரு அமெரிக்க சட்ட திட்ட வரைமுறை! அமெரிக்காவில் ‘ஜூரி’ சிஸ்டம் என்று ஒன்று இருக்கிறது.



ஒரு ஜட்ஜ் -ஒரே ஒரு ஜட்ஜ் மட்டும்- ஒரு கேஸை விசாரித்து தீர்ப்பு சொல்வது நம் இந்திய நாட்டு சட்ட முறை. அவர் எக்கச்சக்கமாக சொத்து சேர்த்து வைத்திருக்கலாம், RTI ஆக்டுக்கே அல்வா கொடுத்து மாசக் கணக்கில் டபாய்க்கலாம், ஏக்கர் கணக்கில் வேலி போட்டு ஊரையே வளைத்துப் போட்டிருக்கலாம். அல்லது பத்து பைசா சேர்த்து வைக்காத தக்கணாமுட்டி ஜட்ஜாகவும் இருக்கலாம்.

ஆனால் கோர்ட்டில் அவர் விசாரித்துச் சொல்வது தான் தீர்ப்பு. அந்தத் தீர்ப்பு உங்களுக்குப் பிடிக்காவிட்டால் மேல் கோர்ட்டுக்கு நீங்கள் அப்பீல் செய்கிறேன் என்று நடையாக நடக்கலாம். அங்கேயும் உங்களுக்கு இன்னொரு ஜட்ஜிடம் ஆப்பு தான் என்றால் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகிறேன் பேர்வழி என்று கேஸை இழு இழுவென்று இழுத்தடித்து சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் சம்மன் போட்டே சாகடிக்கலாம். மொத்தத்தில் கேஸ் விசாரணைக்கு வரும்போது அதில் சம்பந்தப்பட்ட அத்தனை பேருமே மண்டையைப் போட்டு விடுவார்கள். இது இந்திய முறை. ரொம்பவும் விளக்கமாக அப்பெல்லேட் கோர்ட், ஜுடிஷியல் பெஞ்ச், கான்ஸ்டிட்யூஷனல் ஸ்டூல் என்றெல்லாம் குருட்டுச் சட்டத்தின் இருட்டு அறைகளில் புகுந்து புறப்பட்டு இது பற்றியெல்லாம் விளக்கமாகச் சொல்வது இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல!

புழுதிக் கிராமத்தில் பதினெட்டுப் பட்டிக்கு நடுவே ஆல மரம், பித்தளைச் சொம்பு, அழுக்கு ஜமக்காளம், அதை விட அழுக்காக ஒரு ஐம்பது பேர் கூடி நின்று ... ‘ என்று தமிழ் சினிமாக்களில் வழக்கமாக வருமே ஒரு சீன், நினைவிருக்கிறதா? ஹீரோவின் நொண்டித் தங்கையை வில்லன் கற்பழித்து விடுவான், அவள் “சொந்த மானம் போனாலும் பரவாயில்லை, என் குடும்ப மானம் பறி போய் விட்டதே” என்று ஒரு பாட்டையும் பாடி நம்மைச் சாவடித்துக் கடைசியில் தூக்கில் தொங்கலாம் என்று ஆரம்பிக்கும்போது, மரக் கதவை உதைத்து வீழ்த்தி, ஹீரோ தங்காச்சியைத் தோளில் தூக்கிச் சுமந்தபடி கொண்டு வந்து மேற்சொன்ன ஆல மரத்தடி அழுக்குக் கும்பலின் நடுவே போட்டு விட்டு, மூச்சு வாங்கியபடி நீதி கேட்பானே, அந்த சீனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

படத்தின் பட்ஜெட்டுக்குத் தக்கபடி ஊர்த் தலையாரியோ, வெட்டியானோ, பஞ்சாயத்து பிரசிடெண்டோ அல்லது பெரிய கவுண்டரோ அங்கே மரத்தடியில் நடுநாயகமாக ’கெத்’தாக உட்கார்ந்து ஒரு சொம்பு தண்ணீரையும் குடித்து முடித்து விட்டுத் தீர்ப்பு சொல்லுவாரே, ஞாபகம் இருக்கிறதா?

‘தாவணி விலகிய தங்கை மீது காமெரா எக்ஸ்ட்ரா க்ளோசப், பிறகு சிவப்புத் துண்டைப் போட்டுத் தாவணி தடுக்காமல் தங்கையைத் தாண்டுவது’, ‘கன்னத்தில் அலகு, நாக்கில் சூடத்தோடு சத்தியம் செய்’, வில்லனே நொ. தங்கையை மணந்து கொள்ளவேண்டும்’ - என்று ‘ஜட்ஜ்’ ஏதாவது தீர்ப்பு சொல்லித் தொலைப்பார். அந்தப் பட மேட்டரை அப்படியே விட்டு விடுவோம். போரடிக்கும் ஒரு பின்னிரவில் அதை நாம் விஜய் டீவியில் பார்த்து அழுது கொள்ளலாம். நமக்கு இங்கே தேவையானது இந்த சிச்சுவேஷனில் நடந்த மேட்டர்.

மேற்படி ஆல மரத்தடி தலையாரி / வெட்டியான் / பிரசிடெண்ட் / கவுண்டர் தான் அங்கே ஜட்ஜ், ஜுரி எல்லாமே. ஜூரர் என்பது ஒருமை. பல ஜூரர்கள் சேர்ந்து ஒரு ஜூரி. மெஜாரிட்டி ஒபினியன் தான் ஜெயிக்கும்.

’ஒரு ஜூரரின் டயரி’ என்றால் ஏதோ ஜன்னிக் கேஸ் மாதிரி எனக்கே பயமாகத் தெரிவதால் ‘ஒரு ஜூரியின் டயரி’.

அப்பாடா, இப்போது தலைப்பை விளக்கியாகி விட்டது. இனிமேலாவது மேட்டருக்கு வருகிறேன்.

இந்தியாவைக் குறுநில மன்னர்கள் கோலோச்சிய காலத்தில் பனிஷ்மெண்ட் என்றால் மாறு கால், மாறு கை, பையனைத் தேர்க்காலில் போட்டு நசுக்கியது, சிபிச் சக்கரவர்த்தி பையன் சதையை கிலோக் கணக்கில் கசாப் வெட்டியது, தேர் சக்கரத்தில் யாரோ யாரையோ நசுக்கியது, கண்ணகி ஒரு சைடு மேட்டரையே திருகி எறிந்தது, அதனால் மதுரையில் தினகரன் எரிந்து சாம்பலானது, மன்னிக்கவும், மதுரையே பற்றி எரிந்தது போன்ற தீர்ப்புக் காட்சிகள்.

வெள்ளைக்காரன் காலத்தில் பழைய மன்னர் சிஸ்டம் எல்லாம் வேஸ்ட், ’ப்ளடி இண்டியன் ப்ரூட்ஸ்’ என்று எல்லாரையும் திட்டி எல்லாவற்றையும் மாற்றினான். இந்த ஜூரி சிஸ்டம் தான் பெஸ்ட் என்று பண்ணினான்.

அமெரிக்காவில் ஆரம்பத்திலிருந்தே இந்த ஜூரி சிஸ்டம் தான். அதுவும் கிரிமினல் கேஸ்களுக்குக் கண்டிப்பாக ஜீரி தான்.

நான் ஜுரி வேலை பார்த்த முதல் அமெரிக்க கேஸ், ‘கலக்கப் போவது யாரு?’

(சட்டம் தன் வேலையைச் செய்யும்)

Wednesday, January 13, 2010

www.writerlaram.com is live now!

’டண்டணக்கா டண்டணக்கா’ன்னு என்ன தலைவா இது? சுய தம்பட்டத்துக்கு ஒரு அளவே இல்லையான்னு நீங்கள் கேட்பது எனக்குப் புரியாமல இல்லை.

அதனால் இன்று, இப்போது அடக்கி வாசிக்கிறேன்!

www.writerlaram.com is live now!

See you there!

இட்லி வடையில் www.writerlaram.com பற்றி!

இன்றைய மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 13-1-2010 ல் நம் புது சைட் பற்றிய இட்லி வடையின் நக்கல்! எனக்குத் தேவை தான்!




இந்த மாதிரி பேரவை
ஆரம்பிக்கும் நோய் போல writerxxx என்று எல்லோரும் ஆரம்பித்துவிடுகிறார்கள். எங்கே நாம இவர்களை ரைட்டர் என்று சொல்ல மாட்டோமோ என்று பயம். இவர்களா ரைட்டர் என்று போடுக்கொள்கிறார்கள். எனக்கு ஒரு டவுட் போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டர் என்று ஒருவர் இருப்பார், அவர்களும் வெப் சைட் ஆரம்பித்தால் ரைட்டர் என்று தான் போட்டுக்கொள்வார்கள். அப்ப நம்ம தமிழ் ரைட்டர்ஸ் பாடு படு திண்டாடம் தான். தற்போதைய புது xxx - laram தப்பா நினைச்சுக்கதீங்க இது அந்த சமாச்சாரம் இல்லை! இப்படியே கலக்கல் கபாலி, பாத்ரூம் பாகவதர் என்று பொங்கல் தினத்திலேர்ந்து நமக்கு எனிமா கொடுத்துவிடுவார்! அப்துல் கலாம் என்னடா என்றால் இளைஞர்கள் எல்லாம் அரசியலுக்கு வாங்க என்கிறார். ஆனால் நம்ம மக்கள் பிளாக் எழுதி அதில அரசியல் செய்கிறார்கள். இளைஞர்கள் ரொம்ப கெட்டுபோய்விட்டார்கள்.

தை பிறந்தால் www.writerlaram.com பிறக்கும்!

”சாதாரண ப்ளாக் ரைட்டருக்கும் உங்களை மாதிரி எழுத்தாளருக்கும் ரொம்ப வித்தியாசம் உண்டு. உங்களை மாதிரி எழுத்தாளரெல்லாம் தனியா சொந்தமா ஒரு சைட் வெச்சுக்கணும்யா” என்று பல நாட்களாக என்னை என் ஆசிரிய நண்பர்கள் உசுப்பேற்றி வந்ததன் பலனை நீங்கள் இனிமேல் அனுபவிக்கப் போகிறீர்கள்!

www.writerlaram.com பொங்கல் ரிலீஸ்!

அப்படியானால் இந்த ப்ளாகின் எதிர்காலம்?

கண்டிப்பாக பொற்காலம் தான், கவலையே படவேண்டாம். (ரொம்பத்தான்! என்னவோ அவனவனும் இதை நினைத்து நினைத்துத் தொண்டையில் சோறு இறங்காமல் தவிக்கிறானுங்களா என்ன? என்ன ஒரு பில்டப்டா சாமி, எனக்கே தாங்கலை!)

ப்ளாகில் எழுத வேண்டிய விஷயங்கள், www.writerlaram.com ல் எழுத வேண்டிய சமாச்சாரங்கள் என்று தனித்தனியே பிரித்து வைத்துக்கொண்டு ரம்பம் போட வேண்டியது தான்!

‘கால் காசுன்னாலும் கவருமெண்டு காசு’ மாதிரி, ‘காணி நிலம் வேண்டும்’ என்று பாரதித் தாத்தா பாடிய மாதிரி, இனிமேல் என் சொந்த சைட், www.writerlaram.com !

அடிக்கடி www.writerlaram.com வருமாறு உங்களை அன்புடன் அழைக்கிறேன்!


Tuesday, January 05, 2010

ஜக்குபாய், வேட்டைக்காரன் ஆன கதை!

’ஜக்குபாய்’ படத்தில் நான் ஒரு நல்ல வேஷம் கட்டி ஆடி இருப்பதை நாட்டு மக்கள் அனைவருமே அறிவார்கள்! அந்த அளவுக்கு நானும் முடிந்த இடங்களிலெல்லாம் சுய தம்பட்டம் அடித்து நாட்டு மக்களைப் பயமுறுத்தி வந்திருக்கிறேன் என்று தான் நினைக்கிறேன்.

படத்திற்காக சென்ற வருடம் நான் பாங்காக், கோலாலம்பூர், மெல்பர்ன், சென்னை என்றெல்லாம் போய் உலகமெங்கும் நடிப்பைப் பிழிந்துவிட்டு வந்ததை பிபிசி தொடர் ஒளிபரப்பே செய்ய நினைத்ததாகக் கேள்வி. ஒரு தமிழ்ப் பட டப்பிங்கிற்காக ‘எல்லே’யிலிருந்து எல்லை தாண்டி இந்தியா வரை சென்று வந்த என் சாதனை கின்னஸில் பொறிக்கப்படுவதாகவும் நான் ஒரு பின்னிரவில் பியர் மயக்கத்தில் கனவு கண்டேன்.

”அப்படியா? சொல்லவே இல்லையே!” என்று வாய் பிளப்பவர்கள் இப்போதாவது என் அளப்பரிய அருமை, பெருமை, நடிப்புத் திறமை ...வேண்டாம், இத்தோடு நிப்பாட்டிக்கொண்டு ப்ளாக் தலைப்பு மேட்டருக்குள் நுழைகிறேன்.

படம் பிரமாதமாக வந்திருப்பது எனக்குத் தெரியும். படத்தை இன்னமும் முழுதாகப் பார்க்காவிட்டாலும், சில பல பகுதிகளைப் பார்த்து சந்தோஷப்பட்டிருக்கிறேன். சரத், ஷ்ரேயா, இயக்குனர் ரவிக்குமார், ஒளிப்பதிவாளர் ராஜசேகர் என்று எல்லோருடைய அசுர உழைப்பையும், அசாதாரண திறமைகளையும் அருகாமையில் நின்று பார்த்தவன் நான். (என்னுடைய அசுர அல்லது தேவ உழைப்பைப் பற்றி நானே எழுதிக்கொள்ள இந்த பாழாய்ப்போன நாணம் தடுக்கிறது.)

முதலில் படம் ஆகஸ்ட் 15 ரிலீஸ் என்றார்கள். அப்புறம் செப்டம்பர், அப்புறம் அக்டோபர். பின்னர், “இல்லை இல்லை. தீபாவளிக்குக் கண்டிப்பாக” என்றார்கள். ஊஹும். அதுவும் நடக்கவில்லை. அப்புறம் பெரிய கார்த்திகை, சின்னக் கார்த்திகை, அமாவாசை, பௌர்ணமி, சந்திர கிரகணம் என்று ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனதில் பலருக்கும் மன வருத்தம்.

என் அகில உலக ரசிகர்கள் கொதித்தெழுந்ததை நான் உண்ணும்விரதம் மேற்கொண்டு அடக்க நேர்ந்தது. ”தற்கொலையெல்லாம் பண்ணிக்கொள்ளக் கூடாது. பண்ணிக் கொண்டால் அப்புறம் படம் சரியாகத் தெரியாது. பொறுமையாக இருங்கள்” என்று என் ரசிகமணிகளை நான் தடுத்தாட்கொண்டேன்.

கடைசியாக இயக்குனர் K. S. ரவிக்குமாரிடமிருந்தே நான் கேள்விப்பட்ட நம்பகமான ரிலீஸ் தேதி ஜனவரி 14! கடைசி கட்ட எடிட்டிங் வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருவதாக டிசம்பர் கடைசியில் சொன்னார்.

ஜனவரியில் ஊருக்குப் போய் ரிலீஸ் வைபானுவங்களில் திளைத்துத் திக்குமுக்காடிக் கேடயங்கள் பல வாங்கி, புதுத் தயாரிப்பாளர்களிடம் அடுத்த பட அட்வான்ஸ்களை ஸ்விட்சர்லாந்துக்கே நேரே டாலரில் அனுப்பச் சொல்லி .... என்ற என் எண்ண ஓட்டங்களில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது.

எனக்கு ரொம்பவும் அழுவாச்சியாக வருகிறது.

”படம் நெட்டில் கிடைக்கிறதாமே?!” என்று கேட்டு முதலில் சென்ற வாரம் ஒரு லிங்க் அனுப்பினவர் தமிழோவியம் கணேஷ் சந்திரா. எனக்கு ஒரே ஷாக்! அந்த லிங்க் வேலை செய்யவில்லை. செய்திருந்தாலும் நான் அங்கே இருந்து டவுன்லோடு பண்ணிப் பார்த்திருக்க மாட்டேன். கேவலமான ப்ரிண்ட், மழை பெய்யும், ஒளி சொறியும், சவுண்ட் டமாரச் செவிடு ஆகும் அல்லது பாதிப் படத்தில் சொல்லாமல் கொள்ளாமல் ஏதாவது அம்மண சைட்டுக்குத் தாவி என் மனைவியிடம் குட்டு வாங்க வைக்கும் என்பதால் நான் இந்த டவுன்லோட் சமாச்சாரம் பக்கமே தலைவைத்துப் படுப்பதில்லை.

அப்புறம், இந்த ஒரு வாரத்தில் பல பேர் இந்த விவகாரம் பற்றி ”DVD கிடைக்கிறதாமே, அதிலே நீங்கள் இருக்கிறீர்களா? இல்லை, எடிட்டிங்கில் ஷ்ரேயா டான்சை மட்டும் வைத்துக்கொண்டு உங்கள் நடிப்புப் பொழிவை திருட்டு டிவிடிக்காரர்கள் தூக்கி விட்டார்களா?” என்று என்னிடம் கேட்டு விட்டார்கள் அல்லது எனக்கு எழுதி விட்டார்கள்.

இந்த மாதிரி அநியாயங்களெல்லாம் நிகழாமல் இருக்க அமெரிக்காவில் மிகக் கடுமையான சட்ட திட்டங்கள் இருக்கின்றன. மீறுபவர்களை அவை உடனே தண்டிக்கவும் செய்கின்றன. நம் ஊரில் வெறுமனே சட்ட திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. அது தான் பெரிய சோகம். எதற்கெடுத்தாலும் எல்லா தயாரிப்பாளர்களும் முதன் மந்திரி வீட்டுக்குப் படையெடுத்து, சட்டத்தை நிறைவேற்றுங்கள், ப்ளீஸ் என்று கெஞ்சிக் கொண்டிருக்க முடியுமா?

’வேட்டைக்காரன்’ திருட்டு டிவிடிக்களைத் தேடி விஜய் தலைமையில் ஒரு படையும், ‘ஜக்குபாய்’ திருட்டு டிவிடிக்களைத் தேடி நண்பர் சரத் தலைமையில் ஒரு படையும் சென்னையில் அலைந்து திரிந்து, சரத் கையும் களவுமாக ஒருவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்திருப்பதாகவும் செய்திகள் இன்று வெளிவந்திருக்கின்றன.

கோடிக்கணக்கில் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நஷ்டம் ஆவதை எப்படிப் பொறுமையாக பார்த்துக்கொண்டிருக்க முடியும்? தமிழ்நாட்டு நடப்பை நினைத்து அழுவதா சிரிப்பதா தெரியவில்லை!

படம் ரிலீஸ் ஆக மிகவும் தாமதம் ஆனதால். என் நடிப்பை உடனே பார்க்கவேண்டுமென்ற ஆர்வக் கோளாறினால் என் ரசிகர்கள் யாரும் எந்தத் தப்பும் செய்து விடவில்லை என்று மட்டும் உறுதியாக மட்டுமல்ல, இறுதியாக மட்டுமல்ல, அறுதியிட்டும் நான் சொல்லத் தயார்!

Sunday, January 03, 2010

தக்கார், தகவிலர், தரூர்!

சஷி தரூரை நான் சென்ற ஆண்டு (2009) ஆரம்பத்தில் சந்தித்தேன்.

அப்போது தான் சென்னையில் ’பிரவஸி பாரதிய திவஸ்’ நடந்து முடிந்திருந்தது

என் சென்னை நண்பன் வீட்டில் ஒரு பார்ட்டி. ஹைகோர்ட் ஜட்ஜ்கள், சென்னையின் பிரபல புள்ளிகள் தவிரவும், தென்னாப்பிரிக்கத் தமிழ் பிசினஸ் புள்ளிகள், தமிழ் சினிமா பேர்வழிகள், ஆங்காங்கே கொஞ்சம் அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள் என்று கலந்து கட்டியான, விவரமான புத்திசாலிக் கூட்டம்.

வாழ்நாளில் பெரும்பாலும் வெளிநாட்டில் கழித்திருந்த, ஐ.நா அமைப்பில் வேலை பார்த்த புத்திசாலி பிரமுகராகவே சஷி எனக்கு அறிமுகமானார். (அப்போது நான் அவருடைய The Great Indian Novel படிக்க ஆரம்பித்திருந்தேன், முடித்திருக்கவில்லை). சஷி, கேரளாவில் காங்கிரஸ் டிக்கெட்டில் நிற்கப்போவதாக அப்போதே பேச்சு அடிபட்டது. அவ்வப்போது இந்தியா வந்து போகும் பெரிய என்ஆர்ஐ புள்ளிகளில் ஒருவராகத் தான் அவர் தெரிந்தார்.

நல்ல நகைச்சுவை உணர்ச்சி, எல்லாவற்றிலும் ஒரு வெளிப்படையான கருத்து என்று ஒரு உருப்படியான ஆளாக இருக்கிறாரே, இவர் இந்திய அரசியல் கட்டாயங்களுக்குள் மாட்டி மீளுவாரா என்கிறாரா சந்தேகம் எனக்கு அப்போதே வந்தது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடியன் எம்.பி. ரூபி தல்லாவை சஷி அனுசரணையுடன் கவனித்துக் கொண்டார். தென்னாப்பிரிக்க பிசினஸ் பார்ட்டிகளுடன் நல்ல அரட்டை. பார்ட்டி நன்றாகக் களை கட்டி இருந்தபோது, சஷியுடன் கொஞ்சம் பர்சனலாக வம்பளக்கவும் நேரம் கிடைத்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் வரும்போது கண்டிப்பாக மீட் பண்ணுவோம் என்றார்.

அதற்கப்புறம், அவர் திருவனந்தபுரத்தில் எலெக்‌ஷனுக்கு நின்று ஜெயித்தது, cattle class பற்றி ட்விட்டரில் கிண்டலடித்தது, அது என்னவென்றே புரியாமல், நம் அசட்டு, அழுமூஞ்சி அம்மாஞ்சி அரசியல்வாதிகள் அவரைக் கண்டித்தது, ராஜிநாமா செய்யச் சொல்லி வற்புறுத்தியது- எல்லாமே நீங்களும் படித்துத் தலையில் அடித்துக் கொண்டிருப்பீர்கள்.

சமீபத்தில் வெளிநாட்டு டூரிஸ்டுகளுக்கு மிகவும் இடைஞ்சல் ஏற்படுத்தக்கூடிய சில விதிமுறை மாற்றங்களை உள்துறை அமைச்சர் சிதம்பரம் அறிவித்தபோது, சஷி உடனே அதைக் கவலையுடன் கண்டித்தது மட்டுமல்லாமல், “மும்பைக்குள் நுழைந்த தீவிரவாதிகள் விசா வைத்திருக்கவில்லை!” என்ற நகைச்சுவை ’ட்வீட்’டுடன் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றினார்.

மறுபடியும் டிவிட்டரா என்று டெல்லியே கலவரப்பட்டது. தியாக ஜோதி அன்னை சோனியா சொன்னாரென்று ஓடிப்போய யாராவது சஷியின் ப்ளாக்ப்பெர்ரியைப் பிடுங்கித் தூர வீசிக் கடலில் எறிந்து விடுவார்களோ என்று நான் கவலை கொண்டேன்.

ஒரு ஜூனியர் அமைச்சர் இது மாதிரி எல்லாம் வெளிப்படையாகப் பேசக்கூடாது என்று சீனியர் எஸ். எம். கிருஷ்ணா அவரைக் கண்டித்ததும், ‘இதையெல்லாம் நாலு சுவர்களுக்குள் மட்டுமே நாம் பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும்’ என்றதும் நீங்களும் படித்திருப்பீர்கள்.

நம் பழுத்த அரசியல் பெருச்சாளிகள் ஊழல் கோமாளிகளையும், கூஜா ஜால்ராக்களையும் மட்டுமே சகித்துக்கொள்வார்கள் என்பது தெரிந்ததே. சஷி தரூரின் புத்திசாலித்தனம் அவர்களால் சகித்துக்கொள்ள முடியாத ஒன்று. He is so out of place among our old jokers!

இந்தியாவின் அபத்த அரசியல் சித்து விளையாட்டுகளை சஷி தரூர் தாக்குப் பிடிப்பாரா? ‘தாவோஸ்’ மாதிரி வேறெங்கும் வெளிநாட்டு ஐ. நா. வேலைகளுக்குத் தாவி விடும் நாள் வெகு தூரத்தில் இல்லையா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Saturday, January 02, 2010

விடுமுறை நாட்களும் இரண்டாம் தரப் பிரஜைகளும்!

சில படிமங்கள், ஆவணங்கள், காசோலைகள் ஆகியவற்றை அவசரமாக இந்தியாவுக்கு அனுப்ப நேர்ந்ததால், இந்த விடுமுறை நாட்களில் FedEx, DHL போன்ற அதியசுரவேக வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ள நேர்ந்தது.

கச்சா எண்ணெய் விலை கன்னா பின்னாவென்று உயர்ந்தபோது, தங்கள் ‘ரேட்’டையும் ஆகாய உயரத்திற்கு அவசரமாக ஏற்றிய இந்த நிறுவனங்கள், ஆயில் விலை ஓரளுவுக்கேனும் குறைந்த பின்னரும், தங்கள் ரேட்டை அப்படியே சொர்க்க உலகத்தில் தான் வைத்திருக்கிறார்கள் என்பது ஒரு பெரிய எரிச்சல்.

என்னைப் போன்ற சாமானியன் எரிச்சல் பட்டு என்ன ஆகப்போகிறது? வர வர கோபத்தில் மனையாளைக் கூட கோபித்துக்கொள்ள முடியவில்லை. பதிலுக்கு முறைக்கிறாள். பசங்கள் ஏற்கனவே நம்மைக் கண்டுகொள்வதில்லை. ஐஸ் கோல்டாக ஒரு சில பியர்களைப் போட்டு வேண்டுமானால் நாம் சமாதி நிலை எய்த முயற்சிக்கலாம்.

$25 க்கு அனுப்பிக் கொண்டிருந்த அதே கடித பார்சல்கள் இப்போது $ 55 - $ 75 என்றால் எரிச்சல் வருமா, வராதா? அதுவும் வேலை நேரங்கள் சரி பாதியாகக் குறைக்கப்பட்டு .... வேண்டாம், டீடெய்ல்ஸ் கேட்காதீர்கள். என் ப்ளட் ப்ரஷர் எகிறுகிறது! ஏகப்பட்ட அலுவலகங்கள் மூடப்பட்டிருப்பது கூகுளுக்கே தெரியாத ரகசியம்.

எந்த ஆபீஸ் எப்போது திறந்திருக்கும் என்று கண்டு பிடிப்பதே தனி சுவாரசியம்.

‘ஒழிந்து போகிறான்கள் இந்த முதலாளித்துவக் கோமாளிகள், நமக்குக் காரியம் ஆகவேண்டும்’ என்று பார்த்தால், விடுமுறை நாட்களில் அவர்கள் அடிக்கும் கூத்தே தனி!

நிஜமாகவே தனித் தனி தான்!

அநேகமாக எல்லா வெள்ளையர்களுமே, அல்லது விஷயம் தெரிந்த மேனேஜ்மெண்டாருமே லீவில்! ‘ஙே’ என்று விழித்துக்கொண்டு ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாத தாற்காலிக வேலையாட்களே ஆங்காங்கே ஆபீஸ்களில் வியாபித்திருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்திலோ, பத்து நாட்களிலோ அவர்களுடைய வேலை காலாவதியாகப் போகின்ற சோகம் அவர்கள் கண்களில் அப்பிக் கிடக்கிறது.

அடித்துப் பிடித்து அலுவலகங்களில் எப்பாடு பட்டேனும் நுழைந்தாலும், அங்கே யாருமே எந்த வேலையுமே செய்வதாகத் தெரியவில்லை.

ஏன் படாத பாடு பாட்டு, எப்பாடு பட்டேனும் நுழையவேண்டும்? திறந்த வீட்டில் ஜிம்மி நுழைவதற்கும் உண்டோ தடை?

யெஸ், யுவர் ஆனர்!

எங்கேயோ ஒரு மட சாம்பிராணி ஆகாய விமானத்தில் எதையாவது எக்குத் தப்பாகப் பண்ணிவிட்டால், அமெரிக்க தேசமே அல்லவா கெக்கே பிக்கேயென்று பிருஷ்ட பாகத்தில் யாரோ கிள்ளி விட்ட மாதிரி துள்ளித் தள்ளாடுகிறது? ஆங்கோர் முட்டாள் கோவணத்தை அவிழ்த்து குச்சியைக் கொளுத்தித் தன்னையே கொளுத்திக் கொண்டதாகக் கேள்விப்பட்டாலே போதுமே, அமெரிக்க நிர்வாகமே அல்லவா பயத்தில் ஸ்தம்பித்துப் போகிறது?

டிஃபென்ஸ் பட்ஜெட்டை ஒரு ஐநூறு மில்லியன் மேலே தூக்கு! எல்லா பாசஞ்சர்களையும் நிர்வாணமாக்கு! அத்தனை பசங்களையும் எக்ஸ்ரே எடு! சீட்டை விட்டு எழுந்தானா, சுட்டுத் தள்ளு! பாத்ரூமையெல்லாம் லாக் அப் செய்! அய்யோ தாங்கலைடா சாமி இந்தக் கெடுபிடி!

அதனால் தான் என் போன்ற அப்பிராணி சாதாரணப் பிரஜைகள் கூட எந்த அலுவலகத்துள்ளும் சுலபமாக ஜிம்மி ஸ்டைலில் வாலாட்டி நுழைய முடிவதில்லை.

‘பஸ்ஸரை அமுக்கு’, ‘பல்லைக்காட்டி இளி’, ‘கையொப்பம் இடு’, ‘காலை அகட்டி நில்’, ‘ஓரமாகப் போ’, ‘உரக்கப் பேசாதே’, ‘கேஷா? நோ, நோ’, ‘க்ரெடிட் கார்டா, நெவர், நெவர்’ என்று ஆங்காங்கே ஏகப்பட்ட புதிய ஆத்திச்சூடி கெடுபிடிகள்!

இத்தனை கெடுபிடிகளையும் தாண்டி நான் கட்டபொம்மன் சிரிப்புடன் நுழைந்தால்,

பால் பாயிண்டால் நகம் சீவுதல், இல்லாத முடியைச் சரிசெய்தல், எதிர்நோக்கிய சுவற்றை முறைத்தே வீழ்த்துதல் போன்ற வீர விளையாட்டுகளில் இப்புது மாந்தர் ஈடுபட்டிருக்கிறார்கள்.

பார்த்தாலே தெரிகிறது, அத்தனை பேருமே கருப்பர் அல்லது மெக்சிகோ தேசத்து சலவாளிகள்! அட, ஒரு சாம்பிளுக்கூட ஒரு வெள்ளைத் தோல் எங்கேயுமே கிடையாது. ஓஹோ, வெள்ளையர்கள் அத்தனை பேருமே ஜாலி வெக்கேஷனில்!

எனக்கு உதவவேண்டும் என்கிற உத்வேகம் கருப்பர்கள் / மெக்சிகன்கள் செயல்பாட்டில் தெரிந்தாலும், “இதெல்லாமே எனக்கும் புச்சு மச்சி, இன்னும் ரெண்டு நாளோ மூணு நாளோ வெரட்டிப் புடுவானுங்க தொரைமாருங்க. நீ வேற ஏன்யா படுத்தற?”- அவர்கள் கண்களில் வெளிப்படையாகத் தெரிந்தது.

ஆனாலும், ஆளாளுக்குப் பாசமாகக் குசலம் விசாரிக்கிறார்கள்: ‘ அடேடே! இந்தியாவா? பலே, பலே! பாரதம் ஒரு புண்ணிய பூமி என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இதை அனுப்ப நீங்கள் ஒரு நாலு நாள் கழிந்து வந்தால் பெட்டர்! மகாத்மா காந்தி நலமாக இருக்கிறாரா? ஹௌ ஈஸ் நேரு?”

“உனக்கு எல்லா விதங்களிலும் உதவ வேண்டும் என்று தான் நினைக்கிறேன், அர்ஜுனா! ஆனால் உன் கர்ம பலன்களிலிருந்து நீ விடுபடப் போவது எங்ஙனம்?” என்று கண்ணனே அங்கலாய்த்தானாமே, அதே விஷுவல் எஃபெக்ட்!

ஊஹும்! என்ன முட்டி மோதிப்பார்த்தாலும், டெம்பரரி ஆட்களின் பாஸ்வோர்ட் வேலை செய்ய மறுக்கிறது, கணினி அவர்களைக் கடுப்படிக்கிறது. “என்னிய வுட்ரு மச்சி, இது சரிப்படாது. நாம வேற ஆட்டம் ஆடலாமா?” என்று டெம்பரரி ஆட்களின் கண்கள் பனிக்கின்றன. அவசரமாக பாத்ரூம் நோக்கிப் படையெடுக்கிறார்கள்.

நான் வேலை முடியாமல் வெளியேறுகிறேன். வெள்ளையர்கள் வெக்கேஷனென்று வெளியேறியதால் ஒரு சமுதாயமே ஸ்தம்பித்தல்லவா நிற்கிறது ?!

Welcome to equality!










Friday, January 01, 2010

யாகாவாராயினும் ஷோ காக்க!

ஹார்வர்ட்!

அகில உலகப் புகழ் பெற்ற பணக்கார அமெரிக்கப் பல்கலைக் கழகம்!

பாஸ்டன் நகரத்தின் அழகுக்கு அழகு சேர்க்கும் மணிமகுடங்கள் ஹார்வர்டும், கேம்ப்ரிட்ஜும் என்றால் மிகை இல்லை.

சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி வருடங்களில் ஒரு நாள்.

பாஸ்டன் நகரத்து நடுக்கும் பேய்க் குளிரில் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஒரு வயோதிக தம்பதி இறங்கி வருகிறார்கள். அவர்களைப் பார்ப்பதற்கே கொஞ்சம் பாவமாக இருக்கிறது. பாவம், பட்டிக்காட்டு தம்பதி என்பது அவர்கள் அணிந்திருந்த கசங்கல் உடை, நடை, பாவனையியிலேயே தெரிகிறது!

அந்தப் பெண்மணி அணிந்திருந்த ஸ்கர்ட் அவர் கையாலேயே தைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்தப் பெரியவர் அணிந்திருந்த தொள தொளா கோட்டிலும் ஆங்காங்கே ஓட்டைகள், ஒட்டுகள்!

மெதுவாக நடந்து வந்து ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் தலைவர் அலுவலக வாசலில் இருவரும் களைப்புடன் உட்காருகிறார்கள்.

காகம் கொண்டுவந்து போட்ட விநோத வஸ்து மாதிரித் தலைவரின் செக்ரட்டரி அவர்களை வேண்டாவெறுப்பாகப் பார்க்கிறார். 'ஏதோ சத்திரத்தில் உண்டைக்கட்டி சாப்பிட வேண்டிய கோஷ்டி இங்கே வந்து ஏன் கழுத்தை அறுக்கிறது? இந்த அழுக்கு கோஷ்டியை உள்ளே விட்டால் தலைவர் நம்மிடம் கோபிப்பாரே?'

"அப்பாயிண்ட்மெண்ட் இருக்கிறதா?"-குரலில் எரிச்சலுடன் கேட்கிறார்.

"இல்லையே."

"அப்படியென்றால் தலைவரைக் காண வெகு நேரமாகும்"

"பரவாயில்லை. காத்திருக்கிறோம்"

"தலைவர் மிகவும் பிஸி, இப்போது அவரைப் பார்க்க முடியாது" என்றால் "பரவாயில்லை, இருந்து பொறுமையாக அவரைப் பார்த்து விட்டே செல்கிறோம்" என்கிறார்களே! என்ன கொடுமை இது?!

மணிக் கணக்கில் அந்த வயோதிக தம்பதி காத்திருக்க நேரிடுகிறது. கடைசியில் தலைவரே வெளியே வந்து எரிச்சலுடன் கேட்கிறார் "உங்களுக்கு என்னதான் வேண்டும்?"

தொண்டையைச் செருமிக்கொண்டு கிழவனார் ஆரம்பிக்கிறார்: "ஒன்றுமில்லை. எங்கள் பையன் இங்கே படித்துக் கொண்டிருந்தான். சின்னப் பையன். 15 வயது தான். துரதிர்ஷ்டவசமாக அவன் இறந்து போய் விட்டான்"

"ஹார்வர்ட் என்றால் அவனுக்கு கொள்ளைப் பிரியம். அதனால், அவன் நினைவாக நாங்கள் ஏதாவது இங்கே செய்ய நினைக்கிறோம். ஒரு சிலை..." அந்த அம்மாள் கொஞ்சம் தயக்கத்துடன் இழுத்தாள்.

"என்னது? செத்துப்போன எல்லா மாணவர்களுக்கும் இங்கே சிலை வைத்தால் இந்த இடம் மயானக் காடாக அல்லவா ஆகி விடும்? இது என்ன பள்ளிக்கூடமா, சுடுகாடா? எங்கள் மரியாதை என்னாவது?"

சற்று நேரம் தயக்கமான மௌனம்.

"சிலை வேண்டாம். சின்னதாக ஒரு கட்டிடம் கட்டித் தரலாமா?"

'என்னது இது, என்ன சொன்னாலும் இந்தக் காட்டான்கள் இங்கேயிருந்து நகர மாட்டார்களோ? இவர்களுக்குக் கொஞ்சம் உறைக்கும்படியாகவே சொல்வோம்'

பல்கலைக்கழகத் தலைவர் இடிச் சிரிப்பு சிரித்தார் : "பட்டிக்காட்டுத்தனமாகப் பேசுகிறீர்களே! ஒரு கட்டிடம் கட்ட என்ன செல்வாகும் தெரியுமா?"

ஒன்றும் பேசாமல் அந்த வயோதிக தம்பதி, தலைவரே மேற்கொண்டும் பேசட்டும் என்று பொறுமையோடு காத்திருந்தார்கள்.

"இது வரை நாங்கள் இங்கே கட்டி இருக்கின்ற கட்டிடங்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?" கை தேர்ந்த நாடகக் கலைஞன் போல் தலைவர் இந்த இடத்தில் அவர்களை ஏளனமாகப் பார்த்து, ஒரு எஃபெக்டுக்காகக் கொஞ்சம் நிறுத்தி உரத்த குரலில் "ஏழரை மில்லியன் டாலர்கள்! அதற்கு எத்தனை சைபர்கள் என்றாவது உங்களுக்குத் தெரியுமா?" என்று ஷோ காட்டினார்!

லேலண்ட் தன் மனைவி ஜேன் பக்கமாகத் திரும்பி அவளை நோக்கினார். "போகலாம் வாருங்கள்" என்றாள் ஜேன்.

"அப்பாடா! சரியான பைத்தியங்கள், நம் பொன்னான நேரத்தை வீணடித்துக் கொண்டு .." என்று சலிப்புடன் தலைவர் உள்ளே திரும்பினார்.

"மொத்தக் கட்டிடங்களின் விலையே அவ்வளவு தானா? வாருங்கள். வெறும் சிலை வேண்டாம். நாம் நம் பையனின் நினைவாக ஒரு பல்கலைக் கழகத்தையே உருவாக்கி விடலாம்" என்றார் ஜேன் ஸ்டான்ஃபர்ட்.

1891ல் அப்படி உருவானது தான் கலிஃபோர்னியாவின் உலகப் புகழ் பெற்ற ஸ்டான்ஃபர்ட் பல்கலைக் கழகம்!