என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, March 19, 2010

வீட்டுத் தலைவனுக்கு ஒரு நாள் விடுமுறை!

அப்பாடா! இன்று லீவு! ப்ளாகை அப்டேட் செய்யவேண்டும், வெப்சைட்டில் அந்த ஜூரிக் கதையை எழுத வேண்டும், அப்புறம் அந்தப் புத்தகத்தைப் படிக்கவேண்டும், புதுக்கதைக்கு ஒரு சேப்டராவது ...

“ஏங்க, எத்தனை நாளாச்சு உங்ககிட்ட சொல்லி? என் வண்டியில ரைட் சைட் மிர்ரர் அட்ஜஸ்ட் பண்ணவே முடியாம அறுந்து தொங்குது. ஆக்சிஜன் சென்ஸார் மாத்தணும்னு வேற சொன்னீங்க. அப்படியே காரையும் கொஞ்சம் வாஷ் பண்ணி ...ம்ஹும். நான் சொல்றது என்னிக்குத்தான் உங்க காதுல விழுந்திருக்கு? ஏற்கனவே இருபத்தி நாலு மணி நேரமும் நெட்ல, இப்போ இந்த ட்விட்டர் சனியன் வேற வந்திருச்சா, வேற வினையே வேண்டாம்”

அம்மாவோடு பெண்ணும் பின்பாட்டில் சேர்ந்து கொண்டாள்.

“அப்பா, ஏன் என்னோட கார் ஸ்லோ ஸ்பீட்ல கொஞ்சம் உதறர மாதிரியே இருக்கு. இதுல இஞ்சின்னு ஒண்ணு இருக்கா, இல்லியா? போன மாசம் தானே மெகானிக் கிட்ட எடுத்துட்டுப் போனே? அவன் உன்னை ரொம்பவும் மொட்டை அடிக்கறாம்பா. அவன் கேரேஜ்ல வேலை செய்யுற கார், வெளியே வந்தவுடனே இந்தப் பாடு படுத்துது? இந்த வாரம் நான் ரொம்ப பிசி. அடுத்த வாரம் என்னிக்கு நீ இதை எடுத்துட்டுப் போயி சரி பண்ணலாம்னு நாளன்னிக்கு ஈவினிங் 4 டு 5 சொல்றேன்”

இருமுனைத் தாக்குதலிலிருந்து தப்பிக்க, சமயோசிதமாக, பையனைக் கூப்பிட்டேன், ‘அவதார்’ பார்த்து விடலாம் அவனுடன் என்கிற அடிமன நப்பாசையுடன்.

“ஹலோ, அப்பாவா? கூப்பிட்டிங்களா? என்ன விஷயம்? சீக்கிரம் சொல்லுங்க. மீட்டிங்ல இருக்கேன்”

“ இல்லடா, உன் கார் ஆயில் சேஞ்ச் பண்ணி ரொம்ப நாளாச்சே. அதான் அதைப் பண்ணிட்டு நாம ரெண்டு பேரும் ...”

“அதுக்கெல்லாம் இப்ப நேரம் இல்லைப்பா. என்னோட டிரக் சும்மா தான் நிக்குது. அதை வேணும்னா எடுத்துட்டுப் போய் டிங்கரிங் பண்ணிடுங்க. என் ஃப்ரண்ட்ஸ் எடுத்துக்கிட்டுப் போய் எங்கேயெல்லாமோ இடிச்சுட்டுக் கொண்டு வந்து சைலண்டா கொடுத்துடறாங்க. ஓகேப்பா. அப்புறம் பேசலாம். வேற கால் வருது. பை”

என் சொந்தங்களின் கார் புலம்பல்கள் இருக்கட்டும். என் சொந்தக் காரை எடுத்துக்கொண்டு போய் ட்யூன் பண்ணி, கொஞ்சம் அப்டேக் வால்வ் சத்தத்தை சரி பண்ணி, வாஷ் பண்ணி ...ஊஹும், அதற்கு இன்றும் நேரம் கிடைக்காது.

“ஏங்க, இன்னிக்கு உங்களுக்கு லீவு தானே?”

“இல்லியே, நான், வந்து, ஒரு அரை நாள், வந்து லேட்டா...”

“அப்ப ஒண்ணு செய்யுங்க. சண்டே பார்ட்டிக்கு ஒரு 40, 50 சேர்ஸ் தேவையா இருக்கும். பையன் டிரக்கை எடுத்துக்கிட்டு போய், எல்லாத்தையும் என் ஃப்ரண்ட் வீட்டில இருந்து கொண்டு வந்துட்டீங்கன்னா, 200 டாலர் மிச்சம்”

“இல்லம்மா, பையன் டிரக்ல ...”

”மசம்சன்னு ஏதாவது காரணம் சொல்லாதீங்க. சேர்களெல்லாம் டிரக்லயே கொண்டு வந்தப்பறமா, டேபிள்ஸ் எங்கேயிருந்து வரணும்னு சொல்றேன். பை”

ஆங்காங்கே நசுங்கிய பித்தளைச் சொம்பு மாதிரி இருந்த பையனின் புது டிரக்கில் அவன் நட்பு நாயகர்களின் ஆழம் தெரிந்தது. டிரக்கை எடுத்து வந்தபிறகு தான் அதன் பின்வாசலைத் திறக்க சாவி இல்லை என்பதும், அலாகாபாத் திருவேணி சங்கமத்தில் முழுக்கினால் கூட அதன் புற அழுக்கு போகாதென்பதும் தெள்ளெனத் தெரிந்தது.

கள்ளச்சாவிகள் எதுவுமே வேலை செய்யாமல் நாள் களைத்துப்போனபோது, 30 ஒற்றைச் சாவிகள் வீட்டு அலமாரிகளில் ஆங்காங்கே கிடைத்திருப்பதாகவும், அதில் எது வேலை செய்யலாமென்று பார்க்கும்படியும் ஒரு அவசர டெக்ஸ்ட் மெசேஜ்.

சாவி கிடைக்குமா, கிடைத்தாலும் அது வேலை செய்யுமா, அந்த வண்டியில் 40 நாற்காலிகளை ஒரேயடியாக ஒரே நேரத்தில் ஏற்றிவர முடியுமா? இதன் டைமென்ஷன்ஸ் என்ன? லாஜிஸ்டிக்ஸ் என்ன? போன்ற கேள்விகளெல்லாம் நானே என்னைக் கேட்டுக்கொண்டு பதிலும் தேடியாக வேண்டிய நிலமை.

இந்தக் கொடுமைக்கு ஆபீசுக்கே போய்த் தொலைத்திருக்கலாம்.

யார் செய்த புண்ணியமோ, டிரக்கின் சொர்க்கவாசல் எப்படியோ திறந்து விட்டது.

நாற்காலிகளை வண்டியில் ஏற்றலாம் என்று பார்த்தால், அத்தனையும் ராஜா ராணி சைசில், கை மடங்காமல், கால் மடங்காமல், பாரிசவாயு, பக்கவாதத்தால் பல்லிளித்து, பி. வாசு படத்து பண்டரிபாயாய் செண்டிமெண்டுடன் விறைத்து நின்றன. வெட்டைவெளியில் கிடந்த அந்த நாற்காலிகளில் ஆயிரம் குருவிகளும், ஐநூறு காக்காய்களும் லெட்ரின் கட்டி சுகபேதி வாழ்க்கை வாழ்ந்த செப்பேட்டு சுவடுகள் வெட்ட வெளிச்சத்தில் நாறித் தொலைத்தன.

“ஐ திங்க் ஒன்ஸ் யூ வாஷ் தீஸ் சேர்ஸ், எவ்ரிதிங் வில் பி ஓகே, ரைட்?”

தானமாய் வாங்கிய மாட்டை மட்டுமல்ல, நாற்காலிகளையும் அக்கணமே பரிசோதித்தல் அழகல்ல.

“நானே உங்களுக்கு ஹெல்ப் பண்ணணும்னு நெனச்சேன். ஆனா பாருங்க, என் வலது தோள்பட்டையில சுளுக்கு, இடது தொடையில எலும்பு பிசகி ..”

“வேண்டாம், வேண்டாம். நானே பார்த்துக்கொள்கிறேன்”

நாங்கள் கண்ணன் பரம்பரை அல்லவா? ‘ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜா’

எல்லா தர்மங்களையும், அதர்மங்களையும் கழிசடைகளையும் பொறுப்புகளையும் ஓட்டை சேர்களையும் என் தலையில் கட்டுங்கள், நான் எதற்காக இருக்கிறேன், ஒரு இளிச்சவாயன்? உங்கள் அனைவரையும் சந்தோஷமாக உட்கார வைத்து சந்தோஷப்படுத்துவதுதானே என் ஒரே வேலை?

எல்லா சேர்களையும் மொத்தமாக ஸ்விம்மிங் பூலில் அமிழ்த்தி விடலாமா அல்லது அவை மேல் பெட்ரோலைக் கொட்டி க்ளைமேக்ஸ் காட்சி மாதிரி ஏதாவது செய்து விடலாமா என்று யோசித்த வண்ணம், “ஓகே. ஐ வில் க்ளீன் தெம்” என்றேன்.

நடமாடும் கொலுவண்டி மாதிரி ஒருவழியாக அத்தனை நாற்காலிகளையும் டிரக்கில் மூன்றடுக்காய ஏற்றி ‘ஆடாது அசங்காது வா கண்ணா’ என்று மத்யமாவதியில் பாடியபடி ஃப்ரீவேயில் ஏறினால் இரண்டே நிமிடங்களில் டிரக் மக்கர் பண்ணி நின்று விட்டது.

அடாடா, என்னிடம் யார் எந்த வண்டியைக் கொடுத்தாலும் பெட்ரோலை சுத்தமாக உறிஞ்சி எடுத்தபின்னர் தானே கொடுப்பார்கள்? இந்த பால பாடம் இன்று மட்டும் எப்படி மறந்தே போனது?

இந்தப்பக்கம் 8 லேன்கள், அந்தப் பக்கம் 8 லேன்கள் என்று அசுர வாகனங்களும் 18 வீலர்களும் அலறிச் செல்லும் அமெரிக்க ஃப்ரீவேயில் பெட்ரோல் இல்லாமல் ஒரு ஓரமாக பேஸ்தடித்து நான் நின்றிருக்கின்ற முதல் நாள் இன்றுதான்.

எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.

AAA-வைக் கூப்பிட்டால் “16 டிஜிட் மெம்பர்ஷிப் நம்பர் என்ன? காரின் லைசென்ஸ்ப்ளேட் நம்பர் என்ன? கார் எஞ்சினில் பொறித்திருக்கும் ரகசிய எண் என்ன? என்று கே.பி. சுந்தராம்பாள் மாதிரி என்னென்னவோ கேள்விகள் மெஷின் குரலில் கேட்டபிறகு, மனிதக்குரலில் ”அங்கேயே நில்லுங்கள். ஜாக்கிரதை. வண்டியை விட்டு இறங்கவேண்டாம். அரை மணி நேரத்தில் வந்து விடுகிறோம்” என்கிற கரிசனம் வேறு.

தனிப் புலமபலை மனைவியிடம்தானே புலம்பமுடியும்? “என்னம்மா இது, சேர்ஸ் மகா த்ராபையா இருக்கும்போலே இருக்கே? வழக்கம் போல வாடகைக்கே எடுத்திருக்கலாமோ?”

“அவ வீட்ல இருக்கற சேர்ஸ் சுமாரா தான் இருக்கும்னு எனக்குத் தெரியாதாக்கும்? அதெல்லாம் மொதல்லயே யோசிச்சு வெச்சுட்டேன். நீங்க வீட்டுக்குப் போனப்பறமா, ஸ்பேர் ரூம்ல சேர் கவர்ஸ் மூடி வெச்சிருக்கேன். அதையெல்லாம் எடுத்து, வாஷ் பண்ணி, ஐயர்ன் பண்ணி, ஹலோ, ஹலோ, காலை கட் பண்ணிட்டீங்களா?”

போனில் கூட யாரிடமும் எதுவும் பேசப் பிடிக்காமல், “என்னடா இது எல்லேக்கு வந்த சோதனை?” என்று வெயிலில் களைத்து நிற்கும்போது இன்னொரு டிரக் என் முன் வந்து அவசரமாக நின்றது. அட, AAA அதற்குள்ளே வந்து விட்டதா? இல்லை, உற்றுப் பார்த்தால் ‘மெட்ரோ ஹெல்ப் லாஸ் ஏஞ்சல்ஸ்’ என்று ஏதோ எழுதி இருந்தது.

நாங்கள் கட்டுகிற மோட்டார் வரி உண்மையாகவே பலன் தரும் நேரம்.

“என்ன உதவி வேண்டும்? ஒரு கேலன் பெட்ரோல் தந்தால் அடுத்த பெட்ரோல் பங்க் வரை போய் விடுவீர்களா?”

“கண்டிப்பாக. எரிபொருள்தரு கோமானே, உங்கள் குலம் ஏற்றம் பெற்றுப் பல்லாண்டு வாழ்க”

லஞ்சம் கிடையாது. டிப்ஸ் சந்தோஷமாக வாங்கிக்கொள்ளப்பட்டது.

வண்டி சீறி எழுந்து, நான் “அப்பாடா” என்பதற்குள் ஆபீசிலிருந்து போன். “லேப்டாப் கையில வெச்சிருக்கீங்களா, சார்? முடிஞ்சா நெட்வொர்க் ஆக்செஸ் பண்ணி ...”

நான் ரிட்டையர் ஆனபின் காசி, ராமேஸ்வரம் எல்லாம் போவேனோ தெரியாது. கண்டிப்பாக இங்கே எனக்கு கார் மெகானிக் வேலை காத்திருக்கிறது.

ஒரே குறை. காசு மட்டும், பத்து பைசா கூட துட்டு பேறாது!