என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Thursday, April 28, 2005

கண்ணீரால் ஒரு காசோலை

சென்ற வருடத்திய டிசம்பர் 26 சுனாமியின் கொடூரத்தால் ஏற்கனவே வீடு, வாசல், குழந்தை, குட்டிகள், ஆடு, மாடுகள், உடைமைகளை அடியோடு இழந்து தவிப்பவர்கள் அந்தமான், நிக்கோபார் வாசிகள். அங்கே நூற்றுக்குப் பத்து பேர் தப்பிப் பிழைத்திருந்தாலே ஆச்சரியம் என்கிறார்கள். அவ்வளவு பயங்கரம் அங்கே நிகழ்ந்திருக்கிறது. பல தீவுகள் அப்படியே மூழ்கிப் போயிருக்கின்றன.



இயற்கையின் கோர தாண்டவம் இன்னமும் அடங்காமல் பூகம்பங்களும், நில நடுக்கங்களும் தொடர்ந்து அவர்களைத் தூங்க விடாமல் உலுக்கிக் கொண்டிருக்கும் பரிதாப நிலையில், நம் அரசாங்கம் அவர்களுக்கு உதவாமலே இருந்தாமல் கூடப் பரவாயில்லை.

இப்படி அநியாயமாக அவர்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்ள வேண்டாம். ஒரு குடும்பத்திற்கு இரண்டு ரூபாய்க்கு ஒரு காசேலையா? என்ன விளையாடுகிறார்களா?



ஒரு குருட்டுப் பிச்சைக்காரனுக்குப் பத்து ரூபாய் கொடுக்கக்கூட அக்கம் பக்கம் பார்த்துப் பயந்து கொடுக்கவேண்டிய இந்நாளைய விலைவாசிக் கொடுமையில், எப்படி அய்யா ஒரு முழுக் குடும்பத்துக்கும் உதவித் தொகையாகக் கேவலம், பிசாத்து இரண்டு ரூபாய்க்குக் காசோலை எழுத அரசாங்கத்துக்கு மனம் வந்தது?

ஒரு கணினி இந்தக் காசோலையை எழுதியிருந்தால் கூடப் பரவாயில்லை. தப்பை இயந்திரத்தின் மீது போட்டு விடலாம். என்னதான் அரசாங்கம் ஒரு கழுதை மாதிரியான மெத்தனப்பட்ட அப்த்த மண்டூக இயந்திரம் என்றாலும், கையெழுத்துப் போட்ட மகானுபாவனுக்குக் கொஞ்சமாவது ஒரு 'இது' வேண்டாம்?

பல கோடிக் கணக்கில் வந்து குவிந்திருக்கும் நிவாரண நிதி இப்படித்தான் பகிர்ந்து அளிக்கப்படுகிறதா?

வெட்கம்!

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Friday, April 22, 2005

நானும் பில் கேட்சும்!

என் பணக்கார நண்பர்களைப் பற்றி நான் இங்கெல்லாம் அவ்வளவாகச் சொல்லி அலட்டிக் கொள்வதில்லை. என் அடக்க சுபாவம் வேறு உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

அதிலும் உலகப் பெரும் கோடீஸ்வரரைப் பற்றி நான் புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது?



'என்ன ஃப்ரெண்டு நீங்க, எப்படியாவது எனக்கு ஒரு படம் பண்ணிக் குடுங்க. ப்ளீஸ், ராம்' என்று அவர் என்னைப் படுத்தும்போதெல்லாம் இத்தனை காலம் மறுத்து வந்தேன். பல மாதங்கள் அவரும் முணுமுணுத்தார். நான் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். தொடர்ந்து தொணதொணத்தார். நான் கண்டுகொள்ளவே இல்லை. வழக்கம் போல் என் பாணியில் -சின்ன அளவில், 'தமிழ்க் குடிதாங்கி' அளவுக்கெல்லாம் அல்ல- தமிழ்த் தொண்டாற்றி வந்தேன்.

சியட்டிலில் பில் கேட்ஸ் தரையில் புரண்டு அழுதார். அடம் பிடித்தார். உண்ணாவிரதம் இருந்தார். அலகு குத்திக் கொண்டார். மண் சோறு சாப்பிட்டார். ஊஹும், நான் இது வரை மசியவே இல்லை. கூப்பிட்டபோதெல்லாம் 'தமிழ் இணையத்தில் பிசியாக இருக்கிறேன். கால்ஷீட்டே கிடையாது' என்று சொல்லி விட்டேன்.

'சரி, அட்லீஸ்ட் என் சின்னக் கம்பெனிக்காவது ஒரு சின்ன மாடல் பண்ணுங்க. அதுவும் இல்லாட்டி நான் என் பணத்தையெல்லாம் கொண்டு போய் அந்தமான், நிகோபாரில்...' என்று அவர் ஒரு நாள் பயமுறுத்திப் பயங்காட்டி அழுது தொழுது நின்றதால், நானும், வேறு வழியில்லாமல், ஒரு சின்ன 'சரி' சொல்லும்படி ஆயிற்று.

எத்தனை காலம்தான் நானும் அவருக்குத் தொடர்ந்து சால்ஜாப்பு சொல்லுவது? மனம் இரங்கினேன்.

அதன் விளைவுதான்: http://lab.msdn.microsoft.com/express/sql/default.aspx

வருங் காலத்தில் அவருடைய நச்சரிப்புக்காக, ஒரு பயாஸ்கோப்பு படத்துக்கு நான் ஓக்கே சொல்லும்படியாகவும் ஆகி விடலாம். ஆனாலும் கூட, நம்ம ஸ்நேகா கால்ஷீட்டுதாங்க இன்னும் கிடைக்கலை.

-என்றும் அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Thursday, April 14, 2005

ரஜினிமுகி

முதல் நாள், முதல் ஷோ ரஜினி படத்தைப் பார்ப்பது என்பது கிட்டத்தட்ட முதல் காதலி, முதல் முத்தம், முதல் கசமுசா ரேஞ்சுக்குப் பேசப்படுகிற புண்ணியப்பட்ட விஷயம். கன்னத்தில் போட்டுக் கொள்ளவேண்டும்.

அதுவும், படம் ரிலீசாகி அநேகமாக அடுத்த வாரம் தான் எங்களுக்கு ரஜினி தரிசனம் என்று பயமுரறுத்தியிருந்த எங்கள் லோக்க்ல விநியோகஸ்த தோஸ்து, இந்திய ரிலீசுக்கும் முந்தைய ப்ரிவியூ ஷோவுக்கே கூப்பிட்டால் சந்தோஷத்துக்குக் கேட்கவா வேண்டும்? குடும்ப சகிதமாக ஒரு முக்கால் மணி முன்னதாகவே தியேட்டரில் நாங்கள் ஆஜரானோம்.

சாதாரணமாக ஈயடிக்கிற ஹாலிவுட் கொட்டகை, நம் தமிழ்த் தீவிர ரஜினி ரசிகர்களைக் கண்டு மிரண்டது. இவ்வளவு கூட்டத்தை அவர்கள் மொத்தமாகப் பார்க்க ஒரு மாமாங்கமே ஆகும். டிக்கெட் கிழிக்கிற வெள்ளையின் கண்களில் ஆரம்பத்தில் கூட்ட மிரட்சி கண்டேன். பத்து நிமிடம் கழித்து, பயப் பிராந்தி. அரை மணிக்குப் பிறகு ஆளையே காணோம். வேலையை ராஜிநாமா பண்ணிவிட்டு கேர்ள்ஃபிரண்டுடன் 'டிரக்' அடிக்கப் போய் விட்டதாக யாரோ சொன்னார்கள்.

அமெரிக்காவில் 'மு. நாள், மு. ஷோ' என்றால் எனக்குக் கொஞ்சம் அனுபவம் கலந்த அலர்ஜி. வழக்கமாகப் பெட்டியே வந்து சேர்ந்திருக்காது. அல்லது ஒரு அரை நாள் தாமதமாக வரும். நம் பாஷா மகிமை புரியாமல் வெள்ளைக்கார ஆப்பரேட்டர் துரை ரீலைத் தலைகீழாக ஓட்டி ஒரு அரை மணி நேரம் வெறுப்பேற்றுவான். க்ளைமேக்ஸ் ரீலை முதலிலே காட்டித் தொலைத்து அவன் எங்க்ளிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது சகஜம். 'ரேண்டம் ரீல் மிக்சிங்'கில் 'சேது' பார்த்திருக்கிறீர்களோ? நான் பார்த்திருக்கிறேன். இன்னமும் அந்தப் பயம் தெளியவில்லை.

நேற்றும் ஆரம்பம் சரியில்லை. ஈனஸ்வரத்தில் சிம்மக்குரலோன் குரல் மாதிரி ஏதோ எங்கேயோ கேட்கிறது. திரையில் கிஞ்சித்தும் வெளிச்சம் இல்லை. அவ்வளவு தான். நம் விசில் குஞ்சுகள் கொடுத்த கோரஸ் சவுண்டில் பக்கத்து ஃப்ரீவே 170-ல் டிராஃபிக்கே ஸ்தம்பித்தது என்று நான் சொன்னால் நம்புங்கள். மேலும் இரண்டு சின்னச்சின்ன, செல்லச் செல்ல சிணுங்கல்களுக்குப் பிறகு, 'பளிச்' சென்ரு ஆரம்பித்தது படம். நாங்களும் இந்தையத் துணைக் கண்டத்தினருக்கும் முன்னதாகவே சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் படத்தைப் பார்க்க ஆரம்பித்து, கின்னஸில் இடம் பிடித்து, ஜென்ம சாபல்யம் அடைந்தோம்.

"யோவ், ஜாரிப்பெல்லாம் இருக்கட்டும். படம் எப்படிய்யா?" என்று ரஜினி ரசிகர்கள் பதறுவது என் காதில் கேட்காமல் இல்லை. சற்றே பொறுமை காக்க1

சூப்பரின் படங்களில் முதல் எண்ட்ரியும், முதல் பாட்டும் களை கட்டும். 'அந்தப் பாட்டுக்கே காசு சரியாப் போச்சுப்பா' என்பார்கள் என் மாயவரத்து நண்பர்கள். நேற்றும் இங்கும் அப்படியே. அமெரிக்காவிலிருந்து அப்போதுதான் வந்திற்ங்கிய சைக்கியாட்ரிஸ்ட் டாக்டர் ரஜினி, அடிதடி, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் உபயத்துடன் முதல் எண்ட்ரிக் காட்சிச் சண்டையில் கிஞ்சித்தும் வேர்க்காமல், அலுங்காமல், முன் முடி கலையாமல் ஒரு இரண்டு டஜனைப் பின்னிப் பிசைந்தெடுக்கிறார்.

'பாபா'வுக்கு முந்தைய பழைய 'பளிச்' ரஜினியைப் பார்க்க சந்தோஷமாகவே இருக்கிறது. கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. (மேக்கப் கலைமாமணி சுந்தரமூர்த்தி மகாத் திறமைசாலி. எனக்கும் பொட்டு வைத்துப் பவுடர் பூசி இருக்கிறவர். ஹும்ம்.)

'எப்படி அப்படியே ட்ரிம்மா இருக்கீங்க?' என்கிற பிரபுவின் கேள்விக்கு 'நா குண்டானா நல்லா இருக்காது, நீ இளைச்சா நல்லா இருக்காது' என்கிறார் ரஜினி. கூட்டம் கை தட்டி ஆமோதிக்கிறது.

'அட யாருய்யா அந்தச் சந்திரமுகி?' என்ரு நாமெல்லாம் சிகையைப் பிய்த்துக் கொள்ள ஆரம்பிக்க, மகாப் பெரிய கதைப் பூ மாலையை நம் காதில் சுற்ற ஆரம்பிக்கிறார்கள் P. வாசு அண்ட் கம்பெனியினர் அகிலாண்டேஸ்வரியம்மாள் என்கிற பழைய செம்மீன் சிகப்பு ஜமீன் பாட்டி ஷீலா, அவரது தம்பி அசட்டு அவதாரம் நாசர், அன்னாருக்கு இன்னோர் தம்பி வைகைப் புயல் வடிவேலு, அங்கே ஜமீன் தோட்ட வேலை செய்யும் விஜயகுமார், அவரது அழகுப் பெண்குட்டி நயன்தாரா, ஜமீன் வாரிசு பிரபு, அவருடைய மனைவி ஜோதிகா, அப்புறம் ஒரு எட்டுப் பத்து சில்லுண்டிகள் என்று ஒரே நட்சத்திரக் குழப்பப் பட்டாளம். சென்னையில் இருந்திருந்தால் நானும் ஒரு அசிஸ்டெண்ட் டு மெயின் சமையற்காரராகவாவது ஆங்கே தோன்றிk காவியம் படைத்திருப்பேன்.

'ஆங்காங்கே அடிக்கடி லாஜிக் இடிக்கிறதே' என்று யாராவது ஏதாவது முணுமுணுத்தால் ரிக்ஷா மாமா
ஆட்டோவில் வந்து தட்டிக் கேட்பார். 'தத் சத்' என்கிற வேத ம்ந்திரசாரப் பிரகாரம், ரஜினி படத்தையெல்லாம் அந்த அந்தக் கணத்து உண்மையென நம்பி ரசிக்கவேண்டும். இயக்குனர் நம்பத் தகுந்தவர். கடைசி ரீலில் எல்லாவற்றையும் ஃபெவிகால் போட்டாவது அழகாக ஒட்டிக் கொடுத்து விடுவார். இங்கும் அப்படியே. தாலி செண்டிமெண்ட், தாய்ப் பாசப் பாட்டு இல்லாமல் ஒரு வாசு படமா? ஆச்சரியும், ஆனால் நம்புங்கள். மேற்சொன்ன ரி. மாமா ஞாபக உபயத்தில் ஒரு குண்டுக் குழந்தை மட்டும் வந்து கொஞ்சமாகப் படுத்துகிறது. (P. வாசு எனக்கும் இயக்குனர் தாம் என்பதைச் சரித்திரம் சான்றுகளுடன் பகரும். ஹும்ம்.)

'ஒன் ஆ·ப் தி ஜமீன் வாரிசஸா'ன(?) பிரபு, மாளவிகாவை மணந்து கொள்ளாமல், எங்கிருந்தோ ஜோதிகாவைப் பிடித்துக் கொண்டு வந்து 'ஜோ தான் எனக்குப் புடிச்ச ·பிகரு, சாரி, கருப்பு தான் எனக்குப் புடிச்ச கலரு' என்று சொல்லி விடுகிறாராம். மாளவிகா அதற்காகக் கிஞ்சித்தும் வருத்தப்படுகிற மாதிரித் தெரியவில்லை. அந்த ஜோதிகாவுக்கு ஒரு மனவிகாரச் சிறுபருவப் பிரச்னையான விவகாரங்கள் இருப்பதாகவும், எல்லோருமாகச் சேர்ந்து அதிபயங்கரமான பேய்ப் பங்களா ஒன்றுக்கு அவசரமாகக் குடி பெயர்வதாகவும், ஆங்கோர் பேய் ஒன்று ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்டு ஆட்சி புரிந்து ஆடி வருவதாகவும், அப் பேய் ஜோவின் மேல் அவதானித்தபின், மலையாள தேசத்திலிருந்த ராமச்சந்திர ஆச்சாரியார் என்கிற மந்திரவாதி (வேற பேரே கிடைக்கலியா, வாசு சார்?) பேயோட்ட வருவதாகவும், ஆனால் இதற்கெல்லாம் உண்மைக் காரணம், நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பாகவே வேட்டையராஜ மகாராஜா சந்திரமுகியைச் சிறையெடுத்துக் கவர்ந்து வந்து.... வேண்டாங்ணா என்னிய வுட்ருங்ணா. "ரஜினி சார் படத்துல வந்து ஜாலியா இருந்துட்டு விசில் அடிச்சிட்டுப் போவியா, சும்மா நொள்ளை நொட்டை எல்லாம் சொல்லிக்கிட்டு?" என்று ரசிக மகாஜனம் ஆவேசமாக உறுமுவது என் காதில் கேட்கிறது. (இன்னோர் ரஜினி படத்திலும் என்னை நீங்கள் மறுமுறை கண்டு ஆனந்தக் கண்ணீர் விட அழ நேரிடலாம். எதற்கு ஒவர் வம்பு?!)

பாட்டுக்கள் நன்றாகவே இருக்கின்றன. ஆனால் நான் மிகவும் எதிர்பார்த்த 'கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரத்'தில் ஏன் நயன்தாராவுக்குக் காஸ்ட்யூமில் சுஷ்கம் பண்ணி விட்டார்கள் என்பது புரியவில்லை. 'வாழ்த்துறேன் வாழ்த்துறேன்' நாட்டுப் பாடல் காவியம்.

பிரம்மாண்ட்மான பாம்பு ஒன்று (பிரசாத் EFX) வந்து அடிக்கடி எட்டிப் பார்க்கிறது. திகில் பங்களா, ரத்தக் காட்டேரி சப்தங்கள், அமானுஷ்யச் சிரிப்புகள் எல்லாமே 'மாய மோதிர' விட்டலாச்சார்யாவை நினைவு காட்டிப் படுத்துகின்றன.

திடீரென்று ஆவி சுந்தரத் தெலுங்கில் அதி பயங்கர அடித் தொண்டையில் ஒரு எட்டுப் பாராவுக்கு மாட்லாட ஆரம்பிக்க, ரஜினியும் தெலுங்கில் பதிலுக்குக் கமற, 'என்னடா இது, தேவுடா, டப்பிங் படமா?' என்று நாம் நெளிய ஆரம்பிக்கக் கடைசியில் எல்லாமே நமக்குச் சம காலத்தில் மேற்சொன்ன '·பெவிகால்' ப்ளஸ் 'க்விக் ஃபிக்சு'டன் புரியவைக்கப்பட, சர்வம் சுபம். ஆந்திரா, கர்நாடகாவுக்கே 130 ப்ரிண்ட் போட்டிருப்பதன் காரணம் புரிகிறது.

தியேட்டரை விட்டு வெளியே வந்த ஹை கிளாஸ் ஆடியன்சை மினி பேட்டி கண்டேன். 50-50 என்றார்கள். அதெல்லாம் சும்மா டுபுக்கு. எல்லோர் முகத்திலும் இன்னோர் 'பாபா' பார்க்காத சந்தோஷம் தெரிந்தது.

தேவுடு ரஜினி பக்கம் 'சூடி' விட்டார்!

-என்றும் அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Wednesday, April 06, 2005

கொஞ்ச நேரம், கொஞ்சும் நேரம்

'நீ எந்த ஊரு, நா எந்த ஊரு, முகவரி தேவையில்லே!'- திரு.பாச்சிவிஜியார் எந்த நல்ல நேரத்தில் குதித்துப் பாடினாரோ தெரியவில்லை.

ஒரிஜினல் முகவரி கிடக்கட்டும். 'முகமூடி சுகமே சுகம்' என்று நெட்டில் அந்தர்தியானமாக ஆடிப் பாடிக் கலாய்த்துக் கொண்டிருந்த நம்மில் பலருக்கும் ஒரு அதிர்ச்சி கலந்த ஆனந்தச் செய்தி- 'விடியோ ப்ளாக்'குகள்!

வந்து கொண்டே இருக்கின்றனவாம்.

"Larry Page, co-founder of Google Inc, the leading search engine of the world, revealed on Monday in a conference in San Francisco's Moscone Center that the company is testing a "video blogging" application.

"In the next few days, we're actually going to start taking video submissions from people, and we're not quite sure what we're going to get, but we decided we'd try this experiment," Page said."

ஆஹா! இனிமேல் கவலையே இல்லை. நாம் நேரில் போய்க் கலந்து கொள்ள இயலாமல் போன குக்கிராமத்ததுக் குட்டி மைத்துனியின் மஞ்சள் நீராட்டு விழா முதல் மதுரைப் பக்கத்து மஞ்சுவிரட்டு வீர விளையாட்டு வரை உடனேயே வலையேற்றச் சொல்லி விடியோ ப்ளாக்குகளில் உலகெங்கும் பார்த்து மகிழலாம்.

பயாஸ்கோப் ரேஞ்சில் எல்லோருமே ஃபிலிம் காட்டி சுய தம்பட்டம் அடித்து மகிழலாம். 'ஸ்வீட் சிக்ஸ்டீன்' என்கிற மாதிரி ஏதோ ஒரு புனைபெயரில் நெட் உலா வரும் கெழ போல்ட்டுகள் விடியோ ப்ளாக்குகளால் பிடிபட்டு உதைபடவும் போகின்றன. 'கொஞ்ச நேரம், கொஞ்சும் நேரம் ...' என்று 'பெண் பார்க்கப்படும்' சந்திரமுகிக்கள் ப்ளாக்கிலேயே கொஞ்சிப் பேசிவிடலாம். பஜ்ஜி, சொஜ்ஜி செல்வு மிச்சம்.

தமிழ் இணையக் குழுமங்களில் மிக ஆரோக்கியமான விவாதங்கள் மட்டுமே இது வரை நடைபெற்று வருகின்றன என்பது ஊரறிந்த செய்தி. விடியோ ப்ளாக்குகளின் உபயத்தில் இனிமேல் தமிழ்நாட்டு அசெம்பிளி ரேஞ்சுக்கு நாம் ஃப்ரீ ஷோ பார்க்கலாம்.

பாத்ரூம் பாகவதர், மந்தவெளி எட்டாம் நம்பர் கடைக் கஷ்டமர்கள், மெய்லாப்பூர் கபாலி, நாயர், அரைப்ளேடு பீட்டர், பிச்சுவா பக்கிரி, புலவர் ஆதிமந்தி, மங்களம் மாமி ...என்று ஏகப்பட்ட கோஷ்டியை நான் எப்படி விடியோ வலையேற்றி, ப்ளாக் கரை சேர்க்கப் போகிறேன் என்கிற கவலை எனக்கு இப்போதே வந்துவிட்டது!

என்னைக் கூடிய சீக்கிரம் விடியோ ப்ளாக்கில் பார்க்கப் போகிறீர்கள் என்கிற கவலை உங்களுக்கு இன்னுமா வரவில்லை?

என்றும் அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்