என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, February 29, 2008

சுஜாதா மறைவுக்குப் பிறகு ...1

தமிழ் கூறும் நல்லுலகின் இவ்வளவு பெரிய இழப்பை யாராலும் சரிக்கட்ட முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை தான்.

சுஜாதாவின் வீட்டில் நேற்று அலைமோதிய கூட்டத்தைப் பார்த்தபோது எனக்கு ஒன்று தான் தோன்றியது: "இன்று இப்படிக் கூட்டம் இருந்தாலும், நாளை முதல் இதெல்லாம் வடிந்து போக ஆரம்பிக்கும். அது உலக நியதி. இனி வரும் நாட்களில் தான் அவருடைய குடும்பத்தார் தனிமையில், சோகத்தில், பழைய நினைவுகளை அசை போட்டபடி, தவிக்க ஆரம்பிப்பார்கள். அவர்களைக் கொஞ்சமாவது தேற்றும் வண்ணம் நாம் ஏதாவது செய்தே ஆக வேண்டும்".

'என்னால் முடிந்த அளவுக்கு, சென்னையில் இருக்கும்போதெல்லாம் அவர்கள் வீட்டிற்குச் சென்று அவர்களிடம் பேசிக் கொண்டிருப்பது, என்னாலான சின்னச்சின்ன உதவிகளை அவர்களுக்குச் செய்வது, மற்ற நண்பர்கள் மூலமாகவும் இதையெல்லாம் தொடரச் செய்வது' என்பது ஓரளவுக்கு நன்மை பயக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

எந்த விதமான விளம்பரத்தையும் எதிர்பாராமல், பல பிரபல திரையுலக நண்பர்கள் சுஜாதா குடுமப்த்தினருக்கு உதவியிருப்பது, உதவி வருவது எனக்குத் தெரியும். அந்த நல்ல நெஞ்சங்கள் நீடூழி வாழட்டும்.

நாளை, ஞாயிறன்று நடிகர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு இரங்கல் கூட்டம், சென்னை நாரத கான சபாவில் நடக்க இருப்பதாக என்னையும் அழைத்திருக்கிறார்கள்.

அது பற்றியும் எழுதுகிறேன்.

ஒரு ஞான சூரியனின் அஸ்தமனம்

சென்ற இரண்டு நாட்களாக, என்னுடைய 'ப்ளாக்'கில் இந்தப் பதிவை எழுத முடியாமல் நான் தவித்திருக்கின்ற தவிப்பு கொஞச நஞ்சமல்ல. எவ்வளவு நேரம் தான் ஒத்திப் போட்டாலும் இதைச் செய்தே ஆக வேண்டிய கட்டாயம் இப்பொழுது. எழுதவே மனமில்லாமல் தான் இதைப் பதிவு செய்கிறேன்.

எந்த குருவுக்கு மரணமே இல்லை என்று நான் நினைத்திருநதேனோ, எந்த எழுத்துலக ஜாம்பவானுக்கு முடிவே இல்லை என்று நான் நினைத்திருந்தேனோ, எந்த நண்பருக்கு எதுவும் அசம்பாவிதம் நேரவே நேர்ந்து விடாது என்று நான் அசட்டையாய் இருந்தேனோ, அநத ஞான சூரியன் அஸ்தமனமாகி விட்டது என்கிற இடிச் செய்தி என் உறக்கத்தைக் கலைத்து என் காதுகளில் இறங்கியபோது நான் துடித்துப் போனேன்.

கடந்த இரண்டு, மூன்று வருடங்களாகவே சுஜாதாவின் உடல் நிலை மோசமடைந்து வந்தாலும், ஒவ்வோரு முறையும் அவரைக் காணும்போதும், அணைத்து அழைத்துச் செல்லும்போதும், நான் அதை உணர்ந்து வந்தாலும், "அவருக்கெல்லாம் ஒன்றும் ஆகி விடாது" என்கிற பொய்யை நான் நம்பி வந்தேன்.

பச்சை மூங்கில் பாடையில் அவரைத் தொட்டு வழியனுப்பும்போது தான், அவரை இனி பார்க்கவே போவதில்லை என்கிற உண்மை என்னைச் சுட்டது. சுஜாதாவின் சுஜாதா என் லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில் அவர்கள் இருவரும் களித்திருந்த பழைய கணங்களை அழுகையுடன நினைவு கூர்ந்தபோது நான் தவித்துப் போனேன். அவருடைய வாரிசுகள், என் நன்பர்கள் என்னை கட்டிக்கொண்டு கலங்கி அழுதபோது, நான் வாயடைத்துப் போனேன்.

என் எழுத்தலக கக்கரவர்த்தி ஒன்றும் சாமான்னியரைப் போல் செத்துப் போய் விடவில்லை. அவருடைய அந்நியோன்ய நண்பர்கள, திரையுலக சகாக்கள், இலக்கிய நண்பர்கள், ரசிகர்கள், அனைவரும் புடை சூழத்தான் அவர் இன்று எங்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார்.

ஒரு ம்கோன்னத ஆல விருட்சம ஊழிக் காற்றில் விழுந்து கிடக்கையில், ஆங்காங்கே அதன் நிழலில், சில சின்ன்ஞ்சிறு செடிகள் அபத்தமாகப் பூத்து நிற்குமே, காற்றில் அசைந்து ஒன்றுக்கொன்று முகமன் சொல்லிக் கொள்ளுமே, அதைப் போல, பாலகுமாரனும், சங்கரும், மணி ரத்னமும், சுஹாசினியும், கனிமொழியும, ராஜீவ் மேனனும் நாங்கள் ஒருவரை ஒருவர் கண்டு கொண்டோம், அறிமுகங்கள் செய்து கொண்டோம், சோகப் புன்னகைகளில் சோர்வுடன் பேசிக் கொண்டோம். பாரதி ராஜா, பார்த்திபன், வசந்த், விவேக், விகடன், குமுதம் குழும ஆசிரியர்கள், பிரசுரகர்த்தாக்கள், மணியன் செல்வன் போன்ற ஓவிய வல்லுனர்கள, எஸ். பி. முத்துராமன், சாய்மீரா நடராஜன், எஸ். வி. சேகர், தேசிகன், என்று எங்கெங்கும் நண்பர்கள், ரசிகர்கள் புடைசூழத்தான் என் ஞான சூரியன் பெசண்ட் நகர் சுடுகாட்டை நோக்கி அஸ்தமனம் ஆனார்.

என் எழுத்துகளில் ஒரு துளியேனும் நீங்கள் ரசித்தீர்களென்றால் அதுவும் என் எழுத்துலக ஞான குருவான அமரர் சுஜாதாவுக்கு இன்றே, இப்பொழுதே சமர்ப்பணம்.

மிகுந்த வருத்தத்துடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Monday, February 04, 2008

வெட்கம்! வெட்கம்! வெட்கம்!

நடிகர் அமிதாப் பச்சன் மஹாராஷ்டிராவில் பல ஆண்டுகளாக வேலை செய்தாலும், அங்கேயே குடியிருந்தாலும், எப்படி அவர் அலகாபாத்திலிருந்து தேர்தலில் போட்டியிடலாம் என்றும் எப்படி அவர் உத்தர் பிரதேசத்திற்கான 'பிராண்ட் அம்பாசடர்' வேலை செய்யலாம் என்றும் ராஜ் தாக்கரே என்கிற பிரஹஸ்பதியின் 'மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா' என்கிற கோஷ்டி மும்பையில் கலாட்டா செய்தது மட்டுமல்ல, அமிதாப் வீட்டில் கல்லெறிந்து, சோடா பாட்டில்கள் வீசி கலாட்டா செய்துள்ளது.

இந்த ராஜ் தாக்கரே 'சிவ்சேனா' புகழ் பால் தாக்கரேயின் மருமகன். மாமாவிடம் சண்டை போட்டுக்கொண்டு போட்டிக் கட்சி ஆரம்பித்திருக்கும் புத்திசாலி.

இந்த மாதிரி அசிங்கங்கள் வழக்கமாகத் தெற்கே தானே அரங்கேறும்?! தெலுங்கள், மலையாளத்தான், கன்னடியன் என்று நாம் தானே அடித்துக் கொள்வோம், இப்போது இந்த அசிங்க கலாச்சாரம் வடக்கேயும் பரவி விட்டதா, என்ன?

உத்தரப் பிரதேசம் என்ன சீனாவிலா இருக்கிறது?

அலகாபாத் என்ன ஆப்பிரிக்காவிலா இருக்கிறது?

இந்த மாதிரி கீழ்த்தர, மூன்றாம் தர அரசியல்வாதிகளை முதலில் நாடு கடத்தினால் தான் இந்தியா உருப்படும்.

அவர்களை எங்கே அனுப்பலாம்?