என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Wednesday, August 24, 2005

நாட்டு நடப்பு -1 (கபாலியின் கேள்விகள்)

நாட்டு நடுப்பெல்லாம் வரவர ஒன்னுமே சர்யாப் பிரியலீங்கண்ணா. ஒரே பேஜாராயிட்சுபா. ரவிக்கு அட்ச சர்க்காட்டம் அல்லாமே கலங்கலாத்தான் கீது.

அத்தாம்பா உன்னிய மேறிப் பெர்சுங்களாண்ட எதுனா டவிட்டு கேட்டுத் தெரிஞ்சிக்கறன்.


1. கொஞ்ச நா மின்னாடி, "நாந்தேன் அடுத்த சூப்பருடா, மவனே, உனுக்கு சான்ஸே இல்ல, நீயி ஃபீல்டு அவுட்டுப் பொறம்போக்கு"ன்னு கட்டிப் பொரண்டு பெறாண்டிக்கிட்டாங்களே செல பேரு, இப்ப அவிங்கள்லாம் ஏங்ண்ணா இவ்ளோவ் சயிலண்டா கீறாங்க?

2. "அய்ய, நாந்தேன் அஸீனு, எனு கண்ணெப் பாரு, எனு அயகப் பாரு"ன்னு ஒரு கோயம்புத்தூரு அக்கா கம்பூட்டருலயே சீனு சீனாக் காட்டி லெச்சம் லெச்சமாக் கனடா மாமா ஒர்த்தராண்ட கறந்து கீதாமே? கன்டா மன்சன் ஏற்கனியே நொந்து நூடுல்சா கீறாராம். இந்தக் கதய இந்தியில சினிமா எட்கறம்பா, ஒரு டைட்லு குடு'னு காஜா மொய்தீனு கேட்டார் சார்.

'சாட் கா பச்சா அவுர் ஃபிலிம் கீ ராணி' நல்லா கீதா?

3. "அட அம்மாம் தொலவுல போயி ஜின்னாவுக்கு ஜால்ரா போட்டாக்க ஆருமே கண்டுக்க மாட்டாங்க"ன்னு நெனிச்சித் தப்பாட்டம் ஆடிட்டு, இப்ப ஆப்புல மாட்டிக்கினு அவஸ்தபடுறாரே, அத்துவானி, அவிரு லெட்டரு போட்டு என்னியக் கேட்டாருங்ணா, "சொரணயின்னா இன்னாடா கபாலி மீனிங்'கின்னு. பட்சவன் நீ ஸொல்பா.

4. 'நாட்ல அத்தினி பேருக்கும் வர்சத்ல நூறு நா வேல உண்ட்ரா, சம்பள துட்டும் கேரண்டி'யின்னு டெல்லியில சட்டம் வர்தாமே, அப்டியின்னா மத்த நாள்ங்களுக்கு வேல பூட்சினு நஸ்ட ஈட்ட சிதம்பரம் சாரு தர்வாருங்களாங்ணா?

5. ஈராக்கு தலயில குண்டப் போட்டா அல்லாப் பெட்ரோலயும் அம்ரிக்காவிக்கே புட்சிக்லாம்னு பிராடுக் கணுக்கு போட்டு புஸ்ஸு அய்குனி ஆட்டம் ஆடி முட்சின அப்றமும் ஏங்க்ணா பெட்ரோலு வெல இப்டிக் குமுறிக்கிட்டே ஒசரத்ல போயி நிக்கிது?

பெர்யவிங்க, பட்சவங்க நீங்க ஸொல்லுங்ணா, நானு கையிநாட்டு, கேட்டுக்கறன்.

Monday, August 22, 2005

பிறந்தகப் பெருமை -6

சென்னையிலிருந்தோ, மதுரைப் பக்கத்திலிருந்தோ மயிலாடுதுறை ஜங்ஷனில் வந்து இறங்குகிறோம். இரும்புக் கீறல், வெப்பத் தும்மல், நீராவி விக்கல், முனகல், சோர்வுடன் புகைவண்டி 'தஸ், புஸ்'ஸென்று மூச்சு விட்டுக்கொண்டு நிற்பதற்குள்ளாகவே வெளியே தலை நீட்டி, நமக்கு வேண்டியவர்கள் யாராவது கிராமத்திலிருந்து வண்டி கட்டிக் கொண்டு வந்திருக்கிறார்களா என்று பார்ப்பது என் வழக்கம்.

காருடை காருண்யவான் நண்பர்கள் யாராவது கண்ணில் தென்பட்டால் ஆனந்தக் கூத்தாடும் நெஞ்சம். எங்கள் வீட்டுச் சொந்த வண்டியை எல்லாம் எந்தக் காலத்திலேயோ விற்று விட்டாலும், அவ்வப்போது ஒரு வில் வண்டியோ, ஒற்றை மாட்டு வண்டியோ, மாமா புண்ணியத்தில், யாராவது எங்களுக்கு ஓசியில் அனுப்பி வைப்பது வழக்கம். உள்ளூர் நிலச் சுவான்தார்கள் சில இரட்டை மாட்டு வண்டிகளை என் தற்கால '05 7 சீரிஸ் பிஎம்டபிள்யூ'வை விட பெட்டராகவே மெயிண்டெய்ன் பண்ணி வைத்திருப்பார்கள். வண்டியில் கிளி கொஞ்சும். மாடுகளும் கொழு கொழுவென்று நமீதா கணக்காக இருக்கும். சலங்கைச் சத்தமும் சாட்டைச் சீறலும் அட்டகாசம் தான். ஓடும் வண்டியின் எழுந்து நின்று தலைப்பாக் கட்டை ஒரு இறுக்கு இறுக்கினால், அப்படியே படையப்பா தான்.

என் பூர்வாசிரமக் குடில் இருக்கும் நல்லத்துக்குடி கிராமம் மாயவரம் டவுன் ஸ்டேஷனுக்கு மிகச் சமீபம்.

ஊரிலிருந்து வீட்டு வேலைக்காரரோ, நண்பர்களோ, யாராவது ஸ்டேஷனுக்கு வந்திருந்தால் பிரச்னை ஏதும் இல்லை. அரை மணி நேரத்தில் வீடு போய்ச் சேர்ந்து விடலாம். அதுவும் பெரிய கடைத் தெரு, மணிக்கூண்டு வழியாகச் சென்றால் ஜாலியாக வீட்டுக்குக் கொஞ்சம் புதுக் காய்கறி, பழங்கள், கதம்பம், அன்றைய ஹிண்டு, எக்ஸ்பிரஸ், தினத்தந்தி, விகடன், குமுதம், கல்கண்டு, மாமாவுக்கு வெற்றிலை, பாக்கு, புகையிலை என்று ஏதாவது கையோடு வாங்கிக்கொண்டும் போய் விடலாம்.

யாருக்கும் கடிதம் எழுதாமல், எதுவுமே தெரிவிக்காமல், திடீரென்று ஜங்ஷனில் வந்து விடியற்காலை இருட்டில் 'பொத்'தென்று குதித்த காலங்களும் உண்டு.

ஜங்ஷனின் விடியற்கால நறுமணக் கலவை அதி தீவிர தனித் தன்மை கொண்டது. 'ஜில்' தண்ணீர் மேலே பட்டதால் கோபித்துக்கொண்டு பொசுங்கும் எரிநாற்ற நிலக்கரி, நடைவண்டிகளின் இளைத்த சோனித் தேநீர் வாசனை, இன்னமும் மாற்றப்படாத, அவற்றிலேயே தூங்கி எழுந்திருக்கப்பட்ட, யூனி·பார்ம்களின் வியர்வைக் கொடுமை, கேண்டீனில் பொடி தூக்கலான சாம்பாரின் நறுமணம், ஸ்லீப்பர் கட்டைகளின் மீதும், பாத்ரூம் பக்கமாகவும் அவசரமாக வீசப்படும் அபரிமிதமான ப்ளீச்சிங் பவுடரின் கோர நெடி, 'இஷ்ட்ராங்' பினாயில், கொசு மருந்து, ஸ்டேஷன் வந்தவுடன் அத்தனை பேருக்கும் உடனே அவசரமாக வந்து தொலைத்து விட்ட ஆய், மூச்சா+ப்ளஸ் காஸ், இந்திய ரயில்வேயின் ஓப்பன் டாய்லெட் மகிமை- எல்லா சுகந்த வாசனைகளும் சேர்ந்து ஒரே நேரத்தில் நாசியைக் 'குபீரெ'ன்று பதம் பார்ப்பதில் ஒரு குமட்டு குமட்டி, ஸ்டேஷனில் காலை வைத்தவுடன், 'உவ்வே' என்று பலரும் அதிகாலை வாந்தி எடுப்பது சகஜம். அதில் பித்தம் ஏதுமில்லை. பைத்தியம் சத்தியமாக இல்லை. உடனே ஒரு தமிழ்ப்பட டாக்டர் ஓடி வந்து மணிக்கட்டைப் பிடித்துப் பார்த்து, கண்ணாடியைக் கழட்டியபடியே 'கன்கிராஜுலேஷன்ஸ்' எல்லாம் சொல்லமாட்டார்.

நம்மை வரவேற்க இன்று யாரும் வந்ததாகத் தெரியவில்லை என்று சொன்னேன், இல்லையா? உஷார். இப்பொழுது தான் ஜங்ஷனை விட்டு சர்வ ஜாக்கிரதையாக வெளியேற வேண்டும்.

இரண்டு கைகளிலும் லக்கேஜுடன், தோளில் தொங்கலாட்டம் ஆடும் சற்றே அறுந்த ஊஞ்சல் பைகளுடன், காலால் சூட்கேசை உத்தேசமாக நெத்தியபடி, 'பட்டிக்காட்டான் யானை பார்த்த கதை'யாக, 'ஆட்டோவில போவமா, இல்லை பஸ் ஸ்டாண்டு வரைக்கும் பஸ்ல போயி, அப்பறம் அங்கேயிருந்து ...' என்று கொஞ்சம் குழம்பித் தொய்வு நடை போட்டு, ஒரு சைடாக 45 டிகிரி ஆங்கிளில், மெதுவாக முன்னேறினால், போயே போயிற்று. உங்களுக்கு இன்று நேரம் சரியில்லை.

பொய்யோ, புனைசுருட்டோ, பாவமோ, அதிபர் புஷ் ஈராக்குக்குள் அவசர அவசரமாகத் 'திடு புடு'வென்று அநியாயமாக நுழைந்தாரே, அதே ஸ்பீடில், அதே ஸ்டைலில், ஜங்ஷனை விட்டு ஜல்தியாக வெளியேறினால் பிழைத்தீர்கள். இல்லையென்றால்?

"வாங்க கொழந்தை" என்று அன்புடன் வரவேற்பார் ஒரு குதிரை வண்டிக்காரர்.

'நம்மை எப்படி இவருக்குத் தெரியும்? கடந்த முறை இந்த முரட்டு மீசை + சோனி பனியன் + அழுக்கு லுங்கி ஆளை யார் நமக்கு அறிமுகம் செய்து வைத்தது? 1998-லா? அல்லது 2003? ஒரு வேளை நமக்குத்தான் அவ்வளவு மறக்க முடியாத அமிதாப் பச்சன் பர்சனாலிட்டியோ?' என்று ஏதாவது நீங்கள் குழம்ப ஆரம்பிப்பீர்கள். அசமஞ்சமாக நிற்பீர்கள். அவர் சிநேகமாகப் பல் காவி தெரியச் சிரிப்பார். சிவந்து கிடக்கும் அவர் கண்களை நேரடியாகப் பார்த்து 'கண்ணொடு கண் நோக்கி' விட்டீர்கள் அல்லவா? எல்லாமே போச்சு.

அய்யோ பாவம், இனி நான் உங்களுக்கு உதவ இயலாது. சாரி.

"என் கைகளில் பாணங்கள் ஏதுமில்லை. இதோ, நன்றாகப் பார்த்துக்கொள், ராமா, ரகுகுலவீரதிலகா. என் நினைவிலும் எள்ளளவும் தீய நோக்கம் இல்லை. நான் உன்னுடன் ஸ்நேகமாக இருக்கவே விரும்புகிறேன். நீ என்ன நினைக்கிறாய் தசரத ராஜகுமாரா?" என்று கேட்டபடி இராமனை நோக்கிக் குகனோ, வாலியோ, அங்கதனோ முன்னேறியதாகக் கம்ப நாட்டார் விவரிக்கிறார் தன் இராம காதையில் ஏதோ ஒரு காண்டத்தில்.

கிட்டத்தட்ட அப்படிப்பட்ட ஒரு சிச்சுவேஷன் இங்கே. கம்பன் பிறந்ததும் எங்கள் மாயவரம்-குத்தாலத் தலைமாட்டில் தானே!

"வாங்க, தம்பி. எங்க, பட்ணத்ல இருந்து தான வரீங்க? வீட்ல அம்மா சௌக்கியமா?"

இந்த ஒரு ஜெனரிக் கேள்வியின் pseudo அந்நியோன்னியத்தில், காதலில், நட்பில், ஜாரிப்பில் விழுந்து யாரும் பதிலுக்கு சிநேகமாகச் சிரித்து வைப்பார்கள். 'அம்மா' என்பது ஒரு அடிஷனல் P. வாசு செண்டிமெண்டுக்காக. நெவர் ஃபெயில்ஸ்.

'மேனிபுலேடிவ் சைகாலஜி, பாடி லாங்குவேஜ் இண்டர்ப்ரடேஷன்' ஆகியவற்றில் அநாயசமாக ஆக்ஸ்ஃபோர்டில் பி.ஹெச்டி வாங்கத் தகுதியுள்ள மேற்சொன்ன கு. வண்டிக்காரர் உங்களை ஒரு பெட்டியைக்கூடத் தூக்க விடாமல் உங்கள் அத்தனை சுமைகளையும் தன் சுகமான சுமைகளாகத் தன் சிரமேற்றிக் கொள்வார்.

"எத்தனை நாள் கழித்துத் திரும்ப வந்தால் தான் என்ன? நம்மை உடனே வரவேற்றுப் பணிசெய்யக் காத்திருக்கிறார்கள் நம் திருத் தொண்டர்கள். அடாடா, மாயவரம்னா மாயவரம் தான்" என்றபடி நடையில் ஒரு முறுக்குடன், நினைப்பில் ஒரு செருக்குடன், அசைவில் இப்போது ஒரு தெனாவட்டுடன், நீங்கள் நேராக, ஆங்கிள் எல்லாம் போய், முன்னேறுவது எனக்குத் தெரியும். அய்யகோ, ஊழ்வினை உங்களை உறுத்து வந்து ஊட்டுகிறது. யான் என் செய்வேன்?

நல்லத்துக்குடி-மாயவரம் சர்வதேச எல்லைக்கோட்டைப் பற்றி விலாவாரியாகச் சொல்ல இது நல்ல தருணம்.

Image hosted by Photobucket.com

எங்கள் கிராமமாகிய நல்லத்துக்குடி, மாயவரம் டவுன் ஸ்டேஷனில் இருந்து, அதாவது மயிலாடுதுறையின் சர்வதேச வரைபட எல்லைக்கோட்டில் இருந்து 'கொஞ்சூண்டு' உட்பட்ட இடம். கொஞ்சூண்டு என்றால் நிஜமாகவே கொஞ்சூண்டு தான். கால் மைலுக்கும் குறைவு. ஒரு அரைக்கால் மைல் இருக்கலாம். ஆனால், பனிக்கட்டி படர் இந்திய சியாச்சேன் மலை-பாகிஸ்தான், இஸ்ரேல்-பாலஸ்தீனிய எல்லைக்கோடுகளை விட இது அதி முக்கியத்துவம் வாய்ந்த சென்சிடிவ்வான இடம்.

தரங்கம்பாடி ரயில் பாதை சமீபத்தில் அழிந்தே போனது பற்றி நான் கொஞ்ச நாள் முன்பு சோகமாகத் தனிப் புலம்பல் புலம்பி இருந்தேன் அல்லவா? அதிலிருந்து இந்த 'மா. மு. லி' கருங்கல் உள் வாங்கி ஒரு இருநூறு, முந்நூறு அடி இருக்கலாம். அவ்வளவே. இந்தியத் தொல்பொருள் இலாலாவின் சர்வதேசக் கல்வெட்டு ஆய்வாளர்கள் 'மா.மு.லி' என்றால் 'மாயவரம் முனிசிபல் லிமிட்' என்று கண்டு பிடித்து என்னிடம் சொல்லியும் இருக்கிறார்கள்.

நண்பர்கள் நன்றாகக் கவனிக்க வேண்டும். இது புரிந்து கொள்வதற்குக் கொஞ்சம் கடினமான இடம் தான். நீங்கள் இந்தக் கல்லில் தடுமாறிக் கலங்கி விடக்கூடாது என்பதற்காகவே ஒரு வரைபடத்தையும் நான் இத்துடன் கஷ்டப்பட்டு இணைத்திருக்கிறேன்.

வெளியே வந்து பார்த்தால் எல்லா நல்ல வண்டிகளையும், கார்களையும், ஆட்டோக்களையும் தாண்டிக் கடைசியில் எங்கேயோ அந்த லுங்கி மாரீசன் பின் போய்க் கொண்டிருக்கிறோம். "மொத்தம் ஐந்து மைல்களையும் இன்று நடந்தே தான் போய்த் தொலைக்கப் போகிறோமா?" என்ற பயங்கரக் கவலை, அந்தக் கடோசி கடைசி வண்டியைப் பார்த்ததும் ஓடிப் போய், வேறு புதுக் கவலைகள் வந்து விடும்.

'ஈதென்ன இவ்வண்டியின் சக்கரங்கள் சற்றே சதுரமாக இருக்கின்றன? உடம்பை விட எப்படி இந்தக் குதிரைக்குப் பற்கள் பெரிதாக இருக்கின்றன? இது குதிரை தானா அல்லது புராண காலத்து நரி-பரி கன்வர்ஷன் மேட்டரா? பசியில் அது ஏன் சாக்குப் படுதா, ரெக்சின் சீட் எல்லாவற்ரையும் கடிக்கப் பார்க்கிறது? சணலும் ப்ளாஸ்டிக்கும் எப்படி ஜீரணமாகும்? விலா எலும்புகள் துருத்தும் இந்தச் சோனி எப்படி இவ்வளவு சாணி போடுகிறது?'

நம் பயப் பிராந்தியை டெலிபதியில் புரிந்து கொண்ட பார்த்தசாரதி அர்ஜுனனின் கவலையைப் போக்கும் வகையில் சொல்வார்:

"பாக்கறதுக்குத்தாங்க கொஞ்சம் சோனியாத் தெரியும். கிண்டி ரேசுல ஓடிக் கப்பு வாங்கினதுல்ல இது. ஹய், ஹய், ஹேய்ய், ஏண்டா தலைப்பாவக் கடிக்கற? கொள்ளு வோணுமா?"

நாற்பதடி ரிவர்சில் நடந்தால் ஜங்ஷன் வாசல். இன்னமும் அங்கேயே தான் இருக்கிறது. திரும்பி விடலாமா என்று நீங்கள் வேகமாக யோசிப்பது அவருக்கா தெரியாது?

"நீங்க பின்னாடி ஏறிக்குங்க. முன்னாடி ஏறிக்கினாக் கொஞ்சம் சிரமப்படுவான் அஜீத்து'

யாராலும் ஜெயிக்கப்பட முடியாதவன் 'அஜீத்' என்கிறது வட நூல். கிண்டி குதிரைப் பந்தயங்களில் இவனை வைத்து ஜெயித்து ஜெயித்துத் தொடர்ந்து ஜெயம் கண்டு தான் எம். ஏ. சிதம்பரம் கோடிஸ்வரர் ஆனார் என்பது பொழிப்புரையின் உட்பொருள்.

அந்தச் சோனிக் குதிரையின் பளுஇழுதகுதி (புல்லிங் பவர், அப்படிப் போடுரா ராமா, ஆரு சொன்னது உனக்குத் தனித் தமிழ் வராதுன்னு) பற்றி நீங்கள் தலைசொறிந்து நிற்கையில், குதிரை வண்டி ஆரம்ப ஜோரில் கிளம்பியே விட்டது. (ஒண்ணும் பயப்படாம உள்ளாற வந்து குந்துங்க கொழந்தே)

'இது குதிரையா, தேவாங்கா? இந்த ஆள் நிஜமாகவே இதற்கு முன் ஜட்கா வண்டி தான் ஓட்டி இருக்கிறாரா அல்லது பூனை வண்டியா?' என்றெல்லாம் நீங்கள் மதி மயங்குமுன் வண்டிக்குள் நீங்கள் திணிக்கப்பட்டிருப்பீர்கள். வண்டி ஒரு தினுசாக ஓட ஆரம்பித்து விடும். வைக்கோலுக்குள் மறைந்து துருத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொரு இரும்புக் கம்பியும் உங்கள் விலாவையும், பிருஷ்ட பாகங்களையும் பதம் பார்க்கையில், நீங்கள் வலியில் நோகையில், ஆக்சிஜனைத் தவிர வேறு எல்லாத் தீவிர நாற்றங்களும் கலந்த உள் வண்டிக் கொடுமையின் அவதியூடே அவர் கேட்பார், அந்த 64 மில்லியன் டாலர் கேள்வியை:

"ரயில்வே கேட்டுக்கு இந்தால தான அய்யா வூடு?"

இந்த 'இந்தால, அந்தால' தான் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த, ஐ. நா. சொங்கி கோஃபி அன்னன் கவனிக்க வேண்டிய, அத்தியாவசியக் கேள்வி.

"இல்ல. வந்து... அது வந்து.... கேட்டுக்கு அந்தால, புள்ளையார் கோவில் தாண்டின உடனேயே, பக்கத்திலேயே ....." ஈனஸ்வரத்தில் நான்.

இதனைச் செவி மடுத்த புரவி சரேலென அதிர்ந்து நிற்கும். கனைக்கும். நுரைக்கும்.

ரயில்வே கேட் என்பது சற்று மேடான பகுதி தான். சோனிக் குதிரைகளும், ஒல்லிப் பலிமாடுகளும் அங்கே நுரை தள்ளிப் பயம் கொள்ளும் தான். அதற்காக அது ஒன்றும் காஞ்ஜன்ஜங்காவோ, கைலாசகிரியோ அல்லவே.

குதிரைவண்டிக்காரரின் குரல் சற்றே மாறுபட்டு விரோதமாக இப்போது ஒலிக்கும்: "கேட்டுக்கு அப்பாலன்னு நீ மொதல்லயே சொல்லி இருந்தியின்னா சவாரியே வந்திருக்க மாட்டனே"

எங்கே நடந்தது தவறு? ஏன்? எப்படி நடந்தது? விளி மரியாதை எப்படி ஒருமைக்குத் திடீரென்று குறைந்தது? ஊஹும். யோசிக்க நேரமில்லை.

மழை காலங்களில் பெருமாள் கோவில் அருகே பாதையில் ஓரடி ஆழச் சேற்றுப் புதைகுழி இருப்பது உண்மை தான். ஆனால் சமீபத்தில் இங்கே மழை பெய்து ஒரு ஆறு மாதமாவது இருக்கும் போல் இருக்கிறதே?

"கொள்ளு என்னா வெல விக்குது தெரியிமில்ல? என்னவோ தெரிஞ்ச பையனா இருக்கியே, அய்ரு பையன், அய்யோ பாவம், போனாப் போவுது பொடியன்னு சவாரி ஏத்தினாக்க, மலை ஏறித் தரை எறங்குடாங்கற. இது அடுக்குமாய்யா? அந்த ரயில்வே கேட்டாண்ட அச்சாணியே முறிஞ்சிடும்ல? வண்டிச் சத்தம் நூறு ரூவாய்க்குக் கொறயாது. வேணுமின்னா கேட்டுக்கு இந்தாண்ட எறக்கி வுட்டுடறேன். இன்னா சொல்ற?"

கேட்டைத் தாண்டியபடி 'இரண்டு கைகளிலும் லக்கேஜுடன், தோளில் தொங்கலாட்டம் ஆடும் ஊஞ்சல் பைகளுடன், காலால் சூட்கேசை நெத்தியபடிப் புழுதி மண்ணில் நானா?'

என் கிராமத்து மறு-பிரவேசம் இப்படியா சோகப் பின்னணியுடன் ஆரம்பிக்க வேண்டும்? ராமராஜன், விஜயகாந்த் போன்ற தமிழ்ப்பட ஹீரோக்கள் மட்டும் எப்படி ஒரே ஒரு காலிப் பெட்டியுடன், இளையராஜா பாட்டுடன், சந்தோஷமாக ஊர் திரும்புகிறார்கள்?

"கேட்டைத் தாண்டினதும் கொஞ்சம் தூரம் தான்"

"அந்தப் பாழாய்ப் போன கேட்ல தாம்பா ரெண்டு குதிரைங்க செத்துப் பொழைச்சிருக்கு. ஒரு இருநூறு ரூவா குடுத்தியின்னாக்க ..."

இருநூறு கொடுப்பதாக மௌனமே சம்மதமாக அறிவித்தவுடன் அந்தக் குதிரையும் சந்தோஷமாக ஓட ஆரம்பிக்கும். இத்தனைக்கும் கேட் கிராசிங்கை நெருங்கியவுடன், "வண்டி குடை சாஞ்சுருக்கூடாதில்ல. உங்க பொட்டிங்களக் கையில எடுத்துக்கிட்டுக் கொஞ்ச தூரம் நடந்தே வந்திருங்க தம்பி"

மறுபடி மரியாதை கூடும். கேட்டுக்கு இந்தப் பக்கம் சம தரையில் இறங்கி அத்தனை லக்கேஜுகளையும் இறக்கிச் சுமந்து பிறகு மலையேறி இறங்கி, அந்தப் பக்கம் திரும்பவும் எல்லாவற்றையும் வண்டிக்குள் அடுக்குகிற கொடுமைக்கு வீட்டுக்கு நடந்தே போய்த் தொலைத்து விடலாம்.

இந்த லக்கேஜ் இறக்குமதி-ஏற்றுமதி லாவண்யங்களை ஊரே கூடி நின்று வேடிக்கை பார்க்கும்.

"வாங்க கொழந்தே, மெட்ராஸ்ல இருந்து வரீங்களா? ஒரு பி.டி. கார்ல வந்திருக்கக் கூடாதுங்களா? ஈஜியா இருந்திருக்கும்ல?"

"இன்னா பாய், குதிர நொர தள்ளுது? மாரடைப்புல இப்டித்தான் அன்னிக்கு ஒரு மாடே செத்துப் போச்சு இந்த மோட்டாண்ட"

"டேய், டேய், பையா, குதிரக்குப் பின்னாடி போய் இன்னாடா பண்ற? குச்சியால அங்க குத்தாத. குதிர துள்ளினாக்க வண்டி கொட சாஞ்சிடும்கறேனில்ல?"

"இருங்க நடவாளுங்க ரெண்டு பேரக் கூட்டியாரேன். வண்டிய அப்படியே 'ப்ளசர் கார்' கணக்காத் தள்ளிக்கிட்டே போயிரலாம்"

ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தாயிற்று.

உறவுகளின் உபயகுசலோபரி விசாரணைகள் நட்ட நடு வாசலிலேயே ஆரம்பிக்கும்.

"ஏண்டா ஒரு கார்டு போட்ருந்தா, சின்னப் பண்ணை வண்டி அனுப்பி இருப்பாரே?"

"எதுக்குடா குதிரை வண்டில வந்தே? சொல்லியிருந்தா தாஸ் கார் அனுப்பி இருப்பானே?"

"நம்ம சுப்புணிக்கே ஜங்ஷன்ல ரெண்டு ஆட்டோ ஓடறதே, உன்னோட படிச்ச கோதண்டம் தான் ஆட்டோ ஓட்றான். அதுல வந்திருக்கறதுதானே?"

கைலி நாயனார் திடீரென்று இடை மறிப்பார்:

"கொழந்த கொஞ்சம் மெறண்டு தாங்க போயிருச்சு ஜங்ஷனாண்ட. நான் தாங்க பயப்படாதீங்கன்னு சொல்லி நேரா நம்ம வூட்டுக்கு அழைச்சுக்கிட்டு வந்திருக்கேன். ஆளுதான் நெடு நெடுவா வளர்ந்திருச்சே தவிரக் கொழந்தைக்கு ரொம்பவும் பூஞ்சை மனசுங்க. மதராஸ்ல அம்மா சௌக்கியம் தானுங்களே? ஏதோ இருநூறுக்கு ஒரு நூறு சேர்த்து முந்நூறாக் கொடுத்தீங்கன்னா உங்க புண்ணியத்துல இந்தக் கழுதக்குக் கொஞ்சம் புல்லைக் கண்ணில காட்டுவேன். விலைவாசி எல்லாம் எக்குத் தப்பா எகிறிக் கெடக்குங்க. கொழந்தைக்கு ரொம்ப நல்ல மனசு. போட்டுத் தருவார்ரா அஜீத்து. சும்மாக் கனைக்காத"

Tuesday, August 16, 2005

இராம காதை தொடர்கிறது!

இராம காதையில் ஏன் இப்படி ஒரு திடீர்ச் சுணங்கல்? எனி மாரீசன் பிசினஸ் ஹாப்பெனிங்?

எந்த விதமான இலக்கியப் பாவ்லாவையுமே சமீபத்தில் காணோமே? அப்பாடா. ஆனாலும் ...

இந்த எல்லே ஆள் இருக்கிறாரா? அல்லது அலாஸ்காவிலேயே 'ஜில்'லென்று செட்டிலாகி விட்டாரா என்று யாருமே கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

என்னைப் பற்றிய 'காணவில்லை' விளம்பரச் சுவரொட்டிகள் எதையும் யாருமே எங்குமே கண்டதாகவும் செய்தி இல்லை.

'அண்ணன் தொடர்ந்து 'பிறந்தகப் பெருமை' பேசாவிட்டால் பட்டப் பகலில் பட்டமங்கலத்தெரு மணிக் கூண்டின் அடியிலெயே விசிறிப் படையோடு யானும் தீக்குளிப்பேன்' என்று மாயவரத்து மக்கள் யாரும் சூளுரைத்த சப்தம் என் காதுக்குக் கேட்கவில்லை.

இருந்தாலும், உண்மை நிலை விளம்புவது என் கடமையாகிறது.

'தமிழ் மண'த்தின் முதன் முதல் இருவார நட்சத்திரமாக மினுக்கோ மினுக்கென்று மினுக்கியதில் ஏற்பட்ட கழுத்துச் சுளுக்கு, தொடர் இலக்கியத் தொண்டினால் ஏற்பட்ட விரற் களைப்பு, வீடு மாற்றல் வைபவத்தில் ஏற்பட்ட ஜெனரல் சிராய்ப்புகள், முழங்கால் முட்டி சேதாரங்கள், இன்ன பிற அலுப்புகளைக் களைய அலாஸ்கா வரை சென்று குளிர் பனிக் கட்டிகளின் மீதமர்ந்து தியானம் செய்து முடித்து விட்டுத் தற்சமயம் எல்லே திரும்பியிருக்கிறேன்.

எல்லேயிலிருந்து சியட்டில் வழியே ஆன்கரேஜ் வரை விமானப் பயணம், அங்கிருந்து அலாஸ்காவின் உட்பகுதிகளுக்குப் பனிப் பாறைகள் தேடிக் 'க்ரூயிஸ்' என்கிற நீண்ட நெடும் கடற் பயணம், வான்கூவர் நகரில் சற்றே ஓய்வான ஊர் சுற்றல், மீண்டும் எல்லே திரும்புதல் ஆகிய பரவலான நிகழ்ச்சி நிரல்களுக்கிடையேயும் நான் என் அன்புசால் வாசக அன்பர்களை மறந்தேனில்லை.

வெகேஷனில் இருந்து திரும்பிய களைப்பு, புது வீடு, சாமான், சச்சா, கண்டாமுண்டான்ஸ் பேக்கிங்ஸ், அன்பேக்கிங்ஸ், அரேஞ்சிங்ஸ், ரீஅரேஞ்சிங்க்ஸ், காலில் போட்டுக்கொண்டு பேண்ட் எய்டிங்க்ஸ், சிராய்ச்சிங்க்ஸ், புது நெட் கனெக்ஷன் (நாளை தான் வருகிறது), நோ தொலைபேசி (மொபைல்கள் இருப்பதால் கதை கந்தலாகவில்லை), நோ தொலைக்காட்சி தொடர்புகள் (அப்பாடா!) ...இப்படியாகத்தானே ராம காதை தற்சமயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

விரைவில் சந்திப்போம்!