என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Thursday, February 11, 2010

(ஆதி கால) சாம்கோ!

எழுபதுகளில் சென்னை அயனாவரத்திலிருந்து நாங்கள் அபிராமபுரத்தில் புது வீடு கட்டிக்கொண்டு குடி வந்த உடனேயே எனக்கு ஆழ்வார்பேட்டை ‘சாம்கோ’ சகவாசம் ஏற்பட்டு விட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

தென்சென்னையின் அரசியல், கலாச்சார, ஆன்மீக, பாரம்பரிய பின்புலன் தெரியாத வெளியூர் வாசகர்களுக்கான ஒரு சிறு முன்னறிவிப்பு:

சென்னை என்றால் தென்சென்னை தான். தென்சென்னை என்றால் மைலாப்பூர் தான்! அபிராமபுரம் என்பது மைலாப்பூரை ஒட்டிய வளமான ஒரு சிறு பகுதி. ‘தம்மாத்துண்டு’ ஏரியா தான் என்றாலும் ஆழ்வார்பேட்டைக்கும் மைலாப்பூருக்கும் இடையே இருப்பதால் இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஏரியா ஆகிப்போனது.

அதுவும் இப்போது இருக்கும் ஆழ்வார்பேட்டை ரவுண்ட் தாணா பகுதி ஒரு அபத்தமான சின்ன ஃப்ளைஓவரின் கீழ் தற்போது மறைந்து கிடந்தாலும், அப்போது மேற்கு மூலையில் கமல் வீடு, கிழக்கு மூலையில் சாம்கோ ஹோட்டல். பாக்கி இன்னும் எல்லா மூலைகளிலும் பெட்ரோல் பங்குகள், ஆட்டோ ஸ்டாண்டுகள், பெட்டிக்கடைகள் என்று ‘ஷகரா’ன கலகலப்பான ஏரியா.

சமீபத்தில் எழுத்தாள நண்பர் ச.ந.கண்ணன் (சக சாப்பாட்டுராமன் என்பதறிக)சென்னையின் எந்தெந்த ஹோட்டல்களில் எந்தெந்த சைவ, அசைவ ஐட்டங்கள் நன்றாக இருக்கும், இருக்காது என்பது பற்றியெல்லாம் ஒரு திறனாய்வே எழுதி இருந்ததைப் படித்துக் கொஞ்சம் பொறாமை கலந்த பசியேப்பம் விடும் வாய்ப்பு / எரிச்சல் எனக்குக் கிடைத்தது.

வரலாற்று முக்கியம் வாய்ந்த ‘சாம்கோ’ பற்றி நாங்கள் தனி மடல்களில் சம்பாஷிக்கலானோம். தற்சமய சாம்கோ ரொம்பவும் மாடர்னாக ஆகி விட்டதாகவும் சர்வீஸ் அம்பேல் ஆகி விட்டதாகவும் அவர் புலம்பி இருந்தார்.

ஆதிகால சாம்கோ எப்படி இருந்தது?

அசைவ ஐட்டங்களுக்கு அது ஒரு மெக்கா என்பதாலும், மேல் மாடியில் ‘தெரிந்தவர்களுக்கு மட்டும்’ ஏர் கண்டிஷன், தாகசாந்திக்கான ‘பூத்’ வசதிகள் உண்டென்பதாலும் இளைஞர்களிடையே அப்போது சாம்கோ படு பிரசித்தம்.

என் நண்பர்கள் குழாமில் பலரும்- பிராமண நண்பர்கள் உட்பட - அசைவரே. சமோசா, பரோட்டா, ஆப்பம் போன்ற வெஜிடேரியன் ஐட்டங்கள் அங்கே என் அய்யர் குழாம் நண்பர்களிடையேயும் படு பிரசித்தம். அதுவும் சாம்கோ டீ என்றால் ஆண்டவனே அவ்வப்போது நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டு அங்கே வந்து, சர்வர் ‘மொஹமது’ கையால் இளைப்பாறி விட்டுச் செல்வது வழக்கம். ஓனர், சர்வர்கள் எல்லோருமே அப்போது மலையாளி முஸ்லிம்கள். விருந்தோம்புவது அவர்கள் ரத்தத்தில் ஊறிப்போன நல்ல விஷயம். அவசரத்தில் மணிபர்ஸ் கொண்டு வராவிட்டாலும் அடுத்த நாள் வந்து பில் பணத்தைக் கட்டிக் கொள்ளலாம்.

கொண்டாட்ட வைபவங்களுக்கு மாடி தான் வசதி. கீழே சாப்பிட வருபவர்களில் பலரும் அன்றாடத் தொழிலாளிகள் அல்லது அவசரத்திற்கு ஒரு சாயா அடித்து விட்டுப் போகிறவர்கள்.

ரெகுலர்சுக்காக, மாடியில் ‘பூத்’கள் நிறைந்து விட்டால் கொஞ்சம் நிழலாக வேறு ஏற்பாடுகள் செய்து கொடுப்பார்கள். அவசரத்திற்கு ஒரு எடுபிடி ஓடிப்போய் ஐஸ்கோல்ட் பியர் வாங்கி வருவான். அல்லது அசமஞ்சம் மாதிரி ஒரே ஒரு சிங்கிள் டீயுடன் உட்கார்ந்து நாற்காலி தேய்ப்பவர்கள் நாசூக்காக எங்களுக்காக விரட்டப்படுவார்கள். மொட்டை மாடி மாதிரி கொஞ்சம் திறந்தவெளி என்பதால் புகை போகவும் வசதி.

வாரக்கடைசிகளில் அங்கே இடம் கிடைக்க ஜாதகத்தில் குரு உச்சத்தில் இருக்கவேண்டும். அல்லது ஓனர் பாவாவின் அருட்கடாட்சம் வேண்டும்.

பிரியாணியோ, டீயோ, ஃபுல் கட்டோ, அவரவர் வசதிக்கேற்ப சாப்பிட்டு முடித்துக் கீழே வந்தால் சாம்கோவை ஒட்டிய பெட்டிக்கடையில் ஒரு பீடாவோ சோடாவோ சாப்பிடாவிட்டால் ஜென்மம் கடைத்தேறாது என்கிறது ஆழ்வார்பேட்டை தலபுராணம். ஜர்தா 120, 140 என்று சக்கைப்போடு போடும். 555, ப்ளேயர்ஸ் எல்லாம் கிடைக்கும்.

அவ்வப்போது கமலஹாசன் அங்கே வந்து போவது வழக்கம். சாம்கோவுக்கு எதிரே கமல் வீட்டை ஒட்டி இருந்த இன்னொரு பெட்டிக்கடை வாசலில் தான் நானும் கமலும் முதன்முதலில் அறிமுகமானோம். அறிமுகப்படுத்திய நண்பன் ‘கல்லி’ என்கிற கல்யாணசுந்தரம். நல்ல மனசுக்காரன். தடாலடியாக ஏதாவது சொல்வான். சில சமயம் செய்யவும் செய்வான். அப்படித்தான் ஒரு நாள் என்னை கமலிடம் அறிமுகம் செய்கிறேன் என்று அழைத்துப் போய் அதை செய்தும் காட்டினான். காந்தியும் நேருவும் சாய்ந்தாற்போல் பேசிக்கொள்ளும் கருப்பு-வெள்ளை புகைப்படம் ஒன்றை நீங்கள் பார்த்திருப்பீர்களே, அதே போல் கமலும் நானும் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை அந்தக் கடைக்காரர் அங்கே பல வருடங்கள் மாட்டிவைத்து, வேண்டாம், பீலாவின் சு.த. நெடி எனக்கே தாங்க முடியவில்லை. விட்டு விடுகிறேன்.

கமல் நல்ல நண்பரான பிறகு, என் ஸ்கூட்டரை அல்லது காரை அவர் வீட்டிலேயே விட்டுவிட்டுச் செல்லுமளவுக்கு எனக்கு சுதந்திரம் கிடைத்தது. அப்போது கமலின் செக்ரட்டரியாக இருந்த சேஷாத்ரி என்ன ஆனான் என்பது தெரியவில்லை. சில வருஷங்களுக்கு முன்பு கூட, சாம்கோ மேற்கு மூலைக்குக் குடி மாறிய பிறகு, கமல் சிம்ரனை அழைத்து வந்து தன் பால்ய நினைவுகளை அங்கே பகிர்ந்து கொண்டதாகச் சொன்னது ஒரு காற்றுவழிச் செய்தி.

நிற்க, இது கமல் புராணம் இல்லை, சாம்கோ புராணம் என்பதால் மீண்டும் சாம்கோ பற்றியே பேசுவோம்.

பல விடலைப் பசங்களுக்கு முதலில் தீர்த்தானந்த சிட்சை கிடைத்த புண்ணிய ஷேத்திரமே சாம்கோ தான். சாம்கோவில் வாந்தியெடுத்து ஞானஸ்நானம் பெறாதவர்களை நண்பர்கள் குழாமிலிருந்தே ஜாதிப் பிரஷ்டம் செய்து விலக்கி வைப்பதெல்லாம் அப்போது சர்வ சகஜம். சும்மனாச்சிக்கும் ”வயிற்றைப் பிரட்டியது, வாந்தி வருவது போல் இருந்தது” எல்லாம் செல்லுபடியாகாது. பத்து பேராவது பார்க்கும்படி பீச்சி அடித்தவர்கள் நண்பர் குழாத்தின் உள்வட்டத்துக்குள் அநாயாசமாக ப்ரமோஷன் ஆவார்கள்.

அப்போதெல்லாம் சென்னையில் ஃப்ரீயான குடியாட்சி கிடையாதென்பதால், திடீரென்று சாம்கோவும் மோடியின் குஜராத் மாதிரி அவ்வப்போது விறைத்துக்கொண்டு நிற்கும். உள்ளே நுழையும்போதே “ஏசி சர்வீஸ் கிடையாது சார்” என்பார்கள். ”ஓஹோ, மாசக் கடைசி, போலீஸ் தொல்லை போலிருக்கிறது” என்று நாம்தான் குறிப்பறிந்து புரிந்துகொள்ள வேண்டும்.

அப்போது கூட “எந்தா சேட்டா?” என்று மொகமது கோஷ்டியின் முகவாயைப் பிடித்துக் கொஞ்சி காரியங்கள் சித்தியாவதும் உண்டு. காவல்நிலைய நிர்ப்பந்தங்கள் அதிகமாக இருந்தால் அவர்களே ஆங்காங்கே சில ‘லுக் அவுட்’களை போஸ்டிங்கில் போடுவார்கள். எப்படிப்பட்ட நெருக்கடி, எமர்ஜென்சி நேரங்களிலும் நெருக்கமான பழக்கத்தால் எங்கள் குழாமுக்காக மட்டுமே சாம்கோ பின்னிரவு வரை திறந்திருந்ததும் உண்டு.

அசைவ ஐட்டங்கள் பிரமாதம் என்று அசைவ நண்பர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வட இந்திய வெஜ் ஐட்டங்களும் அட்டகாசமாகவே இருந்த நினைவு. விலையும் சல்லிசு தான்.

அந்த சாம்கோ பீடாக்கடைக்கும் ரஜினி விசிட் செய்து ஜர்தா வாங்கிச் சென்றிருப்பதாகச் சொல்வார்கள். நான் பார்த்ததில்லை.

சாம்கோ மேற்கு மூலைக்கு இடம் மாறியதும் ஓரிரு முறை போய் வந்திருக்கிறேன். பழைய camaraderie இல்லை. விலையும் அதிகம். இப்போது இன்னும் ஹை கிளாசாக, மோசமாகப் போய் விட்டதாகச் சொல்கிறார்கள்.

பாரதி இருந்த வீடு மாதிரி பழைய சாம்கோவை ஒரு வரலாற்றுச் சின்னமாக அறிவித்திருக்கலாம். ப்ச், செய்யவில்லை. தப்பு பண்ணிவிட்டோம்.

‘மார்பு துடிக்குதடி கண்ணம்மா’ என்று வேண்டுமானால் இப்போது புலம்பலாம்!

3 comments:

துளசி கோபால் said...

சரித்திரம் ரொம்ப முக்கியம், அது தரித்திரமா இருந்தாலும் சரி!

இன்னும் பார்க்கலை. ஒருநடை போய்ப் பார்த்துட்டு வந்துடறேன்.

செப்பேட்டில் குறிச்சு வச்சுக்கத்தான்:-)

ஆயில்யன் said...

//பாரதி இருந்த வீடு மாதிரி பழைய சாம்கோவை ஒரு வரலாற்றுச் சின்னமாக அறிவித்திருக்கலாம்//

:))

நினைவலைகளில் சாம்கோ புராணம் சூப்பர் இப்பவும் பங்ஷன் ஆகிக்கிட்டிருக்குன்னு சொல்றதால பார்க்கவேண்டிய பகுதிகள் லிஸ்ட்ல சேர்த்துக்கிடணும்!

ஆனாலும் அந்த கமல் சிம்ரன் -ஆர்வத்தை கெளப்பிவிட்டுட்டீங்க :)))))

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

ச.ந.கண்ணன் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். இதையும் படியுங்கள். சாம்கோ பற்றிய ஒரு முழுமை ஏற்படும்.

http://www.sanakannan.com/samco.html