என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Tuesday, December 14, 2004

ஜாக் அய்யர் -2

ஒரு நாள் கேயெஸ் தனியே தன்னந்தனியே ‘அட்வான்ஸ் லெவல்’ சோழி பார்த்துக் கொண்டிருந்தார். அய்யருக்கு அப்போது தான் அந்த ஐடியா ‘பளிச்’சென்று வந்தது.

"கோமதி, சீக்ரமா இங்க வாம்மா ஒரு நிமிஷம்".

மாமிக்கு நிறை மாசம். மூச்சு வாங்கியபடி மெதுவாக வந்து கதவருகே நின்றாள்.

"உன் கொழந்தை ஜாதகத்தை ப்ரஸ்னத்தில பாக்கறேன். அப்படியே கெழக்கால பார்த்து நில்லு."

"நமக்கு எதுக்கு அதெல்லாம்? ஈஸ்வர கிருபையில எல்லாம் நல்லபடிதான் ..." மாமி சொல்ல வந்ததை முடிக்குமுன் சீட்டுத் தொந்தரவு இல்லாத புதிய திண்ணையில் சோழிகள் விஸ்தாரமாக ஓடி ஆடிக் குலுங்கி நின்றன.

சோழிகளை அப்படியும் இப்படியுமாகப் பல கோணங்களில் பார்த்தார் கேயெஸ். நெற்றியைச் சுருக்கினார். உதட்டைப் பிதுக்கினார். "அந்த வெற்றிலைச் செல்லத்தையும் ஒரு சொம்புல ஜலமும் கொண்டு வா. இன்னிக்கி அரிசி உப்புமாவில வெங்காயம் போடாத. சஷ்டி." என்றார்.

மாமிக்கு வயிற்றைப் பிசைந்தது. "உப்புமாவும் வெத்திலையும் இருக்கட்டும். சஸ்பென்சா நிறுத்தாம நல்ல வார்த்தையா சொல்லுங்கோ"

"கவலைப்படாத, கோமதி. அந்தப் பூரி ஜெகந்நாதன் தான் வந்து பொறக்கப் போறான். பையன் ஓகோன்னு படிப்பன். அடேயப்பா எத்தனை படிப்பு? அவனுக்கு ஏத்த படிப்பே கோனேரிராஜமங்கலத்திலயோ திருநெல்வேலியிலயோ என்ன, இந்த நாட்டில கெடையாதுன்னா பாத்துக்கோயேன். கொழந்தை வெளி நாட்டில எல்லாம் போய் படியோ படின்னு படிச்சுப் பட்டம் வாங்கப் போறான்."

அடி வயிற்றைத் தடவியபடியே கோமதி மாமி அதற்குள்ளேயே கவலைப்பட ரம்பித்து விட்டாள். "ஏன்னா, வெளி நாட்ல எல்லாம் ரொம்பக் குளிருமாமே. கொழந்தை சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவன்? அவனைப் பிரிஞ்செல்லாம் என்னால தனியா இருக்க முடியாது"

"சரி சரி. அதுக்கென்ன இப்போ? உள்ள போய் நன்னா குளிர் தாங்கறாமாதிரி கொழந்தைக்கு ஒரு ஸ்வெட்டர் பின்னு"

கோமதி மாமி அந்தண்டை போனவுடன், கேயெஸ் அய்யர் என்கிற திருநெல்வேலி கல்யாணசுந்தரமய்யர் வெகு நேரம் சோழி போட்டுப் பார்த்தபடி தனக்குள் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தார்.

******* ******** *********

ஹைஸ்கூலில் அடுத்த வகுப்புக் கரும்பலகைகளிலெல்லாம் தொடர்ந்து எழுதுமளவுக்குத் தன் பெயர் பெரிசாக, வளர்த்தியாக இருந்ததில் ஆரம்பத்தில் ஜெகனுக்குக் கொஞ்சம் பெருமையாகக்கூட இருந்தது. வெறும் 'சுரேஷ், ரமேஷ், சுப்பிரமணி' எல்லாம் ஜெகனுடைய பெயர்ப் பிரலாபத்தைப் பார்த்துப் பொறாமைப்பட்டார்கள். ஆனால் பிற்காலத்தில் 'கோனேரிராஜமங்கலம் ஜெகன்னாதன் கல்யாணசுந்தரம்' என்கிற மொத்தப் பெயரைச் சுமந்துகொண்டு அவன் படாத பாடில்லை.

படிப்பு, படிப்பு, சதா படிப்பு. அப்பா கேயெஸ்ஸ¥ம் காலாண்டு கணக்குப் பரீட்சையில் "ஜெகன், இந்தத் தடவை சயின்சுல 100க்கு 93 தான் வாங்கப் போறாய். ஆனாக்க, கணக்குல செண்டம். சோழி அப்படித்தான் சொல்றது" என்கிற அளவுக்கு முன்னேறி இருந்தார்.

புதுப்புது சோழி செட்டுக்கள் கொல்கத்தா, கொரியா என்று என்கிருந்தெல்லாமோ- எரும்பு சைசிலிருந்து ஆமை சைஸ் வரை- வரவழைக்கப்பட்டன.

கேயெஸ்ஸின் அட்வான்ஸ்டு சோழிகள் ‘பிஹெச்டி’ லெவலில் பேச ஆரம்பித்து விட்டதால் அந்த வீட்டுத் திண்ணை இன்னமும் இடித்து விரிவாக்கப்பட்டது. "ஞான சம்ஸ்காரார்த்தம் வெகுஜனப் பிரயோசனம்" என்று சம்ஸ்கிருதத்தில் என்னவோ சொல்லிக்கொண்டு கேயெஸ்ஸ¤ம் தன் இலவச சோழிப்ரஸ்ன ப்ராக்டீசை இன்னமும் விரிவுபடுத்தினார்.

சென்னை, பம்பாயிலிருந்தெல்லாம் ரயிலேறி வந்த மக்கள் சோழி ஜோசியம் கேட்க் ஆரம்பித்தார்கள். யாரிடமும் ஒரு தம்பிடி கூட வாங்கியதே இல்லை. ஊர்க்காரர்கள் தத்தம் விசுவாசத்தைக் காட்டுவதற்காக அதே திண்ணையில் பலாமுசு, பூசணி, புடலங்காய், மாம்பழம் என்று எதையாவது கொண்டு வந்து இறக்கி விட்டுத்தான் மறு காரியம் பார்த்தார்கள். கேயெஸ் வேண்டாமென்று எவ்வளவு தடுத்தாலும் யாரும் கேட்பாரில்லை.

வெளியூர்க்காரர்கள் செக் புத்தகத்தை வெளியே எடுத்தால், கல்யாணம் தனக்கு எதுவும் வேண்டாமென்று தடுத்துப் பக்கத்துக் கிராமங்களில் ஏதாவது நலிவுற்ற கோவில்களுக்கு நன்கொடையாகக் கொடுக்கச் சொல்லி விடுவார்.

"பரவாயில்லை. ஏதாவது கொஞ்சம் கேஷாவது வாங்கிக்கணூம், எவ்வளவு சரியா எல்லாம் சொல்றேள்" என்று யாராவது ஆரம்பித்தால், "அய்யோ, நான் பணத்தைக் கையால கூடத் தொடறதில்லை. எல்லா பாபத்துக்கும் அது தான் ரிஷிமூலம், எங்கயாவது நொண்டிப் பிச்சைக்காரனுக்குக் கொண்டுபோய்க் குடுத்துடுங்கோ" என்பார் கல்யாணம்.

********* ********* *********


கான்பூர் ஐஐடியில் ஆளாளுக்குத் தன் பெயரை ரேக்கியதில் ஜெகன் கே. எஸ். என்று அபத்தமாக சுருங்கிப் போயிருந்தான். நியூமராலஜியை ஏன் விட்டுவைக்கவேண்டும், அதிலும் கரை சேர்வோமா என்று ஊரில் கல்யாணம் யோசித்துக் கொண்டிருந்தார். வாராவாரம் பிள்ளைக்காக ஏதுனும் பட்சணம் பார்சல் அனுப்புவதில் கோமதி மாமி மும்முரமாய் இருந்தாள்.


இந்த நிலையில்தான் மாமாவுக்கு ஒரு நாள் அவருடைய ஒரே பிள்ளை அமெரிக்கா போகப் போவதாகக் கடிதம் எழுதியிருந்தான். என்னதான் பல வருஷங்களாக எதிர்பார்த்த விஷயமென்றாலும், வயசான தம்பதிகளுக்கு அந்தக் கடிதம் வயிற்றில் புளியைக் கரைத்தது. தன் சோழி மீதே நம்பிக்கை இல்லாமல் எதற்கும் இருக்கட்டும் என்று பையனுக்காகத் தாழையூத்து சிமெண்டு பேக்டரியில் மேனேஜர் வேலைக்குச் சொல்லி வைத்திருந்தார். அது வீணாகி விடுமென்று அவருக்கே உள் மனதில் பட்டது.

"சரி, அதனாலென்ன? ஜெகன் எப்போ திரும்பி வருவான்னு பார்க்கறேன் பார்" என்று ஒரு தடவை சோழிகளை உருட்டிப் போட்டவர் சற்று நேரம் ஒன்றுமே பேசவில்லை. "வர வர இந்தப் •பாரீன் சோழியெல்லாம் சரியா இருக்கறதில்லை. அவாள்லாம் சுத்த பத்தமா இருக்கற்தில்லையோல்லியோ அதனால தான்" என்றார்.

மாமிக்கு ஏதோ புரிந்தும் புரியாதது போல் கொஞ்சம் கலவரமாயிருந்தது. மேற்கொண்டு அவரிடம் எதையாவது கேட்டு, அவர் அபசகுனமாக ஏதாவது சொல்லி விடுவாரோ என்று பயந்து, "நான் கோவிலுக்குப் போய் அம்பாளுக்கு நெய் விளக்கு ஏத்திட்டு வரேன்" என்று கிளம்பினாள்.

அந்தத் திண்ணையில் அய்யர் மட்டும் சோழிகளை மறுபடி மறுபடி வீசிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

---------- ---------- ----------

அமெரிக்கன் கான்சலேட்டின் அதீத ஏசிக் குளிரிலும் ஜெகனுக்கு வியர்த்திருந்தது. அங்கே வேலை செய்யும் ப்ரௌன் சாகிப்புகள் எட்டடி உசரத்தில் பறந்து கொண்டு கீழ்க் கண்ணாடி வழியாக ஏதோ தொற்றுவியாதிக் கிருமியை மைக்ராஸ்கோப்பில் பார்ப்பது போல் எல்லோரையும் கேவலமாகப் பார்த்துத் தங்களுக்குள் மட்டும் ஏதோ ஜாடையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அபரிமிதமான ஆக்ஸெண்ட் அசத்தல் வேறு சேர்த்து எல்லோரையும் படுத்தினார்கள்.

அங்கே ஏற்பட்ட புதுப் பெயர்க் குளறுபடியில் 'ஜெகன் நேதன் கே.சுந்தரம்' என்று மறு பிறவி எடுத்தான் ஜெகன். எதிர்த்து ஏதாவது பேசினால் ஸ்டூடெண்ட் ஸ்காலர்ஷிப் விசாவைத் திரும்பப் பிடுங்கிக் கொண்டு அடித்து அனுப்புவார்களோ என்கிற பயத்தில் அவன் வாயையே திறக்கவில்லை.

அடுத்த வாரமே அமெரிக்கா போக ஏற்பாடாகி விட்டது. அப்பாவும் அம்மாவும் ஆம்னி பஸ் பிடித்துச் சென்னை வந்திருந்தார்கள். ஏர்போர்ட் கூட்டமே அவர்களுக்கு மிரட்சியாக இருந்தது. தாமிரபரணித் தண்ணீர் தவிர எதுவுமே குடித்திராத அவர்களுக்குச் சென்னைக் குடிநீர் குமட்டிக்கொண்டு வந்தது.

"செப்டர்ல காலேஜ் தொறக்கறதுப்பா. அங்க காலேஜுக்கெல்லாம் ஸ்கூல்னு தான் பேர். பதினெட்டு மாசம் கோர்ஸ். னா நான் ஒரே வருஷத்துல் எம். எஸ் முடிச்சுடுவேன். உடனேயே திரும்பி வந்துடறேன்ப்பா. அம்மாவை ஜாக்கிரதையாப் பார்த்துக்கோ"

"ம்ம்ம்" என்றார் கல்யாணசுந்தரம் அய்யர்.

"அப்பா ஏன்மா சரியாவே பேச மாட்டேங்கறார்? என் கிட்ட ஏதாவது கோவமா? நான் வேணும்னா இந்த ட்ரிப்பையே கேன்சல் பண்ணிடட்டுமா? அப்பா சோழி கொண்டு வந்திருக்காரா? ஏர்போர்ட்ல ஒரு ஓரமா தரையத் தொட்ச்சுட்டு சோழி போட்டு நான் எப்ப திரும்பி வருவேன்னு பார்த்து சொல்லச் சொல்லேன். நீயும் ஏம்மா உம்முன்னு இருக்கே? எனக்குக் கலவரமா இருக்கும்மா'

"அப்பா இப்பல்லாம் கொஞ்ச நாளா சோழி பார்க்கறதையே நிறுத்திட்டார்டா ஜெகன். நான் ஏன்னு கேட்டா ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறார். இப்ப வர்ர சோழியெல்லாம் சுத்த பத்தமா இல்லையாமே. வாசல்ல யாருமே இப்ப வந்து அப்பா கிட்ட எதுவும் கேக்கறதும் இல்லை".

சென்னை ஏர்போர்ட்டிலிருந்து ஊர் திரும்பி வந்து ஏதோ ஜுரமென்று படுத்தவர் தான் கலயாணசுந்தரம். ஜூர வேகத்தில் ஒரு நாள் தன் முடிவு என்னவாகுமென்று தெரிந்து கொள்ளவேண்டி வீசிய சோழிகளை வெறித்துப் பார்த்தபடி திண்ணையிலேயே கண்ணை மூடியவர் பிறகு திறக்கவேயில்லை.

********* ********* **********

அப்பா செத்ததற்குக்கூட ஜெகனால் அமெரிக்காவிலிருந்து வர முடியாமல் போயிற்று. விசாவில் ப்ராப்ளம். •ப்ளைட் கிடைக்கவில்லை. ஸ்கூலில் நெருக்கடி. க்ரெடிட் கார்டில் பணமில்லை. இப்படி எத்தனை எத்தனையோ கஷ்டங்கள் ஒன்றாகச் சேர்ந்து அவனைத் தாக்கிய கெட்ட நேரம் அது.

அமெரிக்க வாழ்வில் அநித்திய சாத்தியங்கள் ஏராளம். விசா கிடைத்து ஆகாய விமானத்தில் ஏறி முதன்முதலாக வெளிநாடு சென்றது தனக்கு நேர்ந்த மிகப் பெரிய அதிர்ஷ்டமா அல்லது மாபெரும் துரதிர்ஷ்டமா என்று தனக்குத்தானே அவன் அடிக்கடி கேட்டுக்கொண்டான்.

அவசர அவசரமாக ஊரில் அப்பாவுக்குக் காரியங்களைப் பண்ணி முடித்து விட்டார்களாம். 'இனிமேல் போய் என்ன செய்யப் போகிறோம்?' என்று தன்னையே அவன் நொந்து கொண்டான். அம்மாவிடம் டெலிபோனில் எத்தனை தடவை பேசினாலும் பழைய அம்மாவைக் காணவேயில்லை. முதலில் தினமும் டெலிபோன் செய்தான். அப்புறம் அம்மாவே "எதுக்கடா இப்படிச் செலவு பண்றே. வாரம் ஒரு தடவை கூப்பிடு. போதும்" என்றாள்.

சில சமயங்களில் ஜெகன் போன் பண்ண ஒரு மாதம் கூட ஆகி விடுகிறது. அம்மாவும் ஏதோ மடத்து ஆசிரமத்தில் சேர்ந்து விட்டாளாம்.

'அடுத்த வருடம் திரும்பி விடலாம், அதற்கடுத்த வருடம் கட்டாயம்' என்று ஜெகன தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தாயிற்று. படித்து முடித்தவுடனேயே திரும்பித் தொலைத்திருக்கவேண்டும். டிரெய்னிங், மேற்கொண்டு அட்வான்ஸ்டு டிரெய்னிங்....எல்லாம் மாய வலை. எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்டாயிற்று.

வேரோடு புலம் பெயர்ந்து விட்டதில் வேதனை மட்டுமே மிச்சமானது.

அமெரிக்கத் தற்காப்பு நிறுவனங்களில் பணிபுரிய வேண்டுமானால் குடியுரிமை கட்டாயம் வேண்டும். குடியுரிமைக்காக ஜெகன் ‘ஜாக் அய்யர்’ ஆனான்.

எம். எஸ் முடித்துப் பிஹெச்டி பண்ணி ஏரோநாடிகல் எஞ்சினீயரிங்கில் அமெரிக்காவின் மிகப் பெரும் மூளையென்று புகழப்பட்டு, வெள்ளைக்காரி ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளவேண்டிய எதிர்பாரா இக்கட்டில் ஆழ்ந்து, ஒரே வருடத்தில் டைவர்சும் ஆகி முடிந்து, அவளுக்கு மாதாமாதம் 'அலிமனி'யும், வாராந்தரக் கடைசிகளில் மட்டுமே தன் பெண்ணுக்கு அப்பாவுமாக ஆகிப் போய் அதற்காக அவன் இன்னமும் அந்த அமெரிக்க மேற்குக்கரையோரப் பீச்சாங்கரையில் அடிக்கடி அழுது கொண்டிருப்பது பெருஞ்சோகமா, விதியா, தலையெழுத்தா தெரியவில்லை.

நல்ல வருமானம், சொந்த வீடு, கார், பணம் என்று இருந்தாலும் அதற்கப்புறம் ஜாக் அய்யர் மறு கல்யாணம் பண்ணிக் கொள்ளப் பிரியப்படவில்லை. இந்தியாவுக்குப் போகவும் மனசில்லை.

‘பேசாமல் தாழையூத்திலேயே ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தால் அப்பா இன்னமும் உயிரோடு இருந்திருப்பாரோ? அம்மா என்னமாய் சமைத்துப் போடுவாள்? கோனேரிராஜமங்கலத்தில் எல்லோரும் எவ்வளவு அன்பாக இருப்பார்கள்? வாசலில் எந்நேரமும் எத்தனை கொண்டாட்டமும், சிரிப்பும், கும்மாளமும்? எல்லாவற்றையும் ஏன் இப்படித் தொலைத்து விட்டேன்? இத்தனையும் எதற்காக இழந்தேன்? இங்கே அமெரிக்காவில் யாராவது நன்றாகச் சோழி பார்த்துச் சொல்லக்கூடியவர்கள் இருக்கிறார்களோ?’ - ஏகப்பட்ட நினைவலைகள் மன ரணங்களைச் சீண்டிக்கொண்டே உப்புக்காற்றில் கண்ணிலும் மனசிலும் எரிச்சலூட்டின.

"என்ன இப்படிப் பண்ணி விட்டேனே. எந்த முகத்துடன் போய் அம்மா முகத்தில் எப்படி விழிப்பேன்?"

"அப்பா போனப்பறம் இங்க ஏகப்பட்டது நடந்து போச்சு. ஊருக்கு ஒரு நடை வந்து ஒழுங்கா ஒரு கல்யாணம் பண்ணிக்கோ. இப்ப உனக்குக் கொஞ்சம் வயசாயிட்டாலும் தப்பே இல்லை. இப்பவும் நம்ம சொந்தத்தில் கூட ..." என்று அம்மா ஏரோகிராம் முழுக்கப் பென்சிலால் நுணுக்கி நுணுக்கி எழுதி இருந்ததை மறுபடியும் படித்து முடித்து அவன் அழுதான்.

கடற்கரை ஓரமாக இருந்த கடையிலிருந்து சில சோழிகளை அள்ளியெடுத்த அந்தப் பெண். "டாடி, கேன் யூ கெட் மீ திஸ்? ஐ லவ் தெம்" என்றது.

வெளுப்பும் இல்லாமல், பழுப்புமில்லாமல் இருந்த அந்தப் பெண் குழந்தைக்கு, வாரக் கடைசிகளில் மட்டுமே தன்னை வந்து பார்க்க அனுமதிக்கப்பட்டிருக்கும் அப்பா, திடீரென்று குலுங்கிக் குலுங்கி அழுவதன் காரணம் புரியவில்லை.

ஜாக் அய்யரை அந்த அமெரிக்கக் குழந்தை புதிராகப் பார்த்தது.

-(முற்றும்)

Monday, December 13, 2004

ஜாக் அய்யர் -1

கோனேரிராஜமங்கலம் கல்யாணசுந்தரம் அய்யர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் இல்லையா? கோனேரிராஜமங்கலம் என்பது திருநெல்வேலிக்கு மிக சமீபம். மனுஷன் ரொம்பவும் சாது. நல்ல தமிழ்ப் பண்டிதர். வடநூல், வானநூல், ஜோதிடம், கர்நாடக சங்கீதம் என்று ய கலைகள் அறுபத்தி நான்கில் அல்மோஸ்ட் ஐம்பதில் படு ஞானஸ்தர்.

பரம்பரையாகவே தாமிரபரணிக் கரையில் வளர்ந்த நல்ல வசதியான குடும்பம். யாரிடமும் கை கட்டி உத்தியோகம் பார்ப்பதெல்லாம் மானபங்கம் என்று நினைக்கிற அளவுக்குச் செல்வமும் செல்வாக்கும் நிறைந்த பரம்பரை. எள்ளுத் தாத்தா, கொள்ளுத் தாத்தா காலத்தில், ‘மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டிப்’ போரடித்தார்களாம். அப்புறமாக யானை லத்தி எல்லாம் அள்ளி மாளாமல் சமர்த்தாக டிராக்டர் வாங்கி விட்டார்கள்.

கோமதி மாமி அவருக்கு வாய்த்த தங்கம். மாமியுடைய கள்ளிச்சொட்டு காப்பியும், நளபாகக் கை மணமும், பயந்த சுபாவமும் அந்த ஏரியாவிலேயே மிகப் பிரசித்தம். ரொம்பவும் வாத்ஸல்யமான தம்பதி. திண்ணையில் சீட்டாடும் மாமாவுடைய கண் பார்வையிலேயே குறிப்பறிந்து மாமி 'இன்றைக்கு மத்தியானம் பக்கோடாவா, போண்டாவா, இல்லை புளித்த அடையா?' என்று முடிவு செய்து கல்லை அடுப்பில் போட்டு விடுவாள் என்றால் பாருங்களேன். அப்படிப்பட்ட அந்நியோன்னிய தம்பதிகளுக்கு வெகுநாட்கள் வரை குழந்தை பாக்கியம் இல்லை.

அதனால் குழந்தைப் பேறு வேண்டுமென்று வடக்கே தல யாத்திரை என்று கிளம்பி ஹரித்வார், காசி என்றெல்லாம் சுற்றி விட்டுக் கடைசியில் பூரியும் போய் விட்டு வந்தார்கள்.. பூரி போனபிறகு தான் மாமி வாந்தி எடுக்க ஆரம்பித்தாள். வடக்கத்திய பூரியின் கடலை எண்ணெய் தான் வாந்திக்குக் காரணம் என்று முதலில் சும்மா இருந்துவிட்டார்கள்.

ஆனால் கோமதி மாமி வயிற்றில் புழு, பூச்சி எல்லாம் தோன்றியிருப்பதாக நாட்டு வைத்தியர் சொன்னதும் அவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. பூரி ஜெகன்னாதர் தரிசனம் ப்ராப்தி ஆன பிறகே மாமி கருவுற்றதால் பையன் பிறந்தால் ‘ஜெகந்நாதன்’ என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.

கல்யாணசுந்தர மாமா ஏகப்பட்ட சந்தோஷத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் மேற்சொன்ன ஆய கலைகளில் இன்னொன்றையும் கை வசப்படுத்தலானார்.

அதாகப்பட்டதே சோழிப்ரஸ்ன சாஸ்திரம்.

கை நிறையச் சோழிகளை அடுக்கிக் கொண்டு ‘கலீரெ’ன்று சீட்டுத் திண்ணையில் வீசி எறிந்து அவை அசைந்து விழுந்து ஆடி நிற்கும் வகை, வனப்பு, பாங்கு, நேரம், யோகம், கோணம், பாகை எல்லாவற்றையும் பார்த்துக் கணக்குப் போட்டு ஏதோ ஒரு பழைய சுவடிக் கட்டையும் படித்தபடி மாமா 'ப்ரஸ்னம்' சொல்ல ஆரம்பித்தார்.

சரஸ்வதி கடாட்சமோ, ப்ரஸ்ன தேவதையின் பரிபூர்ண அநுக்ரஹமோ, கொஞ்ச நாளில் அந்தக் கலையில் அவர் மிகத் தேர்ந்து அதிலேயே அமிழ்ந்து மகிழவும் ஆரம்பித்து விட்டார்.

சிமெண்டுத் திண்ணையின் ஈரச் சிலிர்ப்பு, சுவடியின் மக்கல் வாசனை, சோழியின் ‘கலீர்’, கருப்பு சிலேட்டில் பல்ப்பக் கிறுக்கலின் ‘கிறீச்’, தனக்குத்தானே பேச்சு. கடைவாயில் அதக்கிய பன்னீர் வாசனை, நெற்றியில் அன்றரைத்த சந்தனம், அக்குளில் அத்தர் மணம் என்று ஒரு மாதிரியான கதம்ப குதூகல நிர்வாணக் கடைநிலை ஆகிப் போனது அய்யருடைய ப்ரஸ்னானந்தம்.

ஆரம்பத்தில், 'காணாமற்போன கருப்பு எருமை மாடு எந்த வேலியில் எதை மேய்ந்து கொண்டு நிற்கிறது?', 'எதிர்த்த வீட்டுச் சாம்பல் பூனைக்குட்டி எத்தனை குட்டி போடும்?', 'வசந்தா மாமியின் சின்னப் பெண் ஷீலாக்குட்டி எந்த மாதம் ருதுவாவாள்?' போன்கிற லோகாயத விஷயங்களில் ஆரம்பித்து, அவரது ப்ரஸ்ன ஞானம் குறுகிய காலத்திலேயே வெகு விஸ்தாரமாகி விட்டதை மெச்சத்தான் வேண்டும்.

காலையில் பல் தேய்த்து விட்டுக் காப்பிச் சொம்பும், ஹிண்டு பேப்பருமாய் அவர் வந்து திண்ணையில் உட்கார்ந்தால் அந்தத் தெருவே களை கட்ட ஆரம்பித்து விடும்.

"சாமி, மாமரத்தில அணிலையே காணலை. இன்னிக்காவது அணில் கிடைக்குமா, கிடைக்காதா? வெறும் பூனைய எத்தினி நாணைக்குத் துண்றது? ஜோளிய உருட்டுங்க, பார்த்துடுவம்" என்று அணிற் குறவன் கேட்பான்.

'ராமா, ராமா/ என்று தலையில் அடித்துக் கொண்டாலும் அவனுக்கும் அய்யர் ப்ரஸ்னம் பார்க்கத் தவறுவதில்லை.

"ஏம்ப்பா கல்யாணம். இன்னிக்கி 3 மணி ரேசுல அந்தக் கழுதை ‘ப்ளாக் க்வீன்’ எந்தப் ப்ளேஸ்ல வரும்?" என்பார் சாமண்ணா.

“இன்னிக்கி ஆலோடியில நெல்லு உலர்த்தினா மழை கிழை வருமாடா கல்யாணம்? பார்த்துச் சொல்லு” என்பாள் அடுத்த வீட்டுப் பாட்டி.

கல்யாணசுந்தர மாமாவும் சந்தோஷமாய்க் ‘கலீர்’ உருட்டுவார்.

ஆனால், ஆதி சங்கர பகவத் பாத்ர் என்ன சொல்கிறார்? ‘அற்பப் பதரே, பூலோகத்தில் எந்த சந்தோஷமுமே நிலையானது இல்லை’ என்கிறார். அந்தப் ப்ரஸ்ன சந்தோஷத்திற்கும் அங்கே பங்கம் வர ஆரம்பிந்தது.

பங்கம் வந்தது 52 பேரால். அதென்ன 52 என்று ஒரு கணக்கு? இதைக் கொஞ்சம் சொஸ்த விஸ்தாரமாகச் சொல்லவேண்டும். இல்லாவிட்டால் தப்பர்த்தம் ஆகி விடும்.

ஆண்டாண்டு காலமாய்ப் பரம்பரை பரம்பரையாய்க் கல்யாணசுந்தரம் அய்யர் வீட்டுத் திண்ணையில் நடந்து வந்தது ஒரு சீட்டாட்ட சுகானுபவம். கிட்டத்தட்ட கிராமத்துப் பெரிசுகள் எல்லோருமே அதில் அவ்வப்போது பங்கு பெறுவார்கள் என்றாலும் ஒரு நாலைந்து பேர் அதில் நிரந்தர அங்கத்தினர்கள். கிராமத்தில் ஏதாவது காலரா, வைசூரி போன்ற பயங்கரங்கள் எப்போதாவது தலை தூக்கினால் மட்டுமே திண்ணைக்கு லீவு கிடைக்கும். மற்றபடி அடை மழை, அறுவடைக் காலம், கத்திரி வெயில் என்று எதற்கும் லீவு விடுவது வழக்கம் இல்லை. சாக்குப் படுதாவோ, வெட்டிவேர் தட்டியோ, சீசனுக்கு ஏற்றபடி திண்ணை போர்த்திக் கொள்ளும். அல்லது காற்று வாங்கும்.

பண்டிகைக் காலங்களில் தெருவை அடைத்துகத் தென்னங் கீற்றுக் கொட்டகை போட்டு உள்ளே திண்ணையில் குதூகலங்கள் தொடர்வதும் உண்டு.

ஆண்டாண்டு காலமாய்த் திண்ணையில் அரசோச்சி மகிழ்ந்த ஐம்பத்திருவருக்குப் புது வரவாய் வந்தேறிய பிரஸ்னத்தினால் ஏகப்பட்ட நெருக்கடியாகி விட்டது உண்மை. இந்தப் புது பிரஸ்ன பிசினஸ் பிடிக்காத பல நிரந்தரச் சீட்டாட்ட அங்கத்தினர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் பற்கடியோடு பொறுமை காத்தனர். 'மோகம் முப்பது நாள்' மாதிரி இந்தப் 'ப்ரஸ்னம் ஒரே மண்டலத்தில தானாகவே ஓடிப் போயிடும்' என்று பலர் மனப் பால் குடித்தாவர்கள். முகச் சுளிப்புகள் அதிகரித்தன. மாமா சிலேட்டால் முகத்தை மறைத்துக்கொண்டார். சுவடியைச் சத்தம் போட்டு வேறு படிக்க ஆரம்பித்தார். வெற்றிலை, பாக்கு போடாத உறுப்பினர்கள் கூட அடிக்கடி வாசலில் போய்த் துப்பி விட்டுப் பராக்கு பார்த்தபடி சோம்பல் முறிக்க ஆரம்பித்தார்கள். கல்யயணசுந்தரம் கண்டுகொள்வதாயில்லை. 'ப்ரஸ்னேதி கவசம் பாடலி புதரம் இதி மஹா மந்த்ரம்'னு இந்த மகிமை பத்தி அர்த்த சாஸ்திரத்லயே என்ன சொல்றான்னா...' என்று அய்யர் பொழிப்புரையுடன் ஆரம்பிக்கலானார். நொந்து நூலாய்ப் போன மேற்சொன்ன நி. உ. க்கள் வெளிப்படையாகவே கமற ஆரம்பித்தார்கள்.

ஏதாவது புது வரவென்றால் கிராமத்து மைனர்கள் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பார்கள். கண்டு கொள்ளாமல் விட்டுப் பிடிப்பார்கள். ஆனால், மாமாவின் தொடர் ப்ரஸ்னத் தொடுப்பினால் எல்லோருக்குமே ஏகக் கடுப்பாகி விட்டது.

கல்யாணசுந்தரம் அய்யர் சீட்டுக்கும் ப்ரஸ்னத்திற்குமாய் இங்குமங்குமாய் எகிடுதப்பாய்ப் பால் மாறுவது பலருக்கும் பிடிக்கவில்லை.

ஒரிஜினல் சீட்டுத் திண்ணையாக வளர்ந்து மலை போல் நின்ற சிமெண்டுத் திண்ணையில், கொஞ்ச நாட்களாகக் கல்யாணசுந்தரமைய்யர் ஜிலீர் கலீரென்று கண்டமேனிக்கும் சோழிகளை வீசுவதால் ஏற்பட்ட களேபரத்தால், ஆட்டின் குவீன்களும், இஸ்பேடு ராஜாக்களும் திடீரென்று வேட்டிகளுக்கடியிலும் துண்டுகளுக்கு இடையிலுமாகக் காணாமல் போக, சீட்டுக் கிளப் மெம்பர்களிடையே பிரச்னை ஒரு நாள் பெரிசாக வெடித்தது.

எல்லை தாண்டிய ஊடுறுவலை எத்தனை நாள் தான் பொறுத்திருக்க முடியும்? எல்லோரும் வாஜ்பாய் மாதிரி மத்தியானம் தூங்கிக்கொண்டு ஆண்டாண்டு காலமாய் அசமஞ்சமாய் இருந்து ஆட்சியையும் கோட்டை விட்டுப் பேஸ்தடிக்க் முடியுமா?

விசாலமாகப் பெரிதாக இருந்தாலும், இருப்பதோ ஒரே திண்ணை. அங்கே சீட்டா? பிரஸ்னமா? எதற்கு முதன்மை?

இது பற்றித் தீர ஆராய்ந்து உடனே முடிவெடுக்கும்படி உறுப்பினர்களால் ஒரு 'ஒரு நபர் குழு'வொன்று உடனே நிறுவப்பட்டது. அடுத்த ஜமாபந்திக்கு இன்னும் ஆறு மாத காலம் இருப்பதாலும், வேறு உருப்படியான வேலை எதுவுமே இல்லாத காரணத்தாலும், கர்ணம் பதவிக்குரிய பரம்பரை மரியாதையாலும், கிராமத்துக் கர்ணம் கிச்சாமி அக்குழுவின் தலைவரானார். கிச்சாமியின் மூதாதையர் தம் சொத்தில் முக்காலே மூணு வீசத்தைச் சீட்டிலேயே தொலைத்திருப்பதால் அவரே இதற்குத் தக்க தார்மீகத் தலைவர், தம் பக்கமே தீர்ப்புச் சொல்வார் என்று பலரும் உள்ளூர நினைத்ததில் தவறில்லை.

கிச்சாமி ப்ரஸ்னப் பிடாரியை ஊரை விட்டே அடித்து விரட்டப்போவதாகப் பல உறுப்பினர்கள் மனசுக்குள் நினைத்து மகிழ்ந்தார்கள். அவரும் அப்படிச் செய்யத்தான் ஆசைப்பட்டார். ஆனால கல்யாணசுந்தரத்திடம் அவர் கைமாத்தாய் மூவாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருப்பதும், ஏதாவது ஏடாகூடமாகப் 'பதினெட்டுப்பட்டி+அழுக்கு ஜமக்காளம்+நாட்டாமைத் தீர்ப்பு இது தான்யா' என்று சொன்னால் இருக்கிற இரண்டு மா நிலத்தையும், தென்னந்தோப்பையும் கோபத்தில் கல்யாணம் ஜப்தி செய்து விடலாம் என்கிற தொலைநோக்குள்ள நிஜ பயத்தாலும் கிச்சாமி யோசித்து ஒரு நல்ல தீர்ப்பு சொன்னார்.

அதன் வண்ணம் ‘பாதித் திண்ணை சீட்டுக்கு, மீதித் திண்ணை சோழிக்கு’ என்று ஒரு ஜெண்டில்மென்ஸ் அக்ரிமெண்ட் ஒரு வழியாக- பலத்த கோப ஆரவாரங்களுக்கிடையே- ஆர்ஜிதமாகியது.

ஆனாலும், இஸ்ரேல்-பாலஸ்தீன் மாதிரி அதிலும் கசமுசா தொடர்ந்தது. வீசிய சோழிகள் வெறுமனே அந்தரத்தில் நிற்குமா? விசிறியடித்த சீட்டுக்கள் வெகுளியாய்த் தரையில் மல்லாந்து கிடக்குமா? சீட்டுக்கும், சோழிக்கும் லட்சுமண ரேகையா தெரியும்? சாக்பீசால் வரைந்த எல்லைக்கோடு பற்றி அவை கவலையே படவில்லை.

சோழிகள் பாலஸ்தீனத் தற்கொலைப் போராளிகள் மாதிரித் திடீர் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் முன்னேறிச் சீட்டாட்ட வேட்டிகளுக்குள் புகுந்து படுத்தின. கலைத்துப்போட்ட சீட்டுக் கட்டுகளோ இஸ்ரேல் டாங்குகள் போல் சோழிகளின் முன்னேற்றச் சீறலைத் தடைப்படுத்தி அழித்தன. சீட்டு மும்முரத்தில் சாமண்ணா தூள் பகோடா என்று நினைத்துத் தற்கொலைச்சோழிகளை வாயில் போட்டுக்கொண்டு இரண்டு பற்களை இழந்து குழறினார்.

அழிச்சாட்டியமாக வேட்டிக்குள் புகுந்து மர்ம ஸ்தானங்களில் கேலி பேசிக் 'கலீர், ஜிலீரெ'ன்று சிரித்த சோழிகளை அவசரமாக உதறுமுகமாகப் பட்டாமணியம் வேட்டியை அவிழ்த்து உதறப் போக, நடவு வேலை முடிந்து அந்த வழியாக வந்த குடியானவப் பெண்கள் பயந்துபோய் அலற, அன்று காலைதான் வேலியிலிருந்த தன் கோவணத்தைக் காகம் கவர்ந்து போயிருந்ததென்கிற உண்மை அவருக்குத் தாமதமாக நினைவு வர, அதே நேரம் அவருடைய அடிமடியிலிருந்து இரண்டு அதிமுக்கிய துருப்புச் சீட்டுகள் மல்லாந்து வீழ்ந்து அவரைக் காட்டிக்கொடுக்க, 'ஆஹா, திருட்டு படவா" என்று பெரிய பண்ணை சீனு அலற, மொத்தத்தில் ரணகளம். 'விநாச காலே விபரீத சோழீநாம்' என்கிறது ப்ரஸ்னப்ரயோக சாஸ்திரம்.

வார்த்தைகள் தடிக்க ஆரம்பித்தன. கிச்சாமியின் அவசரத் தலையீட்டால் காஷ்மீர அமைதி சில நொடிகளுக்கு நீடித்தது.

ஆனால், "என்னங்காணும் கேயெஸ் அய்யர், எப்பப் பார்த்தாலும் சோழியும் சுவடியுமா பேஸ்தடிக்கிறீர்? ஒழுங்கா ஒரு ஏஸ் கார்டு எறக்கத் துப்பில்லை. பல்ப்பத்தால கிறுக்கிண்டே நேத்திக்குத் துருப்பைப் போட்டுட்டீர்" என்றார் ஒரு ஆயுட்கால நி. உ.

"மோட்டு வளையப் பார்த்துண்டு என்னய்யா சோகமா சம்ஸ்கிருதத்துல பினாத்திண்டிருக்கீர்? க்ளாவர் ராஜாவை எந்த மசிருக்கு எறக்கினீர்?"- ஏற்கனவே சீட்டுச் சேராமல் ஏகக் கடுப்பில் இருந்தது சின்னப் பண்ணை.

வாயில் அடக்கிய புகையிலையைத் துப்பிவிட்டு, வருமுன் காப்போனாகக் கிச்சாமி எதையோ சொல்லுமுன், கோஃபி அன்னன் மாதிரிக் அடக்கப்பட்டுக் கைமர்த்தப்பட்டார்.

"ஓய் கல்யாணம், என் கையில எத்தனை துருப்புச் சீட்டு இருக்குன்னு கரெக்டா ப்ரஸ்னத்தில சொல்லிப்புட்டீர்னாக்க, நான் மொட்டையடிச்சுண்டு ஊரை விட்டே ஓடிடறேன்யா."- இது எதிர் வீட்டு சாமண்ணாவின் கிண்டல் சவால்.

எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

கல்யாணம் மாமாவுக்கு எரிச்சல் தாங்கவில்லை.

'முணு முணு'வென்று ஏதோ மந்திரம் சொல்லி ரோஷத்துடன் சோழிகளை வேகமாக வீசினார். அவை விழுந்து ஓடிக் குலுங்கி நின்றவுடன், தரையோடு தரையாகத் தன் மூக்கைத் தேய்த்து அவற்றின் கோண, பாகை, பாவனை, பிரதேச வாஸ்து எல்லாம் ஆராய்ந்து பார்த்தார். எல்லோரும் இன்னமும் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

சுவடியை நெற்றியில் தட்டிச் சிரித்தபடி கல்யாணம் சொன்னார்: "அடேய் மரமண்டை சாமண்ணா, ப்ரஸ்னப்படி மொத்தம் 3 துருப்பு தான் உன்கிட்ட இருக்கணும். அந்த நாலு கிளாவரையும் துருப்புன்னு நெனச்சுண்டு தப்பாய்ச் சொருகிண்டிருக்காய். தப்பாட்டம் ஆடி இன்னைக்கி வெங்குட்டு கையால செருப்படி வாங்கப் போறாயாக்கும்"

அவ்வளவு நெத்தியடியான மிகச் சரியான யூகத்தைச் சாமண்ணா எதிர்பார்க்கவில்லை. சீட்டுகளை விசிறியடித்தபடி கோபத்தோடு அந்தத் திண்ணையிலிருந்து இறங்கிப்போனவர் போனவர் தான். ஆளையே அப்புறம் காணவில்லை. ஊர்க் கோடியில் நாவிதன் ராசுவிடம் மொட்டை அடித்துக் கொண்டாரா என்கிற மேற்படி விவரம் சரிவரத் தெரியவில்லை.

மொத்தத்தில் சீட்டாட்ட கோஷ்டி நெல்லிக்காய் மூட்டையாய்க் கலைந்து அடுத்த தெரு பட்டாமணியம் வீட்டுக்குக் குடி போனது.

ப்ரஸ்னம் சந்தோஷமாய்த் தனிக் குடித்தனம் ஆரம்பித்தது.

- (இன்னும் வருவார்)

எல்லே இளங்கிளியே, இன்னும் உறங்குதியோ?!

"அப்படி என்னய்யா கும்பகர்ணனாட்டம் ஒரு பேய்த் தூக்கம்? எழுதி எவ்வளவு நாளாச்சு? மார்கழி மாசம் போறக்கப் போவுது, எழுந்திரிச்சுப் பல் வெளக்கிட்டு வாய்யா. சூடா ஒரு பொங்கல், வடை அடிக்கலாம். அப்புறமாச்சியும் உனக்கு சுறுசுறுப்பு கிறுகிறுப்பு வருதான்னு பாக்கலாம்" என்று ஒரு வாசக அன்பர்- பெயர் 'டோண்டு"வாம், செல்லமாக மிரட்டி இருக்கிறார்.

அதென்னங்கண்ணா பேரு 'டோண்டு'ன்னு? சின்ன வயசில எதுக்கெடுத்தாலும் அவங்க வூட்ல "ஏய், டோண்ட் ஸ்டாண்ட் ஹியர், டோண்ட் ஸ்டாண்ட் தேர், டோண்ட் டு திஸ், டோண்ட் டு தட்"ன்னு ரொம்ப மிரட்டி விரட்டினதுல தன் பேரே இனிமே 'டோண்டு'ன்னு அவரே நெனச்சுக்கிட்டார் போல!

(At 11/23/2004 02:45:17 AM, Dondu said... என்ன ஒன்றும் புதிதாகக் காணோம். எல்லே இளங்கிளியே இன்னமும் உறங்குதியோ? .....அன்புடன் டோண்டு)

இதோ விழித்துக்கொண்டு விட்டேன்.

ஜெயேந்திரர் விவகாரம், எம்.எஸ். மறைவு என்று சென்னைச் செய்திகள் சோக ராகம் இசைத்தாலும், 'அமெரிக்க அரசியலி'ன் போக்கு கவலை அளித்தாலும், இஷ்ட தேவதைக்கு ரகசியக் கல்யாண்ம் என்று யாரோ புரளி கிளப்பினாலும் ...

எமக்குத் தொழில் எழுத்து.

அதை சிறப்புறச் செய்வோம். டிசம்பர் 'அமுதசுரபி'யில் வெளிவந்த 'ஜாக் அய்யர்' இங்கேயும் சீக்கிரமே வலம் வருவார்.

என்றும் அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்