என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Wednesday, November 30, 2005

ஹாலிவுட் அழைக்கிறது!

2005 ஜுன்.

முதல் வாரம்.

படு சோம்பேறித்தனமான ஒரு முன்னிரவில் கிழக்கு பதிப்பக ஆசிரியர் பா. ராகவன் என்னைத் தொடர்பு கொண்டு ஒரு புத்தகம் எழுதும்படிப் பணித்தபோது நான் என்ன செய்து கொண்டிருந்தேன்?

நன்றாக நினைவிருக்கிறது. அந்தக் கணம். எப்படி மறக்க முடியும்? முதல் பியர், முதல் முத்தம், முதல் தம், முதல் கசமுசா ரேஞ்சுக்கான பவித்திர கணம் அது.

ஒரு லைனில் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் தன்னுடைய அடுத்த படத்துக்கான திரைக்கதை அமைத்துத் தர என்னைக் கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சிக் கொண்டிருந்த கணம். 'ஆகட்டும், பார்க்கலாம், அடுத்த வருஷம் கூப்டுங்க' என்று அவரை அவாய்ட் பண்ணிக் கொண்டிருந்த கணம். இன்னொரு லைனில் கெஞ்சிக் கொண்டிருந்த மனோஜ் நைட் ஷ்யமாளனை உள்ளேயே புக விடாமல் என் செக்ரடரி போன் மேல் துண்டு போட்டு மறித்திருந்த கணம் அது. வாசலில் ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் சூட்கேசில் டாலர் கத்தைகளுடன் .. ....... .. என்றெல்லாம் நான் பீலா விட்டால் அந்த சரஸ்வதி அம்மாச்சி வீணை மீட்டுவதைச் சற்று நிறுத்தி விட்டு வந்து என்னைப் போட்டுச் சாத்தி விடும்.

அதனால் உண்மை பேசி விடுகிறேன். நான் சொல்வதெல்லாம், உண்மை, உண்மை, உண்மையைத் தவிர புஷ்ஷட்சரம் கிஞ்சித்துமில்லை.

மிகச் சரியாக, நதிமூல, ரிஷிமூல, நான்•பிக்ஷன் மூலமாகச் சொல்வதானால் 2005 ஜுன் முதல் வாரத்து சுபயோக சுபதினங்களில் ஒன்று அது.

அர்ஜெண்டாக முடிக்க வேண்டிய ஆபீஸ் வேலை, அடுக்களைப் பிடுங்கல் ("அமெரிக்கா வந்து இருபது வருஷமாகியும் அடுக்களைப் பக்கமே எட்டிப் பார்க்காத ஒரே ஜென்மம் நீங்க தான்") எதையுமே சட்டை செய்யாமல் நான் வழக்கம் போல் வலை மேய்ந்திருந்தேன்.

அட, என்ன ஆச்சரியம்! சிக்கெனப் பிடித்தார் பாரா என்னை. பிசியாக எப்போதும் மேளம் கொட்டிக்கொண்டோ, எங்கேயாவது சிந்திய எதையோ எப்போதும் அள்ளிக் கொண்டிருக்கும் பாராவைப் பல யுகங்களுக்குப் பிறகு நெட்டில் அன்று சந்தித்தேன்.

"ஏன் ஒன்றுமே எழுதுவதில்லை?" என்று ஏதாவது திட்டுவாரே என்று அடிக்குப் பயந்து நான் “அங்கே மழை பெய்கிறதா?, இங்கே வெயில் அடிக்கிறது. நமீதாவுக்கு நாற்பத்தி ரெண்டாமே, உண்மையா? ” போன்ற லோகாயதமான விஷயங்களைக் கலாய்த்திருந்த கணம் அது.

அப்போது தான் அன்னார் அந்த குண்டைத் தூக்கிப் போட்டார்.

“ராம், நீங்க உடனே ஒரு புத்தகம் எழுதறீங்க”

ஒரு வழியாக 'ஹாலிவுட் அழைக்கிறது!' என்ற தலைப்பில் நான் எழுதுவதாக முடிவானது அப்போது தான்.

ஒரு மகா இலக்கியத்துக்கான விதை எப்படியெல்லாம் துப்பப்படுகிறது, பாருங்கள்!

எதையாவது நாலு லைன் கிறுக்கி அனுப்பினால் இவர்கள் நம்மை விட்டு விடுவார்கள் என்று நான் சிறு குறிப்பு மட்டும் வரைந்து பாகங்களை இணைக்காமல் அனுப்ப, அவர்கள் ஆஹா, ஓஹோ என்று பதிலும் போட்டு விட்டார்கள்:

“ஜுலை மாதம் 8ம் தேதி முழு வேர்டு •பைல் எதிர்பார்க்கறேன்” என்று அவர் சொன்னதும் “டன்” என்று நான் பதில் சொல்லியதும் அப்போது தான்.

வாரக் கணக்கில் என் தூக்கம் தொலையப் போகிறது என்று நித்திராதேவி அட்டகாசமாக ம்யூட்டில் பேய்ச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்ததை நான் அப்போது கவனிக்கவில்லை.

ஜுலை வந்தது. புத்தகம் எழுத மறந்தே போனது.

பார்த்திப வருஷ வீராணம் மாதிரி அமெரிக்காவில் வீட்டு விலைகள் அட்டகாசமாக ஏறிக் கொண்டிருப்பதால் இருக்கிற வீட்டை விற்று விடலாம் என்ற குடும்ப கோரஸ் திட்டம் போட்டோம்.

அதை அமல்படுத்துவதற்காக, ப்ரோக்கருடன் பேச்சுவார்த்தைகள், பேர இழுபறிகளில் நேரம் போனது. இருக்கிற வீட்டைப் பளிங்கு மாதிரித் துடைத்து வைத்து விட்டு நாங்கள் தற்காலிக அகதிகளாகப் பிராணாவஸ்தைகள் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் புத்தகமாவது, எழுதுவதாவது?

தப்பித் தவறி ரகசியமாக நான் பின்னிரவில் கீபோர்டைக் கைப்பிடித்தால் தாம்பத்ய விரிசல் ஏற்பட்டு விடாதோ?

ஜுலை முடிவதற்குள் வீடு விற்று விட்டது. நாங்கள் அ•பிஷியல் ஹோம்லெஸ் ஸ்டேட்டசை அடைந்தோம்.

"ஹா, ஜாலி. அத்தனை பேரும் கிளம்பி உடனே அலாஸ்கா வெகேஷன் போய் விட்டு வரலாமா?" என்றது பொறுப்பான என் குடும்பம்.

படிக்கிறவர்கள் துணுக்குறக் கூடாது.

இருக்கிற வீட்டை அவ்வப்போது நல்ல கிரயத்துக்கு விற்று விட்டு லட்டு, காராபூந்தி சாப்பிட்டபடி ஊர் சுற்றுகிற கலாச்சாரம் அமெரிக்கக் கலாச்சாரம் அய்யா. அமெரிக்காவில் சொந்த வீடாவது, மண்ணாங்கட்டியாவது?

மாயவரத்துப் பக்கத்திய நல்லத்துக்குடி கிராமத்தில் நான் பிறந்த அழுக்குப் புராதன ஓட்டு வீட்டில் இன்றைக்கும் யாராவது ஒரு ஆணி அடித்தால் இங்கே எனக்கு மாரடைப்பே வந்து விடும். "பொங்கலுக்குக் காவி, சுண்ணாம்பு அடித்தார்களோ இல்லையோ? கீழண்டைப் பக்கத்து வேலி கொஞ்சம் சாய்ந்து கிடந்ததே, ஆடு உள்ளே புகுந்தால் மல்லிச்செடி என்னாகும்?" என்று பழைய வீட்டுப் பாசம் பத்தாயிரம் மைல் கடந்து இப்போதும் பீறிடும்.

அமெரிக்காவில் வீடு என்பது ஒரு இன்வெஸ்ட்மெண்ட் ப்ராப்பர்டி. அவ்வப்போது விற்று விட்டு, அதிக விலையில், அதிகக் கடனில் அத்தனை பேரும் மூழ்கவேண்டும் என்பது அமெரிக்க நிர்ப்பந்தம்.

******************

'புத்தகம் எழுதுகிறேன் பேர்வழி' என்று நான் அலாஸ்கா தேசத்து ஜில்லழகுச் செல்லங்களுக்கு ஏன் வேர்ப்பதே இல்லை என்று மனக்கட்டுரை எழுதிக் கொண்டிருந்தேன். அவ்வப்போது மனச்சாட்சி என்னைச் சாடினாலும், க்ரூயிஸ் போயிருந்த கப்பலில் எல்லாக் கவலைகளையும் மறக்கடிக்க எத்தனையோ சாத்தியங்கள் காத்திருந்தன.

ஆனாலும், எத்தனை நாளைக்குத்தான் சால்ஜாப்பு சொல்லிக் கொண்டிருக்க முடியும்?

செப்டம்பர் வந்ததும் எனக்குப் பயம் வர ஆரம்பித்து விட்டது.

ஹாலிவுட் என்பது மிகப் பெரிய சப்ஜெக்ட் என்பது அப்போது தான் 'சுரீரெ'ன்று உறைத்தது.

என்னவோ கடுகைத் துளைத்தோ, அணுவுக்குள் ஆக்கர் அடித்தோ ஏழு கடலைப் புகட்டியதாகச் சொல்வார்களே, அந்த மாதிரியான திருக்குறள் லெவல் வீரத் தாடி விளையாட்டு இது என்பது எனக்குப் புரிய ரம்பித்ததும் நான் கவலைப்பட ரம்பித்தேன்.

நடுரோட்டில் ரசிகர் பட்டாளம் வழிமறித்து அயர்ன் பாக்ஸ், ஆட்டோகிரா•ப் கேட்குமளவுக்கு நான் பிரபலம் காவிட்டாலும், எனக்கு ஹாலிவுட்டோ தமிழ் சினிமாவோ புதிதல்லவே!

1980-களிலேயே தமிழ் சினிமாப் பத்திரிகைகள் 'யார் இந்தப் புதுமுகம்?' என்று குறுகுறுப்புடன் கேட்க ஆரம்பித்தன. தமிழ் சினிமா நல விரும்பிகள் உடனே அமெரிக்கன் கான்சலேட்டில் சொல்லி வைத்து என்னை லாஸ் ஏஞ்சல்சுக்குப் பேக்-அப்' பண்ணி விட்டார்கள்.

'எங்கேயோ கேட்ட குரலி'ல் நான் தலைவர் ரஜினியோடு செகண்ட் ஹீரோவாக நடித்ததையோ, P. வாசுவின் முதல் படம் 'பன்னீர் புஷ்பங்கள்' எனக்கும் முதல் நடிப்புலகப் பிரவேசமாக இருந்ததையோ, சல்மான் கானை முந்திக்கொண்டு 'ஜீன்சி'ல் நான் ஐஸ்வர்யா ராயின் கைத் தலம் பற்றியதையோ சம்பந்தப்பட்ட பிரபலங்கள் மறந்து விட்டாலும், நான் மறப்பதாயில்லை.

"1985-ல கமலோட நான் .. .." என்று ஆரம்பித்தால் என் பெண் அழுதே விடும்.

என் தமிழ் காமெடி நாடகங்கள் கமர்ஷியலாக இங்கே வெற்றி பெற ஆரம்பித்ததும், "சார் இதை அப்படியே ஒரு க்ராள் ஓவர் சினிமாவாப் பண்ணினீங்கன்னா சூப்பரா இருக்கும். இந்தியில பண்ணுவீங்களா?" என்று சில வடக்கத்திய சேட்டுகள் எனக்கு ஜால்ரா போட ஆரம்பித்தார்கள்.

சரி, நிஜமாகவே ஹாலிவுட் சினிமா பற்றி, சினிமாவின் எல்லாத் துறைகளையும் பற்றிப் பராக்டிகலாகக் கற்றுக் கொள்வோம் என்று நான் இங்கே 'லாஸ் ஏஞ்சல்ஸ் •பிலிம் ஸ்கூலி'ல் சேர்ந்து ஹாலிவுட் சினிமா பற்றிக் கற்றுக் கொண்டேன்.

அடியேன் சினிமாப் படிப்பு பற்றி முறையாகக் கற்றுக்கொண்ட இடம், Los Angeles Film School. அவ்விடம் பற்றிய பாச மிகுதியால், கொஞ்சம் ரீல் சுத்திப் பட்டம் விட்டுக் கொள்ளட்டுமா?

1. என் சாதனைகளைக் கண்டு வியந்த கல்லூரி நிர்வாகம் என்னை இக்கல்லூரியில் சேரும்படி கோரிக்கை வைத்து ஹாலிவுட் புலவர்டில் தர்ணா செய்தது.

2. எங்கே நான் ஒழுங்காகப் படித்து முடித்துத் தனக்குப் போட்டியாக வந்து விடுவேனோ என்கிற பயத்தில் ‘டைட்டானிக்’ இயக்குனர் ஜேம்ஸ் காமெரான் என்னை வீட்டுக்கு அனுப்பும்படிக் கல்லூரியைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.

3. ஓரளவு சினிமா தெரிந்தவன் என்கிற முறையில் எனக்கு அங்கே முழு ஸ்காலர்ஷிப் கிடைத்தது.

முதலாவது ரீல், இரண்டாவது பட்டம், மூன்றாவது முழு உண்மை.

தப்பித் தவறி நான் ஏதாவது நல்ல சினிமா எடுத்துவிட்டால் அதை வைத்துத் தன்னை விளம்பரப் படுத்திக்கொள்ள என்னிடம் கல்லூரி நிர்வாகம் ஒரு அக்ரிமெண்ட் கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு அந்தக் கஷ்ட காலம் வெகு விரைவில் ஆரம்பிக்கப் பிரார்த்தியுங்கள்.

**************

அட, எங்கேயோ போயிட்டன்ல? இந்த சினிமாக்காரனுங்களே இப்படித்தான். சுய புராணம் ஆரம்பிச்சாங்கன்னா, ப்ளாக்கே பத்தாது.

புக்குக்குத் திரும்பி வருவம்.

பல ஹாலிவுட் படங்களில் எப்படி முறையாகத் தொழில் பண்ணுகிறார்கள் என்பதை எல்லாம் பக்கத்திலே இருந்து பார்க்கின்ற சில அனுபவங்கள் எனக்குக் கிடைத்தன. பிரம்மாண்டமான ஷ¤ட்டிங்குகள், விலை உயர்ந்த காமெரா சாதனங்கள், எடிட்டிங் முறைகள், சில பெரிய ஹாலிவுட் ஸ்டார்களின் நட்பு என்று ஒரு கலந்து கட்டியான அனுபவம் கிடைத்தது.

ஸ்கிரிப்டின் ஒழுங்குமுறை புரிந்தது. கால்ஷீட்டின் விவரம், காரணம் புரிந்தது.

தமிழ் நாடகம் எழுதுவது ஜுஜுபி. ஒழுகாத ஒரு பால் பாயிண்ட் பேனாவும், •புல்ஸ்கேப் வெள்ளைப் பேப்பரும், வெற்றுச் சுவற்றை உற்றுப் பார்க்கிற திறமையும் இருந்தால் போதும். சரசரவென எழுதிப் போட்டு விடலாம்.

ஆனால் ஹாலிவுட் ஸ்கிரிப்ட் எழுதக் கணினித் திறமை, மென்பொருள் விவகாரங்கள் போன்ற வில்லங்கமான விஷயங்களும் தேவையாக இருப்பதால் மேட்டர் மிகவும் சீரியசாக ஆகி விடுகிறது. ஆக்டர் பெயரை போல்டில் போட வேண்டுமா, கேப்பிடலிலா, எந்த இடத்தில், என்றெல்லாம் யோசிக்க ரம்பித்தால் ஊறுகிற கொஞ்ச நஞ்ச கற்பனையும் சென்னைக் கார்ப்பரேஷன் குழாயாக வற்றி விடும்.

அதையெல்லாம் தாண்டித்தான் வர வேண்டி இருக்கிறது. அப்புறம் பட்ஜெட், ஷெட்யூல், சினிமாட்டோகிரா•பி, •பில்டர்கள், எடிட்டிங், போஸ்ட் ப்ரொடக்ஷன், கலர் கரெக்ஷன், ப்டிகல்ஸ், அனிமேஷன் என்று மண்டை காயவைக்க ஆயிரத்தெட்டு சமாச்சாரங்கள் இருக்கின்றன.

நான் இன்னமும் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் இங்கே மிக அதிகமாக இருப்பது புரிகிறது. புதுப் புதுப் புரட்சிகள், மிரட்டலான சங்கதிகள் நடப்பது தெரிகிறது. ஒரு மனித வாழ்வில் இத்தனையையும் தெரிந்து கொண்டு விட முடியுமா என்கிற பயமும் ஏற்படுகிறது.

இருந்தாலும், 'ஹாலிவுட் நம்மை, நம் இந்தியனை, நம் தமிழனை அழைக்க ஆரம்பித்து விட்டது' என்பதை நான் மனதார நம்புகிறேன்.

பத்து வருஷம் முன்பு செல் போன் என்ற வார்த்தையே கிடையாது. இப்போது அது இல்லாத கை வண்டிக்காரர் கூடக் கிடையாது. உள்ளங்கை அகல 'ஐபாட்'டில் டெலிவிஷன் தெரிய ஆரம்பித்து விட்டது.

டெக்னாலஜியின் அசுர வளர்ச்சியில் ஒன்று மட்டும் தான் நிச்சயம். "அலை வருமா, ஆழமாக இருக்குமா?" என்றெல்லாம் மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள். கொஞ்சம் புத்திசாலித்தனமாகத் தயாராக இருப்பவர்கள் கரை சேர்ந்து விடலாம்.

நம் தமிழ் ரசிகர்கள் உலக சினிமா பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், நம் சினிமாத் தொழிலாளர்கள் புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும், நம் வியாபாரிகள் உலகளாவிய திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும்" என்கிற உண்மையான ஆதங்கத்தினால் தான் இரவு பகலெல்லாம் கண் விழித்து எழுதி இருக்கிறேன்.

இந்தப் புத்தகம் எழுதுவதற்காகப் பலப் பல விஷயங்களை நான் ஆராய்ந்து பார்க்க நேரிட்டது.

பல பெரிய ஸ்டூடியோக்களைத் தொடர்பு கொண்டு, 'நான் யார், என் குலம், கோத்திரம் என்ன, தமிழ் என்றால் என்ன? நான் ஏன் வேலை மெனக்கெட்டு எழுதுகிறேன்?" என்பதை எல்லாம் அசட்டு நீலக்கண் அழகு அரக்கிகளிடம் புலம்பிக் கெஞ்சிக் கொஞ்சம் கொஞ்சமாக விவரங்கள் சேர்க்கும்படி ஆயிற்று.

அஷோக் அமிர்தராஜைப் பேட்டி காண அவர் செக்ரட்டரி ஷேரனிடமும், அவருடைய வெள்ளைக்கார எடுபிடிகளிடமும் நான் தமிழ் சினிமாப் பால பாடம் எடுக்க நேர்ந்தது. அஷோக் என் பழைய நண்பர் என்பதால் ஜாலியாகப் பேட்டி எடுக்க முடிந்தது.

"அய்யா, ராசா, உங்க சா•ப்ட்வேர் மகிமயப் பத்தித்தான்யா எழுதறேன். எதுனா கொஞ்சம் ஸ்கிரீன் ஷாட்சாவது தானம் பண்ணுங்கய்யா" என்று மென்பொருள் கம்பெனிகளிடம் ராப்பிச்சை கேட்க நேர்ந்தது.

பல வெள்ளைக்காரர்களுக்கு இதையெல்லாம் புரியவைக்க எனக்கு ஒரு இருபது வருஷமாகும் என்பதால் வெறும் கும்பிடோடு நான் விட்டு விட்ட கதைகளும் உண்டு.

அபிராமபுரம் நான்காவது தெருவிலிருந்து அமெரிக்கன் •பிலிம் மார்க்கெட்டுக்கு வந்திருந்த தமிழ்த் தயாரிப்பாளரைப் பார்த்துக் குசலம் விசாரித்தது, 500 மில்லியன் டாலர்கள் வியாபார சாகசங்களைப் பார்த்து மலைத்தது, லைப்ரரி லைப்ரரியாக ஏறி நிறையப் படித்தது, தேடித் தேடி நெட்டில் விவரங்கள் சேர்த்தது, எந்நேரமும் இதே நினைவில் எல்லோரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டது என்று எல்லாமே ஒரு கலந்து கட்டியான அனுபவமாக இருந்தாலும், இதெல்லாம் சேர்ந்த அனுபவம் ஒரு புத்தகமாக வெளிவருவது பெரிய ஆனந்தம்.

பின்னிரவுக் குளிர்த் தனிமையில் நடு முதுகு வலிக்க வலிக்க எழுதினாலும், கழுத்தில் புதுப்புது நரம்புகள் ஆங்காங்கே புடைத்துக் கொண்டாலும், அவ்வப்போது எட்டிப் பார்க்கும் குடும்பத்தினர் என் மனநிலை பற்றி மிக வருத்தப்பட்டாலும், ஆபீஸ் கேள்விகளின் நடுவே நான் கற்பனை வயப்பட்டு 'ஙே' என்று விழித்தாலும், இந்தப் புத்தகம், இத்தனை குண்டுப் பாப்பாவாக, அழகாக சுகப் பிரசவம் ஆவது எவ்வளவு சந்தோஷம்!

என்னைத் தொடர்ந்து தொணதொணப்பிப் பட்டை தீட்டி வேலை வாங்கிய நண்பர் பா. ராகவனுக்கு நான் எப்படி நன்றி சொல்லப் போகிறேன்?

"என்ன பாரா சார், ஒரு சீக்வெல் போட்ருவமா? நாடு தாங்குமா? கல்லு எறிஞ்சாங்கன்னாக்க பத்தாயிரம் மைல் தூரம் வராதில்ல?!"

***********

ஆங், சொல்ல மறந்து விட்டேனே! புத்தகம் 2006 ஜனவரி சென்னை புக்•பேரில் வெளிவருகிறது.

உங்கள் அன்பையும் ஆதரவையும் என்றென்றும் நாடும்,
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்