என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Tuesday, December 14, 2004

ஜாக் அய்யர் -2

ஒரு நாள் கேயெஸ் தனியே தன்னந்தனியே ‘அட்வான்ஸ் லெவல்’ சோழி பார்த்துக் கொண்டிருந்தார். அய்யருக்கு அப்போது தான் அந்த ஐடியா ‘பளிச்’சென்று வந்தது.

"கோமதி, சீக்ரமா இங்க வாம்மா ஒரு நிமிஷம்".

மாமிக்கு நிறை மாசம். மூச்சு வாங்கியபடி மெதுவாக வந்து கதவருகே நின்றாள்.

"உன் கொழந்தை ஜாதகத்தை ப்ரஸ்னத்தில பாக்கறேன். அப்படியே கெழக்கால பார்த்து நில்லு."

"நமக்கு எதுக்கு அதெல்லாம்? ஈஸ்வர கிருபையில எல்லாம் நல்லபடிதான் ..." மாமி சொல்ல வந்ததை முடிக்குமுன் சீட்டுத் தொந்தரவு இல்லாத புதிய திண்ணையில் சோழிகள் விஸ்தாரமாக ஓடி ஆடிக் குலுங்கி நின்றன.

சோழிகளை அப்படியும் இப்படியுமாகப் பல கோணங்களில் பார்த்தார் கேயெஸ். நெற்றியைச் சுருக்கினார். உதட்டைப் பிதுக்கினார். "அந்த வெற்றிலைச் செல்லத்தையும் ஒரு சொம்புல ஜலமும் கொண்டு வா. இன்னிக்கி அரிசி உப்புமாவில வெங்காயம் போடாத. சஷ்டி." என்றார்.

மாமிக்கு வயிற்றைப் பிசைந்தது. "உப்புமாவும் வெத்திலையும் இருக்கட்டும். சஸ்பென்சா நிறுத்தாம நல்ல வார்த்தையா சொல்லுங்கோ"

"கவலைப்படாத, கோமதி. அந்தப் பூரி ஜெகந்நாதன் தான் வந்து பொறக்கப் போறான். பையன் ஓகோன்னு படிப்பன். அடேயப்பா எத்தனை படிப்பு? அவனுக்கு ஏத்த படிப்பே கோனேரிராஜமங்கலத்திலயோ திருநெல்வேலியிலயோ என்ன, இந்த நாட்டில கெடையாதுன்னா பாத்துக்கோயேன். கொழந்தை வெளி நாட்டில எல்லாம் போய் படியோ படின்னு படிச்சுப் பட்டம் வாங்கப் போறான்."

அடி வயிற்றைத் தடவியபடியே கோமதி மாமி அதற்குள்ளேயே கவலைப்பட ரம்பித்து விட்டாள். "ஏன்னா, வெளி நாட்ல எல்லாம் ரொம்பக் குளிருமாமே. கொழந்தை சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவன்? அவனைப் பிரிஞ்செல்லாம் என்னால தனியா இருக்க முடியாது"

"சரி சரி. அதுக்கென்ன இப்போ? உள்ள போய் நன்னா குளிர் தாங்கறாமாதிரி கொழந்தைக்கு ஒரு ஸ்வெட்டர் பின்னு"

கோமதி மாமி அந்தண்டை போனவுடன், கேயெஸ் அய்யர் என்கிற திருநெல்வேலி கல்யாணசுந்தரமய்யர் வெகு நேரம் சோழி போட்டுப் பார்த்தபடி தனக்குள் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தார்.

******* ******** *********

ஹைஸ்கூலில் அடுத்த வகுப்புக் கரும்பலகைகளிலெல்லாம் தொடர்ந்து எழுதுமளவுக்குத் தன் பெயர் பெரிசாக, வளர்த்தியாக இருந்ததில் ஆரம்பத்தில் ஜெகனுக்குக் கொஞ்சம் பெருமையாகக்கூட இருந்தது. வெறும் 'சுரேஷ், ரமேஷ், சுப்பிரமணி' எல்லாம் ஜெகனுடைய பெயர்ப் பிரலாபத்தைப் பார்த்துப் பொறாமைப்பட்டார்கள். ஆனால் பிற்காலத்தில் 'கோனேரிராஜமங்கலம் ஜெகன்னாதன் கல்யாணசுந்தரம்' என்கிற மொத்தப் பெயரைச் சுமந்துகொண்டு அவன் படாத பாடில்லை.

படிப்பு, படிப்பு, சதா படிப்பு. அப்பா கேயெஸ்ஸ¥ம் காலாண்டு கணக்குப் பரீட்சையில் "ஜெகன், இந்தத் தடவை சயின்சுல 100க்கு 93 தான் வாங்கப் போறாய். ஆனாக்க, கணக்குல செண்டம். சோழி அப்படித்தான் சொல்றது" என்கிற அளவுக்கு முன்னேறி இருந்தார்.

புதுப்புது சோழி செட்டுக்கள் கொல்கத்தா, கொரியா என்று என்கிருந்தெல்லாமோ- எரும்பு சைசிலிருந்து ஆமை சைஸ் வரை- வரவழைக்கப்பட்டன.

கேயெஸ்ஸின் அட்வான்ஸ்டு சோழிகள் ‘பிஹெச்டி’ லெவலில் பேச ஆரம்பித்து விட்டதால் அந்த வீட்டுத் திண்ணை இன்னமும் இடித்து விரிவாக்கப்பட்டது. "ஞான சம்ஸ்காரார்த்தம் வெகுஜனப் பிரயோசனம்" என்று சம்ஸ்கிருதத்தில் என்னவோ சொல்லிக்கொண்டு கேயெஸ்ஸ¤ம் தன் இலவச சோழிப்ரஸ்ன ப்ராக்டீசை இன்னமும் விரிவுபடுத்தினார்.

சென்னை, பம்பாயிலிருந்தெல்லாம் ரயிலேறி வந்த மக்கள் சோழி ஜோசியம் கேட்க் ஆரம்பித்தார்கள். யாரிடமும் ஒரு தம்பிடி கூட வாங்கியதே இல்லை. ஊர்க்காரர்கள் தத்தம் விசுவாசத்தைக் காட்டுவதற்காக அதே திண்ணையில் பலாமுசு, பூசணி, புடலங்காய், மாம்பழம் என்று எதையாவது கொண்டு வந்து இறக்கி விட்டுத்தான் மறு காரியம் பார்த்தார்கள். கேயெஸ் வேண்டாமென்று எவ்வளவு தடுத்தாலும் யாரும் கேட்பாரில்லை.

வெளியூர்க்காரர்கள் செக் புத்தகத்தை வெளியே எடுத்தால், கல்யாணம் தனக்கு எதுவும் வேண்டாமென்று தடுத்துப் பக்கத்துக் கிராமங்களில் ஏதாவது நலிவுற்ற கோவில்களுக்கு நன்கொடையாகக் கொடுக்கச் சொல்லி விடுவார்.

"பரவாயில்லை. ஏதாவது கொஞ்சம் கேஷாவது வாங்கிக்கணூம், எவ்வளவு சரியா எல்லாம் சொல்றேள்" என்று யாராவது ஆரம்பித்தால், "அய்யோ, நான் பணத்தைக் கையால கூடத் தொடறதில்லை. எல்லா பாபத்துக்கும் அது தான் ரிஷிமூலம், எங்கயாவது நொண்டிப் பிச்சைக்காரனுக்குக் கொண்டுபோய்க் குடுத்துடுங்கோ" என்பார் கல்யாணம்.

********* ********* *********


கான்பூர் ஐஐடியில் ஆளாளுக்குத் தன் பெயரை ரேக்கியதில் ஜெகன் கே. எஸ். என்று அபத்தமாக சுருங்கிப் போயிருந்தான். நியூமராலஜியை ஏன் விட்டுவைக்கவேண்டும், அதிலும் கரை சேர்வோமா என்று ஊரில் கல்யாணம் யோசித்துக் கொண்டிருந்தார். வாராவாரம் பிள்ளைக்காக ஏதுனும் பட்சணம் பார்சல் அனுப்புவதில் கோமதி மாமி மும்முரமாய் இருந்தாள்.


இந்த நிலையில்தான் மாமாவுக்கு ஒரு நாள் அவருடைய ஒரே பிள்ளை அமெரிக்கா போகப் போவதாகக் கடிதம் எழுதியிருந்தான். என்னதான் பல வருஷங்களாக எதிர்பார்த்த விஷயமென்றாலும், வயசான தம்பதிகளுக்கு அந்தக் கடிதம் வயிற்றில் புளியைக் கரைத்தது. தன் சோழி மீதே நம்பிக்கை இல்லாமல் எதற்கும் இருக்கட்டும் என்று பையனுக்காகத் தாழையூத்து சிமெண்டு பேக்டரியில் மேனேஜர் வேலைக்குச் சொல்லி வைத்திருந்தார். அது வீணாகி விடுமென்று அவருக்கே உள் மனதில் பட்டது.

"சரி, அதனாலென்ன? ஜெகன் எப்போ திரும்பி வருவான்னு பார்க்கறேன் பார்" என்று ஒரு தடவை சோழிகளை உருட்டிப் போட்டவர் சற்று நேரம் ஒன்றுமே பேசவில்லை. "வர வர இந்தப் •பாரீன் சோழியெல்லாம் சரியா இருக்கறதில்லை. அவாள்லாம் சுத்த பத்தமா இருக்கற்தில்லையோல்லியோ அதனால தான்" என்றார்.

மாமிக்கு ஏதோ புரிந்தும் புரியாதது போல் கொஞ்சம் கலவரமாயிருந்தது. மேற்கொண்டு அவரிடம் எதையாவது கேட்டு, அவர் அபசகுனமாக ஏதாவது சொல்லி விடுவாரோ என்று பயந்து, "நான் கோவிலுக்குப் போய் அம்பாளுக்கு நெய் விளக்கு ஏத்திட்டு வரேன்" என்று கிளம்பினாள்.

அந்தத் திண்ணையில் அய்யர் மட்டும் சோழிகளை மறுபடி மறுபடி வீசிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

---------- ---------- ----------

அமெரிக்கன் கான்சலேட்டின் அதீத ஏசிக் குளிரிலும் ஜெகனுக்கு வியர்த்திருந்தது. அங்கே வேலை செய்யும் ப்ரௌன் சாகிப்புகள் எட்டடி உசரத்தில் பறந்து கொண்டு கீழ்க் கண்ணாடி வழியாக ஏதோ தொற்றுவியாதிக் கிருமியை மைக்ராஸ்கோப்பில் பார்ப்பது போல் எல்லோரையும் கேவலமாகப் பார்த்துத் தங்களுக்குள் மட்டும் ஏதோ ஜாடையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அபரிமிதமான ஆக்ஸெண்ட் அசத்தல் வேறு சேர்த்து எல்லோரையும் படுத்தினார்கள்.

அங்கே ஏற்பட்ட புதுப் பெயர்க் குளறுபடியில் 'ஜெகன் நேதன் கே.சுந்தரம்' என்று மறு பிறவி எடுத்தான் ஜெகன். எதிர்த்து ஏதாவது பேசினால் ஸ்டூடெண்ட் ஸ்காலர்ஷிப் விசாவைத் திரும்பப் பிடுங்கிக் கொண்டு அடித்து அனுப்புவார்களோ என்கிற பயத்தில் அவன் வாயையே திறக்கவில்லை.

அடுத்த வாரமே அமெரிக்கா போக ஏற்பாடாகி விட்டது. அப்பாவும் அம்மாவும் ஆம்னி பஸ் பிடித்துச் சென்னை வந்திருந்தார்கள். ஏர்போர்ட் கூட்டமே அவர்களுக்கு மிரட்சியாக இருந்தது. தாமிரபரணித் தண்ணீர் தவிர எதுவுமே குடித்திராத அவர்களுக்குச் சென்னைக் குடிநீர் குமட்டிக்கொண்டு வந்தது.

"செப்டர்ல காலேஜ் தொறக்கறதுப்பா. அங்க காலேஜுக்கெல்லாம் ஸ்கூல்னு தான் பேர். பதினெட்டு மாசம் கோர்ஸ். னா நான் ஒரே வருஷத்துல் எம். எஸ் முடிச்சுடுவேன். உடனேயே திரும்பி வந்துடறேன்ப்பா. அம்மாவை ஜாக்கிரதையாப் பார்த்துக்கோ"

"ம்ம்ம்" என்றார் கல்யாணசுந்தரம் அய்யர்.

"அப்பா ஏன்மா சரியாவே பேச மாட்டேங்கறார்? என் கிட்ட ஏதாவது கோவமா? நான் வேணும்னா இந்த ட்ரிப்பையே கேன்சல் பண்ணிடட்டுமா? அப்பா சோழி கொண்டு வந்திருக்காரா? ஏர்போர்ட்ல ஒரு ஓரமா தரையத் தொட்ச்சுட்டு சோழி போட்டு நான் எப்ப திரும்பி வருவேன்னு பார்த்து சொல்லச் சொல்லேன். நீயும் ஏம்மா உம்முன்னு இருக்கே? எனக்குக் கலவரமா இருக்கும்மா'

"அப்பா இப்பல்லாம் கொஞ்ச நாளா சோழி பார்க்கறதையே நிறுத்திட்டார்டா ஜெகன். நான் ஏன்னு கேட்டா ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறார். இப்ப வர்ர சோழியெல்லாம் சுத்த பத்தமா இல்லையாமே. வாசல்ல யாருமே இப்ப வந்து அப்பா கிட்ட எதுவும் கேக்கறதும் இல்லை".

சென்னை ஏர்போர்ட்டிலிருந்து ஊர் திரும்பி வந்து ஏதோ ஜுரமென்று படுத்தவர் தான் கலயாணசுந்தரம். ஜூர வேகத்தில் ஒரு நாள் தன் முடிவு என்னவாகுமென்று தெரிந்து கொள்ளவேண்டி வீசிய சோழிகளை வெறித்துப் பார்த்தபடி திண்ணையிலேயே கண்ணை மூடியவர் பிறகு திறக்கவேயில்லை.

********* ********* **********

அப்பா செத்ததற்குக்கூட ஜெகனால் அமெரிக்காவிலிருந்து வர முடியாமல் போயிற்று. விசாவில் ப்ராப்ளம். •ப்ளைட் கிடைக்கவில்லை. ஸ்கூலில் நெருக்கடி. க்ரெடிட் கார்டில் பணமில்லை. இப்படி எத்தனை எத்தனையோ கஷ்டங்கள் ஒன்றாகச் சேர்ந்து அவனைத் தாக்கிய கெட்ட நேரம் அது.

அமெரிக்க வாழ்வில் அநித்திய சாத்தியங்கள் ஏராளம். விசா கிடைத்து ஆகாய விமானத்தில் ஏறி முதன்முதலாக வெளிநாடு சென்றது தனக்கு நேர்ந்த மிகப் பெரிய அதிர்ஷ்டமா அல்லது மாபெரும் துரதிர்ஷ்டமா என்று தனக்குத்தானே அவன் அடிக்கடி கேட்டுக்கொண்டான்.

அவசர அவசரமாக ஊரில் அப்பாவுக்குக் காரியங்களைப் பண்ணி முடித்து விட்டார்களாம். 'இனிமேல் போய் என்ன செய்யப் போகிறோம்?' என்று தன்னையே அவன் நொந்து கொண்டான். அம்மாவிடம் டெலிபோனில் எத்தனை தடவை பேசினாலும் பழைய அம்மாவைக் காணவேயில்லை. முதலில் தினமும் டெலிபோன் செய்தான். அப்புறம் அம்மாவே "எதுக்கடா இப்படிச் செலவு பண்றே. வாரம் ஒரு தடவை கூப்பிடு. போதும்" என்றாள்.

சில சமயங்களில் ஜெகன் போன் பண்ண ஒரு மாதம் கூட ஆகி விடுகிறது. அம்மாவும் ஏதோ மடத்து ஆசிரமத்தில் சேர்ந்து விட்டாளாம்.

'அடுத்த வருடம் திரும்பி விடலாம், அதற்கடுத்த வருடம் கட்டாயம்' என்று ஜெகன தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தாயிற்று. படித்து முடித்தவுடனேயே திரும்பித் தொலைத்திருக்கவேண்டும். டிரெய்னிங், மேற்கொண்டு அட்வான்ஸ்டு டிரெய்னிங்....எல்லாம் மாய வலை. எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்டாயிற்று.

வேரோடு புலம் பெயர்ந்து விட்டதில் வேதனை மட்டுமே மிச்சமானது.

அமெரிக்கத் தற்காப்பு நிறுவனங்களில் பணிபுரிய வேண்டுமானால் குடியுரிமை கட்டாயம் வேண்டும். குடியுரிமைக்காக ஜெகன் ‘ஜாக் அய்யர்’ ஆனான்.

எம். எஸ் முடித்துப் பிஹெச்டி பண்ணி ஏரோநாடிகல் எஞ்சினீயரிங்கில் அமெரிக்காவின் மிகப் பெரும் மூளையென்று புகழப்பட்டு, வெள்ளைக்காரி ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளவேண்டிய எதிர்பாரா இக்கட்டில் ஆழ்ந்து, ஒரே வருடத்தில் டைவர்சும் ஆகி முடிந்து, அவளுக்கு மாதாமாதம் 'அலிமனி'யும், வாராந்தரக் கடைசிகளில் மட்டுமே தன் பெண்ணுக்கு அப்பாவுமாக ஆகிப் போய் அதற்காக அவன் இன்னமும் அந்த அமெரிக்க மேற்குக்கரையோரப் பீச்சாங்கரையில் அடிக்கடி அழுது கொண்டிருப்பது பெருஞ்சோகமா, விதியா, தலையெழுத்தா தெரியவில்லை.

நல்ல வருமானம், சொந்த வீடு, கார், பணம் என்று இருந்தாலும் அதற்கப்புறம் ஜாக் அய்யர் மறு கல்யாணம் பண்ணிக் கொள்ளப் பிரியப்படவில்லை. இந்தியாவுக்குப் போகவும் மனசில்லை.

‘பேசாமல் தாழையூத்திலேயே ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தால் அப்பா இன்னமும் உயிரோடு இருந்திருப்பாரோ? அம்மா என்னமாய் சமைத்துப் போடுவாள்? கோனேரிராஜமங்கலத்தில் எல்லோரும் எவ்வளவு அன்பாக இருப்பார்கள்? வாசலில் எந்நேரமும் எத்தனை கொண்டாட்டமும், சிரிப்பும், கும்மாளமும்? எல்லாவற்றையும் ஏன் இப்படித் தொலைத்து விட்டேன்? இத்தனையும் எதற்காக இழந்தேன்? இங்கே அமெரிக்காவில் யாராவது நன்றாகச் சோழி பார்த்துச் சொல்லக்கூடியவர்கள் இருக்கிறார்களோ?’ - ஏகப்பட்ட நினைவலைகள் மன ரணங்களைச் சீண்டிக்கொண்டே உப்புக்காற்றில் கண்ணிலும் மனசிலும் எரிச்சலூட்டின.

"என்ன இப்படிப் பண்ணி விட்டேனே. எந்த முகத்துடன் போய் அம்மா முகத்தில் எப்படி விழிப்பேன்?"

"அப்பா போனப்பறம் இங்க ஏகப்பட்டது நடந்து போச்சு. ஊருக்கு ஒரு நடை வந்து ஒழுங்கா ஒரு கல்யாணம் பண்ணிக்கோ. இப்ப உனக்குக் கொஞ்சம் வயசாயிட்டாலும் தப்பே இல்லை. இப்பவும் நம்ம சொந்தத்தில் கூட ..." என்று அம்மா ஏரோகிராம் முழுக்கப் பென்சிலால் நுணுக்கி நுணுக்கி எழுதி இருந்ததை மறுபடியும் படித்து முடித்து அவன் அழுதான்.

கடற்கரை ஓரமாக இருந்த கடையிலிருந்து சில சோழிகளை அள்ளியெடுத்த அந்தப் பெண். "டாடி, கேன் யூ கெட் மீ திஸ்? ஐ லவ் தெம்" என்றது.

வெளுப்பும் இல்லாமல், பழுப்புமில்லாமல் இருந்த அந்தப் பெண் குழந்தைக்கு, வாரக் கடைசிகளில் மட்டுமே தன்னை வந்து பார்க்க அனுமதிக்கப்பட்டிருக்கும் அப்பா, திடீரென்று குலுங்கிக் குலுங்கி அழுவதன் காரணம் புரியவில்லை.

ஜாக் அய்யரை அந்த அமெரிக்கக் குழந்தை புதிராகப் பார்த்தது.

-(முற்றும்)

Monday, December 13, 2004

ஜாக் அய்யர் -1

கோனேரிராஜமங்கலம் கல்யாணசுந்தரம் அய்யர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் இல்லையா? கோனேரிராஜமங்கலம் என்பது திருநெல்வேலிக்கு மிக சமீபம். மனுஷன் ரொம்பவும் சாது. நல்ல தமிழ்ப் பண்டிதர். வடநூல், வானநூல், ஜோதிடம், கர்நாடக சங்கீதம் என்று ய கலைகள் அறுபத்தி நான்கில் அல்மோஸ்ட் ஐம்பதில் படு ஞானஸ்தர்.

பரம்பரையாகவே தாமிரபரணிக் கரையில் வளர்ந்த நல்ல வசதியான குடும்பம். யாரிடமும் கை கட்டி உத்தியோகம் பார்ப்பதெல்லாம் மானபங்கம் என்று நினைக்கிற அளவுக்குச் செல்வமும் செல்வாக்கும் நிறைந்த பரம்பரை. எள்ளுத் தாத்தா, கொள்ளுத் தாத்தா காலத்தில், ‘மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டிப்’ போரடித்தார்களாம். அப்புறமாக யானை லத்தி எல்லாம் அள்ளி மாளாமல் சமர்த்தாக டிராக்டர் வாங்கி விட்டார்கள்.

கோமதி மாமி அவருக்கு வாய்த்த தங்கம். மாமியுடைய கள்ளிச்சொட்டு காப்பியும், நளபாகக் கை மணமும், பயந்த சுபாவமும் அந்த ஏரியாவிலேயே மிகப் பிரசித்தம். ரொம்பவும் வாத்ஸல்யமான தம்பதி. திண்ணையில் சீட்டாடும் மாமாவுடைய கண் பார்வையிலேயே குறிப்பறிந்து மாமி 'இன்றைக்கு மத்தியானம் பக்கோடாவா, போண்டாவா, இல்லை புளித்த அடையா?' என்று முடிவு செய்து கல்லை அடுப்பில் போட்டு விடுவாள் என்றால் பாருங்களேன். அப்படிப்பட்ட அந்நியோன்னிய தம்பதிகளுக்கு வெகுநாட்கள் வரை குழந்தை பாக்கியம் இல்லை.

அதனால் குழந்தைப் பேறு வேண்டுமென்று வடக்கே தல யாத்திரை என்று கிளம்பி ஹரித்வார், காசி என்றெல்லாம் சுற்றி விட்டுக் கடைசியில் பூரியும் போய் விட்டு வந்தார்கள்.. பூரி போனபிறகு தான் மாமி வாந்தி எடுக்க ஆரம்பித்தாள். வடக்கத்திய பூரியின் கடலை எண்ணெய் தான் வாந்திக்குக் காரணம் என்று முதலில் சும்மா இருந்துவிட்டார்கள்.

ஆனால் கோமதி மாமி வயிற்றில் புழு, பூச்சி எல்லாம் தோன்றியிருப்பதாக நாட்டு வைத்தியர் சொன்னதும் அவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. பூரி ஜெகன்னாதர் தரிசனம் ப்ராப்தி ஆன பிறகே மாமி கருவுற்றதால் பையன் பிறந்தால் ‘ஜெகந்நாதன்’ என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.

கல்யாணசுந்தர மாமா ஏகப்பட்ட சந்தோஷத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் மேற்சொன்ன ஆய கலைகளில் இன்னொன்றையும் கை வசப்படுத்தலானார்.

அதாகப்பட்டதே சோழிப்ரஸ்ன சாஸ்திரம்.

கை நிறையச் சோழிகளை அடுக்கிக் கொண்டு ‘கலீரெ’ன்று சீட்டுத் திண்ணையில் வீசி எறிந்து அவை அசைந்து விழுந்து ஆடி நிற்கும் வகை, வனப்பு, பாங்கு, நேரம், யோகம், கோணம், பாகை எல்லாவற்றையும் பார்த்துக் கணக்குப் போட்டு ஏதோ ஒரு பழைய சுவடிக் கட்டையும் படித்தபடி மாமா 'ப்ரஸ்னம்' சொல்ல ஆரம்பித்தார்.

சரஸ்வதி கடாட்சமோ, ப்ரஸ்ன தேவதையின் பரிபூர்ண அநுக்ரஹமோ, கொஞ்ச நாளில் அந்தக் கலையில் அவர் மிகத் தேர்ந்து அதிலேயே அமிழ்ந்து மகிழவும் ஆரம்பித்து விட்டார்.

சிமெண்டுத் திண்ணையின் ஈரச் சிலிர்ப்பு, சுவடியின் மக்கல் வாசனை, சோழியின் ‘கலீர்’, கருப்பு சிலேட்டில் பல்ப்பக் கிறுக்கலின் ‘கிறீச்’, தனக்குத்தானே பேச்சு. கடைவாயில் அதக்கிய பன்னீர் வாசனை, நெற்றியில் அன்றரைத்த சந்தனம், அக்குளில் அத்தர் மணம் என்று ஒரு மாதிரியான கதம்ப குதூகல நிர்வாணக் கடைநிலை ஆகிப் போனது அய்யருடைய ப்ரஸ்னானந்தம்.

ஆரம்பத்தில், 'காணாமற்போன கருப்பு எருமை மாடு எந்த வேலியில் எதை மேய்ந்து கொண்டு நிற்கிறது?', 'எதிர்த்த வீட்டுச் சாம்பல் பூனைக்குட்டி எத்தனை குட்டி போடும்?', 'வசந்தா மாமியின் சின்னப் பெண் ஷீலாக்குட்டி எந்த மாதம் ருதுவாவாள்?' போன்கிற லோகாயத விஷயங்களில் ஆரம்பித்து, அவரது ப்ரஸ்ன ஞானம் குறுகிய காலத்திலேயே வெகு விஸ்தாரமாகி விட்டதை மெச்சத்தான் வேண்டும்.

காலையில் பல் தேய்த்து விட்டுக் காப்பிச் சொம்பும், ஹிண்டு பேப்பருமாய் அவர் வந்து திண்ணையில் உட்கார்ந்தால் அந்தத் தெருவே களை கட்ட ஆரம்பித்து விடும்.

"சாமி, மாமரத்தில அணிலையே காணலை. இன்னிக்காவது அணில் கிடைக்குமா, கிடைக்காதா? வெறும் பூனைய எத்தினி நாணைக்குத் துண்றது? ஜோளிய உருட்டுங்க, பார்த்துடுவம்" என்று அணிற் குறவன் கேட்பான்.

'ராமா, ராமா/ என்று தலையில் அடித்துக் கொண்டாலும் அவனுக்கும் அய்யர் ப்ரஸ்னம் பார்க்கத் தவறுவதில்லை.

"ஏம்ப்பா கல்யாணம். இன்னிக்கி 3 மணி ரேசுல அந்தக் கழுதை ‘ப்ளாக் க்வீன்’ எந்தப் ப்ளேஸ்ல வரும்?" என்பார் சாமண்ணா.

“இன்னிக்கி ஆலோடியில நெல்லு உலர்த்தினா மழை கிழை வருமாடா கல்யாணம்? பார்த்துச் சொல்லு” என்பாள் அடுத்த வீட்டுப் பாட்டி.

கல்யாணசுந்தர மாமாவும் சந்தோஷமாய்க் ‘கலீர்’ உருட்டுவார்.

ஆனால், ஆதி சங்கர பகவத் பாத்ர் என்ன சொல்கிறார்? ‘அற்பப் பதரே, பூலோகத்தில் எந்த சந்தோஷமுமே நிலையானது இல்லை’ என்கிறார். அந்தப் ப்ரஸ்ன சந்தோஷத்திற்கும் அங்கே பங்கம் வர ஆரம்பிந்தது.

பங்கம் வந்தது 52 பேரால். அதென்ன 52 என்று ஒரு கணக்கு? இதைக் கொஞ்சம் சொஸ்த விஸ்தாரமாகச் சொல்லவேண்டும். இல்லாவிட்டால் தப்பர்த்தம் ஆகி விடும்.

ஆண்டாண்டு காலமாய்ப் பரம்பரை பரம்பரையாய்க் கல்யாணசுந்தரம் அய்யர் வீட்டுத் திண்ணையில் நடந்து வந்தது ஒரு சீட்டாட்ட சுகானுபவம். கிட்டத்தட்ட கிராமத்துப் பெரிசுகள் எல்லோருமே அதில் அவ்வப்போது பங்கு பெறுவார்கள் என்றாலும் ஒரு நாலைந்து பேர் அதில் நிரந்தர அங்கத்தினர்கள். கிராமத்தில் ஏதாவது காலரா, வைசூரி போன்ற பயங்கரங்கள் எப்போதாவது தலை தூக்கினால் மட்டுமே திண்ணைக்கு லீவு கிடைக்கும். மற்றபடி அடை மழை, அறுவடைக் காலம், கத்திரி வெயில் என்று எதற்கும் லீவு விடுவது வழக்கம் இல்லை. சாக்குப் படுதாவோ, வெட்டிவேர் தட்டியோ, சீசனுக்கு ஏற்றபடி திண்ணை போர்த்திக் கொள்ளும். அல்லது காற்று வாங்கும்.

பண்டிகைக் காலங்களில் தெருவை அடைத்துகத் தென்னங் கீற்றுக் கொட்டகை போட்டு உள்ளே திண்ணையில் குதூகலங்கள் தொடர்வதும் உண்டு.

ஆண்டாண்டு காலமாய்த் திண்ணையில் அரசோச்சி மகிழ்ந்த ஐம்பத்திருவருக்குப் புது வரவாய் வந்தேறிய பிரஸ்னத்தினால் ஏகப்பட்ட நெருக்கடியாகி விட்டது உண்மை. இந்தப் புது பிரஸ்ன பிசினஸ் பிடிக்காத பல நிரந்தரச் சீட்டாட்ட அங்கத்தினர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் பற்கடியோடு பொறுமை காத்தனர். 'மோகம் முப்பது நாள்' மாதிரி இந்தப் 'ப்ரஸ்னம் ஒரே மண்டலத்தில தானாகவே ஓடிப் போயிடும்' என்று பலர் மனப் பால் குடித்தாவர்கள். முகச் சுளிப்புகள் அதிகரித்தன. மாமா சிலேட்டால் முகத்தை மறைத்துக்கொண்டார். சுவடியைச் சத்தம் போட்டு வேறு படிக்க ஆரம்பித்தார். வெற்றிலை, பாக்கு போடாத உறுப்பினர்கள் கூட அடிக்கடி வாசலில் போய்த் துப்பி விட்டுப் பராக்கு பார்த்தபடி சோம்பல் முறிக்க ஆரம்பித்தார்கள். கல்யயணசுந்தரம் கண்டுகொள்வதாயில்லை. 'ப்ரஸ்னேதி கவசம் பாடலி புதரம் இதி மஹா மந்த்ரம்'னு இந்த மகிமை பத்தி அர்த்த சாஸ்திரத்லயே என்ன சொல்றான்னா...' என்று அய்யர் பொழிப்புரையுடன் ஆரம்பிக்கலானார். நொந்து நூலாய்ப் போன மேற்சொன்ன நி. உ. க்கள் வெளிப்படையாகவே கமற ஆரம்பித்தார்கள்.

ஏதாவது புது வரவென்றால் கிராமத்து மைனர்கள் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பார்கள். கண்டு கொள்ளாமல் விட்டுப் பிடிப்பார்கள். ஆனால், மாமாவின் தொடர் ப்ரஸ்னத் தொடுப்பினால் எல்லோருக்குமே ஏகக் கடுப்பாகி விட்டது.

கல்யாணசுந்தரம் அய்யர் சீட்டுக்கும் ப்ரஸ்னத்திற்குமாய் இங்குமங்குமாய் எகிடுதப்பாய்ப் பால் மாறுவது பலருக்கும் பிடிக்கவில்லை.

ஒரிஜினல் சீட்டுத் திண்ணையாக வளர்ந்து மலை போல் நின்ற சிமெண்டுத் திண்ணையில், கொஞ்ச நாட்களாகக் கல்யாணசுந்தரமைய்யர் ஜிலீர் கலீரென்று கண்டமேனிக்கும் சோழிகளை வீசுவதால் ஏற்பட்ட களேபரத்தால், ஆட்டின் குவீன்களும், இஸ்பேடு ராஜாக்களும் திடீரென்று வேட்டிகளுக்கடியிலும் துண்டுகளுக்கு இடையிலுமாகக் காணாமல் போக, சீட்டுக் கிளப் மெம்பர்களிடையே பிரச்னை ஒரு நாள் பெரிசாக வெடித்தது.

எல்லை தாண்டிய ஊடுறுவலை எத்தனை நாள் தான் பொறுத்திருக்க முடியும்? எல்லோரும் வாஜ்பாய் மாதிரி மத்தியானம் தூங்கிக்கொண்டு ஆண்டாண்டு காலமாய் அசமஞ்சமாய் இருந்து ஆட்சியையும் கோட்டை விட்டுப் பேஸ்தடிக்க் முடியுமா?

விசாலமாகப் பெரிதாக இருந்தாலும், இருப்பதோ ஒரே திண்ணை. அங்கே சீட்டா? பிரஸ்னமா? எதற்கு முதன்மை?

இது பற்றித் தீர ஆராய்ந்து உடனே முடிவெடுக்கும்படி உறுப்பினர்களால் ஒரு 'ஒரு நபர் குழு'வொன்று உடனே நிறுவப்பட்டது. அடுத்த ஜமாபந்திக்கு இன்னும் ஆறு மாத காலம் இருப்பதாலும், வேறு உருப்படியான வேலை எதுவுமே இல்லாத காரணத்தாலும், கர்ணம் பதவிக்குரிய பரம்பரை மரியாதையாலும், கிராமத்துக் கர்ணம் கிச்சாமி அக்குழுவின் தலைவரானார். கிச்சாமியின் மூதாதையர் தம் சொத்தில் முக்காலே மூணு வீசத்தைச் சீட்டிலேயே தொலைத்திருப்பதால் அவரே இதற்குத் தக்க தார்மீகத் தலைவர், தம் பக்கமே தீர்ப்புச் சொல்வார் என்று பலரும் உள்ளூர நினைத்ததில் தவறில்லை.

கிச்சாமி ப்ரஸ்னப் பிடாரியை ஊரை விட்டே அடித்து விரட்டப்போவதாகப் பல உறுப்பினர்கள் மனசுக்குள் நினைத்து மகிழ்ந்தார்கள். அவரும் அப்படிச் செய்யத்தான் ஆசைப்பட்டார். ஆனால கல்யாணசுந்தரத்திடம் அவர் கைமாத்தாய் மூவாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருப்பதும், ஏதாவது ஏடாகூடமாகப் 'பதினெட்டுப்பட்டி+அழுக்கு ஜமக்காளம்+நாட்டாமைத் தீர்ப்பு இது தான்யா' என்று சொன்னால் இருக்கிற இரண்டு மா நிலத்தையும், தென்னந்தோப்பையும் கோபத்தில் கல்யாணம் ஜப்தி செய்து விடலாம் என்கிற தொலைநோக்குள்ள நிஜ பயத்தாலும் கிச்சாமி யோசித்து ஒரு நல்ல தீர்ப்பு சொன்னார்.

அதன் வண்ணம் ‘பாதித் திண்ணை சீட்டுக்கு, மீதித் திண்ணை சோழிக்கு’ என்று ஒரு ஜெண்டில்மென்ஸ் அக்ரிமெண்ட் ஒரு வழியாக- பலத்த கோப ஆரவாரங்களுக்கிடையே- ஆர்ஜிதமாகியது.

ஆனாலும், இஸ்ரேல்-பாலஸ்தீன் மாதிரி அதிலும் கசமுசா தொடர்ந்தது. வீசிய சோழிகள் வெறுமனே அந்தரத்தில் நிற்குமா? விசிறியடித்த சீட்டுக்கள் வெகுளியாய்த் தரையில் மல்லாந்து கிடக்குமா? சீட்டுக்கும், சோழிக்கும் லட்சுமண ரேகையா தெரியும்? சாக்பீசால் வரைந்த எல்லைக்கோடு பற்றி அவை கவலையே படவில்லை.

சோழிகள் பாலஸ்தீனத் தற்கொலைப் போராளிகள் மாதிரித் திடீர் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் முன்னேறிச் சீட்டாட்ட வேட்டிகளுக்குள் புகுந்து படுத்தின. கலைத்துப்போட்ட சீட்டுக் கட்டுகளோ இஸ்ரேல் டாங்குகள் போல் சோழிகளின் முன்னேற்றச் சீறலைத் தடைப்படுத்தி அழித்தன. சீட்டு மும்முரத்தில் சாமண்ணா தூள் பகோடா என்று நினைத்துத் தற்கொலைச்சோழிகளை வாயில் போட்டுக்கொண்டு இரண்டு பற்களை இழந்து குழறினார்.

அழிச்சாட்டியமாக வேட்டிக்குள் புகுந்து மர்ம ஸ்தானங்களில் கேலி பேசிக் 'கலீர், ஜிலீரெ'ன்று சிரித்த சோழிகளை அவசரமாக உதறுமுகமாகப் பட்டாமணியம் வேட்டியை அவிழ்த்து உதறப் போக, நடவு வேலை முடிந்து அந்த வழியாக வந்த குடியானவப் பெண்கள் பயந்துபோய் அலற, அன்று காலைதான் வேலியிலிருந்த தன் கோவணத்தைக் காகம் கவர்ந்து போயிருந்ததென்கிற உண்மை அவருக்குத் தாமதமாக நினைவு வர, அதே நேரம் அவருடைய அடிமடியிலிருந்து இரண்டு அதிமுக்கிய துருப்புச் சீட்டுகள் மல்லாந்து வீழ்ந்து அவரைக் காட்டிக்கொடுக்க, 'ஆஹா, திருட்டு படவா" என்று பெரிய பண்ணை சீனு அலற, மொத்தத்தில் ரணகளம். 'விநாச காலே விபரீத சோழீநாம்' என்கிறது ப்ரஸ்னப்ரயோக சாஸ்திரம்.

வார்த்தைகள் தடிக்க ஆரம்பித்தன. கிச்சாமியின் அவசரத் தலையீட்டால் காஷ்மீர அமைதி சில நொடிகளுக்கு நீடித்தது.

ஆனால், "என்னங்காணும் கேயெஸ் அய்யர், எப்பப் பார்த்தாலும் சோழியும் சுவடியுமா பேஸ்தடிக்கிறீர்? ஒழுங்கா ஒரு ஏஸ் கார்டு எறக்கத் துப்பில்லை. பல்ப்பத்தால கிறுக்கிண்டே நேத்திக்குத் துருப்பைப் போட்டுட்டீர்" என்றார் ஒரு ஆயுட்கால நி. உ.

"மோட்டு வளையப் பார்த்துண்டு என்னய்யா சோகமா சம்ஸ்கிருதத்துல பினாத்திண்டிருக்கீர்? க்ளாவர் ராஜாவை எந்த மசிருக்கு எறக்கினீர்?"- ஏற்கனவே சீட்டுச் சேராமல் ஏகக் கடுப்பில் இருந்தது சின்னப் பண்ணை.

வாயில் அடக்கிய புகையிலையைத் துப்பிவிட்டு, வருமுன் காப்போனாகக் கிச்சாமி எதையோ சொல்லுமுன், கோஃபி அன்னன் மாதிரிக் அடக்கப்பட்டுக் கைமர்த்தப்பட்டார்.

"ஓய் கல்யாணம், என் கையில எத்தனை துருப்புச் சீட்டு இருக்குன்னு கரெக்டா ப்ரஸ்னத்தில சொல்லிப்புட்டீர்னாக்க, நான் மொட்டையடிச்சுண்டு ஊரை விட்டே ஓடிடறேன்யா."- இது எதிர் வீட்டு சாமண்ணாவின் கிண்டல் சவால்.

எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

கல்யாணம் மாமாவுக்கு எரிச்சல் தாங்கவில்லை.

'முணு முணு'வென்று ஏதோ மந்திரம் சொல்லி ரோஷத்துடன் சோழிகளை வேகமாக வீசினார். அவை விழுந்து ஓடிக் குலுங்கி நின்றவுடன், தரையோடு தரையாகத் தன் மூக்கைத் தேய்த்து அவற்றின் கோண, பாகை, பாவனை, பிரதேச வாஸ்து எல்லாம் ஆராய்ந்து பார்த்தார். எல்லோரும் இன்னமும் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

சுவடியை நெற்றியில் தட்டிச் சிரித்தபடி கல்யாணம் சொன்னார்: "அடேய் மரமண்டை சாமண்ணா, ப்ரஸ்னப்படி மொத்தம் 3 துருப்பு தான் உன்கிட்ட இருக்கணும். அந்த நாலு கிளாவரையும் துருப்புன்னு நெனச்சுண்டு தப்பாய்ச் சொருகிண்டிருக்காய். தப்பாட்டம் ஆடி இன்னைக்கி வெங்குட்டு கையால செருப்படி வாங்கப் போறாயாக்கும்"

அவ்வளவு நெத்தியடியான மிகச் சரியான யூகத்தைச் சாமண்ணா எதிர்பார்க்கவில்லை. சீட்டுகளை விசிறியடித்தபடி கோபத்தோடு அந்தத் திண்ணையிலிருந்து இறங்கிப்போனவர் போனவர் தான். ஆளையே அப்புறம் காணவில்லை. ஊர்க் கோடியில் நாவிதன் ராசுவிடம் மொட்டை அடித்துக் கொண்டாரா என்கிற மேற்படி விவரம் சரிவரத் தெரியவில்லை.

மொத்தத்தில் சீட்டாட்ட கோஷ்டி நெல்லிக்காய் மூட்டையாய்க் கலைந்து அடுத்த தெரு பட்டாமணியம் வீட்டுக்குக் குடி போனது.

ப்ரஸ்னம் சந்தோஷமாய்த் தனிக் குடித்தனம் ஆரம்பித்தது.

- (இன்னும் வருவார்)

எல்லே இளங்கிளியே, இன்னும் உறங்குதியோ?!

"அப்படி என்னய்யா கும்பகர்ணனாட்டம் ஒரு பேய்த் தூக்கம்? எழுதி எவ்வளவு நாளாச்சு? மார்கழி மாசம் போறக்கப் போவுது, எழுந்திரிச்சுப் பல் வெளக்கிட்டு வாய்யா. சூடா ஒரு பொங்கல், வடை அடிக்கலாம். அப்புறமாச்சியும் உனக்கு சுறுசுறுப்பு கிறுகிறுப்பு வருதான்னு பாக்கலாம்" என்று ஒரு வாசக அன்பர்- பெயர் 'டோண்டு"வாம், செல்லமாக மிரட்டி இருக்கிறார்.

அதென்னங்கண்ணா பேரு 'டோண்டு'ன்னு? சின்ன வயசில எதுக்கெடுத்தாலும் அவங்க வூட்ல "ஏய், டோண்ட் ஸ்டாண்ட் ஹியர், டோண்ட் ஸ்டாண்ட் தேர், டோண்ட் டு திஸ், டோண்ட் டு தட்"ன்னு ரொம்ப மிரட்டி விரட்டினதுல தன் பேரே இனிமே 'டோண்டு'ன்னு அவரே நெனச்சுக்கிட்டார் போல!

(At 11/23/2004 02:45:17 AM, Dondu said... என்ன ஒன்றும் புதிதாகக் காணோம். எல்லே இளங்கிளியே இன்னமும் உறங்குதியோ? .....அன்புடன் டோண்டு)

இதோ விழித்துக்கொண்டு விட்டேன்.

ஜெயேந்திரர் விவகாரம், எம்.எஸ். மறைவு என்று சென்னைச் செய்திகள் சோக ராகம் இசைத்தாலும், 'அமெரிக்க அரசியலி'ன் போக்கு கவலை அளித்தாலும், இஷ்ட தேவதைக்கு ரகசியக் கல்யாண்ம் என்று யாரோ புரளி கிளப்பினாலும் ...

எமக்குத் தொழில் எழுத்து.

அதை சிறப்புறச் செய்வோம். டிசம்பர் 'அமுதசுரபி'யில் வெளிவந்த 'ஜாக் அய்யர்' இங்கேயும் சீக்கிரமே வலம் வருவார்.

என்றும் அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Wednesday, November 03, 2004

அமெரிக்க அரசியல் (நவம்பர் 3 '04)

அமெரிக்க அரசியல் (நவம்பர் 3, 2004)
-------------------------------------

உலகெங்கும் கோடிக்கணக்கானவர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து கொண்டிருக்கின்ற நேரம் இது.

தேர்தல் முடிவுகள் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையே தருகின்றன.

ஜான் கெர்ரி ஜெயித்து விட்டால், வெள்ளை மாளிகையின் வாசல் ஓரமாக ஒரு நாற்காலியைப் போட்டு எனக்குக் குறைந்த பட்சம் ஒரு டவாலி வேலையாவது போட்டுத் தருவதாக அவர் எனக்கு வாக்களிக்கவில்லை.

ஜார்ஜ் புஷ் மீண்டும் அதிபரானால் என் சென்ற வருஷ இன்கம்டாக்ஸ் கணக்கை மறுதணிக்கை செய்து மிரட்டி ஈராக்குக்கே என்னை விரட்டி விடுவதாகப் பயமுறுத்தவும் இல்லை.

பலப்பல காரணங்களுக்காகக் குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும், ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தாம் என்பதை நான் உணராமலும் இல்லை. காமராஜர் இன்று இங்கே இருந்திருந்தால், "இவுங்க ரெண்டு பேருமே ஒரே குட்டையில ஊறின மட்டைங்கதாண்ணேன்" என்றிருப்பார்.

இருந்தாலும், கெர்ரி வெற்றி பெற்றிருந்தால், 'உலக அரங்கில் சமீபத்தில் தான் இழந்து நிற்கும் சுய கௌரவத்தை மீண்டும் பெற அமெரிக்கா தீவிர முயற்சிகள் எடுக்கும், உள்நாட்டுப் பொருளாதாரம் மீண்டும் துளிர்க்கும், குறைந்த பட்ச ஊதியத் தொஅக் அதிகரிக்கும், ஒரு புதிய சகாப்தம் உருவாவதற்கான புது முயற்சிகள் தொடங்கும்' என்று நான் தீவிரமாகவே நம்பினேன். பல பேட்டிகளில் கெர்ரி இதையெல்லாம் சொல்லவும் செய்தார்.

அந்த நம்பிக்கையில் மண் விழுந்து விட்டது.

இந்தக் கட்டுரையை எழுதுகின்ற நேரத்தில், அதிபர் புஷ் ஒரு நூலிழை வித்தியாசத்தில் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றே தெரிகிறது.

கருப்பும் வெள்ளையுமாக, இரவும் பகலும் போல், மொத்த அமெரிக்க மக்களின் மனப்போக்கும் மிகவும் வித்தியாசப்பட்டு, இந்த தேசமே பிளந்து நிற்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. நியூயார்க் போன்ற கிழக்குக் கடற்கரை மாகாணங்களும், கலி·போர்னியா போன்ற மேற்குக் கடற்கரை மாகாணங்களும் மனத்தளவில் இணைந்து ஒரு புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெ
டுக்க வெகுவாக முயற்சித்திருந்தாலும், அமெரிக்காவின் வயிற்றுப் பகுதி, வேறு விதமாக, அதிபர் புஷ்ஷ¤க்கே மறுபடியும் வோட்டளித்திருக்கிறது.

புஷ்ஷின் பொருளாதாரக் கொள்கைகளால் மிகவும் அடிபட்டு, நொந்து நூலாகிப் பல தொழிற்சாலைகளை மூடியிருக்கும் ஓஹையோ போன்ற பிராந்தியங்கள் அவருக்கே மறுமுறையும் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்திருப்பது விநோதமாகத் தெரிந்தாலும், எந்த அளவுக்கு அமெரிக்கா பிளவுபட்டுக் கிடக்கிறது, எந்த அளவுக்குப் பயந்து போய்ப் பிற்போக்குக் கொள்கைகளால் தேங்கிக் கிடக்கிறது என்பதற்கு இம்முடிவுகள் ஒரு சரியான உதாரணம்.

The rednecks are back with a vengeance!

அதீதமான பெரும்பான்மையிலோ, பெரும் ஆதரவு அலையிலோ அதிபர் புஷ் வெற்றி பெற்றுவிடவில்லை. ஈராக் போரின் தற்சமயச் சகதி நிலை பற்றி அமெரிக்கர்களின் பொதுவான கவலையும் பயமும் கூடித்தான் இருக்கிறது. இருந்தபோதும், 'ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்' என்று எம்ஜிஆர் மாதிரிப் பாடி உண்மை முழங்கித் தட்டிக் கேட்பதற்குத்தான் அமெரிக்காவில் ஆள் இல்லை. 'ஈராக் மீதான போருக்குச் சரியான முகாந்திரம் இருந்ததா, ஆயில் கம்பெனிகளின் பேராசையைத் தீர்த்துக் கொள்வதற்காக மட்டுமே இந்தனை அமெரிக்க இளைஞர்களைப் பலியிட்டு, நூற்றுக்கணக்கான பில்லியன்களைச் செலவிடவேண்டுமா?' என்றெல்லாம் தார்மீகக் கேள்விகள் கேட்பவர்களை விட, 'தப்போ, சரியோ, இந்த யுத்த நேரத்தில் நம் தக்கணாமுட்டித் தலைவரை நிற்க வைத்துக் கேள்வி கேட்பது கூடத் தவறு' என்று அபத்தமான தேசாபிமானம் காட்டுபவர்களே அதிகமாக இருக்கிறார்கள் போலும்.

ஹிட்லரைக் கேள்வி கேட்கப் பயந்தவர்கள் கூடத்தான் தேச பக்தியைக் காரணம் காட்டி வாய் பொத்திப் பயந்து நின்றார்கள்.

சரி, அமெரிக்காவின் எதிர்காலம் இனி எப்படி இருக்கும்?

சமீபத்திய 'லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்' தினப் பத்திரிகை ஒன்றில் ஒரு கார்ட்டூன் போட்டிருந்தார்கள். அமெரிக்க தேசத்தின் வரைபடத்தைப் போட்டு அதன் நடுவே, 'யு. எஸ். இமிக்ரேஷன்' என்று எழுதிப் பெரிய பூட்டு ஒன்றைப் போட்டுப் பூட்டியிருந்தார்கள். அதாவது, பல ஆண்டுகளாக 'வந்தாரை எல்லாம் வாழவைக்கும் நல்லரசாக' இருந்த அமெரிக்காவின் மனப்போக்கு தற்போது அடியோடு மாறி
விட்டிருப்பதைக் கேலியாக ஒரு அமெரிக்கக் கார்ட்டூனிஸ்ட் கிண்டல் பண்ணியிருந்தார். செப். 11, 2001 நிகழ்வுகள் மகா பயங்கரம் தான், கண்டிக்கப்படவேண்டியவை தான். ஆனால் அதனால் அமெரிக்கர்களிடையே ஏற்பட்டு விட்டிருக்கும் பிற்போக்கு விளைவுகளையே அந்தக் கருத்துப்படம் சுட்டிக் காட்டியதாகவே எனக்குத் தோன்றியது.

சற்றேறக் குறைய ஒரு நூற்றாண்டாகவே உலகின் பலப்பல பாகங்களிலிருந்தும் பல்வேறு நிற, இன, மத, மொழி, கலாச்சார மக்கள் வந்து குடியேறி, எந்த விதமான பேதமுமில்லாமல், பல்வேறு துறைகளிலும் தனித்துவம் காட்டிச் சிறந்து, இந்த தேசத்தை ஒரு மாபெரும் வல்லரசாக மாற்றியிருப்பதே அமெரிக்காவின் அடிப்படை பலம். அதற்கே பூட்டுப் போட்டால் அமெரிக்காவின் அடிப்படை நலனுக்கே வேட்டாகி விடாதோ?

முழுமையான கருத்துச் சுதந்திரமும், மத சுதந்திரமும், தனியரு மனிதன் எவனுமே தன் உழைப்பையும் படிப்பையும் மட்டுமே நம்பி முன்னேறுவதற்கான அடிப்படை வசதிகள் பலவும் நிறைந்த வளமான பூமி தான் அமெரிக்கா. இதையெல்லாம் பின்னோக்கித் தள்ள, அடிப்படை உரிமைகளையும், பெருமைகளையும் மாற்ற முயற்சிப்பதா?

காட்டான்களின் காட்டு தர்பாராக அமெரிக்கா மாறி விடுமோ?

எம் போன்ற சாமான்னியர்களுக்கு இதெல்லாம் கலவரம் நிரம்பிய கேள்விக்குறியாகத்தான் தெரிகிறது.

அதிபர் புஷ் ஒரு யுத்தவெறியர், ஆயுத வியாபாரிகளின் கைப்பாவை என்பது தெரிந்ததே. 'ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்வது' அந்த காலத்துப் பழமொழி. 'அணுகுண்டு அதிரடிப் பொய்களைச் சொல்லியாவது அடுத்தவன் ஆயிலை லபக்குவது' புஷ்ஷின் புதுமொழி. சர்வதேச அரங்கில் தனக்குத் தொடர்ந்து ஜால்ரா போடும் ஒரு சிலரைத் தவிர வேறு யாரையும் அவர் மதிப்பதி
ல்லை என்பது தெரிந்த விஷயம் தான். 'தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன, முக்காலே அரைக்கால் கால் தான்' என்று அவர் தொடர்ந்து முரண்டு பிடிப்பது தொடரும். அதிபர் சதாம் ஹ¤சேன் தன் பாத்ரூமில் பல கோடி அணுகுண்டுகளைப் பதுக்கி வைத்திருந்தது பற்றித் தனக்கு முன்பே தெரிந்திருந்ததால் தான் ஈராக் மீது தான் படையெடுத்ததாக அவர் விடப்போகும் தொடர் சரடுகளும் தொடரும். என்ன செய்வது? நிர்வாண உலகத்தில் கோவணம் கட்டியவன் தானே பைத்தியக்காரன்? புஷ்ஷுக்குத்தான் பட்டுக் குஞ்சலமும் கட்டிப் பதவியிலும் வைத்து அழகு பார்க்கிறார்களே? 'அடடே, நாம் செய்வதில் ஏதாவது கொஞ்சம் தப்பு இருக்கிறதோ?' என்கிற சின்ன மனத் தடுமாற்றம் கூட அவருக்கு இனி இருக்காது. சுத்தம்.

வாழ்க பணநாயகம்!

சர்வதேச அளவில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பல நாடுகள் பல வருடங்களாகக் கஷ்டப்பட்டு உருவாக்கி வைத்திருக்கும் சுற்றுப்புறச்சூழல், சுகாதார, மாசுக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை அவர் வெறும் கெமிக்கல் வியாபார முதலைகளின் சுயலாபத்துக்காக ஏற்கனவே காற்றிலே பறக்கவிட்டவர் ஆயிற்றே. இனிமேல் அது பற்றி எல்லாம் யாரும் கேள்விகள் கேட்டு நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்.

எதையாவது ஒரு புதுக் காரணத்தைச் சொல்லி ஈரான் மீதும் நாம் பாயலாமா என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் ஏற்கனவே கலந்தாலோசித்துத்தான் வருகின்றன. 'கருப்புத் தங்க'த்தைக் கவர்வதும், பல விதமான ராணுவக் காரணங்களுக்காகப் பூகோள ரீதியில் தங்களை அதிமுக்கியமான அந்த ஏரியாவில் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கான முயற்சிகளும் தொடரும். 'அயத்தொல்லா அணுகுண்டுகள் பல பண்ணித் தலைப்பாகைக்குள் ரகசியமாகச் செருகி வைத்திருக்கிறார்' என்ற ரீதியில் புஷ் புது ரீல்கள் விடலாம்.

அமெரிக்கா மட்டும் தொடர்ந்து அணு ஆயுதப் பேரழிவு ஆயுதங்களைச் செய்யலாமா என்று கேட்பவர்கள் தேச விரோதிகளாகச் சித்தரிக்கப்படுவார்கள்.

ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் அணுகுண்டு போட்டுப் பேரழிவு செய்தவர்கள் மற்ற நாடுகளின் அணு ஆயுத விஸ்தரிப்பு பற்றிக் கவலைப்படும்போது எங்கேயோ இடிக்கிறதே!

உள்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றி அதிபர் புஷ் எப்போதுமே கண்டுகொண்டதில்லை. அடுத்த நான்கு வருடங்களுக்கு அவருக்கு மாதா மாதம் சம்பளம் உறுதியான பிறகு நாட்டில் யாரைப்பற்றிக் கவலைப்படவேண்டும்?

அவசர மருத்துவ உதவிகள் கூடச் சரியாகக் கிடைக்காமல் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டு வரும் அவல நிலை அமெரிக்காவில் நீடிக்கும். அரசு உதவிகள் முழுவதுமாகவே நிறுத்தப்பட்டு நாடெங்கும் பல கல்விச்சாலைகள், நூல நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. அதுவும் தொடரும்.

லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற பெருநகரங்களில் சென்ற வருடம் விற்ற விலையை விட பெட்ரோல் இரண்டு மடங்கைத் தாண்டி விட்டது. அது இன்னமும் உயரும். கடந்த மூன்றே மூன்று மாதங்களில் எக்ஸான் போன்ற பெரிய ஆயில் கம்பெனிகள் பில்லியன் கணக்கில் அசுர லாபம் ஈட்டியிருக்கின்றன. அது இன்னமும் அதிகரிக்கலாம்.

எம்போன்ற புலம் பெயர் என்ஆர்ஐத் தமிழர்கள் இனி இங்கே என்ன செய்யலாம்?

'நடப்பது நடக்கட்டும், நமக்கெதற்கு வம்பு?' என்று வாய் மூடி, மௌனமாக, ஆபீஸ், ஆபீஸ் விட்டால் வீடு, அவ்வப்போது கொஞ்சம் சன் டீவி அல்லது பேஸ்பால் என்று இருக்கலாமா?

'நடப்பதெல்லாம் நாரணன் செயல். கடமையைச் செய். பலனை எதிர்பாராதே' என்று வேதாந்தம் பேசலாமா?

அல்லது, "புஷ்ஷாய நமஹ, செய்னிக்கு ஜெய்" என்று புது ராகத்தில் ஜால்ரா போட ஆரம்பிக்கலாமா?

புத்தனாம்பட்டி பக்கமாக ஏதாவது கால் சென்டரில் வேலை பார்த்துக் கொண்டு ஊருக்கே போய் விடலாமா?

தீர்க்கதரிசினிக் கண்ணாடியை மாட்டிக்கொண்டு தீர யோசித்தால், எனக்கென்னவோ மூட்டையைக் கட்டவேண்டிய நேரம் வந்து விட்டதோ என்று தான் தோன்றுகிறது.

ஊஹ¤ம். அவள் வரமாட்டாள். அங்கே தான் இடிக்கிறது!

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Friday, October 22, 2004

அவ(¡)ளோட ராவுகள் -3

அவ(¡)ளோட ராவுகள் -3
-------------------------------------

'கொலுப்படி' என்கிற வார்த்தை கேட்டதுமே நம் நாயகனின் காதுகள் விறைத்து, உடம்பு சிலிர்த்ததற்குக் காரணம் இருக்கிறது. அவன் பற்கள் தந்தி அடிக்க ஆரம்பித்தன. ஜூரம் வரும்போல் இருந்தது.

இந்திய வாசகர்களுக்கு இந்தப் படி கட்டுமானப் பணியின் அமெரிக்க தாத்பர்யம் சரியாகப் புரியாது என்பதால் இதைச் சற்றே விலாவாரியாகச் சொல்ல நேரிடுகிறது.

நம் இந்திய வீடுகளில் கள்ளுப்பெட்டி முதல் கண்டாமுண்டான் சாமான்கள் வரை எல்லாமே கொலுப்படிகளுக்கு ஆதார ஸ்ருதியாக நிற்கும். ஏகப்பட்டக் கெழ போல்ட் உறவினர்களில் யாரையாவது ஷி·ப்ட் முறையில் படியாக நிற்கச் சொன்னால் கூட அவர்கள் அதைச் சிரமெற்கொண்டு செய்தும் விடுவார்கள். அதைத்தவிர மர ஆசாரிகள், ஆணிகள் ஆங்காங்கே பொத்துக்கொண்டு குத்தினாலும்,

வெகு சுலபமாக மரப் படிகளைச் செய்து அடுக்கி விட்டும் போய் விடுவார்கள்.

அமெரிக்கக் கதையே வேறு. ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு வீட்டின் விஸ்தார கன பரிமாணச் சதுர அடிகள் வெவ்வேறு. பல இடங்களில் கார்ப்பெட் வேறு கழுத்தை அறுத்து வழுக்கும். ஐஸ் மழை கொட்டும். அல்லது சூறாவளிக் காற்றில், படிகளென்ன, வீடே பறக்கும்.

மேலும், அமெரிக்க அம்மாமிகள் 'தற்காத்துத் தற்கொண்டான் பிராணனை வாங்கி' அடக்கமாக வாசற்படி மாதிரி மூன்றே மூன்று படி போதும் என்பார்கள். அல்லது ஆகாசம் தொடும்படியாகப் பதிமூன்று படிகள் வரை அடுக்கடுக்காய் வேண்டுமென்றும் படுத்தி மகிழ்வார்கள். அதெல்லாம் அவர்களுடைய அந்தந்த வருஷ மூட், ஆத்துக்காரரின் வேலை இருத்தல்/இல்லாதிருத்தல், பசங்கள் பரீட்சையில் வாங்குகிற/கோட்டை விட்டு விட்ட மார்க், மூத்த பெண் வெள்ளைக்கார பாய்·ப்ரண்டோடு ஊர் சுற்றுகிறாளா/இல்லையா போன்ற பலவற்றைப் பொறுத்துப் படிகள் குறையலாம், படிகள் வளரலாம். பாடுபடுவது மட்டும் எப்போதும் மாமி பிடித்த பாக்கியசாலியே.

இங்கே ஒரு சின்ன ·ப்ளாஷ்பேக் -மாண்டேஜ்கள் கலந்த ·ப்ளாஷ்பேக்- போட்டுக் கொள்ளலாமா? 'யாரங்கே, திரையில் அந்தக் கருப்பு வெள்ளை கலந்த வட்ட வட்டமான சுருட்களை ஓட விடப்பா'

காலம்: இரண்டு வருடங்களுக்கு முந்தைய வசந்த நவராத்திரி
பாத்திரங்கள்: நம் நாயகன், நாயகி, கோணாமாணாவென்று கூறு போடப்பட்ட பிரம்மாண்ட மரப் பலகைகள், ஆணிப் பெட்டிகள், சுத்திகள், டிராயிங் பேப்பர் பண்டில்கள், கலர் பென்சில்கள், டிஞ்சர் பாட்டில்கள், பேண்டேஜ்கள், வீக்கம் தணிக்கப் பல பாத்திரங்களில் ஐஸ்கட்டிகள், தாகம் தணிக்கத் திரவ பதார்த்தங்கள், அவ்வப்போது பசியாறத் தின்பண்டங்கள்.

"எதுக்குங்க நாம சிரமப்படணும்? நீங்களோ 'ஹாண்டிமேன்'. உங்களுக்குத் தெரியாததா? போன தடவை பாத்ரூம் கம்மோடு அடைச்சுக்கிட்டபோது நீங்களே தானே குச்சிய உள்ள விட்டுக் குத்திச் சரி பண்ணினீங்க. உங்க பலம் உங்களுக்கே தெரியாது. நம்ம வீட்டுக்குத் தகுந்த மாதிரி நீங்களே ஒரு கஸ்டம் கொலுப்படி கட்டிடுங்களேன். ப்ளீஸ்"

'உன் பலம் உனக்கே தெரியாது' என்று ஜாம்பவான் ஆஞ்சநேயனிடம் சொன்னதில் வஞ்சப் புகழ்ச்சி இல்லை. இது வேறுவகைப்பட்ட புகழ்ச்சி.

தலையை ஒரு சிலுப்பு சிலுப்பிக்கொண்டு நம் நாயகன் அமெரிக்க மரக் கடைகளிலெல்லாம் பேய் முழி முழித்துக்கொண்டு அலைந்து பிரம்மாண்டமான கனடா தேச மரப் பலகைகளைக் கடையில் வாங்குகிறான். ($ 118.40)

சின்னஞ்சிறு காரில் அவற்றை ஏற்ற முடியாமல் பேரவதி. கால் சிராய்ப்பு, ரத்தம். 'டர்'ரென்ற பேண்ட் கிழிப்பு. காருக்குப் பெயிண்ட் சிராய்ப்பு ($ 328.90)

U Haul அல்லது Hertz-ல் வாடகைக்குப் பெரிய லாரி ஒன்று எடுக்கப்படுகிறது. ($ 59.00 + பெட்ரோல் $ 23.00)

பி.க.தே.ம. பலகைகளைக் கடையில் ஏற்றி, வீட்டில் இறக்க, வேலை தேடித் தெருவோரம் பல் குத்திக் குந்தியிருக்கும் மெக்சிகன் தேசத்துப் பணியாட்கள் தற்காலிகப் பணிக்கு அமர்த்தப் படுகிறார்கள். ($ (4X20) + டிப்ஸ் $ 20)

மரப் பலகைகளை வீட்டுக்குள் கொண்டு வர முடியாமல் வாசற் கதவைப் பலமாக நெத்தியதில் பிற்பாடு டச்சப், பெயிண்டிங் செலவு ($ 320)

வாங்க மறந்து போய்த் திரும்பத் திரும்பக் கடைக்கு ஓடிச் சேகரிக்கப்படும் பொருட்கள்: அறுவாள், சிற்றறுவாள், சிறு உளி, பேருளி,

அரம், ரம்பம், இழைப்புளி ($ 119.75)

க்ளோசப் ஷாட்டில் நாயகன்: மூன்று நாள் ஆபீசுக்குப் போகாத முள்தாடியுடன்.
கையில் பேப்பர், டார்ச் லைட், இஞ்ச் டேப், அழுக்கு ரப்பர், கலர் பென்சில்களுடன் பேய் முழி முழிக்கிறான். பின்புலத்தில் கால் மேல் கால் போட்டபடி, சோ·பாவில் சாய்ந்து, புன்முறுவலுடன் நாயகி ஆனந்த விகடன் ஜோக்குக்குச் சிரித்துக் கொண்டிருக்கிறாள்.

'கொலுப்படி வளர்வதெப்படி?' சப்டைட்டிலுக்குப் பல இன்சர்ட் ஷாட்டுகள்:
அடுக்கப்பட்ட மரப் பலகைகள் பிரமிட் மாதிரியும், குகை போலும், பனை போலும், 'பிரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வாய்' படத்தின் கடைசிக் காட்சி போலும் பல்வேறாகத் தொங்கியபடி காட்சி அளிக்கின்றன. ஆணி அடிக்க முயன்றதால் அமெரிக்க அட்டைச் சுவர்கள் கிழிந்து பரிதாபம் சொட்டுகின்றன. (இதற்கு இப்போது பட்ஜெட் தேவையில்லை. வேறு மராமத்துக் கணக்கில் 500 டாலராவது பிற்பாடு
பழுத்து விடும்.)

ஓரளவுக்கு 7 3/4 படிகளில் கொலுப்படி மாதிரி ஒரு உருவம் நிழலாகப் புலப்படுகிறது. Freeze frame.

கையில் நாயகனுக்குக் கா·பியுடன், சிரித்த முகத்துடன் அவற்றைச் சோதனை செய்ய நாயகி வருகிறாள். மேற்படியின் 'weight bearing properties' தெரிந்துகொள்ளுமுகமாக அங்கே ஏறி அவள் அமர, அத்தனை படிகளும் அம்மணியின் பின்கனம் தாங்காமல் பக்கவாட்டில் சரிய, அவள் சீறலோடு சிராய்ப்புகளில் அலற, ஹவுஸ்கோட் கண்ட இடங்களில் கிழிய ...

இதற்கு மேல் சென்சாரில் வயலென்ஸ்+செக்சுக்காகக் கட் பண்ணி விடுவார்கள். அப்பீலுக்கெல்லாம் துட்டு அழுது அவர்கள் மேல் செல் போனை வீசும்படி ஆகி விடும். வேண்டாம்.

ப்ளேஷ்பேக்கிலிருந்து நாயகன் கண்களில் நீர் தளும்ப தற்காலத்துக்கு மீளும்போது, நாயகி நண்பிகளிடம் இரைந்து சொல்லிக்கொண்டிருக்கிறாள்:

"இவருக்கு அதெல்லாம் சரியா வரலைங்கறதுனால, வெறும் அட்டைப் பொட்டிங்களை வெச்சே 'நானே' போன வருஷம் எல்லாம் சரி பண்ணும்படி ஆயிப்போச்சு."

"அப்படியா? போன தடவை வெறும் அட்டைப் பொட்டிங்களை வெச்சேவா பண்ணியிருந்தீங்க? சூப்பரா இருந்திச்சே. நான் கூட போட்டோ எடுத்து வெச்சிட்டிருக்கேன்" -பச்சைப் பட்டுப் புடவையைக் கடனாக வாங்க வந்திருக்கும் ஒரு சூடிதார் அநியாய ஜால்ரா போட்டது.

"தேங்க்ஸ் பிங்கி. ஆனாக்க எந்தப் படிய எப்படி 'நானே கட்டினேன்'ங்கற டயக்ராம் தான் எங்கயோ போயிட்டுது"

'வட கொரியாவின் அணு ஆயுத விபரங்கள்' போன்ற மகா ரகசியங்கள் அடங்கிய அந்தப் பேப்பரைச் சென்ற வருடம் நாய் தின்றதை நாயகன் கண்ணாரப் பார்த்து ரசித்திருக்கிறான். ஆனால் அது பற்றி அவன் இப்போது மூச்சு விடுவதாயில்லை.

"உங்க வீட்டுக்காரர் எஞ்சினியர் தானே. இந்த சுண்டைக்காய் அட்டைப்பெட்டி டயாக்ரம் எல்லாம் அவரே பாத்துப்பார்"- பைனாப்பிள் சுண்டல் ரிசிபி கேட்க வந்த மாமிக்கு எதற்கு இந்த வேண்டாத வம்பு?

நம் நாயகன் என்ன ஷாஜஹானின் கொத்தனாரா? அவன் தட்டி முட்டிப் படித்ததென்னவோ கம்ப்யூட்டர் எஞ்சினியரிங். கட்டிடக் கலையா அவன் பயின்றான்?

காது கூசும்படி, கண்களில் அருவி வரும்படி, அக் கண்ணம்மாவிடம் சுடச்சுடக் கேட்டிடத்தான் அவன் நினைத்தான். 'அடக்கு, அடக்கு' என்கிறது அவன் கூடப்பிறந்த வீரம். அடங்கினான்.

இருந்தாலும் 'சட்டுப்புட்டென்று இதில் நாம் இப்போதே தலையிடாவிட்டால் பிற்பாடு தன் தலை பலமாக உருட்டப்படும்' என்கிற தற்காப்புணர்வில் நாயகன் பிளிறுவான்: 'காமேஷ் வீட்ல வெறும் புக்ஸை வெச்சே சமாளிச்சுட்டாங்க. நம்ம வீட்ல திண்டி திண்டியா கம்ப்யூட்டர் மேனுவல்ஸ் நிறைய இருக்கு"

புத்தகங்களை வைத்து கொலுப்படி கட்டுவது பாவமாகாதோ? சரஸ்வதி தேவி கோவித்துக் கொல்ள மாட்டாளோ?

'ச. தேவி மாட்டுவாள், மாட்டவே மாட்டாள்' என்கிற பட்டி மன்றத்தின் பாதியில் நாயகன் எஸ்கேப்.

----------------------------- ------------------------ -------------------------

'நவராத்திரியும் அதுவுமா, ஆ·பிசில பத்து நாள் டூர் போகச் சொல்றாங்க' போன்ற சமயோசித சால்ஜாப்புப் பொய்கள் எடுபடவில்லை.

'வயிற்று வலி, ஜுரம், வாந்தி, பயம்' என்றெல்லாம் ஏதேதோ சொல்லிப் பார்த்தான். ம்ஹ¤ம்.

"ஆம்பளையா லட்சணமா ஒரு பதினோரு படி கட்டுங்க, பார்ப்பம். நான் போய் கேராஜ்ல இருக்கற ப்ளாஸ்டிக் பொம்மைங்கள எல்லாம் தொடச்சி வெக்கறேன்"

இந்த வருஷமும் இவனே படிக் கட்டுமானக் கொத்தனார் வேலை செய்ய நேர்ந்தது. தஞ்சை பெரிய கோவில் கட்டுவதற்கு ராஜராஜ சோழன் சாரப்பள்ளம் என்கிற ஊரிலிருந்து ஒரு சாரம் அமைத்து அதன் மேல் கருங்கற்களை ஏற்றிச் சென்ரதாகச் சொல்வார்கள்.

லிவிங் ரூமில் கொலுப்படி அமைக்கப் பெட் ரூம் சாரப்பள்ளம் ஆகியது.

சித்தாளேதுமில்லாமல் பெரியாள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. 'சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா? மேஸ்திரிக்குச் சின்ன வீடு புடிக்குமா, பெரிய வூடு புடிக்குமா? என்று தேஜாஸ்ரீ சிணுங்கிக் கொஞ்சுவதெல்லாம் திரையில் தான்.

"அய்யோ, இதைக் கொஞ்சம் புடிக்குறியாம்மா?" என்ற அவன் ஹீனக் குரல்கள் யார் காதிலும் விழாமல் தன்னந்தனியே தான் அவன் தன் தாஜ்மகாலை ரத்தக் களரியாகக் கட்டினான்.

சற்றே அசைந்தாடும் கால்கட்டுப் போடப்பட்ட உடைந்த ஸ்டூல்கள், பளு தூக்கும் பெஞ்ச், கணினிக்கோனார் நோட்ஸ்கள், டெலிபோன் டைரக்டரிகள், தமிழ்-ஆங்கில அகராதிகள், மாமனார் உபய எட்டு முழ வேட்டிகள், அங்கவஸ்திரங்கள் உதவியில்- மரப் பலகைகளே இல்லாமல்- ஏழு படிகளில் இந்த வருஷக் கொலுப்படி தயாராகி இருந்தது.

"நீங்கதான் உசரமா இருக்கீங்க. அப்படியே அந்த மேல் படிகள்ளல்லாம் பொம்மைங்களை அடுக்கிக் கொடுத்திருங்களேன்". அவள் சொன்னாள். அவன் செய்தான்.

"இந்தப் பித்தளை வெளக்குங்களைப் புளி போட்டு வெளக்கிக் கொடுத்திடுங்க. நான் ரொம்பப் பூஞ்சை. உங்களுக்குத்தான் நல்லா கை அழுந்தும்" மெல்லியலாள் சொன்னாள். வல்கைவில்லாளன் செய்தான்.

"வெள்ளிப் பாத்திரங்களுக்கு விபூதி யூஸ் பண்ணுங்க, பளிச்சுன்னு ஆயிடும். புளி போடக் கூடாது" அவனும் இளித்துக்கொண்டே செய்தான்.

"அப்படியே கடைசிப் படியில சின்னதா ஒரு ஸ்விம்மிங் பூல், மிருகக் காட்சிசாலை செஞ்சுடுங்க. பசங்க வெளையாடும்" குழந்தைகளின்

சிறு சிறு பொம்மைகளை வைத்து அவன் வண்டலூர் செய்தான். அவள் ஆலோசனைகள் மட்டும் சொன்னாள்.

"சக்தி விகடன்ல என்னென்னைக்கு என்ன சுண்டல் பண்ணணும்னு போட்டிருக்காங்க, படிச்சீங்களோ? இன்னிக்குக் கொண்டக் கடலையயை நீங்களே தண்ணியில ஊறப் போட்டுடுங்க. நான் நாளைக்குத்தானே குளிக்கறேன்"

சுடச்சுடச் சுண்டல்கள் பலவும் செய்தான், சுடர் மணி விளக்கேற்றினான், சுற்றி வந்து வணங்கினான்.
தினம் தினம் சுலோகங்களும் சொன்னான்.

----------- ---------------- -------------

புதுப்புது நவராத்திரி டிசைன்களில் கலர் கலரான புடவைகளிலும், பட்டுப் பாவாடைகளிலும் அவன் வீட்டில் பெண்டிர் குழுமியிருந்தார்கள். கீச்சுக்குரலிலும், கட்டைத் தொண்டையிலும், வசூல்ராஜாவிலிருந்தும் வக்காளியம்மன் நளவெண்பாவிலிருந்தும் பாட்டுக்கள் பாடப்பட்டன.

'க்ஷ¢ராப்தி கன்னிகே ஸ்ரீ மகாலஷ்மி' என்று புரந்தரதாசரை ஒரு மாமி ராகமாலிகையில் வம்புக்கு இழுத்தால், 'சரசிஜநாபசோதரி' என்று மற்றொரு பாட்டி முத்துஸ்வாமி தீக்ஷ¢தரை நாககாந்தாரியில் மிரட்டினாள்..

ஏழாவது படியில் கொலு வீற்றிருந்த அம்மன் இறங்கப் பயந்து எல்லோருக்கும் அங்கிருந்தே அருள் பாலித்தாள்.

எங்கும் ஒரே பெண்டிர் கூட்டம். ஏகப்பட்ட குதூகலம்.

"எல்லாம் நானே தான் செஞ்சேன். அவருக்கு இதுக்கெல்லாம் நேரம் எங்க இருக்கு? எப்பப் பார்த்தாலும் ஆ·பீஸ், ஆ·பீஸ்னு ஓடிக்கிட்டே இருக்காரு, பாவம்"

"எப்படிங்க நீங்களே தனியா கொலுப்படி கட்டினீங்க?"

"அய்யோ, அதையேன் கேக்கற, கிரிஜா. நானே ப்ளான் போட்டு, நானே டிசைன் பண்ணி, நானே அட்டைப் பொட்டிங்களை வெச்சே எல்லாத்தையும் கட்டி முடிச்சேன்"

"அட, என்ன ஆச்சரியம்! அட்டைப் பொட்டிங்களை வெச்சே கொலுப்படி கட்டிட முடியும்னு உங்களுக்கு எப்படிங்க தோணிச்சு?" பேட்டி ஆரம்பித்தது.

"ஓ, அதுவா? இதெல்லாம் எர்த்க்வேக் அடிக்கடி வர ஏரியா இல்லியா, அதனால தான்"

"ப்ளீஸ், அந்தப் படி டிசைனை நீங்க தயவுசெஞ்சு காப்புரிமை இல்லாம எங்களுக்குத் தரணும்"

"எப்படி நீங்களே எல்லா பொம்மைங்களையும் அடுக்கினீங்க?"

"என்னத்தப் பண்றது, பாமா? வீட்டுக்காரர் ஒண்ணும் சரியில்ல. ரெண்டு வருஷம் முன்னாடி மரத்துல படி கட்டறேன்னு அவர் அடிச்ச கூத்துல நான் பயந்தே போயி, அதான் இப்படி ஒரு ஐடியா. எல்லாம் நானே தான். எல்லாம் நானே தான். எல்லாம் நானே தான்."

-------------------- ------------------ ------------------

பூட்டிய பெட்ரூமில் தன்னந்தனியனாக ஜாவாவுடன் முட்டிமோதிப் பிறாண்டிக் கொண்டிருந்த நம் நாயகனுக்கு அந்தக் கணத்தில் தான் அந்த ஞானோதயம் பிறந்தது: 'நவராத்திரி என்பது அம்பாளைக் கொண்டாடிப் பெண்டிர் நோன்பு நோற்று மகிழும் பண்டிகையே அல்ல. அதை நம்பாதீர்கள். ஆணினத்தை அடிமைப்படுத்தி அவலப்படுத்துவதே இதன் முதற் பெரும் நோக்கம்.'

'ஹே லண்டி' என்று பெருங்குரலில் அவன் அலறினான்.

"என்னங்க சத்தம் உங்க வீட்டு பெட்ரூம்ல?

"ஓ, அதுவா? ஒண்ணுமில்ல. எங்க வூட்டுக்காரர் சண்டி பூஜை பண்றாருங்க சுத்த பத்தமா சத்தமா . ஆம்பளையா லட்சணமா நாம எதுவுமே பண்ணலியேன்னு அவருக்கு ஒரே வெட்கம். அதான் வெளியில வராமா தனியா உட்கார்ந்து பூஜை பண்ணிக்கிட்டிருக்காரு"

இப்போது சொல்லுங்கள். என்னுடைய சமூகவியல் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புக்காக எனக்கு நோபெல் பரிசு கிடைக்குமா, கிடைக்காதா?

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்


பி.கு. 3: நோபெல் பரிசுத் தொகையில் சரியாக 34,984,089,735.7894 மில்லியன் பேந்தா கோலிகள் வாங்க முடியுமென்பதை விஞ்ஞான பூர்வமாக விளக்கியிருந்த மொரீஷியஸ் ஆண் வாசக அன்பருக்கு: என் கையால் நானே ஊறவைத்து, நானே தேங்காய் துருவிப்போட்டு, நானே கிளறி, நானே தாளித்துக் கொட்டிய உளுத்தம்பருப்புச் சுண்டல் UPS மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. பயப்படாதீர்கள். என்
சுண்டல் ஊசிப்போகாது. என் கை மணம் அப்படி.

Thursday, October 21, 2004

அவ(¡)ளோட ராவுகள் -2

அவ(¡)ளோட ராவுகள் -2
_______________________

பெண்ணினத்துக்கு விழிப்பியம் வந்தே விட்டது. பாரதி இனிமேல் தன் நீள் உறக்கத்தை நிம்மதியாகத்
தொடரலாம்.

'நவராத்திரி என்பது அம்பாளைக் கொண்டாடிப் பெண்டிர் நோன்பு நோற்று மகிழும் பண்டிகையே
அல்ல. ஆணினத்தை அடிமைப்படுத்தி அவலப்படுத்துவதே இதன் முதற் பெரும் நோக்கம்'- என்று நான் ஒரு ஆராய்ச்சி ஸ்டேட்மெண்ட் விட்டாலும் விட்டேன். அதற்கு இவ்வளவு பெரிய ரியாக்ஷன் வருமென்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

வீட்டு வாசலில் மலைமலையாய்க் கடிதங்கள். இருக்கிற போஸ்ட் பாக்சின் அளவு போதவில்லை என்று தபால்காரர், அடுத்த வீடு, அதற்கடுத்த வீடு, அடுத்த தெருவிலுள்ள பெட்டிகளிலெல்லாம் என் வாசகர் கடிதங்களைத் திணித்துத் திணித்து வைத்திருக்கிறார்.

"'சந்திரமுகி'யில் யார் நன்றாகத் திறமை காட்டுவார்கள், சிம்ரனா, ஸ்நேகாவா?' " என்கிற ஆன்ம விசாரத்தில் நாடே ஆழ்ந்து கிடக்கும்போது, என் போன்ற எழுத்தடியார் சிலர் அநாவசியமாக இண்டர்நெட்டில் என்னென்னவொ எழுதி எங்கெங்கோ போடுகிறோம். இதையெல்லாம் யாருமே படிப்பதில்லை என்பது சந்தோஷமாகத் தெரிந்த ஒன்று தான். அதனால்தான் இவ்வளவு அதிபயங்கர எதிர்விளைவுகளுக்குத் தயாராக இல்லாமல் நான் அசட்டையாக இருந்து விட்டேன்.

லாஸ் ஏஞ்சல்சில் இந்த நவராத்திரி நேரத்தில் வழக்கமாகச் சுண்டல் மழை பெய்யும். பாயச ஹைவேக்களில் ஊர்திகள் வழுக்கும். என் கட்டுரைக்குப் பிந்திய வானிலையில் வெப்பம் மட்டுமே மிக அதிகமாகச் சுடுகிறது.

எழுதியதற்கு மறு நாளிலிருந்து எனக்குக் காலை கா·பி கட் பண்ணப்பட்டு விட்டது. பழங்காலச் சமையல் பதார்த்தங்கள் ·ப்ரீசரிலிருந்து விறைத்து வந்து தட்டைக் குளிரில் நடுங்க வைக்கின்றன. முக்கியமான விருந்தாளிகளை அமரவைக்கும் ஸ்பிரிங் குத்தும் நடு ஹால் சோ·பாவிலே தான் என் வாசம் என்றாகி விட்டது. கிட்டத்தட்டப் போர் முனையிலிருந்து செய்திகளைச் சுடச் சுடத் தரும், துப்பாக்கிச் சூடுகளுக்கு நடுவே உயிர் தப்பிக்கும், சிப்பாய்ப் பத்திரிகையாளன் நிலையில் நான் இருக்கிறேன்.

இருப்பினும், எதிர்ப்புகள் எப்படி வரினும், ஒரு அதி முக்கிய சமூகவியல் விஞ்ஞான ஆராய்ச்சி அமுங்கிப் போய் விடக்கூடாதே என்கிற ஒரே ஒரு காரணத்தால் மட்டுமே நாம் இதைத் தொடர்கிறோம்.

---------------- -------------------- --------------------


ரிஷிமூலம், நதிமூலம் என்றெல்லாம் எரிச்சலில்லாத சில நான்-மெடிகல் மூலங்கள் இருப்பது நமக்குத் தெரியும். இந்த சமாச்சாரத்தின் ஆதிமூலம் என்னவென்பதை இப்போது அலசுவோம்.

நம் NRI நாயகன் -'கௌரவ ஜெயில்' கோது மாதிரி ஒரு அப்பிராணி- சின்னஞ்சிறு விடுப்பில் சென்னைக்குச் சென்றிருப்பான். இன்னும் இரண்டே நாட்களில் அமெரிக்கா திரும்பவேண்டுமே என்கிற பெருங் கவலையில் இளைத்துக் கருத்திருப்பான். நண்பர் குழாம் வலிந்தூட்டிய ரம்மும் கிங்·பிஷரும் சேர்ந்து பின் மண்டையில் இடி இடிக்கும், 'சங்கீதா'வும் 'சரவணபவனு'ம் அடிவயிற்றில் ரகளை பண்ணியிருக்கும். 'பொன்னுசாமி'யும் 'வேலு'வும் மேல்வயிற்ரில் தனி ஆவர்த்தனம் வாசித்திருப்பார்கள்.

சென்னையின் சுகந்தங்களை இவ்வளவு சீக்கிரம் மறந்து 'ஒரு செயற்கை வாழ்வைப் புலம் பெயர்ந்து அயல் நாட்டில் வாழத்தான் வேண்டுமா?' என்று மனச்சாட்சி கேள்வி கேட்டபடி தகிக்கும். ஒரு பெட்டியும் பூட்டாது. பூட்டுகிற ஒரே பெட்டியில் எலி பெருங்கடி கடித்திருக்கும். கைப் பைகளில் ஜிப்புகள் வாய் பிளந்திருக்கும். வீரம் களைத்திருக்கும். பாரம் கனத்திருக்கும்.

மிகக் குழப்பமான காலகட்டம் இது.

இருந்தாலும் ஒரு வழக்கமான அசட்டுத்தனம் செய்வான். அமெரிக்காவுக்குப் போன் போட்டு, "என்னம்மா, உனக்கு ஏதாவது எடுத்துட்டு வரணுமா?"

சம்பிரதாயமான சாதாரணக் கேள்வி தான். இதற்கு வசனம் தேவையில்லை. ஆனாலும், பல பெண்மணிகள் "மறந்துடாதீங்க, அப்பளம், கருவடாம், ஆவக்கா ஊறுகா, அக்கா கிட்ட சொல்லி என் அளவு ஜாக்கெட்' என்று ஆரம்பித்து அரை மணி நேரம் லிஸ்ட் கொடுப்பார்கள்.

ஏற்கனவே தலை சுற்றியிருக்கும் நம் நாயகனுக்குக் கொஞ்சம் மசக்கை மாதிரி வாந்தி கூட வரும்.

"ஹலோ, ஹலோ, லைன்ல இருக்கீங்கல்ல, வெச்சுட்டீங்களோனு பாத்தேன். அப்பறமா, அடுத்த மாசம் நவராத்திரி கொலு வருதே. நீங்க ஒண்ணு செய்யுங்க. எங்க அம்மாவோட கூடவே போய்க் கொஞ்சம் பொம்மை வாங்கிட்டு வந்துருங்க"

'ஏதோ சின்னக்குழந்தைக்குக் கிலுகிலுப்பை வாங்கி வரச் சொல்கிறாள், ஈதென்ன பிரமாதம்' என்கிற நினைப்பில் நாயகன் வழக்கம் போல், சரியாகப் புரிந்து கொள்ளாமல், முகம் கோணாமல், தலையாட்டுவான்.

ஆபத்து அங்கே தான் உருவாகும். அது தான் கொலுமூலம்.

மாமனார் வீட்டிலிருந்து ஒரு படையே பஸ்ஸிலும் ஆட்டோவிலும் பறந்துபோய், 'காதி கிராமோத்யோக் பவன், காதி கிரா·ப்ட், கர்நாடகா பஜார், கைரளி' என்று 'க' வரிசையில் ஆரம்பித்து '·' வரை வகை வகையாக அரை இஞ்சிலிருந்து ஆள் உயரம் வரை பொம்மைகள், படங்கள், பீடங்கள், சிலைகள், சீலைலள் என்று வாங்கி வந்து நடுக் கூடத்தில் அடுக்கி விடுவார்கள்.

அத்தானின் எதிரிலேயே அமெரிக்காவுக்குப் போன் போடப்பட்டு 'அத்தான் பாவம், ரொம்ப சமத்து. எல்லாத்தையுமே அமெரிக்காவுக்கு எடுத்துட்டுத்தான் போவேன்னு அடம் புடிக்குறாரு. நீ ரொம்பக் கொடுத்து வெச்சவடி, இவளே, அப்படியே இந்த நவராத்திரிக்கு ஆரெம்கேவியில 'புதுசு மாமா புதுசு'ன்னு ஒரு சீரிஸ் வந்திருக்கு. அதுல நாலு பொடவையும் அவரையே வாங்கியாரச் சொல்லு. அளவு ஜாக்கெட்டு என் கிட்டத்தானே இருக்குது"

நடுக்கூடமே கலகலக்கும். வளையல்கள் சிரிக்கும். வாண்டுகள் பறபறக்கும். நம் நாயகனின் பல் நறநறக்கும்.

யு கெட் தி பாயிண்ட், மை லார்ட்ஸ்?

சணல் கட்டிய அழுக்கு அட்டைப்பெட்டிகளில் தசாவதார செட்டையும், யாளிகளையும், யானைகளையும், கருடசேவை செட்டையும், கீதோபதேசத்தையும், சீதாராமலட்சுமணபரதசத்ருக்னசமேதஸ்ரீ ஆஞ்சநேயரையும் ஏர்போர்ட்டில் WMD போல் பார்ப்பார்கள். எந்த ஸ்டாண்டர்ட் ஏர்போர்ட் பெட்டிகளிலும் அடங்காமால் தஞ்சாவூர்ச் செட்டியார் சிரிப்பாய்ச் சிர்ப்பார்.

"பொட்டிங்கள்லாம் செம வெய்ட் சார். எல்ஸ்ட்ரா பேமெண்ட் ஒரு இரண்டாயிரத்து முந்நூறு டாலர் ஆவுதே' என்று கவலைப்படாமல் ஏர்போர்ட் சிப்பந்தி கண்ணாடி வழியே மொழிவார்.

நம் நாயகனுக்குச் 'சொரேல்' என்று இழுக்கும். வெறும் மண் பொம்மைகளுக்கு இத்தனை அதிகப்படி சார்ஜா?

"வேணாம்னா கீழ எடுத்துப் போட்றுங்க. ஏய் பீட்டர், இதையெல்லாம் எடுத்துக் கடாசு. நெக்ஸ்ட்"

பீட்டர் எதையாவது எடுத்துக் கடாசி உடைத்து விட்டால் கலாசார யுத்தமே நிகழ்ந்துவிடும் பேரபாயம் இருக்கிறது. 'எல்லாவற்ரையும் அத்தான் பத்திரமாக எடுத்துப் போகிறாரா?" என்பதை வேவு பார்ப்பதற்காகவே ஒரு பெருங் கூட்டம் கண்ணாடி வழியே கண் கொத்திப் பாம்பாய்ப் பார்த்திருக்கும். எதையேனும் தூக்கிக் குப்பைத் தொட்டியில் வீசி விட்டால், பத்தாயிரம் மைல் தள்ளிக் கட்டாயம் வெடித்து விடக்கூடிய யுத்த பயத்தில் நாயகன் ஏர்போர்ட் ஆ·பீசரைக் கெஞ்சுவான்: வழிவான்.

கேவலமான காட்சி இது. "கஸ்டம்ஸ் ராமமூர்த்திக்கு இன்னிக்கு நைட்டூட்டி இல்லியா சார்? ஏர்போர்ட் மேனேஜர் கூட என் மாமனாரோட ஒண்ணுவிட்ட தம்பிக்கு ..."

நாயக பாவத்தைக் கேட்கத்தான் ஆள் இருக்காது.

பரமாத்மா மகாவிஷ்ணுவின் மர தசாவதாரம் அவருடைய பல கைகளாலேயே மடிக்க முடியாத மரப்பாச்சி செட். அற்பர்கள் இரண்டு சோனிக் கையாலா மடிக்கமுடியும்? சியட்டிலில் போயிங் 747 கட்டுபவர்களை நிற்கவைத்துச் சுட வேண்டும். கார்கோ ஹோல்டுக்குள்ளும் போகாமல், கையோடு விமானத்துள்ளும் எடுத்துப் போக முடியாமல், கடாசவும் குடியாமல் பன்னாட்டு விமான நிலையத்தில் பல நாயக நண்பர்கள் அழுது புலம்புவதை நான் கண்ணாரக் கண்டிருக்கிறேன்.

அடியேன் கதையையும் ஒரு முறை சொல்லி அழுது விடுகிறேன். அன்பு வாசகர்கள் உங்களிடம் சொல்லாமல் யாரிடம் நான் சொல்லி அழ? பப்பளக்கும் பலப்பல வைரவைடூரியப் போலி நகைகளுடன் பகவான் வெங்கடாசலபதியை நான் பட வீரப்பன் போல் திருப்பதியிலிருந்தே கடத்துகிறேன் என்று சந்தேகித்த கஸ்டம்ஸ் அதிகாரி ஒருவர் ஒருமுறை என்னைத் தன் மீசையை ஒதுக்கியபடி ஓரங்கட்டினார். நான் பவ்யமாக, 'சார், லார்ட், காட், ஸ்வாமி, உம்மாச்சி, கண்ணைக் குத்திடும்' என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்ததை அவர் கண்டுகொள்ளவில்லை. பூட்சைக்கூடக் கழட்டாமல், அகிலமெல்லாம் தரையில் புரண்டு அங்கப் பிரதசிணம் செய்து தொழும் ஆண்டவனை முதலில் படுக்கவைத்து எம்ஆர்ஐ மாதிரி ஏதோ செய்தார்கள். 'ஒரிஜினல் பாபாலால் டைமண்ட்ஸ்' என்றான் ஒரு ஜுனியர் கஷ்டம்ஸ் பிரகிருதி. நான் முறைத்தேன். 'ஓகோ' என்று பதிலுக்கு என்னை முறைத்து அங்கேயே ஐந்தாறு பேரோடு ஒரு அவசர மீட்டிங் போட்டான்.

பிலிப்ஸ் ஸ்க்ரூ டிரைவர் கிடைக்காமல் நெயில்கட்டர் மாதிரி எதையோ வைத்துப் பகவானை நெம்பி நெம்பிப் பார்த்தார்கள். உலலளந்த பெருமாள் அப்போதும் சிரித்தபடியே இருந்தார். நான் அழ ஆரம்பித்தேன். கடைசிச் சோதனையாக, அப் படத்தை அவர்கள் 220 வோல்ட்டில் செருகித் தீவிரமாக ஆராய முற்பட, அப்பிராந்தியமே பழைய எண்ணெயில் பப்படம் சுட்ட புகை போல கமற, பிரத்தியேகமாக அப்படம் 110 வோல்டேஜுக்காகத் தயாரானது என்கிற உண்மை எல்லோருக்குமே படு லேட்டாக என்னால் சொல்லப்பட.... வேண்டாம், என் சொந்த சோகங்களும், ஜோடித்த சோகங்களும் என்னோடே போகட்டும். நாயகன் கதைக்கே திரும்புவோம். பக்தர்களை ஆண்டவன் ரொம்பவும் தான் ஏர்போர்ட்டில் சோதிக்கிறார்.

அப்பாடு பட்டு அத்தனை சாமிகளையும் பொம்மிகளையும் நம் மதுரை வீரன் எடுத்து வந்து அமெரிக்க லிவிங் ரூம் கார்ப்பெட்டில் வைத்தால், அய்யகோ, அந்தக் காட்சி காண்பவர் எவரையுமே கலங்கடித்து விடும். கை போன கன்னியரையும், தலை இல்லாக் கடவுளரையும், வில்நசுங்கிய வீரராமரையும், வீணையின் தந்தி அறுந்த மீராபாயையும் கண்டு நாயகி பெருங்குரலில் கண்ணகியாய் ஓலமிடுவாள்:

"உங்களுக்குக் கொஞ்சமாவது ஒரு இது இருக்கா? லலிதா புருஷனப் பாருங்க, பெங்களூர்லேருந்து ஒர் சந்தனக் கட்டிலையே பண்ணிக் கொணாந்திருக்காரு. மேட்சிங்கா டைனிங் டேபிள் வேற. நம்ம நளினி புது வீட்ல ரோஸ்வுட் ஊஞ்சல், ஒரு கீறல் இல்லாம வந்து சேரலியா? உங்களுக்கு இதுக்கெல்லாம் சமத்தே போறாதுங்க. சும்மா ரெண்டே ரெண்டு பொம்மை கொண்டு வாங்கன்னா, எல்லாத்தயும் வாங்கி ஒடச்சிக் கூடையில மொத்தமாப் போட்டுக் கொண்டாந்திருக்கீங்க. எங்க அம்மா மனசு என்ன பாடு படும்?"

நம் நண்ப நாயக மனம் படும் பாடு பற்றி எவரும் கிஞ்சித்தும் கவலைப்படார்.

மறு நாள் முதல் ஆ·பீசிலிருந்தும், 'ஆபீஸ் டெப்போ' போன்ற கடைகளிலிருந்தும் கோந்து முதலான ஒட்டு சாமான்கள், குயிக் ·பிக்ஸ், பெயிண்ட் வகையறாக்கள் தருவிக்கப்பட்டு, முதல் உதவி, பேண்டேஜ், எமர்கென்சி அறுவை சிகிச்சை போன்றவை அதே நடுக் கூடத்தில் நடக்க ஆரம்பிக்கும்.

கடவுளர் மீண்டும் உயிர் பெறுவர். நடன மாது சிருங்காரச் சிரிப்புடன் தொட்டவுடன் மீண்டும் நடம் ஆடுவாள். குணப்படுத்தப்பட்ட்ட குதிரைகளேறிக் கண்ணன் மீண்டும் கீதோபதேசம் செய்வான்.

தானே தன் கையால் எல்லாவற்றையும் சரி செய்து விட்டதாக அம்மாவிடம் அவள் பீற்றோ பீற்றென்று பீற்றிக் கொள்ளும்போதும், 'அதனால பரவால்லம்மா, அடுத்த விசிட் இவர் வரும்போது கல்யாண செட்டு வாங்கிக் குடுத்துடுங்க' என்னும்போதும் நாயகன் காட்டவேண்டிய முக பாவம்: வெறும் 'கப்சிப் கபர்தார்' மட்டுமே.

வர்ஷ ருதுவின் புரட்டாசி ஆரம்பத்தில் ப்ரீ-நவராத்திரி வியூயிங் என்று ஒன்று ஐந்திரக் கண்டத்தில் உண்டு. இப்போது எது ·பேஷன், எந்தக் கலர் புடவைக்கு எந்த நகை மேட்சாகும் என்பது போன்ற அத்தியாவசியத் தகவல்கள் தவிர, எந்த சாமிக்கு இந்த வருஷம் மேற் படி ப்ரமோஷன், பார்பி, கென், பொம்மைகளை இந்துத்வாப் படிகளில் வைக்கலாமா, கூடாதா என்றெல்லாம் நங்கையர் கூடிக் கூடிப் பேசுவார்கள்.

எந்தெந்த பொம்மைகளை யார் யார் எப்படி உடைத்து எடுத்து வந்தார்கள், எந்த அன்னை தெரசா அதற்கு எப்படி வைத்தியம் பார்த்தார் என்கிற விபரங்களும் அலசப்படும்.

அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் தான் 'கொலுப்படி கட்டுவது எப்படி?' என்கிற பேச்சு எழுந்தது.

(ஹவாயியில் ஆயுத பூஜைக்குள் முடித்து விடலாம். கவலைப்படாதீர்கள்.)

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

பி.கு.2: முதல் பி.கு. வுக்கு வந்திருக்கும் அநேக பதில்கள் அலசப்படுகின்றன. பொறுமை, ப்ளீஸ்!

Wednesday, October 20, 2004

அவ(¡)ளோட ராவுகள் -1

அவ(¡)ளோட ராவுகள் -1
__________________

ஊசி முனையில் அம்பாள் ஈஸ்வரனை நினைத்துக் கடுந்தவம் புரியும் இந்தப் புனித நவராத்திரி நோன்பு நாட்களில், ஒவ்வொரு நாளும் அம்பிகையின் ஒவ்வொரு குணாதிசயத்தைப் பௌராணிகர்கள் போற்றிப் புகழ்ந்து தேவி மகாத்மிய பாகவதம் பாடிக் கொண்டிருக்கும் புண்ணியமான பண்டிகை காலத்தில், இப்படிப்பட்ட ஒரு மலையாளப் படத் தலைப்புடன் இதை நான் எழுத நேர்ந்திருப்பது நிறையவே விசனிக்கத் தக்கது.

இதற்காக நான் வருந்துவது கொஞ்ச நஞ்சமில்லை. இருந்தாலும் என் கடமையே நான் செவ்வனே செய்தாக வேண்டும்.

தாரண வருட சரத் ருதுவின் துலா மாதப் புண்ணிய காலத்தில் இப்படியெல்லாம் அபஜருத்து மாதிரி எழுதுவதற்காக நான் அதல பாதாளத்துக்கும் கீழே ஒரு பயங்கர லோகத்தில் எந்த எண்ணெய்க் கொப்பரையில் எப்படி வெந்து 'தையா தக்கா' என்று குதிக்கப் போகிறேனோ தெரியவில்லை. நான் வாங்கிப் போட்டிருக்கும் என் புது ஜட்டியை அப்போது என்ன செய்வார்கள்? தலை தீபாவளிக்கு என் மாமனார் எனக்கு ஆசை ஆசையாய் வாங்கிப் போட்ட என் மைனர் செயின் (14 காரட்) என்ன ஆகும்? "இனிமே இப்படியெல்லாம் எழுதுவியா, மவனே? உனுக்கு இம்போர்ட்டட் மலேசியன் ச·போலாவா கேக்குது? கையேந்தி பவன் கருகல் எண்ணெய லாரி டீசலோட கலந்து கலாய்ல ஊத்துப்பா இவுனுக்கு" என்று எண்ணெய்க் கொப்பறை இன் சார்ஜ் எம கிங்கரர்கள் கை கொட்டிச் சிரித்து மகிழலாம்.

நான் செய்கின்ற பாவம் அவ்வளவு கொடியது தான்.

இருந்தாலும் சில உண்மைகளே, நோம் காலம், மீனம், மேஷம் பார்க்காமல், உடனே விளம்பத்தான்- உண்மை புரிந்தவுடன் சொல்லத்தான்- வேண்டும். இந்தப் பேருண்மையைப் புரிய வைத்ததற்காக ஆணினமே எனக்கு வருங்காலத்தில் பெருங்கடன் பட்டிருக்கப் போகிறது என்பதை நினைக்கையில் நான் கொஞ்சம் தெம்பாக விசும்புகிறேன்.

ஆமாம், இது என்ன இந்தக் கட்டுரைக்கு இப்படி ஒரு தலைப்பு?

அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

இதுவே என் நாடக ஸ்கிரிப்டாக இருந்தால் கடைசிக் காட்சியில் யாரையாவது இந்தத் தலைப்பை மூன்று முறை சொல்லவைத்து- என்னங்க சொல்றது அந்தச் செம்மொழி வார்த்தைக்கு? ஆஹா நினைவுக்கு வந்து விட்டது- 'ஜஸ்டி·பை' பண்ணியிருப்பேன். சினிமாவாக எடுத்திருந்தால் கே. பாலச்சந்தர் பாணியில் கரும்பலகையிலாவது இந்தத் தலைப்பை எழுதி அதே ஜ.வைப் பண்ணியிருக்கலாம். ஆனால் இதுவோ இணையக் கட்டுரை.

நல்ல நாளிலேயே மரத்தடியர்கள் இந்த மாதிரி ஆராய்ச்சிக் கட்டுரையெல்லாம் படிக்க மாட்டார்கள். காதல் கவிதை பற்றி யாராவது கிலோக் கவிஞர்கள் கருத்து தெரிவித்தால் கூர்ந்து கவனித்துப் பதிலுக்கு பதில் வெயிட்டாகக் கவிதை எழுதிக் கலாய்த்து மகிழ்வார்கள்.

'ஆராய்ச்சிக் கட்டுரையா? அதுவும் நவராத்திரி பற்றி இன்னோரு கட்டுரையா? சரி, சரி' என்று கொட்டாவி விட்டுக்கொண்டே மகாஜனம் 'மனைவி'யோ, 'மெட்டி ஒலி'யோ பார்க்கச் சென்று விடக்கூடிய மகா அபாயம் நிஜமாக இருக்கிறது.

இந்த அவசர யுகத்தில் இப்படி ஏதேனும் மலையாளப்படம் மாதிரித் தலைப்பு கொடுத்தால்தான் மரத்தடி மகாஜனங்கள் 'அட' என்று சொல்லி ஆழ்ந்து படிப்பார்கள்.

'எதற்காக இவ்வளவு பெரிய பீடிகை?' என்கிற கேள்வி உங்கள் அடி மனதில் துளிர் விட்டு இலை, தழை, காய், கனியெல்லாம் கனிய ஆரம்பிப்பது எனக்கும் தெரியும். நானும் மகா மரத்தடியன் தானே, எனக்கா தெரியாது?

கொஞ்சம் பொறுங்கள். நான் சொல்லப்போவது உங்களுக்குப் பேரதிர்ச்சி தரக்கூடிய உண்மை. இரவில் தனியே இதைப் படிக்க நேரிடுபவர்கள் மறு நாள் காலை வரை இதை ஒத்திப்போடுவது நலம். தனியே படிக்க நினைப்பவர்கள்- வேண்டாம், ப்ளீஸ்1 துணைக்கு ஒரு நாலைந்து ஆண்களைப் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

'ஆண்களை' என்று சொன்னதைக் கவனித்தீர்கள் அல்லவா?

சட்டுப்புட்டென்று விஷயத்தை ஆரம்பிக்கிறேன்.

நவராத்திரி என்பது அம்பாளைக் கொண்டாடிப் பெண்டிர் நோன்பு நோற்று மகிழும் பண்டிகையே அல்ல. அதை நம்பாதீர்கள். ஆணினத்தை அடிமைப்படுத்தி அவலப்படுத்துவதே இதன் முதற் பெரும் நோக்கம். இதை எந்த அகழ்வாராய்ச்சியாளரும் இது வரையிலும் மெசபடோமியாவிலோ, ஹரப்பாவிலோ தோண்டித் துருவிக் கண்டுபிடிக்கவில்லை. ஏன் என்பதைப்பற்றி எனக்கு இப்போது கவலையில்லை.

அ·து பற்றிப் பிறகு கவனிப்போம்.

ஆனாலும், வாயில் பெயர் நுழையாத யுவான் சுவாங், குலாய்ங் டுபாக்கூர், ஜான் மெக்·ப்ராட் என்று யாராவது வெளிநாட்டுக்காரன் இதைச் சொல்லியிருக்கிறான் என்றால் உடனே நம்பி உருப் போட்டு உருப்படியாகப் பரீட்சையில் மார்க் வாங்குகிற வழியைப் பார்ப்ப்£ர்கள். ஏழை எல்லே வில்லோன் என் சொல் அம்பலம் ஏற வேண்டுமானால் நான் இதை உடனே நிரூபித்தாக வேண்டும் என்று படுத்துவீர்கள். இல்லையா? தெரியும், செய்கிறேன்.

ரிலேட்டிவிடி பற்றி இப்படி ஏதோ குன்சாகச் சொன்ன ஐன்ஸ்டினையே 'ப்ரூ·ப் எங்க வாத்யாரே?' என்று கேட்ட பொல்லாத உலகமல்லவா இது? அவர் சொன்ன e=mcஸ்கொயர் விஷயம் எனக்கும் என் போன்ற மூன்று பௌதிக மெய்யடியார்களுக்கு மட்டுமே தெள்ளெனச் சுளீரென்று புரிந்தது என்பது வேறு விஷயம். இருந்தாலும் இன்று வரை அது ரொம்பப் புரிந்து விட்டாற்போல் எல்லோருமே தலையாட்டி வருகிறார்கள் இல்லையா?

என் மிகச் சமீபத்திய கண்டுபிடிப்பான 'அவ(¡)ளோட ராவுகள்' பற்றிய என் விஞ்ஞான ஆய்வுக் கட்டுரை இது.

(பயப்படுங்கள்- இது தொடர்ந்தே தீரும்)

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

பி.கு: ஒரு பம்பரம் 15 ரூபாய, பட்டம் 23 ரூபாய், மாஞ்சாக் கயிறு ஒரு கண்டு முப்பது ரூபாய் என்றால் இந்தக் கட்டுரைக்குக் கிடைக்கப் போகும் நோபெல் பரிசுத் தொகைக்கு எத்தனை கோலி வாங்க முடியும்? ஐன்ஸ்டின் மாதிரி யோசியுங்கள் நண்பர்களே!

Wednesday, October 06, 2004

சர்வாதிகாரியாக நானிருந்தால் ...

'சர்வாதிகாரியாக நானிருந்தால்?'
-------------------------------------------
(லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்)

அழுக்குக்கரை வேட்டியில்
அரைக்கிலோ எண்ணெய்ச்சிக்கோடு
அக்குளில் சிவப்புத்துண்டால்
ஆனந்தமாய் நான் சொறிந்தபடி

தூணில் சாய்ந்திருந்தால்
கானம் இசைத்திருந்தால்
வீணே படுத்திருந்தால்
ஆஹா பொறுக்குமோ சந்தவசந்தம்?

அவசரமாய் எழு சீக்கிரம்
அல்வா கிளறியது போதும்
பொட்டலம் கட்டிப்போடென்று
மிரட்டுகிறார்கள் விரட்டுகிறார்கள்
தர்ம அடியாம் எழுதாவிட்டால்
ஆட்டோ வருமாம்
ஆசையாய்த் தட்டுமாம்

·பாஸ்ட்·பூட் காலமய்யா
நளபாகம் என்ன செய்யும்?
தலைப்பை அவர்களே
தருவார்களாம்
கலப்பையை மட்டும்
நான் ஓட்டினால் போதுமாம்

அடுப்பில்
அண்டா கொதிக்கிறது
ரசம் பதைக்கிறது
ஆங்காங்கே அரிக்கிறது
சொறியவும் நேரமில்லை
செப்புகிறேன் அவசரமாய்

----------------------------

மூத்தோனுக்கும்
மூப்பில்லா
வசந்த இளைஞருக்கும்
முதற்கண்
என் வணக்கம்
---------------------------

'சர்வாதிகாரியாக நானிருந்தால்?'

நான் சொல்லுவது இருக்கட்டுமய்யா
நாடென்ன சொல்லுமிதற்கு
நாமெல்லாம் தெளிவோமென்று
நண்பர்களை முதலில் கேட்டேன்

"எலுமிச்சை தலையில் தேய்
எரவாடிக்கு வேண்டிக்கொள்
வைத்தீஸ்வரனும் பரவாயில்லை
பைத்தியம் தெளிந்துவிடுமெ"ன்று
பகர்ந்தார்கள் கொடியவர்கள்

மங்கை பகர்வாள் உண்மையென்று
மாண்புமுகு மனையாளைக் கேட்டேன்

சிந்திய மூக்கும் சிவந்த கோபமுமாய்
வெடித்துக் குமுறினாள் வேகமாக:
"இப்போது மட்டுமென்ன
இங்கே ஜனநாயகமா?
எனக்குத்தான் நாதியுண்டா?
எல்லாம் என் தலையெழுத்து
எப்போதும் கொத்தடிமை
நாற்பது கிலோவுக்குமேலெனக்கு
நகையுண்டா நட்டுண்டா?
நல்ல காக்ராவில்
நாலைந்து டஜன் தானுண்டா?
ஆயிரம் ஜோடிக்கு மேல்
எனக்குத்தான் செருப்புண்டா?
சர்வாதிகாரி நீர் என்பதில்
சந்தேகம் வேறொரு கேடா?
சாட்சிக்கு வேண்டுமானால் என்
சொந்தங்கள் கூப்பிடவா?"
சதாய்த்தாள் கொதித்தாள்
என் சந்திரபாய் ஜக்குமுகி
பயம் கலந்த பணிவன்புடன்
நான் ஜகா வாங்கினேன்

பணியகத்தில் கேட்டால்தான்
பதில் கிடைக்கும் இதற்கென்று
பகர்ந்தேன் பண்பான
பல தொழிலாளிகளிடமும்

"எப்போது? ஏனிது? எவன் சொன்னது?
பாஸ், நீங்களா? சர்வாதிகாரியா?"
பதறித்தான் போனார்கள் என்
கண்ணின் கருமணிகள்

"சொன்னவன் யார்? சொல்லுங்கள் சீக்கிரம்
அவன் வாயில் போடவேண்டும்
அரைக்கிலோ சர்க்கரை
அப்புறம் தேன் பால்
அப்படியே சிங்கிள் மால்ட்"
ஒரே குரலில் ஓநாய்கள்
பணியிடத்துக் கருங்காலிகள்

உண்மை தெரிய
ஒரே வழிதான் இருக்கிறது

கண்ணாடி முன் நின்றேன்
காதலாகிக் கசிந்துருகினேன்
நரைதெரியா அழகு நண்பா
சிரிக்காமல் சொல்லப்பா
இருந்திருந்து உனக்கென்ன
இருபத்தி ஐந்திருக்குமா?

கண்ணாடி நண்பன்
கண்சிமிட்டிச் சொல்வான்:

சர்வாதிகாரியாக நீயிருந்தால்
ஐம்பதாயிரம் கோடிச்செலவில்
அணைகளோடு நதியிணைப்போ
வெளிநாட்டு மருமகளோ
உள்நாட்டு தாடிச்சிங்கமோ
ஊர்வலமோ வெடிகுண்டோ
அரசியலோ அடிதடியோ
ஒன்றுமே இருக்காதப்பா

பசியோ பட்டினியோ
ஜாதிச் சண்டைகளோ
சாலைகளில் நெரிசலோ
மறந்தே போகுமப்பா

சாலையில் துப்பினால்
நீ கசையடிப்பாய்
ஜிப்பைத் திறந்தாலே
கத்திரி போடுவாய்

சாம்பார் வரும் குழாய்களில்
சட்னி வரும் வீடு தேடி
அனைவருக்கும் பிரியாணி
அவ்வப்போது பொட்டலங்கள்
குழைந்த வயிறுகள்
கும்மென்றாகி விட்டால்
கூப்பாடு குறைந்து விடும்
ஊர்வலங்கள் தூங்கிவிடும்
குறட்டை ஓங்காரத்தில்
அமைதிப்புறா அசைந்தாடும்
நாடே அயர்ந்துவிடும்

சாயங்காலவேளைகளில்
ஊரெங்கும்
உற்சாகம் ஊற்றெடுக்க
உடனே நீ வழி செய்வாய்
சிங்காரச் சென்னையில்
சிருங்காரமும் ரீங்காரமிடும்

ஓடிப்போய் உடனே சொல்லி
ஊரைக்கூட்டியொரு பேட்டி கொடு
பேப்பரைப் பார்க்காதே
தாப்பரைச் சீண்டாதே
அம்மா போல் சீறாதே
அம்மம்மா உன் புகழ்
அகிலமெல்லாம் பரவிவிடும்
அனைவருமே சிரிப்பார்கள்
என்றான்
என் நல்ல நண்பன்


Friday, October 01, 2004

அமெரிக்க அரசியல் (அக். 1 '04)

அமெரிக்க அரசியல்
--------------

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 4-ல் கண்டிப்பாக நடைபெறும். அதற்கு முன்னால் ஒரு சம்பிரதாயச் சடங்கும் நடப்பதுண்டு. தேர்தலுக்கு முன்னால் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரும், குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் நேருக்கு நேர் மோதிக் கொள்வது வழக்கம். அரிவாள், ஈட்டி, உருட்டுக்கட்டை, ஆட்டோ இல்லாமல், பிரபல மூத்த பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அவர்கள் தன்னிலை விளக்கம், கொள்கை விளக்கம் கொடுப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்படும்.

அத்தகைய ஒரு 'டிபேட்'- இந்த சீசனுக்கு மொத்தம் மூன்றில், இது முதலாவது- நேற்றிரவு நடந்தது. 90 நிமிடங்கள் நடந்த இந்தக் கௌரவ யுத்தத்தின் போது எந்த விதமான ஆதரவு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இருக்கக்கூடாது என்பதும் ஒரு கண்டிப்பு. ஓப்பன் லாரியில் கும்பலாகவோ, ஆட்டோவின் முன் சீட்டில் தொங்கிக்கொண்டோ, பொடிநடையாகவோ எந்தக் கட்சித் தொண்டர்களும் அங்கே வந்து 'வூடு கட்டிக்' கர்ஜனை முழக்கம் ஏதும் செய்யவில்லை.

அமெரிக்க அரசியலில் இது ஒரு முதிர்ச்சியான அங்கம். பாராட்டப்பட வேண்டிய அம்சம். இந்தியாவிலும் நாமும் இதைப் பின்பற்ற வேண்டும். கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒரே மேடையிலா? நினைத்துப் பார்க்கவே பயமாயில்லை?

சரி. நேற்றைய கோதாவில் நடந்தது என்ன?

அமெரிக்காவின் வெளிநாட்டு உறவு நேற்று பிரதானப்படுத்தப்பட்டது. தீவிரவாதம், அணு ஆயுதத் தயாரிப்பு தடுப்பு, ஈராக் யுத்தம் போன்றவற்றில் அதிபர் புஷ்ஷின் நிலையும், செனட்டர் கெர்ரியின் எதிர்நிலையும் தெளிவுபடுத்தப்பட்டன. கடந்த நான்காண்டுகளில் புஷ் செய்திருக்கும் குளறுபடிகள், திடீர் பலடிகள், அநியாயங்கள் அனைத்தையும் கெர்ரி புட்டுப் புட்டு வைத்து விட்டார்.

இத்தனை நாட்களாக இந்தக் கெர்ரியை புஷ்ஷடிவருடிகள் எப்படியெல்லாம் சதாய்த்தார்கள்?

கெர்ரியை 'வழவழா கொழகொழா பேர்வழி' என்றார்கள். 'இந்தாளுக்கு அனுபவம் பத்தாதுங்க, வேலைக்குப் புச்சு. சும்மனாச்சிக்கும் பெனாத்தறான்' என்றார்கள். 'சதாம் ஹ¤சேனப் போயி ஒரு சாத்து சாத்தலாமாடான்னு எங்காளு புஷ்ஷ¤ கேட்டப்ப இந்தாளு 'அடி தூள் கெளப்புமா, போலாம் ரைட்டு'ன்னு பிகிலு வுட்டுட்டு இப்ப வந்து கருங்காலி வேலை செய்யுறான் சார்' என்றார்கள்.

ஜான் கெர்ரியைப் பற்றியும் மீடியாக்காரர்கள் இதுவரை அடக்கியே வாசித்தார்கள். மீடியாக்கள் அனைத்தும் புஷ்ஷின் துதிபாடிகளாகவே மாறிக் காதைக் கிழித்து என் போன்ற நடுநிலையாளர்களை வேதனைப்படுத்தின.

ஆனால், நேற்று முதன்முறையாக அவை எல்லாவற்றையும் ஜான் கெர்ரி அடித்துச் சுக்குநூறாக்கி விட்டார்.

தெளிவான கொள்கை விளக்கம், ஆணித்தரமாக அடுக்கி வைக்கப்பட்ட பாயிண்டுகள், கோபப்படாமல் புஷ்ஷின் கோமாளிப் பதில்களை அவர் எதிர்கொண்ட விதம்- அனைத்துமே அமெரிக்கர்களுக்கு ஒரு புது நம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றன.

அதிபர் புஷ்ஷின் இன்றைய அமெரிக்கா இதுவரை என்ன செய்திருக்கிறது?

இன்றையத் தேதியில் அமெரிக்கா இருப்பது மிகப்பெரும் இக்கட்டில். உலகெங்கிலும் சரவதேச பயங்கரவாதம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் அமெரிக்களால் வளர்த்துவிடப்பட்ட அல் கொய்தாவின் சாம்ராஜ்யம் 60 நாடுகளில் பரந்து விரிந்திருக்கிறது. மத்தியக் கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களைப் படுத்தித் துன்புறுத்துவது கொஞ்சமும் குறைந்தபாடில்லை. பாலஸ்தீனியர்கள் கோபத்தில் கல்லெறிந்தால் அமெரிக்காவின் செல்லக் குழந்தை பதிலுக்கு அவர்கள் தலையில் அணுகுண்டே போடுகிறது. கேட்க ஆளில்லை.

ஈராக் சொதப்பலைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அரசாங்கக் கணக்குப்படியே அங்கே இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் உயிர் இழந்திருக்கிறார்கள். பல்லாயிரக் கணக்கில் இளைஞர்கள் முடமாகியிருக்கிறார்கள். இதுவரை 200 பில்லியன் டாலர்கள் செலவாகி இருக்கிறது. இன்னும் எத்தனை பில்லியன்கள் ஆகுமோ தெரியவில்லை. அநியாயமாக மடிந்து போன ஈராக்கியரின் எண்ணிகைக்குக் கணக்கே கிடையாது. நொண்டிக் கூட்டணி ஒன்றைச் சேர்த்துக்கொண்டு பம்மாத்து பேசினாலும் 90 சதவீதம் பணச்செலவும் உயிர்ச்சேதமும் அமெரிக்காவுக்குத்தான். ஆனால் இதெல்லாம் போதாதென்று சமீபத்தில் அமெரிக்க காங்கிரசிடம் இன்னும் பல கோடி டாலர்கள் வேண்டுமென்று அரசாங்கம் கையேந்துகிறது.

'There is a backdoor drafting going on in this country right now" என்று முழங்கினார் கெர்ரி.

செப்டம்பர் 11க்குப் பிறகு, ஆ·கானிஸ்தானில் ஒளிந்திருக்கும் ஒஸாமா பின் லேடனைத் துரத்துகிறேன் பேர்வழி என்று சம்பந்தமே இல்லாமல் ஈராக்கிற்குள் புகுந்து, வேண்டுமென்றே பிரச்னையைத் திசைதிருப்பி, அங்கே பேரழிவு ஆயுதங்கள் ஆயிரக் கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கப்சா விட்டது, ஆயிரத்தெட்டுக் குள்ள நரித் தந்திரங்கள் பண்ணி சதாம் ஹ¤சேனைப் பிடித்ததாகப் பீற்றிக்கொண்டது, ஐக்கிய நாடுகள் சபையைத் தொடர்ந்து கேவலப்படுத்தியது, லண்டன் அடிவருடி டோனி பிளேயரைத் தவிர அத்தனை உலக
அதிபர்களையும் பகைத்துக்கொண்டது, குபேர ஆயில கம்பெனிகளின் பேராசையைத் தீர்ப்பதற்காக மட்டுமே அமெரிக்காவை இப்படிப்பட்ட இக்கட்டில் சிக்கவைத்து விட்டது, பெரும்பெரும் பணமுதலை ரசாயனக் கம்பெனிகளின் பணத் தாகத்தைத் தீர்ப்பதற்காக சர்வதேச மாசுக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டது, பாகிஸ்தானைத் தத்துப்பிள்ளையாப் பாலுட்டி வளர்த்துவிட்டு இப்போது அவர்கள் அணு ஆயுதத் தயாரிப்பிற்கான அத்தனை ஆயத்தங்களையும் பல எதிரி நாடுகளுக்குச் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்ததும் கையைப் பிசைந்து கொண்டு அசடு வழிவது, வட கொரியாவின் அணு ஆயுதங்களை முடக்க முடியாமல் சொணங்கித் தவிப்பது ...இப்படியான அடுக்கடுக்கான குளறுபடிகளால் அதிபர் புஷ் அமெரிக்காவின் கௌரவத்தை அதல பாதாளத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார்.

இவை அனைத்தையும் ஜான் கெர்ரி புட்டுப்புட்டு வைத்தார். ஆதாரங்களுடன் சொன்னார். 'தப்பு என்று தெரிந்த பிறகும் கூடத் தொடர்ந்து பாறாங்கல்லில் தான் மண்டையை முட்டிக்கொள்வேன்' என்கிற முட்டாள்தனமாக போக்கைக் கண்டித்தார்.

"முதலில் அணு ஆயுதத் தயாரிப்பை நாம் கைவிட வேண்டும். பிறகு தான் நாம் சொல்வதை மற்றவர்கள் நம்புவார்கள்"- என்றார். ""உலக அரங்கில் நாம் நம்பத்தகாதவர்கள் என்கிற அவப்பெயர் வந்துவிட்டது, அதை முதலில் போக்கவேண்டும்" என்றார். "ஒஸாமா பின் லேடனை மலைக்குகைகளிடையே சுற்றி வளைத்த பிறகு அமெரிக்கத் துருப்புகளை அங்கே அனுப்பி ஒஸாமாவைப் பிடிக்காமல் ஆ·ப்கானிய அடியாட்களை அங்கே அனுப்பிவிட்டு நாம் வேடிக்கை பார்த்தது தப்பு" என்று கண்டித்தார். "ஈராக்கில் நுழைந்ததும் நுழையாததுமாக நம் அமெரிக்கத் துருப்புகள் ஓட்டமாக ஓடிப்போய் அங்கே இருக்கும் எண்ணெய் ஆலைகளையும் பெட்ரோலியச் சுரங்கங்களையும் மட்டுமே காவல் காத்த கேவலம் ஏன்?" என்று கேட்டார். முக்கியமாக, "துணை அதிபர் டிக் செய்னி சார்ந்த ஹாலிபர்டனுக்கு மட்டுமே எல்லா புனரமைப்பு நிர்மாணக் காண்டிராக்டுகளும், எங்களுடன் சேர்ந்து சண்டை போடாதவர்களுக்கு அல்வாதான்" என்றது ஏன் என்றும் வினவினார். "யுத்தம் என்பது மிகக் கடைசியான ஆயுதமல்லவா, பேச்சு வார்த்தைகளை முடிக்காமல் அதை எப்படிப் பயன்படுத்தினீர்கள்?" என்று கேட்டார்.

சரி. இதற்கெல்லாம் அதிபர் புஷ் என்ன பதில் சொன்னார்?

மகாக் கேவலமாக அசடு வழிந்தார். ஒரு கட்டத்தில் மைக் டைசனாக மாறிக் கெர்ரியின் காதைக் கோபத்தில் கடிந்து விடுவாரோ புஷ் என்று கூட நான் பயந்தே போனேன். முகத்தில் அவ்வளவு கோபம், அவ்வளவு இயலாமை, அவ்வளவு எரிச்சல். அவருடைய பாடி லாங்குவேஜ் குடியரசுக் கட்சிக்காரர்களுக்கே திகிலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இந்த டிபேட் முடிந்தவுடன் பல பிரபல மீடியாக்களும் சேர்ந்து அசடு வழிகிறார்கள். கெர்ரி இப்படி ஒரு மரண அடி கொடுப்பார் என்று அமெரிக்க மீடியா எதிர்பார்க்கவில்லை.

அதற்கு நேர் மாறாக, ஜான் கெர்ரி வெற்றிப் புன்னகை கலந்த ஆளுகையோடு, நிதானமாக, எல்லாவற்றையும் அலசி, அதிபர் புஷ்ஷின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றினார்.

எனக்கு இன்னமும் அமெரிக்கா மேல் நம்பிக்கை இருக்கிறது. ஜான் கெர்ரி வெற்றி பெறப்போவது திண்ணம்.

இல்லாவிட்டால் நான் மொட்டை அடிப்பதாக வேண்டிக் கொண்டிருக்கிறேன், புஷ்ஷ¤க்கு.

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Friday, September 17, 2004

'லுச்சாவதியே' ...

'லஜ்ஜாவதி' இன்று வருவாள் என்று நான் என் 'ப்ளாக்'கில் நேற்று சொல்லிவிட்டால், சொன்ன வார்த்தை சொன்னதுதான். வார்த்தை மாறமாட்டேன். இதோ வந்தே விட்டாள்.

நம்முடைய படைப்பில் ஒரே ஒரு சின்ன வித்தியாசம்.

அந்த '4 Students'-ம் சினிமாவில் ஹீரோத்தனமெல்லாம் பண்ணி மகா அராத்தாகிப் பிறகு செருப்படி, தர்ம அடி எல்லாம் பட்டுப் பிற்காலத்தில் சூப்பர் வெத்தாகி, வேஸ்டாகி, வேலை வெட்டியில்லாமல் சட்டை கிழிந்து ரோட்டோரத்தில் திரியும்போது அதே 'லஜ்ஜாவதியே' பாட்டை மறுமுறை பழைய ஞாபகத்தில் ஆசையோடு பாடுகிறார்கள். என்ன செய்வது, வயசாகி விட்டதல்லவா? அந்தக்கால அழகு 'லஜ்ஜாவதியே' இப்போது 'லுச்சாவதியே' ஆகி விட்டாள்.

ஆனாலும் ட்யூன் அதே ட்யூன் தான். வரிகளில் தான் கொஞ்சம் மாற்றம்.

ஒரிஜினல் 'லஜ்ஜாவதியே' பாட்டின் ஆரம்பத்தில் ஜெஸ்சி கி·ப்ட் பிரமாதமாகப் போட்டிருக்கும் 'மச மசான மகா ஸ்மசான, அய்யய்யோ, அப்பாடியோவ், த்தா, டேய் டேய், போடாங், லபோ திபோ, சொளக் பொளக்' போன்ற ஆரம்ப ஸ்வரத் தெவச மந்திரங்களைத் தயவு செய்து மாற்றி விட வேண்டாம்.

இந்த 'லுச்சாவதியே'வை ரசிப்பதற்கும் அவை மிக அவசியம்.

லுச்சாவதியே ...
-----------------------

Every time I see you my கெழபோல்டு ...

லுச்சாவதியே- என்னை அனத்துற நரியே
லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே
ராட்சசியே பேட்டை ரௌடியே
ரெண்டும் கலந்த பேயே
அடைதோசையோ ஹாட்பீட்சாவோ
ஏதும் அறியாப் பிசாத்தே

பாத்தவுடன் கத்துறியே
பாத்தவுடன் கத்துறியே
பாக்காட்டாலும் கத்துறியே
ஏண்டி, பாக்காட்டாலும் கத்துறியே
அழகில்லாமல் அடிமையாக்கும் கோணங்கி சப்பாணி

அடி லுச்சாவதியே- என்னை அனத்துற நரியே
லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே

பூமணக்கும் மேடையிலே பீப்பீ கத்தக் கட்டினேன்
காலை மாலை டயம் மறந்து கரப்பாம்பூச்சி ஆகினேன்
நல்லபாம்பை நான் கட்டினேன் நச்சு கண்டு ஓடினேன்
காரமில்லா சமையலில் கசமாலக் காப்பியில்
காலைமாலை சண்டையில் தலை தெறிக்க ஓடினேன்

அடாடா கசந்தேன் அய்யய்யோ கசந்தேன்
மீண்டும் எந்தன் காலம் வந்து பழசையெல்லாம் அழிக்குமா?

லுச்சாவதியே- என்னை அனத்துற நரியே
லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே

சீரியல் சீரியலென்று டீவிமேலே சமைத்ததும்
கரண்டுபில்லு கட்டவே காசில்லாமல் முழித்ததும்
கை கொட்டிக் கேலி செய்த ஊருசனங்கள் மறக்குமா?

கட்டைக்குரல் தொண்டையில் கானாம்ருதம் பொழிவதாய்
கண்ணே உன் காட்டுக்கத்தல் சாதகம்
அடாடா கசந்தேன் அய்யய்யோ கசந்தேன்
மீண்டும் எந்தன் காலம் வந்து பழசையெல்லாம் அழிக்குமா?

லுச்சாவதியே- என்னை அனத்துற நரியே
லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே
ராட்சசியே பேட்டை ரௌடியே
ரெண்டும் கலந்த பேயே
அடைதோசையோ ஹாட்பீட்சாவோ
ஏதும் அறியாப் பிசாத்தே

லுச்சாவதியே- என்னை அனத்துற நரியே
அடியேய், லுச்சாவதியே- ஏண்டி அரிக்குற சனியே

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Thursday, September 16, 2004

சும்மா ஒரு 'சார் போஸ்ட்' ...

'என்னங்க நாலஞ்சு நாளாப் பேச்சு மூச்சையே காணுமே உங்க 'ப்ளாக்'ல?' என்று வட அமெரிக்காவின் கிழக்குக் கரையிலிருந்து ஒரு அவசரத் தொலைபேசித் தாக்கீது வந்தது.

இரண்டு பேர் 'சாட்'டிலும், ஐந்து பேர் ஈமெயிலிலும் என் சோம்பேறித்தனத்துக்கு வேட்டு வைக்க நினைத்து என்னை உசுப்பியபோது ஏதாவது சால்ஜாப்பு சொல்வது எளிதாயிருந்தது. தொலைபேசியிலிருந்து தப்புவது அவ்வளவு சுலபம் இல்லை.

"இல்லை, வந்து, டயம் ..." என்று நான் முழுசாக அசடு வழிவதற்கு அதிக நேரம் கொடுக்காமல் நண்பர் தொடர்ந்தார்:

"இந்த ப்ளாக்குக்கெல்லாம் ஒரு இலக்கணம் இருக்குங்க. எழுதறதுக்கு ஒண்ணுமே மேட்டர் இல்லாங்காட்டியுங்கூட எதுனாச்சியும் டெய்லி எழுதிக்கிட்டே இருக்கணும். 'இன்று காலை எழுந்ததும் பல் தேய்த்தேன். அப்போது குழாயில் தண்ணீர் வரவில்லை. ஆனால் ...' இந்த மாதிரி எதுனா எழுதிக்கிட்டே இருங்க. உங்களுக்கு எக்கச்சக்கமா ரசிகர் கூட்டம் இருக்கு, அவுங்களை இப்படி ஏமாத்தலாமா?"

என் எழுத்து ரசிக்கப்படுவது சந்தோஷம் தான். அதற்காக 'ஜக்குபாய்' என்று எதையாவது அவசர அவசரமாக அறிவித்துவிட்டு 'அய்யோ, அம்மா' என்று கே. எஸ். ரவிகுமாராய் அலற முடியுமா?

எந்நேரமும் எதையாவது எழுதிக்கொண்டே காலத்தைக் கழிக்க ஆசை தான். ஆனால் புவ்வாவுக்கு சரியாக வழி பண்ணாமல் இலக்கியச் சேவை பண்ணுகிறேன் என்று ஆரம்பித்தால் அகத்தில் மாமி கட்டையைத் தூக்கிக் கொல்வாள். இலக்கணம் பிறழவில்லை. உண்மையை விளம்புகிறேன்.

ஆனாலும் எழுதவேண்டும் என்கிற 'டெட்லைனி'ல் நான் நன்றாகவே எழுத வல்லவன். "சாருக்கு அர்ஜெண்டா ஒரு நல்லெண்ணெய் சாதா' என்கிற மாதிரி பத்திரிகை ஆசிரியர்கள் சில சமயம் அவசரமாகப் படுத்தும்போது உடனே தோசை சுடுவது எளிதாகத்தான் இருக்கிறது எனக்கு.

இன்றைக்கு இவ்வளவு போதுமா?

நாளைக்கு, நாட்டின் தலையாய டாபிக்கான 'லஜ்ஜாவதி' பற்றி விவரமாகப் பேசுவோம்.

கட்டைக்குப் பயந்து இப்போது கணினியை மூடுகிறேன்.

என்றும் அன்புடன் தான்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Thursday, September 09, 2004

'சேது' வெற்றிக்கு யார் உண்மைக் காரணம்?

"அண்ணே, அண்ணே, எழுந்திரிங்கண்ணே, எழுந்திரிங்க. ரொம்ப அவசரம்"

கும்மிருட்டில் சற்றே தனித்திருந்த அந்த வீட்டுக் கதவுகள் 'தட தட'வென்று தட்டப்பட்டன.

கதவைத் தட்டிய நாலைந்து பேரும் மிகுந்த பதட்டத்தில் காணப்பட்டனர். அவர்கள் முகங்களில் ஏகக் கலவரம். நிலைகுலைந்து போயிருந்த அவர்கள் முகங்களில் கவலையும் வியர்வையும் கப்பியிருந்தது.

தெருநாய் ஒன்று 'தட தட' சத்தம் கேட்டுத் தூக்கம் கலைந்து, ஏகத்துக்கும் குரைக்க ஆரம்பித்தது. சில நொடிகளில் அடுத்த அடுத்த தெருநாய்களும் கோரசாக அந்தச் சத்தத்தில் கலந்து கொண்டன.

யாரோ வாட்ச்மேன் "சீ, தூத்தெறிக்கி என்று ஒரு நாய் மீது உத்தேசமாக இருட்டில் கல்லை வீசினான். அங்கே விச்ராந்தியாகச் 'சூச்சூ' போய்க் கொண்டிருந்த ஓர் குடிமகன் மீது அந்தக் கல் பட்டு அவன், "ஆர்ரா அடிக்குறது? தெருநாயகத்துல அல்லாரும் கிங்·பிஷர்ஸ். தெகிரியம் இர்ந்தா ஒண்டிக்கு ஒண்டியா நேர்ல வந்து நில்ரா, பேமானி" என்று பயத்தில் அலறினான்.

மொத்தத்தில் அந்தச் சென்னைப் புறநகர்ப் பகுதியின் அமைதியான இரவுத் தூக்கம் சில நொடிகளில் கலைக்கப்பட்டது.

"இன்னாடா, அதுக்குள்ளயா சாரு தூங்கிட்டாரு? அவ்ளோவ் சீக்ரம் தூங்கமாட்டரடா? கதவ இன்னும் பலமா இடி"

"கல்யாணம் கட்னப்பறம் இப்பல்லாம் சீக்ரமா படுத்துர்ராருப்பா.",

மீண்டும் 'தட தட'.

சத்தம் கேட்டு அந்த வீட்டை அடுத்த அடுக்குமாடியில் சில விளக்குகள் பளீரிட்டன.

"யாருய்யா அது, கண்ட நேரத்துல இப்படிப்போட்டுக் கதவ உடைக்கறது? டீசன்ட் ·பேமலீஸ் இருக்கற எடம்னு தெரியலை?' -தலையில் ம·ப்ளருடன் எட்டிப் பார்த்த ஒரு பெரியவர் பால்கனியிலிருந்து புலம்பிவிட்டுத் தொடர்ந்து இரும ஆரம்பித்தார். .

"சாரி பெரிசு. தல போற அவசரம். அதனாலதான் டைரக்டர எழுப்பறம். அந்தாளு கெடக்குரான், நீ இன்னும் பலமாக் கதவ அட்ரா .."

"சினிமாக்காரங்கன்னாலே" லொக் லொக். "இப்டித்தான்" லொக் லொக் லொக், "கண்ட நேரத்தில " தொடர் லொக் லொக்.

******************** ******************** **********************

இருமல் நின்று பெரியவர் திட்டி முடிப்பதற்குள் கதவு 'படீரெ'ன்று திறக்கப்பட்டது. பாதிக் கைலியுடனும், சிவந்த விழிகளில் முழுத் தூக்கத்துடனும் அந்த பிரபலத் தமிழ்ப்பட இயக்குனர் "எவண்டா அது?" என்றார்.

"மன்னிச்சிக்குங்கண்ணே. அவசரம்கறதுனால தான்" என்று ஒருவன் பயத்தில் குழைந்தார், "சொல்லேண்டா, சும்மனா நிக்கறியே கசுமாலம்" என்று பக்கத்திலிருந்தவனை விலாவில் இடித்து உசுப்பினார்.

"கோவிச்சுக்காதீங்கண்ணே, நம்ம வெற்றிப் படத்துக்கு யார் யாரோ உரிமை கொண்டாடறாங்கண்ணே நூஸ்ல சொன்னான், பேப்பர்ல போட்டுகிறான். இதப் பாருங்கண்ணே"

"என்னது? எந்தப் படம்? இருட்ல சரியாப் படிக்க முடியலைடா, ஏண்டா அல்லாரும் தண்ணியில இருக்கீங்களா?"

வாசனை கொஞ்சம் பலமாகத்தான் இருந்தது.

"சார், கொஞ்சமாத்தான்" என்று அந்த உதவி இயக்குனர்கள் மறுபடியும் அந்த இயக்குனரிடம் குழைந்தார்கள், "என்கிட்ட இஸ்மெல்லு அடிக்குதா சார், டேய் நீ தள்ளி நில்லுடா"

"நானு ஒரே ஒரு கிளாசு தான்" என்று நல்ல பெயரெடுக்க முனைந்தார் இன்னொரு உதவி.

"சரி சரி, என்ன சொல்றதுக்குக் கதவ இந்த இடி இடிச்சீங்க? விஷயத்துக்கு வாங்க" என்றார் இயக்குனர்.

"நீங்க வுயுந்து வுயுந்து வசனம் கையால எளுதினதக் கண்ணால பாத்தவன் சார் நானு, அதான் ரொம்ப ·பீலிங்க ஆயிட்டன். இப்ப அதுக்கெல்லாம் 'பராசக்தி காலத்திலேயே நான் தான் இதற்கும் சேர்த்துக் கதை, வசனம், பாடல்கள் எழுதினேன்'னு கலைஞர் சொல்றாருப்பா. அடுக்குமா இது? மத்தியில ஆட்சி கையில இருந்தா இன்னா அக்குரும்பும் பண்ணலாமா? கேப்பாரே இல்லியா?"

"அவர வுடு சார். அவராச்சியும் எழுத்தாளரு. பேனா வெச்சிருக்காரு. அவுரு சொன்னா கண்டியும் பரவாயில்லை. ஆனாக்க, உனுக்கு ஜெயில்ல ரோசிச்சு ரோசிச்சி ஐடியா குடுத்ததே நான் தான்'னு வைகோ பேட்டி குடுத்துகிறாரு. வெயில்ல வாக்கிங் போயிப் போயி அவரு ஒரு மாதிரியா ஆய்ட்டாரு. இவுரு ஐடியா பண்ணி இது வரிக்கும் எதுனா கெலிச்சிக்குதா?"

"சரி, சரி. வாசல்ல நின்னு பொலம்பாதீங்க. உள்ளாற வந்து ஆபீசுல குந்துங்கடா. நா பாத்ரூம் போயிட்டு வாரன்" என்று இயக்குனர் சொன்னதும் அத்தனை உ. இயக்குனர்களும் வீட்டுக்குள் நுழைந்து பக்கவாட்டில் இருந்த வரவேற்பறையில் அமர்ந்து கொண்டார்கள்.

******************* ********************* *****************

"இத இத்தோட வுட்டுட்டம்னா நமக்கெல்லாம் மொத்தமா ஆப்பு வெச்சிருவாங்கப்பா. ஏற்கனியே 'இந்த டைட்டில் வெக்காத, அந்த சாங் போடாத'ன்னு படுத்தறானுவ"

"சினிமாக்காரன்னா கிள்ளுக்கீரயாப் போச்சு. நாம படம் எடுக்கலாமான்னு ரோசிக்கும்போதே அதத் திருட்டு வீசிடில போட்டுக் காட்டிடறான்யா"

"நாளக்கி இத்தக் கண்டிச்சி நாமளும் உண்ணாவிரதம் இருக்கணும்பா. காலிலயே ·புல் நாஸ்தா டின் கட்டிருங்க. அப்பத்தான் சாயங்காலம் வரிக்கும் தாங்கும்"

சற்றே தூக்கம் கலைந்து இயக்குனர் பாத்ரூமிலிருந்து கண்ணைக் கசக்கியபடி வெளியே வர, உதவி இயக்குனர்கள் மரியாதை நிமித்தம் எழுந்து நின்றார்கள்.

இயக்குனர் அறையின் நடுநாயகமாக இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தார். "அரசியல்வாதிங்க எதுக்குப்பா என்கிட்ட மோதுறாங்க? குருநாதர் சார் கிட்ட மட்டும் தான நமக்கு லடாய். அதுவுங்கூட இப்ப சரியாயிட்டுதே"

ஒரு ஓரமாகத் தமிழ் மாலைத் தினசரியைப் படித்துக்கொண்டிருந்த ஒரு உதவி எழுந்தார்: "அய்யய்யோ, இத்த பாரு சார். இந்த அம்மாவும் சொல்றாங்கோ, "நானும் எம்.ஜி.ஆரும் மட்டுமே இது பற்றிப் பல ஆண்டுகளாகப் பேசி ஆவன செய்து வந்திருக்கின்றோம். காலம் கூடி வரும்போது கண்ணனைக் கிருஷ்ண ஜெயந்தி அன்றே, அவர் பிறந்த நாளிலேயே திட்டும் இந்துமத எதிரிகள் என்னையும் எதிர்த்து இந்தப் புகழையும் திருட நினைக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் ஒரே சிறையில் தள்ளித் தக்க பாடம் கற்பிப்பேன். வாக்கிங் போக நினைப்பவர்களெல்லாம் ஒலிம்பிக் மெடல் வாங்கிவிட நினைப்பது கேலிக்கூத்து. எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. மக்களும் என்னுடன் சேர்ந்து சிரிக்கக்கூடாது. அவர்கள் இதை மன்னிக்க மாட்டார்கள்"

இப்போது முழுத் தூக்கமும் கலைந்துவிட்ட இயக்குனர் அருகாமையில் இருந்த உதவியிடம், "டேய் பன்னாடை, எந்தப் படத்தைப் பத்திடா இப்ப சண்டை? நம்ம லேடஸ்ட் படம் தான் ஜனாதிபதி அவார்டே வாங்கியிருச்சேடா என் நண்பனுக்கு?"

பன்னாடை என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் எழுந்து, "இது நம்ளோட மொதல் படத்தப் பத்திங்கண்ணே. இப்பத்தான் ஒவ்வொரு படமாக் கலீஜு பண்ணிக்கிட்டே வாராங்க போல. உங்களோட லேட்டஸ்ட் படத்துக்கு வர்ரத்துக்கு இன்னும் கொஞ்சம் நேரமாவும்" என்றார்.

"அப்ப ஒண்ணு செய்யி, என் நண்பனை எழுப்புடா"

எந்த நண்பனை என்பதில் சற்றே குழம்பிய உதவிக்கு இன்னொரு உதவி உதவினார்: "இத்தினி லெச்சம் பாக்கி அத்தினி லெச்சம் கடன்'னு அடிச்சிக்கிட்டு அப்பால அய்யா கலியாணத்துல சமாதானச் சாம்பாரா ஊத்தித் தல்ளுனாரே, அந்த நண்பருப்பா"

****************** *********************** ******************

கார்ட்லெஸ் போனில் நம்பர்கள் அமுக்கப்பட்டு அடுத்த நிமிடமே அந்தப் பிரபல முன்னணி நடிகரிடம் பி. இயக்குனர் பேசிக் கொண்டிருந்தார்.

"ஆமாம்பா. இப்பத்தான் கதவ இடிச்சி ஒடச்சி என்னை எழுப்பிச் சொல்றானுவ. என்னது இது, நீயும் கேள்விப்பட்டியா? இது அந்நியனுக்கு எதிரான இந்தியர்கள் சதியா? என்ன நண்பா சொல்ற? வர வர டயலாக்கே வேணான்னுட்டு ஏதோ சொந்த டயலாக் வுடற?"

கவலை படிந்த முகத்துடன் காதில் மாட்டிய இயர்போனில் செய்திகள் கேட்டுக்கொண்டிருந்த ஒரு உதவி திடீரென்று கூவினார்: "அய்யோ சார், இன்னா அநியாயம் இது? 'இவர்கள் யாருமே அதற்குக் காரணம் இல்லை. நானும் நான் நியமித்திருக்கும் பன்னீரும், மன்னிக்கவும், மன்மோகன் சிங்கும் மட்டுமே இதற்கான புகழுக்கு நேரடித் தகுதி பெற்றவர்கள்'னு டெல்லியம்மா சொல்றாங்க சார். கலைஞருக்கும் அம்மாவுக்கும் எதிரா காங்கிரசும் களத்துல குதிக்குமாம். வெள்ளக்காரன் காலத்துலயே இருந்த எங்க ஐடியாவத்தான் இப்ப யாரோ திருடிட்டாங்க"ன்னு பிபிசியில சொல்றான் சார்"

"டேய் டீவியப் போடுறா. ஏய், நீ போய் ரேடியோவப் போடு. 24 அவர் நியுஸ் சானல ஆராச்சியும் போடுங்கப்பா"

செய்தியாளர் சொன்னார்: '2000 கோடிச் செலவில் நிர்மாணிக்கப்பட இருக்கும் புதுத் திட்டத்திற்கு விரைவில் கடலுக்கடியில் கல்வெட்டை ஒளித்து வைக்க டெல்லியிலிருந்து பிரதமர் மன்மோகன் சிங்கும்...."

"அடப் பாவிங்களா, அவன் சொல்றது வேற 'சேது'டா. கவுத்துட்டீங்களேடா. என் தூக்கத்தையும் கலைச்சி ...டேய், புடிரா, அவனை"

பிரபல தமிழ்ப்பட இயக்குனரின் உதவி இயக்குனர்கள் அலறிச் சிதறி ஓடுகிறார்கள்.

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Tuesday, September 07, 2004

திருஷ்டிப் பூசணிக்காய்

"வீடு பிரமாதமாக இருக்கிறதே, அடாடா! 'ப்ளாக்' சூப்பர்யா"

"உங்களுக்கு என்னண்ணா, கொடுத்து வெச்சவர். எல்லா நண்பர்களும் போட்டி போட்டுண்டு உதவி பண்றா"

"கன்கிராஜுலேஷன்ஸ், குட் லக், ஆஹா ஓஹோ, பேஷ் பேஷ், பலே பலே"

"அசத்துங்கயா, ஆனாக்க ஆரயும் திட்டவேணாம்"

"ஏண்டா டேய், என் பூனைய நான் புகழ்ந்தா உனுக்கென்னடா, பேமானி"

என்றெல்லாம் நண்பர்கள் என் ப்ளாக் அரங்கேற்றத்தைப் புகழ்ந்து தள்ளி நான் மனமகிழ்ந்திருக்கும்போது தான் அது நடந்தது.

*************** ************* *************

அதாவது, என் புது VoIP போன் முதன் முறையாக மணி அடித்தது. பாய்ந்து எடுத்தேன்.

VoIP தொலைபேசி தெரியும் இல்லையா? '

கால்' இலவசம். கட்டணம் கிடையாது. கட்டாயம் ஏதும் இல்லை. கண்ட நேரத்தில் காசு பயமில்லாமல் கண்டவர்களுடன் காணாது கண்ட மாதிரிக் கண்டபடி கலாய்த்திருக்கலாம்.

அதுவும் 'கால் குவாலிடி' சரியில்லையென்றால் முப்பது நாளில் எல்லாவற்றையும் திருப்பிக்கூடக் கொடுத்து விடலாம். முழு முன் பணத்தையும் உடனேயே திருப்பி விடுவார்களாம். வீட்டுச் செல்வைக் குறைப்பதற்காக நான் இதை மிக முனைந்து செய்திருப்பதில் என் மனைவிக்கு ஏகப் பெருமை.

என் அருமை நண்பர் போனில் தொடர்ந்தார்:

"உங்க ப்ளாக் வீட்டுக்கு வெறுமனே சூப்பர்செம் அடிச்சா மட்டும் போதாது ராம். இங்க வால் பேப்பர் ஒட்டி, அங்க கார்பெட் போட்டு, அப்படியே ரெண்டு ஸ்ப்ளிட் லெவல் ஏசிய மாட்டி ..." என்று நண்பர் சொல்லச் சொல்ல நான் சொக்கிப் போனேன்.

நண்பர் மிக நல்லவர். என்பால் அன்பும் ஆதுரமும் கொண்டவர். நான் அடிக்கடி ஏதாவது எழுதவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டுச் சொல்வதில் தவறே இல்லை. அவர் முகவரியைச் சொல்லலாம். ஆனால் அவர் கல்லடி படுவதில் எனக்கு இஷ்டம் இல்லை.

"நீங்கள்லாம் எதுக்குக் கஷ்டப்படறீங்க, நானே இத அப்டியே ஊதிடறேன் பாருங்க"

"இல்ல ராம். அதுல ..."

புதுப் போன் அல்லவா? கொஞ்சம் கமறிச் செருமியது. அதனால் பரவாயில்லை என்று கனெக்ஷனைத் துண்டித்தவன் நான் தான். இல்லாவிட்டால் 'நானே இதையும் செய்து தருகிறேன்' என்று நண்பர் அன்புத் தொல்லையை ஆரம்பிப்பார். எதற்கு அவருக்கு சிரமம்? எத்தனை நாள் தான் அப்பா செல்வாக்கு, அண்ணன் செல்வ வாக்கு என்று நான் பிறரைச் சார்ந்தே புகழ் பெறுவது? என் பெயர் அன்புமணியோ, தயாநிதியோ அல்லவே!

நண்பர் கொடுத்திருந்த ஒரு ஹோல்சேல் உரலைச் சுட்டினேன்.

'புச்சா பிளாக்கு கட்டிக்குறியா மச்சி? இங்ஞன வா, அல்லாத்தயும் ஈஜியா பண்ணுறதுக்கு, சும்மா ஸல்லுனு வெச்சிகிறம் பாரு ப்ரொக்ராம்சு' என்று கொஞ்சம் ஜல்லி கலந்து அங்கே எல்லாவற்றையும் விலாவாரியாக எழுதி இருந்தார்கள். அதையெல்லாம் படிக்க எனக்கு அவகாசம் இல்லை. மேனேஜ்மெண்டில் இருந்து கொண்டு யாராவது மேனுவல் படிப்பார்களா?

'டவுன்லோட்' எங்கே என்று மட்டும் தேடினேன். எலியைச் சொடுக்கி எல்லாவற்றையும் செய்து முடிக்க முடுக்கி விட்டேன். கணினி கருமமே கண்ணாகத் தன் வேலையைச் செய்ய ஆரம்பித்தது.

'ப்பூ, ஈதென்ன பிரமாதம். சொதியோடு ஆப்பம் கலந்து பலகாரம் பண்ணி,
ஒரு கோப்பி குடித்துண்டு ஈண்டு வந்தால் எல்லாம் சரியே ஓடும்' என்று மாடியிலிருந்து கீழே இறங்கிப் போனவன், 'சன் டீவி'யில் இப்பொழுது ஆடுவது ரக்ஷிதாவா, ரகசியாவா? சீனா தானா, பூனா தானா என்கிற அரும்பதங்களின் உள்ளார்ந்த பொருள் என்ன?' என்பது போன்ற லோகாயதக் கவலைகளில் மூழ்கி விட்டேன்.

********** *********** ************

சில மணி நேரங்கள் சென்றபின், அயர்ந்து ஹைபர்னேஷனில் தூங்கிக்கொண்டிருந்த கணினியை நான் தட்டி எழுப்பினேன். சோம்பல் முறித்தவாறே என் ஹார்டு டிஸ்க் உயிர் பெற்றது.

'அட, இவ்வளவு சீக்கிரமே எல்லா வேலைகளும் முடிந்து விட்டன் போலும். நல்லவேளையாக நண்ப்ரைத் தொந்தரவு செய்யாமல் நாமே எல்லாவற்றையும் அட்டகாசமாகச் செய்து முடித்து விட்டோமே. இந்தப் பெருமையையும் மனையாளிடம் சொல்லி வைத்தால் அவள் அகமகிழ்வாள். அப்படியே அந்தக் குதூகல நேரத்தில், நேற்றைய ஷாப்பிங்கில் நாம் வாங்கிக் கேரேஜில் ஒளித்து வைத்திருக்கும் ஒரு சில திரவ பதார்த்தங்களையும் உள்ளே கொண்டு வந்து சேர்த்து ஒழுங்கு பண்ணி விடலாம்' என்றெல்லாம் என் மனக் குதிரை இறக்கை கட்டிப் பறந்தது.

அப்போது தான் என் புது 'ப்ளாக்'கின் அலங்கோல நிலையைக் கவனித்தேன். 'இது தேவயானியா, சுவலட்சுமியா?' என்று நாம் சில சமயம் குழம்புவோமே அதே போன்ற ஒரு குழப்பம்.

ப்ளாக் என்னுடையது தான். சந்தேகமே இல்லை. ஆனால் 'லிங்கு'கள், பா.ம.க வினர் சிதைத்த 'பாபா' படச் சுருட்கள் போல் கலைந்திருந்தன. படிக்கவோ, பார்க்கவோ முடியவில்லை. த்ரிஷா மாதிரிச் 'சிக்'கென்றிருந்த என் ப்ளாக்கின் அகல, நீள, கன பரிமாண அழகுகள், கரெண்டு கம்பத்தில் அடிபட்ட காக்காய் வடிவேலுவாய்க் கலர் மாறிக் கருத்திருந்தன.

அதையெல்லாம் விட மிக முக்கியமாக- நான் என்றும் போற்றும் ஆயிரக்கணக்கான என் கண்மணி வாசகர்கள் (சரி, சரி. பத்துக்கணக்கான என்று திருத்திப் படிக்கவும்) எனக்காகவே பாசத்துடனும், பரிவுடனும், ஆசையாகவும், ஆசி வழங்கியும், அட்வைஸ் பண்ணியும், ஒரு சிலர் எச்சில் கலந்த ஈரத்துடனும், எனக்காகவே எழுதியிருந்த- 'கமெண்ட்ஸ்' செக்ஷன் கபோதியாகி விட்டிருந்தது.

'கமெண்ட்ஸ் -0' என்று கணினி காட்டியதில் நான், 'துடித்தேன், தொழுதேன், பல முறை நினைத்தேன் அழுதேன், கலைவாணியே உனைத்தானே" என்று கல்யாணியில் கதறினேன்.

'எனக்கு நானே இழைத்துக்கொண்ட மாபெரும் துரோகத்துக்கு யான் என்ன செய்வேன்? தவறைத் திருத்திப் பழைய நிலைக்குக் கொண்டு வர யாது செய்ய வேண்டும்?' என்றறிய ஓடினேன் அதே பழைய உரலைத் தேடி. அந்த அம்மித் தலையர்கள் தலையில் உலக்கையைத் தூக்கிப் போட வேண்டும்.

அங்கே அவர்கள் எழுதி இருந்த 'கஷ்டம்ர சால்ஜாப்பி'ன் சாராம்சம்:

'யோவ், ஃப்ரீன்னா பினாயிலயே குடிப்பியே நீயு இப்ப இன்னா துட்டா குடுத்துட்டே எனுக்கு? இன்னாவோ கூவிக்கிட்டு ஓடியாரியே. மவனே, எதுனா வோணும்னா, காசு போட்டு ஒரு 'ப்ரிமியம் மெம்பருஷிப்' வாங்கு. அப்பால பாத்துக்குவம். வந்துட்டான்யா சப்போர்ட்டு கேட்டுக்குனு, சாவுகிராக்கிங்க'

என் புது 'ப்ளாக்'கின் புத்தம்புது அவலட்சணத்தை என்னாலேயே பொறுத்துக் கொள்ள முடியவில்லை. யாரிடம் சொல்லி அழ?

அவளிடமே சொல்லலாமா? 'வருவாளா, அவள் வருவாளா? உதவி செய்ய அவள் வருவாளா? இல்லை, உதை கொடுத்துக் கொஞ்சம் மகிழ்வாளா?'

பல வருடங்களுக்கு முன் நான் சென்னையில் ஒரு புது ஸ்கூட்டர் வாங்கினேன். அதற்குத் திருஷ்டி கழிக்கு முகமாகச் சந்தனப் பொட்டு, குங்குமப் பொட்டு, ரியர்வியூ மிர்ரர் காதில் மஞ்சள் கனகாம்பரம் எல்லாம வைத்து முடித்த பிறகு, என் மனைவி ஒரு பெரிய பூசணிக்காயைக் கொண்டு வந்து கொடுத்தாள். துவிச் சக்கர வண்டியைச் சுற்றி மூன்று முறை வலம் வந்து, அய்யனாரையோ பிடாரியையோ அவள் அம்மாவையோ மனத்தில் வேண்டியபடி அந்தப் பூசணிக்காயை வாசலில் உடைக்குமாறு பணித்திருந்தாள். நானும் அதையெல்லாம் சரியாகச் செய்து முடித்தேன்.

ஸ்கூட்டரில் மனைவியுடன் ஒரு புது ரவுண்டு முடித்து, வீடு வந்து சேரும் காலையில் நானே உடைத்த நன்றி கெட்ட பூசணிக்காய் மீது வழுக்கிக் கீழே விழுந்ததில், புது ஸ்கூட்டர், என் முழங்கை, மனைவியின் முழங்கால், எதிர் வீட்டு நாய் ஜிம்மியின் வால் என்று எல்லாமே ஒரே நேரத்தில் நசுங்கி இன்புற்றிருந்த ஞாபகங்கள் என்னுள் 'ஆட்டோகிராஃபாய்'க் கிளர்த்தெழுந்தன.

ஆக, இது பற்றி வீட்டில் யாரிடமும் மூச்சு விட முடியாது. அவள் வர மாட்டாள். வந்தாலும் திட்டுவாள்.

வீட்டில் மூச்சு முட்டுபவர்கள் வெளியில் எங்காவது தான் சொல்லி அழ வேண்டும். நானும் அழுதேன்.

நல்லவேளையாக, என் கணிசமான நண்பர் குழாத்தின் இன்னொரு புத்திசாலிப் புலி, என் உதவிக்கு வந்து என்னைக் கரை சேர்த்து விட்டது.

************* ************* ***********

மறுபடியும் அதே VoIP என்னைத் தொணப்பியது.

"ராம், நேத்து கொஞ்சம் லைன் சரியில்ல போல. நீங்க அந்தப் ப்ரொக்ராம் யூஸ் பண்றத்துக்கு முன்னாடி எல்லாத்தையும் ஒரு 'பேக் அப்' எடுத்துக்கிட்டீங்கல்ல?"

யார் சொன்னது, 'ப்ளாக்' எல்லாம் 'சுய புலம்பல்' என்று?

-என்றும் அன்புடன் தான்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்






Monday, September 06, 2004

Haloscan commenting and trackback have been added to this blog.

Saturday, September 04, 2004

நீயும் 'Blog', நானும் 'Blog' ...

நீயும் 'Blog', நானும் 'Blog', நெனச்சுப் பாத்தா எல்லாம் 'Blog' !
==================================================

"இந்த 'ப்ளாக்' சமாச்சாரமெல்லாம் நமக்கு ஆவாது, இது 'சுய தம்பட்டம்', 'தனிப் புலம்பல்', ' சொந்த, சோகக்கதைங்களைச் சொல்லி அழுவுற இடம்' " என்றெல்லாம் நான் 'ப்ளாக்'குகளைக் கேலி மிகச் செய்திருக்கிறேன். பல த்ருணங்களில். பல இடங்களில்.

'தான், தன் நாய்க்குட்டி போட்டோக்கள், தனக்கு இன்ன தேதியில் இன்னாரால் நேர்ந்துவிட்ட இன்ன பிற சோகங்கள் பற்றிய அவலப் பிரஸ்தாபங்கள் என்ற கணக்கில் தான் பல 'ப்ளாக்'குகள் இருக்கின்றன என்பதை இன்னமும் மறுப்பதற்கில்லை. தனக்குப் பிடிக்காதவர்களை வகையாகத் திட்ட சொந்தத்தில் 'மைக்+லவுட்ஸ்பீக்கர்+ஓசி கரெண்ட்+ஜமுக்காளம்+சோடா' வசதியுடன் ஒரு புதிய இணையத் தொழில்நுட்ப 'செட்டப்' பாகத்தான் அவை திகழ்கின்றன.

ஆக, இந்த் 'ப்ளாக்' சமாச்சாரம் நமக்குத் தேவையே இல்லை என்று தான் நான் 'தேமே'யென்றிருந்தேன்.

என்னை மதியாத வெகுஜன விரோதக் குழும உலகங்களில் எழுதுவதையும் தவிர்த்து வந்தேன். என்னால் மிக வளர்ந்தும் கூட, என்னைக் காயப்பட்டுத்தி மகிழும் வியாபாராதிக் குரோத கேந்திரங்களாக மாறி விட்ட அவல கிளப்புகளையும், கலைந்த ஓவியங்களையும் ஒதுக்கி, அவ்வப்போது 'மரத்தடி' போன்ற அன்புசால் குழுமங்களில் மட்டும் எழுதி வந்தேன். அதுவும் ஆடிக்கு ஒன்றும் அமாவாசைக்கு ஒன்றுமாய்.

ஆனால் வலிய விதி என்னை விடுவதாயில்லை! 'இப்போதெல்லாம் ஏன் அடிக்கடி எழுதுவதில்லை? என்ன ஆயிற்று உங்களுக்கு?' என்ற அன்பான, பாசமான கேள்விகள் மட்டும் ஓய்வதாயில்லை.

'நம்ம தோஸ்த் எல்லே ராமுக்கென்று பாந்தமாக ஒரு நாலு கிலோபைட்டிலாவது சொந்த ப்ளாக் வேண்டும்' என்று சில மாதங்களாகவே கொடி பிடித்து வந்த நல்ல நண்ப, நண்பிகளிடம் "இப்ப எனக்கு எதுக்கு அதெல்லாம்? வேண்டாம், ஆள விட்ருங்கப்பா. நான் வேற என்னென்னவோ செஞ்சிட்டுக்கேன்" என்று கெஞ்சினேன். அவர்கள் விடுவதாயில்லை.

என் பாய்ச்சல்கள், பாவ்லாக்கள், சால்ஜாப்புகள் எதுவுமே அவர்களிடம் பலிக்கவில்லை. நல்ல எழுத்தை மட்டும் ரசிக்கத் தெரிந்த நண்பர்கள் அவர்கள். சில இடங்களில் நடக்கின்ற பம்மாத்து வேலைகளைப் பார்த்தும் நான் பாராமுகமாக இருப்பதில் அவர்களும் வேதனை அடைந்தவர்கள்.

"அதென்னவோ தெரியலீங்கண்ணா. 'கால் காசானாலும் கவருமெண்டு காசு' மாதிரி செண்டிமெண்டலா இது ஒரு 'இது'ங்கண்ணா. நாங்க முடிவு செஞ்சிட்டம். இதுக்கு மேல சும்மா தொண தொணன்னு படுத்தாம மரியாதையா உருப்படியா எதுனாச்சியும் எழுதற வேலையப் பாருங்கண்ணா" என்று பதில் சொல்லி, 'லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் ப்ளாக்' க்கு மனை வாங்கிக் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து, யுனிகோடில் வெள்ளையடித்து, ஆங்காங்கே சரி செய்து ....அதான் உள்ள வந்துட்டீங்களே. நீங்களே பாருங்க.

நல்லாதான் செஞ்சிருக்காங்க. இந்த சாக்ரமெண்டோ சுந்தர் அண்ணனும், டொராண்டோ மதியக்காவும், மாயவரம் பரிமேல்ஸ் மாமாவும், இன்னும் பேர் சொல்லக்கூடாதுண்ணு தடுத்துட்ட பல சகாக்களுமா இவ்வளவு உறவுக்காரங்க பக்க பலமா இருக்கும்போது நாம எதுக்காகத் தயங்கணும்ணேன்? நாமளும் இந்த 'ப்ளாக்' மேட்டர ஒரு கை பாத்திருவம்ணேன். நமக்குத்தான் மடியிலயோ தலையிலயோ கனமே கெடையாதேண்ணேன்.

'சும்மா இருப்பதே சுகம்'னு ஒண்ணும் எழுதாம யோக நிஷ்டையில கெடந்தாக்க, எங்க இருக்க வுடறாங்கண்றேன்?

போன்லயும், சாட்ல்யும், மெயில்லயும் புடுங்கல் தாங்கலை. 'அய்யா ஒரு நிமிஷம். நில்லுங்க. நீங்கதான் ஆப்பய்யாவா? இல்லையா? அட, அப்ப அப்பத்தா யாரு, அவரா, இவரா?'ன்னு வேற ஆளுங்க விலாசமமெல்லாம் கேட்டு என்னியக் குடையறாங்கப்பா.

எனக்கு எதுக்குங்க மொகமூடியும் முக்காடும்? ஆப்போ, ரிவிட்டோ வெக்கணும்னு நா முடிவு பண்ணிட்டாக் 'கெட்-அவுட்'டான எழுத்து வியாபாரிங்க தாங்குவாங்களா? 'டாலர் மேட்டர்', 'எடைக்கு எடை ரூவா', 'நீயும் கவி, நானும் கவி' எல்லாம் எடுத்து வுட்டாக்க நாக்கப் புடுங்கிக்கிட்டில்ல சாவணும்? ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரிய வெரட்டுன கதையெல்லாம் ஒரு நாளைக்குக் சாவகாசமா சொல்றன்.

அது கெடக்குங்க பீடைங்க. வுட்டுத் தள்ளுங்க. நாம வேலையப் பாப்பம். என்ன நாஞ்சொல்றது?

யோவ், மைக்செட்டு, அந்த 'லஜ்ஜாவதி'ய போடுவே. இன்னா லிரிக்சு, இன்னா ரிதம்! கூட்டம் வர ஆரம்பிக்குதில்ல? அவுங்க சந்தோஷம் தான் நம்ம சந்தோஷம்.

*********************************************

அய்யா, வாங்க, அண்ணே வாங்க, அக்கா, தங்கச்சி அல்லாரும் வாங்க. வாங்க வாங்க சார் வாங்க, எல்லாரும் வாங்க. நீங்கள்லாம் வந்ததில ரொம்ப சந்தோஷம்.

வாசல்ல வாழமரம், தோரணம், பூ வேலைப்பாடெல்லாம் அட்டகாசமா செஞ்சிருக்காங்க பாருங்க. நா ரொம்பக் கொடுத்து வெச்சவங்க. நண்பர்களோட அன்பைப் பாருங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

ஜமுக்காளம் புதுசு, நாற்காலிகள்லாம் புதுசு. மேசையில சக்கரை, சந்தனம், பூ, பன்னீர் எல்லாம் வச்சிருக்கம்ல? எடுத்துக்குங்க. வீடு பிடிச்சிருக்கா? இன்னும் என்னென்ன செய்யணும்னு ஐடியா சொல்லுங்க, செஞ்சிடறேன். ஏசி போடப்பறம், செவத்துல எல்லாம் போட்டோங்க போட்ருவேன். கோப்புங்களுகுத் தனித்தனி ரூம்...அய்ய, ஒரு பேச்சுக்குச் சொன்னங்க. நான் என்னத்தக் கிழிக்கப் போறேன்? நான் தான் மேனேஜ்மெண்டடுனு சொல்லிக்கிட்டு வெறுமன மீட்டிங் மேல மீட்டிங்காப் போட்டு அடுத்த மீட்டிங் எப்பன்னு மட்டும் முடிவு பண்ற ஆளாச்சே! எல்லாம் அவிங்க அல்லாரும் சேர்ந்து செய்வாங்க.

அப்புறம் சொல்ல மறந்திடப் போறேன். இருங்க, உக்கிராண-உள்-இன்-சார்ஜ் சமையக்கார அய்யரைக் கூப்பிடறேன். சமையக்காரரே, யோவ்! ஜாரிணிக் கரண்டியால அக்குள்ல சொறிஞ்சிக்கிட்டு அழுக்கு வேட்டியோட நிக்காதய்யா. இங்க வந்திருக்கறதெல்லாம் யார் யாருன்னு தெரியுதில்ல? பெரிய பெரிய ஆளுங்கய்யா. யாராருக்கு என்னென்ன மெனு ஐட்டம் பிடிக்குமின்னு கேட்டுசக் கேட்டுச் செய்யணுமையா. மறந்துராதீங்க. இங்ஙன கவிச்சி சமாச்சாரமே கெடயாது, சுத்தமா பசுநெய்ல தான் அம்புட்டும்னு அவிங்களுக்கும் தெரியும்யா. உன் சமையலுக்குன்னே நாக்கச் சப்புக் கொட்டிக்கிட்டு நாங்க நிக்கறம்ல.

அட, இந்தா பாருங்க, நம்ம தோஸ்துங்க. இவிங்களை நான் உங்களுக்கு அறிமுகம் செய்யவே தேவையில்ல. இருந்தாலும் ஒரு மரியாதைக்குச் சொல்லிடறேன். கைலிய மடிச்சுக் கட்டிக்கிட்டு 'மாங்கு மாங்கு'ன்னு வேலை செய்யறான் பாருங்க, நம்ம 'மெயலாப்பூர் கபாலி'- பயங்கரமான கலக்கல் பேர்வழி தான் போங்க. அப்பால அந்தா பாருங்க, தமிழ்ப் பொலவர் ஆதிமந்தி, அரை ப்ளேடு பக்கிரி, பீட்டரு, மஸ்தான் எல்லாருமே ஒரு ஜமா சேர்ந்துட்டாங்கய்யா, சேர்ந்துட்டாங்க. அய்யா பாத்ரூம் பாகவதரு என்னா குஷியா கச்சேரிக்கு ரெடி பண்ணிக்கிட்டிருக்காரு பாருங்க. கூடவே அவுங்க வூட்டம்மாங்கவெல்லாம் வந்திருக்காப்ல. புதுப் ப்டவை சரசரக்க என்னமா ஓடியாடி வேலை செய்யறாங்க, பாருங்க.

'அமெரிக்க அரசியல்' மறுபடி கிண்டுவம். 'ஆஹா, என் ரதியே'ல புதுசாக் கிளுகிளுப்பா ஜாலியாப் பேசுவம்.

அப்பால நீங்க இத்தினி நாளாப் பாக்காத புதுமொகம்லாம் கூட இங்க வரதாச் சொல்லியிருக்காக.

இங்ஙனயே தங்கியிருந்து வேளாவேளைக்கு நல்லா மூக்கப் புடிக்கச் சாப்பிட்டுச் சந்தோஷமா இருங்க. இதெல்லாமே உங்களுக்காவத்தானே!

சந்தோஷமுங்க, வணக்கம். இதோ வந்துடறேன்.

என்றும் அன்புடன்,

எல்லே ராம்