என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Wednesday, December 08, 2010

சன்மானம் முக்கியம், அமைச்சரே!

கொஞ்சமோ, நிறையவோ ஏதாவது ஒரு சன்மானம் இருக்கவேண்டும். இலவசமாக எதைச் செய்தாலும் அதற்கு சரியான மதிப்பு இருக்காது என்பது என் வாழ்க்கை அநுபவம்!

சமீபத்தில் ‘கல்கி’ யில் வெளிவந்த என் கதை, கட்டுரைகளுக்குக் காசோலைகள் தபாலில் வந்திருப்பதாக என் சென்னை உறவினர் போனில் சொன்னார். அமௌண்ட் எல்லாம் ஒன்றும் பெரிசாக இல்லையென்றாலும், சின்னச்சின்ன சன்மானங்கள்கூட எனக்கு உற்சாகம் அளிப்பதை மறுக்கமுடியாது.

இந்த அங்கீகாரம் எழுதுபவனுக்குப் பெரிய உற்சாக ஊற்று.

என் எழுத்துக்கு எப்போது சன்மானம் கிடைக்க ஆரம்பித்தது?

முதன் முதலாக என் சிறுகதை ஒன்று ஆனந்தவிகடன் பவழவிழா மலரில் (’வருகிறேன் தேவதையே!’) வெளிவந்தபோதா அல்லது அதற்கும் முன்பே கல்கண்டில் அல்லது தீராநதியில் எழுதிய சில கவிதைகளா? சரியாக நினைவில்லை. எப்படி இருந்தாலும், அந்தக் காசோலைகளைக் காசாக்காமல் பல நாள் வைத்திருந்தது நினைவில் இருக்கிறது.

ஆனால் குமுதம் ‘ஜங்ஷ’னில் பல கட்டுரைகள் வெளிவந்தும், சன்மானக் காசோலைகள் அனுப்பி இருப்பதாக அவர்களே பலமுறை சொல்லியும், அவற்றைக் கண்ணிலேயே நான் காணாமல் போனது மறக்கவில்லை!

எது பிரசுரமானாலும், தமிழ் பத்திரிகைகளிலிருந்து அதிகம் இல்லாவிட்டாலும் ரு. 300 அல்லது 500, என்று ஏதாவது வரும். விகடனிடமிருந்த வந்த முதல் செக் 600 என்று நினைக்கிறேன்.

கலைமகள் கி.வா. ஜெகந்நாதன் நினைவுப் போட்டி ஒன்றில் கட்டக் கடைசி நாளில் கலந்துகொண்டு முதல் பரிசு வாங்கியது மறக்கமுடியாத ஒன்று. ‘பங்கஜவல்லி’ எழுத ஆரம்பித்து முதல் பாரா முடித்தவுடனேயே என் மனைவியிடம் சொன்னேன், “இந்தக் கதையை எங்கே அனுப்பினாலும் முதல் ப்ரைஸ் வின் பண்ணும், பார்!” என்று. போட்டிகளுக்கெல்லாம் அனுப்பும் எண்ணம் அப்போது துளியும் இல்லை. ஒரு ஏளனச்சிரிப்பு + வலது முகவாயை இடது தோள்பட்டை இடியுடன் அவள் என்னைத் தாண்டிப் போனாள்..

சில வாரங்களில் சென்னை போய் இறங்கினேன்.

”கலைமகள் போட்டிக்கு ஏதாச்சியும் அனுப்பினீங்களா?” என்று பாரா கேட்டார். “என்ன கலைமகள், எந்தப் போட்டி?” என்று நான் பேந்தப்பேந்த விழித்தேன். ”அடாடா, உடனேயே அனுப்புங்க, நாளைக்கு லாஸ்ட் டேட்” பாராஜி என் எழுத்துக்கு ரசிகர் மட்டுமல்ல, எனக்கு ஊக்க டானிக். என்னை விரட்டி விரட்டி வேலை வாங்கத் தெரிந்த ஆசிரியர்.

கதை அனுப்பியதை எல்லாம் நான் மறந்தே போய்விட, சில பல வாரங்கள் கழித்து, நான் முதலிடத்தில் வெற்றி பெற்றதை, கதை பிரசுரம் ஆகி இருப்பதை என் நண்பன் பெங்களூர் சுமன் என்னிடம் ஒரு பின்னிரவில் சொல்லி என்னை சந்தோஷப்படுத்தினான். ரூ. 5000 என்று நினைக்கிறேன். இல்லை பத்தாயிரமா? அதுவும் நினைவில் இல்லை.

ராயல்டி செக்குகளும் திடீர் திடீரென்று கிழக்கிலிருந்தோ விகடனிலிருந்தோ வந்து என்னை குஷிப்படுத்தும்.

சினிமா சன்மானங்களும் அப்படியே. நான் அப்போது புதுமுகமாக இருந்தாலும், முதன்முதலில் ‘பன்னீர் புஷ்பங்க’ளில் நடிக்க என்னை அணுகியபோது, சரியான சினிமா பந்தாவோடு வெள்ளித் தட்டில் ரூ. ஆயிரம், பழங்களோடு ப்ரொடக்‌ஷன் மேனேஜர் ராமச்சந்திரன் என் வீட்டுக்கே வந்தது மறக்கமுடியாத புது அநுபவம்.

சமீபத்தில் நான் நடித்த ‘ஜக்குபாய்’ படத்திற்காகவும் எனக்கு நல்ல முறையில் சன்மானம் நிறையவே கொடுத்து, மிகுந்த மரியாதையுடன், போகவர ஏர்ஃப்ளைட் டிக்கெட்கள், முதல்தர ஹோட்டல் வசதிகள் என்று அமர்க்களப்படுத்தி விட்டார்கள் ராடன் நிறுவனத்தினர். அதுவும் ‘டப்பிங்’ பேசுவதற்காகவே என்னை இந்தியா தருவித்தது பாராட்டவேண்டிய தொழில் தர்மம். அந்தப் படம் சரியாக வியாபாரமாகாமல், ‘நெட்’டில் திருட்டு ரிலீஸ் ஆகி, மரண அடி வாங்கியது வருந்தத்தக்கது.

ஹாலிவுட்டிலும் இப்படியே. ஏதாவது ஷோவிலோ, சினிமாவிலோ, விளம்பரப் படங்களிலோ தலை காட்டினாலும் உடனே ஒரு நல்ல சன்மானம் கொடுத்து விடுகிறார்கள். ஒரு மைக்ரோசாஃப்ட் விளம்பரப் படத்தில் நான் நடித்து, அதை அவர்கள் வேறு எங்கேயோ ஒரு வருடாந்திர அறிக்கையில் பயன்படுத்திக் கொண்டதால், ஒரு திடீர் சர்ப்ரைஸ் செக், தபாலில்! 'ஜிம்மி கிம்மெல்' ஷோக்களில் அவ்வப்போது தலைகாட்டினால் வீட்டுக்குப் போகும்போது கை மேல் காசோலை கொடுத்துக் கைநாட்டும் வாங்கி விடுகிறார்கள்!

நான் ‘எல்லே’யில் இருப்பதால் சென்னையில் ஒரு நண்பனின் முகவரியை முதலில் பத்திரிகைகாரர்களிடம் கொடுத்திருந்தேன். என் செக்குகளை அவன் கண்டுகொள்ளாமல் எங்கேயோ போட்டுவைத்து அப்புறம் மொத்தமாக அவை காலாவதியான பின்னர் கொடுத்த கொடுமைகளும் நிகழ்ந்திருக்கின்றன.

சின்னச் சின்ன சன்மானங்களை மொத்தமாகத் தேற்றி, அந்தப் பணத்தை ‘உதவும் கரங்கள்’ மாதிரி நல்ல காரியம் பண்ணுகிறவர்களுக்குக் கொடுத்து விடுகிறேன்.

சந்தோஷமாக இருக்கிறது!

Friday, December 03, 2010

தேவை, கொஞ்சமாவது முதுகெலும்பு!

ஸ்பெக்ட்ரம் 2G Scam பற்றி எரிகிறது.

சர்வதேச சந்தைகளில் இந்தியாவின் ஊழல், நம்பகத்தன்மை பற்றிய பல ஆதாரமான அடிப்படைக் கேள்விகள் எழுந்துள்ளன.

வட இந்திய மீடியாக்கள் மட்டுமே இதை அதிகமாக, துணிச்சலுடன் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

நம் தமிழ்த் திருநாட்டில் “எங்கேயோ எண்ணெய் மழை பெய்கிறதாம்’ பாணியில் பல இருட்டடிப்பு வேலைகள் மீடியாவில் தொடர்கின்றன. அரசு ஆதரவு பத்திரிகைகளும், தொலைக்காட்சி மீடியாக்களும், இன்னும் சில அரசியல் பச்சோந்திகளும் வாய்மூடி மௌனிகளாக இந்த கேவலத்துக்கெல்லாம் ‘ஒப்புதல் சாட்சியம்’ அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆக்சிஜனுக்கு அடுத்தபடியாக செல்போன்கள் இன்றியமையாதவை ஆகிவிட்ட காலம் இது.

நம் எதிரி நாடுகளாக நம்முடன் சண்டையிட்ட, சண்டை போட்டுவரும் சைனா, பாகிஸ்தான் போன்ற விரோதி நாட்டு கம்பெனிகள் நேரடியாகவோ, பினாமிகள் மூலமோ இங்கே வந்து இந்திய டெலிகாம் துறையில் காலூன்றி விட்டார்கள் என்கிற தகவல் அதிர்ச்சி தரக்கூடியது. பல பந்நாட்டு நிறுவனங்களுடன் நாம் வர்த்தகம், தொழில் செய்வது வேறு. இது வேறு. மீடியா, டெலிகாம் துறைகளில் அமெரிக்காவில் இப்படி வேறு யாரும் காலூன்றி விடமுடியாது.

1985-ல் நியூஸ் கார்பரேஷன் என்கிற பலகோடி மீடியா நிறுவனத்தின் சேர்மன் தன்னுடைய கம்பெனி அமெரிக்காவில் காலூன்ற வேண்டும், பல அமெரிக்க மீடியா கம்பெனிகளிலும் முதலீடு செய்யவேண்டும் என்பதற்காகவே ஆஸ்திரேலியரான ரூபர்ட் மர்டாக் அமெரிக்கக் குடியுரிமைக்காக விண்ணப்பிக்க நேர்ந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

பல வெளிநாட்டு டெலிகாம் கம்பெனிகளுக்கெல்லாம் கேள்வி முறையில்லாமல் மானாவாரியாக இந்தியாவில் கோலோச்ச அனுமதி தந்திருப்பது நாட்டின் இறையாண்மைக்கே வெடி வைக்கும் அதிர்வேட்டு என்பது சாதாரண பாமரனுக்கும் புரிய ஆரம்பித்திருக்கிறது.

எப்படி இதெல்லாம் நிகழ்ந்தது என்கிற வேதனை ஒரு பக்கம். சரி, இனிமேலாவது ஏதாவது செய்து இந்த இழப்பையெல்லாம் சரிக்கட்ட முடியுமா என்று பார்ப்பது இன்னொரு பக்கம்.

Photobucket

”இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனத்தின் பெயரில் உரிமம் பெற்று, பிறகு வெளி நாட்டு நிறுவனத்துக்கு அதைத் தாரை வார்த்து இருக்கிறார்கள். ஒரு நிறுவனத்தின் பூர்வீகம் பாகிஸ்தான் என்கிறார்கள். தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தான் நாட்டு உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ... இவற்றுக்கும் அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்துக்கும் இடையிலான தொடர்பு பற்றி விசாரித்தார்களா? நம் நாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சக்திகளுக்கு ஆதரவு கொடுக்கும் நாட்டில் இருந்தபடியே, நமது நாட்டின் ரகசியங்களை அந்த டெலிகாம் சிஸ்டம் மூலம் இடைமறித்துக் கேட்க மாட்டார்களா?'' என்று டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி கேட்கிறார் விகடன் பேட்டியில்.

கையில் பல ஆதாரங்களை, ஆவணங்களை வைத்துக்கொண்டு தான் அவர் பேசுவதாகத் தெரிகிறது.

''அரசுக்கு வர வேண்டிய ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ரூபாய் நஷ்டம். சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. ஊழல் பணம் 10 சதவிகிதம் ராசாவுக்குப் போனதா? 30 சதவிகிதம் கருணாநிதி குடும்பத்தினருக்குப் போனதா? 60 சதவிகிதம் பணம் சோனியா வின் இரண்டு சகோதரிகளுக்குப் போனதா என்கிற கோணங்களில் சி.பி.ஐ. விசா ரிக்க வேண்டும். ஹவாலா மூலம் துபாய், மாலத் தீவு களுக்குப் பணம் போய் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். ஸ்பெக்ட்ரம் ஊழலில் வெளிநாட்டு வங்கிகளில் நடந்த பணப் பரிமாற்றம் குறித்த தகவல்களை அமெரிக்காவிடம் கேட்டு வாங்கலாம் என்று நம் பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். ஆனால், இந்தத் தகவல்களை நம்முடைய சி.பி.ஐ-யும், 'ரா' உளவு நிறுவனமும் ஏற்கெனவே வாங்கிவிட்டதாகக் கேள்விப்படுகிறேன். ஆதாரங்கள் கையில் வந்துவிட்டன. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்களா என்று பார்ப்போம்!''

மத்திய அரசாங்கத்தின் நேரடிப் பொறுப்பிலேயே சிபிஐயும் ராவும் இன்னும் பல உளவு நிறுவனங்களும் இருப்பதால் வீட்டைப்பூட்டி திருடனிடமே வீட்டுச்சாவியைக் கொடுத்திருக்கும் அவலம் இந்தியாவில் நிகழ்ந்திருக்கிறது.

ஏதோ சுப்ரீம் கோர்ட் என்று ஒன்று இருப்பதாலும், அங்கே கொஞ்சமாவது நீதிமான்கள் நிலைத்திருப்பதாலுமே, தள்ளாடினாலும் உண்மை, நேர்மை, சத்தியம் எல்லாம் இன்னமும் உயிருடன் இருக்கின்றன. அந்தக் குரல்வளையையும் நெறித்துவிடத் துடிக்கும் அசுர சக்திகள் அநேகம் உண்டு.

CBI, RAW போன்ற நம் நாட்டு உளவு, பாதுகாப்பு நிறுவனங்களில் முதுகெலும்பு, நேர்மை, நாணயம் உள்ளவர்கள் ஒரு சிலராவது இருப்பார்கள் என்று நம்புவோம்.

அடுத்த பூகம்ப விக்கிலீக்ஸ் இந்தியாவிலிருந்து வெடித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை!