என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Tuesday, December 14, 2004

ஜாக் அய்யர் -2

ஒரு நாள் கேயெஸ் தனியே தன்னந்தனியே ‘அட்வான்ஸ் லெவல்’ சோழி பார்த்துக் கொண்டிருந்தார். அய்யருக்கு அப்போது தான் அந்த ஐடியா ‘பளிச்’சென்று வந்தது.

"கோமதி, சீக்ரமா இங்க வாம்மா ஒரு நிமிஷம்".

மாமிக்கு நிறை மாசம். மூச்சு வாங்கியபடி மெதுவாக வந்து கதவருகே நின்றாள்.

"உன் கொழந்தை ஜாதகத்தை ப்ரஸ்னத்தில பாக்கறேன். அப்படியே கெழக்கால பார்த்து நில்லு."

"நமக்கு எதுக்கு அதெல்லாம்? ஈஸ்வர கிருபையில எல்லாம் நல்லபடிதான் ..." மாமி சொல்ல வந்ததை முடிக்குமுன் சீட்டுத் தொந்தரவு இல்லாத புதிய திண்ணையில் சோழிகள் விஸ்தாரமாக ஓடி ஆடிக் குலுங்கி நின்றன.

சோழிகளை அப்படியும் இப்படியுமாகப் பல கோணங்களில் பார்த்தார் கேயெஸ். நெற்றியைச் சுருக்கினார். உதட்டைப் பிதுக்கினார். "அந்த வெற்றிலைச் செல்லத்தையும் ஒரு சொம்புல ஜலமும் கொண்டு வா. இன்னிக்கி அரிசி உப்புமாவில வெங்காயம் போடாத. சஷ்டி." என்றார்.

மாமிக்கு வயிற்றைப் பிசைந்தது. "உப்புமாவும் வெத்திலையும் இருக்கட்டும். சஸ்பென்சா நிறுத்தாம நல்ல வார்த்தையா சொல்லுங்கோ"

"கவலைப்படாத, கோமதி. அந்தப் பூரி ஜெகந்நாதன் தான் வந்து பொறக்கப் போறான். பையன் ஓகோன்னு படிப்பன். அடேயப்பா எத்தனை படிப்பு? அவனுக்கு ஏத்த படிப்பே கோனேரிராஜமங்கலத்திலயோ திருநெல்வேலியிலயோ என்ன, இந்த நாட்டில கெடையாதுன்னா பாத்துக்கோயேன். கொழந்தை வெளி நாட்டில எல்லாம் போய் படியோ படின்னு படிச்சுப் பட்டம் வாங்கப் போறான்."

அடி வயிற்றைத் தடவியபடியே கோமதி மாமி அதற்குள்ளேயே கவலைப்பட ரம்பித்து விட்டாள். "ஏன்னா, வெளி நாட்ல எல்லாம் ரொம்பக் குளிருமாமே. கொழந்தை சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவன்? அவனைப் பிரிஞ்செல்லாம் என்னால தனியா இருக்க முடியாது"

"சரி சரி. அதுக்கென்ன இப்போ? உள்ள போய் நன்னா குளிர் தாங்கறாமாதிரி கொழந்தைக்கு ஒரு ஸ்வெட்டர் பின்னு"

கோமதி மாமி அந்தண்டை போனவுடன், கேயெஸ் அய்யர் என்கிற திருநெல்வேலி கல்யாணசுந்தரமய்யர் வெகு நேரம் சோழி போட்டுப் பார்த்தபடி தனக்குள் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தார்.

******* ******** *********

ஹைஸ்கூலில் அடுத்த வகுப்புக் கரும்பலகைகளிலெல்லாம் தொடர்ந்து எழுதுமளவுக்குத் தன் பெயர் பெரிசாக, வளர்த்தியாக இருந்ததில் ஆரம்பத்தில் ஜெகனுக்குக் கொஞ்சம் பெருமையாகக்கூட இருந்தது. வெறும் 'சுரேஷ், ரமேஷ், சுப்பிரமணி' எல்லாம் ஜெகனுடைய பெயர்ப் பிரலாபத்தைப் பார்த்துப் பொறாமைப்பட்டார்கள். ஆனால் பிற்காலத்தில் 'கோனேரிராஜமங்கலம் ஜெகன்னாதன் கல்யாணசுந்தரம்' என்கிற மொத்தப் பெயரைச் சுமந்துகொண்டு அவன் படாத பாடில்லை.

படிப்பு, படிப்பு, சதா படிப்பு. அப்பா கேயெஸ்ஸ¥ம் காலாண்டு கணக்குப் பரீட்சையில் "ஜெகன், இந்தத் தடவை சயின்சுல 100க்கு 93 தான் வாங்கப் போறாய். ஆனாக்க, கணக்குல செண்டம். சோழி அப்படித்தான் சொல்றது" என்கிற அளவுக்கு முன்னேறி இருந்தார்.

புதுப்புது சோழி செட்டுக்கள் கொல்கத்தா, கொரியா என்று என்கிருந்தெல்லாமோ- எரும்பு சைசிலிருந்து ஆமை சைஸ் வரை- வரவழைக்கப்பட்டன.

கேயெஸ்ஸின் அட்வான்ஸ்டு சோழிகள் ‘பிஹெச்டி’ லெவலில் பேச ஆரம்பித்து விட்டதால் அந்த வீட்டுத் திண்ணை இன்னமும் இடித்து விரிவாக்கப்பட்டது. "ஞான சம்ஸ்காரார்த்தம் வெகுஜனப் பிரயோசனம்" என்று சம்ஸ்கிருதத்தில் என்னவோ சொல்லிக்கொண்டு கேயெஸ்ஸ¤ம் தன் இலவச சோழிப்ரஸ்ன ப்ராக்டீசை இன்னமும் விரிவுபடுத்தினார்.

சென்னை, பம்பாயிலிருந்தெல்லாம் ரயிலேறி வந்த மக்கள் சோழி ஜோசியம் கேட்க் ஆரம்பித்தார்கள். யாரிடமும் ஒரு தம்பிடி கூட வாங்கியதே இல்லை. ஊர்க்காரர்கள் தத்தம் விசுவாசத்தைக் காட்டுவதற்காக அதே திண்ணையில் பலாமுசு, பூசணி, புடலங்காய், மாம்பழம் என்று எதையாவது கொண்டு வந்து இறக்கி விட்டுத்தான் மறு காரியம் பார்த்தார்கள். கேயெஸ் வேண்டாமென்று எவ்வளவு தடுத்தாலும் யாரும் கேட்பாரில்லை.

வெளியூர்க்காரர்கள் செக் புத்தகத்தை வெளியே எடுத்தால், கல்யாணம் தனக்கு எதுவும் வேண்டாமென்று தடுத்துப் பக்கத்துக் கிராமங்களில் ஏதாவது நலிவுற்ற கோவில்களுக்கு நன்கொடையாகக் கொடுக்கச் சொல்லி விடுவார்.

"பரவாயில்லை. ஏதாவது கொஞ்சம் கேஷாவது வாங்கிக்கணூம், எவ்வளவு சரியா எல்லாம் சொல்றேள்" என்று யாராவது ஆரம்பித்தால், "அய்யோ, நான் பணத்தைக் கையால கூடத் தொடறதில்லை. எல்லா பாபத்துக்கும் அது தான் ரிஷிமூலம், எங்கயாவது நொண்டிப் பிச்சைக்காரனுக்குக் கொண்டுபோய்க் குடுத்துடுங்கோ" என்பார் கல்யாணம்.

********* ********* *********


கான்பூர் ஐஐடியில் ஆளாளுக்குத் தன் பெயரை ரேக்கியதில் ஜெகன் கே. எஸ். என்று அபத்தமாக சுருங்கிப் போயிருந்தான். நியூமராலஜியை ஏன் விட்டுவைக்கவேண்டும், அதிலும் கரை சேர்வோமா என்று ஊரில் கல்யாணம் யோசித்துக் கொண்டிருந்தார். வாராவாரம் பிள்ளைக்காக ஏதுனும் பட்சணம் பார்சல் அனுப்புவதில் கோமதி மாமி மும்முரமாய் இருந்தாள்.


இந்த நிலையில்தான் மாமாவுக்கு ஒரு நாள் அவருடைய ஒரே பிள்ளை அமெரிக்கா போகப் போவதாகக் கடிதம் எழுதியிருந்தான். என்னதான் பல வருஷங்களாக எதிர்பார்த்த விஷயமென்றாலும், வயசான தம்பதிகளுக்கு அந்தக் கடிதம் வயிற்றில் புளியைக் கரைத்தது. தன் சோழி மீதே நம்பிக்கை இல்லாமல் எதற்கும் இருக்கட்டும் என்று பையனுக்காகத் தாழையூத்து சிமெண்டு பேக்டரியில் மேனேஜர் வேலைக்குச் சொல்லி வைத்திருந்தார். அது வீணாகி விடுமென்று அவருக்கே உள் மனதில் பட்டது.

"சரி, அதனாலென்ன? ஜெகன் எப்போ திரும்பி வருவான்னு பார்க்கறேன் பார்" என்று ஒரு தடவை சோழிகளை உருட்டிப் போட்டவர் சற்று நேரம் ஒன்றுமே பேசவில்லை. "வர வர இந்தப் •பாரீன் சோழியெல்லாம் சரியா இருக்கறதில்லை. அவாள்லாம் சுத்த பத்தமா இருக்கற்தில்லையோல்லியோ அதனால தான்" என்றார்.

மாமிக்கு ஏதோ புரிந்தும் புரியாதது போல் கொஞ்சம் கலவரமாயிருந்தது. மேற்கொண்டு அவரிடம் எதையாவது கேட்டு, அவர் அபசகுனமாக ஏதாவது சொல்லி விடுவாரோ என்று பயந்து, "நான் கோவிலுக்குப் போய் அம்பாளுக்கு நெய் விளக்கு ஏத்திட்டு வரேன்" என்று கிளம்பினாள்.

அந்தத் திண்ணையில் அய்யர் மட்டும் சோழிகளை மறுபடி மறுபடி வீசிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

---------- ---------- ----------

அமெரிக்கன் கான்சலேட்டின் அதீத ஏசிக் குளிரிலும் ஜெகனுக்கு வியர்த்திருந்தது. அங்கே வேலை செய்யும் ப்ரௌன் சாகிப்புகள் எட்டடி உசரத்தில் பறந்து கொண்டு கீழ்க் கண்ணாடி வழியாக ஏதோ தொற்றுவியாதிக் கிருமியை மைக்ராஸ்கோப்பில் பார்ப்பது போல் எல்லோரையும் கேவலமாகப் பார்த்துத் தங்களுக்குள் மட்டும் ஏதோ ஜாடையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அபரிமிதமான ஆக்ஸெண்ட் அசத்தல் வேறு சேர்த்து எல்லோரையும் படுத்தினார்கள்.

அங்கே ஏற்பட்ட புதுப் பெயர்க் குளறுபடியில் 'ஜெகன் நேதன் கே.சுந்தரம்' என்று மறு பிறவி எடுத்தான் ஜெகன். எதிர்த்து ஏதாவது பேசினால் ஸ்டூடெண்ட் ஸ்காலர்ஷிப் விசாவைத் திரும்பப் பிடுங்கிக் கொண்டு அடித்து அனுப்புவார்களோ என்கிற பயத்தில் அவன் வாயையே திறக்கவில்லை.

அடுத்த வாரமே அமெரிக்கா போக ஏற்பாடாகி விட்டது. அப்பாவும் அம்மாவும் ஆம்னி பஸ் பிடித்துச் சென்னை வந்திருந்தார்கள். ஏர்போர்ட் கூட்டமே அவர்களுக்கு மிரட்சியாக இருந்தது. தாமிரபரணித் தண்ணீர் தவிர எதுவுமே குடித்திராத அவர்களுக்குச் சென்னைக் குடிநீர் குமட்டிக்கொண்டு வந்தது.

"செப்டர்ல காலேஜ் தொறக்கறதுப்பா. அங்க காலேஜுக்கெல்லாம் ஸ்கூல்னு தான் பேர். பதினெட்டு மாசம் கோர்ஸ். னா நான் ஒரே வருஷத்துல் எம். எஸ் முடிச்சுடுவேன். உடனேயே திரும்பி வந்துடறேன்ப்பா. அம்மாவை ஜாக்கிரதையாப் பார்த்துக்கோ"

"ம்ம்ம்" என்றார் கல்யாணசுந்தரம் அய்யர்.

"அப்பா ஏன்மா சரியாவே பேச மாட்டேங்கறார்? என் கிட்ட ஏதாவது கோவமா? நான் வேணும்னா இந்த ட்ரிப்பையே கேன்சல் பண்ணிடட்டுமா? அப்பா சோழி கொண்டு வந்திருக்காரா? ஏர்போர்ட்ல ஒரு ஓரமா தரையத் தொட்ச்சுட்டு சோழி போட்டு நான் எப்ப திரும்பி வருவேன்னு பார்த்து சொல்லச் சொல்லேன். நீயும் ஏம்மா உம்முன்னு இருக்கே? எனக்குக் கலவரமா இருக்கும்மா'

"அப்பா இப்பல்லாம் கொஞ்ச நாளா சோழி பார்க்கறதையே நிறுத்திட்டார்டா ஜெகன். நான் ஏன்னு கேட்டா ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறார். இப்ப வர்ர சோழியெல்லாம் சுத்த பத்தமா இல்லையாமே. வாசல்ல யாருமே இப்ப வந்து அப்பா கிட்ட எதுவும் கேக்கறதும் இல்லை".

சென்னை ஏர்போர்ட்டிலிருந்து ஊர் திரும்பி வந்து ஏதோ ஜுரமென்று படுத்தவர் தான் கலயாணசுந்தரம். ஜூர வேகத்தில் ஒரு நாள் தன் முடிவு என்னவாகுமென்று தெரிந்து கொள்ளவேண்டி வீசிய சோழிகளை வெறித்துப் பார்த்தபடி திண்ணையிலேயே கண்ணை மூடியவர் பிறகு திறக்கவேயில்லை.

********* ********* **********

அப்பா செத்ததற்குக்கூட ஜெகனால் அமெரிக்காவிலிருந்து வர முடியாமல் போயிற்று. விசாவில் ப்ராப்ளம். •ப்ளைட் கிடைக்கவில்லை. ஸ்கூலில் நெருக்கடி. க்ரெடிட் கார்டில் பணமில்லை. இப்படி எத்தனை எத்தனையோ கஷ்டங்கள் ஒன்றாகச் சேர்ந்து அவனைத் தாக்கிய கெட்ட நேரம் அது.

அமெரிக்க வாழ்வில் அநித்திய சாத்தியங்கள் ஏராளம். விசா கிடைத்து ஆகாய விமானத்தில் ஏறி முதன்முதலாக வெளிநாடு சென்றது தனக்கு நேர்ந்த மிகப் பெரிய அதிர்ஷ்டமா அல்லது மாபெரும் துரதிர்ஷ்டமா என்று தனக்குத்தானே அவன் அடிக்கடி கேட்டுக்கொண்டான்.

அவசர அவசரமாக ஊரில் அப்பாவுக்குக் காரியங்களைப் பண்ணி முடித்து விட்டார்களாம். 'இனிமேல் போய் என்ன செய்யப் போகிறோம்?' என்று தன்னையே அவன் நொந்து கொண்டான். அம்மாவிடம் டெலிபோனில் எத்தனை தடவை பேசினாலும் பழைய அம்மாவைக் காணவேயில்லை. முதலில் தினமும் டெலிபோன் செய்தான். அப்புறம் அம்மாவே "எதுக்கடா இப்படிச் செலவு பண்றே. வாரம் ஒரு தடவை கூப்பிடு. போதும்" என்றாள்.

சில சமயங்களில் ஜெகன் போன் பண்ண ஒரு மாதம் கூட ஆகி விடுகிறது. அம்மாவும் ஏதோ மடத்து ஆசிரமத்தில் சேர்ந்து விட்டாளாம்.

'அடுத்த வருடம் திரும்பி விடலாம், அதற்கடுத்த வருடம் கட்டாயம்' என்று ஜெகன தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தாயிற்று. படித்து முடித்தவுடனேயே திரும்பித் தொலைத்திருக்கவேண்டும். டிரெய்னிங், மேற்கொண்டு அட்வான்ஸ்டு டிரெய்னிங்....எல்லாம் மாய வலை. எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்டாயிற்று.

வேரோடு புலம் பெயர்ந்து விட்டதில் வேதனை மட்டுமே மிச்சமானது.

அமெரிக்கத் தற்காப்பு நிறுவனங்களில் பணிபுரிய வேண்டுமானால் குடியுரிமை கட்டாயம் வேண்டும். குடியுரிமைக்காக ஜெகன் ‘ஜாக் அய்யர்’ ஆனான்.

எம். எஸ் முடித்துப் பிஹெச்டி பண்ணி ஏரோநாடிகல் எஞ்சினீயரிங்கில் அமெரிக்காவின் மிகப் பெரும் மூளையென்று புகழப்பட்டு, வெள்ளைக்காரி ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளவேண்டிய எதிர்பாரா இக்கட்டில் ஆழ்ந்து, ஒரே வருடத்தில் டைவர்சும் ஆகி முடிந்து, அவளுக்கு மாதாமாதம் 'அலிமனி'யும், வாராந்தரக் கடைசிகளில் மட்டுமே தன் பெண்ணுக்கு அப்பாவுமாக ஆகிப் போய் அதற்காக அவன் இன்னமும் அந்த அமெரிக்க மேற்குக்கரையோரப் பீச்சாங்கரையில் அடிக்கடி அழுது கொண்டிருப்பது பெருஞ்சோகமா, விதியா, தலையெழுத்தா தெரியவில்லை.

நல்ல வருமானம், சொந்த வீடு, கார், பணம் என்று இருந்தாலும் அதற்கப்புறம் ஜாக் அய்யர் மறு கல்யாணம் பண்ணிக் கொள்ளப் பிரியப்படவில்லை. இந்தியாவுக்குப் போகவும் மனசில்லை.

‘பேசாமல் தாழையூத்திலேயே ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தால் அப்பா இன்னமும் உயிரோடு இருந்திருப்பாரோ? அம்மா என்னமாய் சமைத்துப் போடுவாள்? கோனேரிராஜமங்கலத்தில் எல்லோரும் எவ்வளவு அன்பாக இருப்பார்கள்? வாசலில் எந்நேரமும் எத்தனை கொண்டாட்டமும், சிரிப்பும், கும்மாளமும்? எல்லாவற்றையும் ஏன் இப்படித் தொலைத்து விட்டேன்? இத்தனையும் எதற்காக இழந்தேன்? இங்கே அமெரிக்காவில் யாராவது நன்றாகச் சோழி பார்த்துச் சொல்லக்கூடியவர்கள் இருக்கிறார்களோ?’ - ஏகப்பட்ட நினைவலைகள் மன ரணங்களைச் சீண்டிக்கொண்டே உப்புக்காற்றில் கண்ணிலும் மனசிலும் எரிச்சலூட்டின.

"என்ன இப்படிப் பண்ணி விட்டேனே. எந்த முகத்துடன் போய் அம்மா முகத்தில் எப்படி விழிப்பேன்?"

"அப்பா போனப்பறம் இங்க ஏகப்பட்டது நடந்து போச்சு. ஊருக்கு ஒரு நடை வந்து ஒழுங்கா ஒரு கல்யாணம் பண்ணிக்கோ. இப்ப உனக்குக் கொஞ்சம் வயசாயிட்டாலும் தப்பே இல்லை. இப்பவும் நம்ம சொந்தத்தில் கூட ..." என்று அம்மா ஏரோகிராம் முழுக்கப் பென்சிலால் நுணுக்கி நுணுக்கி எழுதி இருந்ததை மறுபடியும் படித்து முடித்து அவன் அழுதான்.

கடற்கரை ஓரமாக இருந்த கடையிலிருந்து சில சோழிகளை அள்ளியெடுத்த அந்தப் பெண். "டாடி, கேன் யூ கெட் மீ திஸ்? ஐ லவ் தெம்" என்றது.

வெளுப்பும் இல்லாமல், பழுப்புமில்லாமல் இருந்த அந்தப் பெண் குழந்தைக்கு, வாரக் கடைசிகளில் மட்டுமே தன்னை வந்து பார்க்க அனுமதிக்கப்பட்டிருக்கும் அப்பா, திடீரென்று குலுங்கிக் குலுங்கி அழுவதன் காரணம் புரியவில்லை.

ஜாக் அய்யரை அந்த அமெரிக்கக் குழந்தை புதிராகப் பார்த்தது.

-(முற்றும்)

8 comments:

Anonymous said...

þ¨¼§Å¨ÇìÌÓý ÝôÀ÷. Ó¾ø À¡¸òÐÄ
§º¡Æ¢ §º¡Æ¢Â¡ Àø¨Ä측ðÊ º¢Ã¢ì¸¨ÅîÍðÎ, þÃñ¼¡õ
À¡¸ò¾¢ø þôÀÊ §¸Å¢ §¸Å¢ «Æ ¨Å츢§È§Ç..! ƒ¡ì «öÂ÷
§ƒ¡ì «öÂá þÕôÀ¡÷Û À¡÷ò¾¡, Å£ì «öÂḢ
Å£ô Å£ôÒÛ Å£ôÀ ¬ÃõÀ¢îÍ𼡧Ã...! ±ýɧÁ¡ §À¡í§¸¡!

Á£.ºó¾¢Ã§º¸Ãý

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

வாங்க மீச வாங்க!

ஒரு வாசகனைக் 'கெக்கே பிக்கே'ன்னு சிரிக்கவைக்கறதும், கேவிக்கேவி அழ வைக்கறதும், 'ஹா'ன்னு பிரமிக்க வைக்கறதும், 'அய்யய்யோ'ன்னு நடுங்க வைக்கறதும், அதனங்க என்னோட தொழில்!

எப்படியோ நீங்க ரசிச்சா சரி தான ராசா.

'உன் கண்ணில் நீர் வழிந்தால்'னு ஒண்ணு எழுதப் போறேன். கண்டிப்பா அதுல கண்ணீர் வரும், ஆனாக்க அது வேற மாதிரிக் கண்ணீர் ;-)

என்றும் அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

துளசி கோபால் said...

அன்புள்ள ராம்,

அமெரிக்கா என்ற மாயாலோகத்துக்கு வர்றவங்களை எப்படி அது திரும்பப் போகமுடியாம செஞ்சுருதுன்னு பாருங்க!

சிரிப்பும் அழுகையுமா எழுதிட்டிங்க!ரொம்ப யதார்த்தமான முடிவு!

என்றும் அன்புடன்,
துளசி.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள துளசி,

'மாயாலோகம்' என்று நீங்கள் எழுதி இருப்பது நூற்றுக்கு நூறு சத்தியம். எல்லாச் சோகங்களையும் மீறித்தான் சிரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது.

உங்களுக்குக் கதை பிடித்திருப்பதில் எனக்கு சந்தோஷம். பாராட்டுகளுக்கு நன்றி.

அன்புடன்,

எல்லே ராம்

Mookku Sundar said...

ராம்,

சோழியில் செலவழித்த வரிகளை கொஞ்சம் வெட்டி, மனதை பாதித்த பிற்பாதியில் சேர்த்திருக்கலாம்.

ஆனாலும் கதை சூப்பர்..

பிரிவோம் சந்திப்போம் இரண்டாம் பாகத்தில் வரும், நியூயார்க்கில் ரகுவுக்கு அடைக்கலம் கொடுக்கும் திருநெல்வேலி ஆசாமியை நினைவுபடுத்துகிறார்.

ஜமாய்ங்க..!!

சீமாச்சு.. said...

«ñ½¡..áÁñ½¡, ¦Ã¡õÀ ¿øÄ¡ ¸¨¾ ¦º¡ø§Èû. ƒ¡ì «öÂ÷-Û §À¨ÃôÀ¡÷ò¾Ð§Á, Á¡ÂÅÃõ, ¾¢ÉÁ½¢ ²ƒñð ƒìÌÅöÂÃô Àò¾¢ò¾¡ý ±Ø¾¢Â¢Õ츢ȣ§Ã¡ýÛ ¦¿Éý.
¦Ã¡õÀ ¿øÄ¡ þÕó¾Ð. ¿£í¸Ùõ Á¡ÂÅÃõ¾¡ýÛ ¦¾Ã¢ïÍ ¦Ã¡õÀ ºó§¾¡„õ.
±ý¦ÈýÚõ «ýÒ¼ý,
º£Á¡îÍ..

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

ஐயா மூக்கரே,

'சோழியிலே செலவழித்த வரிகளை ...' உருப்படியான, நல்ல சஜெஷன் தான். ஆனால், அந்தக் க்தை அப்படித்தான் தன்னைத் தானே எழுதிக்கொண்டு விட்டது! காமெடி தானே நமக்குப் புடிச்ச கலரு?;-)

'பிரிவோம் சந்திப்போம்' படித்ததில்லை. உங்களிடமிருந்து அந்தப் புத்தகத்தை 'லவுட்டு'வதற்காகவே ஒரு முறை சாக்ரமெண்டோ பக்கம் வரவேண்டும்.

என்றும் அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள சீமாச்சு,

'ஆயிரமானாலும் மாயவரம் ஆகுமா'! மயிலாடுதுறைக்காரருக்குக் 'கோனேரிராஜமங்கலம்' பிடித்துப் போனதில் எனக்கும் சந்தோஷம். என் கணக்குல காளியாகுடியில ஒரு டிகிரி காஃபி அடிங்க!

என்றும் அன்புடன்,

லாச் ஏஞ்சல்ஸ் ராம்