என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Wednesday, October 20, 2004

அவ(¡)ளோட ராவுகள் -1

அவ(¡)ளோட ராவுகள் -1
__________________

ஊசி முனையில் அம்பாள் ஈஸ்வரனை நினைத்துக் கடுந்தவம் புரியும் இந்தப் புனித நவராத்திரி நோன்பு நாட்களில், ஒவ்வொரு நாளும் அம்பிகையின் ஒவ்வொரு குணாதிசயத்தைப் பௌராணிகர்கள் போற்றிப் புகழ்ந்து தேவி மகாத்மிய பாகவதம் பாடிக் கொண்டிருக்கும் புண்ணியமான பண்டிகை காலத்தில், இப்படிப்பட்ட ஒரு மலையாளப் படத் தலைப்புடன் இதை நான் எழுத நேர்ந்திருப்பது நிறையவே விசனிக்கத் தக்கது.

இதற்காக நான் வருந்துவது கொஞ்ச நஞ்சமில்லை. இருந்தாலும் என் கடமையே நான் செவ்வனே செய்தாக வேண்டும்.

தாரண வருட சரத் ருதுவின் துலா மாதப் புண்ணிய காலத்தில் இப்படியெல்லாம் அபஜருத்து மாதிரி எழுதுவதற்காக நான் அதல பாதாளத்துக்கும் கீழே ஒரு பயங்கர லோகத்தில் எந்த எண்ணெய்க் கொப்பரையில் எப்படி வெந்து 'தையா தக்கா' என்று குதிக்கப் போகிறேனோ தெரியவில்லை. நான் வாங்கிப் போட்டிருக்கும் என் புது ஜட்டியை அப்போது என்ன செய்வார்கள்? தலை தீபாவளிக்கு என் மாமனார் எனக்கு ஆசை ஆசையாய் வாங்கிப் போட்ட என் மைனர் செயின் (14 காரட்) என்ன ஆகும்? "இனிமே இப்படியெல்லாம் எழுதுவியா, மவனே? உனுக்கு இம்போர்ட்டட் மலேசியன் ச·போலாவா கேக்குது? கையேந்தி பவன் கருகல் எண்ணெய லாரி டீசலோட கலந்து கலாய்ல ஊத்துப்பா இவுனுக்கு" என்று எண்ணெய்க் கொப்பறை இன் சார்ஜ் எம கிங்கரர்கள் கை கொட்டிச் சிரித்து மகிழலாம்.

நான் செய்கின்ற பாவம் அவ்வளவு கொடியது தான்.

இருந்தாலும் சில உண்மைகளே, நோம் காலம், மீனம், மேஷம் பார்க்காமல், உடனே விளம்பத்தான்- உண்மை புரிந்தவுடன் சொல்லத்தான்- வேண்டும். இந்தப் பேருண்மையைப் புரிய வைத்ததற்காக ஆணினமே எனக்கு வருங்காலத்தில் பெருங்கடன் பட்டிருக்கப் போகிறது என்பதை நினைக்கையில் நான் கொஞ்சம் தெம்பாக விசும்புகிறேன்.

ஆமாம், இது என்ன இந்தக் கட்டுரைக்கு இப்படி ஒரு தலைப்பு?

அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

இதுவே என் நாடக ஸ்கிரிப்டாக இருந்தால் கடைசிக் காட்சியில் யாரையாவது இந்தத் தலைப்பை மூன்று முறை சொல்லவைத்து- என்னங்க சொல்றது அந்தச் செம்மொழி வார்த்தைக்கு? ஆஹா நினைவுக்கு வந்து விட்டது- 'ஜஸ்டி·பை' பண்ணியிருப்பேன். சினிமாவாக எடுத்திருந்தால் கே. பாலச்சந்தர் பாணியில் கரும்பலகையிலாவது இந்தத் தலைப்பை எழுதி அதே ஜ.வைப் பண்ணியிருக்கலாம். ஆனால் இதுவோ இணையக் கட்டுரை.

நல்ல நாளிலேயே மரத்தடியர்கள் இந்த மாதிரி ஆராய்ச்சிக் கட்டுரையெல்லாம் படிக்க மாட்டார்கள். காதல் கவிதை பற்றி யாராவது கிலோக் கவிஞர்கள் கருத்து தெரிவித்தால் கூர்ந்து கவனித்துப் பதிலுக்கு பதில் வெயிட்டாகக் கவிதை எழுதிக் கலாய்த்து மகிழ்வார்கள்.

'ஆராய்ச்சிக் கட்டுரையா? அதுவும் நவராத்திரி பற்றி இன்னோரு கட்டுரையா? சரி, சரி' என்று கொட்டாவி விட்டுக்கொண்டே மகாஜனம் 'மனைவி'யோ, 'மெட்டி ஒலி'யோ பார்க்கச் சென்று விடக்கூடிய மகா அபாயம் நிஜமாக இருக்கிறது.

இந்த அவசர யுகத்தில் இப்படி ஏதேனும் மலையாளப்படம் மாதிரித் தலைப்பு கொடுத்தால்தான் மரத்தடி மகாஜனங்கள் 'அட' என்று சொல்லி ஆழ்ந்து படிப்பார்கள்.

'எதற்காக இவ்வளவு பெரிய பீடிகை?' என்கிற கேள்வி உங்கள் அடி மனதில் துளிர் விட்டு இலை, தழை, காய், கனியெல்லாம் கனிய ஆரம்பிப்பது எனக்கும் தெரியும். நானும் மகா மரத்தடியன் தானே, எனக்கா தெரியாது?

கொஞ்சம் பொறுங்கள். நான் சொல்லப்போவது உங்களுக்குப் பேரதிர்ச்சி தரக்கூடிய உண்மை. இரவில் தனியே இதைப் படிக்க நேரிடுபவர்கள் மறு நாள் காலை வரை இதை ஒத்திப்போடுவது நலம். தனியே படிக்க நினைப்பவர்கள்- வேண்டாம், ப்ளீஸ்1 துணைக்கு ஒரு நாலைந்து ஆண்களைப் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

'ஆண்களை' என்று சொன்னதைக் கவனித்தீர்கள் அல்லவா?

சட்டுப்புட்டென்று விஷயத்தை ஆரம்பிக்கிறேன்.

நவராத்திரி என்பது அம்பாளைக் கொண்டாடிப் பெண்டிர் நோன்பு நோற்று மகிழும் பண்டிகையே அல்ல. அதை நம்பாதீர்கள். ஆணினத்தை அடிமைப்படுத்தி அவலப்படுத்துவதே இதன் முதற் பெரும் நோக்கம். இதை எந்த அகழ்வாராய்ச்சியாளரும் இது வரையிலும் மெசபடோமியாவிலோ, ஹரப்பாவிலோ தோண்டித் துருவிக் கண்டுபிடிக்கவில்லை. ஏன் என்பதைப்பற்றி எனக்கு இப்போது கவலையில்லை.

அ·து பற்றிப் பிறகு கவனிப்போம்.

ஆனாலும், வாயில் பெயர் நுழையாத யுவான் சுவாங், குலாய்ங் டுபாக்கூர், ஜான் மெக்·ப்ராட் என்று யாராவது வெளிநாட்டுக்காரன் இதைச் சொல்லியிருக்கிறான் என்றால் உடனே நம்பி உருப் போட்டு உருப்படியாகப் பரீட்சையில் மார்க் வாங்குகிற வழியைப் பார்ப்ப்£ர்கள். ஏழை எல்லே வில்லோன் என் சொல் அம்பலம் ஏற வேண்டுமானால் நான் இதை உடனே நிரூபித்தாக வேண்டும் என்று படுத்துவீர்கள். இல்லையா? தெரியும், செய்கிறேன்.

ரிலேட்டிவிடி பற்றி இப்படி ஏதோ குன்சாகச் சொன்ன ஐன்ஸ்டினையே 'ப்ரூ·ப் எங்க வாத்யாரே?' என்று கேட்ட பொல்லாத உலகமல்லவா இது? அவர் சொன்ன e=mcஸ்கொயர் விஷயம் எனக்கும் என் போன்ற மூன்று பௌதிக மெய்யடியார்களுக்கு மட்டுமே தெள்ளெனச் சுளீரென்று புரிந்தது என்பது வேறு விஷயம். இருந்தாலும் இன்று வரை அது ரொம்பப் புரிந்து விட்டாற்போல் எல்லோருமே தலையாட்டி வருகிறார்கள் இல்லையா?

என் மிகச் சமீபத்திய கண்டுபிடிப்பான 'அவ(¡)ளோட ராவுகள்' பற்றிய என் விஞ்ஞான ஆய்வுக் கட்டுரை இது.

(பயப்படுங்கள்- இது தொடர்ந்தே தீரும்)

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

பி.கு: ஒரு பம்பரம் 15 ரூபாய, பட்டம் 23 ரூபாய், மாஞ்சாக் கயிறு ஒரு கண்டு முப்பது ரூபாய் என்றால் இந்தக் கட்டுரைக்குக் கிடைக்கப் போகும் நோபெல் பரிசுத் தொகைக்கு எத்தனை கோலி வாங்க முடியும்? ஐன்ஸ்டின் மாதிரி யோசியுங்கள் நண்பர்களே!

No comments: