என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, August 14, 2009

ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு (தொடர்ச்சி)


திருவட்டார் ஊர்க்காரர் ஜெயமோகன் என்று சொல்லிக் கொண்டிருந்தேன் அல்லவா? 'திருடா திருடா' படப்பிடிப்பு காலத்தில் நான் நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரம் சென்று ஆஞ்சநேயரை தரிசித்தது போன்ற நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டோம். அவ்வளவு பெரிய ஆஞ்சநேயரை மெய் சிலிர்க்க தரிசித்து விட்டு வரும்போது யாரோ முகமறியாத ஒரு நபர் என்னைத் துரத்தி வந்து பிரசாதம் கொடுத்து என்னை நெகிழச் செய்தது இன்னமும் நினைவில் இருக்கிறது.

கிட்டத்தட்ட ஒரு சன்னியாசி போல் இரண்டரை வருடங்கள் இந்தியா முழுவதும் தான் தனியாக சுற்றித் திரிந்த கதைகளை ஜெயமோகன் பகிர்ந்து கொண்டார். அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல், அதைப் பற்றிக் கவலையும் படாமல், நெஞ்சில் ஒரு உத்வேகத்துடன், ஆத்ம ஜோதியுடன், வைராக்யத்துடன், வயிற்றில் பசியுடன் அலைவது என்பது விவேகாநந்தர் போன்ற சில மகான்களுக்கே வாய்த்திருக்கிறது. தற்காலத் தமிழ் எழுத்தாளர் ஒருவர் அந்த வரிசையில் இருப்பது ஆச்சரியம்.

சிவானந்தர் பற்றி இங்கே கொஞ்சம் சொல்லவேண்டும்.

மிகுந்த போஷாக்கிலும் சௌகரியத்திலும் ஆரம்பத்தில் வளர்ந்தவர் சிவானந்தர். ரிஷிகேசம் சென்ற பிறகு கூட, அவருடைய ஆச்ரமத்தில் அவர் உபயோகித்த பல விலை உயர்ந்த காமெராக்கள், பனிக் குல்லாய்கள், கையுறைகள், பிரம்மாண்டமான சாப்பாட்டு தட்டு, ஓவர் கோட் எல்லாவற்றையும் இன்றும் காணலாம். அதே ஆச்ரமத்தில் தங்கும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. ஆனால், அதே சிவானந்தர் தீவிர துறவறம், தியானம், தேடல் என்று ஆத்ம விசாரத்தில் முழு மூச்சுடன் இறங்கியபோது, ஒரே ஒரு வேளை ரொட்டிக்கு க்யூவில் நின்று பிச்சை எடுத்திருக்கிறார். காலுக்கு செருப்பில்லாமல் கட்டிய ஒரே கந்தைத் துணியுடன், காய்ந்து போன ரொட்டித் துண்டை கங்கை நீரில் நனைத்தெடுத்து சாப்பிட்டிருக்கிறார். ஊர் ஊராய்த் திரிந்து, கோவில்களை தரிசித்து, சாப்பாட்டிற்கு பிச்சை எடுத்து, புலன்களை அடக்கி, புடம் போட்ட தங்கமாய் மாறி இருக்கிறார்.

ஜெயமோகனும் கிட்டத்தட்ட அதே போல் ஒரு 'இந்தியா தர்ஷன்' செய்திருக்கிறார் என்ற விஷயம் என்னை ஆச்சரியப்படுத்தியது. " மிஞ்சிப் போனா ரெண்டு வருஷத்தில ஒரு ஏழெட்டு வேளை சாப்பிடாம படுத்திருப்பேன். அவ்வளவு தான்!"

அமர்நாத், பத்ரிநாத், கேதார்நாத், கைலாசம் என்று எல்லாவற்றுக்கும் நடந்தே போய் தரிசனம் செய்த நாட்களை- தீவிரமான கோபத்துடன், தர்க்க விசாரங்களுடன், கேள்விகளுடன், தனியே இந்தியாவெங்கும் ஜெமோ அலைந்து திரிந்ததை- அவர் நினைவு கூர்ந்தார். அவருடைய எழுத்தின் இன்றைய வீச்சில், விசாலமான பரந்த மனப்பரப்பில், அனுபவத்தில் அது தெரிகிறது.

ஏற்கனவே ஆஸ்திரேலியா, ஐரோப்பா என்று நிறைய சுற்றி வந்திருக்கும் ஜெமோவின் இன்றைய அமெரிக்க யாத்திரையிலும் அவருடைய இந்த உலக மயமான மானுடத் தேடல் தொடர்வது நிதர்சனம்.

'தாது வருஷ பஞ்ச'த்திலிருந்து வெள்ளைக்காரர்கள் நம்மை எப்படியெல்லாம் கொள்ளை அடித்து, அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் என்பது வரை, இன்றைய அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியக் கல்வியில், கலாசாரத்தில் எப்படியெல்லாம் ஊடுருவிப் பொய்முகம் காட்டுகிறது, நம்மை அலைக்கழிக்கிறது, தெரிந்தோ தெரியாமலோ நாம் எப்படி இதற்கெல்லாம் துணை போகிறோம் என்பது வரை பலப்பல விஷயங்களை ஜெயமோகன் மூலம் கேட்டறிந்தது சுவையான அனுபவம்.

தோழமையுடன், சுவாரசியமாக, கேட்பவர்களைக் கட்டிப் போடுகிற இந்தப் பேச்சு சாமர்த்தியம் ஜெமோவுக்குக் கைவந்த கலையாக இருக்கிறது. மிகுந்த வாசிப்பினாலும், பரந்த யாத்திரைகளாலும், சுய அனுபவத்தினாலுமே இதெல்லாம் சாத்தியம்.

இன்றைக்கும் நாளைக்கும் முகமறியா நபர்களுக்கு மலர்ச்சியுடன் சோறு போடும் பாரம்பரியம் இந்தியாவெங்கும் நிறைந்திருக்கிறது. 'அங்காடித் தெரு' லொகேஷன் பார்க்க வசந்தபாலனுடன் சென்ற ஒரு புழுதி குக்கிராமத்தில், ஒரு மூதாட்டி திண்ணையில் படுத்திருந்த இவர்களை எழுப்பி, சாப்பிடச் சொல்லி வற்புறுத்தி, புதிதாக ஒரு கோழி அடித்து விருந்து வைத்த சம்பவத்தை ஜெயமோகன் உதாரணமாகச் சொன்னார். உண்மையிலேயே பாரதம் தர்ம தேவதையின் இருப்பிடம் தான்.

பேச்சு, இன்றைய இணையம் பற்றியும் திரும்பியது. தினமும் அதிகம் பேர் புதிதாக வந்து பார்க்கின்ற இடங்களில் ஒன்றாக இருக்கிறதாம் அவருடைய உரல். (www.jeyamohan.in )அங்கே ஓரிடத்தில் அவர் எழுதி இருப்பதை இங்கே தருகிறேன்:

'எதிர்வினைகளை வைத்துப் பார்த்தால் எளிமையான விஷயங்களே அதிகம் படிக்கப்படுகின்றன. ஆகவே எதிர்வினைகளைச் சார்ந்து இந்த இணையப்பக்க்கங்களை வடிவமைக்க வேண்டாம் என நினைக்கிறேன். கொஞ்சம்கூட வாசிக்கப்படாத கட்டுரைகளாக இருந்தாலும் கனமான விஷயங்களையும் எழுதலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன். அதாவது இது என் பக்கம். வாசகர்களுக்கு பிடித்தமானதாக இருக்க இங்கே எந்த முயற்சியும் செய்யப்படாது.

இணைய்த்தில் பக்க அளவு பிரச்சினை இல்லை. செலவுக்கவலை இல்லை. இந்த பக்கங்களில் அவை நிரந்தரமாக இருந்துகொண்டிருக்கும். எவருக்காவது எப்போதாவது தோன்றினால் வாசிக்கட்டுமே'

சுவைக்கத் தெரிந்தவர்களுக்கு, ஜெமோவின் விருந்து இலவசமாகக் காத்திருக்கிறது.

(முற்றும்)


3 comments:

முரளிகண்ணன் said...

பகிர்வுக்கு நன்றி

டகிள் பாட்சா said...

இப்போது புரிகிறது 'நான் கடவுள்' நாயகனின் படைப்பு ஜெமோ வின் அனுபவங்கள் என்று. கிட்ட வாங்க காதோடு கேக்கறேன். கதாநாயகனோட 'கஞ்சா' அனுபவங்களும் அவரோடதுதானா!

ஆஹா உங்களிடமிருந்து ஒரு புதிய தமிழ் சொல் கற்றேன். URL க்கு அருமையான phonetically இணையான சொல். எல்லாரும் 'உலவி'ன்னு சொல்கையில் 'உரல்' நன்றாகவே பொருந்துகிறது.. எல்லோரும் வந்து 'இடித்து' விட்டுப் போவதாலோ என்னமோ!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

டகிள்ஜி,

இருக்கலாம், ஜெமோவிடம் கேட்டுச் சொல்கிறேன்!