என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Wednesday, November 03, 2004

அமெரிக்க அரசியல் (நவம்பர் 3 '04)

அமெரிக்க அரசியல் (நவம்பர் 3, 2004)
-------------------------------------

உலகெங்கும் கோடிக்கணக்கானவர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து கொண்டிருக்கின்ற நேரம் இது.

தேர்தல் முடிவுகள் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையே தருகின்றன.

ஜான் கெர்ரி ஜெயித்து விட்டால், வெள்ளை மாளிகையின் வாசல் ஓரமாக ஒரு நாற்காலியைப் போட்டு எனக்குக் குறைந்த பட்சம் ஒரு டவாலி வேலையாவது போட்டுத் தருவதாக அவர் எனக்கு வாக்களிக்கவில்லை.

ஜார்ஜ் புஷ் மீண்டும் அதிபரானால் என் சென்ற வருஷ இன்கம்டாக்ஸ் கணக்கை மறுதணிக்கை செய்து மிரட்டி ஈராக்குக்கே என்னை விரட்டி விடுவதாகப் பயமுறுத்தவும் இல்லை.

பலப்பல காரணங்களுக்காகக் குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும், ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தாம் என்பதை நான் உணராமலும் இல்லை. காமராஜர் இன்று இங்கே இருந்திருந்தால், "இவுங்க ரெண்டு பேருமே ஒரே குட்டையில ஊறின மட்டைங்கதாண்ணேன்" என்றிருப்பார்.

இருந்தாலும், கெர்ரி வெற்றி பெற்றிருந்தால், 'உலக அரங்கில் சமீபத்தில் தான் இழந்து நிற்கும் சுய கௌரவத்தை மீண்டும் பெற அமெரிக்கா தீவிர முயற்சிகள் எடுக்கும், உள்நாட்டுப் பொருளாதாரம் மீண்டும் துளிர்க்கும், குறைந்த பட்ச ஊதியத் தொஅக் அதிகரிக்கும், ஒரு புதிய சகாப்தம் உருவாவதற்கான புது முயற்சிகள் தொடங்கும்' என்று நான் தீவிரமாகவே நம்பினேன். பல பேட்டிகளில் கெர்ரி இதையெல்லாம் சொல்லவும் செய்தார்.

அந்த நம்பிக்கையில் மண் விழுந்து விட்டது.

இந்தக் கட்டுரையை எழுதுகின்ற நேரத்தில், அதிபர் புஷ் ஒரு நூலிழை வித்தியாசத்தில் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றே தெரிகிறது.

கருப்பும் வெள்ளையுமாக, இரவும் பகலும் போல், மொத்த அமெரிக்க மக்களின் மனப்போக்கும் மிகவும் வித்தியாசப்பட்டு, இந்த தேசமே பிளந்து நிற்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. நியூயார்க் போன்ற கிழக்குக் கடற்கரை மாகாணங்களும், கலி·போர்னியா போன்ற மேற்குக் கடற்கரை மாகாணங்களும் மனத்தளவில் இணைந்து ஒரு புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெ
டுக்க வெகுவாக முயற்சித்திருந்தாலும், அமெரிக்காவின் வயிற்றுப் பகுதி, வேறு விதமாக, அதிபர் புஷ்ஷ¤க்கே மறுபடியும் வோட்டளித்திருக்கிறது.

புஷ்ஷின் பொருளாதாரக் கொள்கைகளால் மிகவும் அடிபட்டு, நொந்து நூலாகிப் பல தொழிற்சாலைகளை மூடியிருக்கும் ஓஹையோ போன்ற பிராந்தியங்கள் அவருக்கே மறுமுறையும் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்திருப்பது விநோதமாகத் தெரிந்தாலும், எந்த அளவுக்கு அமெரிக்கா பிளவுபட்டுக் கிடக்கிறது, எந்த அளவுக்குப் பயந்து போய்ப் பிற்போக்குக் கொள்கைகளால் தேங்கிக் கிடக்கிறது என்பதற்கு இம்முடிவுகள் ஒரு சரியான உதாரணம்.

The rednecks are back with a vengeance!

அதீதமான பெரும்பான்மையிலோ, பெரும் ஆதரவு அலையிலோ அதிபர் புஷ் வெற்றி பெற்றுவிடவில்லை. ஈராக் போரின் தற்சமயச் சகதி நிலை பற்றி அமெரிக்கர்களின் பொதுவான கவலையும் பயமும் கூடித்தான் இருக்கிறது. இருந்தபோதும், 'ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்' என்று எம்ஜிஆர் மாதிரிப் பாடி உண்மை முழங்கித் தட்டிக் கேட்பதற்குத்தான் அமெரிக்காவில் ஆள் இல்லை. 'ஈராக் மீதான போருக்குச் சரியான முகாந்திரம் இருந்ததா, ஆயில் கம்பெனிகளின் பேராசையைத் தீர்த்துக் கொள்வதற்காக மட்டுமே இந்தனை அமெரிக்க இளைஞர்களைப் பலியிட்டு, நூற்றுக்கணக்கான பில்லியன்களைச் செலவிடவேண்டுமா?' என்றெல்லாம் தார்மீகக் கேள்விகள் கேட்பவர்களை விட, 'தப்போ, சரியோ, இந்த யுத்த நேரத்தில் நம் தக்கணாமுட்டித் தலைவரை நிற்க வைத்துக் கேள்வி கேட்பது கூடத் தவறு' என்று அபத்தமான தேசாபிமானம் காட்டுபவர்களே அதிகமாக இருக்கிறார்கள் போலும்.

ஹிட்லரைக் கேள்வி கேட்கப் பயந்தவர்கள் கூடத்தான் தேச பக்தியைக் காரணம் காட்டி வாய் பொத்திப் பயந்து நின்றார்கள்.

சரி, அமெரிக்காவின் எதிர்காலம் இனி எப்படி இருக்கும்?

சமீபத்திய 'லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்' தினப் பத்திரிகை ஒன்றில் ஒரு கார்ட்டூன் போட்டிருந்தார்கள். அமெரிக்க தேசத்தின் வரைபடத்தைப் போட்டு அதன் நடுவே, 'யு. எஸ். இமிக்ரேஷன்' என்று எழுதிப் பெரிய பூட்டு ஒன்றைப் போட்டுப் பூட்டியிருந்தார்கள். அதாவது, பல ஆண்டுகளாக 'வந்தாரை எல்லாம் வாழவைக்கும் நல்லரசாக' இருந்த அமெரிக்காவின் மனப்போக்கு தற்போது அடியோடு மாறி
விட்டிருப்பதைக் கேலியாக ஒரு அமெரிக்கக் கார்ட்டூனிஸ்ட் கிண்டல் பண்ணியிருந்தார். செப். 11, 2001 நிகழ்வுகள் மகா பயங்கரம் தான், கண்டிக்கப்படவேண்டியவை தான். ஆனால் அதனால் அமெரிக்கர்களிடையே ஏற்பட்டு விட்டிருக்கும் பிற்போக்கு விளைவுகளையே அந்தக் கருத்துப்படம் சுட்டிக் காட்டியதாகவே எனக்குத் தோன்றியது.

சற்றேறக் குறைய ஒரு நூற்றாண்டாகவே உலகின் பலப்பல பாகங்களிலிருந்தும் பல்வேறு நிற, இன, மத, மொழி, கலாச்சார மக்கள் வந்து குடியேறி, எந்த விதமான பேதமுமில்லாமல், பல்வேறு துறைகளிலும் தனித்துவம் காட்டிச் சிறந்து, இந்த தேசத்தை ஒரு மாபெரும் வல்லரசாக மாற்றியிருப்பதே அமெரிக்காவின் அடிப்படை பலம். அதற்கே பூட்டுப் போட்டால் அமெரிக்காவின் அடிப்படை நலனுக்கே வேட்டாகி விடாதோ?

முழுமையான கருத்துச் சுதந்திரமும், மத சுதந்திரமும், தனியரு மனிதன் எவனுமே தன் உழைப்பையும் படிப்பையும் மட்டுமே நம்பி முன்னேறுவதற்கான அடிப்படை வசதிகள் பலவும் நிறைந்த வளமான பூமி தான் அமெரிக்கா. இதையெல்லாம் பின்னோக்கித் தள்ள, அடிப்படை உரிமைகளையும், பெருமைகளையும் மாற்ற முயற்சிப்பதா?

காட்டான்களின் காட்டு தர்பாராக அமெரிக்கா மாறி விடுமோ?

எம் போன்ற சாமான்னியர்களுக்கு இதெல்லாம் கலவரம் நிரம்பிய கேள்விக்குறியாகத்தான் தெரிகிறது.

அதிபர் புஷ் ஒரு யுத்தவெறியர், ஆயுத வியாபாரிகளின் கைப்பாவை என்பது தெரிந்ததே. 'ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்வது' அந்த காலத்துப் பழமொழி. 'அணுகுண்டு அதிரடிப் பொய்களைச் சொல்லியாவது அடுத்தவன் ஆயிலை லபக்குவது' புஷ்ஷின் புதுமொழி. சர்வதேச அரங்கில் தனக்குத் தொடர்ந்து ஜால்ரா போடும் ஒரு சிலரைத் தவிர வேறு யாரையும் அவர் மதிப்பதி
ல்லை என்பது தெரிந்த விஷயம் தான். 'தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ன, முக்காலே அரைக்கால் கால் தான்' என்று அவர் தொடர்ந்து முரண்டு பிடிப்பது தொடரும். அதிபர் சதாம் ஹ¤சேன் தன் பாத்ரூமில் பல கோடி அணுகுண்டுகளைப் பதுக்கி வைத்திருந்தது பற்றித் தனக்கு முன்பே தெரிந்திருந்ததால் தான் ஈராக் மீது தான் படையெடுத்ததாக அவர் விடப்போகும் தொடர் சரடுகளும் தொடரும். என்ன செய்வது? நிர்வாண உலகத்தில் கோவணம் கட்டியவன் தானே பைத்தியக்காரன்? புஷ்ஷுக்குத்தான் பட்டுக் குஞ்சலமும் கட்டிப் பதவியிலும் வைத்து அழகு பார்க்கிறார்களே? 'அடடே, நாம் செய்வதில் ஏதாவது கொஞ்சம் தப்பு இருக்கிறதோ?' என்கிற சின்ன மனத் தடுமாற்றம் கூட அவருக்கு இனி இருக்காது. சுத்தம்.

வாழ்க பணநாயகம்!

சர்வதேச அளவில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பல நாடுகள் பல வருடங்களாகக் கஷ்டப்பட்டு உருவாக்கி வைத்திருக்கும் சுற்றுப்புறச்சூழல், சுகாதார, மாசுக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை அவர் வெறும் கெமிக்கல் வியாபார முதலைகளின் சுயலாபத்துக்காக ஏற்கனவே காற்றிலே பறக்கவிட்டவர் ஆயிற்றே. இனிமேல் அது பற்றி எல்லாம் யாரும் கேள்விகள் கேட்டு நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்.

எதையாவது ஒரு புதுக் காரணத்தைச் சொல்லி ஈரான் மீதும் நாம் பாயலாமா என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் ஏற்கனவே கலந்தாலோசித்துத்தான் வருகின்றன. 'கருப்புத் தங்க'த்தைக் கவர்வதும், பல விதமான ராணுவக் காரணங்களுக்காகப் பூகோள ரீதியில் தங்களை அதிமுக்கியமான அந்த ஏரியாவில் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கான முயற்சிகளும் தொடரும். 'அயத்தொல்லா அணுகுண்டுகள் பல பண்ணித் தலைப்பாகைக்குள் ரகசியமாகச் செருகி வைத்திருக்கிறார்' என்ற ரீதியில் புஷ் புது ரீல்கள் விடலாம்.

அமெரிக்கா மட்டும் தொடர்ந்து அணு ஆயுதப் பேரழிவு ஆயுதங்களைச் செய்யலாமா என்று கேட்பவர்கள் தேச விரோதிகளாகச் சித்தரிக்கப்படுவார்கள்.

ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் அணுகுண்டு போட்டுப் பேரழிவு செய்தவர்கள் மற்ற நாடுகளின் அணு ஆயுத விஸ்தரிப்பு பற்றிக் கவலைப்படும்போது எங்கேயோ இடிக்கிறதே!

உள்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றி அதிபர் புஷ் எப்போதுமே கண்டுகொண்டதில்லை. அடுத்த நான்கு வருடங்களுக்கு அவருக்கு மாதா மாதம் சம்பளம் உறுதியான பிறகு நாட்டில் யாரைப்பற்றிக் கவலைப்படவேண்டும்?

அவசர மருத்துவ உதவிகள் கூடச் சரியாகக் கிடைக்காமல் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டு வரும் அவல நிலை அமெரிக்காவில் நீடிக்கும். அரசு உதவிகள் முழுவதுமாகவே நிறுத்தப்பட்டு நாடெங்கும் பல கல்விச்சாலைகள், நூல நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. அதுவும் தொடரும்.

லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற பெருநகரங்களில் சென்ற வருடம் விற்ற விலையை விட பெட்ரோல் இரண்டு மடங்கைத் தாண்டி விட்டது. அது இன்னமும் உயரும். கடந்த மூன்றே மூன்று மாதங்களில் எக்ஸான் போன்ற பெரிய ஆயில் கம்பெனிகள் பில்லியன் கணக்கில் அசுர லாபம் ஈட்டியிருக்கின்றன. அது இன்னமும் அதிகரிக்கலாம்.

எம்போன்ற புலம் பெயர் என்ஆர்ஐத் தமிழர்கள் இனி இங்கே என்ன செய்யலாம்?

'நடப்பது நடக்கட்டும், நமக்கெதற்கு வம்பு?' என்று வாய் மூடி, மௌனமாக, ஆபீஸ், ஆபீஸ் விட்டால் வீடு, அவ்வப்போது கொஞ்சம் சன் டீவி அல்லது பேஸ்பால் என்று இருக்கலாமா?

'நடப்பதெல்லாம் நாரணன் செயல். கடமையைச் செய். பலனை எதிர்பாராதே' என்று வேதாந்தம் பேசலாமா?

அல்லது, "புஷ்ஷாய நமஹ, செய்னிக்கு ஜெய்" என்று புது ராகத்தில் ஜால்ரா போட ஆரம்பிக்கலாமா?

புத்தனாம்பட்டி பக்கமாக ஏதாவது கால் சென்டரில் வேலை பார்த்துக் கொண்டு ஊருக்கே போய் விடலாமா?

தீர்க்கதரிசினிக் கண்ணாடியை மாட்டிக்கொண்டு தீர யோசித்தால், எனக்கென்னவோ மூட்டையைக் கட்டவேண்டிய நேரம் வந்து விட்டதோ என்று தான் தோன்றுகிறது.

ஊஹ¤ம். அவள் வரமாட்டாள். அங்கே தான் இடிக்கிறது!

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

9 comments:

Mookku Sundar said...

இருக்கும் இத்த்னை "அவள்"களில் எந்த அவள்..??

அகத்துக்காரியா..?? இல்லை...:-)...?!!!!

Anonymous said...

Dear Ram,

What was the impact of the Bin Laden video released just when the countdown had begun, on Republican victory? Did Kerry create an image that the nation's security is not the foremost in the list of his priorities? And why Ralph Nader could not make any impact on the electorate?

rgds,
era.mu

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள இரா. மு,

நீங்கள் கேட்டிருக்கும் இரண்டு கேள்விகளுமே மிக முக்கியமானவை. கொஞ்சம் விலாவாரியாக எழுதிப் பதில் சொல்கிறேன். பொறுங்கள்.

என்றும் அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...
This comment has been removed by a blog administrator.
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள மூக்கரே,

இதுக்கெல்லாம் நான் விலாவாரியாப் பதில் சொல்லி, சோத்துக்கில்லாம இந்தக குளிர்ல கேரேஜ் தரையில விறைச்சுக் கெடக்கணும். ஆஹா, எத்தனை நல்லெண்ணம் ஐயா உமக்கு!?

எல்லே ராம்

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...
This comment has been removed by a blog administrator.
Kasi Arumugam said...

//தீர்க்கதரிசினிக் கண்ணாடியை மாட்டிக்கொண்டு தீர யோசித்தால், எனக்கென்னவோ மூட்டையைக் கட்டவேண்டிய நேரம் வந்து விட்டதோ என்று தான் தோன்றுகிறது.//
இதெல்லாம் ரொம்ப ஓவராத் தெரியுது. இப்ப அந்த அளவுக்கு என்ன ஆகிப்போச்சு?

rajkumar said...

அருமையான கட்டுரை.

அன்புடன்

dondu(#11168674346665545885) said...

என்ன ஒன்றும் புதிதாகக் காணோம். எல்லே இளங்கிளியே இன்னமும் உறங்குதியோ?

அன்புடன் டோண்டு