என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, October 07, 2011

கொழிக்கிறது சைனா! -12

அடுத்த ஊர் லோங் ஷேங்! (Long Sheng) (சொம்னாச்சிக்கும் நான் ’டொய்ங் தபாங்’ என்று போட்டிருந்தால் மட்டும் உங்களுக்கென்ன உண்மைப்பெயரா தெரியப்போகிறது?)

’லோங் ஷேங்’ பெயர்க் காரணமெல்லாம் தெரியவில்லை. தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை. கேட்டால், “உலகத்தின் மிகச் சிறந்த மலைச்சரிவு’ என்று ஜார்ஜ் ஏதாவது பீலா விடுவான். அல்லது லோக்கல் கைடான ஜிம்மி அந்த ஊரைப் புகழும் நாட்டுப்புறப்பாடல் என்று எதையாவது பாடித் தொலைப்பான். எங்களுக்கு இதெல்லாம் தேவையா?

குய்லினிலிருந்து லோங் ஷேங் வந்து சேர்ந்துவிட்டொம். கேட்காவிட்டாலும் “இந்த க்ஷேத்திர மகிமை என்னவென்றால் ‘லோங் ஜீ மலைப்பகுதி வயல்வெளிகள்” என்றார்கள்.

Photobucket

எப்படி என்னைப் போன்ற தஞ்சாவூர்க்காரன் “சோழநாடு சோறுடைத்து” என்று சதா பீற்றிக் கொள்கிறானோ, அதைப்போல் சீனர்கள் ’லோங் ஜீ’யின் டிராகன் நெல் வயல்களைப் பற்றி சதா + ஸ்நேஹா பீற்றிக் கொள்கிறார்கள்.

ஆனால் ஒரு பெரிய வித்தியாசம்.

தஞ்சையின் காவிரி டெல்டா பிரதேசம் சமவெளியோ சமவெளி. வருஷத்திற்கு 2 அல்லது 3 போகம் காவிரிப் பாசனம். திண்ணையில் உட்கார்ந்து சாப்பிடலாம். நதிக்கரை நாகரிகம். சின்னத் திண்ணையில் சாய்ந்தபடி ‘பொன்னியின் செல்வனும்’, ‘அனிதா, இளம் மனைவி’யும் படிக்கலாம், படித்திருக்கிறேன். போகிற வருகிற ...சரி, அது இப்போது வேண்டாம். பொன் விளைகின்ற, பொண்ணுமணிகள் வளைய வருகின்ற பூமி அது.

ஆனால் சீனாவின் லோங் ஜீ (Dragon Spine Rice Fields) பெண்டெடுக்கும் 3000 அடிக்கும் மேற்பட்ட மலைச்சரிவு. நதியும் கிடையாது, நாகரிகமும் தெரியாது. எப்படி இந்த மலைச்சரிவுகளில் நெல் பயிரிடமுடியும் என்று நான் ஆச்சரியப்பட்டேன். அங்கேதான் இருக்கிறது சீனர்கள் சாமர்த்தியம்.


Photobucket

Photobucket

தென்மேற்கு சைனாவின் மலைச்சரிவுகளெங்கும் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் சின்னச்சின்ன சமவெளிப் பகுதிகளாக்கி, பள்ளமெல்லாம் பாத்தி கட்டி, கையளவு இடத்தைக்கூட வேஸ்ட் செய்யாமல், நெல்
சாகுபடி செய்கிறார்கள். மழை நீர் ஆங்காங்கே சேகரிக்கப்பட்டு நெல் வயல்களில் சூரியன் பிரகாசிப்பது கண்கொள்ளாக்காட்சி. வருண பகவானை நம்பித்தான் சாகுபடியே. ஆனாலும் அபரிமிதமாக அங்கே நெல் விளைகிறது என்றார்கள்.

சரி,  அதைப் பக்கத்தில் போய்ப் பார்த்தே தீருவது என்று உற்சாகமாகக் கிளம்பி விட்டேன். ஆனால் மேலே போகப்போக, பாதையோ படு குறுகல், பாதையென்ன பாதை? எல்லாம் ஒற்றையடிப்பாதைதான். படியெல்லாம் கிடையாது. சில இடங்களில் மட்டும் ஏதோ பாறைகளால் படிகள் மாதிரி செய்திருக்கிறார்கள். செங்குத்தென்றால் அப்படி ஒரு வியர்த்து வெலவெலக்கவைக்கும் உயரம் + திருப்பங்கள்.

நடந்துபோக முடியாதவர்களுக்காக நம் ஊரில் இருப்பது போல் ’டோலி’ வசதி இருக்கிறது. 200 யுவான்தான். போனால் போகட்டுமென்று காசைக் கொடுத்து விடலாம். ஆனால் அவர்கள் ’கை ரிக்க்ஷா’ மாதிரி என்ன பாடுபடுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, நடந்துபோவதே மேல் என்று நமக்குத் தோன்றுகிறது. டோலிவாலாக்களுக்கு இதெல்லாம் சர்வ சகஜம் போலிருக்கிறது. அநாயாசமாக ’பளு’க்களுடன் மேலே போய்க் கீழே வருகிறார்கள். ஒரு இடத்தில்கூட அவர்கள் நின்று ஓய்வெடுப்பதில்லை. அவர்கள் வேலை இல்லாமல் ஓய்வாக உட்கார்ந்திருக்கும்போது ‘தம்’ வேறு!

Photobucket

வழிநெடுக ஆங்காங்கே சின்னச்சின்ன கடைகள். பருத்தி, பட்டு ஸ்கார்ஃப்கள், குழந்தைகள் டிரஸ், சின்னச்சின்ன மூங்கில் மற்றும் மர கைவினைப்பொருட்கள், கூடைகள் என்று கலந்துகட்டியாக என்னென்னவோ விற்கிறார்கள்.

மணிக்கணக்கில் ஒரு பெண் சிரித்துக்கொண்டே, பயங்கர நெடி அடிக்கும் மிளகாய்த்தூளைக் கையால் பிசைந்து பிசைந்து கண்ணாடி புட்டிகளில் அடைத்துக் கொண்டிருந்தாள். முகத்தில் என்னவோ அவ்வளவு உற்சாகம், சிரிப்பு. ஆச்சரியமாக இருந்தது.

எங்கள் வீட்டில் தாளித்துக் கொட்டும்போதோ, தப்பித்தவறி ஞாபக மறதியில் என்றோ ஒருநாள் பண்ணப்படும் இடலிக்கு மிளகாய்ப்பொடி பண்ணும்போதோ எதிர்சாரி அமெரிக்கர்கள் வெகேஷனில் போய்விடுவது வழக்கம். அடிக்கிற நெடியில் சகமனித ஜென்மங்களுடன் சேர்ந்து நானும் அலறித் தும்முவதில் கூப்பிடாமலேயே எமர்ஜென்சி ஆம்புலன்ஸ் வாசலில் வந்து நிற்பதும் வழக்கம். அதனால் நான் அந்த அளவு இம்ப்ரஸ் ஆகி சீன ரெட் சில்லி மங்கையின் போஸுக்காக வேண்டினேன். அவளும் பதிலுக்கு இன்னும் கொஞ்சமாக அதிகமாகச் சிந்தி (புன்னகையைத்தான்) சிரித்தாள்.

Photobucket

இரண்டு பெண்கள் இருக்குமிடத்தில் ஒருத்தியை மட்டும் படம் பிடித்தால் அந்த போட்டோகிராஃபர் என்ன கதியாவார் என்பது சொல்லியா தெரியவேண்டும்?

ஏற்கனவே மலையேறிய கடுப்பில் இருந்த தங்கமணி மிளகாய் எபிஸோடில் சிகரமேறினாள். ஞாபகார்த்தமாகக் கொஞ்சம் மிளகாய் பிரசாதம் வாங்கி வாயில் போட்டுக்கொண்டு நான் அலறித் தும்மியபடியே மலை ஏறலானேன்.

உடல் உழைப்புக்குக் கொஞ்சமும் அலுக்காத சீனர்களின் வாழ்க்கை முறையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம், ஏராளம்.


அங்கே இருந்த சீனர்கள் ஷுவாங், மற்றும் யீ பழங்குடிப் பரம்பரையினராம். விவசாயமே அவர்கள் பெரும் தொழில். அவ்வப்போது மலைச்சரிவுகளில் காய்கறிகள், சோளமும் பன்றிக்குட்டிகளும் பயிரிடுகிறார்கள்.


Photobucket

மலைச்சரிவுகளில் மரவீடுகள் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். சாம்பிளுக்கு, ஒரு பழங்குடி வீட்டுக்குள் நுழைந்தோம். ஏற்கனவே எங்கள் லோக்கல் கைடு சொல்லியிருந்தபடியால் நாங்கள் வீட்டில் நுழையும் நேரம் பார்த்து அந்த வீட்டம்மாள் கொஞ்சம் அதிகமாகவே புகை போட்டு, சமையல் செய்வதாகச் சொல்லி யார் குடலையோ அடுப்பிலும் வேகவிட்டுக் கையில் மரக் கரண்டியுடம் போஸ் கொடுத்து நின்றாள். மிளகாய் மங்கை ஞாபகத்திலேயே இன்னமும் லயித்திருந்த நான் இந்த புகைப் பாட்டியைப் புறக்கணித்ததில் வியப்பேதும் இல்லை. அதனால் அவளுக்கு இங்கே ஒளி ஓவியம் நஹி.

Photobucket

நல்ல மரத்தாலான வீடு. மாடிப்பகுதிக்குப்போக மர ஏணி (செங்குத்தாக) கட்டி வைத்திருக்கிறார்கள். மேல் தளத்தில் வைக்கோல் மாதிரி எதையோ தரையில் விரித்திருக்கிறார்கள். படுப்பது, தூங்குவது எல்லாம் அங்கேதானாம். ”மேலே போய்ப் பாருங்கள்” என்ற விருந்தோம்பலை நான் ’கபால மோட்சபயம்’ காரணமாகத் தவிர்த்தேன். மேலும் அங்கே இன்னும் என்னென்ன வஸ்துகள் காயப் போட்டிருப்பார்களோ, ‘ஜிங்கு ஜங்’ என்று ஏதாவது எழுந்து ஆடுமோ என்கிற பயமும் எனக்கு இருந்தது.

கீழ் தளத்தில் சமையல், சாப்பாடு. மற்றும் பக்கத்திலேயே ஓப்பன் ஏர் பன்றிக் கொட்டடி. கொட்டடிவாசிகள் ‘கர் புர் க்ளக் புளக்’கென்று என்னென்னவோ சப்த ஜாலங்கள் செய்துகொண்டு அரை இருட்டில் அந்தப் பிரதேசத்தையே விஸர்ஜன வாசனையால் குளுப்பாட்டிக் கொண்டிருந்தார்கள். அதையும் போய் என்னவோ சண்டிகேஸ்வரரை தரிசனம் பண்ணுகிறமாதிரி சக அமெரிக்க வெள்ளையர்கள் எட்டி எட்டிப் பார்த்து போட்டோ பிடித்துக்கொண்டு வந்தார்கள்.

நாற்றம் சகிக்கவில்லை. சாக்கடை வசதிகளெல்லாம் இல்லாததால் எல்லா(ருடைய) கழிவுகளும் அபிஷேக ஆறாக வீட்டுக்கு வெளியேயும் வீட்டை ஒட்டியும் ஓடிக்கொண்டிருந்தது கண்கொள்ளாக் காட்சி. அநேகமாக எந்த நிமிடமும் வாந்தி எடுத்துவிடுவேன் என்றே தீவிரமாக நம்பினேன். யார்மேல் என்று மட்டுமே முடிவு செய்யவேண்டிய கட்டாயம். புகைப்பாட்டி சரியாக மாட்டவில்லை.

ஆடு, மாடுகள், கோழிகளெல்லாம் எங்கும் பார்க்க முடியவில்லை. ஒரு காலகட்டத்தில் அவை அங்கே ஜீவித்து, பிறகு துர்மரணம் எய்தியிருக்கலாம். அல்லது சனி, ஞாயிறு மாலைநேர பஜ்ஜியாகி இருக்கலாம்.

‘லிவிங் ரூம்’ ஓரத்தில் ஏகப்பட்ட Tsingtao காலி பியர் பாட்டில்கள் கொட்டிக் கிடப்பதைப் பார்த்து, ஒருவேளை இவள் பியர் சாகுபடிதான் செய்கிறாளோ என்றுகூட நினைத்தேன். நம் ஊரில்பாதாள சாக்கடை வேலை செய்பவர்கள் அடிக்கடி ஒரு குவார்ட்டர் ஊற்றிக்கொண்டுதான் உள்ளே இறங்குவார்கள் என்று படித்தது நினைவுக்கு வந்தது.

இந்த பழங்குடி ஆதீயோடு அந்தக்கதைக்கு மறுபடியும் மலை ஏறுவதே மேல் என்று முடிவு செய்து நான் ‘சரசர’வென்று முதலில் கிளம்பி முன்னேறலாயினேன். சிற்சில இடங்களில் ஒற்றையடிப் பாதைகள் நாற்புறமும் சங்கமித்துச் சரிந்தபோது கொஞ்சம் தயங்கவேண்டி ஆயிற்று. அவசரத்தில் இன்னொரு பழம்பெருங்குடி வீட்டுக் கொல்லைப்புற கொட்டடியில் போய் வரா(த)க விருந்தாளியாக நிற்க எனக்கு விருப்பமில்லை.

ஆங்காங்கே கொஞ்சம் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டும், போட்டோக்கள் எடுத்துக்கொண்டும்தான் நாங்கள் முன்னேறினோம். வியர்வையிலும் வெயிலிலும் மேல்சட்டையெல்லாம் தொப்பல்!


’முழங்கால் முடிச்’சில் முக்கி முக்கி நடந்து அஞ்சனாத்ரி, கருடாத்ரி, நாராயணாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, வெங்கடாத்ரி, வ்ரிஷபாத்ரி என்று திருமலை போய்ப் பெருமாளைச் சேவித்திருந்தாலாவது புண்ணீயம் கிடைத்திருக்கும். இங்கே எதற்காக இந்த முக்கு முக்குகிறோம் என்பது தெரியாமலேயே முக்கி முனகி ஒருவழியாக உச்சியை அடைந்தோம். அங்கே சாமியோ பூதமோ இல்லாதது மட்டுமல்ல, தாகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. மறுபடியும் சின்னச்சின்ன கைவினைப் பொருட் கடைகள். நான் ஒரு முதலை பொம்மையும், மர கைத்துப்பாக்கியும் வாங்கிக்கொண்டேன். ஏனென்றெல்லாம் கேட்கக்கூடாது. அவ்வளவு உயரத்தில் வந்து பாவம், பத்தே பத்து யுவானுக்கு விற்கிறார்கள்.என்று காவிரி டெல்டாக்காரர்கள் வேண்டுமானால் ஈர மனசுடன் பரிதாபப்பட்டு வாங்கலாம். ஆனால் சீனர்கள் என்னவோ, பத்தாயிரம் யுவானில் தான் விலைபேச ஆரம்பிக்கிறார்கள்.

Photobucket

‘ஹிந்தி சீனி பாய் பாய்’ என்று முதலில் சொன்னவனை இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன். சீனர்கள் ஒரு மாதிரி பிராணிகள். நாம் அப்பிராணிகள். அஷ்டே!

(தொடரும்)









6 comments:

Pulavar Tharumi said...

வழக்கமான உற்சாகத்துடனும் குதுகலத்துடனும் இருந்தது 12ஆம் பகுதி. அருமை!

BalHanuman said...

உங்களுக்குத் தைரியம் ஜாஸ்திதான். தங்கமணியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு மிளகாய் மங்கையை போஸ் கொடுக்கச் சொல்கிறீர்களே....

பதிவு வழக்கம் போல் கலக்கல்.

சந்தடி சாக்கில் புரட்டாசி மாசம் பெருமாளையும் நினைவு படுத்தி விட்டீர்கள்...

Temple Jersey said...

Romba nalla irukkirathu

Sudhakar said...

Great sir. Do you have any idea to release it as a book?

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

நன்றி நண்பர்களே!

சுதாகர், புத்தகமாக வெளிவரப் போகிறது. பதிப்பாளர்கள் ஏற்கனவே என்னிடம் பேசி விட்டார்கள். நல்லதே நடக்குமென்று நம்புவோம்!

nehamadullah said...

superb post sir