என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Thursday, July 21, 2011

கொழிக்கிறது சைனா! 2

பெய்ஜிங் ஏர்போர்ட்டில் ஒரு பெரிய அதிசயம் எங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தது என்று சொன்னேனே, அது என்ன தெரியுமா?

அந்த ஏர்போர்ட்டே தான்!

Photobucket

உலகின் மிகப்பெரிய ஏர்போர்ட் பெய்ஜிங் ஏர்போர்ட்! பிரம்மாண்டம் என்ற சொல்லுக்கே இதுதான் இலக்கணம். இருந்தாலும் படு சுத்தம், பளபளப்பு. ப்ளேனை விட்டு இறங்கிய சில நிமிடங்களிலேயே இமிக்ரேஷன் செக்கப் முடிந்து விடுகிறது. நம் ஊர் மாதிரி மைல் கணக்கில் க்யூ, ஆறின டீ, கொட்டாவியுடன் எரிச்சல்படும் இமிக்ரேஷனார், “வீல்சேர்ல உக்காரு சார், சர்ர்ர்னு தள்ளிட்டுப் போயிடறேன், அப்பால எதுனா போட்டுக்குடு” ப்ரோக்கர்கள் யாரும் கிடையாத் என்றால் கிடையாத் தான்!

ஒலிம்பிக் போட்டிக்காக வந்த வெளிநாட்டவர்களை அசர வைப்பதற்காகவே இப்படிக் கட்டி இருப்பார்கள் போல! நானும் அசந்தே போனேன். துபாய் ஏர்போர்டின் பிரம்மாண்டத்தை எல்லாம் இது தூக்கி அடித்து விடுகிறது. எங்கும் ’பள பள’ கிரானைட் வழவழப்பு. குப்பை, தூசி எதுவுமே இல்லை! ஆட்கள் சுத்தம் செய்துகொண்டே இருக்கிறார்கள். ட்ராலிகள் கிறீச்சிட்டு நாராசம் செய்வதில்லை. எல்லாமே மினி கேடிலாக் மாதிரி வழுக்கிக்கொண்டு ஓடுகின்றன.

லக்கேஜை எடுக்கப்போக ஒரு ஆட்டோமேடிக் ரயில்! இத்தனாவது செகண்டில் இங்கே வரும் என்று சொல்லிச்சொல்லி அடிக்கிறார்கள். சில பல மைல்கள் அது ஓடி, பக்கவாட்டில் இருக்கும் டெர்மினல்களை எல்லாம் நான் பார்த்துப் பொறாமையின் உச்சிக்கே போனேன். “இந்தியாவில் மட்டும் ஏன் இப்படி?” என்ற அழுகை மனசுக்குள் வெடித்துக்கொண்டு பீறிடாமல் இல்லை. கடந்த பத்து வருடங்களாக சென்னை ஏர்போர்ட்டில் வெளியே வருபவர்கள், கண்டாமுண்டான் கன்ஸ்ட்ரக்‌ஷன் கலாட்டா + மிஸ்ஸிங் படிக்கட்டுகள் + தடுக்கும் பாறைகளில் முட்டி விழாமல் வெளியே வந்ததாகச் சரித்திரமே கிடையாது. ம்ஹும், என்னத்தச் சொல்ல, எப்படியெல்லாம் புலம்ப!

கஸ்டம்சில் எந்தக் கஷ்டமும் இல்லை.

வெளியே வந்து, ‘படா படா’ கட்டிடங்களைப் பார்த்து நாங்கள் ‘ஹா’வென்று தொடர்ந்து வாய்பிளந்து நிற்கையில், 50 பேர் உட்காரக்கூடிய லக்ஸுரி பஸ் எங்கள் 21 பேருக்காக மட்டுமே வழுக்கிக்கொண்டு வந்து நின்றது. போர்ட்டர்கள் தொல்லை இல்லை. பஸ் டிரைவரே பகாசுர பஸ்ஸின் வயிற்றில் அத்தனை பெட்டிகளையும் அநாயாசமாக அடுக்கி வைத்தார். ஏர்போர்ட்டையே மடித்து உள்ளே போட்டாலும் பஸ் அசராது என்று தோன்றியது. பஸ்ஸுக்குள் ஏசி ஜிலீரிட்டது. பயப்படும்படியாக சிம்பு படம் எதுவும் போடப்படவில்லை. எங்களைப் பார்த்து நின்றபடியே அருள்பாலித்தபடி சங்கராச்சாரியார் பிரசங்கம் செய்ய வசதியாக மைக் செட் இருந்தது.

கமண்டலத்துக்குப் பதிலாக கையில் லெட்டர்பேட், இன்னொரு கையில் நீலக்கொடிக் குச்சியுடன் சங்கராச்சாரியார் மாதிரி எங்கள் கைடு எங்களை வரவேற்று நல்வழிப்படுத்த நின்றிருந்தார்.

எங்கள் guide, வூ பீஷிங்ஷீ சைனாக்காரன் என்றாலும் அமெரிக்க ஆக்செண்டில் அசத்த ஆரம்பித்தான் (அமெரிக்கப் பெயர் ஜார்ஜ் என்றான். அதுவே போதும், தும்மல் வரவழைக்கிற, எச்சில் துப்புகிற விவகாரமான பெயரெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டோம்). ஜார்ஜ் அமெரிக்கா பற்றி நிறையப் படித்து விபரம் தெரிந்து வைத்திருந்தான். சீனத் தலைவர்களை ரொம்பவே துணிச்சலாக விமர்சனமும் செய்தான். இவனுடன் ஏற்பட்ட சில மோதல்கள், சிராய்ப்புகள் பற்றிப் பின்னர்!)

ஏறக்குறைய 7,000 மைல்கள் பறந்து international date line தாண்டி 15 மணி நேர டைம் வித்தியாசத்தில் இரவு நேரத்தில் நாங்கள் இருந்ததால், நேரடியாக Marriott Beijing City Wall ஹோட்டலுக்குச் சென்று ரெஸ்ட் எடுக்கலாம் என்று அவன் சொன்னதை யாரும் ஆட்சேபிக்கவில்லை. போகும்வழியில் இருந்த கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆபீஸ்கள், பிரம்மாண்டமான அமெரிக்க கார்பரேஷன் கம்பெனிகள் எல்லாவற்றையும் பார்த்து ரசித்தபடி பஸ்ஸில் பயணித்தோம்.

எங்கள் ஹோட்டலுக்குப் பக்கத்திலேயே பெய்ஜிக் ரயில்வே ஸ்டேஷன். அச்சு அசலாக நம் செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் மாதிரியே, ஆனால் இன்னமும் பிரம்மாண்டமாக. ராத்திரி ஒரு ட்ரிப் இங்கெல்லாம் தனியாக வந்து பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஆத்திர அவசரத்துக்கு சூப்பர் மார்க்கெட் எங்கே, foreign exchange கடைகள் எங்கே என்றெல்லாம் எங்களுக்கு போதனை சொல்லப்பட்டது.

’அமெரிக்காவில் எல்லா இடங்களிலும் பாதசாரிகளுக்கே முன்னுரிமை, ஆனால் இந்தியா மாதிரி, சைனாவிலும் வாகன ஓட்டிகளுக்கே முன்னுரிமை, ஜாக்கிரதை’ என்கிற மிகவும் உபயோகமான தாரக மந்திரம் எங்களுக்கு உபதேசிக்கப்பட்டது. மீறினால் சட்னிதான்!

Photobucket

Marriott Beijing City Wall பிரமாதமான 5 ஸ்டார் ஹோட்டல். ஆனால் 24 மணி நேர காஃபி ஷாப் எல்லாம் கிடையாதாம். லாபி ரெஸ்டாரெண்டெல்லாம் சீக்கிரமே மூடிக்கொண்டு தாச்சிக்கொண்டு விடுவார்களாம். அப்புறம் என்ன எழவுக்குடா உங்களுக்கு 5 ஸ்டார் என்று எரிச்சல் வந்தது எனக்கு.

ஆமாம், அதென்ன ஹோட்டல் பெயரோடு ஒட்டிக்கொண்டு ஒரு City Wall என்கிறீர்களா? பழங்கால சைனாவில், நம் பண்டைத் தமிழ்நாட்டில் இருந்ததுபோல் பலப்பல குறுநில மன்னர்கள், பெருநிலக்கிழார்கள். அவர்களுக்குள் அடிக்கடி அடிதடி, வெட்டுகுத்து, வாய்க்கால், வரப்பு தகராறுகள். அதனால் எல்லா ஊர்களுக்கும் ஒரு தடுப்புச் சுவர், அகழி, அடியாட்கள் எக்செட்ரா எக்செட்ரா!

அநேகமாக இந்த ட்ரிப்பில் நாங்கள் பார்த்த எல்லா பெரிய நகரங்களில், சின்னஞ்சிறு ஊர்களில், அரண்மனைகளில், கிராமங்களில் எல்லாவற்றிலுமே இந்த சுற்றுச்சுவர் + அகழி என்பது நம் ஊரில் கிராமத்து ஆலமரம், பதினெட்டுப்பட்டி பஞ்சாயத்து, அழுக்கு ஜமக்காளம், நசுங்கின சொம்பு மாதிரி ஒரு பெர்மனெண்ட் மேட்டர்.

ஏற்கனவே கொலைப்பட்டினி மற்றும் டயர்டாக இருந்ததால், குளித்து விட்டு ஒரு குயிக் நகர்வலம், டின்னர் போய்வரலாம் என்கிற என் யோசனை என் மனையாளால் உடனே நிராகரிக்கப்பட்டது.

அதனாலென்ன, நானே தனியாளாகப் போய் உண்டி, உணவு, தனம், தானியம் எல்லாவற்றையும் உனக்கும் சேர்த்து சேகரித்துக்கொண்டு வெற்றிமாறனாக ஆடுகளம் திரும்புவேன் என்று சபதம் போட்டுவிட்டு நான் தனுஷ் மாதிரி வீரமாகத்தான் கிளம்பினேன்.

Photobucket

’மனைவி கூடவராமல் போனதும் ஒரு விதத்தில் நல்லதே, வெள்ளாவியில் வைத்த சைனீஸ் டாப்ஸி ஏதாவது தட்டுப்பட்டால் ...’ என்று அடிமனதும் அட்வைஸ் செய்தது. செண்ட் அடித்துக்கொண்டேன், கொலோன் அபிஷேகம் செய்துகொண்டேன். சீட்டி அடித்தபடி ஹோட்டலைவிட்டு வெளியேறினேன்.

ரோடு கிராசிங் பற்றிய உபதேசம் மனதில் இன்னமும் பசுமரத்தாணியாகப் பதிந்திருந்தமையால், சுரங்கப்பாதை வழியாக அக்கரை சேர்ந்து, பழம், பால், முக்கனிகள், மரக்கறி, வேர்ப்பலா ஏதாவது தேற்றிக்கொண்டு வரலாமென்று நான் அண்டர்கிரௌண்டினேன். அய்யகோ, அங்குமெங்கும் படுத்தபடி சில சீனப் பிச்சைக்காரர்களின் அனத்தல், படுத்தல், அண்ணா சுரங்கப்பாதையில் அடிக்குமே அதே மூத்திர நாற்றம், என்னடா இது சீனாவுக்கு வந்த சோதனை என்று மூக்கைப் பிடித்துக்கொண்டு அக்கரை சேர்ந்து நடக்க ஆரம்பித்தால், சூப்பர் மார்க்கெட் எங்கே, சுமாரான மார்க்கெட் எங்கே என்று எதுவுமே புரியவில்லை.

ஒரே ஒரு எழுத்துகூட ஆங்கிலத்தில் இல்லை. ஒரே ஒரு அட்சரம் ஆங்கிலம் பேசுவோரும் இல்லை. என் நடிப்புத் திறமையெல்லாம் ஒட்டப்பிழிந்து சூப்பர் மார்க்கெட்டைக் கண்டுபிடித்தேன். அது 9 மணிக்கே மூடப்பட்டு விட்டதாம். அதாவது கடைகள் மூடப்பட்டுவிட்டன, ஆனால் 10 மாடி வளாகம் ‘ஹோ’வென்று தனிமையில், எஸ்கலேட்டர்கள் ஓடிக்கொண்டு, ஏசி பீறி வழிந்துகொண்டு திறந்திருந்தது. எவனாவது ஒருத்தன் கடை திறந்திருக்கமாட்டானா என்று உள்ளே போனேன்.

நாலைந்து மாடிகள் தனனந்தனியே மேலும் கீழும் போய்வந்த பிறகு அசலூரில் அகாலத்தில் கும்மிருட்டில் இப்படி ஒரு அமானுஷ்ய நடமாட்டம் அநாவசிய ஆபத்து என்பது புரிய ஆரம்பித்தது. பில்டிங்கில் ஒரு ஈ, காக்காய் இல்லை. எல்லாவற்றையும் அடித்துச் சாப்பிட்டிருப்பார்கள் போலிருக்கிறது.

லேட்டாகத்தான் ஒரு ஞானோதயம் பிறந்தது. எவனாவது வாட்ச்மேன் பில்டிங்கையே வெளிப்பக்கமாக பூட்டிக்கொண்டு தண்ணி அடிக்கப் போய்விட்டால்?

வேக வேகமாக நடக்க நடக்க, யாரோ என்னைப் பின் தொடர்வது போலத் தெரிந்தது. திரும்பிப் பார்த்தால் யாரையும் காணவும் இல்லை. நான் ஒடினால் அந்த சத்தமும் ஓடுகிறது, நின்றால் அதுவும் நின்று விடுகிறது. நான் பார்த்துத்தொலைத்த Friday the 13th, Mummy Returns போன்ற படங்கள் அநாவசியமாக நினைவுக்கு வந்தன.

எந்த வாசல் வழியே நுழைந்தோம், அந்த வாசல் சனியன் எங்கே என்பது நினைவில் இல்லை. எல்லா கதவுகளும் ஒரே மாதிரி ஒரு அபஜருத்து டிசைன். Enter The Dragon க்ளைமேக்ஸ் சண்டையில் கண்ணாடி அறையில் பேந்தப்பேந்த வில்லன் விழிப்பானே, அப்படி விழித்துக்கொண்டு கொஞ்ச நேரம் நின்றேன். பிய்த்துப்போட்ட கோழி, நண்டுகள் மாதிரி எல்லா சுவர்களிலும் சைனீஸ் எழுத்துகள் வேறு என்னை பயமுறுத்தின. ‘9 மணிக்குமேல் இங்கே தங்கினால் சிரச்சேதம்’ என்று எழுதியிருக்கிறானோ?

மகா புண்ணிய தேசமாம் பாரதத்தில், அதுவும் அம்மாவை ஜெயிக்கவைத்த காவிரிக்கரையில் பிறந்து, பத்ரிநாத், கங்கையிலெல்லாம் குளித்த நாம், இப்படி ஒரு அநாமதேய சீன பில்டிங்கில் பெயர் கூடத் தெரியாத பேய்க்கு இரவு உணவாகி விடுவோமோ என்கிற பயம் என்னை வாட்ட ஆரம்பித்தது.

“ஹே லட்சுமணா, இந்த ராமன் போய் எத்தனை நேரம் ஆகிறது. ராவணனுக்கு இவன் பட்சணமாகிவிட்டானா, ஓடிப்போய்ப் பார்” என்றெல்லாம் என் மனைவி சொல்லக்கூட எனக்கு ஒரு மச்சினன் இல்லாத துக்கம் வேறு தொண்டையை அடைத்தது.

அப்போதுதான் சுமாரான வெள்ளாவி ஒன்று என்னை நோக்கி வந்தது. இதுதான் அந்த கால் சத்தமோ? ஆள்தான் வெள்ளாவிக் கலரே தவிர, டாப்சிக்கும் இவனுக்கும் ஸ்நானப் பிராப்தி இல்லை. இவன் பெண்ஜாடையுள்ள ஆண்பிள்ளை. நல்லவேளை, குச்சி குச்சியாகக் கால் இருந்தது. கையில் ஐபேட் மாதிரி ஏதோ, காதில் இயர்போன்.

கொஞ்சம் தைரியம் வரவழைத்துக்கொண்டு “பாஹர், வெளியே, எக்சிட், அவுட்கேட், ஆய், மூச்சா” என்று என்னென்னவோ சைகையில் கேட்டேன். அவன் சைனீசில் சிரித்தான்.

“பசிக்கிறது” என்று வயிற்றில் ’மடார் மடார்’ என்று அடித்துக்கொண்டு காட்டினேன்.

“McDonald's?" என்றான் சைனீஸ் ஆக்செண்டில். மக்டானல்ட்ஸா? நான் ‘பீஃப் சாப்பிடாத பிராமண குலத் திலகம், சிக்கனைத் தொடாத சீர்வள்ளுவன், மீன் சாப்பிடா மரத்தமிழன்’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க இது நேரமில்லை.

“யெஸ், யெஸ், ப்ளீஸ்”

வெள்ளாவி தூரத்தில் ஒரு கதவைக்காட்டி “இன்று போய் நாளை வா” என்றது.

தட்டுத்தடுமாறி வெளியேறினேன்.

அவன் கை காட்டிய திசையில் ‘மினுக் மினுக்’கென்று ஒரு McDonald's தெரிந்தாலும் அதைப் புறக்கணித்தேன். திரும்பவும் எப்படியாவது ஹோட்டல் போய் விடலாம் என்று எத்தனிக்கையில் சில சைனீஸ் கையேந்தி பவன்கள் திறந்திருப்பது தெரிந்தது. ஆனால் அந்த மெனு படங்களைப் பார்த்த உடனே என் பசி பறந்தே போய்விட்டது. காற்றில் வந்த மிருகபோஜனா வாசனையோ, அதற்கும் மேல்.

“உனக்குத் தெரிந்த எல்லா மிருகங்களின் உடல் உட்பாகங்களையும் பிய்த்துப் பிய்த்து வரைந்து சிறு குறிப்பு வரைக” என்பதுபோன்ற மெனுக்கள்.

ஆத்திரத்தை அடக்கிக்கொள்ள ஒரு பியராவது அடிக்கலாமென்றால் ஒரு ‘பாரு’ம் திறந்திருக்கவில்லை. பியர் கிடைத்தால் அங்கே சிப்ஸ் அல்லது வேர்க்கடலை கிடைக்கலாம் என்பது ஒரு லாஜிக்.

Photobucket

மேற்சொன்ன பெய்ஜிங் ரயில்வே நிலையத்தில் ஏதோ ஷிஃப்ட் முடிந்து வெளிவரும் பேய்க்கூட்டம். பிரம்மாண்ட டெலிவிஷன் ஸ்க்ரீனில் நாட்டு நடப்பு பற்றி யாரோ சொற்பொழிவு. ஒரு பயலும் கண்டுகொள்ளவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு, அறிக்கை போல் தோன்றியது.

ரோட்டோரக் கடைகளில் ஏதேதோ கூறு கட்டி வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். “தொடாதே” என்று உள்ளுணர்வு எச்சரித்தது. பழக்கடை ஒன்று பார்த்தேன். எதைக் கையில் எடுத்தாலும் அவன் “கையா முய்யா” என்று ஏதோ சொல்ல, ஏன் திட்டுகிறான் என்று புரியாமல், ‘சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்’ என்று ஒருவழியாக ஹோட்டல் திரும்பினேன்.

லாபியில் எல்லாக் கடைகளும், பாரும், கிச்சனும், டைனிங் ரூமும் மூடி இருப்பதை சந்தோஷமாக ஊர்ஜிதம் செய்தார்கள்.

நல்ல தூக்கத்தில் இருந்த மனைவியை எழுப்பி, “ஏம்மா, ஏதாவது நீ கடிச்சுப்போட்ட ஆப்பிள், கீப்பிள் மீதி வெச்சிருக்கியா?” என்றேன்.

(தொடரும்)

10 comments:

anandrajah said...

Terrifying narration..! Wanted to know how Madam survived..!

MSATHIA said...

'எனக்கு ஒரு மச்சினன் இல்லாத ' . உம்ம மனையாளுக்கல்லவா மச்சினன் முறை வரும் இலக்குமணன் உவமையால்?
நட்ட நடு நிசில இப்படி பேய்க்கதை படிச்சாலும் லாஜிக்க கவனிப்போம்ல

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

ஆனந்தராஜ்,

அடுத்தடுத்த அத்தியாயங்களில் தெரிந்துகொள்வீர்கள்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

ஏம்ப்பா சத்தியா,

ஒரு ஃப்ளோவில எதையோ எழுதிட்டா இப்படியா புடிச்சு உலுக்கறது ? படங்கள் எப்படி?!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

http://twitter.com/#!/yasavi/status/94274245827362816

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

http://twitter.com/#!/pulavar_tharumi/status/94274410743201793

ரவியா said...

பிரமாதம் ! உங்கள் நடை ! பொறாமையாருக்கு !

RVS said...

உங்க கைய பிடிச்சுகிட்டு சைனா வந்த மாதிரி இருக்கு!! அசத்தல். :-)

MSATHIA said...

படங்காட்டறதுல உங்களை கேக்கணுமா... ;-))

ILA (a) இளா said...

என்ன ஒரு பதிவுக்குள்ள ஒரு மசாலப்பட வாசனை மாதிரி? ஒரு பயமுறுத்தல், த்ரில்லர், கில்மா, அரசியல், சமூகம், காமெடின்னு :)