என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Thursday, July 07, 2005

பிறந்தகப் பெருமை -2

அட, காளியாகுடி அல்வாவை விடுங்கள், மாலை நான்கு மணிக்கு மேல் போனால் அது விற்றுத் தீர்ந்திருக்கும் என்பது எனக்கும் தெரியும். அதற்கு முகூர்த்தமே 2.55 முதல் 3.35 வரை தான். கவலைப்படாதீர்கள். எனக்கு மாயவரத்தில் இருக்கும் இன்ஃபுளூயன்ஸ் பற்றி நானே பீற்றிக்கொள்ளத் தேவையில்லை. என் டாட்டா எஸ்டேட் சிதம்பரம் அவுட்போஸ்டை நெருங்கும்போதே மாயவரம் சுறுசுறுப்பாகி விடும். 'இன்னார் வருகிறார், பராக் பராக்' என்பது கை ஜாடையிலேயே லோக்கல் ஆட்களுக்குப் புரிந்து விடும்.

பஸ் ஸ்டாண்ட் கற்கண்டுப் பாலுக்கும் இப்போது அவசரமில்லை. அது இரவு பூராவும் சுடச்சுடக் கிடைக்கும், மயூரா லாட்ஜின் ஆனியன் ரவாவைக் கூடக் கொஞ்சம் ஒத்திப் போடுங்கள். Soul-க்கு உணவில்லாதபோது சிறிது Stomuch-க்கும் ஈவோம்.

எங்கே இருந்தோம்?

அம்மன் சன்னிதிக்குள் நுழைந்து சதக சாம்பிள் ஒன்று படித்துக்கொண்டிருந்தோம். இல்லையா?

மாயவரம் பெரிய கோவில் அபயாம்பாள் சன்னிதிக்கு நீங்கள் இது வரை போனதே இல்லை என்றால், மிகப்பெரிய சந்தோஷத்தை, நிம்மதியை நீங்கள் உங்கள் வாழ்நாளில் இன்னும் அனுபவித்ததில்லை என்று தான் பொருள். இமயமலை இருட்டுக் குகைக்குள்ளெல்லாம் போய் இதைத் தேடவேண்டாம். சன்னிதியில் நுழையும்போதே தூரத்தே கம்பீரமாக நிற்கின்ற அம்மனின் காந்தப் பார்வை உங்களை இழுத்து விடும். கிட்டே போகப் போக, குழந்தையாய் நீங்கள் இருந்தபோது கவலையேதும் இல்லாமல் நீங்கள் படுத்துக் கிடந்த உங்கள் அம்மாவின் மடிவாசனையும், பாசமும், சொல்லத் தெரியாத ஒரு கருணையும் உங்களை ஈர்க்கும். உடலும் மனமும் லேசாகிக் கண்கள் கசிய நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமலே போவதை உணர்வீர்கள்.

நானும் எத்தனையோ கோவில்களுக்குப் போயிருக்கிறேன். காஞ்சி காமாட்சியின் கம்பீரமான ஆனந்தத் திருக்கோலத்தையும், மீனாட்சியின் திருக்கல்யாண வெட்கத்தையும், திருக்கடையூர் அபிராமியின் குமிண்சிரிப்பையும், கன்யாகுமரித் தாயின் சுடர்முகத்தையும் தரிசித்திருக்கிறேன். ஆனால் அவை யாவும் உங்கள் அம்மாவின் சிரிப்புக்கு ஈடாகுமா? அபயாம்பாள் சன்னிதியில் அந்தச் சத்திய நிம்மதியை நீங்கள் ஒரு முறையேனும் அனுபவித்த பிறகு எனக்கு எழுதுங்கள். எத்தனையோ சித்தர்கள் சொல்லத் தெரியாமல் விழித்ததை என்னால் மட்டும் விவரித்து விடமுடியுமா, என்ன? உங்கள் ஆன்மா அனுபவிக்கவேண்டிய அனுபவம் அது.

ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் கூட்டம் கசகசக்கும். ஒவ்வொரு வெல்ளிக்கிழமையும் ஒரு ஸ்பெஷல் அலங்காரம்.
ஐப்பசி மாதக் கடைமுழுக்கின்போது கோவில் கற்பிரகாரத்தின் தெற்கு மூலையில் இன்றும் ஈரம் கொப்பளிக்கிறது.

நவராத்திரியின் போது ஒன்பது நாளும் ஊசி முனையில் தவமிருக்கும் அம்மனுக்குப் புதுப்புது அலங்காரங்கள். முத்தங்கியென்ன, சந்தனக் காப்பென்ன, வைரக் கிரீடமென்ன, ஒரே அமர்க்களம் தான். சாதாரண நாட்களில் ஒரு நண்பகலில் சென்றால் கூட அம்மாவுக்கு அடக்கமாக ஆனால் அழங்காக அலங்காரம் செய்திருப்பார் அங்கே வேலை செய்யும் குருக்கள். பரம்பரை அலங்கார ஸ்பெஷலிஸ்டுகள். பெண்களே அதைப் பார்த்து அதிசயிப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

அம்மாவிடம் ஆசி வாங்கியபடியே வெளியே வந்தால் அத்தனை அமைச்சர்களும் வரிசையாக, மன்னிக்கவும், பூத கணங்களும் ராட்சஸ கணங்களும் வலது பக்கம் வாய் பொத்தி நிற்பது காண்பீர்கள். ஒவ்வொரு பல்லக்கும், விமானமும் அவ்வளவு பெரிசு, கம்பீரம், நேர்த்தி.

வெளிப் பிரகாரத்தை ஒரு சுற்றுச் சுற்றியபடியே உங்கள் வயிற்றில் மணி அடிப்பது எனக்கும் கேட்கிறது. வேண்டாம், அங்கே போகவேண்டாம். மடப்பள்ளியில் உண்டக்கட்டி தான் கிடைக்கும். பல்லக்குத் தூக்குபவர்களுக்குப் 'படி' கொடுப்பதற்காக அது செய்யப்படுகிறது. உங்கள் டெலிகேட் தொப்பைக்கு அது ஒவ்வாது. கொஞ்சம் ஸ்பெஷலாக, 'லைட்'டாக ஏதாவது போட வேண்டுமென்றால், நடையை எட்டிப் போட்டுப் பெரிய கடைத்தெருப் பக்கம், முற்சொன்ன, காளியாகுடி, மயூரா லாட்ஜ் வகையறாக்களை ஒரு தாக்கு தாக்குங்கள்.

அங்கே போய் அகால மரணமடைந்த பரோட்டா, ஹார்ட் அட்டாக்கில் செத்த வடகறி என்று எதையாவது நீங்கள் வெட்டினால் அதற்கு நான் சால்ஜாப்பு இல்லை. மணிக்கூண்டு அருகிலேயே மாயவரம் மெடிக்கல்சும் இருக்கிறது. கொஞ்ச தூரத்தில் தான் பஸ் ஸ்டாண்டு. சென்று வாருங்கள், வணக்கம்.

மற்ற மெய்யன்பர்கள் காளியாகுடிக்குள் வலது காலை வைத்து உள்ளே வாருங்கள். இங்கே எல்லா நேரமும் எல்லாமும் கிடைக்காது. எந்த ஹோட்டலில் எந்த நேரத்தில் எது கிடைக்கும் என்பதைச் சொல்லச் சென்னையில் கோயம்பேடு ஐகாரஸ் மாதிரி மாயவரத்திலும் ஒரு லோக்கல் நபர் உங்களுக்குத் தேவை. முன்கூட்டியே சொன்னால், மாயவரம் மாஃபியாவிலிருந்து ஒரு நபரை அனுப்பி வைக்கிறேன். விருந்தோம்பலில் மாயவரத்து மண்ணின் மைந்தர்கள் மன்னர்கள். உங்களுக்கும் சேர்த்துச் சரியான ஐட்டங்களை எல்லாம் ஆர்டர் செய்வார்கள். எல்லாம் என்றால் எல்லாமும் தான். இட்லிக்குத் தனியாகக் கெட்டிச் சட்னி, அரைத்து ஐந்து நிமிடம் கூடத் தாண்டாத வர்ஜின் தக்காளிச் சட்டினி, தோசைக்கு சைடில் மிள்காய்ப்பொடி-நல்லெண்ணெய், ஊத்தப்பத்திற்கு நெய்-சர்க்கரை, அடைக்கு அவியல் அல்லது கை படாத வெல்லம்-நெய் எல்லாம் தான்.

இவ்வளவு விலாவாரியாக நான் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.

நான் முட்டிக் கொள்வதைக் கேட்காமல், சரியான லோக்கல் மாஃபியா மெம்பர் இல்லாமல், தனியே போய் வெறும் (முந்தாநாள்) மாவுத் தோசையைப் பிய்த்துத் தின்று மென்னியடைத்துப் போய்ச் சோனிச் சாம்பாரிலும் நீரிழிவுச் சட்னியிலும் காலங்காலமாகக் காசைக் கரைத்து நிற்கும் வெளியூர் மாக்களை நினைத்தால் எனக்கு இன்னமும் வேதனை பீரிடுகிறது. அப்புறம், 'மாயவரத்துல என்னய்யா இருக்கு?' என்று ஏதாவது ப்ளாகில் அவர்கள் தனிப் புலம்பல் புலம்புவார்கள். நான்சென்ஸ்!

காளியாகுடியில் வெளியூர்க்கார டூரிஸ்ட் பேக்கு மாதிரித் தோளில் தோல் பை, காமெராவுடன் வெறுமனே நின்றால் உங்களுக்குச் சுமாரான காப்பி தான் கிடைக்கும். அதுவும் லேட்டாக. அரை டிராயருடன் அமெரிக்க என்ஆர்ஐயா நீங்கள்? அநேகமக நீங்கள் ஏசிக்குப் பேக்கப் செய்யப்பட்டு விடுவீர்கள். சர்வர் வாழப் பணம் கொடுத்து, இட்டதை உண்டு கொழுத்துப் பின் சோற்றுக்கு இரையென மாயப்போகும் வேடிக்கை மனிதர் நீங்கள். உங்களோடு எனக்கென்ன பேச்சு?

மீதமுள்ள ரசிகர்கள் 'டிகிரி காஃபி, சக்கர கம்மியா, டிகாக்ஷன் ஸ்ட்ராங்' என்கிற மந்திரச் சொல்லைச் சொல்லிப் பாருங்கள். சர்வருக்கே உங்கள் மீது அப்போது தான் ஒரு தனி அபிமானம் வரும். தூக்கிக் கட்டிய வேட்டியை அவிழ்த்து விடுவார் அவர். ஐஸ் வாட்டர் வரும். மரியாதையுடன் சமையலறைப் பக்கம் பார்த்து, "அண்ணாவுக்கு ஒரு டிகிரி, சக்கர கம்மியா' என்று அலறுவார். என் போன்ற காஃபி பி.ஹெச்டிக்களுக்காகச் சில சமயம் டிகிரி டிகாக்ஷன் தனி டம்ளரில் வருவதைப் பார்த்து வயிறெரிய வேண்டாம். காஃபி மயக்கத்தில் பாதிச் சொத்தை காளியாகுடிக்கும், மிச்சத்தை மயூராவுக்கும் எழுதி மாய்ந்த மாந்தர் பலப்பலர். அப்புறம் அங்கூரா பூந்தி, காசி அல்வா, மிள்காய் பஜ்ஜி, வெங்காய கொத்சு போன்ற -'நெவர்-இன்-த-ரெகுலர்-மெனு' ஐட்டங்கள் கிடைக்கவேண்டும் என்றால், ஒன்று நீங்கள் மாயவரத்தில் பிறந்திருக்கவேண்டும். அல்லது என்னிடமிருந்து சிபாரிசுக் கடிதம் வேண்டும்.

கொஞ்சம் லோக்கல் ஹோட்டல் அரசியல் தெரிந்து கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. காளியாகுடி வாடிக்கையாளர்களுக்குப் பல சமயம் மயூரா அல்பமாகத் தோன்றும். மயூரா இளவட்டங்களுக்கோ காளியாகுடி கெழ போல்ட்டுக் கன்சர்வேடிவ்வாகத் தோன்றும். கையில் காசிருக்கும் தெம்பான காலங்களில் நாங்கள் மயூராவில் ஆனியன் ரவா அடித்துப் பின் கா.வில் டிகிரி காஃபி அருந்தி மயங்கி இன்புறுவோம். எங்கள் மாமா போன்ற லைஃப்லாங் கஸ்டமர்களுக்குக் காளியாகுடியில் தனிப்பந்தியே -சமையல் அறைக்குள்- நடக்கும். வாண்டு மாதிரி நானும் அங்கே போய் 'விளளயாடி' இருக்கிறேன். யாருக்குமே கிடைக்காத அல்வா பார்சல் அமுக்கமாகத் தனிப் பையில் எங்களுக்காகக் கொடுக்கப்படும். கேஷ் கௌண்டரில் இருக்கும் சிவப்புக் குண்டு மாமா, என் மாமாவைப் பார்த்து ஸ்நேகமாகப் புன்னகைத்தபடி 'ஆரு, மருமானா?' என்பார். என் மாமாவும் 'ஆமா. சரஸ்வதி பையன், சின்னவன்' என்பார். பரிவட்டம் கட்டப்பட்டது போல் நான் காலரைத் தூக்கி விட்டுக் கொள்வேன். தின்று கொழுத்த பரம்பரை.

அது சரி, வாசலில் என்ன கலாட்டா? ஓஹோ, நாலு மணிக்குப் பிறகு வந்து அல்வா கிடைக்காததால் வெம்பிய திருக் கூட்டத்தின் வேதனைக் கதறலா? போலீஸ் அடிதடியா? அவர்களை விடுங்கள். காளியாகுடியார் அடுத்த முறையாவது அவர்களை ரட்சிக்கட்டும்.

உங்களுக்கு வயிறு ரொம்பி விட்டதல்லவா? ஸ்வாமி தரிசனம் ஆயிற்று. வயிற்றுக்கும் வேண்டியதை, வேண்டாததை எல்லாம் போட்டாயிற்று. அசட்டுச் சிரிப்புடன் கொஞ்சூண்டு அஜீரணம் மாதிரி, நிற்க முடியாமல் உடம்பு ஆடிக்கொண்டு ஒரு மாதிரியாக வருகிறதல்லவா? உங்களால் இப்போது வேகமாக நடக்க முடியாது என்பது எனக்குத் தெரியும். அப்படியே கொஞ்சமாக சைடு வாக்கில் நகர்ந்து, பார்த்து, பார்த்து...நிழலெல்லாம் குதிரைச்சாணி. 'கரையெல்லாம் செண்பகப்பூ' டைட்டிலுக்கு சுஜாதா அண்ணாவுக்கு இங்கே தான் இன்ஸ்பிரேஷன் கிடைத்ததாக நான் நினைக்கிறேன்.

நகர்ந்தபடியே மணிக்கூண்டுப் பக்கம் வந்தாயிற்றல்லவா?. 'கும்பகோணம் ராஜாஜி வெற்றிலை ஸ்டாலி'ல் வறுத்த நெய்ச் சீவலோ, கைச் சீவலோ கொஞ்சம் வாயில் மென்றபடி சுற்றி வரும் உலகத்தைப் பாருங்கள். கடைக்காரர் கல்கத்தா காளி மாதிரிப் பல கைகளுடன் ஜூனியர் விகடன் சேல்ஸ், கிடா மார்க் சுருட்டு, த.பி.சொக்கலால் சேட்டு பீடி, சிஸர்ஸ், சார்மினார், பன்னீர்ப் புகையிலை அத்தனையும் கவனித்துக் கொண்டே, வாயில் அதக்கிய புகையிலையை மென்றபடி, ஒரு வார்த்தை பேசாமல், உங்களை நோட்டமிடுவார். என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர் உட்கார்ந்திருக்கும் அரையடிப் பலகைக்குக் கீழிருந்து எனக்கு எல்லாமே கிடைக்கும். நான் ரெகுலர்.

சும்மா வெறுமனே 'வெத்தல பாக்குக் குடுங்க' என்று நீங்கள் கேட்டால், அவர் 'ம்' என்று கூடச் சொல்லாமல், 'இது ஒரு டூரிஸ்ட் பேக்கு' என்று எதையாவது அவசரமாக மடித்து நீட்டுவார். அதற்கு நீங்கள் காசு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. நீங்கள் சீக்கிரம் நகர்ந்து எம் போன்ற பரம்பரை வாடிக்கையாளர்களுக்கு இடம் விடுதல் நலம். சாதா மக்களுக்குக் காலையிலேயே விற்றுப்போய்த் தீர்ந்து விட்ட குமுதமோ, கல்கண்டோ, இதயமோ, இந்துவோ, இந்தியா டுடேவோ எங்களுக்காகத் தனியே எடுத்து வைத்திருக்கப்படும். அப்புறம் மாமாவுக்காகக் கும்பகோணம் ஸ்பெஷல் இளம் வெற்றிலை. கைச் சுண்ணாம்பு, கிராம்பு, ஏலக்காய், பன்னீர்ப் புகையிலை, ரின்டான், இன்னபிற சமாச்சாரங்கள் அங்கே த்யாராக இருக்கும்.

இந்த வெற்றிலை மேட்டர் இருக்கிறதே, இது வெறும் மேட்டர் இல்லை. இது பெப்சிய விடப் பெரிசு. புராணங்களில் எல்லாம் சொல்லப்படுகிற சொஸ்தமான விஷயம்.

வெற்றிலைக் கொடிக்கால்கள் தஞ்சை மாவட்டத்தின் சில இடங்களில் மட்டும் தான் பயிராகின்றன. கல்கத்தா பான் எல்லாம் மொரட்டு ரகம். சுரீரென்று உறைக்கும். மதுரைப் பக்கத்து வெற்றிலை தடிமன். மடித்துப் போடுவதற்குள் பிராணனே போய்விடும். சிதம்பரம் கொள்ளிடம் பக்கமிருந்து வந்தால் கூட நாங்கள் தொடமாட்டோம்.

இந்தக் 'கும்பகோணம் கொழுந்து வெற்றிலை' இருக்கிறதே, அது பற்றி நாம் நிறையப் பேசியாக வேண்டும்.

ஜோதிகாவும், நயன்தாராவும் வேண்டவே வேண்டாம். ஸ்நேகாவோ, சிம்ரனோ, அசினோ, த்ரிஷாவோ உங்களுக்கு யாரைப் பிடிக்கும்? தற்சமயம் இல்லாத அவர்கள் மெல்லிடையைக் கற்பனையாவது பண்ணிப் பாருங்கள். தொட்டால் வளையவேண்டும், ஆனால் துவளக்கூடாது. கை பட்டால் வழுக்கவேண்டும், ஆனால் மொழுக்கென்று இருக்கக்கூடாது. உதடு பட்டால் சிலிர்க்கவேண்டும், ஆனால் ஜிலீரென்று இருக்கக் கூடாது. கிட்டே வந்தால் கிறங்கவேண்டும், ஆனால் ரஃப்பாக இருக்கக் கூடாது. பச்சை நரம்பு தெரியவேண்டும், ஆனால் பல கோடுகள் தெரியக்கூடாது. முகர்ந்து பார்த்தால் மோட்சமே கிடைக்கவேண்டும், நரகநாற்றம் அடிக்கக்கூடாது.

நான் வெற்றிலையைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்.

(இன்னும் மெல்லுவோம்)

15 comments:

முகமூடி said...

ராம்... இவ்வளவு விலாவாரியா இந்த விசயத்த எல்லாம் இப்ப சொல்லி காஞ்ச பர்கர் சாப்பிடுற என் வயித்தெரிச்சல கொட்டிக்கணுமா?? இருந்தாலும் மண்வாசனைய மீண்டும் பிடிக்க வச்சதுக்கு நன்றி... அப்புறம் இது வரைக்கும் யாரும் சொல்லாத, யாரும் கேள்விப்பட்டிராத நம்ம ஊர் சிறப்பு விசயம் ஒன்ன நீங்கதான் சொல்லுங்களேன்... அதான் மாயவரம் ஒரிஜினல் தென்னமரக்குடி எண்ணெய் பத்தி.. அப்புறம் கடைமுழுக்கு நடக்குறப்ப இருக்கற காவேரி நிலைமையும் மத்த நாள்ல இருக்குற காவேரி நிலைமையும், சிதம்பரம் சைட்ல இருந்து வர்ற பஸ் ஒத்தை பாதையில திரும்புற இடத்துல இருக்கிற பூக்கடை (பூபால் கடை?) சந்தன வாசம், கறார் ஜவுளிக்கடை பெயர் காரணம் இதை பத்தியெல்லாம் சொல்லப்போற ராமுக்கு ஒரு ஸ்பெஷல் வெத்தலை செல்லப்பெட்டி பார்சல்...

சீமாச்சு.. said...

அண்ணா,
சும்மா பட்டையக் கெளப்பிட்டேள்.. அப்படியே சைக்கிளை எடுத்துக்கிட்டு ஒரு ரவுண்டு போன சுகம் கெடக்கிறது.
ராஜாஜீ வெற்றிலை ஸ்டால் தான் நம்ம சொக்குப் புள்ளைக் கடையோ..
அப்படியே இந்தப்பக்கம் வள்ளலார் கோயில் பக்கம் கொஞ்சம் வாங்கோளேன்..
நல்லாயிருக்கிறது... நன்றி..
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...

Mookku Sundar said...

//தொட்டால் வளையவேண்டும், ஆனால் துவளக்கூடாது. கை பட்டால் வழுக்கவேண்டும், ஆனால் மொழுக்கென்று இருக்கக்கூடாது. உதடு பட்டால் சிலிர்க்கவேண்டும், ஆனால் ஜிலீரென்று இருக்கக் கூடாது. கிட்டே வந்தால் கிறங்கவேண்டும், ஆனால் ரஃப்பாக இருக்கக் கூடாது. பச்சை நரம்பு தெரியவேண்டும், ஆனால் பல கோடுகள் தெரியக்கூடாது. முகர்ந்து பார்த்தால் மோட்சமே கிடைக்கவேண்டும், நரகநாற்றம் அடிக்கக்கூடாது //

சத்தியமா வெத்தலை..வெத்த்லை..வெத்தலையேதான்..வேற ஏதாவது தோணுமா..? :-)

ம்..ம்..நடக்கட்டும்.:-)

ஏஜண்ட் NJ said...

//....வளையவேண்டும்... வழுக்கவேண்டும்... சிலிர்க்கவேண்டும்... கிறங்கவேண்டும்... பச்சை நரம்பு தெரியவேண்டும், .... மோட்சமே கிடைக்கவேண்டும்,...//

இன்னாங்கோ, பச்சே பச்சேயா எழுதுறீங்கோ!

ஞானபீடம். <<= இங்கே கூட பச்ச பச்சயா நெறயா மேட்டரு கீதுங்கோ! ;-)

ஜெ. ராம்கி said...

//மாயவரம் பெரிய கோவில் அபயாம்பாள் சன்னிதிக்கு நீங்கள் இது வரை போனதே இல்லை என்றால்

யானை கொட்டாய்க்கு போய்ட்டு பக்கத்துல இருக்குற ஜன்னல் வழியா அம்மனை எட்டிப்பார்த்து கன்னத்துல போட்டுக்கிட்டதுண்டா? இப்ப ஜன்னலெல்லாம் பெயர்ந்து போய், குறுக்கே பூங்கா வெச்சு, வெளியிலேர்ந்து பார்க்க முடியாம பண்ணிட்டாங்க!


//உடலும் மனமும் லேசாகிக் கண்கள் கசிய நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமலே போவதை உணர்வீர்கள்.

யாருப்பா அது... இன்னுமா அண்ணாச்சிக்கு காவி டிரெஸ் போட்டுவிட்டு கடப்பாரையை கையில கொடுக்கலை?

//விருந்தோம்பலில் மாயவரத்து மண்ணின் மைந்தர்கள் மன்னர்கள். உங்களுக்கும் சேர்த்துச் சரியான ஐட்டங்களை எல்லாம் ஆர்டர் செய்வார்கள். எல்லாம் என்றால் எல்லாமும் தான்.

நான் ரெடி. ஆனா, கேஷ் கவுண்டர்கிட்டவே போவக்கூடாதுன்னு சாகும்போது எங்க தாத்தா சத்தியம் வாங்கிட்டிருக்கார்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

முகமூடி சார்!, சார் தானே, இல்லை பர்தாவா? வெள்ளி வெத்தலைப்பெட்டி அட்டகாசமா இருக்கு. இழ்ங்கோ, வாழ்ல்ல போயித் துழ்ழ்ழ்ட்டு வழ்ந்து மீதிக் கதயும் சொல்றேன்;-)

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

ஓய் சீமாச்சு, நீர் ஒரிஜினல் மாஃபியாங்காணும். சொக்குப் புள்ளை கடையே தான்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

ஏனுங்க ஞானபீடம், பச்சை வெத்தலையப் பத்திப் பச்சையாப் பேசாம எப்டிப் பேசறதாம்?!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

ராம்கி, உங்க தாத்தா புண்ணியத்துல கடைசி வரைக்கும் மாவாட்டியே காலம் தள்ளப் போறீங்களாக்கும்?! விதி வலியது.

ஆனைக் கொட்டாய்ல நான் பார்த்தப்ப ரெண்டு பூனை தான் இருந்த ஞாபகம்.

jeevagv said...

வெற்றிலைக்கடையை தனிக் கடையாகவே (பதிவு) போட்டிடலாமே!

jeevagv said...

வெற்றிலைக்கடையை தனிக் கடையாகவே (பதிவு) போட்டிடலாமே!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

ஜீவா கேட்டுக்கொள்வதற்கு முன்பே போட்டுவிட்டேனே, போய்ப் பாருங்கள். ஒரு கோலி ஜோடா இனாமாகத் தரச் சொல்லுகிறேன்.

Anonymous said...

அண்ணா,
பிரமாதப் படுத்திட்டேள். நான் ரெண்டு வர்ஷம் முன்னால, வைத்தீஸ்வரன் கோவில் போய்ட்டு, மாயவரம், கும்மோணத்தில பேக்கு மாதிரி, மத்யான சாப்பாட்டை திட்டிண்டே சாப்ட்டேன். நேக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா, அண்ணா பேரை சொல்லிண்டு, நீங்க சொன்ன இடத்திலே சாப்ட்டுட்டு,அல்வாவையும் பொட்லம் கட்டிண்டு வந்திருப்பேன். அப்புறம், கும்மோணம் தேங்குழல் அச்சு வாங்க, நானும், என் பார்யாளும், ஒவ்வொரு கடையா ஏறி இறங்கி பாத்து பாத்து வாங்கிண்டு வந்தோம். ஒரு நாள் முள்ளு முறுக்கு மேல விபரீத ஆசை வர, என் பார்யாளும், ஊர் பெட்டியைத் தொறந்து, கும்மோணம் வெங்கல அச்சைத் தேடி எடுத்தா, அது முறுக்கிண்டு, முறுக்கு பிழிய மாட்டேண்னு அடம் பண்ணித்து... ஹ்ம்...... சரி அதைவுடுங்கோ... அப்டியே எங்க ஊர் திருச்சியைப் பத்தியும் எழுதுங்கோ, என் மருமான் சல்பேட்டா படவாப் பயலுக்கு அட்வைஸ் பண்ணுங்கோ..

Anonymous said...

pramatham ponga. anubavithu ezhuthiyirukkireerkal.

Mayavaram poi vantha thirupthi kidaithuvittathu

Anonymous said...

excellent ram. Enjoyed every word