என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Sunday, October 18, 2015

கபாலி 30

கபாலி 30
---------------

கமல் 50 ஆயிற்று.

ரஜினி 40ம் முடிந்தது.

அப்போ, இதென்ன கபாலி 30?!

சொல்கிறேன், சொல்கிறேன், 'கலக்கல் கபாலி' சொல்லாமலா இருப்பேன்?

அதற்கு முன் 'கபாலி 30' ன் முதல் டோஸாக,

நடிகர் சங்க ‘மெஸ்’
------------------------------

சில ஆண்டுகளுக்கு முன் சென்னை தி. நகர் ஹபிபுல்லா ரோடு பக்கத்தில் ஒரு கெஸ்ட் ஹவுஸ் வைத்திருந்தேன். அமெரிக்காவிலிருந்து அடிக்கடி சென்னை விசிட் இருந்ததால் அப்படி ஒரு ஏற்பாடு.

பக்கத்திலேயே இப்போது வடிவேலு சொல்கிற 'கிணத்தைக் காணோம்' புகழ் நடிகர் சங்க கட்டிடம், சங்கரதாஸ் ஸ்வாமிகள் ஆடிட்டோரியம் எல்லாம் ஒரே பிரம்மாண்டமான காம்பவுண்டுக்குள் இருந்தன.

கடைசியாக நான் உள்ளே சென்றபோது விஜயகுமாரை சங்கத்து வாசலில் பார்த்தேன். உள்ளே வரச்சொல்லி ஆபீசில் டீ கொடுத்து உபசரித்து நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.

"எதையும் ஒழுங்கா செய்யமாட்டான். தானும் படுக்க மாட்றான், தள்ளியும் படுக்க மாட்றான், இவனுக்கு ஏன் சார் இந்த வேலை?" என்று என்னிடம் முக்யஸ்தர் ஒருவர் பற்றிக் கேட்டது நினைவில் இருக்கிறது!

நுங்கம்பாக்கம் வாட்டர் டேங்க் அங்கேயிருந்து கூப்பிடு தூரம். எப்போதும் 'கச கச'வென்று 24 மணி நேரமும் தண்ணீர் லாரிகள் நாஸ்தி பண்ணி வைத்திருக்கும் இடம்.

பக்கத்திலேயே தான் 'சங்கரா மெஸ்' முளைத்திருந்தது.

பிரமாதமான ஹோட்டல் இல்லாவிட்டாலும், ஆத்திர அவசரத்துக்கு ஒரு வாய் காஃபி கிடைக்கும் பொடி இடம். ஓனர் மாமியே ஓடி வந்து நான் கேட்காமலேயே டிகாக்‌ஷன் தூக்கலாக, சர்க்கரை இல்லாமல் எனக்குக் காஃபி கொடுப்பாள். அவ்வப்போது பொங்கல், வடை ப்ரேக்ஃபாஸ்ட்டும் சாப்பிடுவேன்.

'லஞ்ச்' ₹45 மட்டுமே என்பதால் ஆட்டோக்காரர்கள், டாக்சி டிரைவர்கள் கூட்டம் அம்மும்.

ஒரு சின்ன எலெக்ட்ரிக் குக்கரில் சாதம் மட்டும் ரெடி பண்ணிக் கொள்வேன். கெஸ்ட் ஹவுசுக்கு சங்கரா மெஸ்ஸிலிருந்து எனக்கு சில சமயம் லஞ்சே (மைனஸ் ரைஸ்!) பார்சலாக வரும். சின்னச்சின்ன ப்ளாஸ்டிக் பைகளில் சாம்பார், ரசம், பொரியல், ஊறுகாய் இன்ன பிற.

ஒரு நாள் குக்கர் வைக்க மறந்து போனதால் சரி, சங்கரா மெஸ்ஸுக்கு நடந்தே போய் விடுவோம் என்று கிளம்பினேன்.

ஆச்சரியமாக, அந்த சின்னத்தெருவில் அப்படி ஒரு கூட்டம். ஆட்களைப் பார்த்தாலே எல்லோரும் வேப்பெண்ணெய், மஞ்சாப்பை ரகமென்பது புரிந்தது. பலரும் பட்டப்பகலில்  ஃபுல் பூஸ்ட்டில் இருந்தார்கள்.

'யார் இவர்கள், எங்கே போகிறார்கள் கூட்டமாக?' என்று நினைத்தபடியே ஹோட்டலில் நுழைந்தால், அத்தனை கூட்டமும் அதே சின்ன மெஸ்ஸுக்குள் திமுதிமுவென்று ஒதுங்கியது.

"என்னடா நம் லஞ்சுக்கு இன்று வந்த சோதனை!" என்று புலம்பியபடியே
ஒரு இடம் வேண்டி ஓனரிடம் அண்டி நின்றேன்.

"சார், இன்னிக்கு சாப்பாடு லேட் ஆவும். சித்த நேரம் நில்லுங்க"

உட்காரவும் இடமில்லை.

"என்ன இப்படி இன்று திடீர் கூட்டம்? ஏதாவது கட்சி மாநாடா?"

"பக்கத்தில தானே சார் நடிகர் சங்கம் இருக்கு, அங்க இன்னிக்கு எலெக்சன்!"

ஓ!

அப்போதுதான் கவனித்தேன், முண்டி அடித்த கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவர் கையிலும் ஒரு சாப்பாட்டு டோக்கன்!

பக்கத்தில் நின்ற சிலரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

"என்ன சார், எலெக்சனா? நீங்கள்லாம் வெளியூரா?"

"ஆமா சார். இன்னிக்கு ஒரு நாளிக்கு சாப்பாடும் போட்டு நல்லா கவனிச்சிப்பாங்க சார்"

திருமங்கலத்தை நினைத்துக் கொண்டேன்!

"என்ன சார் சிரிக்கிறீங்க?"

வாசனையான புது நண்பர் கேட்டார்.

"ஒண்ணுமில்ல. நம்ம நாட்டை நெனச்சேன், சிரிச்சேன்!" என்றேன்.

ஏதேதோ விதி மீறல்களுக்காக இப்போது சங்கரா மெஸ இடிக்கப்பட்டு விட்டது.

நடிகர் சங்கக் கட்டிடமும் தரை மட்டம்!

-கலக்கல் கபாலி
(லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்)

*ஃபேஸ்புக்கில் அக். 17, 2015 வெளிவந்தது