என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Tuesday, November 04, 2008

ஒபாமா வெற்றி!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் செனட்டர் பாரக் ஒபாமா பெருத்த வெற்றி அடைந்திருக்கிறார் என்பதை மிகுந்த சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த நாட்டை ஓட்டாண்டியாக்கி, உருப்படாமல் செய்து பல விதங்களிலும் உலக சமாதானத்தின் பொது விரோதியாக கொடுங்கோல் ஆட்சி செய்த புஷ் அரசாங்கம் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து விட்டது.

"இது நடக்குமா?" என்கிற பலத்த கேள்விக்குறியுடன் தான் நான் இந்தத் தேர்தலை உன்னிப்பாக கவனித்து வந்தேன்.

"இது நடக்க வேண்டுமே" என்று வேதனைப்பட்டேன்.

'தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும்
தர்மம் மறுபடி வெல்லும்'

என்பது உண்மையாகி விட்டது.

நல்லது, நடந்தே விட்டது.

இனிமேல் அமெரிக்கர்கள் தலைநிமிர்ந்து நடக்கலாம்!

Wednesday, August 06, 2008

யூ டூ விகடன்?

ரஜினிகாந்த் - குசேலன் மேட்டர் ஒரு வழியாக தானே எரிந்து சாம்பலாகி முடிந்து போகின்ற நேரத்தில், இந்த வார ஜூனியர் விகடன் (10-8-08)'சூப்பர் ஸ்டாருக்கு சுளீர்' என்ற தலைப்பில் எழுதி இருப்பதை, வெறுப்பு நெருப்பை ஊதி ஊதி வளர்ப்பதை, அதில் கொஞ்சம் குளிர் காய நினைப்பதை இப்போது தான் படித்தேன்.

உடனே நான் அவர்களுக்கு எழுதிப்போட்ட பதில்:

"யூ டூ விகடன்? ரஜினியை விமர்சனம் செய்வதைப் பற்றி நான் சொல்லவில்லை. ஒரு பத்திரிகை என்ற முறையில், அதுவும் எதையாவது பரபரப்புக்காக எழுத வேண்டிய வியாபாரக் கட்டாயத்தில் நீங்கள் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால், கன்னடியர்கள் என்னவோ பாகிஸ்தானியர்கள் போலவும், கர்நாடகா ஏதோ பயங்கர விரோத தேசம் போலவும் எழுதியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது, வருத்தப்படவேண்டியது, இந்திய இறையாண்மைக்கே, தேச ஒற்றுமைக்கே ஆப்பு வைக்கும் விதத்தில் விகடன் எழுதலாமா? கர்நாடகத்தில் சில முட்டாள்கள் தான் கண்மூடித்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்றால் நம் தமிழர்களை இப்படி உசுப்பேற்றி விளம்பரம் தேடுவது விகடனா? அவசரப்பட்டு விட்டீர்கள். நான் வெட்கப்படுகிறேன்."

என் பின்னூட்டத்தை அவர்கள் பிரசுரம் செய்வார்களா என்பது தெரியவில்லை.

விகடனா இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து போய் எழுதுவது? தனி மனிதத் தாக்குதலில் இப்படி ஈடுபடுவது? ரஜினையைப் பற்றிய 'கன்னடத்து ஆள்' போன்ற கேவலமான பிரயோகங்கள் என்னை மிகவும் வருந்த வைத்தன.

இந்தியாவைக் கூறு போட எதிரி அமைப்புகளே இனி தேவை இல்லை. தமிழ்ப் பத்திரிகைக்காரர்களே அந்தப் புண்ணியத்தைக் கட்டிக்கொண்டு விடுவார்கள் போல் தெரிகிறது.

Saturday, May 24, 2008

நான் அவனில்லை!

நண்பர்களே, எப்படி இருக்கிறீர்கள்?!

'எனது இதயம் கனிந்த அன்பான ரசிகப் பெருமக்களுக்கு ...' என்றெல்லாம் உங்களை ரம்பம் போடாமல் நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.

அமரர் சுஜாதாவின் மறைவுக்குப் பிறகு, சில வாரங்கள் சென்னையில் நான் தங்கி இருந்தாலும் சில பல சோதனைக்காலப் பணிகளால் இலக்கிய ஜோதியில் ஐக்கியம் ஆக முடியவில்லை. என் ப்ளாக் பக்கம் கூட நான் எட்டிப் பர்க்கவில்லை என்கிற உண்மை உங்களுக்குத் தெரிந்ததே. அவ்வப்போது ஏதாவது ஜு. வி. அல்லது ரிப்போர்ட்டரில் படம் பார்த்துக் கொறிப்பதோடு சரி.

ஏப்ரல் கடைசியில் அமெரிக்கா திரும்பி விட்டாலும், வேறு சில அலுவலகப் பணிகளில் நான் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்தபோது தான் அது நடந்தது.

எது?

"என்னப்பா அது, ஏதோ முகமூடி சமாச்சாரமாமே, உன் பெயர்ல ஏதோ கச்சாமுச்சா சமாச்சாரமெல்லாம் நெட்ல வருதாமே?" என்று கேட்டான் என் பையன். அப்பாக்களைப் பற்றிய வழக்கமான பையன்கள் படும் கவலை அவன் குரலில் தெறித்தது.

"என்னடா இது, எல்லேக்கு வந்த சோதனை?"

"நான் இப்பொழுதெல்லாம் எங்குமே தொடர்ச்சியாக எழுதுவதே இல்லையே அப்பா. ராயர் காப்பி கிளப், மரத்தடி, தமிழ்மணம், தமிழோவியம், இத்யாதி, இத்யாதி- இதையெல்லாம் நான் மூட்டை கட்டி வைத்து ஆண்டுகள் சில பல கடந்து விட்டனவே, ஈதென்ன கொடுமை?"

நெட் சமுத்திரத்தில் முழுங்கி முத்தெடுத்து, என் பெயரால் அல்லது என் பெயரில் யாராவது எங்கேயாவது ஏதாவது கிழித்துக் கொண்டிருக்கிறார்களா என்றேல்லாம் ஆராய்ச்சி செய்து சித்தப் பிரமை பிடித்து அலைய நான் தயாரில்லை.

அப்படியே ஏதாவது பிரகிருதிகள் எங்கேயாவது எனக்கு ஒரு முகமூடியை மாட்டித் தொலைத்திருந்தால், என்னுடைய பின்னூட்டம் என்ற பெயரில் எதையாவது பெனாத்திக் கொண்டிருந்தால், அவர்களும் வாழ்க, வளர்க!

ஆனால்,

'அதற்ககெல்லாம் நான் பொறுப்பில்லை. நான் அவனில்லை' என்பதை மட்டும் கண்ணியத்துடன் தெரிவித்துக் கொண்டு நான் என் கடமை ஆற்றப் போய்க் கொண்டே இருக்கிறேன்.

மியாவ், லைட்ஸ் ஆன், க்ளோஸப், ஹாட் 16 என்று படிக்க, பார்க்க எவ்வளவோ இலக்கிய சந்தர்ப்பங்கள் காத்திருக்கின்றனவே!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Monday, March 03, 2008

சுஜாதா மறைவுக்குப் பிறகு ...2

மார்ச் 2ம் தேதி, ஞாயிறன்று அமரர் சுஜாதாவின் இரங்கல் கூட்டம் சென்னை நாரத கான சபாவில் மிகவும் விமரிசையாக நடந்தேறியது.

3.30க்கு கூட்டம் என்று சொல்லியிருந்தார்கள். வெளியூர் போகிற ப்ரொக்ராமை ஒத்திப் போட்டு விட்டு, 3.20க்கே கனத்த இதயத்துடன் அரங்கில் நுழைந்தேன்.

சென்ற முறை இந்த அரங்கத்தில் நான் நுழைந்தது சுஜாதாவுடன் தான். யாருடைய கச்சேரி என்று சரியாக நினைவில்லை. சஞ்சய் சுப்ரமணியன் என்று நினைக்கிறேன். அப்போதே அவர் தள்ளாட்டமாக இருந்ததால், கைத்தாங்கலாகத்தான் அழைத்துச் சென்றேன். அதற்கு முன், அவர் வழக்கமாக மாலை வேளைகளில் செல்லும் ராதாகிருஷ்ணன் சாலை சரவண பவனில் லைட்டான டிஃபனை முடித்திருந்தோம்.

நுழைவு வாயிலில் உயிர்மை மனுஷ்ய புத்திரன், சுஜாதாவின் அழகான ப்ளாக் அண்ட் ஒயிட் கட்-அவுட்களை வைத்திருந்தார். உயிர்மையின் உயிராக விளங்கியவர் சுஜாதா தான். ம. புத்திரனின் முகத்தில் சோகம் கப்பிக் கிடந்ததில் வியப்பில்லை.

4.30 வரை கூட்டம் ஆரம்பிக்கப் போவதில்லை என்பது தெரியாமல் சோம்பலாக உலாத்திக் கொண்டிருந்தேன். சற்றும் எதிர்பாராமல் இணைய நண்பர்கள் இரா. முருகன், ஜெர்மனி கண்ணன் போன்றோரைச் சந்தித்தேன். அதுவும் மத்தளராயருக்கு அடுத்த சீட்டிலேயே நான் அமர்ந்திருந்தும் அவரால் என்னை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை என்பது வேடிக்கையாக இருந்தது. கிரேஸி மோகன், "என்னங்க, நம்ம எல்லே ராமைத் தெரியலியா?" என்று மீண்டும் மீண்டும் கேட்க, இராமுரு பேய் முழி முழித்துப் பின் ஆனந்தக் கூத்தாடாத குறையாக என் கையைப் பிடித்தபடியே இருந்தார். "ஒழுங்காக ஈமெயில் படித்திருந்தால் நான் வருவது தெரிந்திருக்குமல்லவா?" என்று நான் அவரை ரேக்கிக் கொண்டிருந்தேன்.

பார்த்திபன் சிறிய முன்னுரையுடன் ஆரம்பித்து அனைவரையும் அவ்வப்போது மேடைக்கு அழைத்துக் காம்பியர் வேலை செய்தார்.

முதலில் ரா.கி. ரங்கராஜன் பெசினார். (ஏழெட்டு வருட முன்பு அவரை அயனாவரம் வீட்டில் சந்தித்ததை நினைவு கூற முடியாமல் தடுமாறியவருக்கு, அவர் மனைவி சரியான நேரத்தில் என் பெயரை நினைவு படுத்தினார். பின் சீட்டில் உட்கார்ந்தபடி மிஸஸ். ரா.கி.ர. தன் சேவையை அடிக்கடி தொடர்ந்ததை நான் ரசித்தேன். சுஜாதாவின் மரணச் செய்தி கேட்டதிலிருந்து ஒரே அழுகை என்பதை ரா.கி.ர. பல முறை தன் பேச்சில் படித்தார்.

அடுத்தடுத்துப் பல பிரபலஸ்தர்கள் பேசினார்கள். விகடனிலிருந்து அசோகன், ஜெயகாந்தன், கஸ்தூரிரங்கன், மதன் எல்லோரும் மைக் பிடித்தார்கள். "சுஜாதா ஒரு எடிட்டர்'ஸ் டிலைட்' என்பதை அசோகன் தெரியப்படுத்தினார். "எத்தனை மணிக்கு, எந்த டெட்லைனுடன், எதைப் பற்றிக் கேட்டாலும் மிகச் சரியாக அதை எழுதித் தருவதில் சுஜாதா சமர்த்தர்"

(நாளை தொடர்கிறேன்)

Friday, February 29, 2008

சுஜாதா மறைவுக்குப் பிறகு ...1

தமிழ் கூறும் நல்லுலகின் இவ்வளவு பெரிய இழப்பை யாராலும் சரிக்கட்ட முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை தான்.

சுஜாதாவின் வீட்டில் நேற்று அலைமோதிய கூட்டத்தைப் பார்த்தபோது எனக்கு ஒன்று தான் தோன்றியது: "இன்று இப்படிக் கூட்டம் இருந்தாலும், நாளை முதல் இதெல்லாம் வடிந்து போக ஆரம்பிக்கும். அது உலக நியதி. இனி வரும் நாட்களில் தான் அவருடைய குடும்பத்தார் தனிமையில், சோகத்தில், பழைய நினைவுகளை அசை போட்டபடி, தவிக்க ஆரம்பிப்பார்கள். அவர்களைக் கொஞ்சமாவது தேற்றும் வண்ணம் நாம் ஏதாவது செய்தே ஆக வேண்டும்".

'என்னால் முடிந்த அளவுக்கு, சென்னையில் இருக்கும்போதெல்லாம் அவர்கள் வீட்டிற்குச் சென்று அவர்களிடம் பேசிக் கொண்டிருப்பது, என்னாலான சின்னச்சின்ன உதவிகளை அவர்களுக்குச் செய்வது, மற்ற நண்பர்கள் மூலமாகவும் இதையெல்லாம் தொடரச் செய்வது' என்பது ஓரளவுக்கு நன்மை பயக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

எந்த விதமான விளம்பரத்தையும் எதிர்பாராமல், பல பிரபல திரையுலக நண்பர்கள் சுஜாதா குடுமப்த்தினருக்கு உதவியிருப்பது, உதவி வருவது எனக்குத் தெரியும். அந்த நல்ல நெஞ்சங்கள் நீடூழி வாழட்டும்.

நாளை, ஞாயிறன்று நடிகர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு இரங்கல் கூட்டம், சென்னை நாரத கான சபாவில் நடக்க இருப்பதாக என்னையும் அழைத்திருக்கிறார்கள்.

அது பற்றியும் எழுதுகிறேன்.

ஒரு ஞான சூரியனின் அஸ்தமனம்

சென்ற இரண்டு நாட்களாக, என்னுடைய 'ப்ளாக்'கில் இந்தப் பதிவை எழுத முடியாமல் நான் தவித்திருக்கின்ற தவிப்பு கொஞச நஞ்சமல்ல. எவ்வளவு நேரம் தான் ஒத்திப் போட்டாலும் இதைச் செய்தே ஆக வேண்டிய கட்டாயம் இப்பொழுது. எழுதவே மனமில்லாமல் தான் இதைப் பதிவு செய்கிறேன்.

எந்த குருவுக்கு மரணமே இல்லை என்று நான் நினைத்திருநதேனோ, எந்த எழுத்துலக ஜாம்பவானுக்கு முடிவே இல்லை என்று நான் நினைத்திருந்தேனோ, எந்த நண்பருக்கு எதுவும் அசம்பாவிதம் நேரவே நேர்ந்து விடாது என்று நான் அசட்டையாய் இருந்தேனோ, அநத ஞான சூரியன் அஸ்தமனமாகி விட்டது என்கிற இடிச் செய்தி என் உறக்கத்தைக் கலைத்து என் காதுகளில் இறங்கியபோது நான் துடித்துப் போனேன்.

கடந்த இரண்டு, மூன்று வருடங்களாகவே சுஜாதாவின் உடல் நிலை மோசமடைந்து வந்தாலும், ஒவ்வோரு முறையும் அவரைக் காணும்போதும், அணைத்து அழைத்துச் செல்லும்போதும், நான் அதை உணர்ந்து வந்தாலும், "அவருக்கெல்லாம் ஒன்றும் ஆகி விடாது" என்கிற பொய்யை நான் நம்பி வந்தேன்.

பச்சை மூங்கில் பாடையில் அவரைத் தொட்டு வழியனுப்பும்போது தான், அவரை இனி பார்க்கவே போவதில்லை என்கிற உண்மை என்னைச் சுட்டது. சுஜாதாவின் சுஜாதா என் லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில் அவர்கள் இருவரும் களித்திருந்த பழைய கணங்களை அழுகையுடன நினைவு கூர்ந்தபோது நான் தவித்துப் போனேன். அவருடைய வாரிசுகள், என் நன்பர்கள் என்னை கட்டிக்கொண்டு கலங்கி அழுதபோது, நான் வாயடைத்துப் போனேன்.

என் எழுத்தலக கக்கரவர்த்தி ஒன்றும் சாமான்னியரைப் போல் செத்துப் போய் விடவில்லை. அவருடைய அந்நியோன்ய நண்பர்கள, திரையுலக சகாக்கள், இலக்கிய நண்பர்கள், ரசிகர்கள், அனைவரும் புடை சூழத்தான் அவர் இன்று எங்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார்.

ஒரு ம்கோன்னத ஆல விருட்சம ஊழிக் காற்றில் விழுந்து கிடக்கையில், ஆங்காங்கே அதன் நிழலில், சில சின்ன்ஞ்சிறு செடிகள் அபத்தமாகப் பூத்து நிற்குமே, காற்றில் அசைந்து ஒன்றுக்கொன்று முகமன் சொல்லிக் கொள்ளுமே, அதைப் போல, பாலகுமாரனும், சங்கரும், மணி ரத்னமும், சுஹாசினியும், கனிமொழியும, ராஜீவ் மேனனும் நாங்கள் ஒருவரை ஒருவர் கண்டு கொண்டோம், அறிமுகங்கள் செய்து கொண்டோம், சோகப் புன்னகைகளில் சோர்வுடன் பேசிக் கொண்டோம். பாரதி ராஜா, பார்த்திபன், வசந்த், விவேக், விகடன், குமுதம் குழும ஆசிரியர்கள், பிரசுரகர்த்தாக்கள், மணியன் செல்வன் போன்ற ஓவிய வல்லுனர்கள, எஸ். பி. முத்துராமன், சாய்மீரா நடராஜன், எஸ். வி. சேகர், தேசிகன், என்று எங்கெங்கும் நண்பர்கள், ரசிகர்கள் புடைசூழத்தான் என் ஞான சூரியன் பெசண்ட் நகர் சுடுகாட்டை நோக்கி அஸ்தமனம் ஆனார்.

என் எழுத்துகளில் ஒரு துளியேனும் நீங்கள் ரசித்தீர்களென்றால் அதுவும் என் எழுத்துலக ஞான குருவான அமரர் சுஜாதாவுக்கு இன்றே, இப்பொழுதே சமர்ப்பணம்.

மிகுந்த வருத்தத்துடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Monday, February 04, 2008

வெட்கம்! வெட்கம்! வெட்கம்!

நடிகர் அமிதாப் பச்சன் மஹாராஷ்டிராவில் பல ஆண்டுகளாக வேலை செய்தாலும், அங்கேயே குடியிருந்தாலும், எப்படி அவர் அலகாபாத்திலிருந்து தேர்தலில் போட்டியிடலாம் என்றும் எப்படி அவர் உத்தர் பிரதேசத்திற்கான 'பிராண்ட் அம்பாசடர்' வேலை செய்யலாம் என்றும் ராஜ் தாக்கரே என்கிற பிரஹஸ்பதியின் 'மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா' என்கிற கோஷ்டி மும்பையில் கலாட்டா செய்தது மட்டுமல்ல, அமிதாப் வீட்டில் கல்லெறிந்து, சோடா பாட்டில்கள் வீசி கலாட்டா செய்துள்ளது.

இந்த ராஜ் தாக்கரே 'சிவ்சேனா' புகழ் பால் தாக்கரேயின் மருமகன். மாமாவிடம் சண்டை போட்டுக்கொண்டு போட்டிக் கட்சி ஆரம்பித்திருக்கும் புத்திசாலி.

இந்த மாதிரி அசிங்கங்கள் வழக்கமாகத் தெற்கே தானே அரங்கேறும்?! தெலுங்கள், மலையாளத்தான், கன்னடியன் என்று நாம் தானே அடித்துக் கொள்வோம், இப்போது இந்த அசிங்க கலாச்சாரம் வடக்கேயும் பரவி விட்டதா, என்ன?

உத்தரப் பிரதேசம் என்ன சீனாவிலா இருக்கிறது?

அலகாபாத் என்ன ஆப்பிரிக்காவிலா இருக்கிறது?

இந்த மாதிரி கீழ்த்தர, மூன்றாம் தர அரசியல்வாதிகளை முதலில் நாடு கடத்தினால் தான் இந்தியா உருப்படும்.

அவர்களை எங்கே அனுப்பலாம்?

Thursday, January 31, 2008

அமெரிக்க அரசியல் 2008 (2)

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான களத்தில் இறுதிச் சுற்று துரித கதியில் ஆரம்பித்திருக்கிறது.

ஈராக்கை அழித்து, அமெரிக்கப் பொருளாதாரத்தை அபேஸ் பண்ணி, சரவதேச சந்தையையும் ஒரு வழி பண்ணி, உள்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், டாலரின் வீழ்ச்சி, வெளியுறவுக் கொள்கையில் பயங்கர திவால் என்று எட்டு வருஷமாக அமெரிக்காவை புஷ் சனியன் பிடித்து ஆட்டோ ஆட்டென்று ஆட்டி விட்டது.

இந்த முறை மறுபடியும் கு. கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் ... வந்தால் என்ன, வர மாட்டார்கள். நினைத்தாலே குலை நடுங்குகிறது.

எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, 'அப்பீட்' என்று சொல்லி அவர்களால் ஆட்டத்தை விட்டுச் 'சுருட்டிய வரை போதும்' என்று ஒரே ஓட்டமாக ஓடி விடவும் முடியாதல்லவா?

ஆட்சியை விட்டு விலகும் நாளன்று கூட ஈராக்கிலிருந்து மிலிட்டரியைத் திரும்பப் பெறுவதாக எந்த விதமான உத்தேசமும் இல்லை புஷ்ஷாசுரருக்கு. அது வரை ஏதாவது சால்ஜாப்பு சொல்லிக்கொண்டு காலத்தை ஓட்டியாக வேண்டுமே!

"தேடிச் சோறு தினந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி ..." அன்னார் வாழ்க்கை ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.

ஆனால், குடியரசுக் கட்சியின் திவால் நிலைமை புரிந்து, அதன் சார்பாகக் களத்திலிருந்த நியூயார்க் கவர்னர் ரூடி ஜூலியானி போட்டியிலிருந்து விலகி விட்டார். புத்திசாலி. மைக் ஹக்கபீ, மிட் ராம்னி -இருவருக்கும் கணிசமான சரிவுகள். அநேகமாக செனட்டர் மெக்கெய்னுக்கு அந்த சான்ஸ் அடிக்கலாம். புஷ்ஷை மாதிரியே சொதப்பல் ஆசாமியாக இருந்தாலும், யாரையாவது வேட்பாளராக ஒரு பிரம்மஹத்தியையாவது நிறுத்தியாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.

சரி, எதிர்க் கட்சியில் என்ன நடக்கிறது?

ஜனநாயகக் கட்சியின் சார்பாக பாரக் ஒபாமாவா அல்லது ஹில்லரி கிளிண்டனா என்கிற முடிச்சு வருகின்ற செவ்வாயன்று (ஃபிப். 5, 2008) அவிழ்ந்து விடும். கறுப்பர் இனத்தைச் சேர்ந்த சமாதான வெள்ளைப் புறாவா அல்லது 'பழைய குருடி கதவைத் திறடி' கேஸான கிளிண்டன் மாமியா?

லாஸ் ஏஞ்சல்ஸின் 'கோடக் அரங்க'த்தில் இன்றைய மாலை இவர்கள் இருவருக்கும் இடையேயான பேட்டிப் போட்டி நடந்து முடிந்தது.

டெலிவிஷனில் பிரமாதப்படுத்தினார்கள்.

சரி, பேட்டி எப்படி இருந்தது?

பியர்ஸ் ப்ராஸ்னனென்ன, ஸ்பீல்பர்கென்ன, லோக்கல் அரசியல் புள்ளிகளென்ன, ஹாலிவுட்டின் பிரபலங்கள் அரங்கத்தில் புடைசூழ நடந்தேறிய 1 1/2 மணி நேரப் போட்டியில், கடந்த சில வாரங்களில் இவர்களிடையே நடந்தேறிய சகதி வீச்சுகள் இல்லை. இரண்டு பேருமே இறுதிச் சுற்றில் இருப்பதால், ஜனநாயகக் கட்சிக்கு நாடெங்குமே தார்மீக ஆதரவு பெருகி இருப்பதால், 'நீங்க பிரசிடெண்டா வ்ந்தாக்கூட நானு வைஸ் பிரசிடெண்டா வாரத்துக்கு சான்ஸ் ரொம்ப அதிகம்' என்று இருவருமே உணர்ந்திருந்ததும் ஒரு பெரிய காரணம்.

"எட்டு வருஷமா நான் அந்தாத்திலே குப்பை கொட்டி இருக்கேனாக்கும. எல்லா பாத்ரூமும் எனக்கு அத்துபடியாக்கும்" என்கிற பெருமை அம்மாவின் பேச்சில் எதிரொலித்தாலும், ஹில்லரிக்கு சாதனைகள் ஏதுமில்லை. 'ஈராக் போரை முதலில் ஆதரித்தவர்' என்கிற முத்திரையை அவரால் அழிக்கவே முடியாது. "அப்பால புஷ்ஷு மாமா தான் அழிச்சாட்டியம் பண்ணிட்டாரு, நானு என்னத்தச் சொல்ல" என்கிற ஒப்பாரி படித்த அமெரிக்கர்களிடன் செல்லுபடி ஆகாது. அதற்காக அமெரிக்கர்களிடம், ஈராக்கியரிடம், அகில உலகிடம், ஹில்லரி மன்னிப்பு கேட்கக்கூடத் த்யாரில்லை என்பது வேதனை.

எப்படிப்பட அநியாயப் போர்? 4000 அமெரிக்கர்கள் செத்துப் போனார்களாம். 40000 பேர்கள் முடமாம். பத்து லட்சம் ஈராக்கியரை அழித்து விட்டதாக அமெர்க்காவே ஒப்புக் கொள்கிறது. படிக்கும்போதே நெஞ்சு பதறவில்லை?

அதற்கு மாறாக, "ஆரம்பத்தில் இருந்தே இந்த ஈராக் யுத்தம் தப்பானது. இது அழிவை நோக்கித்தான் நம்மை இட்டுச் செல்லும. நான் இதை ஆதரிக்க முடியாது்" என்று விபீடணனாய் கம்பீராமாக முழங்கிய பாரக் ஒபாமாவை கென்னடியின் மொத்தக் குடும்பமும் சென்ற வாரம் ஆதரித்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க செய்தி.

இந்தப் போட்டியின் அடிநாதம் தான் என்ன?

மிஸஸ். கிளிண்டன் ஒரு வெள்ளைக்காரி. பாரக் ஒபாமா கறுப்பர் இனத்தவர்.

இது வரை அமெரிக்க சரித்திரத்தில் ஒரு பெண்மணியோ, ஒரு கறுப்பர் இனாத்தவரோ அதிபராக இருந்தது இல்லை. அவர்க்ளால் அதை நினைத்துப் பார்க்கவும் முடிந்ததில்லை. ஊருக்கெல்லாம் உபதேசம் பண்ணினாலும் அமெரிக்கர்களால் நிறவெறி இல்லாமல் இருக்க முடிந்ததில்லை.

ஆனால் உலகம் மாறி வருகிறது. அமெரிக்காவும் கொஞ்சம் மாறி இருக்கிறது. அமெரிக்க இளம் சந்ததியினர் இது குறித்து- இந்த அநியாயப் போர் குறித்து- மிகவும் வருந்துகிறார்கள்.

இரண்டில், ஏதோ ஒன்று இப்போது நடந்தே தீரும்.

நடப்பது நல்லதாக இருக்கட்டும்!

"ஒபாமாவின் வழிமுறைகளில் நான் பழைய ஜான் கென்னடியைக் காண்கிறேன்" என்று கென்னடி வம்சாவளியினர் சென்ற வாரம் சொன்னதை மறந்து விடாதீர்கள்..

வருகின்ற செவ்வாயன்று செனட்டர் ஒபாமா, ஜனநாயகக் கட்சியின் அபேட்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், கென்னடியின் ஆத்மா சாந்தி பெறும்.

அமெரிக்காவுக்கும், அகில உலகுக்கும் நல்லது நடக்கும்.

நடக்குமா?

=லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Saturday, January 05, 2008

அமெரிக்க அரசியல் 2008 (1)

அமெரிக்க அரசியலில் எத்தனையோ அழுகுணி ஆட்டங்கள் நடப்பது அன்றாட நிகழ்வுதான்,

ரிபப்ளிகன், டெமாக்ரடிக் கட்சிகளில் உட்கட்சி அசிங்கங்கள் அரங்கேறாத நாளே இல்லை எனலாம்.

சமீப காலங்களில அமெரிக்க வெளியுறவுத்துறை நிகழ்த்தியுள்ள அவலங்கள் கணக்கில் அடங்காதவை.

'க்யூபா அதிபர் காஸ்ட்ரோவைக் கொல்ல 638 எளிய முறைகள்' என்கிற புத்தகத்தில் அமெரிக்காவின் மானத்தை மானாவாரியாக வாங்கி வெயிலில் உலர்த்துவார்கள். படித்துப் பாருங்கள்.

வாஷிங்டனில் ரிமோட் ஸ்விட்சை இயக்கியபடி பாகிஸ்தானில் அமெரிக்கர்கள் அடிக்கும் கொட்டத்துக்கும் எல்லையே இல்லை. என்ன தான் நமக்கு எதிரி நாடாக இருந்தாலும், பாகிஸ்தான் நமக்கு அண்டை நாடு. பாகிஸ்தானின் அணுகுண்டுகளை எப்படி 'நாம்' எடுத்து, எங்கே, எப்படிப் பூட்டி வைக்க வேண்டும் என்று அமெரிக்கர்கள் ஓப்பனாகக் கணக்குப் போடுவது ரொம்ப ஓவர், இல்லையா?

'ஆஃபகானிஸ்தான் தாலிப்ன்களை ஒடுக்குவதற்காக மட்டுமே' என்று சொல்லப்பட்டுக் கொடுக்கப்ப்ட்ட பல பில்லியன்களை அதிபர் முஷாரஃப் இந்தியாவுக்கு எதிராகத் தான் பயன்படுத்தினார் என்று அமெரிக்கர்களே இப்போது ஒப்புக் கொள்கிறார்கள். இதைத்தானே ஐயா நாங்கள் பத்து வருஷங்களாய்க் கரடியாய்க் கத்திக் கத்திச் சொல்லுகிறோம். அப்போதெல்லாம் உங்கள் காதில் எதை ஊற்றி அடைத்துக் கொண்டிருந்தீர்கள்? உங்களுக்கு ப்ரூஃப் காட்டிக் காட்டியே இந்திய உளவுத்துறை அலுத்துப் போய் விட்டது.

'அல் கொய்தா', 'தாலிபன்' எல்லாவற்றையும் ஆரம்ப காலத்தில் கொஞ்சோ கொஞ்சென்று தோளில் தூக்கிக் கொஞ்சி, நிலா காட்டி, டாலர் டாலராய்ச் சோறூட்டி வளர்த்து விட்டது அமெரிக்க உளவு நிறுவனங்கள் தான். அப்புறமாக 'தும்பை விட்டு வாலைப் புடிடா வாலிபப் பட்டா' என்று அதே இயக்கங்களை நசுக்கி விட பில்லியன்களைச் செலவழித்து எல்லோர் வயிற்றெரிச்ச்லையும் வாங்கிக் கட்டிக் கொள்வதும் அமெரிக்க வாடிக்கை.

ஆனாலும், எங்கே என்ன நடந்தாலும், சரியான நேரத்தில், சரியான முறைப்படி தேர்தல்களை நடத்தி முடிப்பதில், அமெரிக்கர்கள் சமர்த்தர்கள் தான் என்பதை மறுப்பதற்கில்லை.

'அம்மாவை விட்டால் அய்யா, அய்யாவை விட்டால் மறுபடி அம்மா' என்கிற தமிழ்நாட்டு சுழல் இங்கேயும்- இவர்கள் இல்லாவிட்டால் அவர்கள், அவர்கள் இல்லாவிட்டால் இவர்கள் என்று- அடிப்பது மறக்க முடியாதது,

எட்டப்ப சூழ்ச்சியில் ஏகப்பட்ட ஃப்ராடுகளைப் பண்ணி ஆட்சியைப் பிடித்து, எட்டு வருஷங்கள் ஆண்டு(!) நாட்டைக் குட்டிச்சுவர் ஆக்கி, அகில உலக அளவில் அமெரிக்காவுக்கு ஏகப்பட்ட எதி்ரிகளைச் சம்பாதித்து வைத்திருப்பது புஷ்ஷின் குடியரசுக் கட்சியின் பலவீனம். வெளிநாடுகளில் அவமானங்கள், உள்நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம், சர்வதேச சந்தையில் டாலரின் வீழ்ச்சி, வியாபாரத்தில் மந்தகதி, பட்ஜெட் பற்றாக்குறை, மாசுபட்ட சுற்றுச்சூழல், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு என்று புஷ்ஷின் மகுடத்தில் பதிக்கவேண்டிய நவரத்தினக் கற்கள் ஒன்றா, இரண்டா?!

அப்படியென்றால், ஜனநாயகக் கட்சி அசால்ட்டாக வெற்றி பெற வேண்டும். இல்லையா?

ஆனால் அவர்களும் அசமஞ்சமாகத் தான் இருக்கிறார்களோ என்கிற ஐயம் அமெரிக்கர்களுக்குள் எழாமல் இல்லை.

தற்போதைய ஜனநாயக்க கட்சியை எடுத்துக் கொண்டால், முன்னணி நட்சத்திரங்கள் என்று பார்த்தால் திருமதி. கிளிண்டனும், திருவாளர் பாரக் ஒபாமாவும் தான் ஃப்ரண்ட்ரன்னர்ஸ்.

இதில, ஹில்லரிக்குப் பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக நான் என்றுமே நம்பியது இல்லை. "ஹும்ம். எத்தனை ரூம்கள்! பார்த்துப் பார்த்து நாம் துடைத்து வைத்துக் கொண்டிருந்த வெள்ளை மாளிகையில் இன்னும் கொஞ்சம் நாளாவது மறுபடியும் குடியிருக்க முடியாதா?" என்று அம்மணி சுகபோகத்துக்கு ஏங்கினாலும் அதற்கு உண்டான அசகாயசூரத்தனங்களோ, அலாதியான அரசியல் புத்தி சாதுரியங்களோ அவ்விடம் சுத்தமாக இல்லை. 'மிஸஸ். கிளிண்டன்' என்பதைத் தவிர ஹில்லரி மாமியிடம் விசேஷம் ஒன்றுமில்லை.

ஆத்துக்காரருக்கும் அது நன்றாகத் தெரியுமென்றாலும், வெளிப்படையாக அதைச் சொன்னால், உள்வீட்டுக் கொந்தளிப்பு ஏற்படுமென்பதால், கிளிண்டன் மாமா அவ்வப்போது மனைவிக்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்டு விட்டுக் காணாமல் போய் விடுகிறார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. மத்தியானம் மூன்று மணிக்கு சூடாக ஒரு பஜ்ஜியோ, டிகிரி காஃபியோ போட்டுத் தராமல், வெளியூரில் அரசியல் பண்ணுகிறேன் பேர்வழி என்று அம்மா ஐயொவா, அரிஸோனா என்று டூர் போனால், அய்யா, பாவம், என்னதான் பண்ணுவார்?

ஐயொவா ஒரு ஆரம்பம் தான் என்றாலும், அங்கே ஒபாமா பெற்றிருக்கும் வெற்றியைக் குறைத்து மதிப்பிட முடியாது. வெள்ளையரல்லாத ஒருவராய் இருந்தாலும் அவருக்கு கணிசமான அளவில் வெள்ளை ஓட்டுகள் விழுந்திருக்கின்றன.

மீண்டும் அமெரிக்காவில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் சுடர் விடுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

பழசை எல்லாம் மறந்து விடவும் கூடாது. எட்டு வருட முன்பு Al Gore கூட இப்படிப்பட்ட ஒரு ந. ந. வாகத்தான் பிரகாசித்தார். ஆனால் புஷ் அண்ட் கம்பெனி எத்தனை கபட நாடகங்கள் ஆடி அவரையும், அமெரிக்க மக்களையும் கவிழ்த்துப் போட்டார்கள்!

இன்னமும் நியுஹாம்ப்ஷைர், ஃப்ளோரிடா, மிச்சிகன் நெவாடா என்று பலப்பல சோதனைகள் ஒபாமாவுக்கு இருக்கின்றன.

ஐயொவாவில் வெற்றி பெற்ற பிறகு ஒபாமா பேசிய பேச்சை நான் கவனித்தேன். கிளிப்பிள்ளை மாதிரி மற்ற எல்லோரும் அபத்தமாக ஏதோ பிதற்றிக் கொண்டிருக்கையில், ஒபாமாவின் பேச்சு எனக்குக் கென்னடியையும், மார்ட்டின் லூதர் கிங்கையும் ஒரே நேரத்தில் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது.

ஒபாமாவின் பேச்சில் காந்தியடிகளின் சத்தியம் தெறிக்கிறது,

"ஏதேது, முட்டாள் ஜ்னாதிபதிகளிலிருந்து அமெரிக்கர்களுக்குக் கூட விடிவு காலம் பிறந்து விடும் போலிருக்கிறதே!" என்று நான் சந்தோஷப்பட ஆரம்பித்திருக்கிறேன்.

என் கனவு மெய்ப்படவேண்டும்!

Tuesday, January 01, 2008

ஹாப்பி நியூ இயர் அண்ட் ய ப்ராமிஸ்!

அன்புள்ள இணைய நண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!

மூன்று வார காலம் ஆஸ்திரேலியாவைச் சுற்றி வலம் வந்தபிறகு இரண்டு நாட்கள் முன்பு தான் 'எல்லே' எல்லையில் வந்திறங்கினேன்.

கொஞ்சம் ஜெட் லாக், ஆஸ்திரேலியாவில் அலைந்த களைப்பு, புத்தாண்டு பிறக்கையில் மாலிபு கோவில் மிட்நைட் விசிட் என்று கலந்து கட்டியாக 2008 பிறந்திருக்கிறது.

'இந்த வருஷமாவது ஒழுங்காக உங்கள் ப்ளாக்கில் அடிக்கடி எழுதுங்கள்' என்று என் ரசிகச் செல்லங்கள் அன்புக் கட்டளை போட்டு மிரட்டி இருப்பதால் ஜனவரி 1-ம் தேதியே இந்தப் போஸ்டிங்!

2008 உங்களுக்கும் எனக்கும் பிரமாதமாக இருக்கப் போகிறது, பாருங்கள்!

ஃப்ளைட்டில் படித்து முடித்த 'Living with the Himalayan Masters' பற்றிச் சொல்லவா?

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்