என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, July 08, 2005

லண்டன் ப்ரிட்ஜ் ஈஸ் ஃபாலிங் டௌன்

அமெரிக்க அதிபர் புஷ்ஷின்பால் எனக்குள்ள ஈர்ப்பு 'அமெரிக்க அரசியல்' தொடர் வாசகர்களுக்கு நன்றாகவே தெரியும். அரேபிய வளைகுடா நாடுகளின் எண்ணெய் வளத்தைக் கொள்ளை அடிப்பதற்காகவே ஒரு யுத்தத்தை ஆரம்பித்து நடத்தி வருவதற்கு எந்த அளவுக்கு 'ஜார்ஜ் புஷ் அண்ட் கம்பெனி' காரணமோ அதே அளவுக்கு டோனி ப்ளேரும் காரணம்.

தனி ஒரு நாடாக அமெரிக்கா தன் தீவிரவாதத் தாக்குதலை ஈராக் மற்றும் ஆஃகானிஸ்தான் மீது ஆரம்பித்தபோது, இந்தியா உட்படப் பல மனச்சாட்சி உள்ள உலக நாடுகள் அந்த அநியாயத்திற்குத் துணை போக மறுத்தபோது, கொஞ்சம் கூட வெட்கமோ, தன்மானமோ இல்லாமல் புஷ்ஷுக்கு முதல் துதி பாடி நின்றவர் தான் டோனி ப்ளேர். வெள்ளைக்காரர்களே வெட்கும் அளவுக்குப் புஷ்ஷின் அடிவருடியாகவும் ஒரே பலத்த சப்போர்ட்டராகவும் தன்னைப் பறை சாற்றிக்கொண்ட பிரிட்டனின் முதல் அமைச்சர் தான் இந்தச் சமீபத்திய லண்டன் தாக்குதல்களுக்கும் பதில் சொல்லவேண்டும்.

ஈராக்கில் பிரச்னை இருந்தது. இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் அதை மையப்படுத்தி, 'சதாம் ஹுசேன் அணுகுண்டு வைத்திருக்கிறார், ஹைட்ரஜன் குண்டை நாளை மறுநாள் வெடிக்கப் போகிறார்' என்றெல்லாம் கோயபல்ஸ் ரேஞ்சுக்கு அமெரிக்கா 'குண்டு' போட்டு ஆகாசப் புளுகுகளை அள்ளி அள்ளி விட்டுக் கொண்டிருந்தபோது, 'ஆமாஞ்சாமி' போட்ட முதல் நாடு பிரிட்டன்.

'உலகப் பேரழிவு ஆயுதங்களை இவர் எங்கே அய்யா ஒளித்து வைத்திருக்கிறார்?' என்று ஒரு ஒப்புக்குக் கூட அமெரிக்காவிடம் கேட்காமல் காது கிழிய ஜால்ரா தட்டியது பிரிட்டனின் முதல் அமைச்சர். இந்த ஓவர் ஜால்ரா சத்தம் உச்ச ஸ்தாயிக்குப் போய் ஒரு கட்டத்தில் புஷ்ஷுக்கே கொஞ்சம் சங்கடமாகக் கூட இருந்தது. 'அட நாம என்ன பண்ணினாலும் தட்டிக் கேட்க மாட்டாங்க போல இருக்கே?' என்று கூட அவர் நினைத்திருக்கலாம். ஃப்ரான்சும், ஜெர்மனியும் தட்டிக் கேட்டன. பகிரங்கமாகவே பல கேள்விகளையும் கேட்டன. பிரிட்டன் அவர்களிடமிருந்தும் தனித்தே நின்றது.

பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரின் பல டிரில்லியன் டாலர் முதலீடுகள் அமெரிக்காவில் இருப்பதால் கூட பிரிட்டன் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம் என்று நான் நம்புகிறேன். எது எப்படியோ, அதற்கான பின் விளைவுகளப் பாவம், அப்பாவி மக்கள் அனுபவிக்கிறார்கள்.

லாஸ் ஏஞ்சல்ஸ் மாலிபு கோவிலில் ஒரு முறை தேர்தல் ஒன்று நடந்தது. பிரபல மருத்துவர் ஒருவர் தன் தீர்மானத்தை வாசிக்க எழுந்தவுடனேயே, 'அது என்ன தீர்மானம்? எதைப்பற்றி?'' என்று கூடத் தெரிந்து கொள்ளாமல், அன்னாரின் அடிவருடி ஒருவர் துள்ளி எழுந்து, "ஐ செகண்ட் இட்!" என்றார். அரங்கமே 'கொல்'லென்று சிரித்தது. கிட்டத்தட்ட அந்த அடிவருடிக்கு டோனி ப்ளேருக்கும் வித்தியாசமே இல்லை. அமெரிக்கா ஐ. நாவில் எதைச் சொல்ல எழுந்தாலும் அது பிரிட்டனால் வழி மொழியப்பட்டது.

தீவிரவாதத்துக்குப் பதில் தீவிரவாதம் இல்லை தான். கொலைக்குப் பதில் கொலை இல்லை தான். இருந்தாலும், அப்படிப்பட்ட தீவிரவாதிகளை வளர்த்து விட்ட பொறுப்பு புஷ்ஷுக்கும் ப்ளேருக்கும் மட்டுமே.

லண்டனில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்காக டோனி ப்ளேர் தனிப்பட்ட முறையில் எவ்வளவு தூரம் வருந்தினார் என்பது தெரியவில்லை. ஈராக், ஆஃகானிஸ்தான் சகதியில் அமெரிக்கர்களுக்குத் தோள் கொடுத்த பாவத்துக்காக, அந்த அநியாயத்தை இன்னமும் தொடர்வதற்காக, பிரிட்டிஷ்காரர்கள் கொஞ்சமேனும் வருந்துவார்கள் என்பது நிச்சயம்.

No comments: