என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Thursday, December 31, 2009

ஹாப்பி நியூ இயர் 2010 !

நண்பர்களே,

உங்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!

சிகரெட்டை விட்டு விடுவது, சினிமாவே பார்க்காமல் இருப்பது, தண்ணியடிக்காமல் இருப்பது, தினமும் ஆயிரத்தெட்டு ஸ்ரீராமநாம ஜெபம், வெயிட்டைக் குறைத்தே தீருவது, அவளை மறந்தே தீருவது, அவன் கைத்தலம் பற்றியே தீருவது, ஒரு வேலை பார்த்தே தீருவது, சேவிங்க்ஸ் அக்கவுண்டில் கணிசமான தொகையை ஏற்றுவது என்று ஆளாளுக்கு எக்கச்சக்கமான புத்தாண்டு பிளான்கள், நம்பிக்கைகள் வைத்திருப்பீர்கள்.

எல்லாம் நல்லபடியாக நிறைவேற என் அன்பான வாழ்த்துகள்!

சொதப்பல் வேலைகள், சோம்பேறித்தனம் எல்லாவற்ரையும் தூக்கிக் கடாசிவிட்டுப் புத்தாண்டில் நான் நிறைய எழுதப் போகிறேன்! 'தினம் ஒரு வதை' என்று தினமும் ஒரு கதை எழுதலாமா என்று கூட ஒரு உத்தேசம்!

நடக்கக் கூடியதை மட்டுமே நினைத்துப் பார்க்க நான் என்னைப் பழக்கிக் கொண்டுவிட்டேன். நீங்க எப்படி?!

ஹாப்பி நியூ இயர் 2010!

Tuesday, November 10, 2009

சொல்லித் தெரிவதில்லை ......!

(2009 நியூ யார்க் தமிழ் சங்க விழா மலருக்காக எழுதியது)

பச்சை அட்டையோ, கள்ளத் தோணியோ, ஆந்திராவிலிருந்து போலி விசாவோ, எப்படியோ அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தாயிற்று. ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்த, அவர் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்த’ இந்தியாவை விட்டு வெளியே வந்தாயிற்று.

அப்பாடா!

பீச்சாங்கரையில் மட்டுமன்றி எங்கே வேண்டுமானாலும் சர்வ சுதந்திரமாகத் திரியும் ஜாஜ்வல்ய அம்மணமணிகள், பதினாறு லேன் ஹைவேக்கள், பதினெட்டு வீல் டிரெய்லர்களில் ஏகப்பட்ட கார்கள், விண்ணை முட்டி மேகங்களில் மறையும் கட்டிடங்கள் என்று எல்லாவற்றையும் ‘ஹா’வென்று வாய் பிளந்து, எச்சில் வழிந்து வியந்து பார்த்து முடித்தாயிற்று.

இலைதழை சாண்ட்விச்சுக்கும், வெஜிபர்கருக்கும், ஸ்பகெட்டிக்கும், பீட்சாவிற்கும் நாக்கைப் பழக்கிக் கொண்டாயிற்று. கொஞ்சம் கஷ்டப்பட்டால், அட, அமெரிக்க ஆக்செண்ட் கூட அவ்வளவு கஷ்டமாகத் தெரியவில்லையே! ஆரம்ப காலத்தில் புது டாலர் நோட்டைக் கொடுத்து ஒரே ஒரு ‘கோக்’ வாங்கும்போது கை இழுத்துக் கொள்ளும். 15% டிப்ஸ் என்றால் மார்வலியே வரும். அந்த மரண வலியெல்லாம் நாளாவட்டத்தில் மறத்துப் போய் நாமும் அமெரிக்கப் பழக்க வழக்கங்களில் ஊறிப்போய் விட்டோம். கொஞ்சம் கொஞ்சமாக பேஸ்பால், பாஸ்கெட்பால், ஃபுட்பால் என்று எல்லாவற்றிலுமே நாமும் கிட்டத்தட்ட அமெரிக்கர்களாகவே ஆகி விட்டோம் என்று உணர்கிறீர்களா?

அது தான் இல்லை!

அவ்வப்போது அடிநாக்கு சூடான ஒரு சரவணபவன் காஃபிக்கும், சுடச்சுட ஒரு ப்ளேட் மைசூர் போண்டாவுக்கும் ஏங்குவதை நம்மால் மறுக்க முடியுமா? ஆபீசில் திருட்டுத்தனமாக யூட்பிலோ திருட்டு விசிடியிலோ ஒரு வடிவேலு-விவேக் காமெடி பார்த்து விழுந்து விழுந்து சிரிக்காமல் இருக்க நம்மால் முடியவில்லையே! தீபாவளி, பொங்கல் என்று பண்டிகை நாட்கள் வந்தால், அடி வயிற்றில் ஒரு ‘எம்ப்டி’ உணர்வுடன், சோகமாக ஆஃபீஸ் போக நேர்கையில் மனசு என்ன பாடுபடுகிறது? சே, என்னடா இந்த அமெரிக்க வாழ்க்கை!

‘What is Deepavali, dad?” என்று பையன் கேட்டால், அணுகுண்டு வெடிச்சத்தத்தையும், புத்தாடை சந்தோஷங்களையும், புது சினிமா கலகலப்பையும், நண்பர்களுடனான கொண்டாட்டங்களையும் நம்மால் வார்த்தைகளில் அவ்வளவு சுலபமாக விவரித்து விட முடிகிறதா?

அதை விடுங்கள், “Narakasura was killed by Lord Narayana in the year 50,000 BC. Can I have tomorrow off to celebrate that?” என்று உங்களால் உங்கள் மேலதிகாரியிடம் கேட்டு விட முடியுமா? வெள்ளைக்கார அசுரன் நம்மை உடனே பஸ்பமாக்கி விடமாட்டானா?

இங்கேயும் இல்லாமல் அங்கேயும் இல்லாமல் நம்மையும் அறியாமல் NRI-களாகிய நாம் ஒரு விநோத பிராணிகளாக ஆகி வருகிறோம் என்பதே நிதர்சனம். ஒரிஜினல் தலப்பா கட்டுப் பிரியாணிகளாகவும் இல்லாமல ஹைதராபாத் பிரியாணிகளாகவும் இல்லாமல் நாம் ஒரு தக்காணாமுட்டி ஃபாரின் ஊசல் பிரியாணிகளாகி விட்டோம் என்பதே உண்மை!

உண்மை சுடுமல்லவா? என்னையும் அது ஒரு தடவை மிகவும் சுட்டுப் பாடாய்ப் படுத்தியது, அந்த ரோஷத்தில் நானும் “அமெரிக்காவுடைய சங்காத்தமே இனி வேண்டாம், பேசாமல் மூட்டையைக் கட்டிக்கொண்டு தாய்நாட்டிற்கே திரும்பப் போய், அன்னைத் தமிழுக்கே தொண்டு செய்து, பச்சைத் தமிழனாகவே இனிமேல் வாழ்வது” என்று முழு ஜுரத்தில் ஜன்னி கண்ட மாதிரி பிதற்றிக் கொண்டு, கூடவே குடும்பத்தாரையும் ‘தர தர’வென்று ஏர்போர்ட்டுக்கு இழுத்துக்கொண்டு சென்னையில் போய் இறங்கினேன். மனைவி, மக்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் என்று யார் பேச்சையும் நான் கேட்பதாயில்லை. பிறந்த பொன்நாட்டுப் பற்றின் உச்சகட்டத்தில் நான் பிதற்றிக் கொண்டிருந்த நேரம் அது. எந்த மருந்துக்குமே அது சரிப்படுவதாய் இல்லை.

“பசங்களுக்கு ஸ்கூல்?” என்று பதறிய மனையாளைத் தடுத்து நிறுத்தினேன். “நாமெல்லாம் அங்கே படித்து ஆளாகவில்லையா? இதெல்லாம் ஒரு பிரச்னையா? அப்துல் கலாம் கார்பரேஷன் ஸ்கூலில் படிக்கவில்லையா?”

“தங்குவதற்கு வீடு?” என்று அம்மா பயந்தாள். “தனியொருவனுக்கு வீடில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்று தைரியமாக பாரதியை ‘மிஸ்கோட்’ பண்ணினேன். அம்மா தலையில் அடித்துக்கொண்டு எனக்காக வேப்பிலை தேடினாள்.

“உத்யோகம் புருஷ லட்சணமல்லவா? அங்கே போய் என்ன வேலை செய்வதாக உத்தேசம்?” என்று என்னை மடக்கப் பார்த்தார்கள் என் உறவினர்.

நானா அதற்கெல்லாம் மசிவேன்?

“ஆலைகள் செய்வோம், கல்விச் சாலைகள் செய்வோம்! தேவையானால், புத்தம் புது கணினிச் சோலைகள் செய்வோம்” என்று நான் ஆரம்பித்தவுடன் அத்தனை பேரும் ஓடியே போய் விட்டார்கள்.

ஆனால் …. விஜய் டீவியில் கோபிநாத் ஸ்டைலாக இழுத்துச் சொல்வது போல் ‘நடந்தது ….. என்ன?’

முதலில், ‘வீடுதேடு படலம்’!

ஆரம்பத்தில் தனி வீடாகத்தான் பார்க்கத் தொடங்கினோம். ஊருக்கு வெளியே, காற்றோட்டமாக, தோட்டம், துரவு என்று இயற்கை அன்னையின் எழில் கொஞ்சும் இடமாகப் பார்ப்பதாகத்தான் ஐடியா.

ஆனால், அவுட்ஹவுஸ் கக்கூஸ் மாதிரி தம்மாத்துண்டு வீட்டை வைத்துக்கொண்டு வீட்டுக்காரர்கள் எங்களைப் படுத்திய பாடு இருக்கிறதே, அதைச் சொல்லி மாளாது. எனக்கே மறந்து போயிருந்த என் ஜாதி, குலம், கோத்திரம் எல்லாவற்றையும் தோண்டித் துறுவி தீர விசாரித்தார்கள். என் முன்னோர்கள் கைபர் கணவாய் வழியாக வந்தார்களா? ஏன் வங்காள விரிகுடா வழியாக நீந்தி வரவில்லை? சிப்பாய் கலகத்தில் பங்கு பெற்றவர்களா? தெலுங்கு கலப்பில்லாத தமிழர்களென்றால், மதுரை சங்கத் தமிழர்களா அல்லது அதற்கும் முந்தைய லெமூரிய கண்ட சங்கத் தமிழர்களா? உங்க வீட்ல மாறாப்பை இப்படிப் போடுவாங்களா அல்லது அப்படிப் போடுவாங்களா? நாமமா, பட்டையா, குடுமியா, கருப்புச் சட்டையா?” கவிச்சி சமைப்பீங்களா இல்லாட்டி வெறுமனே சாப்பிட மட்டும் தான் செய்வீங்களா? அதையும் ஹோட்டலிலேயே சாப்பிடுவீங்களா இல்லாட்டி வீட்டுக்கு எடுத்தாந்து இங்க சாப்பிடுவீங்களா?” என்றெல்லாம் விதம் விதமாகக் கேட்டு முடித்து, ”அய்ய, நீங்க அவிங்களா? அது நமக்கு சரிப்பட்டு வராதுங்களே!”

‘இவன் கிடக்கிறான் பிசாத்து. இன்னும் பிரம்மாண்டமான வீடு காட்டுகிறேன்’ என்று புரோக்கர் எங்களை வேறு இடத்துக்கு இழுத்துச் சென்றார்.

நிஜமாகவே பெரிய வீடுதான். வீடும் புதிது மாதிரி தான் தெரிந்தது. ஆனால் வீட்டுக்கு அப்ரோச்சே கிடையாது. “அதோ, அப்பால ரோட்டாண்ட காரை நிப்பாட்டிட்டுப் பொடி நடையா இந்த ஒத்தையடிப் பாதையில மடிச்சு மடிச்சு வந்தீங்கன்னாக்க ரொம்ப சுளுவுதாங்க”

“ரோட்டிலே விளக்கே இல்லியே, இருட்டிலே பாம்பு கடித்தால்?”- என் மனைவியின் பயம் நியாயமானது. பயத்தைக் காட்டிக் கொள்ளாமல் வீட்டுக்கு உள்ளே போன எனக்கு அதிர்ச்சி. வீடு பிரம்மாண்டமாக இருந்தாலும், வீட்டைச் சுற்றி உள்வட்டமாக பிரதானமாக ஓடிக்கொண்டிருந்தது ஒரு ஆல் ரவுண்ட் மேல் மாடி. ரூமெல்லாம் கிடையாது. ஒரே ஒரு பெரிய ஹால் மட்டுமே வீடு. இது சோழா ஆர்கிடெக்சரா, கலிங்கா ஸ்டைலா, பல்லவர் குகைக் கோயிலா? என்று நான் குழம்பிக் கொண்டிருந்தபோது ப்ரோக்கர் சொன்னார்: “காமெரா வைக்க சௌகரியமா கட்டி இருக்காங்க சார்” ஒஹோ, இது ஷூட்டிங்கிற்காகக் கட்டிய வீடா? அது தான் 256 ப்ரைமரி கலர்களிலும் குழைத்துக் குழைத்து எல்லா இடங்களிலும் மொசைக் கலர் வாந்தியாக இருக்கிறதா? எங்கள் எல்லோருக்குமே அந்த கலர் பேந்தாவால் தலை சுற்றல் வந்து விட்டது. ஒருவரை ஒருவர் கைத் தாங்கலாகப் பிடித்துக்கொண்டு மெதுவாக வெளியே வந்தோம்.

ஊருக்கு வெளியே தப்பித் தவறி எனக்கு இடம் எனக்குப் பிடித்துப் போனால், எருமை மாட்டு மந்தை, பன்றிக் கூட்டத்தையெல்லாம் தாண்டித் தாண்டி நான் வர மாட்டேன் என்று மக்கர் பண்ணுவாள் என் மனைவி. ஆடு, மாட்டையே பார்த்திராத என் குழந்தைகளுக்கு வீட்டுக்கு அருகேயே ஒரு மிருகக் காட்சி சாலை என்றால் ஒரே ஜாலி. ம்ஹும், அதற்கும் ஒரு பெரிய ‘நோ சான்ஸ்! சாணி, சகதி, ஈ மொய்க்கிறது, கொசு கடிக்கிறது, வீட்டு வாசலிலேயே பன்றிக் காய்ச்சலா? இது தேவையா நமக்கு?’

இயற்கை அன்னையின் மடி வேண்டாம், சுடுமென்று குடும்ப முடிவு செய்தோம்.

சரி, நகரத்துக்கு உள்ளேயே இடம் பார்க்கலாமென்று நந்தனம் அருகே ஒரு பெரிய ஃப்ளாட்டாகப் பார்த்தோம். கன்னா பின்னாவென்று வாடகை கேட்டாலும், இடம் சுமாராக இருந்தது. வீட்டுக்காரர் துபாயிலோ, சவுதியிலோ வேலை பார்ப்பதாகவும் சில நாட்கள் லீவில் வந்திருப்பதாகவும் சாதுவாகச் சொன்னார். அந்த வீட்டுக்காரம்மா மட்டும் எதற்கெடுத்தாலும் வேலைக்காரியிடம் எரிந்து விழுந்து கொண்டிருந்தாள். கூடவே ஒரு வயசாளி மாமனார் கிழம்- ஏதாவது வம்பு கிடைக்காதா என்று எங்கள் கூடவே தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. எவ்வளவோ எங்களை அனத்தினாலும், நாங்கள் அதிகமான வாடகைக்கு ஒப்புக்கொண்டிருந்ததால், வீடு படிந்து விடும் போலத்தான் தோன்றியது. பால் கூட காய்ச்சி சாப்பிட்டு விட்டோம். வீட்டை இன்னொரு முறை சுற்றிப் பார்க்கலாமென்று கிளம்பினேன். அந்த வயசாளிக் கிழமும் என்னோடு ஒட்டிக்கொண்டது. பேச்சுவாக்கில், “What is your daughter mad about?” என்று நான் அமெரிக்க ஆங்கிலத்தில் சாதாரணமாகக் கேட்டதை, அந்தக் கிழம் சரியாகப் புரிந்து கொள்ளாமல் உல்டா பண்ணி, தன் பெண்ணிடம் உடனே போய் “இந்த ஆள் உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்று சொல்கிறான்” என்று போட்டுக் கொடுத்து விட்டது. அவ்வளவு தான்! ஏற்கனவே முசுடியான அந்த பைபோலார் லூசு, “பால் காய்ச்சி விட்டாலும் பரவாயில்லை, பெருமாள் படத்தைத் தூக்கிக்கொண்டு கிளம்புங்கள்!” என்று எங்களை விரட்டி விட்டாள். நான் என்ன தப்பு பண்ணினேன் என்பது எனக்கு முதலில் புரியவில்லை. பிறகு தான் தெரிந்தது, என் அமெரிக்க ஆங்கிலப் பிரயோகம் அங்கே விளைவித்த வினை!

வாடகை வீடெல்லாம் வேண்டாம், சொந்தமாகவே ஒரு புது ஃப்ளாட் வாங்கி விடலாமென்ற ஞானோதயம் தோன்றியவுடன், பெசண்ட் நகர் பீச்சருகே ஒரு புது ஃப்ளாட்டைத் தேர்ந்தெடுத்தோம். “ஒரே மாசத்துல ஃப்ளாட் ரெடியாயிடும். அது வரைக்கும் மேல ஒரு சின்ன ஒன் பெட் ரூம் ஃப்ளாட்டில அத்தனை பேரும் தங்கிக்குங்க” என்ற பில்டரின் ஜீவகாருண்ய குணத்தை நாங்கள் வியந்தோம். அதாவது, நாட்டு நடப்பு, அரசியல், விலைவாசி ஏற்றம், சிமெண்ட், ஸ்டீல் விலை பற்றி தினமும் பேசிப்பேசியே அவர் வாராவாரம் வாடகையை ஏற்றிய லாகவமும், புது ஃப்ளாட்டின் தினந்தோறும் ஏற்றப்பட்ட விலை நிலவரமும் சரிவரப் புரியும் வரை.

என்ஆர்ஐ- என்று ஒருவன் வந்து சிட்டியில் இறங்கி விட்டால் பாங்க் மேனேஜர்களுக்கு எப்படித்தான் மூக்கில் வியர்க்குமோ! ‘அமெரிக்காவில் பாதியையாவது பெயர்த்துக் கையோடு எடுத்து வந்து விட்டிருப்பான் இவன்’ என்கிற நினைப்பில், எப்போது பார்த்தாலும் ‘டெபாசிட் குடுங்க’ என்கிற போன் கெஞ்சல்கள், எதிர்பாராத அதிகாலை, பின்னிரவு நேரங்களில் அதிரடி வீட்டு விஜயங்கள்!

காய்கறி வியாபாரி, கோவில் கும்பாபிஷேகம், அம்மனுக்குக் கஞ்சி, கிரைண்டர் சேல்ஸ்மேன், இஸ்திரி, பாங்க் மேனேஜர், பால்காரி, வாட்ச்மேன், டிரைவர், கேபிள் டீவி, பிச்சைக்காரன், பண்டிகை இனாம், வம்புக்கு அலையும் பக்கத்து ஃப்ளாட் மாமிகள் என்று எல்லோரும் மாற்றி மாற்றி விடாமல் தொடர்ந்து அடித்ததில் எங்கள் காலிங் பெல் கலகலத்துப் போய் ஒரே மாதத்தில் உயிரையே விட்டு விட்டது. அதற்கெல்லாம் யாரும் அசரவில்லை. ‘டங்டங்’கென்று எந்நேரமும் கதவை எல்லோரும் இடிக்க ஆரம்பித்து விட்டார்கள். ப்ளைவுட் கதவு வளைந்தே போய் விட்டது. ஓடி ஓடிப்போய் கதவைத் திறந்தே என் மனைவி ‘கிட்டத்தட்ட நெர்வஸ் ரெக்’ ரேஞ்சுக்கு வந்து விட்டாள். ரோட்டில் சைக்கிள் மணி அடிக்கும் சத்தம் கேட்டால் கூட இவள் எழுந்து வாசல் பக்கம் ஓட ஆரம்பித்தவுடன் எனக்கும் கவலையாகி விட்டது.

அமெரிக்காவில் சும்மா கலர் க்ரேயானால் கிறுக்கிக்கொண்டிருந்த குழந்தைகளுக்குக் கழுதை மூட்டையில் ஹோம் வொர்க்கா! நாங்கள் சரியாக சொல்லிக் கொடுப்பதில்லை என்று எங்களை டீச்சர் ஸ்கூலுக்கு வரச் சொன்னாளாம். எனக்கு மூன்றாம் வாய்ப்பாடே மறந்து போய் விட்டது. அங்கே மூன்றாம் வகுப்பிலேயே கால்குலஸ்!

சதா புரோக்கர்களின் அனத்தல், பாங்க் மேனேஜர்களின் புடுங்கல், கொசுக்கடி, மூட்டைப்பூச்சி, பள்ளிக்கூட வீட்டுப்பாட சுமை, தெருவெல்லாம் மூத்திர நாற்றம், மாடிப்படியெல்லாம் வெற்றிலை எச்சில் கறை, எதற்கெடுத்தாலும் லஞ்சம், அய்யோ, அய்யோ!

ஒரு சுபயோக சுபதினத்தில் யாருக்கும் சொல்லிக் கொள்ளாமல் நாங்கள் அமெரிக்காவுக்குத் திரும்பவும் ஓடியே வந்து விட்டோம்,

பரவாயில்லை சாமி, கொஞ்ச நாளைக்கு ‘ஸ்டார்பக்ஸ்’ காஃபியிலேயே சமாளித்துக் கொள்கிறேன்! பஜ்ஜி, சொஜ்ஜி, போண்டாவும் வேண்டாம், வெய்ட் போடுகிறது.

மன்மதக் கலை மட்டுமல்ல, வாழும் கலையும் சொல்லித் தெரிவதில்லை.

சூடு பட்டால் தான் தெரிகிறது!

Friday, October 16, 2009

தீபாவளி வாழ்த்துகள்!

அதிரடி வேட்டுச் சத்தம்
அரைகுறை எண்ணெய் குளியல்
சரசரக்கும் புத்தாடை
கசகசக்கும் வியர்வை

நமுத்துப்போன புஸ்வாணம்
அடுத்த வீட்டின் அதிகவெடிச் சத்தம்
ஆங்காங்கே கையில் சூடு
அழகான பெண்கள் கூட்டம்

கிடைக்காத 'ஆதவன்' டிக்கெட்
அயர்ச்சி தரும் 'வித்தியாசமான' படங்கள்
அலுக்கவைக்கும் வெட்டிமன்றம்
பழகிப்போன புதுமுகங்கள்

ட்விட்டரில் க்ரீட்டிங்ஸ்
நான்ஸ்டாப் செல்போன் ஒலி
அவ்வப்போது 'சாட்டிங்' க்ரீட்டிங்க்ஸ்
அலுக்காத நண்பர்கள் கூட்டம்

கொஞ்சூண்டு குட்டித் தூக்கம்
கொஞ்சமாய் அஜீரணம்
மறந்து விட்ட நரகாசுரன்
மறக்காமல் 'கங்கா ஸ்நானம்'!

விடியட்டும் நல்ல தீபாவளி 2009!


Friday, September 18, 2009

ட்விட்டர் ஒழிக!

மூன்று வாரமாக ஒரு பதிவும் போடவில்லை. இந்த பாழாய்போன ட்விட்டரால் நேரம் தான் விரயமாகிறது!

இது நவராத்திரி ஆரம்ப சீசன் என்பதால், ஆத்திர அவசரத்திற்கு, இங்கே இருக்கின்ற என் ஆர்கைவ்சில் 'அவாளோட ராவுகள்' படித்துக் கொண்டிருங்கள்.

வந்து விடுகிறேன்!

Tuesday, August 25, 2009

வைரஸ் கழுகு உட்காரவும், ஆசிரியப் பழம் ஒன்று விழவும் ...!


இது என்னுடைய 100 வது போஸ்ட் என்பதை இப்போதுதான் தற்செயலாக கவனிக்கிறேன்.

போஸ்டர் ஒட்ட, ஃப்ளெக்சி பேனர்கள் அடிக்க, கட்அவுட்கள் வைக்க, கலெக்ஷன் கல்லா பார்க்க, கோவில் கட்ட, குடம் குடமாய்ப் பால் அபிஷேகம் செய்து கொள்ள ... ஊஹும், எதற்குமே நேரம் இல்லை!

'யாம் பெற்ற இன்பம்' தொடரின் 7 வது அத்தியாயத்தில் சென்ற வருடத்திய திருமெய்ச்சூர் லலிதாம்பிகை கோவில் விசிட் பற்றி எழுத ஆரம்பிக்கின்ற நேரத்தில் தான் ஒரு அசரீரி கேட்டது:

"லலிதாம்பிகை பற்றி அப்புறமாக எழுதலாம். பல் தேய்க்காமல் அதெல்லாம் செய்யக்கூடாது. நான் அவளிடம் சொல்லிக் கொள்கிறேன். 'தமிழின் தனிப் பெரும் பத்திரிகை ஆஃபீசில் ஏதோ குழப்பம், இந்திரபுரி சைட்டில் ஏதோ பயங்கர வைரஸ் பிரச்னை' என்கிறார்களே, அதை முதலில் கவனி! " -சரஸ்வதி தேவியிடமிருந்தே வான் கட்டளை ஒன்று எனக்கு ட்விட்டரில் வந்து சேர்ந்தது!

கழுகார் ஸ்டைலில் சொல்வதென்றால்: சூடான பாதாம் பால், இஞ்சி மொறப்பா, மசாலா டீ, பிஸ்தா பருப்பு என்றெல்லாம் நியூசை விடத் தீனியே பிரதானம் என்றலையாமல் , என் எழுத்துக் கடமையே முக்கியம் என்று சொல்லி, றெக்கை விரித்தெழும்பி அவசர அவசரமாக சேதிகள் சேர்க்கலானேன்.

கிட்டத்தட்ட ஒரு வாரமாக விகடனின் பிரதான நெட் சைட் (www.vikatan.com) வைரஸ் அட்டாக்கால் முடங்கிக் கிடப்பது உண்மை. ஸ்நேகா மேட்டர் என்னாயிற்றென்று தெரியவில்லை, மதன் கார்ட்டூன் பார்க்கவில்லை, லூசுப் பையன் படிக்கவில்லை, யாருடையது இந்த வார தொப்புள் போட்டோ? தெரியவில்லை ... கவலையா இருக்காதோ, பின்னே?!

என்னவோ ஏதோ என்று பதைபதைத்து, சொல்ல வேண்டியவர்களுக்குச் சொன்னால், 'மூளை கேன்சருக்கு அமிர்தாஞ்சனத்தை சூடு பறக்க, அழுத்தித் தடவணும்' என்பது போல் எனக்கு அருள் வாக்காய்ச் சொல்லப்பட்ட பாட்டி வைத்தியங்கள்:

1. சார், நெருப்புநரி (firefox) யூஸ் பண்ணிப் பாருங்க, எல்லாம் சரியாப்போச்சு. பிரச்னை ஓடியே போயிட்டுது. எல்லாம் சுபம், வணக்கம்!

2. ஒரு தடவை கூகிள் க்ரோம் முகர்ந்து பார்த்துட்டு ஈர வேட்டியோட வேப்பிலை கட்டிக்கிட்டு எட்டி எட்டிப் பாருங்க, சைட் நல்லா தெரியுது! ஓக்கேவா, வர்ட்டா?

3. குளிக்காம பத்து டாலரை மஞ்சள் துணியில முடிஞ்சு வைச்சுகிட்டு, லேப்டாப்போட பின்பக்கமாவே நடந்து பூ மிதிங்க. எல்லாம் போகப்போக சரியாயிடும்!

ஊஹூம். எந்த வைத்தியமும் எடுபடவில்லை.

"என்னை மீறி, என் 'வைரஸ் வார்னிங்' கேட்காமல் உள்ளே போனால் உன் கணினிக்குள் ஸ்வைன் வரும், உனக்கு ரத்த வாந்தி வரும், மொத்தத்தில் டேட்டா சகலமும் ஸ்வாஹா ஆகும்" என்று எல்லா உலாவிகளும், அதாங்க, சுத்த தமிழ்ல 'ப்ரௌவுசர்'களும், என்னை பலமாக எச்சரித்தன.

சென்ற பிறவியில் யாருக்கோ ஸ்லேட், பல்ப்பம் இலவசமாக வாங்கிக் கொடுத்திருப்பதால் எனக்கு இந்தப் பிறவியில் கொஞ்சம் கணினி ஞானம் வாய்த்திருக்கிறது.

வியாபார கவனத்தில், எசகுபிசமாக ஏதாவது விளம்பரங்களை அப்லோட் செய்திருப்பார்கள், அதனால் இந்த அட்டாக் என்பது புரிந்தது. ஆனால் இதைச் சுத்தம் செய்து சைட்டை ஞான ஸ்நானம் செய்விக்க ஏன் இத்தனை நாட்கள்? மணிக் கணக்கில் கூட இது ஆகி இருக்கக்கூடாதே? என்ன செய்கிறார்கள் ஐடி ஆட்கள், டேடாசெண்டர் ஜாம்பவான்கள், ப்ரொக்ராமர் திருக் கூட்டங்கள்?' என்று நான் குழம்பிக்கொண்டிருக்கும்போது தான் அந்த 'நியூஸ்' வந்து சேர்ந்தது.

விகடன் ஆசிரியர் குழுவிலிருந்து முதன்மை ஆசிரியரைத் தூக்கி விட்டார்களாம்!' என்கிற செய்தி!

"என்ன கொடுமை இது சரவணன்?!" -சந்திரமுகி வாரிசு நடிகர் பாணியில் நான் விசாரித்து விசாரித்துக் கேட்டறிந்து கொண்ட உண்மைகள் இதோ:

ஜூனியர் விகடன் முதன்மை ஆசிரியராக இருந்த வெங்கடேஷ் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்!

எதற்கு, ஏன், எப்படி, எவ்வளவு என்றெல்லாம் உத்தேசமாக எதையாவது பெனாத்தி 'இன்னொரு பத்தாயிரம் ரூபாய்' கேசில் மாட்டிக்கொள்ளும் உத்தேசம் எனக்கில்லை. என்ன வுட்ருங்க, ராசா!

ரா. கண்ணன் ஜுவி அடிஷனல் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்.

வைரஸ் அட்டாக் தீவிரம் இன்னும் குறைந்த பாடில்லை. அதைக் கவனிக்க தனியே ஒரு டீம் வேலை செய்கிறது.

வைரஸ் அட்டாக்கிற்கும் ஆசிரியர் நீக்கத்துக்கும் எந்த கனெக்ஷனும் இல்லை.

வைரஸ் கழுகு உட்காரவும், ஆசிரியப் பழம் ஒன்று விழவும் ...யாதொரு சம்பந்தமுமில்லை!

Friday, August 21, 2009

Yes Madam, Sir!

இந்திரா காந்தி அளவுக்கு சமகால இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த மாணிக்கப் பெண்களுள் ஒருவர் கிரண் பேடி IPS.

23 வயதில் IPS பாஸ் செய்த முதல் இந்தியப் பெண், ஆணாதிக்க அரசாங்கத்தாலும், லஞ்ச லாவண்ய அரசியல்வாதிகளாலும், எப்படியெல்லாமோ அலைக்கழிக்கப்பட்டாலும், எல்லாவற்றையும் மீறி எப்படி சுடர் விட்டுப் பிரகாசிக்கிறார் என்பதைச் சொல்லும் ஆஸ்திரேலிய டாக்குமெண்டரி, 'Yes Madam, Sir!'

இப்படிப்பட்ட ஒரு அசாதாரணமான இந்தியப் பெண்ணைப் பற்றி இந்தியாவிலிருந்து ஏன் யாரும் டாக்குமெண்டரி படமெடுக்கவில்லை என்பது எனக்குப் புரியவில்லை. எடுத்திருந்தால், அதை நான் இது வரை பார்க்கக் கொடுத்து வைத்திருக்கவில்லை.

"ஒரு தனி ஷோவுக்கு அரேஞ்ச் செய்யப்போகிறோம். சிலரை மட்டுமே கூப்பிட்டிருக்கிறோம். நீங்கள் வருகிறீர்களா?" என்று தயாரிப்பாளர்கள் என்னைக் கூப்பிட்டபோது என்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. அப்படியெல்லாம் நாம் ஒன்றும் பெரிய பிஸ்தா இல்லையே, பதிலுக்கு இவர்களுக்கு நாம் என்ன செய்யலாம் என்கிற யோசனையுடன் Arclight Hollywood Cinema வுக்குள் நேற்று மாலை நுழைந்தேன்.

தியேட்டர் காம்ப்ளெக்ஸ் இருக்குமிடமான Sunset Boulevard ஹாலிவுட்டின் பாரம்பரிய இதயப் பிரதேசம். எதிரே நான் கொஞ்சம் படித்துக் குப்பை கொட்டிய லாஸ் ஏஞ்சல்ஸ் ஃபில்ம் ஸ்கூல். டிராஃபிக் பயங்கரமாக இருந்தாலும், வியாழன் மாலை 3.50 ஷோ என்பதால் காம்ப்ளெக்சில் சுத்தமாக ஈயடித்தது. காம்ப்ளெக்ஸ் என்றால் மகா, மகா காம்ப்ளெக்ஸ்- 21 தியேட்டர்கள், காஃபி ஷாப்கள், பார், மீட்-அண்ட்-க்ரீட் வசதிகள்.

தயாரிப்பாளர் தரப்பில் இருவரும், ஆஸ்திரேலிய இயக்குனர் Megan Doneman என்கிற பெண்மணியும் என்னை வரவேற்றார்கள். சின்ன வரவேற்பு, கை குலுக்கல், புன்சிரிப்புடன் ஒரே ஒரு ஜிலீர் வோட்கா-டானிக், கொஞ்சம் பொதுவான பேச்சு. யாருக்கு வேண்டும் வோட்கா? அந்த நேரத்தில் சூடான ஒரு கப் சரவணபவன் காஃபி-மைசூர் போண்டாவிற்கு ஏங்கிப் போய் விட்டேன். பிரம்மாண்டமான எஸ்கலேட்டரில் தியேட்டர் 18-க்கு மேல் நோக்கி விரைந்தோம்.

சிலர் என்றால் மிக மிகச் சிலர் என்பது உள்ளே நுழைந்ததும் பளிச்சென்று தெரிந்தது. (பழைய) மதுரை தங்கம் தியேட்டர் மாதிரி பிரம்மாண்டமான தியேட்டரில் நான் மூன்றாவது ஆளாய் கொஞ்சம் பயத்தோடு தான் உட்கார்ந்து கொண்டேன். படம் முடிந்த பிறகு திரும்பிப் பார்த்தால் மொத்தமாகப் பத்து தலைகள் தெரிந்தன).

இயக்குனர் மேகன் Mission Impossible II, Lord of the Rings போன்ற படங்களுக்கு அசிஸ்டெண்ட் எடிட்டராக இருந்தவர். இயக்குனராக இது தான் முதல் படம்.

1949ல் அமிர்தசரஸில் சாதாரண நடுத்தர சீக்கியக் குடும்பத்தில் பிறந்த கிரணைப் பற்றி அவருடைய அப்பா சொல்வதாகப் படம் ஆரம்பிக்கிறது. அடுப்பூதி முட்டாக்கில் மறைந்து கிடக்க வேண்டிய பெண்ணுக்கு டென்னிஸ் கோச்சிங் கொடுக்கிறார் அப்பா. பெண்ணும் ஆசிய சாம்பியன் ஆகிறார். பிறகு தன் ஐபிஎஸ். முதல் போஸ்டிங்கே ஊழலில் ஊறித் தினவெடுத்துக் கிடக்கும் தலைநகரம் டெல்லியில்.

நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் என்பதால் தேவை இல்லாமலேயே கிரண் மீது ஒளிவட்டம் விழுகிறது. அச்சம், நாணம், மடம், பயிர்ப்புக்கெல்லாம் வேலை வைக்காத அம்மணி கடமையே கடவுள் என்று சுத்தபத்தமாக வேலை பார்க்கிறார்.
'அப்படி இப்படி' எல்லோரையும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கொள்ளாமல், லஞ்சம் கிஞ்சம் வாங்காமல், சொன்ன இடத்தில் கைநாட்டு வைக்காமல், எதற்கெடுத்தாலும் ரூல்ஸ் பேசி, எதிர்த்துப் பேசிக்கொண்டு ஒரு 'சின்னப் பெண் ' வாலாட்டினால் நம் அரசாங்கப் பெரிசுகள், பழும் பெருச்சாளி அரசியல்வாதிகள் விட்டு விடுவார்களா?

ஆரம்பத்திலிருந்தே கசா முசா தான், முட்டல் மோதல் தான். குருக்ஷேத்ரம் தான். தர்ம அதர்ம யுத்தம் தான்.

அதுவும், பிரதமர் இந்திரா காந்தியின் கார் தப்பாக பார்க் பண்ணியிருப்பதைக் கண்டு அந்தக் காரையே 'டோ' பண்ணி இழுத்துச் செல்லும் ஐபிஎஸ்ஸைக் கண்டு அரசாங்கத்தில் எல்லோருக்குமே எரிகிறது. புத்திசாலி மீடியா மட்டுமே அவருடைய ஆண்பிள்ளைத் துணிச்சலைப் பாராட்டுகிறது.

Kiran Bedi

'தடாலடியாகச் செய்தாலும், தப்பு செய்வதில்லையே இந்தப் பெண்', ஒழுங்காகத் தானே பணியாற்றி உருப்படியாக ஏதோ செய்கிறாள் என்பது மரமண்டைகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக உறைக்க ஆரம்பித்ததும், அந்தச் 'சின்னப் பெண்'ணுக்கு 'மேடம்' என்று மரியாதை கூடுகிறது. கூடவே எதிர்ப்பும் கூடுகிறது.

டெல்லியின் கச்சடா பகுதி, நெருக்கடியான ஃப்ளாட் ஒன்றில்- 17 பேர் தீ விபத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். பயங்கரமான கோர நெருப்பை எப்படி அணைப்பது என்று போலீசும், தீயணைப்புப் படையினரும் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறார்கள். தீயை அணைக்கத் தண்ணீர் சுத்தமாக இல்லை. இந்தத் தப்பு யாருடையது- போலீஸா அல்லது தீயணைப்புப் படையினரா என்று பட்டி மன்றம் நடக்கிறது. அதற்குள் ஃப்ளாட்டுக்குள்ளிருந்து உயிருக்குப் பயந்த அலறல்கள். எங்கும் நெருப்பு, புகை.

ஓடி வருகிறார் கிரண். யோசிக்க அவகாசம் இல்லை. ஒரு கையடிப் பம்பிலிருந்து தண்ணீரை எடுத்துத் தன்னையும் தன் யூனிஃபாரத்தையும் முழுவதுமாக நனைத்துக்கொண்டு எரிகின்ற வீட்டுக்குள் ஓடி ஒவ்வொன்றாக ஆட்களைத் தூக்கிக்கொண்டு வெளியே வருகிறார். இதைப் பார்த்த வெட்கம் கெட்ட ஆண்பிள்ளை போலீஸ்காரர்களும் அதே போல் தம்மை நனைத்துக்கொண்டு உள்ளே ஓடி ... நல்லவேளையாக அத்தனை பேரும் உயிருடன் காப்பாற்றப் படுகிறார்கள்.

கிரண் பேடி ஐபிஎஸ் ஒரு நேஷனல் ஹீரோயின் ஆகி விட்டதை இனிமேல் யாரும் தடுக்க முடியாது.

கிரண் பேடியை ஒரு 'ப்ரெக்ஃபாஸ்ட் மீட்டிங்'க்கு கிளிண்டன் அமெரிக்கா கூப்பிடுகிறார். அனுப்புவதற்கு நம் இந்தியா அரசாங்கம் ஏதேதோ சால்ஜாப்பு சொல்லி மறுக்கிறது. கிளிண்டன் அடுத்த வருடமும் கூப்பிடுகிறார். வேறு வழியில்லாமல் அரசாங்கம் சம்மதிக்கிறது!

மொக்கை அரசியல்வாதிகளுக்கும் சீனியர் கெழபோல்ட் வெட்டி ஆஃபிசர்களுக்கும் இன்னும் கடுப்பு தாங்க முடியவில்லை. மெடல் கொடுத்துப் பாராட்டவேண்டிய அம்மணியை எப்படியடா காலை வாரலாம் என்று மேலும் திவிராமாகக் கூட்டம் போட்டு ஆலோசிக்கிறார்கள்.

ஆஹா, இருக்கவே இருக்கிறதே, திஹார் ஜெயில்! "கிரணைத் தூக்கி அங்கே போஸ்டிங் போடு. அத்தோடு அவள் ஒழிந்தாள்!". டெல்லி போலீசிலிருந்து இது வரை யாருமே ஜெயில் போஸ்டிங் போனது கிடையாது, கிரணைத் தவிர!

திஹார் ஜெயில் ஊழல்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அவற்றை ஒவ்வொன்றாகக் கிரண் களைய முற்படுகிறார். பயங்கர கொலைக் குற்றவாளிகளுக்கும் போதை மருந்து அடிமைகளுக்கும், விற்பனையாளர்களுக்கும் கிரண் 'விபாஸ்னா' என்கிற தியான முறையைக் கற்றுத் தருகிறார். தன்னந்தனி ஆளாக, ஒரு பெண் எப்படி அந்த நரகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் காட்டுகிறாள் என்பதை நம் அரசாங்கம் கண்டுகொண்டதோ என்னவோ, உலகம் ஆச்சரியத்துடன் கவனிக்கிறது.

கிரண் பேடிக்கு மேக்ஸேஸே அவார்டு கிடைக்கிறது!

கிடைத்த பணத்தில் இன்னும் இரண்டு ஃப்ளாட், நாலு வாடகைக்கார்கள் வாங்கி துட்டு சம்பாதிக்கிற ஜாதி இல்லையே இந்தப் பெண்! அந்தப் பணத்தை முதலீடாகப் போட்டு, டெல்லியின் யமுனா சேரியில் பள்ளிக்கூடங்கள், சுய நிரமாணக் குழுக்கள், ஆஸ்பத்திரிகள் என்று சமூக சேவையில் பின்னி எடுக்கிறார் கிரண். நார்வே போன்ற வெளிநாடுகள் கைகொடுக்கின்றன.

எல்லாவற்ருக்கும் முத்தாய்ப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் போலீஸ் சீஃபாக நியூயார்க்கில் ஒரு வேலை கிரணைத் தேடி தானே வந்தாலும் அதைக் கெடுக்க யார் யாரோ எப்படியெல்லாமோ முயற்சி செய்கிறார்கள். அதையெல்லாம் முறியடித்து இரண்டு வருஷம் அமெரிக்காவில் இருந்து திரும்பவும் டெல்லி வந்தால், கிரணின் ஜுனியர் ஒருவர் வேண்டுமென்றே கிரணுக்கு மேலதிகாரியாக, டெல்லி போலீஸ் கமிஷனராக, நியமிக்கப்படுகிறார்.

மிகுந்த அதிருப்தியுடன் போலீஸ் வேலையை ராஜிநாமா செய்கிறார் கிரண் பேடி. நஷ்டம் அவருக்கல்ல, நாட்டுக்கு. கிரண் முழுநேர அரசியலுக்கு வருவாரா என்பது தெரியவில்லை என்பதுடன் படம் முடிகிறது.

பெரும்பாலான இடங்களில் கிரணின் அப்பா மூலமே கதை நகர்வது, யதார்த்தம் என்கிற பெயரில் கிரணின் பெண் அடிக்கடி மேக்கப்புடன் அசடு வழிவது இவற்றைத் தவிர்த்திருக்க வேண்டும். பல இடங்களில் விடியோ தரம் அபத்தம். பின்னணி பிசை பிரமாதம். எடிட்டர் கம் இயக்குனர் மனதைக் கல்லாக்கிக் கொண்டு ஒரு அரை மணி நேரம் கத்தரி போட்டால் படம் எங்கேயோ போய் விடும். ஆஸ்கர் ரேஞ்சுக்குப் போகலாம்.

பொது வாழ்க்கையில் நேர்மையுடன் பிரகாசிக்க கிரண் பேடி சொந்த வாழ்க்கையில் பறிகொடுத்த விஷயங்களை நன்றாகவே கோடிட்டுக் காட்டி இருக்கிறார்கள்.

'இந்தியா ஒரு பெரிய வல்லரசு, பாயப் பதுங்கும் புலி, 2010ல் சந்திரனில் இந்தியர்' என்றெல்லாம் சதா பினாத்திக் கொண்டிருக்காமல், கிரண் பேடி போன்றவர்களின் வழியில் அரசு குறுக்கிடாமல் இருந்தாலேயே இந்தியாவுக்குப் பெருமை தானாகவே சேர்ந்து விடும்.

கிரண் பேடி பாரத் ரத்னா மெடீரியல். இந்தப் படம் கண்டிப்பாக அவார்டு மெடீரியல்!

இரண்டுமே கிடைக்குமா?

Friday, August 14, 2009

ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு (தொடர்ச்சி)


திருவட்டார் ஊர்க்காரர் ஜெயமோகன் என்று சொல்லிக் கொண்டிருந்தேன் அல்லவா? 'திருடா திருடா' படப்பிடிப்பு காலத்தில் நான் நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரம் சென்று ஆஞ்சநேயரை தரிசித்தது போன்ற நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டோம். அவ்வளவு பெரிய ஆஞ்சநேயரை மெய் சிலிர்க்க தரிசித்து விட்டு வரும்போது யாரோ முகமறியாத ஒரு நபர் என்னைத் துரத்தி வந்து பிரசாதம் கொடுத்து என்னை நெகிழச் செய்தது இன்னமும் நினைவில் இருக்கிறது.

கிட்டத்தட்ட ஒரு சன்னியாசி போல் இரண்டரை வருடங்கள் இந்தியா முழுவதும் தான் தனியாக சுற்றித் திரிந்த கதைகளை ஜெயமோகன் பகிர்ந்து கொண்டார். அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல், அதைப் பற்றிக் கவலையும் படாமல், நெஞ்சில் ஒரு உத்வேகத்துடன், ஆத்ம ஜோதியுடன், வைராக்யத்துடன், வயிற்றில் பசியுடன் அலைவது என்பது விவேகாநந்தர் போன்ற சில மகான்களுக்கே வாய்த்திருக்கிறது. தற்காலத் தமிழ் எழுத்தாளர் ஒருவர் அந்த வரிசையில் இருப்பது ஆச்சரியம்.

சிவானந்தர் பற்றி இங்கே கொஞ்சம் சொல்லவேண்டும்.

மிகுந்த போஷாக்கிலும் சௌகரியத்திலும் ஆரம்பத்தில் வளர்ந்தவர் சிவானந்தர். ரிஷிகேசம் சென்ற பிறகு கூட, அவருடைய ஆச்ரமத்தில் அவர் உபயோகித்த பல விலை உயர்ந்த காமெராக்கள், பனிக் குல்லாய்கள், கையுறைகள், பிரம்மாண்டமான சாப்பாட்டு தட்டு, ஓவர் கோட் எல்லாவற்றையும் இன்றும் காணலாம். அதே ஆச்ரமத்தில் தங்கும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. ஆனால், அதே சிவானந்தர் தீவிர துறவறம், தியானம், தேடல் என்று ஆத்ம விசாரத்தில் முழு மூச்சுடன் இறங்கியபோது, ஒரே ஒரு வேளை ரொட்டிக்கு க்யூவில் நின்று பிச்சை எடுத்திருக்கிறார். காலுக்கு செருப்பில்லாமல் கட்டிய ஒரே கந்தைத் துணியுடன், காய்ந்து போன ரொட்டித் துண்டை கங்கை நீரில் நனைத்தெடுத்து சாப்பிட்டிருக்கிறார். ஊர் ஊராய்த் திரிந்து, கோவில்களை தரிசித்து, சாப்பாட்டிற்கு பிச்சை எடுத்து, புலன்களை அடக்கி, புடம் போட்ட தங்கமாய் மாறி இருக்கிறார்.

ஜெயமோகனும் கிட்டத்தட்ட அதே போல் ஒரு 'இந்தியா தர்ஷன்' செய்திருக்கிறார் என்ற விஷயம் என்னை ஆச்சரியப்படுத்தியது. " மிஞ்சிப் போனா ரெண்டு வருஷத்தில ஒரு ஏழெட்டு வேளை சாப்பிடாம படுத்திருப்பேன். அவ்வளவு தான்!"

அமர்நாத், பத்ரிநாத், கேதார்நாத், கைலாசம் என்று எல்லாவற்றுக்கும் நடந்தே போய் தரிசனம் செய்த நாட்களை- தீவிரமான கோபத்துடன், தர்க்க விசாரங்களுடன், கேள்விகளுடன், தனியே இந்தியாவெங்கும் ஜெமோ அலைந்து திரிந்ததை- அவர் நினைவு கூர்ந்தார். அவருடைய எழுத்தின் இன்றைய வீச்சில், விசாலமான பரந்த மனப்பரப்பில், அனுபவத்தில் அது தெரிகிறது.

ஏற்கனவே ஆஸ்திரேலியா, ஐரோப்பா என்று நிறைய சுற்றி வந்திருக்கும் ஜெமோவின் இன்றைய அமெரிக்க யாத்திரையிலும் அவருடைய இந்த உலக மயமான மானுடத் தேடல் தொடர்வது நிதர்சனம்.

'தாது வருஷ பஞ்ச'த்திலிருந்து வெள்ளைக்காரர்கள் நம்மை எப்படியெல்லாம் கொள்ளை அடித்து, அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் என்பது வரை, இன்றைய அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியக் கல்வியில், கலாசாரத்தில் எப்படியெல்லாம் ஊடுருவிப் பொய்முகம் காட்டுகிறது, நம்மை அலைக்கழிக்கிறது, தெரிந்தோ தெரியாமலோ நாம் எப்படி இதற்கெல்லாம் துணை போகிறோம் என்பது வரை பலப்பல விஷயங்களை ஜெயமோகன் மூலம் கேட்டறிந்தது சுவையான அனுபவம்.

தோழமையுடன், சுவாரசியமாக, கேட்பவர்களைக் கட்டிப் போடுகிற இந்தப் பேச்சு சாமர்த்தியம் ஜெமோவுக்குக் கைவந்த கலையாக இருக்கிறது. மிகுந்த வாசிப்பினாலும், பரந்த யாத்திரைகளாலும், சுய அனுபவத்தினாலுமே இதெல்லாம் சாத்தியம்.

இன்றைக்கும் நாளைக்கும் முகமறியா நபர்களுக்கு மலர்ச்சியுடன் சோறு போடும் பாரம்பரியம் இந்தியாவெங்கும் நிறைந்திருக்கிறது. 'அங்காடித் தெரு' லொகேஷன் பார்க்க வசந்தபாலனுடன் சென்ற ஒரு புழுதி குக்கிராமத்தில், ஒரு மூதாட்டி திண்ணையில் படுத்திருந்த இவர்களை எழுப்பி, சாப்பிடச் சொல்லி வற்புறுத்தி, புதிதாக ஒரு கோழி அடித்து விருந்து வைத்த சம்பவத்தை ஜெயமோகன் உதாரணமாகச் சொன்னார். உண்மையிலேயே பாரதம் தர்ம தேவதையின் இருப்பிடம் தான்.

பேச்சு, இன்றைய இணையம் பற்றியும் திரும்பியது. தினமும் அதிகம் பேர் புதிதாக வந்து பார்க்கின்ற இடங்களில் ஒன்றாக இருக்கிறதாம் அவருடைய உரல். (www.jeyamohan.in )அங்கே ஓரிடத்தில் அவர் எழுதி இருப்பதை இங்கே தருகிறேன்:

'எதிர்வினைகளை வைத்துப் பார்த்தால் எளிமையான விஷயங்களே அதிகம் படிக்கப்படுகின்றன. ஆகவே எதிர்வினைகளைச் சார்ந்து இந்த இணையப்பக்க்கங்களை வடிவமைக்க வேண்டாம் என நினைக்கிறேன். கொஞ்சம்கூட வாசிக்கப்படாத கட்டுரைகளாக இருந்தாலும் கனமான விஷயங்களையும் எழுதலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன். அதாவது இது என் பக்கம். வாசகர்களுக்கு பிடித்தமானதாக இருக்க இங்கே எந்த முயற்சியும் செய்யப்படாது.

இணைய்த்தில் பக்க அளவு பிரச்சினை இல்லை. செலவுக்கவலை இல்லை. இந்த பக்கங்களில் அவை நிரந்தரமாக இருந்துகொண்டிருக்கும். எவருக்காவது எப்போதாவது தோன்றினால் வாசிக்கட்டுமே'

சுவைக்கத் தெரிந்தவர்களுக்கு, ஜெமோவின் விருந்து இலவசமாகக் காத்திருக்கிறது.

(முற்றும்)


எழுதுவதே சுகம்

'எழுதாததும் சுகம்' என்று பாரா போன்ற ஜாம்பவான்கள் சற்றே இளைப்பாற நினைக்கலாம்.

ஓடிக் களைத்த ரேஸ் குதிரைகள், ஒவ்வொன்றாய்க் கோப்பைகள் வென்ற குதிரைகள், கொஞ்சம் ஓரமாய் நின்று, சற்று நேரம் அசை போட நினைக்கலாம். மண்ணில் புரண்டு அசதி போக்கலாம். தப்பில்லை!

வெற்றியால் வந்த அசதி அது. அடுத்த ரவுண்டு ஓடுவதற்கும், இன்னொரு கோப்பையை எட்டிப் பறிப்பதற்கும் அந்த ரேஸ் குதிரைகளுக்குத் தேவையான ஓய்வு அது. ஓய்விலும் அந்த இரும்புக் குதிரைகளின் சிந்தனை ஓயாமல் அடுத்த இலக்கைப் பற்றிய சிந்தனையில் தான் இருக்கும். இதைப் புரிந்து கொள்ள ஒரு ஓஷோ தேவை இல்லை!

"அதைப் பார்த்து நாமும் சோம்பி விடலாகாது. குப்புறப் படுத்து குறட்டை விடலாகாது. நாம் இன்னமும் ஓட வேண்டிய தூரம் மிக அதிகம். பறிக்க வேண்டிய கோப்பைகள் பலப்பல. அவர்கள் நாலு கால் பாய்ச்சலில் ஓடினால் நாம் எட்டு கால் பாய்ச்சலில் பறக்க வேண்டியிருக்கிறது" -என்று எனக்கு நானே உற்சாகப்படுத்திக் கொள்கிறேன்.

என்ன செய்வது, நாம் சோம்பித் திரிந்த காலத்தில் அவர்கள் சாதித்து விட்டார்களே!

சோம்பலை ஒழி!
யாக்கை திரி!
ஜீவன் சுடர்!
எழதுவதே பணி!




Wednesday, August 12, 2009

சீச்சீ! இந்தப் பழம் புளிக்கும்!

யூட்யூபில் ஒரு 'அருமையான' பாடல் காட்சி பார்த்தேன்!


நீங்களும் பார்த்து சிரியுங்கள்!

'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று சொல்வதெல்லாம் அபத்தம். இறைவனுக்கு எதற்காக எக்ஸ்ட்ரா புகழ்?' என்று இளையராஜா திருவாய் மலர்ந்து அருளினாராம்!

ரஹ்மானை இடிப்பதாக நினைத்துக்கொண்டு ராஜா இப்படிச் சொல்லியிருப்பது காழ்ப்பின் உச்ச கட்டம். கண்டிக்கத் தக்கது.

ஏ. ஆர். ரஹ்மான் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று அடிக்கடி சொல்வது அடக்கத்தின் காரணமாக அல்லவா? இந்து ஆன்மீகவாதிகள் 'ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்' என்று சொல்வது போலத்தானே இதுவும்?

பல பூஜை மந்திரங்களின் முடிவில் 'நமஹ: ந மம' என்று சொல்லி முடிப்பதுண்டு. (இறைவா, உன்னை நமஸ்கரிக்கிறேன். ஆனால் இதனால் ஏற்படுகின்ற நல்வினைகள் கூட என்னைச் சார்ந்தவை அல்ல, இறைவனாகிய உன்னையே சார்ந்தவை என்பது பொருள். 'அந்த பூஜை செய்து விட்டேன், இந்த பூஜையை பிரமாதமாக முடித்து விட்டேன் என்று நமக்குள் கர்வம் வந்து விடலாகாது என்பதற்காக!)

தினந்தோறும் செய்யப்பட வேண்டிய சந்தியாவந்தன மந்திரங்களின் முடிவில், 'காயேனவாசா ...' என்றொரு மந்திரம் உண்டு. தியான மந்திரங்கள் சொல்லும்போது எங்கேயோ பராக்கு பார்த்துக்கொண்டோ, அசிரத்தையாகவோ, கொட்டாவி விட்டுக் கொண்டோ, எதையோ நினைத்து மனத்தை அலைபாய விட்டுக் கொண்டோ செய்திருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு, 'எல்லாமே உன் காலடியில் தான்' என்று பொருள்படும்படி, "ஸர்வம் ஸ்ரீநாராயணாயேதி சமர்ப்பயாமி' என்று முடிப்பது வழக்கம்.

இந்து தியான முறைகள், வழிபாடெல்லாவற்றிலும் மிகுந்த நம்பிக்கை இருப்பதாக சொல்லிக்கொள்ளும், திருவண்ணாமலையே கதி என்று கிடக்கும் இசை'ஞானி'யா இப்படி நடந்து கொள்வது?

எங்கேயோ பயங்கரமா பொசுங்கற வாசனை வருதில்ல ?!


ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு

எழுத்தாளர் ஜெயமோகன் அமெரிக்கா முழுவதும் சுற்றோ சுற்றென்று சுற்றிக் கொண்டிருக்கிறார், 'எல்லே' பக்கமும் வர இருக்கிறார் என்று தெரிந்தவுடன், எங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் தமிழ் சங்கத்தின் சார்பாக அவரை வரவேற்க முடிவு செய்தேன்.

ஏற்கனவே 'ராயர் காப்பி கிளப்' மூலம் எனக்கு நன்கு பரிச்சயமான திருமலைராயர் (திருமலை ராஜன்) முன்னின்று கலிஃபோர்னிய பயண ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்ததால், பழம் நழுவிப் பாலில் விழுந்த கதை ஆயிற்று.

உரிமையுடன், எங்கள் வீட்டிலேயே தங்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன்.

அமரர் சுஜாதா போன்ற எழுத்தாளர்கள், சினிமா பிரபலங்கள் என்னுடன் பல முறை வந்து தங்கி அன்பு பாராட்டி இருந்தாலும், ஜெயமோகனுடன் எனக்கு அறிமுகம் கிடையாது. அவருடைய எழுத்துகளையும் நான் அதிகமாக வாசித்தது கிடையாது. சில தடவைகள் விகடனில் 'விஷ்ணுபுரம்' போன்ற கதைகளைப் படிக்க முயன்று நான் துவண்டதுண்டு. அவருடைய நடை கொஞ்சம் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய வித்தியாசமான நடை. கண்டிப்பாக 'ஃபாஸ்ட் ஃபூட்' இல்லை!

வீட்டுக்கு ஒரு பிரபல எழுத்தாளரை வரவழைத்து விட்டு, தமிழ் சங்கத்தின் சார்பாக ஒரு மீட்டிங்கும் ஏற்பாடு செய்து விட்டு, அவரைப் பற்றி அதிகமாக எனக்குத் தெரியாதென்று அசடு வழியவா முடியும்?

அவருடைய இணைய நிரலுக்குப் போய் (www.jeyamohan.in) அவ்வப்போது மேய்ந்தேன். பல விஷயங்கள் எனக்குப் பிடித்திருந்தன. அவருடைய மலையாளம் கலந்த தெற்கத்தி மொழிப் பிரயோகங்கள் -முதலில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் -அந்த ஆளுமை, பாசாங்கில்லாத பிரயோகங்கள், கதை மாந்தர், சுற்றுச்சூழல் விபரங்கள், வட்டார வழக்குகள், பிராந்திய நகைச்சுவை அனைத்தும் என்னைக் கவர்ந்தன.

http://jeyamohan.in/?p=3203 படியுங்கள்! அட்டகாசம்!

'ஜெயமோகன் நிறைய படிக்கிறார், நிறைய கவனிக்கிறார், நிறைய பயணங்கள் செய்கிறார்' -போன்ற நிறைவான பல தகவல்கள் அவருடைய இணைய தளத்திலிருந்தே காணக் கிடைக்கின்றன.

Jeyamohan

"நான் இதுவரை 55 புத்தகங்கள் எழுதி இருந்தாலும், 'நான் கடவுள்' படத்திற்கு வசனம் எழுதியவனாகவே பரவலாக அறியப்படுகிறேன். சினிமாவின் பலமான தாக்கம் அது" என்று அவரே சொல்கிறார். தமிழனுக்கு சினிமாதானே ஆக்சிஜன்!

வாராவாரம் மலரும் நினைவுகளாக 'பன்னீர் புஷ்பங்கள்', 'ஜீன்ஸ்', 'எங்கேயோ கேட்ட குரல்' என்று எதையாவது போட்டு தொலைக்காட்சி என்னையும் உங்கள் நினைவில் வைத்து பாடாய்ப் படுத்துவது எனக்கா தெரியாது?!

"வசனகர்த்தான்னு தான் போடுவாங்க. ஆனாக்க, நாம முழுக் கதையுமே எழுதி, 65 சீன் பிரிச்சு, எல்லாமுமே பக்கா பண்ணிக் கொடுத்துடணும்" என்று தற்கால தமிழ் சினிமா இலக்கண விபரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இவருடைய கதையில், அடுத்ததாக வசந்தபாலனின் 'அங்காடித் தெரு' ரிலீஸ் ஆக இருக்கிறதாம்.

என்னுடைய 'ப்ரிய ஸகி', 'ஹாலிவுட் அழைக்கிறது', 'டிசம்பர் தர்பார்' புத்தகங்களையும், 'பங்கஜவல்லி', 'நாடகமே உலகம்', 'பத்தாயிரப் பிரபந்தம்' போன்ற கதைகளையும் அவருடன் பகிர்ந்து கொண்டேன்.

கடந்த வியாழன் இரவு 8.30க்கு ஆரம்பித்த மீட்டிங் நள்ளிரவு வரை அலுப்பில்லாமல் போய்க் கொண்டிருந்தது. மறுநாள் வேலைக்குப் போகவேண்டுமே' என்கிற பிரக்ஞை கூட இல்லாமல் அவ்வளவு சுவாரசியமாகப் பல விஷயங்களைப் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருந்தோம்.

மணி ரத்தினத்தின் 'திருடா திருடா' (1993?) படப் பிடிப்பின்போது, திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் சில வேண்டாத சம்பவங்கள் நிகழ்ந்தன. திருவட்டார், நாகர் கோவில்-கேரளா பார்டருக்கு மிக சமீபம். சாப்பாட்டில் அரிசி முழுசாக முறைத்துப் பார்க்கும். ஜனவரி வெயில் அங்கே கன்னங்கரேர் என்று ஆளைக் கருக்க வைக்கும்.

பிரமாதமான, புராதனக் கோவில். எக்கச்சக்கமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பெரிய பிரகாரம்.

பிரம்மாண்டமான பெருமாளை தரிசனம் பண்ணுவதற்கே மூன்று வாசல்கள். அனந்தசயனமாகப் பாம்பின் மேல் படுத்திருக்கும் பெருமாளை தலை, தொப்புள், கால் என்று மூன்று வாசல்களிலும் உள்ளே போய் தரிசிக்க வேண்டும். காமெராமேன் P.C.ஸ்ரீராம், இயக்குனர் மணி போன்றவர்கள் கோவிலுக்குப் போகப் பிடிக்காத ஜாதிக்காரர்கள் என்பதால், நானும், பிரசாந்தும் மட்டும் போய் ஸ்வாமி தரிசனம் செய்தோம்.

Jeyamohan Sam and Me

கோவில் வெளிப் பிரகாரத்தில் நன்றாகப் போய்க் கொண்டிருந்த படப்பிடிப்பை நிறுத்துமாறு திடீரென்று கலாட்டா செய்தார்கள் ஒரு உள்ளூர் கோஷ்டியினர். 'சுத்த பத்தமில்லாத சினிமாக்காரர்களை கோவிலுக்குள் படமெடுக்க யார் அனுமதி கொடுத்தது?' என்று யாரோ அதிரடி ஆன்மீகச் செம்மல் துள்ளல் சத்தம் போட, ஒரு பிரச்னை பூதாகாரமாக வெடித்தது. சிறிது நேரத்தில், அது உள்ளூர் அரசியல் கலாட்டாவாக (VHP vs Congress) உருவெடுத்தது. கிட்டத்தட்ட காமெரா, லைட் உபகரணங்கள், படப்பிடிப்பு சாதனங்கள் எல்லாமே உடைந்து சேதமாகும் நிலை வந்து விட்டது.

அந்த புராதனக் கோவிலில் விலை மதிப்பற்ற ஸ்வாமி நகைகள் பலவும் சமீபத்தில் திருடு போயிருக்கின்ற விபரமும் எங்களை திடுக்கிடச் செய்தது.

வழக்கம்போல் அவசர போலீஸ் கையைப் பிசைந்து கொண்டு நின்றது.

நேரம் ஆக ஆக, கூட்டம் தீவிரமாகி, கோஷங்கள், "அடிங்கடா, உதைங்கடா" ரேஞ்சுக்குப் போனதும், அன்றைய படப்பிடிப்பு கேன்சல் செய்யப்பட்டது.
நாங்களும் வேறு ஒரு லொகேஷனுக்கு போய்ச் சேர்ந்து, படப் பிடிப்பு வேலைகளைத் தொடர்ந்தோம்.

'திருடா திருடா'விற்கும் அமெரிக்கா வந்திருக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு என்ன சம்பந்தம்?

திருவட்டார் தான் ஜெயமோகனின் சொந்த ஊர்!

(சந்திப்போம்)





Thursday, July 23, 2009

யாம் பெற்ற இன்பம் -6

கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் தரிசனத்தை முடித்துக்கொண்டு, "மொக்கை போடாமல் ஒழுங்காக ப்ளாகில் அவ்வப்போது மறக்காமல் எழுதவும், 2009 முடிவதற்குள் இரண்டு தமிழ் நாவல்கள், மூன்று ஆங்கில சிறுகதைகள், நான்கு தமிழ் சிறுகதைகள், ஒரு படத்திற்காவது கதை-வசனம், ஒரு ஃபுல் ஸ்கிரிப்ட், அப்படியே ஒரு நகைச்சுவை சரித்திரத் தொடர் எல்லாம் எழுதி முடிக்கவேண்டும் தாயே" என்று பெரிய லிஸ்டுடன் வேண்டிக் கொண்டேன்.

"மொதல்ல உன் குருஜி ரேஞ்சுக்கு லாண்ட்ரி லிஸ்ட் எழுதக் கத்துக்க" என்று சரஸ்வதி சொல்லாமல் சொல்வது போல் இருந்தது.

"இந்த ஆள் அப்படியெல்லாம் செய்து எங்களை ரம்பம் போட்டு விடாமல் காக்கவேண்டும் தாயே" என்று நீங்கள் பதில் வேண்டுதல் வேண்டிக் கொள்ள வேண்டுமானால் கூத்தனூர் போய் சரஸ்வதியை தரிசித்தே ஆகவேண்டும்.

சரஸ்வதியும் அம்பாளின் ஓர் அம்சம் தான் என்று போன பதிவில் சொல்லி இருந்தேன். நினைவிருக்கிறதா?

காஞ்சிபுரத்து மூகர் கதை உங்களுக்குத் தெரியுமில்லையா?

மூகர் என்றாலே முட்டாள், ஊமை என்று தான் பொருள். அப்படிப்பட்ட ஒரு ஊமைச் சிறுவன், அம்பாளின் அருள் வேண்டி காஞ்சிபுரத்தில் தியானத்தில் அமர்ந்திருக்கையில் அம்பாள் ஒரு சிறு வயதுப் பெண்ணாக எதிரிலே வந்து, தன் வாயிலிருக்கும் தாம்பூலச் சாற்றை மூகர் வாயில் சேர்ந்து விடுமாறு துப்பி அருள் புரிகிறாள்.

அந்த மூகரே முன் ஜென்மத்தில் காளிதாசனாக இருந்தவர் என்று ஓரிடத்தில் படித்தேன். அம்பாளுடைய கடாட்சம் பெற்ற பிறகு, இதே மூகர் பெரிய கவிஞராகவும், சாஸ்திர நூல்களில் மேதையாகவும், ஆசார சீலராகவும் விளங்கி, கி.பி. 398 முதல் கி.பி. 437 வரை காஞ்சி காமகோடி பட்டத்தின் இருபதாவது ஆசாரியராகவும் இருந்தவர் என்கிறார்கள்.

மூககவிக்கு அருள்பாலித்த மாதிரி அம்பாள் பிரசன்னமாகி என் நாக்கிலும் தாம்பூலச் சாறு இல்லாவிட்டாலும் ஒரு சின்ன ரின்டானாவது போடுவாள், நானும் பஞ்சசதி எழுதுவேன் என்று நம்பி தியானத்தில் இறங்க ஆரம்பித்தேன்.

மூலாதாரத்தில் இச்சையாகவோ, ஞானமாகவோ, கிரியையாகவோ வெளிப்படாத சக்தி மணிபூரகம் முதல் அநாஹதம் வரை பரவியுள்ள காமகூடத்தில் தான் மூன்று சக்திகளும் கலந்த முழு உருப்பெருகிறது. இது நிகழுமிடமே வாக்பவ கூடம். மனிதர்களின் காமகூடமான நாபிஸ்தானத்தில் காமபீடம் அமைந்திருப்பது போல் காஞ்சியின் காமகோடி பீடம் அமைந்துள்ள இடமே காஞ்சிபுரம்.

காஞ்சி என்றாலே தங்கம் தான். 'க்வணத் காஞ்சி தாமா ...' என்கிற சௌந்தர்ய லஹரி ஸ்துதியில் அம்பாளின் இடுப்பைச் சுற்றியுள்ள தங்க ஒட்டியாணம் விவரிக்கப்படுகிறது.

தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்று நான்கு விதமான- நாம் தேடவேண்டிய புருஷார்த்தங்களைப் பற்றி சாஸ்திரங்களில் பேசுகிறார்கள். இதில் நான்காவதான மோக்ஷத்திற்கான காமமும் காமம் தான். இதை அகாமகாமம் என்பார்களாம்.

அம்பாளை வணங்குபவர்களுக்கு சரஸ்வதி கடாட்சம் நிச்சயமென்பதும் சௌந்தர்ய லஹரியின் இன்னொரு ஸ்லோகத்தில் இப்படி சொல்லப்படுகிறது:

"சரத்காலத்து நிலவைப்போல் வெண்மையான குளிர்ந்த உருவமுடையவளும், சந்திரனைத் தரித்த கேசலாப மகுடங்களி உடையவளும், வர, அபய முத்திரைகள், ஸ்படிக மாலை, புஸ்தகங்களை தரித்தவளும் ஆகிய உன்னை ஒருவன் ஒரு தடவையாவது நமஸ்கரித்தால், அவனுடைய நாவில் மதுரமான நல் வார்த்தைகளும் கவிதைகளும் நடமாடுவதில் வியப்பென்ன?"

இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்தது தானே!

சற்று நேரத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

'பளீரெ'ன்று என் தோளில் ஒரு ஜிலீர். நான் அசந்தே போய் விட்டேன். கண்ணைத் திறந்து பார்க்கலாமா, வேண்டாமா? என்று எனக்குள் ஒரு பயங்கரக் குழப்பம்.

பத்மாசனத்தில் உட்கார்ந்து ஒரு பத்து நிமிடம் கூட ஆகவில்லையே? அதற்குள்ளாகவே எனக்கு மந்திர சித்தி, கிரியா சித்தி, வாக் சித்தி எல்லாம் சித்தித்து விட்டதா? எங்கேயோ போகப் போகிறேனா? கூடு விட்டுக் கூடு பாய்வேனோ?

'அடாடா, எனக்கும் மூகரைப் போல் அருள் பாலித்து விட்டதா? தாயே, நானும் ஒரு ஐநூறு, ஆயிரம் பாட்டுகள் சம்ஸ்கிருதத்தில் பாடி எல்லோரையும் அசத்தப் போகிறேனா?'

இவ்வளவு சீக்கிரமாகவேவா? அப்படி யென்றால் பூர்வ ஜென்மங்களில் நான் எவ்வளவு பாக்கியம் பண்ணியிருக்க வேண்டும்... என்று என் எண்ணக் குதிரை முந்தைய பல ஜென்மங்கள் பின்னோக்கி ஓட்டமாக ஓடுமுன்னரே தடுக்கி விடப்பட்டுக் குப்புற விழுந்து கொள்ளுக்காக அழுதது.

"சீக்கிரம் எழுந்திரு, சித்தப்பா. உன்னோட பெரிய லொள்ளாப் போச்சு. உன் மேல ஒரு புறா கச்சா முச்சான்னு அசிங்கம் பண்ணிட்டுப் போயிருக்கு பாரு"

என்ற மனிதக் குரல் கேட்டு நான் என் தியானம் கலைந்தேன்.

குருட்டுப் புறா ஒன்று என் மேல் தாராளமாக சகட்டு மேனிக்கு எச்சம் இட்டுச் சென்றிருப்பதைக் கண்டு துணுக்குற்றேன்.

புறா வடிவில் வந்து யாரோ ஒரு அசுர வாசகர் என் மேல் பின்னூட்டம் இட்டுச் சென்றிருப்பது புரிந்தது.

(உச்சி வரை போவோம்)


Tuesday, July 21, 2009

யாம் வழிந்த அசடு!

'யாம் பெற்ற இன்பம் -6' ம் பாகம் இருக்கட்டும். அதற்கு முன், இந்த unexpected அசடு வழிதலை உங்களிடம் நான் சொல்லியே ஆக வேண்டும்!

நாளைக்கு என் மனைவியின் பிறந்த நாள் என்பதால், அம்மாளுவை ஐஸ் வைக்க, நான் மேற்படி மனைவியாரின் காரைத் துடைத்துப் புதுப்பித்தல், வீட்டைத் துடைத்து வேக்குவம் செய்தல், வீட்டுக் குப்பைகளை வெளியிலே கொட்டல் -இன்னபிற ஜால்ரா சமாசாரங்களில் ஈடு பட்டிருந்தபோது தான் அந்த ஐடியா வந்தது.

எந்த ஐடியா?

ஆஃபீசிலிருந்து மேற்படியார் வருமுன்னரே, கொஞ்சமாக சமையலையும் செய்து வைத்தால்?!

அன்னாரின் 'வைட் வாட்சிங்' தத்துவப்படி, அரிசி, கோதுமை, சப்பாத்தி, ஆயில், இன்ன பிற அபிஷ்டு ஐட்டங்கள் வீட்டுக்குள்ளிருந்து வெகு தூரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், " வெறும் புல்கார் ரைஸ் பண்ணி வைக்கட்டுமா? ஏற்கனவே பீர்க்கங்காய் துவையல், வெஜிடபிள் கூட்டு, அப்பளம், தயிர், ஊறுகாய் எல்லாமே ரெடியாக இருக்கின்றனவே?"

"ஹும்ம்ம், நீங்களா? மே பி. நோ. நோ. யெஸ். ஓ கே. ஜாக்கிரதை!" போன்ற அவநம்பிக்கையான வசனங்கள் பதில் பதிவாயின.

நானும் சுறுசுறுப்பாக அந்த புல்கார் அரிசியைத் தேடிக் கண்டுபிடித்து, அதன் தலையில் தண்ணீரைக் கொட்டி சுத்த மந்திர ஸ்நானம் செய்வித்து, குக்கரில் அதைக் கொட்டிப் படாரென்று மூடி ....

பரம சந்தோஷ சிஷ்யானந்தனாக நான் -'எப்படியும் இன்று இவ்வளவு சமர்த்தனாக இருந்து விட்டதால் இன்று ஒரு Cabernet Sauvignon ஓபன் செய்தால் யாரும் நம்மைக் கண்டு கொள்ளவா போகிறார்கள்?'- ரேஞ்சுக்கு மிதப்பாக இருந்த நேரம் தான் அந்தக் கொடுமை நிகழ்ந்தது.

எது?

"என்னங்க இது? புல்கார் ரைஸ் பண்றேன்னுட்டு முழு உளுத்தம்பருப்பை சாதம் மாதிரி குக்கர்ல சமைச்சு வெச்சிருக்கீங்க?"

அய்யா தெரியாதையா, இந்தப் பீடை முழு உளுத்தம்பருப்பும், புல்கார் ரைசும் ஒரே மாதிரி சைஸ், ஒரே மாதிரி கலர், ஒரே கப்போர்டு, ஒரே பாத்திரத்துக்கு உள்ளே- ஃபிலிம் காட்டி நம்மை சதாய்க்குமென்று!

பிற்பாடு, மீடியம் எரிச்சலுடன், பீன்ஸ் கறிகாய் சமையலில் அந்த அவித்த உளுத்தம்பருப்பை வீட்டம்மாள் கொட்டிக் கடுகுக் கடுப்புடன் சமாளித்தது என்னவோ தனிக் கதை.

பெஹாக் ராகத்தில் 'இரக்கம் வராமல் போனதென்ன காரணம், என் ஸ்வாமிக்கு?' என்று பாட்டு கேட்டு, பாடிக் கொண்டிருக்கிறேன்.

நல்ல பாட்டு!



Saturday, July 18, 2009

அச்சமுண்டு! அச்சமுண்டு!

என் நண்பர் அருண் வைத்யநாதனின் படம் என்பதற்காகவே எல்லா வேலைகளையும் ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு, பாடாவதி தியேட்டராய் இருந்தாலும் பரவாயில்லை என்று நான் நேற்றிரவு ஓடோடிப் போய் பார்த்த படம்.

'தமிழோவிய' த்தில் என் கலக்கல் கபாலி சீரியல் காலத்திலிருந்து அருண் நல்ல நண்பர். சமீபத்தில் சென்னையில் சந்தித்தபோது, ஒரு பட ரிலீஸ் சம்பந்தமாக எப்படியெல்லாம் தமிழ்நாட்டில் அவதிப்பட வேண்டியிருக்கிறது என்பதை நான் பக்கத்திலிருந்து கணித்திருந்தேன்.

சவுண்ட் மிக்சிங்கின்போதே 'எல்லே'யில் நான் பார்த்திருக்கவேண்டிய படம். அருண் என்னைத் தொடர்பு கொண்டு வரச் சொன்னபோது நான் சென்னையில் 'ஜக்குபாய்' டப்பிங்கில் இருந்தேன்.

சென்னை ப்ரிவியூ ஷோக்களில் நல்ல கூட்டம், விமர்சனங்களில் நல்ல ரெஸ்பான்ஸ் என்கிற நியூஸ் என் எதிர்பார்ப்பை எகிற வைத்துக் கொண்டிருந்தது. நான் பேசினவர்களின் லேகா ரத்னகுமார் "படம் எனக்குப் பிடித்திருக்கிறது. 'ஏ'யில் கண்டிப்பாக ஓடும். எல்லா இடங்களிலும் ஓடவேண்டும்" என்றார்.

இன்னபிற மேற்சொன்ன காரணங்களாலும், 'ரெட் ஒன்' காமெரா ஒர்க் எப்படி வந்திருக்கிறது என்பதை நேரடியாகப் பார்க்கப் போகிறோம் என்பதாலும், முதல் நாளே என் வீட்டுக்காரம்மாவுடன் நான் தியேட்டரில் ஆஜர்.

முதல் ஷோ முடிந்து தியேட்டர் காலியாகிக் கொண்டிருந்தது.

சவுண்ட் இன் சார்ஜ் குணாலுடனும், ஒளிப்பதிவாளர் க்ரிஸ் ஃப்ரெய்லிச்சுடனும் பேசிக் கொண்டிருக்கையில் இருவருமே நெர்வசாக இருந்தார்கள்.

"என்னங்க மேட்டர்? ரிப்போர்ட்ஸ் நல்லாத்தானே இருக்கு"

"போயிட்டு நாளைக்கு வரீங்களா? இந்த தியேட்டர்ல ஒளியும் சரியில்லை. ஒலியும் சரியில்லை. நாளைக்கு அடுத்த தியேட்டருக்கு மாத்தச் சொல்லியிருக்கோம்".

"அடங்கொக்கமக்கா! சும்மா இருங்கப்பா பயலுவளா. நாளைக்கு மறுபடியும் வேணும்னா பார்த்துட்டு அந்த தியேட்டர்ல எப்படி இருக்குன்னும் சொல்றேன். இன்னிக்கு இதைப் பார்த்தே தீருவது" என்றேன்.

Photobucket


படம் எப்படி இருக்கிறது?

குணாலும் க்ரிஸ்ஸும் பயமுறுத்திய அளவுக்கு தியேட்டர் அவ்வளவு மோசமில்லை.

படம் மிக நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஹாட்ஸ் ஆஃப் டு அருண்!

நியுஜெர்சியில் ஒரு சராசரி தமிழ் தம்பதி, அவர்களது குட்டிப் பெண் வாழ்வில் நிகழ்வது பற்றிய இயல்பான, திகிலான நிகழ்ச்சிகளே படம். ஸ்நேகாவும் பிரசன்னாவும் நன்றாகவே செய்திருக்கிறார்கள். வெள்ளைக்கார வில்லன் (அசோசியேட் ப்ரொட்யூசர்) தன் பங்கை சரியாகச் செய்திருக்கிறார்.

"அய்யோ பாவம்! என் அப்பா வயசு இவருக்கு" என்று மாயவரம் பட்டமங்கலத் தெரு அப்பாவித்தனமான செண்டிமெண்டுகளுடன் ஹோம்லி ஸ்நேகா, வெள்ளைக்கார பெயிண்டர் ஒருத்தனை தன் வீட்டுக்குள், அமெரிக்காவில் சுதந்திரமாக நடமாட விட்டால் என்ன நடக்கலாம் என்பதை படம் பார்த்துப் பயந்து கொள்ளுங்கள்.

படத்தின் ஹைலைட் அந்த பயமுறுத்தல் அல்ல.

பட முடிவில் ஆணித்தரமான மெசேஜ் சொன்னதில் தான் அருண் அசத்தி விட்டார். அப்படிப் போட்டு தாக்கு!

உப்புச்சப்பில்லாமல் 'சுபம்' என்று முடிக்காமல், நெற்றியடியாய் சில விஷயங்களை சொன்னதில் படமே ஒரு மேல் தளத்துக்குச் சென்று விட்டது என்று நான் நினைக்கிறேன்.

வெல் டன், மை ஃப்ரெண்ட்!

'பி' யில் இது ஓடுமா, 'சி'யில் நடக்குமா என்றெல்லாம் சலம்பத் தேவை இல்லை. சமீப காலமாக சின்ன பட்ஜெட் படங்கள் மட்டும் தான் நன்றாக ஓடுகின்றன.

கனிமொழி போன்ற சமூக ஆர்வலர்கள், சமூக பிரக்ஞைக்காக இம்மாதிரி படங்களுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தால் தமிழக அரசு அவார்டும் நிச்சயம். என்னாலானது, அவர்கள் காதில் ஒரு வார்த்தை போட்டு வைக்கிறேன்.

சென்னையில் தூக்கக் கலக்கத்தில் இருந்த அருணை எழுப்பி என் வாழ்த்துகளைச் சொல்லி, லாஸ் ஏஞ்சல்ஸ் தமிழ் சங்கத்து உறுப்பினர்களுக்காக ஒரு ஸ்பெஷல் ஷோ போடப் போகிறேன் என்று சொல்லி அருணை மேலும் உற்சாகப்படுத்தினேன்.

சின்ன பட்ஜெட்டில் நிறைவான, உருப்படியான படம்!

நீங்களும் பார்த்து விட்டு சொல்லுங்கள்!

Friday, July 10, 2009

GM - Is it General Motors or Government Motors?!

After about only 40 days in banktrupcy, GM is emerging back as 61% US govt. owned?!

Tuesday, July 07, 2009

யாம் பெற்ற இன்பம் -5

”என்னங்க இது? ‘ஜக்குபாய்’ ஷூட்டிங், ஹாங்காங், பாங்காக்னு ஏதாவது வெளிநாட்டில நடந்த ஷ்ரேஷ்டமான கிசுகிசுக்கள் எழுதுவீங்கன்னு பார்த்தா, நீங்க பக்திப் பழ ரேஞ்சுக்கு அம்பாள், யோகான்னு எழுதிக்கிட்டே போறீங்களே, இது தேவையா?”

“வேணாம், சொல்லிட்டேன், அழுதுருவேன்!”

-மேற்படி தொனியில் சில வாசக நண்பர்கள் என்னை செல்லமாகக் கடிந்து கொண்டாலும், “எதுல ஃபோகஸ் பண்றீங்க, தெரியலியே?” என்று பாரா மாதிரியான ஆசிரிய நண்பர்கள் ’சாட்’டில் சொன்னாலும், பயப்படாதீர்கள். ‘யா.பெ. இ’ தொடரத்தான் போகிறது!

முதலில் இந்தக் கட்டுரைத் தொடரை நான் எழுத நினைத்த முறையே வேறு மாதிரி. ஒரு புது முயற்சியாக- ஒரு விடியோ ப்ளாக் மாதிரி, ஆனால் எங்கெங்கே முடிகிறதோ, அங்கே ஷூட் பண்ணி முடித்த பிறகு, சாவகாசமாக எடிட் செய்து கொள்ள வசதியாக -ஒரு சிங்கிள் ஃபோகஸ் இல்லாமல், கலெக்டிவ் ஃபோகஸுடன்- ‘காரே மூரே’ என்று எழுத நினைத்தேன். அந்த முயற்சிக்கு நான் தயார் என்றாலும் படிப்பவர்கள் தயாரா என்பதில் எனக்குத் தயக்கம் வந்தது உண்மை.

“அய்யோ, இந்த ஆளும் பின்நவீனத்துவம் எழுத ஆரம்பிச்சுட்டார்டா” என்று யாராவது திட்டினால், என்ன செய்வது?

அதைவிட முக்கியமாக, படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும்போது, இயக்குனர் அநுமதி இல்லாமல் நான் ஷூட்டிங் நிகழ்ச்சிகள் பற்றி எழுதுவது, அவ்வளவு சரியில்லை. இன்று காலை பேசும்போது, பட ரிலீஸ் ஆகஸ்டில் என்று சொன்னார்கள். ஆகஸ்ட் அடுத்த மாதம் தானே, திரும்ப வந்து நினைவலைகளில் மறுபடியும் கொஞ்சம் நீந்தினால் போகிறது!

அதனால் இப்போதைக்கு, இப்படியே ஒரு மார்க்கமாகவே செல்வோம்!

கும்பகோணம் போய் விட்டுப் பிறகு திருமீயச்சூர் பிரயாணம் என்று சொன்னேன் அல்லவா? திருச்சியிலிருந்து, தஞ்சாவூர், கும்பகோணம் வழியாகத்தான் அங்கே செல்லவேண்டும், ஒரு போனஸாக, கும்பகோணத்தில் உறவினர் வீட்டில் ஒரு டோஸ் டிகிரி காஃபி சாப்பிட்டு விட்டுச் செல்லலாம் என்று நான் சொன்னவுடன் மீண்டும் காருக்குள் சகஜ நிலை திரும்பியது.

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலின் வடமேற்கில், ராயர் தெரு முனையில், கரும்பாயிரம் பிள்ளையார் கோவிலை மீண்டும் புதுப்பிப்பதற்காக, சுத்தமாகத் தரை மட்டமாக, இடித்துப் போட்டிருந்தார்கள். பக்கத்திலேயே பாலாலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. புதுக் கோவிலை இன்னமும் விரிவாகக் கட்டப் போவதாகத் தெரிகிறது.

“அவசர வேலையாக வந்திருக்கிறோம். உடனேயே சென்னை திரும்ப வேண்டியிருக்கிறது” என்ற உடான்ஸுடம் காஃபியை முடித்து, இருட்டுவதற்குள் எல்லா இடங்களுக்கும் போய்விட முடியுமா என்று பேசிக்கொண்டே கிளம்பினோம்.

நடுவழியிலேயே, கூத்தனூர் சரஸ்வதி ஆலயம்!

Saraswathi

சரஸ்வதிக்குத் தனி ஆலயமா? நான் கேள்விப்பட்டதில்லை. இது என்ன ஆச்சரியம்!

தென் இந்தியாவில், பல கோவில்களில் சரஸ்வதியை, சும்மனாச்சிக்கும் ஒரு தூண் அம்மாச்சியாகவே பாவித்து, முக்கியத்துவம் கொடுக்காமல், மூலையோடு மூலையாக விட்டிருப்பார்கள். பெரும்பாலும் கும்மிருட்டில் படிப்பு தெய்வம் சரஸ்வதி பம்மிக் கிடப்பாள்.

படிப்பில் நமக்கு அவ்வளவு ஆர்வம்!

டுடோரியல் காலேஜ் சீனியர்ஸ், அரியர்ஸ் தாடித் தடியன்ஸ் தயவில் போனால் போகிறதென்று இருட்டில் யாராவது சரஸ்வதிக்கு எப்போதாவது ஒரு சூடம் கொளுத்துவது வழக்கம். பழங்காலப் பாட்டிகள் “யாகுந்தேந்து துஷாரஹார தவளா ...” என்று பேராண்டிகளின் மார்க் ஷீட்டுக்காக வேண்டிக் கருங்கல்லில் முட்டிக் கொள்ளும் சத்தம் காதில் விழும்.

மற்றபடி சரஸ்வதிக்கு தெற்கில் மவுசு இல்லை.

ஆனால், வடக்கே அப்படியில்லை. வடக்கில் சரஸ்வதிக்கு செல்வாக்கு அதிகம்.

உஜ்ஜயினியில் சரஸ்வதி கோவில் மிகப் பிரசித்தம்.

’ ஞான பீடம் ’ விருது கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா? அந்த விருதே நிஜமான ஐம்பொன்னால் செய்யப்பட்டது. சும்மனாச்சிக்கும் ஓட்டை சால்வை, ப்ளாஸ்டிக் வாழ்த்து அட்டை, வாடிய ரோஜா மாலை விவகாரம் இல்லை அது.

அந்த விருதில் நடுநாயகமாக உஜ்ஜயினி சரஸ்வதி உருவம் தான் பொறிக்கப்பட்டிருக்கிறது. 14 இதழ்களைக் கொண்ட பத்மபீடத்தில் கமண்டலம், பத்மம், ஜபமாலை, ஓலைச்சுவடி எல்லாவற்றுடனும்.

ஆனால், நம் கோவில்களில் லஷ்மிக்கு அவ்வளவு பஞ்சப் பாட்டு இருக்காது.

தம்மாத்துண்டு கோவில்களில் கூட, துட்டு வேண்டி, ’அம்மா தாயே’ என்று லஷ்மிக்கு அவ்வப்போது அர்ச்சனைகள், தோப்புக்கரணங்கள், சஹஸ்ரநாமாவளி என்று கோலாகலப்படும்.

சரஸ்வதி அளவுக்கு லஷ்மிக்கு எப்போதுமே லாட்டரி இருந்ததில்லை. ஒன்றுமே இல்லாவிட்டாலும், யாராவது ஒரு உள்ளூர் கனவான் ஒரு ட்யூப் லைட்டை வாங்கி மாட்டி, அந்த வெளிச்சம் வெளியே வராத அளவுக்கு, ‘சீனா. பானா. ஆனா, மூனா’ என்று எதையாவது ஆட்டோகிராஃபாக எழுதித் தன் தரும சிந்தையை வெளிப்படுத்தி இருப்பார். அர்ச்சகரும் சரஸ்வதி கோவிலைக் கண்டு கொள்ளாமல், யாருக்காவது லஷ்மி கடாட்சத்தைப் பொங்க வைக்கலாமென்று, லஷ்மி கோவில் கருங்கல்லில் தான் முதுகைச் சொறிந்து கொண்டு ‘வெயிட்டிங்’கில் உட்கார்ந்திருப்பார்.

”சரி, இந்த சரஸ்வதி கோவில மொதல்ல பார்த்துடலாம்” என்றேன்.

”அடாடா, இத அப்புறமா பார்த்தா போச்சு. திருமீயச்சூருக்கு நேரமாவுதுல்ல?”

” எந்த கோவில பார்க்க வந்தமோ, அந்தக் கோவில மூடிடப் போறான். அப்புறமா பிரகாரத்துல தேங்கா மூடி பொறுக்கிக்கிட்டு உட்கார்ந்துட்டிருக்க வேண்டியது தான்”

“வந்த வேலய விட்டுட்டு, இதென்ன நடுவால புது ப்ரொக்ராம்?” என் சகாக்களின் பலத்த எச்சரிக்கை வாசகங்களை நான் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

‘அவள் தயவில் தான் நாலு எழுத்து எழுதுகிறோம். அரியும் சிவனும் மட்டுமல்ல, சரஸ்வதியும் லஷ்மியும் கூட, பிரபஞ்ச மகாசக்தியின் ஒரு வெளிப்பாடே.

‘யாதும் ஊரே, யாவரும் டொமரே’ என்றெல்லாம் நான் லெக்சர் அடித்தால், டிரைவரும் பாசஞ்சரும் தாங்க மாட்டார்கள் என்று நினைத்து அவர்களை சும்மா விட்டேன்.

சரஸ்வதியாவது, மகாலட்சுமியாவது, துர்க்கையாவது? எல்லாமே மகாசக்தியின் பல அவதாரங்கள் என்று தானே சௌந்தர்ய லஹரி சொல்கிறது?

தவிரவும், நவராத்திரி நேரத்தில் ஒரு புகழ் பெற்ற சரஸ்வதி கோவிலுக்கும் போக முடிந்ததில் நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்.

(உச்சி வரை போவோம்)












Wednesday, July 01, 2009

யாம் பெற்ற இன்பம் -4

எலிப் பொறி புகழ் மசால் வடை புகழ் பேரளம் பக்கத்திலிருக்கும் திருமீயச்சூர் போக, எதற்காக திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் அகண்ட காவேரி என்று நான் அலைய வேண்டும்?

காரணம் இருக்கிறது.

துபாயிலிருந்தோ, அமெரிக்காவிலிருந்தோ, அட, ஆப்பிரிக்கா, ஐஸ்லாண்ட், கானா, எங்கிருந்து எப்போது தமிழ்த் தாயகம் திரும்பி வந்தாலும், நீங்கள் ஒரு ‘பொடென்ஷியல் இன்வெஸ்டர்’ - அதாவது ‘கையில் செம துட்டு வைத்திருக்கிறீர்கள்; உங்களை ஒரு கை பார்த்து விட வேண்டியது தான்’ என்று நம் தாய்த் திரு நாட்டில் ஒரு பெருங்கூட்டமே கண் கொத்திப் பாம்பாக, எந்நேரமும் இதே கருமமே கண்ணாக, மீனம்பாக்க பன்னாட்டு விமான நிலைய சாய்விருக்கைகளிலும், ஒப்பனை அறை வாசல்களிலிருந்தும் தயாராக அலைகிறது.

‘துண்டைக் காணோம், துணியைக் காணோம்’ என்று துபாயிலிருந்து நீங்கள் ஓட்டமாக ஓடி வந்து கண்ணீர் நுரைக்க, மூச்சு இரைக்க நிற்கலாம். உங்களிடம் துட்டு இல்லை என்று மட்டும் யாருமே நம்பவே மாட்டார்கள். ”சார் சும்னாச்சிக்கும் ஜாகிங் ப்ராக்டீஸ் செய்றார்பா. உல்லலாயிங்சு” என்று சிரிப்பார்கள்.

அவுட்சோர்சிங், இன்சோர்சிங் சான்செல்லாம் காய்ந்து புண்ணாகி, இருந்த வேலையும் விசாவுடன் பறந்து போய் நீங்கள் பிருஷ்ட பாகத்தில் பெரும் வேதனையுடன் அமெரிக்காவிலிருந்து மீனம்பாக்கம் வந்திறங்கி வேலை இல்லாமல் வானம் பார்த்து நிற்கலாம். “சார், மோனத் தவம் பண்றார்பா. அம்பானி பிரதர்சுக்கே அய்யா தான் ஃபைனான்சு” என்று வெந்த பி. பாகத்திலே வேல் குத்துவார்கள் நம்மவர்கள்.

‘என் ஆர் ஐ’ என்றொருவன் இந்தியா பக்கம் திரும்பி வந்து விட்டால் அவன் நெற்றி மிகப் பரந்தது, அதில் நாம் வழித்துக் குழைத்து நாமம் ஆஃடர் நாமம் ஆஃப்டர் நாமம் போட்டே ஆகவேண்டும்” என்றலையும் சென்னைத் தீவிரவாதிகள், வெடிகுண்டு முருகேசன்கள் பலப் பலர்.

“பில் கேட்ஸும், வாரன் பஃபேயும் வேறு அமெரிக்க ஜாதியப்பா. நாங்கள் அங்கே ‘அய்யா, சாமி’ என்று கெஞ்சிக் கூத்தாடி ஏதோ அடிமைத் தொழில் புரிந்து கஷ்ட ஜீவனம் செய்து அரை வயிற்றுக்குக் கூழ் குடித்துத் தொந்தி வளர்க்கிறோம். முதலீடெல்லாம் செய்யுமளவுக்கு ஏதும் இல்லையே” என்று சொன்னால் வடிவேலு காமெடிக்குச் சிரிப்பது போல் சிரிப்பார்கள் ‘இடி, இடி’யென்று.

Spencers Chennai

“நல்ல ஜோக்கு சார். அது கெடக்கட்டும். இப்ப நீங்க ஸ்பென்சர் பில்டிங் ப்ளஸ் கன்னிமாரா ஹோட்டல் வாங்கிக்கறீங்களா, இல்லாட்டி மொத்த நுங்கம்பாக்கம் ஏரியாவையுமா?”

‘டக், புக்’கென்று செல் போனில் எதையாவது அழுத்தி, பவ்யமாக, “சார், பார்ட்டி ரெடி, இப்பயே அழைச்சிட்டு வரேன்”

வேதனையில் என் ஆர் ஐ தலைகுனிந்து நிற்கலாம். விட மாட்டார்கள் புரோக்கர்கள்.

“சரி சார், சென்னையே வோணாம். தஞ்சாவூர், மதுரைப் பக்கமா ஒரு பத்தாயிரம் ஏக்கர்? சேலம் கொல்லிவராகன் மலை? விருதுநகரிலிருந்து தனுஷ்கோடி வரை?”

அப்படித்தான் ஒரு அதிரடி கோஷ்டியார் என்னை- அம்பிகை லலிதாம்பாளை தரிசனம் செய்யலாம் என்று கிளம்பியவனை- திருச்சிப் பக்கமாக திசை திருப்பியிருந்தனர். கிட்டத்தட்ட ஆள் கடத்தல்.

“அரியலூர் பக்கமா ஒரு அய்யாயிரம் ஏக்கர், அப்புறமா BHEL ஃபேக்டரிப் பின் பக்கமா ஒரு அம்பதாயிரம் ஏக்கர். பீச்சாங் கையால வாங்கி சோத்துக் கையால ஒடனயே விக்கறது தான் உங்க வேலை. மாட்டேன்னு மட்டும் நீங்க சொல்லிடக் கூடாது. வந்து ஒரு தடவை அந்த மண்ணை நீங்க மிதிச்சுத்தான் ஆகணும்” என்கிற அன்புக் கட்டளை காரணமாகவே என் திருமீயச்சூர் ரூட் திருச்சி வழியாகப் பயணப்பட்டது.

பெரிய தட்டில் மைசூர்பாக் கொட்டப்பட்டு சீராக வெட்டப்பட்டது போல், லே அவுட் ப்ளான்கள் எனக்குக் காட்டப்பட்டன. கலர் கலரான கம்ப்யூட்டர் ப்ரிண்ட் அவுட்கள். ’ஒரு கொடி போட்டால் ரெண்டு கோடி, அஞ்சு கோடி போட்டால் பத்து கோடி’ என்ற ஆசை முழக்கங்கள், ‘மூணே வாரத்துல முந்நூறு பர்செண்ட், நாலே மாசத்துல நாப்பதினாயிரம் விழுக்காடு, ஒரே வருஷத்துல .... “

“அய்யோ, தாங்கலைடா சாமி! ஆளை விடுங்கப்பு” என்கிற என் புலம்பல் யார் காதிலும் விழவில்லை.

எவ்வளவு நேரம் தான் பொட்டைக்காட்டு பூமியில் புதையல் தேடி அலைவது? காவேரிக் கரையில் தண்ணீரையே காணோம், இதில் காசு வேறா கிடைக்கும்?

’திருச்சியில சாப்பாடு எங்க நல்லா இருக்கும்? அஜந்தாவிலயா, அரிஸ்டோவிலயா?’ -என்ற ஒரு பட்டி மனற விவாதத்தை அவசர அவசரமாகத் துவக்கி வைத்தேன். தமிழனைக் கவிழ்க்க சினிமாவும், சாப்பாடுமே பேராயுதங்கள். அஜந்தா-எல்லோரா, மன்னிக்கவும், அரிஸ்டோ, எதிர்-எதிர் கோஷ்டிகள் சோத்துப் பரவசத்துக்கு மல்லுக்கட்ட, நான் எதிர்பார்த்தபடியே நடந்தது. அவர்கள் வெண் சாதப் புதை குழியில் பலமாகச் சிக்கிக் குழம்பின் மசாலாப் பிடியில் மூச்சுத் திணறி மயக்கமாக இருக்கையில் நான் அநாயாசமாக அவர்களிடமிருந்து அந்தர்தியானமானேன்.

சென்னையிலிருந்து என்னுடன் வழித்துணையாக வந்திருந்த என் அண்ணன் மகன் ராஜுவுடன் விட்டேன் ஜூட்- “நேரா கும்பகோணம் போப்பா, டிரைவர்!”

ராஜு என்னை முறைத்தான். “எங்கேயோ போலாம்னு சொல்லிட்டு எங்கெங்கேயோ இழுத்துக்கிட்டுப் போற?” என்கிற கேள்வி அதில் தொக்கி இருந்தது.

(உச்சி வரை போவோம்)





















Monday, June 29, 2009

’கம்பலை’ என்றால் என்ன? - கொஞ்சம் தமிழ் ஆராய்ச்சி!

’யாம் பெற்ற இன்பம்- 3’ ல், நான் பின்வருமாறு எழுதியிருந்தேன்:

” ... இருந்தாலும், பலத்த செக்யூரிட்டியையும் தாண்டி, முக்கியப்பட்ட சிலர் கண்ணீரும், கம்பலையுமாக (அது என்னங்ணா, ‘கம்பலை’? யாராச்சியும் பதில் சொல்லுங்ணா) எனக்கு விடை கொடுக்க முடியாமல் ஏர்போர்ட்டில் கேவிக்கேவி, தேம்பித்தேம்பி அழுதார்கள்.”

பின்னூட்டத்தில், சுந்தர், “நானும் ரொம்ப நாளா தவிச்சிட்டிருக்கேன் இந்த ‘கம்பலை'க்கு அர்த்தம் புரியாம....நீராச்சும் சொல்லுவீர்னு பார்த்தா......இப்படி அம்போன்னு விட்டா எப்படி ??” என்று கேட்டிருந்தார்.

சுந்தர் கேட்கும்போது சும்மா இருக்கலாமோ? நாம் கேட்ட கேள்விக்கு நாமே பதில் கண்டுபிடித்து விடுவோம் என்று கொஞ்சம் தமிழ் ஆராய்ச்சி செய்ததில் ‘கம்பலை’ என்றால் சத்தம், ஆரவாரம், ’சவுண்டு கொடுப்பது’ என்பது தெரிந்து கொண்டேன்.

கண்ணீரும் கம்பலையுமாக என்பது ’அழுகையும் ஆத்திரமுமாக, சத்தமாக ஃபிலிம் காட்டி’ என்ற பொருளில் உபயோகிக்கப்படும் சொற்றொடர்.

சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக் காஞ்சியில் இந்தக் ‘கம்பலை’ 6 இடங்களில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. மதுரைக் காஞ்சி பாடியவர் :: மாங்குடி மருதனார். தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியனைப் புகழ்ந்து மொத்தம் 782 பாடல்கள் பாடி இருக்கிறார். (இந்த மாங்குடி தான் மயிலாடுதுறை - வைத்தீஸ்வரன் கோவில் வழியில் இருக்கும் மாங்குடியா என்பதை வேறு யாராவது எனக்குத் தெரியப்படுத்தவும்).

110வது பாடலில், இந்தக் கம்பலை வருகிறது:

இரு பெயர்ப் பேரா யமொடு இலங்கு மருப்பிற் களிறு கொடுத்தும் பொலந் தாமரைப் பூச் சூட்டியும் நலஞ் சான்ற கலஞ் சிதறும் பல் குட்டுவர் வெல் கோவே! கல் காயுங் கடுவேனி லொடு இரு வானம் பெயலொ ளிப்பினும் வரும் வைகல் மீன் பிறழினும் வெள்ளமா றாது விளையுள் பெருக நெல்லி னோதை அரிநர் கம்பலை . (110)

அதேபோல் 120, 430, 530, 550, 620-வது பாடல் வரிகளிலும் இதே கம்பலை பெரும் சப்தம், ஆரவாரம் என்ற பொருட்களில் கையாளப்பட்டிருக்கிறது.

அதேபோல், மூன்றாம் திருமுறை, திருஞானசம்பந்தரின் தேவாரத்திலும் ’கம்பலை’யைக் கண்டேன்::

கொம்ப லைத்தழ கெய்திய நுண்ணிடைக் கோல வாள்மதி போலமு கத்திரண்
டம்ப லைத்தகண் ணாள்முலை மேவிய வார்சடையான்
கம்ப லைத்தெழு காமுறு காளையர் காத லால்கழற் சேவடி கைதொழ
அம்ப லத்துறை வான்அடி யார்க்கடை ............ (நன்றி: www.thevaaram.org)

’அடியார்கள் ‘ஹர ஹர’வென்று பெரு முழக்கம் செய்து பணிந்து எழுந்து போற்றும் இளங்காளையைப் போன்ற உடற்கட்டு கொண்ட சிவன்’ என்று பாடுகிறார் சம்பந்தர்.

இப்போதைக்கு இத்தனை கம்பலை போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?!




Saturday, June 27, 2009

யாம் பெற்ற இன்பம் -3

2008 செப்டம்பர்- அக்டோபர், சென்னை:

’ஜக்குபாய்’ முதல் கட்ட பாங்காக் படப்பிடிப்பில் சில சீன்கள் (சரத்-ஷ்ரியா-கவுண்டமணி காம்பினேஷன்ஸ்) எடுக்கப்பட்டு, கொஞ்சம் என் வேலை முடிந்ததும், இயக்குனர் ரவி என்னிடம் “பட்டயா பீச்ல ஃபைட் சீன்ஸ் எடுக்க வேண்டியிருக்கு. சரத் இருந்தா போதும். உங்க ஜாக்கி சான் வேலையெல்லாம் இதுல காட்டத் தேவை இருக்காது. நீங்க பீச்சுக்கு வந்தா கூட்டத்தை சமாளிக்கவே எங்களுக்கு நேரம் சரியாப் போயிடும். அதுக்காக நீங்க ஹாலிவுட்டுக்கு திரும்பிட வேணாம். வேணும்னா சென்னைக்குப் போய் ரெஸ்ட் எடுத்துக்குங்க. மறுபடியும் நாம எப்ப மீட் பண்ணணும்னு சொல்றேன்” என்றார்.

“டேய், எல்லே சார் பின்னாடியே மாடு, கன்னுக்குட்டி எதுவும் போயிடாம ஏர்போர்ட் வரைக்கும் போய் பாத்துங்கப்பு” என்று அசிஸ்டெண்டுகளுக்கும் கறாரான கண்வழி ஆர்டர் போடப்பட்டது.

“கிருஷ்ணா, கிருஷணா!” என்று நான் கன்னத்தில் போட்டுக்கொண்டேன்.

இருந்தாலும், பலத்த செக்யூரிட்டியையும் தாண்டி, முக்கியப்பட்ட சிலர் கண்ணீரும், கம்பலையுமாக (அது என்னங்ணா, ‘கம்பலை’? யாராச்சியும் பதில் சொல்லுங்ணா)எனக்கு விடை கொடுக்க முடியாமல் ஏர்போர்ட்டில் கேவிக்கேவி, தேம்பித்தேம்பி அழுதார்கள்.

சுவர்ணபூமி ஏர்போர்ட்டே அழுகையில் வழுக்கியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

“நான் இப்ப எங்க போயிட்டேன்னு நீ/நீங்க இப்படி அழுது ஆகாத்தியம் பண்றீங்க. ரெண்டு வாரம் சென்னையில தான இருக்கப்போறேன். அப்படி ரொம்பத் தாங்கலைன்னா சொல்லுங்க. ஒரு போன் போட்டா ஓடி வந்துடறேன். சென்னை மூன்று மணி நேரத் தொலைவில தானே இருக்கு? பிளாக்பெர்ரில, ஃபேஸ்புக்ல, ட்விட்டர்ல, புறா மூலமா டெய்லி ஹாய் சொல்றேன். போதுமா?” என்றெல்லாம் பஞ்சாபியிலும் குஜராத்தியிலும் மாற்றி மாற்றி நான் சமாதானம் சொல்ல நேர்ந்தபோது, பச்சைத் தமிழ் அசிஸ்டெண்ட் (செக்யூரிட்டி) டைரக்டர் பாஷை புரியாததால் ‘ஙே’ என்று பேய் முழி முழித்ததை நான் ரசித்தேன்.

“ஒண்ணுமில்லப்பா. பாங்காக்ல ஃபுல்கா ரொட்டி, மட்டன் குஸ்கா எங்க கிடைக்கும்னு சொல்லிக்கிட்டிருக்கேன்” என்று நான் சொன்னதை மதுரைத் தமிழர் சுத்தமாக நம்பவில்லை.

சென்னை திரும்பியாயிற்று. அலும்னி கிளப், போட் கிளப், பிரசிடென்சி கிளப் என்று எல்லா இடங்களிலும் தரிசனம் கொடுத்தாயிற்று. அடையார் கேட், தாஜ், ரெயின்ட்ரீ என்று சுக வாசஸ்தலங்கள் எல்லாமே போரடித்துப் போய் விட்டது.

ஊர் முழுக்க முல்லைச் சிரிப்பும், சரசரக்கும் பட்டுப் பாவாடையும், அகல் விளக்குகளுமாக நவராத்திரிக் கொண்டாட்டங்கள். எல்லோரும்- மகா பொடுசுகளிலிருந்து கெழ போல்டுகள் வரை அத்தனை பேரும்- பயங்கர பிசி. எனக்கு மட்டும் சுத்தமாக எந்த வேலையுமே இல்லை. சிமெண்ட் உதிர்ந்த மோட்டுவளை டிசைனை எத்தனை நேரம் தான் முறைத்துக் கொண்டிருப்பது?

எதிர், பக்கத்து வீடுகளிலிருந்து சுண்டல், சுண்டலாக வாண்டுகள் படையெடுப்பு, தாங்கவே முடியவில்லை. நானாவித பரிமள விநோத சுண்டல்களால் நான் தொண்டை அடைத்துப் போய் மேலும் விக்கித்து சோகமானேன்.

ஊரெங்கும் விழாக் கோலத்தில் இருக்கும்போது நானும் ஒரு பட்டுப் பாவாடை கட்டிக்கொண்டு பக்கத்து வீட்டுக் கொலுவில் போய் உட்கார்ந்து ‘பஜ பஜ மானஸ ...’ என்று பாடலாமா? ஊஹூம். அடி விழும்.

மனசு ரொம்பவும் தான் பேதலித்துக் கிடக்கிறது.

“டீ இவளே! கீதோபதேசம் போட்டிருக்கேன் வந்து பாரேன்!” நானும் ரங்கோலி போடக் கற்றுக் கொள்ளலாமா? ரங்கோலி என்பது ஹிந்தியா, பஞ்சாபியா, குஜராத்தியா?

தனிமை என்னை மிகவும் வாட்டியது. பாங்காக் பக்கமே வரக்கூடாதென்று தடா வேறு. கொஞ்சம் ஆறுதலுக்காக தி.நகர் ‘மன்சூக்’ஸில் குஜராத்திச் சாப்பாடு சாப்பிட்டுப் பார்த்தேன்.

இரண்டு வேளையும் ஷ்ரீ- மன்னிக்கவும், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் சொல்ல ஆரம்பித்தேன்.

ஸ்வாமி ராமாவின் ‘Living with the Himalayan Masters', பால் பிரண்டனின் 'A Search in Secret India', பாபாஜி நாகராஜின் கிரியா யோகாவெல்லாம் படித்து முடித்தாயிற்று. புதிதாக ஏதாவது சுப்ரபாதம் இயற்றலாமா, சுந்தர காண்டம் படிக்கலாமா என்றெல்லாம் ஆன்மீகத்தனமாக யோசிக்கலானேன்.

ஷட்சக்ரபேதனம் என்றெல்லாம் சொல்கிறார்களே, இதெல்லாம் நமக்கு சரிப்படுமா என்பது புரியவில்லை. புகை நடுவே ஏதோ புலப்படுவது போல் தெரிந்தது.

ஒரு நாள் நண்பர் ஒருவர் கூப்பீட்டாரேயென்று வெளியே போகக் கிளம்பினவன் சம்பந்தமே இல்லாமல் மவுண்ட் ரோடு சமதா புக்ஸ் பக்கம் போய் வண்டியை நிறுத்தினேன். ஓனர் கிருஷ்ணா தீவிரமான லலிதாம்பிகை பக்தர். உண்மையாக யோசித்துப் பார்த்தால் அங்கே எதற்காகப் போனேன் என்பது இன்னமும் இன்றுவரை தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அங்கே நடந்த சில நிகழ்வுகள் ஆச்சரியமானவை.

லலிதாம�பி��

இந்த லலிதாம்பிகை பக்தி மேட்டர் பற்றி சீரியசாக எழுத ஆரம்பித்தால் பீகார் யோகா, பிராணாயாமம், ஸ்வாமி நிரஞ்சனானந்தா, யோக நித்ரா, குடுமி வெங்கட்ராமன் மூலம் பெரிதாக நான் ஏமாந்த கதைகள் ஏன்று எல்லாம் எழுத வேண்டி வரும். இப்போது அந்தக் கதைகள் வேண்டாம்.

கிருஷ்ணாவுக்கு எதிரே ஜோல்னாப் பையுடன் யாரோ ஒரு வெள்ளைக்காரர்- ஆன்மீக நாட்டம் அதிகமுள்ளவர் போல் தெரிந்தது- திருமீயச்சூர் போகும் வழி பற்றி. லலிதாம்பாள் கோவில் பற்றியெல்லாம் விபரம் கேட்டுக் கொண்டிருந்தார். கிருஷ்ணா அவரிடம் பேசிக் கொண்டிருந்ததிலிருந்து எனக்கு யாரோ ’பளிச்’சென்று என்னிடம் நேரடியாகச் சொல்வது போல் புரிந்தது என்னவென்றால்:

“சும்மாத்தானே கோவில் மாடு மாதிரி ஊரை சுத்தி வந்து கிட்டிருக்கே. லலிதா சஹஸ்ரநாமம் படிச்சா மட்டும் போதுமா? திருமீயச்சூர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயே, ஏன் அங்கே ஒரு முறை போய் வரவேண்டுமென்று உன் மர மண்டையில் ஏறவே இல்லை? அங்கே போகும் வழி பற்றி சொல்கிறேன் பார்”

எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

“எட்றா வண்டிய, திருப்புடா திருச்சி பக்கம்” என்றேன்.

எதற்கு திருச்சி பக்கம்?

சொல்கிறேன்.

(உச்சி வரை போவோம்)

Thursday, June 25, 2009

கவர்னரின் காதலி

ஒரு வார காலம் ஒரு பிரபல முதலமைச்சரைக் காணோம் என்றால் நாடு என்ன ஆகும்?

வீட்டிலே கேட்டால், “இதோ, தெருக்கோடிக்குப் பால் பாக்கெட் வாங்கப் போயிருக்காருங்க, வந்துருவாரு, இப்டியே குந்துங்க” என்று பீலா விடுகிறார்கள்.

ஆஃபீசுக்குப் போனால், “அடேடே, மீட்டிங் முடிந்து இப்போது தானே வீட்டுப் பக்கம் போனார்” என்று காதில் பூ சுற்றுகிறார்கள்.

ஆளு இருக்காரா, பூட்டாரா என்பது கூடத் தெரியாத திகைப்பு. போலீஸ் கையைப் பிசைகிறது. FBI "எனக்குத் தெரியாது சாமி” என்று ஒதுங்கிக் கொள்கிறது.

அமெரிக்க மீடியா சவுத் கரோலினா கவர்னர் சான்ஃபோர்டைக் காணாமல் ஒரு வாரம் துடிதுடித்துப் போய் விட்டது.

எல்லா ஊர்களிலுமே அரசியல்வாதிகள் கிட்டத்தட்ட எந்நேரமும் மீடியா வெளிச்சத்தில் திளைப்பவர்கள்.

ஆரம்ப காலங்களில் “ஏண்டா எனக்குத் தனியா கட்-அவுட் வைக்கலே?” என்று மிரட்டி உருட்டுக் கட்டை, அதிரடி, கட்டைப் பஞ்சாயத்து, ஆயிரம் கார் பவனி என்று வளர்ந்து, அடுக்கடுக்கான சால்வைகள், ஆயிரக் கணக்கில் தொண்டர்கள், தினமும் பத்திரிகையில் புகழ் புராணம் என்றெல்லாம் பழக்கப்பட்டுப்போன பிறகு என்று திடீரென்று சொந்தப் பாட்டியைப் புதைத்த சுடுகாட்டுப் பக்கம் போய் வணங்கி வருவதற்குக் கூட தனிமை இல்லாமல் தவிப்பவர்கள்.

Photobucket

ஒரு வாரமாகக் காணாமல் (அர்ஜெண்டினா) போயிருந்த கவர்னர் நேற்று திடீரென்று திரும்பி வந்தார்.

அட்லாண்டா ஏர்போர்ட்டில் ஒரு பிரஸ் மீட்டில் “அர்ஜெண்டினாவில் ஒரு சின்ன வீடு கட்டி இருக்கிறேன். அங்கே போய் சின்னதாக ஒரு கிரகப் பிரவேசம், சாரி, அதெல்லாமில்லை. என்னை மன்னியுங்கள். அங்கே போய் ‘ஹோ’வென்று அழுது விட்டு இப்போது தான் திரும்புகிறேன்” என்றார்.

ரிபப்ளிகன் பார்ட்டி தலைவர்கள் தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.

சின்ன வீடு, சைடு வீடு, எதிர் வீடு சமாச்சாரங்கள் அமெரிக்க அரசியலில் புதிது இல்லை என்றாலும், கவர்னர் சான்ஃபோர்டு 2012 அதிபர் தேர்தலுக்கான ஒரு பிரகாசமான நம்பிக்கை நட்சத்திரம் என்று நினைத்தவர்கள் பலர்.

ஒபாமாவுக்குச் சரியான போட்டியாளர் என்று வர்ணிக்கப்பட்டவர். இப்போது ”ஒரு அர்ஜெண்டியன் தோழியுடனான நட்பு கொஞ்சம் அர்ஜெண்டாக இறுகிப் போய் விட்டது உண்மை தான். கடந்த ஒரு வருடத்தில் மூன்றே மூன்று முறை தான் நான் அங்கே போய்...” என்று இழுக்கிறார்.

அது சரி, கவர்னர் பதவி?

அதை ராஜிநாமா செய்யும் ஐடியாவே கொஞ்சம் கூட இல்லையாம்.

நடத்துங்கப்பா!

Sunday, June 21, 2009

யாம் பெற்ற இன்பம் -2

எல்லா சென்னை சினிமா கம்பெனிகளுக்கும் பொதுவான இரண்டு சட்டங்கள் உண்டு.

1. முதல் ஷெட்யூல் எப்போதுமே படு கிராண்டாக, விலாவாரியான விபரங்களுடன் இருக்கும்.

2. முதல் ஷெட்யூல் கடைசி நிமிடத்தில் கண்டிப்பாக மாற்றப்படும்.

இந்த இரண்டு பொது விதிகளையும் நான் கிழக்கு பதிப்பகத்தின் அடுத்த ‘ஹாலிவுட் அழைக்கிறது’ பதிப்பில், ‘சிலேட்டு, பல்ப்பம், ஸ்டோரி போர்டு’ அத்தியாயத்தில் கண்டிப்பாகச் சேர்த்து விலாவாரியாக விளக்கி விடுகிறேன்.

2007 டிசம்பரில் நான் என் சகதர்மிணியுடன் ஆஸ்திரேலிய திக்விஜயம் முடித்திருந்தபடியால், மெல்பர்னின் சந்து பொந்துகள், எனக்கு மந்தவெளி எட்டாம் நம்பர் கடை ரேஞ்சுக்கு தெரியும், சிட்னியின் ராஜபாட்டைகள் ஆழ்வார்பேட்டை அளவில் மிகப் பரிச்சயம். அடிலேய்ட், கேர்ன்ஸ், க்வீன்ஸ்லேண்ட், அயர்ஸ் ராக், விக்டோரியா, டாஸ்மேனியா, மலையாளி சேட்டன்கள் மட்டுமே கடை போட்டிருக்கும் இன்னும் சில ஊர்கள் என்று நாங்கள் அப்போது சுற்றாத இடமே இல்லை. ஆஸ்திரேலியா விசிட் பற்றி ஏன் தனிப் பதிவு போடவில்லை என்று செல்லமாக திட்டித்தீர்த்த, திட்டிக் கொண்டிருக்கும் நண்பர்கள் அநேகம். கண்டிப்பாகப் போடுகிறேன்.

“மெல்பர்ன்ல எந்த சந்துல எப்படி அரிஃப்ளெக்ஸ் 435 காமெரா வெச்சா என்ன ஆங்கிள்ல எந்த பீச்ல என்னென்ன எவ்வளவு பெரிசாத் தெரியும்னு நான் சொல்றேன்” என்று நான் பொதுவாக ஜம்பம் அடித்து வைத்திருந்தேன்.

இந்த இடத்தில் சமீபத்திய ‘ஹாட் டாபிக்’கான ஆஸ்திரேலிய-இந்திய மாணவர்கள் முட்டல், மோதல் பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும். ஆஸ்திரேலியாவில் படித்து, என்னுடன் வேலை பார்த்த பல நண்பர்களை, பாங்க் ஆசாமிகளை நான் நன்றாக அறிவேன். ‘சிஸ்கோ’வில் நான் சீனியர் மேனேஜ்மெண்ட் குப்பை கொட்டியபோது என் சமஸ்தானம் ஆஸ்திரேலியா, நியுஸிலண்ட் வரை கணிசமாகப் பரவி இருந்தது. நேரில் நான் போய் வந்தபோதும், மீட்டிங்குகளிலும் அவர்களை அண்மையில் கவனித்துக் கணித்திருக்கிறேன்.

பொதுவாக ஆஸ்திரேலியர்கள் மகா சுகவாசிகள். ‘திங்கள் முதல் வெள்ளி வரை பீச், பீட்ஸா, பார்ட்டி, சனி, ஞாயிறில் கன்னா பின்னாவென்று கண் மண் தெரியாத மேலும் பார்ட்டி’ என்பதே ஆஸ்திரேலிய தேசீய குறிக்கோள். உலகத்தின் மற்ற இடங்களில் என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியாது. அது பற்றி அவர்கள் கவலைப்படுவதுமில்லை. அது ஒரு மகாப் பெரிய கண்டம். அங்கே போனால் நமக்கும் மற்றெல்லாம் மறந்து விடும் என்பதே உண்மை.

"காலை எழுந்தவுடன் cold beer, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல steak. மாலை முழுவதும் coffee and beer என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா” என்பது ஆஸ்திரேலியர்களுக்காக அழ. வள்ளியப்பா எழுதிய குழந்தைப் பாட்டு, அதுவே அவர்களுடைய தேசீய கீதம். அவ்வப்போது beerக்குப் பதிலாக கொஞ்சம் லோக்கல் shiraz, merlot என்று மாற்றிக் கொள்வார்களே தவிர, மற்றபடி பெருமளவில் ஸ்ருதி பேதம், தப்புத் தாளம் இருக்காது. வெள்ளைத் தாமரைப் பூவொத்த காற்றாடிப் பட்ட கனபாடி சரஸ்வதிகளும் இந்த ஜன சஞ்சார சிருங்காரங்களில் அடக்கம். காற்றோட்டமென்றால் அப்படியொரு காற்றோட்ட திவ்ய ஆனந்த பரிமள தேசம். எத்தனை பீச்சுகள், எத்தனை பரிமாணங்களில் கோவணாண்டி கோஷ்டிகள். பார்க்கும்போதே மூச்சு முட்டுமடா சாமி!

Australia Beach

இது தான் ஆஸ்திரேலியா. பார்ட்டி பண்ணுவதே அவர்கள் கர்ம யோகம், மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம் எல்லாம்.

இந்த ஆஸ்திரேலிய அடிநாதம் சரிவரப் பிடிபடாமல், நம்மூர் அசட்டு டென்ஷன் அம்மாஞ்சிகள், “மன்னிக்கவும். உற்சாகம் என்றாலே எனக்கு உவ்வே. நான் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன். நான் இங்கே வந்து மூன்று வாரமாகியும், இன்னமும் 378-வது வாய்ப்பாடு எனக்கு மனப்பாடம் ஆகவில்லையே என்று கவலையாக இருக்கிறது. எங்கள் கிராமத்து எல்லை முனீஸ்வரப் பூசாரியின் நொண்டித் தங்கைக்கு எப்பாடு பட்டேனும் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு டொனேஷன் தருவதாய் வாக்களித்து விட்டேனே. அதற்காக இன்னும் 20 மணி நேரம் தினமும் ஓவர்டைம் செய்ய வேண்டி இருக்கிறதே, அதற்குப் பிறகு, என் ஒரே அழுக்குச் சட்டையைத் துவைத்து ஓட்டின் மேல் உலர்த்த வேண்டுமே” என்று எதிலும் கலந்து கொள்ளாமல் உம்மணாமூஞ்சிகளாய் இருப்பதால் தான் இது ஒரு சமூகப் பிரச்னையாக ஆகிப்போனது. ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லார் அறிவிலாதார்’ என்று பல்லவன் பஸ்ஸில் படித்து ஒன்றும் புரியாமல் பின் மண்டையையைச் சொறிந்து கொண்டால் மட்டும் போதுமா?

‘தம்’ கேட்டார்களாம் ஒரு வெள்ளை வெற்று கோஷ்டிப் பயல்கள். வேலைவெட்டி இல்லாமல் வீண் வம்புக்கு அலைகிறவர்கள்.. பார்த்தாலே தெரியும், தம்-வம்புக்கு அலைகிற சொறி நாய்களென்று. அங்கே போய் “நான் தம்மே அடிப்பதில்லையே” என்கிற சுய விளக்க விமர்சனமும், புகை எதிர்ப்பு அன்புமணிப் பிரச்சாரமும் எதற்கு? “இந்தா மச்சி அஞ்சு டாலர். வோணும்னா சொல்லு, நம்ம நாயர் கடையாண்ட கணக்குல வாட்டர் பாக்கிட்டும் ஊறுகாயும் வாங்கிக்க. இறுதி வரை இழுத்து இன்பத்திலே கருகிப் போ கருமாந்திரமே” என்று சமயோஜிதமாக நாம் செயல்பட்டால் எல்லா படேலுக்கும் சிலையே வைத்து மகிழ்வான் மொக்கை வெள்ளையன்.

மும்பையிலும் டெல்லியும் கூட அடிக்கடி வெள்ளைக்கார டூரிஸ்ட் பெண்களை அத்து மீறி ரப்சர் செய்து விடுகிறார்கள் நம் ஊர் பொறுக்கிகள். அதற்காக இந்தியாவுக்குப் போவதே ஆபத்து என்கிற பிரசாரம் எடுபடுமா? வேறு மேட்டர் கிடைக்காத மீடியாவும் இதையெல்லாம் வைத்தே அசை போடுகிறது.

ஆஸ்திரேலியாவுக்குக் கிளம்ப நான் நாள் குறித்துச் சட்டி, பொட்டியெல்லாம் சரி செய்யும்போது, சென்னையிலிருந்து கூப்பிட்டு “சார், பொட்டிய ப்ளேன்ல இருந்து எறக்குங்க. இல்லாட்டி பைலட்டை பாங்காக் பக்கமா வண்டியத் திருப்பச் சொல்லுங்க” என்றார்கள்.

நான் பதைபதைத்தேன். “ஏம்ப்பா அந்தம்மா, அம்மம்மாவுக்கெல்லாம் ஷெட்யூல் சேஞ்ச்னு தெரியுமா? தனியா அங்க போய் அவுங்க மாட்டிக்கிட்டு, யாராவது தம் கேட்டு, ஏதாவது ஏடாகூடமா ஆயிடப் போவுது?”

“கவலையே படாதீங்க பாஸ். அல்லாரும் அல்ரெடி பாங்காக்கில தான் பீச்ல கலாய்ச்சிட்டிருக்காங்க. உங்களுக்குத்தான் வெயிட்டிங்”

(உச்சி வரை போவோம்)

Friday, June 19, 2009

யாம் பெற்ற இன்பம் -1

இமயமலைக்குச் செல்லும் பாதை, லாஸ் ஏஞ்சல்ஸ், பாங்காக், சென்னை, திருமெய்ச்சூர், கூத்தனூர், மயிலாடுதுறை வழியாகத்தான் என்று நான் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டும். டெல்லிக்கு ஃப்ளைட் போட்டு ரிஷிகேஷ் போவது ரஜினி ரூட். அண்ணன் எவ்வழி, அவ்வழி நம் வழி அல்ல. அதெல்லாம் அரதப் பழசு. நம் வழி தனி வழி!

himalaya

ஜூலை 2008:

லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு ஜூலை இரவில் என் செல் போன் சந்தோஷமாகக் கூவியது. என்னை எழுப்புவதில அதற்கு அவ்வளவு சந்தோஷம். கண்டா கண்ட நேரத்தில் அலைபேசி அலறினால் அது இந்தியாவிலிருந்து வரும் கால் தான் என்பது அநேகமாக எல்லா ‘என் ஆர் ஐ’களுமே தெரிந்து வைத்திருக்கும் பால பாடம்.

அதிகாலை மூன்று மணிக்கு எழுப்பி, “என்ன சார், நல்லா தூங்கிக்கிட்டிருந்தீங்களா?” என்பது தான் எப்போதுமே முதல் வாக்கியமாக அருளப்படும். செம தூக்கக் கலக்கத்தில் நான், “ஆங்..மா..பே..புஸ்” என்று ஏதாவது பெனாத்துவதைப் பொருட்படுத்தாமல் அடுத்த கேள்வியாக “இப்ப அங்க என்ன மணி ஆவுது?” என்று கேட்கும் நண்ப பாபிகள் அநேக அநேகம். தான் யார் என்பதை லேசில் சொல்லிவிட மாட்டார்கள். பத்தாயிரம் மைல் தள்ளி இருந்தாலும், பயங்கர தூக்கத்தில் எழுப்பினாலும் நம்மை அடையாளம் கண்டு கொண்டு விடுவார்கள் என்பதில் அன்னாருக்கு அசாத்திய நம்பிக்கை.

உலகத்தின் எந்த மூலை முடுக்கில் இப்போது சரியாக என்ன நேரம் என்று துல்லியமாகத் தெரிவிக்கக் கூடிய நெட் வசதிகள் எங்கெங்கும் பரவி இருந்தாலும், என் சென்னை சினிமா நண்பர்களுக்கு அதெல்லாம் வேப்பங்காய் சமாச்சாரம். இருக்கவே இருக்கிறார் நம் எல்லே நண்பர், அவரைத் தூக்கத்தில் எழுப்பி என்ன நேரம் இப்போது என்று விசாரித்துத் தெரிந்து கொண்டால் போகிறது!

அப்படித்தான் நண்பர் கே. எஸ். ரவிக்குமார் ஆஃபீசிலிருந்தும் அவருடைய தொண்டரடிப் பொடிகள் என்னைக் கூப்பிட்டுக் குசலம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். வழக்கமான இரவா/பகலா?, அட்சயரேகையா/பூமத்திய ரேகையா?, PSTயா/ESTயா? உபயகுசலோபரிகளுக்குப் பிறகு, “கொஞ்சம் இருங்க சார். டைரக்டரே உங்க கிட்ட போன்ல கால்ஷீட் பத்திப் பேசணும்ங்கறாரு”

நான் இப்போது நன்றாக விழித்துக் கொண்டு விட்டேன் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

“வணக்கம், ராம் சார், நீங்க ‘ஜக்குபாய்’ படத்துக்காக நேரா ஆஸ்திரேலியா வரும்படியா இருக்கும். கண்டிப்பா வந்துருவீங்கள்ல?”

தமிழில் பெரும் இயக்குனர்களில் ஒருவரான கே.எஸ்.ஆர்- அதுவும் அப்போது தான் ‘தசாவதாரத்’தின் பெரும் வெற்றியில் திளைத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் எந்த ஒரு நடிகரை எப்போது நடிக்கக் கூப்பிட்டாலும், உடனே அவர்கள் ஓடி வரச் சம்மதிப்பார்கள் என்பதும் நீங்கள் அறிந்ததே. நிலைமை அப்படி இருக்க, எதற்காக இயக்குனர் எல்லேயாருடன் இப்படி சந்தேகாஸ்பதமாக, கவலையுடன் உரையாட வேண்டும்?

இங்கே தான் ஒரு ஃப்ளாஷ்பேக்- கடந்த கால நிகழ்வுக் குறிப்பாய்யா, இதுக்குத் தமிழ்ல? - அவசியமாகிறது.

’ஜீன்ஸ்’ படத்தில் நான் எல்லே ஏர்போர்ட்டில் ஐஸ்வர்யாவின் கைத் தலம் பற்றியதும், ‘பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’ ரேஞ்சில், அம்மணி என் கைப் பற்றை விட முடியாமல் பாச மிகுதியில் பலப்பல ‘டேக்’குகள் வாங்கிக் கன்னம் சிவந்ததும், பிறபாடு அதே பற்று மிகுதியால் பாசக்காரப் பிணைப்பில் கட்டுண்டு நான் அநேக பல ‘கான்’களுடனும், ‘ஓபராய்’களுடனும் முட்டல்கள், மோதல்களைத் தொடர நேர்ந்ததும், கடோசி கடோசியாக அபிஷேக்ஜி உயர்ந்த மனிதனாக உள்ளே நுழைந்ததும், நான் ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று பாடிக் கையசைத்து பேக்ரவுண்டிலிருந்து விலகியதும்,‘நெட்’டில் உலா வந்த கர்ண பரம்பரைக் கனவுக் கதைகள்.

அப்போதே நான் எங்களூர் தாடிக்காரர் ரேஞ்சுக்கு ஒரு சபதம் போட்டிருந்தேன்: இனிமேல் யாரையும், குறிப்பாக இளம் கன்னிப் பெண்ணணுங்குகளைத் தொட்டு நடிப்பதில்லையென்று. அநாவசியமாகவோ, அனாயாசமாகவோ அவர்களைத் தொட்டெழுப்பி அவர்கள் நெஞ்சில் கனல் மூட்டுவானேன், அப்புறம் அது கொழுந்து விட்டெறிந்து, என் ‘செல்’லே கதியென்று அவர்கள் கிடக்க...வேண்டாமடா சாமி! ஹாலிவுட்டிலும் கூட நான் ஏஞ்சலீனா ஜோலீ, ஜெனிஃபர் லோபெஸ், ஷகீரா போன்ற அழகிகளுடன் நெருங்கி நடிக்க நான் சம்மதித்ததில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். ஹும்ம்.

shriya

“சரத் குமார் ஹீரோ, ஷ்ரியா ஹீரோயின், நீங்க ஹீரோயினுக்கு கார்டியனா, ஆஸ்திரேலியாவில இருக்கிற ஒரு அட்டர்னி ரோல் பண்றீங்க அவங்களோட நிறைய காம்பினேஷன்ஸ்” என்றெல்லாம் என்னிடம் இயக்குனர் என் ரோல் பற்றிச் சொல்லும்போதே, “அடாடா, மீண்டும் ஒரு அழகுப் பெண்ணோடு நடிக்க வேண்டுமா? அதுவும் இந்தப் பெண் ‘மழை’யில் நனைவதற்கென்றே பிறந்த பஞ்சாப் மேனி கொண்டவளாயிற்றே, கட்டிப் பிடிக்கின்ற ஸீன் ஏதாவது இருந்து விட்டால் என்னாவது நம் பிரம்மச்சரிய விரதம்?” என்று நான் மனதுக்குள் படபடத் தேன். கண் வேர்த் தேன். கால் சோர்ந் தேன்.

“சரி ரவிஜி, மெல்போர்ன் வந்துடறேன். கண்டிப்பா!”

“சார், நீங்க வேற, வராம கிறாம இருந்துறாதீங்க. உங்க போட்டோவைப் பார்த்ததில இருந்து அந்தப் பொண்ணு சரியா சாப்பிடறதில்லை, தூங்கறதில்லை. ஹீரோவ மாத்தினாலும் மாத்திங்கப்பா, என் கார்டியனை மட்டும் மாத்திறாதீங்கன்னு ஹிந்தியிலயும் பஞ்சாபிலயும் மாத்தி மாத்திப் பொலம்பிக்கிட்டிருக்குது. கொஞ்சம் உங்க விரதத்திலேயிருந்து இறங்கி வந்து அருள் பாலிங்க சார்” என்று அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் அழுத ஞாபகம்.

இமயமலைக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம் என்பவர்கள், அடுத்த போஸ்டிங் வரை காத்திருக்க வேண்டியது தான்!

(உச்சி வரை போவோம்)

Thursday, June 18, 2009

’யாம் பெற்ற இன்பம்’ - சின்னஞ்சிறு முற்குறிப்பு

”நல்ல காரியங்களை உடனுக்குடன் செய்து விட வேண்டும்.

உள்ளுக்குள்ளேயே ஊறப்போட்டு, செய்யலாமா, வேண்டாமா என்று தயக்கத்திலும், சோம்பேறித்தனத்திலும் இருந்தால், சோர்வும், சலிப்புமே மிஞ்சும். அன்றாடம் செய்து முடிக்க வேண்டிய பணிகளே வரிசை கட்டி நிற்பதால், எதையும் ’ஆகட்டும், அப்புறம் பார்க்கலாம்’ என்று தள்ளிப்போடுவது சுலபம்.

‘ஊஹூம், இப்போது வேண்டாம், அப்புறமாகப் பார்த்துக் கொள்ளலாம்’ என்கிற சால்ஜாப்புக்குத்தான் ஆயிரக் கணக்கான மோசமான உதாரணங்கள் இருக்கின்றனவே. ஆனால், இனிமேலும் ஜகா வாங்காமல், ம்,ம்ம், சீக்கிரம், மொதல்ல எழுந்திரிங்க சொல்றேன், வேற பேச்சே வேணாம், எழுத ஆரம்பிங்க ...!”

மேற்சொன்ன தொனியில் பல ரீங்காரங்கள் எனக்குள்ளும், என் ரசிக மகா ஜனங்களிடமிருந்தும் ஏகோபித்து ஒலிக்க ஆரம்பித்து விட்டதால், ‘யாம் பெற்ற இன்பம்’ ஆரம்பிக்கப் போகிறது.

இமாலயப் பயணம் இது!

உனக்கு நினைவிருக்கிறதோடீ?

பல்லாங்குழி ஆடும்போது
பட்ட விரல்களினால்
மின்சாரம் ஏதும்
சுட்டு விடவில்லை

கரும்பு வெட்டிய என் விரலை
பதறித் துடைத்தழுதபோது
அவள் பார்வையில்
மின்னலெல்லாமில்லை

முல்லைப்பூ பறிக்கையில்
ஏணிப்படி தடுக்கிவிட
அணைத்துப் பிடித்தபோது
நட்சத்திரங்கள்
வானில் கண் சிமிட்டவில்லை

ஒட்டுத் திண்ணையிலும்
மொட்டைக் கிணற்றடியிலும்
ஒரு கோடை முடிந்தது
பதினாறு கழிந்தது

ஊருக்குப் போகுமுன்
ஒருவருக்கும் தெரியாமல்
ஓடி வந்து

அழுத கண்களும்
சிவந்த மூக்குமாய்க்
கசங்கிய காகிதம் ஒன்று
கொடுத்தாளே?

"நீ என்னை மறந்தாலும்
நான் உன்னை மறக்கமாட்டேன்"

எனக்கு மறக்கவில்லை
உனக்கு நினைவிருக்கிறதோடீ?

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Monday, February 23, 2009

Discovery of India!

Bravo AR.Rahman!

Bollywood was re-discovered by Hollywood when Slumdog swept the Oscars yesterday night.

Congratulations to Danny Boyle's team and the entire ensemble!

Keep it up, India!

Los Angeles Ram
(Travelling in Dubai. No access to Tamil fonts, will post more once I reach India)