என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, July 08, 2005

பிறந்தகப் பெருமை -3

கும்பகோணம் கொழுந்து வெற்றிலைத் தளிருக்கும் கொழாய்ப் பேண்டுக்கும் அவ்வளவாகச் சரிப்பட்டு வராது.

வெற்றிலையை ஒரு முறை நன்றாக வெளிச்சத்தில் பார்க்கவேண்டும். பின், அதை லாவகமாக உதறவேண்டும். ஸ்டைலாக என்றும் சொல்லலாம். அந்த ஈரத்தைத் தொடை வேட்டியில் தடவ வேண்டும். அதற்காகக் குனிந்து தொடையை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கவேண்டாம்.

'லாவகம்' என்கிற பதம் இங்கே மிகுந்த கவனத்துடன் தான் கையாளப்பட்டிருக்கிறது. 'கெக்கே பிக்கே' என்று நீங்கள் தொடையைத் தடவ ஆரம்பித்தால், அல்லது வெற்றிலையையே உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால், கடைக்காரர் உங்களை ஒதுக்கி அடுத்த கஸ்டமருக்குப் போய் விடக்கூடிய அபாயம் நிஜமாகவே இருக்கிறது.

வலது கை ஆள்காட்டி விரலால் கொஞ்சம் சுண்ணாம்பை எடுத்து வெற்றிலை மேல் சீராகத் தடவவேண்டும். 'சீராக' என்று சொன்னேன். குண்டக்க மண்டக்க சுண்ணாம்புக் கட்டிகளை வெற்றிலையில் உருட்டி சொதப்பினால் வாய் வெந்து விடும். 'சுண்ணாம்பு தடவுவது' என்பது அரசு காக்கவேண்டிய அருங்கலை. அதிலும் கலர் சுண்ணாம்பு, பன்னீர் சுண்ணாம்பு என்று கலப்படம் எல்லாம் நடக்கிறது. 'அந்நியன்.காமி'ல் இது பற்றிப் பதியவேண்டும். புதுச் சுண்ணாம்பு காறும். பழைய சுண்ணாம்பில் காரமே இருக்காது. பின்னர், எப்படி இது பற்றித் தெரிந்து கொள்வது? என்கிறீர்களா? நானே உங்களை அப்புறம் ஒரு சுண்ணாம்புக் காளவாய் பக்கம் டூர் அழைத்துப் போகிறேன். பார்க்க வேண்டிய இடம்.

சுண்ணாம்பு தடவியாயிற்றா? பிறகு கொழுந்தியை நீளவாக்கில் இரண்டாக மடித்துப் போட்டு, மன்னிக்கவும். வேறு ஏதோ ஞாபகம். கொழுந்து வெற்றிலையை நீளவாக்கில் இரண்டாக மடித்து, வெற்றிலையின் மேல் காம்பிலிருந்து ஓடும் அந்த நரம்பை, அதன் முதுகுத் தண்டைச் சரேலென்று ஒரே இழுப்பில் கிழிக்கவேண்டும். ஆனால் வெற்றிலை கிழியக்கூடாது. கிழிந்தால் ஆட்டம் க்ளோஸ். ஒரே இழுப்பு தான் இங்கே அனுமதிக்கப்படுகிற்து. இரண்டு மூன்று தடவை இழுத்துக் கொசப்பினால் உங்களுக்கு வெற்றிலை கிடையாது. ஆரம்பத்தில் இது கடினம் தான். எனக்கும் தெரியும். இருந்தாலும் அது அப்படித்தான். இங்கே கை நடுங்கித் தடுமாறக்கூடிய புதுக் கஷ்டமர்கள் எங்கேயாவது சோடாக் கடையில் காய்ந்த பீடா போட்டுக்கொண்டு போவதே நல்லது. அந்த பீடாக் கருமம் பரற்றிக் கீழே சொல்லுகிறேன்.

இதையெல்லாம் படிப்பதற்கு வேடிக்கையாகத் தோன்றும். சரியாகச் செய்து பாஸ் மார்க் வாங்குகின்ற நிலைக்கு நீங்கள் வர ஒரு ஏழு வருடப் பயிற்சியாவது தேவை.

அது சரி, 'இவன் எதற்கு வெற்றிலையை வெளிச்சத்தில் பார் என்கிறான், இது என்ன பயாஸ்கோப்பா?', 'ஈரத்தை எடுக்கப் பேண்டை விட வேட்டியே பெட்டர் என்கிறீரே, இது என்னய்யா புது ரீல்?' என்று உங்களில் சிலர் என்னிடம் நம்பிக்கையற்று மருள்வது எனக்குத் தெரியும்.

வெற்றிலைக்கு ஃப்ரஷ்னஸ் மிக முக்கியம். கொடிக்கால்களில் இருந்து பறிக்கப்படும் வெற்றிலை உடனுக்குடன் ஈரத் துணிகளில் சுற்றப்பட்டு நல்ல காற்றோட்டமுள்ள ஓலைக் கூடைகளில் (ப்ளாஸ்டிக் உதவாது) கொண்டு வரப்படுகிறது.. வெற்றிலை போடுவது உங்களுக்கு மட்டுமல்ல, சில சின்னஞ்சிறு புழு, பூச்சிகளுக்கும் பிடிக்கும். அதனால் தான் வெற்றிலை வாடாமல் இருக்கிறதா, ஃப்ரஷ்ஷாக இருக்கிறதா, புழு, பூச்சி ஏதுமில்லையே என்று பார்க்குமுகமாக மேற்சொன்ன பயாஸ்கோப் டெஸ்ட்.

மிகுந்த ஈரத்தில் சுண்ணாம்பைத் தடவினால் அது ஓட ஆரம்பிக்கும். நீங்கள் என்ன குட்டிச் சுவருக்கா வெள்ளை அடிக்கிறீர்கள்? அதனால் தான் அதீத ஈரம் வேட்டியால் உறிஞ்சி எடுக்கப்படவேண்டும் என்றேன். பேண்டின் முரட்டுத் துணியோ, பட்டனோ, ஜிப்போ வெற்றிலையைக் கிழித்து விடும். எட்டு முழம் வேட்டி முக்கால் வாசியும் காட்டன். எனவே வேட்டியே இந்த விவகாரத்திற்கெல்லாம் சாலச் சிறந்தது.

'ஒருவர் எத்தனை வெற்றிலை போடலாம்?'

இந்தக் கேள்வி வேத காலத்திலிருந்தே கேட்கப்பட்டு வருகிறது. இன்னமும் இதற்குச் சரியான பதில் கொடுப்பார் தான் இல்லை. 'ஏகோ நைவ:ஸவ:க:கிம் யத்தத் பதமனுத்தமம்?' என்கிறார் வியாஸர். வடமொழி சரியாகத் தெரியாததால், 'எத்தனை வெற்றிலை போட்டால் ஒரு மனிதன் பூனை மாதிரிக் கக்காமல் இருக்க முடியும்?' என்பது என் புரிதல். பதில் வேத ரகசியம்.

எட்டோ, பத்தோ போட்டால், 'ஆடு மாதிரி தழை துண்றான் பாரு' என்பார்கள். ஒன்றோ இரண்டோ போட்டால் நாக்கு சிவக்காது. காரியத்துக்கு ஆவாது. நாக்கு ஏன் சிவக்க வேண்டும்? அதைப் பிறகு சொல்வேன். நாக்கு சிவந்தால் தான் கிளி கொஞ்சும். கிளி எதற்குக் கொஞ்சவேண்டும்? அதையும் பிறகு சொல்வேன்.

அவரவர் வயது, மூடு, வாயளவு, சற்றுமுன் சாப்பிட்ட கொள்ளளவு, கூட இருக்கின்ற நபரின் வயது, இளமை, அழகு, அன்றையத் தேதியின் சூரிய அயனாம்சம், நீங்கள் நிற்கின்ற அட்ச ரேகை, பூ மத்திய ரேகை போன்ற பல விகிதாச்சார சமனாம்சங்களைக் கொண்டு 'எத்தனை வெத்தலை?' நிர்ணயிக்கப்படுகிறது.

கடைக்காரரைப் பொறுத்த வரை 'கவுளி' என்பதே கணக்கு. ஒரு கவுளிக்கு நூறு வெற்றிலை. 'கவுளி' என் சொந்த்ச் சரக்கு அல்ல. இது க. தோன்றி ம. தோன்றாக் காலத்தேயுதித்த செந்தமிழ்ப் பிரயோகம். எதற்கெடுத்தாலும் 'இந்த ஆங்கிலப் பதத்திற்குப் பதிலாக நீங்கள் இதைப் பாவிக்கலாம்' என்று ஒரு தமிழ் வல்லுனர் போட்டுப் பிராண்டுவாரே, அவரை வேண்டுமானலும் கேட்டுப் பாருங்கள். சரியாகக் கேட்டுத் தொலையுங்கள். 'கௌளி' என்பது பல்லி.. நீங்கள் எதையாவது தப்பாகக் கேட்டு விட்டால், 'பல்லி எப்படி அய்யா பச்சை ஆகும்?' என்று அவர் என்னிடம் எதையாவது கேட்டு, அதற்குத் தக்க புதுச் சொல்லை நானே கண்டு பிடிக்கிறேன் பார் என்று ஆரம்பித்து.... அய்யோ, ஆளை விடுங்க சாமி.

சொக்குப் பிள்ளை கடையில் தான் இன்னமும் வெற்றிலை போட்டுக் கொண்டிருக்கிறோம். எனக்கெல்லாம் எந்த நேரத்தில் எத்தனை வெற்றிலை என்பது ஒரு கணக்கில் வராது. மருத்துவர் மாத்திரையை அளந்து கொடுப்பது போல், மயங்கிச் சரியும் வேளையில் மாதொருத்தி இதமாகக் கை, கால் பிடித்து வருடி விடுவது போல், என் மனோநிலை அறிந்து அவர் கொடுத்துக் கொண்டே இருப்பார். அவருக்கு எல்லாம் தெரியும் என்பது எனக்கும் தெரியும். குத்துமதிப்பெல்லாம் இல்லாமல் சரியான இடத்தில் அதை நிறுத்தி, அப்புறமாகக் கொஞ்சம் உறித்த ஏலக்காய், ஒன்றோ இரண்டோ (டைரட்லி ப்ரபோர்ஷனல் டு வெற்றிலை இன்டேக்), கிராம்பு, ஜாதிபத்திரி, நக்கினியூண்டு லவங்கம், நாலைந்து ரின்டான் உருண்டைகள் எல்லாம் ஒரு ஆர்டரில் அவர் கையிலிருந்து என் வாய்க்குப் போகும். நடுநடுவே ஒரு அநாவசியப் பேச்சு இருக்காது. வியாபாரம் கன கச்சிதமாகக் காளி கைகளுடன் தொடரும். மிஞ்சிப்போனால் ஒரு 'ம்' அல்லது ஒரு புருவ முடிச்சு. அவ்வளவு தான்.

சென்னைப் பீடாக் கசமாலக் காசுபிடுங்கி ஸ்தலங்களில் ஏலக்காயை உறித்துக்கூடப் போடாமல் அப்படியே பீடாவுக்குள் போட்டுக் கொடுப்பதையும், மண்டூக மறத் தமிழன் அதைக் கையேந்தி வாங்கிக் காசும் கொடுத்துப் புளகாங்கிதம் அடைவதையும் கண்டு நான் நெஞ்சம் புண்ணாகி இருக்கிறேன். அதனால் தான் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது. தமிழ்க்குடிதாங்கியாரிடம் யாராவது இதைச் சொல்வீர்களா? ஏலக்காயை அப்படியே போட்டால் என்ன ஆகும்? ஏற்கனவே எலிப்புழுக்கை சைசில் இருக்கும் ஏலக்காய் நாக்கில் உறுத்தி, ஈரத்தில் உருக்குலைந்து, புழுக்கைகள் பல்லிடுங்கில் பதுங்கிப் படுத்தும். அதற்கு வெட்கமே கிடையாது. எந்த நாக்குக்கும் அது பயப்படாது. அதைத் துப்புவதாக நினைத்துக்கொண்டு பீடாவைத் துப்பி, அப்புறம் 'ஐயகோ'வென்று அசடு வழிய ஏமாந்து,... துப்பிய பீடாவையும், கொட்டி விட்ட வார்த்தைகளையும் அள்ள முடியுமோ? கைபர் கணவாய் வழியாகத் திராவிடம் புகுந்தது ஆரியரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அந்த ரூட்டில் வந்தது பீடா தான் என்று நான் எங்கேயும் அடித்துச் சொல்லுவென்.

முதலில், அந்த பீடாக்காரன் குளித்தே ஒரு ஐந்து மாதம் இருக்கும். தட்டு மட்டும் பளபளப்பாய் இருந்துவிட்டால் போதுமா? யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்? தமிழன் என்ன அவ்வளவு போங்கா? வெற்றிலை வைத்திருக்கும் பக்கெட்டிலும் அழுக்குத் தண்ணீரிலும் நீங்கள் கால் கூடக் கழுவ மாட்டீர்கள். வெற்றிலை என்ன செத்தா போய் விட்டது? அதற்கு எதற்கு ஒரு அழுக்குப் போர்வை? அந்தப் போர்வை எப்போதாவது, யாராலாவது துவைக்கப்பட்டிருக்கிறதா? ஏன் 'அம்மா' இதையெல்லாம் கண்டு கொள்வதே இல்லை? என்னென்னவோ கோந்தையும் பிசினையும் காட்டாமணி சைஸ் வெற்றிலையில் ஈஷி, ப்ரஷ்ஷால் என்னவோ தடவிக்கொடுத்து, சின்ன ஷவர ப்ளேடால் அதை வயிற்றில் கீறி ஆபரேஷன் பண்ணி, பல்லி எச்சம் மாதிரி ஏதோ உருண்டையை அதில் போட்டு மூடி, அதற்கு 420 740 என்று ஏதாவது மெர்சிடீஸ், பிஎம்டபிள்யூ மாடல் மாதிரிப் பெயர் வைத்து விட்டால் கண்ணை மூடிக்கொண்டு காசை விட்டெறிவீர்களா? இந்தியப் பொருளாதாரம் மந்தமாக இருப்பதே இதனால் தான். யாராவது கூப்பிடுங்கள் ப.சி.யை.

சாரி, கொஞ்சம் டிராக் மாறி விட்டேன். தமிழ்ப் பாரம்பரியம் குலைகிறது என்றால் என்னால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. நாம் இன்னும் வெற்றிலை போட்டு முடிந்த பாடில்லை. இப்போது தான் அத்தவத்தின் அதிமுக்கிய கட்டம். இதன் பெயர் புகையிலைப் பிரயோகாரம்பம். பகவத் கீதையின் இரண்டாவது அத்தியாயமோ, ஏழாவது அத்தியாயமோ தான் அதன் சாரம் என்று சொல்லுவார்களே, அப்படி இந்த இடம் தான் இந்த வெற்றிலை போடும் அரிய அனுபவத்தின் சாராம்சம். நன்றாகக் கவனிக்கப்படவேண்டிய இடம்.

புகையிலைகள் பலவிதம். 'காஜா மைதீன்' எல்லாம் உங்களை மாதிரி நகர மாந்தர்க்குச் சரிப்பட்டு வராது. ஒரே காட்டம். XXX ரம்மை சப்பையிலிருந்து டைரக்டாக ஒரே மூச்சில் கோக், கீக் ஏதும் கலக்காமல் அடித்தாற்போல் ஒரு தூக்குத் தூக்கி விடும். ஹி. ஹி. எல்லாம் கேள்வி ஞானம் தான். நான் எங்கே அதெல்லாம் சாப்பிட்டிருக்கிறேன்? 'ராஜாஜி பன்னீர் புகையிலை' பன்னீர் வாசனை, இலேசான தித்திப்பு, கொஞ்சம் காரம் கலந்த வினோதக் குவியல். அதை அப்படியேயும் ஒரு உருட்டு உருட்டி வாயில் அதக்கிக் கொள்ளலாம். அல்லது எங்கள் மாமா செய்வது போல் சாதா காட்டா புகையிலையையும், அதையும் வீட்டிற்கு எடுத்துச் சென்று 'தினமணி' பேப்பர் ஏ. என். சிவராமன் எழுதிய தலையங்கத்தில் அதைக் கொட்டி, ஒரு பர்ட்டிகுலர் விகிதத்தில் ('கோக்' மாதிரிக் காப்புரிமை பெற்ற கலவை, கடைசி வரை அவர் விகிதாச்சாரம் சொல்லவே இல்லை) கலந்தும் பிறகு அவ்வப்போது, தேவைக்கேற்ப, உபயோகிக்கலாம்.

ஆயிற்று, வெற்றிலை போட்டுக் கொண்டாயிற்று. இலேசான கிறுகிறுப்பெல்லாம் போய் ஒரு புத்துணர்ச்சியும், சுறுசுறுப்பும் உங்களுக்கு வந்திருக்கும். உதட்டோரம் கொஞ்சம் எச்சிலோடு புன்முறுவலும் எட்டிப் பார்க்கும். அசடு வழிவது போய்க் கொஞ்சூண்டு புகையிலைச் சாறு வழியும். வேட்டியை இலேசாகத் தூக்கி மடித்துக் கட்டிக் கொண்டு கர்சீஃபைக் காலர் அடியில் மடித்து வைத்துக்கொண்டு, மைனர் செயின், புலிநகம், வெள்ளித் தாயத்து எல்லாம் வெளியே தெரிய, "எங்டா பாபு, எங்ழ போழ?" என்று நீங்கள் கேட்டால் அல்மோஸ்ட் மாயவரத்தான் ஆகி விடுகிறீர்கள்.

அப்படியே பஸ் ஸ்டாண்ட் பக்கம் போகலாமா அல்லது லாகடமா, வள்ளலார் கோவிலா? பலத்த யோசனை தான். எல்லாமே மிக, மிக முக்கியமான இடங்கள் தான். எதையுமே விட்டுவிட முடியாது. என்ன செய்யலாம்?

உங்கள் யோசனையைக் கலைக்கும் அப்சரஸ் மாமிகள் யார்? அவர்கள் முகங்களில் தான் என்ன அப்படி ஒரு சந்தோஷம்? 'மெட்டி ஒலி' பார்த்து, சதா சர்வ காலமும் அழுது, கண் சிவந்து, மூக்கைச் சிந்தும் மாம்ஸ்களா இவர்கள்? 'என்ன இடை, என்ன நடை, என்ன சிவப்பு, என்ன சிரிப்பு?'. இவை அத்தனையுமே நமக்காகத்தானோ? மன்மத அழகுடன் சற்றே காலைச் சாய்த்தபடி வாயில் புகையிலையைக் குதப்பியபடி வேட்டியை மடித்துக் கட்டி நிற்கிறீர்களே,, தங்கள் அழகைக் கண்டு தானோ எல்லாக் குயில்களும் கூவுகின்றன?

சாரி. உங்கள் மனக் கோட்டையை நான் தகர்க்க வேண்டி இருக்கிறது.

அங்கே, பக்கத்திலேயே பாருங்கள். அது தான் A. R. C. ஜுவல்லரி. அங்கே போகும் ஜோரில் தான் அவர்கள் அவ்வளவு குதூகலிக்கிறார்கள். நீங்கள் விருமாண்டி போசிலேயே இன்னும் கொஞ்ச நேரம் பாருங்கள். அந்த மாமிகளும், மாமிகளின் இளவரசிகளும் கடைக்குள் நுழைந்த பின், முகத்தில் ஏகத்துக்கும் பேஸ்தடித்தபடி வெளியே வந்து கவலையே கருமமாக நிற்கிறாரே, அவர் தான் மிஸ்டர் வெறுமாண்டி மாமா. கிட்டே போய் பேசிக்கீசி விடாதீர்கள். செம கடுப்பில் இருக்கிறார்.

அவரை அப்படியே விட்டு விட்டு நாம் முதலில் பஸ் ஸ்டாண்ட் பக்கம் போவோம்.

(இன்னும் போவோம்)

12 comments:

ஏஜண்ட் NJ said...

வெற்றிலை...
வேஷ்டி....
வியாஸர்...

வாஹ்...வாஹ்..வா...

யாருப்பா அது...
வேட்டி கட்டிக்கிட்டு
வெத்தல போடுறது
வெட்டி வேல...
அப்டீன்னு கூவுறது...
யாரு வியாஸரா...!
வாழ்க....!!

- ஞானபீடம்.

Nirmala. said...

வாவ்! பழைய ராம்! ரசிச்சேன்.

நிர்மலா.

முகமூடி said...

அட அட அட... சும்ம பிச்சு உதறுரியேன நைனா... இந்த தொடர் முடியும் பொது மாயவரதுக்கு ரெயில்ல டிக்கெட் கெடக்காது போலருக்கே...

துளசி கோபால் said...

வெத்தலை வெத்தலை வெத்தலையோ கொழுந்து வெத்தலையோ
சின்னச் சின்னக் கொழுந்து வெத்தலையோ
:-))))))))

ரசித்தேன்.

வாழ்த்துக்கள்!!!!

என்றும் அன்புடன்,
துளசி.

ஏஜண்ட் NJ said...

//... கொழுந்தியை நீளவாக்கில் இரண்டாக மடித்துப் போட்டு, ... காம்பிலிருந்து ஓடும் அந்த நரம்பை... சரேலென்று ஒரே இழுப்பில் கிழிக்கவேண்டும்.... 'ஏகோ நைவ:ஸவ:க:கிம் யத்தத் பதமனுத்தமம்'... என்கிறார் வியாஸர்.

சிவ... சிவ... ;-)


- ஞானபீடம்.

Anonymous said...

அண்ணா,
வெத்தலைல போடமயே, அந்த கிக் வந்துடுத்துண்ணா. பேஷா எழுதறேள். அந்த மென்னியப் புடிக்கிற கைச்சீவல் சனியனை ஒரு தரம் தெரியாத்தனமா போட்டுண்டு, என்னால மெல்லவும் முடியமா, துப்பவும் முடியமா, ரொம்ப அவஸ்தைப் பட்டுட்டேன். சரி சரி, என் பிலாக்கணம்லாம் இருக்கட்டும், இன்னும் இந்த மாதிரி நிறைய எழுதுங்கோ...

jeevagv said...

சூப்பர்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

மஞ்சுளா, ஞானபீடம், நிர்மலா, முகமூடி, துளசி, சந்துரு, ஜீவா,

அனைவருக்கும் என் அன்பு கலந்த நன்றி. உங்கள் பின்னூட்டங்கள் தான் என் போன்றோர்க்கு டானிக்!

வானம்பாடி said...

ராமா, பதிவா இது.. ஒரு 'வெத்திலை புராணம்' அல்லவா எழுதியிருக்கிறீர்..

Anonymous said...

kalakkal ponga. Original thanjai mavatta kusumbu therikirathu.

Anonymous said...

veththilai pottu naakku sivakkirathu..indha kiLi konjarathu
......edho sollavandhu maraikkiriingka
adhai mudhalla sollunga!
anbudan
shylaja

Anonymous said...

Vethala kada Sokku Pillai Patri ezhudhi, ennoda Mayavaram Ninaivugalai Usuppivitteer..Nanri!!!

Ramaseshan