என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, March 25, 2005

அம்மாவுக்கு ஒரு கடிதம்

நேற்று மாலை திடீரென்று என் அண்ணன் ஸ்வாமிநாதன் தொலைபேசியில் என்னை அழைத்தார்:

"சென்ற வருடம் அந்த சுருட்டப்பள்ளி என்கிற ஒரு ஊரைப் பற்றி இந்தியாவிலிருந்து அம்மாவுக்கு எழுதியிருந்தாயே, அந்தக் கடிதத்தை இப்போது மறுமுறை பார்த்தேன். அதை நெட்டில் போட்டாலென்ன?"

எனக்கு மறந்தே போய்விட்ட அந்தக் கடிதத்தை அவர் நினவுடுத்தியதும், நானும் அதைத் தேடிக் கண்டுபிடித்துப் படித்தேன். 'போடலாமே' என்று தான் தோன்றியது.

என் அம்மாவுக்கு நான் டிசம்பர் 2003 முடியும்போது எழுதியது அது. பரவாயில்லை. நீங்களும் படியுங்கள்.

பிறர் கடிதத்தைப் படிக்கின்ற பாவம் 'சுருட்டப்பள்ளி' மகிமையால ஓடியே போகட்டும். புண்ணீயம், கிண்ணீயம் ஏதாவது கிடைத்தால் மட்டும் அதில் எனக்கும் பங்கு வேண்டும்.

சென்னை, டிசம்பர் 31, 2003
-----------------------------

அன்புள்ள அம்மாவுக்கு,

சந்துரு அநேக நமஸ்காரம். நான் இங்கே சென்னையில் சௌக்கியமாக இருக்கிறேன். நீ உடம்பு ஒன்றுமில்லாமல் நன்றாக இருக்கிறாயா? முழங்கால் வலி எப்படி இருக்கிறது?

இங்கே வெயில் தற்சமயம் அதிகமில்லை. அவ்வப்போது கொஞ்சம் தூறல். சில சம்யம் கொஞ்சூண்டு, அடித்துப்பெய்யாமல், அசமஞ்சமான மழை. அதிலேயே ஊர் நாறிப்போகிறது வழக்கம்போல். ஆனாலும், அடையார் ஆற்றைப் பெருமளவில் சுத்திகரித்திருப்பதால் கொசுக்கள் மிகவும் குறைந்து விட்டன என்று தான் சொல்லவேண்டும். வேண்டுமான மழை பெய்யாததால் இந்த வருஷமும் சம்மரில் சென்னை தண்ணீருக்குத் 'ததிங்கிணதோம்' போடப்போவதாகத்தான் சொல்கிறார்கள்.

சென்ற பிரதோஷத்தின்போது (டிசம்பர் 14) நான் சில நண்பர்களுடன் ஆந்திரா பார்டரில் இருக்கும் 'சுருட்டபள்ளி' என்கிற இடத்திற்குப் போயிருந்தேன். அங்கே பிரதோஷ காலம் ரொம்பவும் விசேஷம் என்று சொல்லி நண்பர்கள் அழைத்துச் சென்றிருந்தார்கள். 'பள்ளிகொண்டேஸ்வரர்' என்பது அங்கே சிவனின் நாமம். ஸ்ரீரங்கம் பெருமாள் மாதிரிப் படுத்த கோலத்தில் சிவன் அங்கே ஆச்சரியமான விஷயம். அதுவும் பெரிய சிலை வடிவில் அசல் பெருமாள் மாதிரி, ஆனால் பார்வதி மடியில், மந்தகாசமான புன்னகையுடன் படுத்திருக்கிறார். கர்ப்பக்கிரகத்தைச் சுற்றிலும் சுவற்றில் தேவர்கள், ரிஷிகள்.

சின்ன, கிராமத்துக் கோவில் தான் என்றாலும் நன்றாகப் பராமரித்து வருகிறார்கள் போலத்தான் தெரிகிறது. நாங்கள் போனபோதே ஏகப்பட்ட கூட்டம் என்றாலும் என்னை அழைத்துச் சென்றவர்கள் ஆலயக் கமிட்டி மெம்பர்கள் என்பதால் அதிக சிரமமில்லாமல் உள்ளே போக முடிந்தது. போனவுடன் நேரே பள்ளிகொண்ட ஈஸ்வரனைப் பார்க்கப்போகிறோமென்று நினைத்திருந்த எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. நெருக்கியடித்துக்கொண்டு எல்லோரும் எட்டி எம்பிப் பார்த்துக்கொண்டிருந்தது சிவனின் சின்ன வாகனத்தை. சிவனுக்கு எதிரில் இருந்த சின்ன நந்திக்குத்தான் பிரதோஷ காலத்தில் எல்லா மரியாதைகளும், பூஜைகளும்.

கபாலி கோவிலில் பிரதோஷத்தின் போது சிவனைப் பல்லக்கில் தூக்கி வருவதையும், பக்தர்கள் ருத்ரம், சமகம் சொல்லியபடி பிரதட்சிணமாக சிவனின் பின்னேயும் முன்னேயும் வருவதையும், கற்பகாம்பாள் எதிரில் வந்தவுடன் அம்பாளுக்கும் அவருக்கும் ஒரே நேரத்தில் ஆரத்தி எடுப்பதையும் மட்டும் தான் பார்த்திருக்கிறேன். மாலிபு கோவிலில் கூட பிரதோஷமென்றால் சிவனுக்கு ஆனந்தமாக அபிஷேகம். அவ்வளவு தான்.

ஆனால் இங்கே நந்திகேசுவரருக்கு என்ன இவ்வளவு கொண்டாட்டம்? புரியாமல் கொஞ்சம் விழித்து என்னை அழைத்துச் சென்றவர்களிடமே கேட்டேன்.

தலபுராணம் என்ன என்று சொன்னார்கள். சிவதாண்டவத்தின் போது சிவனின் உக்கிர நடனம் தாங்காமல் சர்வ லோகங்களும் நடுங்குகின்றன. பார்வதி, தேவர்கள், யோகிகள், ஞானிகள் என்று யார் சொல்லியும் சிவன் கேட்பதாயில்லை. எல்லா உயிர்களும் நடுங்குகின்றன. கடைசியில் சிவனின் வாகனமான நந்திகேஸ்வரர் போய் சிவனிடம் கோபத்தைக் குறைத்துக்கொள்ளுமாறு வேண்டி சிவனின் பயங்கர தாண்டவத்தால் உலகமே நடுங்குவதாகச் சொல்லுகிறார். அப்போது சிவன், 'நான் எங்கே போ ஆடுவது?' என்று கேட்க, 'என் தலையிலே ஏறி ஆடுங்கள், நான் தாங்கிக் கொள்கிறேன்' என்று நந்தி சொல்கிறார். விடையேறிய பெருமான் விடையின் கொம்புகளுக்கு இடையே நின்று நர்த்தனம் ஆடுகிறார். சிவனின் ருத்ர தாண்டவத்தைத் தன் தலையில் தாங்கிப் பின் சிவனின் கோபத்தைத் தணிக்க உதவியதால் அந்த நேரத்தில், அதாவது அந்தத் 'த்ரயோதசி' தினத்து சாயங்காலத்தில், பிரதோஷம் என்று இன்னமும் எல்லா சிவன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது, மாதமிரு முறை. அதனால் அந்த நேரத்தில் நந்திக்கு பூஜை செய்வது பெரிய விஷயம் என்று சொன்னார்கள். ஆந்திராவில் இருந்த கோவிலாக இருந்தாலும் தமிழில் தேவாரப் பாடல்களும் பாடினார்கள். 'எங்கள் ஊரில் தெலுங்கில் தான் பாடவேண்டும்' என்று யாரும் கொடி பிடிக்கவில்லை. உள்ளே சிவனுக்கும் அதே நேரத்தில் அலங்காரம், பூஜைகள் நடந்தாலும் கூட்டம் அலை மோதுவது நந்தியிடத்தில் தான். பூஜை, ஆரத்தி, அர்ச்சனை என்று எல்லாம் முடிந்து உள்ளே போய் தனி சந்நிதியில் அம்பாளையும், பிறகு பார்வதி மடியில் பள்ளிகொண்டேஸ்வர மூலவரையும் தரிசித்தோம்.

பெருமாளுக்குத்தான் நாமம் போடாமல் சந்தனப்பொட்டை வைத்து விட்டார்களோ என்று எனக்கு ஒரு சந்தேகம். விபூதி இடவில்லை, கொடுக்கவுமில்லை. ஆனால் தீர்த்தம் கொடுக்கிறார்கள். குருக்களைக் கேட்டேன். 'இல்லையில்லை. இவர் சிவன் தான். மான், மழு எல்லாமே இருக்கிறது' என்றார் அவர். ஆனந்த நடனம் முடித்து அம்பாள் மடியில் சிரித்துக்கொண்டே படுத்திருப்பதைப் பார்க்கப் பரவசமாக இருக்கிறது. ஆனால், சிவன் கோவிலில் கணீரென்று யாருமே பிரதோஷ காலத்தில் ருத்ர, சமகம் சொல்ல மாட்டேனென்கிறீகளே என்று சிவாச்சாரியாரிடம் குறைப்பட்டுக் கொண்டேன். சிரித்துக்கொண்டே ஆரத்தித் தட்டை நீட்டினார். 'நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய மகாதேவாய ....' என்று நான் ஆரம்பித்தவுடன் அவரும் சேர்ந்து கொண்டார். நேயர் விருப்பம் இருந்தால் தான் சிவனுக்கே ருத்ர பாக்கியம் கிடைக்கும் போலிருக்கிறது.

பிறகு அங்கேயிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நாகலாபுரம் போனோம். அங்கேயும் ஒரு விசேஷம். வேதபுரீஸ்வரர் மச்சாவதரமாக இருக்கிறார். கர்ப்பக் கிரகத்திலேயே மீன் பாதி, மனித உருவம் பாதியாக மூலவர். மச்சாவதாரமே அங்கே தான் நிகழ்ந்ததாகச் சொல்கிறார்கள். தாயார் பெயர் வேதவல்லித் தாயார். வெகு லட்சணம். நாள் பூரா பார்த்துக்கொண்டே இருக்கலாம். திருப்பதி தேவஸ்தானத்தின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கின்ற பெரிய் புராதனக் கோவில், சுத்தமாக இருக்கிறது. ஆனால், தல புராணமென்ன என்று கேட்டால் சின்னக் குருக்கள் பையன் சினத்துடன் முறைக்கிறான். அமெரிக்கா போவதற்காக GRE எழுதிக் கொண்டிருக்கிறானோ, என்னவோ.

*******************************************************

திருப்பதி போவதற்கு இங்கே சென்னையிலேயே ஏற்பாடுகள் செய்ய வசதியாக தி. நகர் வெங்கடநாராயணா ரோடில் திருப்பதி தேவஸ்தானத்துக்காரர்கள் சில வருடங்கள் முன்பு ஒரு ஆபீஸ் திறந்தார்கள். பெரிய விசாலமான ஆபீசில் அழகான பெருமாள், பத்மாவதித் தாயார் படங்கள், பெருமாள் சிலை எல்லாம் இருக்கும். இப்போது பார்த்தால், அங்கே சாயங்கால வேளைகளில் பயங்கர லைன் நிற்கிறது. அந்த இடம் ஒரு மினி திருப்பதியாகவே மாறி விட்டது போல் தெரிகிறது. வாசலிலேயே பூக்கடைகள், செருப்பைப் பார்த்துக் கொள்ள பெட்டிக்கடைகள் இன்ன பிற. உள்ளே கம்பி கட்டி, ஜனங்களை வளைத்து வளைத்துத்தான் விடுகிறார்கள். ஆன்மீகம் அலைமோதுகிறது.

உள்ளே, ஒரு திருப்பதி எ·பெக்டுக்காக யாரோ ஒரு பெரியவர் அநாவசியமாகத் தெலுங்கில் இரைந்து யாரோடோ மாட்லாடுகிறார். 'ஜருகண்டி'க்குப் பதிலாக ஒரு அநாவசிய 'நவுருங்க, நவுருங்க'த் தள்ளுமுள்ளு. யாருமே கண்டுகொள்ளாவிட்டாலும் சும்மாவானும் யாரையாவது யாராவது விரட்டிக் கொண்டே இருக்கிறார்கள். மூலவரல்லாத சிலைப் பெருமாளும் சிரித்துக்கொண்டே பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு பட்டராவது ஒரு ஸ்லோகமாவது, நாமாவளியாவது சொல்லவேண்டுமே? ஊஹ¥ம். எனக்கு வேர்த்துக் கொட்டியது. ரொம்பவும் நசுங்காமல் வெளியே வந்துவிட்டேன்.

உள் மண்டபத்தில் யாரோ பிரவசனம் செய்து கொண்டிருந்தார். குசேலன்-கண்ணன் கதை. கொஞ்சம் அபத்தமான அதீத பக்தியில் 'உனக்கு எதுவுமே சொந்தமில்லை. எதுவுமே நிலைச்சு நிக்காது, உன்னோட ஒம்போது கோடிப்பணம் ஓடிப் போய்டும். எல்லாமே பகவானோடது, உன் வேலை, உன் காசு, கார் எல்லாமே அவுட்டு ...' என்று பக்தர்களைப் பொதுவாகத் திட்டிக் கொண்டிருந்தார். எனக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது.

'இப்பொது என் பசிக்குச் சாப்பாடு கிடைக்குமா, கிடைக்காதா?' என்ற பயத்தில் நான் எழுத்தாளர் முருகன் வீட்டில் நல்ல சாப்பாட்டுக்கு உடனே சென்று விட்டேன்.

அடுத்த வாரம் எழுதுகிறேன். ஹாப்பி நியூ இயர்!

நமஸ்காரம்.

அன்புடன்,

சந்துரு