என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Wednesday, July 06, 2005

மூங்கில் காடு

கிழக்குக் கொல்லையின்
இருட்டுக் கோடியில்
எந்நேரமும் சீறும்
இரவில் உறுமும்
அப்பாவின் தாடியாய்க்
கீறும் முட்கள்
அம்மாவின் முடியாய்ப்
பின்னிக் கிடக்கும்
சாரையும் சர்ப்பமும்

ஆடிக் காற்றின்
ஊளை இரவில்
தீப்பொறி பறக்கும்
பறவைகள்
பயந்து சடசடக்கும்
கொள்ளிவாய் முனியோடு
குறளைக் கண்ணனும்
காவு கேட்கிறான்
அங்கே பார்க்காதே
என்பான் ராசேந்திரன்
என் சிறு கைபற்றிக்
கண் பொத்தி

'செருப்பில்லாமல்
அங்கே போனால்
செப்டிக் ஆகும்
பாம்பைப் பார்க்காதே
அப்பாவிடம் சொல்வேன்'
அம்மா மிரட்டுவாள்

அது ஒரு காலம்

கிழக்குக் கொல்லை
முரட்டு மூங்கிலுக்கு
அப்பாவைத் தூக்கும்
கொடுப்பினை இல்லை
பாரம்பரியமற்ற
பனாதை மூங்கிலே
அப்பாவோடு எரிந்தது

அம்மாவின் முடியோ
சட்டை உரித்து
வெள்ளையாய்ப் பறக்கிறது

போன தை மாதம்
வீட்டுச் சண்டையில்
பூச்சி மருந்தில்
மானம் காத்தானாம்
மடையன் ராசேந்திரன்
அவனுக்காவது
மூங்கில்
அங்கேயிருந்து
வந்ததோ?

வெட்டிப் பிளந்து
வீரியம் போய்
செத்த மூங்கிலுக்கு
லாரியில் பாடை
கட்சிக் கொடியாய்
கலர் கலர் பெயிண்டில்
களையிழந்து நிற்கும்
தனித்தனியாய்
பாவம்

காட்டை அழித்து
வெந்து தணிந்த பின்
புதிதாய் யாரோ
நாயக்கர் வீடாம்

சின்னப் பெண் ஒன்று
பயமில்லாமல் சிரிக்கிறது
யாரும்
கண் பொத்தாமல்