என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Sunday, February 27, 2011

சுஜாதா நினைவஞ்சலி 2011

இதோ இங்கே:

சுஜாதா நினைவஞ்சலி 2011 http://www.writerlaram.com/tamil/?p=418

Wednesday, February 16, 2011

சர்க்கரையால் ஆன பயன்!

சென்ற வருட ஏப்ரல் வெயிலில் சுருண்டு பின்னங்கால் பிடறியில் பட அலறி ஓடியவன், இந்தத் தடவை வெயிலைக் கண்டு ஒரு பயத்துடன்தான் ஃபிப்ரவரியிலேயே சென்னை வந்து சேர்ந்திருக்கிறேன்.

கும்மிருட்டில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தரை இறங்கியபோது மீனம்பாக்கம் வழக்கம்போல் அணையப்போகும் சிம்மிணி விளக்கு மாதிரி கண் சிமிட்டியது.

வெளியே வந்தால், சிவப்பு விளக்குகளை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் சீறும் வாகனங்களைக் கண்டு ஒருமுறை துணுக்குற்றேன். என் காரோட்டியிடம் “டிரைவர், ரெட் லைட்!” என்றால் “ஆமாங்க இதுதான் ரெட் லைட்” என்றபடியே அவரும் அவற்றைத் தாண்டிச் சீறினார். ம்ஹூம், பொத்திக்கிறதே பெட்டர்!

நந்தனம் அருகே விளக்கே இல்லாமல் நடுரோட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ராட்சஸ லாரி ஒன்றில் மோதிக் கிடந்த அகாலமரண வண்டிகளின் கண்ணாடிச் சிதறல்கள்மேல் நாங்கள் கொஞ்சமும் கவலையின்றி வேகமாகவே கடந்தோம்.

நான் எதிர்பார்த்தபடியே, பாண்டி பஜாரில் டாக்ஸி பங்க்சராகி, (“தோ ஆய்டும் சார்! ஏளு மாசத்துக்குப் பொறவு இப்பத்தான் பங்க்சரு!”) சும்மா ஒரு மோனத்தவத்தில் தெருவோரம் நின்று கொண்டிருந்தவனை எத்தனை பேர் பார்த்தார்கள், தெரியவில்லை. கொசுக்கள் மட்டும் ொய்க்க ஆரம்பித்து மீள் சுய அறிமுகம் செய்துகொள்ள ஆரம்பித்தன. போலீஸ் வேன், போலீஸ் கார், போலீஸ்காரர்கள் மட்டும் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தார்கள் (”என்னய்யா, ஜாக்கியெல்லாம் இருக்குல்ல?!)

“அடடா, இங்கே ஒரு பிள்ளையார் கோவில் உண்டே” என்று இருட்டில் துழாவி, கோவிலில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த யானைமுகனை ’மற்றவன் தாள் நண்ணுவதும் நல்லார் கடன்’, நமக்கெதுக்கு வம்பு என்று எழுப்பாமல் விட்டேன்.

வழக்கம்போல் சிங்காரச் சென்னை வயதான ஒரு சீக்காளியின் அழுக்குடனும், துர்நாற்றத்துடனும் முக்கல் முனகல்களுடனும் தூங்கவும் முடியாமல் வாழவும் முடியாமல் ஏதேதோ பெனாத்திக் கொண்டிருந்தது.

“இந்த தபா அம்மா வந்திருவாங்க சார்” என்று வண்டியோட்டி டயர் மாற்றியவாறே அபிப்பிராயப்பட்டார்.

ம்ம்ம், அப்படியா?! இனிமேல் பாண்டி பஜாரில் தேன் ஓடுமோ என்று கேட்க நினைத்து வாயை மூடிக்கொண்டேன்.

மீண்டும் சென்னை!

ஜெட்லாக் அவஸ்தையில் அதிகாலை நாலு மணிக்கு டீக்கடை ஒன்றில் ஸ்பெஷல் டீ! ஸ்ஸப்பா எவ்வளவு சர்க்கரை! இதுவும் இங்கே இலவசமோ?

“நாயர், இதே மாதிரி இன்னொரு டீ, ஆனா சர்க்கரையே போடாதீங்க”

“சரி சார்” என்றபடி இரண்டாவது டோஸ் சூடான டீயில் இரண்டு மடங்கு சர்க்கரை தந்தார் மகானுபாவர்.

“அடிக்கடி உங்கள் வலைப்பூ பக்கம் சென்று பூட்டு மாட்டியிருப்பதைப் பார்த்துத் திரும்புகிறேன்” என்று வருத்தப்பட்டு பாரதி மணி எழுதி இருந்தாரே என்பது நினைவு வந்தது.

இதோ, சர்க்கரையால் ஆன சுறுசுறுப்புப் பயன், பூட்டு திறக்கப்பட்டு விட்டது!

வாங்க, பேசலாம்!