என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Wednesday, July 06, 2005

பிறந்தகப் பெருமை -1

மாயவரம் டவுன் ஸ்டேஷனை ஒட்டிய சிறு கிராமமாகிய நல்லத்துக்குடியில் தான் நான் பிறந்தேன், வளர்ந்தேன், பொறுக்கியானேன். அல்லது நல்ல எழுத்தாளன் ஆனேன். எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.

கிராமப் பொதுச் சொத்தான மந்தைவெளியையும் விசாலமான தெருக்களையும் கழகக் கண்மணிகளும், ரத்தத்தின் ரத்தங்களும் போட்டி போட்டுக்கொண்டு சமீப காலங்களில் ஆக்கிரமித்து விட்டபிறகு இப்போது ஊருக்குள் நுழையவே மூச்சு முட்டுகிறது.

அந்தக் காலத்தில் அது ஒரு சின்னஞ்சிறு கிராமம். அழகான நீர் நிலைகள், வாய்க்கால்கள், ஊரைச் சுற்றிலும் பச்சைப்பசேல் வயல்கள். நல்ல காற்றோட்டம்.

எங்கள் வீட்டெதிரே குளம். குளக்கரையில் அரச மரத்தடியில் ஒரு பெரிய லிங்கம். அவரைத் உருட்டித் தண்ணீரில் போட்டால், வானம் பொத்துக்கொண்டு ஊத்தும் என்பது ஒரு கிராமத்திய லெஜண்ட். அப்படி நடக்கவும் நடந்திருக்கிறது. அவசரத்திற்குச் சில சமயம் அவரையே ஜனங்கள் துணி துவைக்கும் கல்லாகவும் பயன்படுத்துவார்கள். பரீட்சை நேரங்களில் பசங்கள் கொஞ்சம் பய பக்தியாக அவரைக் கும்பிடுவது வழக்கம்.

கறிகாய் தவிர எது வேண்டுமானாலும் கிராமத்திலிருந்து 'டவுனு'க்குத்தான் போகவேண்டும். என் மாமாவின் ஹெர்குலிஸ் சைக்கிளில் இரண்டே மிதி. நடந்தால் இருபதே நிமிஷங்கள். மாயவரம் கோவிலும், சின்னக் கடைத் தெருவும். (சி. க. தெரு என்று ஒன்று இருந்தால் பெ. க. தெரு என்று ஒன்று இருக்கவேண்டியது தானே?) பெ. கடைத்தெரு இருக்கும் இடத்தருகே அதுதான் ஊரின் 'ஷகரா'ன இடம். பொங்கல், தீபாவளி போன்ற திருவிழாக் காலங்களில் 'ஜே ஜே' தான்.

வெள்ளைக்காரன் காலத்தில் விக்டோரியா மகாராணிக்கோ, இரண்டாம் உலகப் போரை வென்றதற்கோ, எதற்கோ ஒரு மணிக்கூண்டு, காளியாகுடி (அல்வா ஃபேமஸ்) ஹோட்டல், மயூரா லாட்ஜ், பஸ் ஸ்டாண்டு, சினிமா தியேட்டர்கள் இத்யாதி, இத்யாதி. இப்போது ஏகப்பட்ட நகைக்கடைகளும், எம்போரியங்களும் கூட.

மிகப் பிரம்மாண்டமான அபயாம்பாள் சமேத மயூரநாதர் கோவில் கோபுரம் பார்த்திருக்கிறீர்களோ? கலை நுணுக்கத்துடன் ஏகப்பட்ட சிற்பங்கள். நம்ம தோஸ்து தேசிகனை ஒரு முறை அழைத்துச் சென்று அந்தக் கோபுரத்தை வரிக்கோட்டுச் சித்திரமாக வரைந்து தரச் சொல்லவேண்டும். சிவன் கோவில். செய்வாரா என்பது தெரியவில்லை!

Image hosted by Photobucket.com



திருவாவடுதுறை மடத்தினரால் இன்றும் சிறப்பாக நிர்வாகம் செய்யப்பட்டு வரும் கோவில்களில் இதுவும் ஒன்று. கோவிலுக்குள்ளே நுழையும்போதே ஒரு அசாதாரணமான அமைதி உங்களை ஆட்கொள்ள ஆரம்பிக்கும். எந்நேரமும் ஜிலுஜிலுவென்ற காற்றடிக்கும் பெரிய கோபுரத்தடியில் கொஞ்சம் பயமுறுத்தியபடி காவல் இருப்பவர் முனீஸ்வரர்.

மயூரநாதர் சன்னதிக்குள் நுழையுமுன் இடது பக்கத்தில் பெரிய திருக்குளம். படிக்கட்டில் எப்போதும் பாசி வழுக்கும். பார்த்து இறங்குங்கள். நடுவில் இருக்கும் நீராழி மண்டபத்துக்கும், அதைத் தாண்டிய அக்கரைக்கும் நீச்சலடித்த அனுபவங்கள் எனக்குண்டு.

மயூரநாதர் சன்னதியில் நுழைந்தவுடன் இடது பக்கம் பிரம்மாண்டமான கல் பிள்ளையார். வலது பக்கம் முருகன். கோவிலுக்குப் பெயரே பெரிய கோவில் தான். பெரிய பிரகாரம், பெரிய கோபுரம்.

பிரதட்சிணமாகச் சுற்ற ஆரம்பித்தால் நடுநாயகமாக மயூரநாதர் கர்ப்பக் கிரகத்தில் லிங்கரூபத்தில் காட்சி தருகிறார். அமைதியான கருங்கல் பிரகாரம். சஹஸ்ர லிங்கங்கள், நாயன்மார்கள், இன்னொரு சுப்ரமணியர், அழகான தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள் எல்லோரையும் தரிசித்து விட்டு வெளியே வந்தால் இடப்பக்கம் அபயாம்பாளுக்குத் தனிக் கோவில்.

மீனாட்சிசுதரம் பிள்ளையவர்களும், மாதவச்சிவஞானயோகிகளும் அம்மனைப் பாடி இருக்கிறார்கள்

'அபயாம்பிகை சதகம்' பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொண்டு உள்ளே நுழைவோமா? ( http://weblogimages.com/static/rwB350841jZ7.jpg )

'96 வகைப்படும் சிறுநூல்களுள் சதகம் என்பதும் ஒன்று, .சதகம் நூறு பாடல்களைக் கொண்ட நூல். ஒவ்வொரு பாட்டின் இறுதிப்பகுதி ஒரே தொடராயிருத்தல் வேண்டும். இதனை மகுடம் என்று அழைப்பது மரபு. இந்நூல் 'மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே' என்ற மகுடம் உடையதாக, நூறு பன்னிருசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களால் அமைந்திருக்கிறது. எளிய நடை ஒன்றே கருதி எளியவர் வழங்குகிற வழக்கியல் சொற்கள் மரூஉச் சொற்களும் இதில் அங்கங்கே இடம் பெற்றுள்ளன' என்கிறது 1990-ல் வெளியிடப்பட்ட மூன்றாம் பதிப்பின் முகவுரை.

அபயாம்பிகை சதகம் இயற்றிய கிருஷ்ணசாமி அய்யர் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. அன்னாரின் வீடு எங்கள் வீட்டின் எதிர்வரிசையில், நல்லத்துக்குடியில். நான் அங்கே விளையாடியிருக்கிறேன். அந்தச் சின்னத் திண்ணையில் ஒரு சின்னப் பெண் நான் சின்னவனாக இருந்தபோது கொடுத்த கசங்கிய 'நீ என்னை மறந்தாலும் நான் உன்னை மறக்கமாட்டேன்' என்கிற ஒரு வரிக் குறிப்பு, பிற்காலத்தில் 'உனக்கு என்னை நினைவிருக்கிறதோடி?' ஆனது.

என் சோகக் க்தை இருக்கட்டும், கிருஷ்ணசாமி அய்யரை எங்கே விட்டேன்? ஆங், நினைவு வந்து விட்டது.

அவர் சிறு வயதில் அன்னையை இழந்தவர், 'அம்மா, அம்மா' என்றழும்போது அபயாம்பிகையே இவர் முன் தோன்றிச் சாப்பாடு கொடுத்துத் தன் கோவிலுக்கு அழைத்து வந்தபின் மறைந்ததாகவும், அது முதல் அவரும் அம்மாவைத் தேடிக் கோவிலுக்கு வந்ததாகவும் சொல்கிறார்கள்.

'ஒரு நாள் இரவு அர்த்தசாம தரிசனம் செய்து வீட்டிற்குத் திரும்புகின்றபோது கோபுர வாயிலுக்கு வெளியில் காலில் இடறிக் கொண்டார். காலில் காயம் பட்டது ஆற்றாது 'அன்னே! அன்னே! என அலறினார். அபயாம்பிகை கைவிளக்குடன் வந்து ஒளி காட்டி ஊறு போக்கி உய்வித்தனர். அன்று முதல் இவர் அர்த்தசாம தரிசனம் செய்து வீடு போகுமளவும் கை விளக்கு ஆளின்றி அகம் வரையில் சென்று வழிவிடும். இவ்வருளால் மனம் கரைந்த ஐயர் இவ்வளவு பெருங்கருணைக்கு யாது செய்வேன் என்று அகம் குழைந்தனர். அன்னை 'செந்தமிழ்ப்பாவால் என்னுடைய சிந்தையைக் குளிரச் செய்க, அதுவே போதும்' என்று அசரீரியாக அறிவிக்க, ஐயர் 'அடியேன் கவிதை இயற்றும் அளவுக்குக் கல்வி கற்றிலேனே; எங்ஙனம் பாடுவேன்; ஆணையிட்ட அம்மையே அதற்கு ஏற்ற அறிவும் அருளவேண்டும்' என்று வேண்டிக் கொண்டார். அங்ஙனமே ஐயர் அகத்துள் நின்று உணர்த்த இச்சதகம் எழுந்தது' என்கிறது நூலாசிரியர் வரலாறு.

அக்கிரஹாரத்தில் இருந்த மற்ற சில பிராமணர்கள் கிருஷ்ணஸ்வாமி அய்யரைக் கிண்டலும் கேலியும் செய்து கோபப்பட வைத்ததாகவும், அவர்கள் மீது அவர் கோபப்பட்டு அறம் பாடியதாகவும், பின்னர் கடைசிக் காலத்தில் அய்யர் அவர்கள் ஒரு இரவில் பூஜை முடிந்து குருக்களிடம் விபூதி பெற்று நெற்றியில் அணியும்போது இவர் உருவம் காணமுடியாத நிலையில் கோவிலிலேயே மறைந்ததாகவும் புத்தகம் சொல்கிறது.

முழுப் புத்தகமும் என்னிடம் இருக்கிறது. யாராவது கேட்டால் 'ஸ்கேன்' பண்ணித் தருகிறேன். சன்னதி வாயிலில் இரண்டு சதகங்கள் எழுதிப் போட்டிருப்பார்கள் அவை எனக்கு மனப்பாடம். முதலாவது 71'ம் சதகம்:

பச்சை முழுப்பொன் னிறமுடனே
பளிங்கு பவள முடன்நீலம்
பருத்த மேக முடன்ஆறாய்ப்
பரவி யிருக்கும் பசுங்கிளியே
அச்ச மறவே அதன்மீதில்
அருண வுதய ரவிகோடி
அகண் டாகார ரூபமதாய்
அமர்ந்த சிவமோ கனமாதே
செச்சை யதன்மேல் அணிச்சிலம்புஞ்
சிறுகிண் கிணித்தண் டைகளொலிக்கச்
சிவனோ டிருக்குங் கொலுமுகத்தைச்
சிறியேன் காண அருள்புரிவாய்
வச்ச உனது பொருள்எனக்கு
வரத்தாற் கருத்தில் உரைத்தருள்வாய்
மயிலா புரியில் வளரீசன்
வாழ்வே அபயாம் பிகைத் தாயே

சென்ற கும்பாபிஷேகத்தின்போது முழுச் சதகத்தையுமே கர்ப்பக் கிரகத்தைச் சுற்றிலும் பதித்திருக்கிறார்கள். 'அம்மா'வுக்கும் 'பச்சை'க்கும் அப்போதிருக்தே இருந்து வரும் உறவு காண்க.

அடுத்த ஜென்மத்திலும் நான் மாயவரத்திலேயே பிறக்கவேண்டும்.

(இன்னும் கொஞ்சம் பிறந்த வீட்டுப் பெருமை பேசுவோம்)

23 comments:

Anonymous said...

Is it a sequel to Sujatha's ஸ்ரீரங்கத்து தேவதைகள் ?

Badri Seshadri said...

அருமை. பிற மாயவரத்தான்கள் இத்துடன் சில படங்களை இணைத்தால் நன்றாக இருக்கும்!

வானம்பாடி said...

//அடுத்த ஜென்மத்திலும் நான் மாயவரத்திலேயே பிறக்கவேண்டும்.//
ஆனால் லாஸ் ஏஞ்சலீஸில் குடியிருக்க வேண்டும்..? ;-)

பத்மா அர்விந்த் said...

நன்றாக இருந்தது. மாயவரத்து AKC நகைக்கடையும், சுந்தரம் தியேட்டரும் மற்றும் மாயவரத்திலிருந்து கும்பகோணம் செல்லும் புகைவண்டி கலாட்டாக்களும் வருமா?

பரி (Pari) said...

'96 வகைப்படும் சிறுநூல்களுள் சதகம் என்பதும் ஒன்று,
>>>
http://groups.yahoo.com/group/marabilakkiyam/message/1705

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

டியர் அநாநிமஸ்,

மயிலாடுதுறைத் தேவதைகள் அழகிலும், அலட்டலிலும் ஸ்ரீரங்கத்துக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

டியர் பத்ரி,

பாராட்டுக்கு நன்றி. நானும் அதே நம்பிக்கையில்தான் இருக்கிறேன். ஹலோ, ஹலோ, அதர் மாயவரத்தான்ஸ், காதுல விழுதுங்களா? என்னுடைய ஜிமெயிலுக்கு அனுப்புங்க. அசத்திடுவம்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

சுதர்சன்,

ஒவ்வொரு நாளும் லாகடத்தையும், பியர்லஸ்ஸையும், வைத்தா டீ ஸ் டாலையும் நெனச்சி நெனச்சி நான் எல்லேயில அல்லாடுறது உங்களுக்கு எங்க புரியப் போவுது?!

பஞ்சம் பொழைக்க வந்த எடமெல்லாம் சொந்த ஊரு மாதிரி ஆவுங்களா?

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

தேன் துளி,

கண்டிப்பாக! ARC ங்க அது! மறந்துட்டீங்க போல. ராஜாஜி வெற்றிலைக் கடை, அந்த சேட்டு மிட்டாய்க் கடை, ஃபாதிமா மேன்ஷன் எல்லாம் இல்லாம மணிக்கூண்டே கிடையாதுங்களே!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

பார்த்தா,

லாகடம் வந்துகொண்டே இருக்கிறது!

Arun Vaidyanathan said...

ராம்,
அற்புதமான கட்டுரை. நிறைய விஷயங்களை ரசித்தேன்.
வைத்தீஸ்வரன் கோவில் புகைப்படங்கள் என்னிடம் இருக்கின்றன :)
அப்படியே கொஞ்சம் தள்ளி வந்தீங்கன்னா...நம்மூருக்கு வந்துடலாம் ;)
தமிழ் இணையம் + நம்மூரு கூட்டம்னு ஒரு வாக்குப்பதிவு நடத்தினால்...
மாயவரம், மாயவரம் சார்ந்த ஊர்களை அடித்துக் கொள்ள யாரும்
இல்லை போல! (உடுடுடுட்டுடுடுடு ஜூட்ட்ட்ட்ட்ட்ட்ட்)

- அருண் வைத்யநாதன்

Mookku Sundar said...

பிறந்தகப் பெருமை பேசாத மக்களா..??

பஸ் ஸ்டாண்டு கல்கண்டு பால் கடையையும், மயூரா ஆனியன் ரவாவையும், ராஜாந்தோட்டத்தையும்,
வள்ளலார் கோவிலையும், சிற்றாடை உடுத்திய சின்னப் பெண் காவேரியையும், தான் குளிக்காமல் எல்லாரையும் சுத்தப்படுத்தும் பழங்காவேரியயும், டவுன் ஸ்டேஷன் ஒரு தலை ராகங்கள் கதையையும்,நீங்கள் சுற்றி வந்த ஞானாம்பிகை மகளிர் கலைக்கல்லூரியையும், சப் ஜெயில் பக்கத்திலிருக்கும் குட்டி தர்காவின் சந்தனக்கூடு விழாவையும்....

பற்றி...

எழுதுவீர்களா..??????? :-)

- இன்னொரு மாயவரம் மாஃபியா

மாயவரத்தான் said...

அட்றா...அட்றா...அட்றா... இந்த வாரம் தமிழ்மணத்திலே 'மாயவரம் வாரமா?' அப்படீன்னு எனக்கு ஒருத்தரு (ஜி)மெயிலிருந்தாரு... இந்த வாரம் மட்டுமில்லே.. எல்லா வாரமும் மாயவரம் வாரம் தான் அப்படீன்னு சொன்னேன்.. 'சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா?' - ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகுமா?'

வெகுவிரைவில் நம்ம www.mayiladuthurai.net புதுப்பிக்கப்படவிருக்கிறது. அதில் தங்கள் புகைப்படங்களும், தங்களுடைய மயிலாடுதுறை சம்பந்தப்பட்ட புகைப்படங்களும் வைத்திருக்கும் சக மாபியாக்கள் mayiladuthurai@gmail.com முகவரிக்கும் அனுப்புவைக்கும்படி வேண்டி விரும்பி மிரட்டிக் கொள்ளப்படுகிறார்கள். அதே போல முடிந்தால் அந்த வலைத்தளத்தை புதுப்பிக்க ஒரு கை (அட... டிசைனிங் சொன்னேம்ப்பா!) கொடுக்க விரும்புகிறவர்கள் கையை தூக்கலாம். (ஏற்கனவே நமது மாபியா சங்கத்தின் ஆயுள் கால செயல் தலைவர் ஜெ.மாயுரம் ராம்கி (ஹி ஹி) அந்த தலையாய பணியில் சேர்ந்திருக்கிறார் எனபதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.)

- 'ஒரிஜினல்' அக்மார்க் மாயவரத்தான். (போலிகளைக் கண்டு ஏமாறாதீர்!)

Desikan said...

//மிகப் பிரம்மாண்டமான அபயாம்பாள் சமேத மயூரநாதர் கோவில் கோபுரம் பார்த்திருக்கிறீர்களோ? கலை நுணுக்கத்துடன் ஏகப்பட்ட சிற்பங்கள். நம்ம தோஸ்து தேசிகனை ஒரு முறை அழைத்துச் சென்று அந்தக் கோபுரத்தை வரிக்கோட்டுச் சித்திரமாக வரைந்து தரச் சொல்லவேண்டும். சிவன் கோவில். செய்வாரா என்பது தெரியவில்லை!//

ராம்,
குசும்புதானே. தஞ்சை பெரிய கோயில் வரைந்திருக்கேனே ;-)
தேசிகன்

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அருண்,

சீர்காழி பாடல் பெற்ற ஸ்தலம் ஆச்சே. வைதீஸ்வரன் கோவிலுக்கு சைக்கிள்லயே போயிட்டு வந்திருக்கமில்ல நாங்கள்லாம்!

எல்லாத்தயும் எழுதணும்னு தான் ஆசை. பார்ப்பம்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

மாயவரத்தான், என்ன செய்யணும்னு சொல்லுங்க, அசத்திப்டுவம்;-)

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

தேசிகன்,

அப்ப நம்ம ப்ரைவேட் கலெக்ஷனுக்கு மாயவரம் பெரிய கோவிலை வரைஞ்சு தரதா ஒத்துக்கிட்டிருக்கீங்க, அதான? அட்வான்ஸ் தேங்க்ஸ்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

பார்த்தா,

ரிலையன்ஸ் காஃபிக் கடை தெரியுமாவா?! அந்த ஓனர் பையன் சேகர் என் தோஸ்துங்க. சின்னக் க்டைத் தெருப் பக்கம் வரும்போது அங்க நுழைஞ்சிடுவம்;-)

Anonymous said...

kaliyakudi halwavum mayura onion rawavum ....

meendum naakkil neer ura vaithu vitteer .

Mayavaram' than said...

naan pirantha mannai patri ivalavu azhagaaga ezhuthi irukum anbu nanbare......

"Ayuram anaalum maayuram aagathu" endru solvaragal.....athu pola ettu thikilum paranthu virinthu kidakum mayavarathanugalai ondru serkum intha puthiya muyarchiki enathu vaazthugakal......

DBTR, GHSSS, DAAC college, AVCC collge patri ungalathu nigazhvugalai pathivu seiyugal......

sukumar said...

நான் பிறந்த மண்ணாகிய மாயவரத்தின் ஈரத்தை பற்றி அழகாக பதிவு செய்திருக்கும் ராம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

"ஆயுரம் ஆனாலும் மாயுரம் ஆகாது" என்று சொல்வார்கள்......அதுபோல அந்த சி. க. தெரு , பெ. க. தெரு, லாகடம், பெரிய கோவில், என்று பல இடங்கள் கண்ணில் வந்து போகின்றன..காவேரி படித்துறை, தீபாவளி முடிந்தவுடன் பியர்லெஸ் தியேட்டர் எதிரில் போடப்படும் கடைமுழுக்கு, அதில் விற்கும் மிளகாய் பஜ்ஜி எல்லாம் என்றாவது ஒரு மாலை வேலையில் நேற்று நடந்தது போல் ஒரு கனவாகவே இருக்கிறது.....மகாதான தெருவில் நடுவில் கம்பீரமாக இருக்கும் திவான் பகதூர் பள்ளியும், அதன் எதிரில் இருக்கும் பொட்டி கடை 25 காசு கலர் ஐசும் அந்த வழியாக போகும்போது இன்றும் ஒரு கணம் வந்து போகிறது.....

மாயவரத்துக்கு பெருமை சேர்க்கும் அழகான, அமைதியான பூங்கா தருமபுரம் ஆதினம். நாலா புறமும் தென்னை மரங்கள் அதன் நடுவே அழகான வரலாற்று பெருமை வாய்ந்த கோவில்கள் என்று பேசிக்கொண்டே போகலாம் மாயவரத்தை பற்றி....தமிழகத்தில் இன்று தமிழ் தழைத்தோங்க தருமை இன் பங்கு மிகவும் உண்டு என்பது இந்த பதிவை படிக்கும் பலர்க்கு தெரியாமல் இருக்கலாம்....மேலும் இன்று தமிழகத்தில் தவழ்ந்து கிடக்கும் பல தமிழாசிரியர்கள் நேற்றைய தருமை இன் மாணவர்கள் என்று சொன்னாலும் மிகையாகது.....

சற்றே தள்ளி போனால் மன்னம்பந்தல், அந்த சிறிய கிராமத்தில் இருக்கும் AVCC கல்லுரி நாகை மாவட்டத்தில் விரல் விட்டு என்ன கூடிய நல்ல கல்லூரியில் இதுவும் ஒன்று என்று சொன்னால் அது மிகைஆகாது.....அதே கல்லூரியில் படித்த T R ராஜேந்திரன் சவால் விட்ட மரம் இருந்த தடத்தை கூட அந்த வழியாக போகும்போது இன்றும் காணலாம்.......

(மாயவரத்தின் ஈரம் இன்னும் பரவும்...)

Anonymous said...

Hello, Your article about mayavaram is fine. please send a pdf copy of abayambigai sathakam.
my email:tamilandavan@gmail.com

சூர்யா பாலா said...

Very Nice Blog. Will you able to provide me a copy of abayambigai sathakam
my email : labalaji@gmail.com