என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Tuesday, July 12, 2005

பிறந்தகப் பெருமை -4

காலில் சணல் துணி பூட்ஸுடன், கையில் ஒட்டடைக்குச்சி மாதிரி எதையோ வைத்துச் சிலர் ரோட்டைக் கிறுக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அருகே எம வாகனம் மாதிரி ஒரு இயந்திரத்திலிருந்து பயங்கரமாகக் கரும் புகை வருமே? ரோட்டில் ஏகப்பட்ட பேர் 'லபோ, திபோ' என்று அடித்துக் கொள்வார்களே? நகரவே நகராமல் ஒரு துருப் பிடித்த ரோடு ரோலர் கூட அங்கே நிற்குமே?

ஒரு பக்கம் கருப்பு ரசம் மாதிரி உருகிய தார் தனி டிராக்கில் ஓடிக் கொண்டிருக்கும். பழைய டயர் செருப்புகள், கிழிந்த சைக்கிள் டியூப்கள், சாணிக் கட்டிகள், உடைந்த செங்கற்கள், செம்மண் இவற்றால் ரோட்டில் கூட ஒரு சிறு அணை கட்டப்பட்டிருக்குமே? நினைவிருக்கிறதோ?

அப்படித்தானே தார் ரோடு போடுவார்கள் அந்தக் காலத்தில்?

ஆனால், இந்தக் கொடுமை எல்லாம் இல்லாமல் 'அந்தக் காலத்திலேயே' முதன் முதலாக சிமெண்ட் ரோடு போடப்பட்டது மாயவரம் மணிக்கூண்டிலிருந்து பஸ் ஸ்டாண்டு வரை தான். இந்த ஒரு பெரிய சாதனைக்காகவே 'வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டுப் போகக்கூடாது' என்று மகாத்மாவையே எதிர்த்த ஒரு சின்ன கோட்ஸேக் கூட்டமும் ஆங்கே இருந்ததுண்டு.

மாயவரத்தின் 'நடு சென்டரா'ன மணிக் கூண்டிலிருந்து பஸ் ஸ்டாண்ட் என்னவோ சில நூறு அடிகள் தாம். ஆனால் அந்தச் சில நூறு அடிகள் கொண்ட சிமெண்டுப் பாதை மிகுந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மணிக் கூண்டைத் திறந்து வைப்பதற்காக ராபர்ட் க்ளைவோ, இளவரசர் சார்லசோ நேரில் வந்ததாகவும், அதை முன்னிட்டே அந்த ரோடு சிமெண்ட் பாக்கியம் அடைந்ததாகவும் கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு.

அப்படி உலகப் புகழ் பெற்ற இந்த 'மணிக்கூண்டு-பஸ் ஸ்டாண்ட் 500 அடி ஹைவே' எந்த நேரத்தில், எதற்காக, எந்தத் திசையில், ஏன் 'ஒன்வே' என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிர்.

ஏதாவதொரு டீக் கடை அடியில் பதுங்கி இருந்து, பாகிஸ்தாஸ் தீவிரவாதிகளை அமுக்குவது மாதிரி லோக்கல் போலீஸ், சைக்கிள்காரர்களையும் ஸ்கூட்டர்வாசிகளையும் மடக்குவது அன்றாட நிகழ்ச்சி. பஸ் ஸ்டாண்டுக்கு எதிரேயே தான் காவல் நிலையமும் என்பதால் கேஸ் புக் பண்ண வசதியாக அவர்களுக்கு அது ஒரு மிலிட்டரி முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ட்ராடெஜி பாயிண்ட். வெற்றிக் களிப்புடன் சைக்கிள்காரரைப் பிடரியில் கை வைத்துத் தள்ளிக்கொண்டு வரும் கான்ஸ்டபிள் சில சமயங்களில் கடுப்பாகி விடுவார். துட்டு பெயராத அல்பத் துவிச்சக்கர கேசுகளின் சைக்கிள்களில் போலீஸ் ஸ்டேஷன் வாயிலிலேயே -ஒரு மனுநீதிச்சட்டம் மாதிரி- காற்று பிடுங்கி விடப்படும்.

சற்று தூரம் தள்ளி இருக்கும் சைக்கிள் கடையில் காற்றடிக்கும் பிசினஸ் கன ஜோராக நடக்கும். கான்ஸ்டபிள்களின் காக்கிச்சட்டைப் பைகளுக்கு அந்த நாலணாக்களில் கணிசமான சதவீதம் போகிறதோ என்கிற பலத்த சந்தேகம் மாயவரத்தில் ஒரு அர்பன் லெஜண்ட். இயக்குனர் ஷங்கர் கவனிக்கவும். 'அந்நியன் -2' வுக்கான கருப்பொருள் இங்கே பொதிந்து கிடக்கிறது.

ஆனால், அதிகாரவர்க்கத்தின் போலீஸ் அடக்குமுறைகள், அத்துமீறல்கள், அரசாங்கப் பேருந்துகள் மீது என்றுமே பாயாது. என்ன தான் டிராஃபிக் கான்ஸ்டபிள், செங்குடைக்கீழ் நின்று 'கெக்கே பிக்கே' என்று அபிநயம் காட்டிக் குதித்தாலும், 'இஷ்டாப்' என்று அலறினாலும், அடித் தொண்டையில் பிகில் அடித்தாலும், அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் அவர்களை ஒரு ஈக்குச் கூடச் சமானமாக மதிப்பது கிடையாது.

ஒரு ஜாலிக்காக அவ்வப்போது எதிரிகளின் குடைகள் மீது பஸ்கள் மோதிக் கான்கிரீட் குடைகள் தரையோடு சாய்ந்து கிடப்பதும் நடக்கும்.

'ஆஹா, அந்த பஸ் தான் போகுதே, ஹம் பீ ஜாயேங்கே' என்று நினைத்து ஃபாலோ பண்ணும் வெளியூர் டூரிஸ்ட் பஸ்காரர்கள் செமத்தியாக மாட்டிக் கொள்வார்கள். முக்கால் வாசியும் வடக்கத்தி டூரிஸ்டுகள் கொண்ட பஸ் என்பதால் தாணாக்காரர்களுக்குப் படு குஷி வந்து விடும். நொடித்துப் போய் எலும்பு துருத்திக் கொண்டிருக்கும் அழுக்கு பஸ்ஸை ஓரங்கட்டிப் போலீஸ் நினலய வாசலில் நிற்க வைத்து ரோட்டையும் மறித்துப் போட்டு விடுவார்கள்.

"ஆர்சி புக் இருக்காய்யா?", "பெர்மிட் இருக்கா?", "என்ன எளவு பாசைங்க பேசறான் 503? ஒண்ணுமே புரியலீங்க. இந்த நாத்தம் நாறறானுவ"

"க்யா போல்தா ஹை ஸாலா?, பைசா மாங்க்தா ஹை க்யா, சோக்ரா?

ஏற்கனவே அலைமோதிக் கொண்டிருக்கும் கட்டை வண்டி+மாட்டு வண்டி+சைக்கிள் ரிக்ஷா+ஆட்டோ ரிக்ஷா+நடராஜா சர்வீஸில் டிராஃபிக்கே ஸ்தம்பித்து விடும்.. ஆரிய தேசத்தவரை அருகினில் பார்க்கும் அரும்பெரும் வாய்ப்புக்காகத் திராவிடப் பரம்பரைகள் வேட்டி கிழியப் போட்டியும் போடுவார்கள்.

"வெறும் தரையில குமுட்டி அடுப்ப வெச்சு தோசை சுடறாடா"

"மூதேவி, அது தோசை இல்ல, சப்பாத்தி"

'இராமேஸ்வர இராமனை இனிக் காண்பதெப்போ?' என்கிற கவலையில் தலையில் கையை வைத்தபடி, கையில் பீடியுடன், ரோட்டோர ராஜபுத்ர வம்சப் பிரஜைகள் 'காரே மூரே' என்று கத்திக் கொண்டிருப்பது கண்கொள்ளாக் காட்சி. வடக்கத்தி டூரிஸ்டுகள் 'ராமேஸ்வரம் சென்றடையும் வரை யாருமே குளிப்பதில்லை, ஏன், எது காய்ந்தாலும், எதற்குமே தண்ணீரை உபயோகிப்பதில்லை' என்று சத்தியப் பிரமாணம் செய்த பிறகு தான் பேருந்திலேயே அனுமதிக்கப்படுபவர்கள்.

போலீசில் மாட்டினாலும், பாஷை புரியாவிட்டாலும், வயிறு பசிக்குமல்லவா? எனவே, முட்டாக்கிட்ட மூக்குத்தி, லோலாக்குப் பெண்டிர், 'கணவனே கண்கண்ட தெய்வ'மெனக் கண்ணீரும் கம்பலையுமாக ரோட்டோரமாக அடுப்பைக் கொளுத்திப் பழைய சப்பாத்தியை மறுசூடு சுடவும் செய்வார்கள். ஆதலால் அந்தப் பிராந்தியமே சுக்கா சப்பாத்தியாலும், மூன்று மாதப் பழைய சப்ஜியாலும், ஏதோ ஒரு வித சுட்ட எண்ணெயாலும், வடதேச ராஜ வம்சத்தினரின் பல மாத வாசனையாலும் பரிமள சுகந்த தேசமாகி விடும். நேரம் ஆக ஆக, விசிட்டர்கள் கூட்டமும் கணிசமாக அதிகரிக்கும்.

'பழங்காவேரி'யைப் பற்றிச் சொல்ல இது மிக நல்ல தருணம்.

'ஒரு காலத்தில் பழங்காவேரியில் நிஜமாகவே காவேரி ஆறு ஓடியதா? பின்னர் அது எப்படித் திடீரென்று திசை திரும்பியது? இதில் கன்னடர்களில் ரகசியப் பங்கேற்பு என்ன?' என்பது பற்றி ஆராய மத்திய அரசு ஒரு கமிஷனே அமைக்கவேண்டும் என்று நான் பல வருடங்களாகக் கூறி வருகிறேன். கேட்பாரில்லை.

தற்காலப் பழங்காவேரி 'மயிலாடுதுறையின் கூவம்' என்ற புகழ் பெற்றது. மாயவரத்து மாந்தரின் அன்றாடக் கழிவுகளிலும், அவ்வப்போதைய மழைநீர்ச் சகதியிலும், சேற்றிலும் அமுங்கிக் குளித்து ஆனந்த பரவசம் பெறுவது யார் என்கிறீர்கள்? முக்கைப் பிடித்துக்கொண்டு சற்றே கிட்டே வந்து எட்டிப் பாருங்கள். அத்தனையும் கரும் பன்றிக் கூட்டங்கள். கொழுக் மொழுக் ரகம்.

ராஜஸ்தானிய வாசனை காற்றில் மிதந்து வந்தவுடனே, பழங்காவேரிச் சகதியில் முழுகி எழுந்து மடியாகப் பன்றிக் கூட்டம் சந்தோஷத்துடன் மயிலாடுதுறையின் புத்தம் புது வடதேச விசிட்டர்களைப் பார்க்கக் குழந்தை குட்டிகளுடன் 'கிறீச்'சிட்டு வருவதும் வழக்கம் தான்.

'தமிழன் வந்தாரை வாழவைப்பவன், விருந்தோம்பலில் மன்னன் அல்லவா?' அவன் வளர்க்கும் பன்றிகளுக்கும் அதே நற் குணாதிசயங்கள் இருப்பதில் ஆச்சரியம் என்ன? ஆனால், இமயத்தில் இருந்து நாம் கல்லெடுத்து வந்ததை அவர்கள் இன்னமும் மறக்கவில்லை போலும்.

'அன்றைய செங்கோட்டுவன் வளர்த்த அரும்பெரும் பாரம்பரியப் பன்றிகள் தாம் இன்று நம் காய்ந்த சோற்றுக்காகப் படை எடுத்து வந்து விட்டார்களோ?' என்கிற சந்தேகத்தில் வடக்கத்தியினர் அவர்கள் மீது கல்லெறிவதும், மிரண்ட பன்றிகள் குமுறிக் கலங்குவதும், இவையேதும் புரியாமல் ஒரு வெள்ளைக்கார டூரிஸ்ட் இதை எல்லாம் வீடியோவில் பதிவதும், இந்த இலவச 'ஷோ'வில் மாயவரத்தினர் வேலை வெட்டியெல்லாம் மறந்து சிரித்து மகிழ்வதும், 'டிஸ்கவரி சான'லில் பார்த்து ரசிக்கவேண்டிய காட்சி.

பஸ் ஸ்டாண்டு நுழைவாசலிலேயே ஏகப்பட்ட பூக் கடைகள், எங்கும் மாலைகள், தோரணங்கள், சர்பத் கடைகள்,

பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்தவுடன் வலது பக்கம் பேப்பர்க் கடை (நிழலான சில 'தேவி' புத்தகங்கள் கவுண்டருக்கடியில் மட்டும்), குண்டூசி, கிலுகிலுப்பை போன்றவை விற்கும் சில பல ப்ளாஸ்டிக் கடைகள், லாட்டரிச் சீட்டு விற்பனை. அவசரமாக ஊருக்குச் செல்பவர்கள் அத்தியாவசியமாக வாங்கிச் செல்லவேண்டி, அரைஞாண் கயிறு, இஞ்சி மொரப்பா, பஞ்சு மிட்டாய், பலூன், இத்யாதி இத்யாதி விற்பனை..

'அரைஞாண் கயிற்றை எந்தக் கலரில் வாங்கவேண்டும்? கருப்பா? சிவப்பா? எது கீழ்தேகாரோக்கியத்திற்குச் சாலச் சிறந்தது?' என்பது பற்றிய விவாதம் மாயவர பஸ் ஸ்டாண்டில் எந்நேரமும் நடக்கின்ற தொடர் பட்டி மன்றம். யார் வேந்துமானாலும் எப்போது வேண்டுமானாலும் அதில் கலந்து கொள்ளலாம்.

சமீபத்தில் பஸ் ஸ்டாண்ட் கொஞ்சமேனும் புதுப்பிக்கப் பட்டிருந்தாலும் அதன் பூகோள எல்லைகள் அருகே நீங்கள் சென்று எட்டிப் பார்க்காமல் இருப்பதே நலம். அவசரத்திற்காகவும், சும்மா ஒரு ஜாலிக்காகவும் அடிக்கடி வேட்டியைத் தூக்கியோ, 'ஜிப்'பை அவிழ்த்தோ ஆனந்த பரவசம் பெறுவதில் மாயவரத்தான்கள் மற்ற தமிழருக்கு எவ்விததிலும் குறைவில்லை.

அவர்களைக் குறை சொல்லாதீர்கள். பாவம். தாங்கள் செய்வது என்னவென்று அறிந்தாலும், மற்ற இந்தியர்கள் போல் தங்கள் ஜீவாதார உரிமைகளை அவர்கள் அவ்வப்போது நிலைநாட்டி வருகிறார்கள். அவ்வளவே. பஸ் ஸ்டாண்ட் இந்த விதத்தில் பெரும் புண்ணிய யூரியாப் பூமி.

பிரம்மாண்டமான 'அந்நியன்' சைஸ் கொப்பறைகளில் அங்கே கொதித்துக் கொண்டிருப்பது தான் பனங்கற்கண்டுப் பால். இரண்டு கிளாஸ் போட்டீர்களென்றால் நேற்றைய மப்பெல்லாம் சட்டென்று இறங்கி விடும். சமீப காலங்களில் 'மதுரை மல்லிகைப் பூ' ரேஞ்சுக்கு இது புகழ் பெற்று வருகிறது. சின்ன கிளாஸ்களில் கொஞ்சமாகத்தான் கொடுப்பார்கள். அவரவர் சைசுக்கேற்ப ஒரு நாலைந்து கிளாஸ் கூடப் போடலாம். இலேசாக வாந்தி வருவது போல் இருந்தால் பனங்கற்கண்டு உங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று பொருள்.

பஸ் ஸ்டாண்டுக்குள் இருக்கும் சைவ, அசைவ உணவகங்கள் அவ்வப்போது மூடு விழா நடத்திக் கொள்ளும். எந்தக் கட்சி, யாருடைய ஆட்சி, யாருக்குக் காண்டிராக்ட் போன்ற பல விஷயங்களைப் பொறுத்தது அது.

அத்தனை பேருந்துகளும் பஸ் ஸ்டாண்டை அப்பிரதட்சிணமாகத் தான் சுற்றி வர வேண்டும். எக்ஸ்பிரஸ் பஸ்களும், லோக்கல்களும் முண்டி அடித்துக் கொள்வதில் அவ்வப்போது சில சிராய்ப்புகளும் ஏற்படுவதுண்டு. சில சமயங்களில் அது 'ரோடு ரோகோ' வரை போகும்.

(நாமும் போவோம்)

3 comments:

பினாத்தல் சுரேஷ் said...

மிகவும் அருமையான நகர் உலா!

எங்கள் ஊரைப்பற்றி இப்படி யாரும் எழுதவில்லையே என வருத்தம் ஒருபக்கம் இருந்தாலும், இப்படி வஞ்சப்புகழ்ச்சியாகவும் எழுதவில்லை என்ற நிம்மதியும் வருகிறது:-)

வானம்பாடி said...

மாயவரத்தின் மணத்தையும் நாற்றத்தையும் ஒரே நேரத்தில் உணர வைக்கிறீர்கள் ராம். நன்றி!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

பார்த்தா சார், அப்டியே அங்ஙன கால்ல பூட்சு கீட்சு போடாம, வேட்டிய மடிச்சி டப்பாக்கட்டு கட்டிக்கிட்டு ஒரு ஆட்டம் ஆடுவாங்கள, அத்தைப்பத்தியும் பதிஞ்சாகணும்ல!