என்னைப் பற்றி ...

கலக்கல் கபாலி, பாத்ரூம் பாகவதர், ராமராயர் -அல்லாருமே இங்ஙன எள்தி ராவா கூத்தடிக்றது உனுக்கு குன்ஸா தெர்யாதாங்காட்டியும்!
View my complete profile

வாங்கப்பு!

வாங்க தல, வாங்க தாயி! மேலுக்கு சொகமா கீறியளா? எம்புட்டு நேரமா முட்டக் கண்ணு கொட்டக் கொட்ட முளிச்சு, "இன்னாடா, அவிக இன்னுமா வாரலை?”னு ரோட்டு வாசலையே பாத்துக்குனு கவலியா, கலீஜா நிக்கறன்? வந்தாச்சில்ல? அப்டியே சித்த குந்தறது. பெர்ய பெர்ய எல்க்கிய அண்ணாச்சிங்கள்லாம் இங்ஙன வந்த்ருக்காக. வாராக, எளுதறாக. நீரு மோரு, ஐசு ஜோடா, சல்பேட்டா எதுனா எடுத்தாற சொல்லட்டா? ஒரு மொடா குட்சிட்டு, ஒக்காந்து படி ராசா!


Friday, July 10, 2009

GM - Is it General Motors or Government Motors?!

After about only 40 days in banktrupcy, GM is emerging back as 61% US govt. owned?!

Tuesday, July 07, 2009

யாம் பெற்ற இன்பம் -5

”என்னங்க இது? ‘ஜக்குபாய்’ ஷூட்டிங், ஹாங்காங், பாங்காக்னு ஏதாவது வெளிநாட்டில நடந்த ஷ்ரேஷ்டமான கிசுகிசுக்கள் எழுதுவீங்கன்னு பார்த்தா, நீங்க பக்திப் பழ ரேஞ்சுக்கு அம்பாள், யோகான்னு எழுதிக்கிட்டே போறீங்களே, இது தேவையா?”

“வேணாம், சொல்லிட்டேன், அழுதுருவேன்!”

-மேற்படி தொனியில் சில வாசக நண்பர்கள் என்னை செல்லமாகக் கடிந்து கொண்டாலும், “எதுல ஃபோகஸ் பண்றீங்க, தெரியலியே?” என்று பாரா மாதிரியான ஆசிரிய நண்பர்கள் ’சாட்’டில் சொன்னாலும், பயப்படாதீர்கள். ‘யா.பெ. இ’ தொடரத்தான் போகிறது!

முதலில் இந்தக் கட்டுரைத் தொடரை நான் எழுத நினைத்த முறையே வேறு மாதிரி. ஒரு புது முயற்சியாக- ஒரு விடியோ ப்ளாக் மாதிரி, ஆனால் எங்கெங்கே முடிகிறதோ, அங்கே ஷூட் பண்ணி முடித்த பிறகு, சாவகாசமாக எடிட் செய்து கொள்ள வசதியாக -ஒரு சிங்கிள் ஃபோகஸ் இல்லாமல், கலெக்டிவ் ஃபோகஸுடன்- ‘காரே மூரே’ என்று எழுத நினைத்தேன். அந்த முயற்சிக்கு நான் தயார் என்றாலும் படிப்பவர்கள் தயாரா என்பதில் எனக்குத் தயக்கம் வந்தது உண்மை.

“அய்யோ, இந்த ஆளும் பின்நவீனத்துவம் எழுத ஆரம்பிச்சுட்டார்டா” என்று யாராவது திட்டினால், என்ன செய்வது?

அதைவிட முக்கியமாக, படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும்போது, இயக்குனர் அநுமதி இல்லாமல் நான் ஷூட்டிங் நிகழ்ச்சிகள் பற்றி எழுதுவது, அவ்வளவு சரியில்லை. இன்று காலை பேசும்போது, பட ரிலீஸ் ஆகஸ்டில் என்று சொன்னார்கள். ஆகஸ்ட் அடுத்த மாதம் தானே, திரும்ப வந்து நினைவலைகளில் மறுபடியும் கொஞ்சம் நீந்தினால் போகிறது!

அதனால் இப்போதைக்கு, இப்படியே ஒரு மார்க்கமாகவே செல்வோம்!

கும்பகோணம் போய் விட்டுப் பிறகு திருமீயச்சூர் பிரயாணம் என்று சொன்னேன் அல்லவா? திருச்சியிலிருந்து, தஞ்சாவூர், கும்பகோணம் வழியாகத்தான் அங்கே செல்லவேண்டும், ஒரு போனஸாக, கும்பகோணத்தில் உறவினர் வீட்டில் ஒரு டோஸ் டிகிரி காஃபி சாப்பிட்டு விட்டுச் செல்லலாம் என்று நான் சொன்னவுடன் மீண்டும் காருக்குள் சகஜ நிலை திரும்பியது.

கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலின் வடமேற்கில், ராயர் தெரு முனையில், கரும்பாயிரம் பிள்ளையார் கோவிலை மீண்டும் புதுப்பிப்பதற்காக, சுத்தமாகத் தரை மட்டமாக, இடித்துப் போட்டிருந்தார்கள். பக்கத்திலேயே பாலாலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. புதுக் கோவிலை இன்னமும் விரிவாகக் கட்டப் போவதாகத் தெரிகிறது.

“அவசர வேலையாக வந்திருக்கிறோம். உடனேயே சென்னை திரும்ப வேண்டியிருக்கிறது” என்ற உடான்ஸுடம் காஃபியை முடித்து, இருட்டுவதற்குள் எல்லா இடங்களுக்கும் போய்விட முடியுமா என்று பேசிக்கொண்டே கிளம்பினோம்.

நடுவழியிலேயே, கூத்தனூர் சரஸ்வதி ஆலயம்!

Saraswathi

சரஸ்வதிக்குத் தனி ஆலயமா? நான் கேள்விப்பட்டதில்லை. இது என்ன ஆச்சரியம்!

தென் இந்தியாவில், பல கோவில்களில் சரஸ்வதியை, சும்மனாச்சிக்கும் ஒரு தூண் அம்மாச்சியாகவே பாவித்து, முக்கியத்துவம் கொடுக்காமல், மூலையோடு மூலையாக விட்டிருப்பார்கள். பெரும்பாலும் கும்மிருட்டில் படிப்பு தெய்வம் சரஸ்வதி பம்மிக் கிடப்பாள்.

படிப்பில் நமக்கு அவ்வளவு ஆர்வம்!

டுடோரியல் காலேஜ் சீனியர்ஸ், அரியர்ஸ் தாடித் தடியன்ஸ் தயவில் போனால் போகிறதென்று இருட்டில் யாராவது சரஸ்வதிக்கு எப்போதாவது ஒரு சூடம் கொளுத்துவது வழக்கம். பழங்காலப் பாட்டிகள் “யாகுந்தேந்து துஷாரஹார தவளா ...” என்று பேராண்டிகளின் மார்க் ஷீட்டுக்காக வேண்டிக் கருங்கல்லில் முட்டிக் கொள்ளும் சத்தம் காதில் விழும்.

மற்றபடி சரஸ்வதிக்கு தெற்கில் மவுசு இல்லை.

ஆனால், வடக்கே அப்படியில்லை. வடக்கில் சரஸ்வதிக்கு செல்வாக்கு அதிகம்.

உஜ்ஜயினியில் சரஸ்வதி கோவில் மிகப் பிரசித்தம்.

’ ஞான பீடம் ’ விருது கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா? அந்த விருதே நிஜமான ஐம்பொன்னால் செய்யப்பட்டது. சும்மனாச்சிக்கும் ஓட்டை சால்வை, ப்ளாஸ்டிக் வாழ்த்து அட்டை, வாடிய ரோஜா மாலை விவகாரம் இல்லை அது.

அந்த விருதில் நடுநாயகமாக உஜ்ஜயினி சரஸ்வதி உருவம் தான் பொறிக்கப்பட்டிருக்கிறது. 14 இதழ்களைக் கொண்ட பத்மபீடத்தில் கமண்டலம், பத்மம், ஜபமாலை, ஓலைச்சுவடி எல்லாவற்றுடனும்.

ஆனால், நம் கோவில்களில் லஷ்மிக்கு அவ்வளவு பஞ்சப் பாட்டு இருக்காது.

தம்மாத்துண்டு கோவில்களில் கூட, துட்டு வேண்டி, ’அம்மா தாயே’ என்று லஷ்மிக்கு அவ்வப்போது அர்ச்சனைகள், தோப்புக்கரணங்கள், சஹஸ்ரநாமாவளி என்று கோலாகலப்படும்.

சரஸ்வதி அளவுக்கு லஷ்மிக்கு எப்போதுமே லாட்டரி இருந்ததில்லை. ஒன்றுமே இல்லாவிட்டாலும், யாராவது ஒரு உள்ளூர் கனவான் ஒரு ட்யூப் லைட்டை வாங்கி மாட்டி, அந்த வெளிச்சம் வெளியே வராத அளவுக்கு, ‘சீனா. பானா. ஆனா, மூனா’ என்று எதையாவது ஆட்டோகிராஃபாக எழுதித் தன் தரும சிந்தையை வெளிப்படுத்தி இருப்பார். அர்ச்சகரும் சரஸ்வதி கோவிலைக் கண்டு கொள்ளாமல், யாருக்காவது லஷ்மி கடாட்சத்தைப் பொங்க வைக்கலாமென்று, லஷ்மி கோவில் கருங்கல்லில் தான் முதுகைச் சொறிந்து கொண்டு ‘வெயிட்டிங்’கில் உட்கார்ந்திருப்பார்.

”சரி, இந்த சரஸ்வதி கோவில மொதல்ல பார்த்துடலாம்” என்றேன்.

”அடாடா, இத அப்புறமா பார்த்தா போச்சு. திருமீயச்சூருக்கு நேரமாவுதுல்ல?”

” எந்த கோவில பார்க்க வந்தமோ, அந்தக் கோவில மூடிடப் போறான். அப்புறமா பிரகாரத்துல தேங்கா மூடி பொறுக்கிக்கிட்டு உட்கார்ந்துட்டிருக்க வேண்டியது தான்”

“வந்த வேலய விட்டுட்டு, இதென்ன நடுவால புது ப்ரொக்ராம்?” என் சகாக்களின் பலத்த எச்சரிக்கை வாசகங்களை நான் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

‘அவள் தயவில் தான் நாலு எழுத்து எழுதுகிறோம். அரியும் சிவனும் மட்டுமல்ல, சரஸ்வதியும் லஷ்மியும் கூட, பிரபஞ்ச மகாசக்தியின் ஒரு வெளிப்பாடே.

‘யாதும் ஊரே, யாவரும் டொமரே’ என்றெல்லாம் நான் லெக்சர் அடித்தால், டிரைவரும் பாசஞ்சரும் தாங்க மாட்டார்கள் என்று நினைத்து அவர்களை சும்மா விட்டேன்.

சரஸ்வதியாவது, மகாலட்சுமியாவது, துர்க்கையாவது? எல்லாமே மகாசக்தியின் பல அவதாரங்கள் என்று தானே சௌந்தர்ய லஹரி சொல்கிறது?

தவிரவும், நவராத்திரி நேரத்தில் ஒரு புகழ் பெற்ற சரஸ்வதி கோவிலுக்கும் போக முடிந்ததில் நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்.

(உச்சி வரை போவோம்)












Wednesday, July 01, 2009

யாம் பெற்ற இன்பம் -4

எலிப் பொறி புகழ் மசால் வடை புகழ் பேரளம் பக்கத்திலிருக்கும் திருமீயச்சூர் போக, எதற்காக திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் அகண்ட காவேரி என்று நான் அலைய வேண்டும்?

காரணம் இருக்கிறது.

துபாயிலிருந்தோ, அமெரிக்காவிலிருந்தோ, அட, ஆப்பிரிக்கா, ஐஸ்லாண்ட், கானா, எங்கிருந்து எப்போது தமிழ்த் தாயகம் திரும்பி வந்தாலும், நீங்கள் ஒரு ‘பொடென்ஷியல் இன்வெஸ்டர்’ - அதாவது ‘கையில் செம துட்டு வைத்திருக்கிறீர்கள்; உங்களை ஒரு கை பார்த்து விட வேண்டியது தான்’ என்று நம் தாய்த் திரு நாட்டில் ஒரு பெருங்கூட்டமே கண் கொத்திப் பாம்பாக, எந்நேரமும் இதே கருமமே கண்ணாக, மீனம்பாக்க பன்னாட்டு விமான நிலைய சாய்விருக்கைகளிலும், ஒப்பனை அறை வாசல்களிலிருந்தும் தயாராக அலைகிறது.

‘துண்டைக் காணோம், துணியைக் காணோம்’ என்று துபாயிலிருந்து நீங்கள் ஓட்டமாக ஓடி வந்து கண்ணீர் நுரைக்க, மூச்சு இரைக்க நிற்கலாம். உங்களிடம் துட்டு இல்லை என்று மட்டும் யாருமே நம்பவே மாட்டார்கள். ”சார் சும்னாச்சிக்கும் ஜாகிங் ப்ராக்டீஸ் செய்றார்பா. உல்லலாயிங்சு” என்று சிரிப்பார்கள்.

அவுட்சோர்சிங், இன்சோர்சிங் சான்செல்லாம் காய்ந்து புண்ணாகி, இருந்த வேலையும் விசாவுடன் பறந்து போய் நீங்கள் பிருஷ்ட பாகத்தில் பெரும் வேதனையுடன் அமெரிக்காவிலிருந்து மீனம்பாக்கம் வந்திறங்கி வேலை இல்லாமல் வானம் பார்த்து நிற்கலாம். “சார், மோனத் தவம் பண்றார்பா. அம்பானி பிரதர்சுக்கே அய்யா தான் ஃபைனான்சு” என்று வெந்த பி. பாகத்திலே வேல் குத்துவார்கள் நம்மவர்கள்.

‘என் ஆர் ஐ’ என்றொருவன் இந்தியா பக்கம் திரும்பி வந்து விட்டால் அவன் நெற்றி மிகப் பரந்தது, அதில் நாம் வழித்துக் குழைத்து நாமம் ஆஃடர் நாமம் ஆஃப்டர் நாமம் போட்டே ஆகவேண்டும்” என்றலையும் சென்னைத் தீவிரவாதிகள், வெடிகுண்டு முருகேசன்கள் பலப் பலர்.

“பில் கேட்ஸும், வாரன் பஃபேயும் வேறு அமெரிக்க ஜாதியப்பா. நாங்கள் அங்கே ‘அய்யா, சாமி’ என்று கெஞ்சிக் கூத்தாடி ஏதோ அடிமைத் தொழில் புரிந்து கஷ்ட ஜீவனம் செய்து அரை வயிற்றுக்குக் கூழ் குடித்துத் தொந்தி வளர்க்கிறோம். முதலீடெல்லாம் செய்யுமளவுக்கு ஏதும் இல்லையே” என்று சொன்னால் வடிவேலு காமெடிக்குச் சிரிப்பது போல் சிரிப்பார்கள் ‘இடி, இடி’யென்று.

Spencers Chennai

“நல்ல ஜோக்கு சார். அது கெடக்கட்டும். இப்ப நீங்க ஸ்பென்சர் பில்டிங் ப்ளஸ் கன்னிமாரா ஹோட்டல் வாங்கிக்கறீங்களா, இல்லாட்டி மொத்த நுங்கம்பாக்கம் ஏரியாவையுமா?”

‘டக், புக்’கென்று செல் போனில் எதையாவது அழுத்தி, பவ்யமாக, “சார், பார்ட்டி ரெடி, இப்பயே அழைச்சிட்டு வரேன்”

வேதனையில் என் ஆர் ஐ தலைகுனிந்து நிற்கலாம். விட மாட்டார்கள் புரோக்கர்கள்.

“சரி சார், சென்னையே வோணாம். தஞ்சாவூர், மதுரைப் பக்கமா ஒரு பத்தாயிரம் ஏக்கர்? சேலம் கொல்லிவராகன் மலை? விருதுநகரிலிருந்து தனுஷ்கோடி வரை?”

அப்படித்தான் ஒரு அதிரடி கோஷ்டியார் என்னை- அம்பிகை லலிதாம்பாளை தரிசனம் செய்யலாம் என்று கிளம்பியவனை- திருச்சிப் பக்கமாக திசை திருப்பியிருந்தனர். கிட்டத்தட்ட ஆள் கடத்தல்.

“அரியலூர் பக்கமா ஒரு அய்யாயிரம் ஏக்கர், அப்புறமா BHEL ஃபேக்டரிப் பின் பக்கமா ஒரு அம்பதாயிரம் ஏக்கர். பீச்சாங் கையால வாங்கி சோத்துக் கையால ஒடனயே விக்கறது தான் உங்க வேலை. மாட்டேன்னு மட்டும் நீங்க சொல்லிடக் கூடாது. வந்து ஒரு தடவை அந்த மண்ணை நீங்க மிதிச்சுத்தான் ஆகணும்” என்கிற அன்புக் கட்டளை காரணமாகவே என் திருமீயச்சூர் ரூட் திருச்சி வழியாகப் பயணப்பட்டது.

பெரிய தட்டில் மைசூர்பாக் கொட்டப்பட்டு சீராக வெட்டப்பட்டது போல், லே அவுட் ப்ளான்கள் எனக்குக் காட்டப்பட்டன. கலர் கலரான கம்ப்யூட்டர் ப்ரிண்ட் அவுட்கள். ’ஒரு கொடி போட்டால் ரெண்டு கோடி, அஞ்சு கோடி போட்டால் பத்து கோடி’ என்ற ஆசை முழக்கங்கள், ‘மூணே வாரத்துல முந்நூறு பர்செண்ட், நாலே மாசத்துல நாப்பதினாயிரம் விழுக்காடு, ஒரே வருஷத்துல .... “

“அய்யோ, தாங்கலைடா சாமி! ஆளை விடுங்கப்பு” என்கிற என் புலம்பல் யார் காதிலும் விழவில்லை.

எவ்வளவு நேரம் தான் பொட்டைக்காட்டு பூமியில் புதையல் தேடி அலைவது? காவேரிக் கரையில் தண்ணீரையே காணோம், இதில் காசு வேறா கிடைக்கும்?

’திருச்சியில சாப்பாடு எங்க நல்லா இருக்கும்? அஜந்தாவிலயா, அரிஸ்டோவிலயா?’ -என்ற ஒரு பட்டி மனற விவாதத்தை அவசர அவசரமாகத் துவக்கி வைத்தேன். தமிழனைக் கவிழ்க்க சினிமாவும், சாப்பாடுமே பேராயுதங்கள். அஜந்தா-எல்லோரா, மன்னிக்கவும், அரிஸ்டோ, எதிர்-எதிர் கோஷ்டிகள் சோத்துப் பரவசத்துக்கு மல்லுக்கட்ட, நான் எதிர்பார்த்தபடியே நடந்தது. அவர்கள் வெண் சாதப் புதை குழியில் பலமாகச் சிக்கிக் குழம்பின் மசாலாப் பிடியில் மூச்சுத் திணறி மயக்கமாக இருக்கையில் நான் அநாயாசமாக அவர்களிடமிருந்து அந்தர்தியானமானேன்.

சென்னையிலிருந்து என்னுடன் வழித்துணையாக வந்திருந்த என் அண்ணன் மகன் ராஜுவுடன் விட்டேன் ஜூட்- “நேரா கும்பகோணம் போப்பா, டிரைவர்!”

ராஜு என்னை முறைத்தான். “எங்கேயோ போலாம்னு சொல்லிட்டு எங்கெங்கேயோ இழுத்துக்கிட்டுப் போற?” என்கிற கேள்வி அதில் தொக்கி இருந்தது.

(உச்சி வரை போவோம்)





















Monday, June 29, 2009

’கம்பலை’ என்றால் என்ன? - கொஞ்சம் தமிழ் ஆராய்ச்சி!

’யாம் பெற்ற இன்பம்- 3’ ல், நான் பின்வருமாறு எழுதியிருந்தேன்:

” ... இருந்தாலும், பலத்த செக்யூரிட்டியையும் தாண்டி, முக்கியப்பட்ட சிலர் கண்ணீரும், கம்பலையுமாக (அது என்னங்ணா, ‘கம்பலை’? யாராச்சியும் பதில் சொல்லுங்ணா) எனக்கு விடை கொடுக்க முடியாமல் ஏர்போர்ட்டில் கேவிக்கேவி, தேம்பித்தேம்பி அழுதார்கள்.”

பின்னூட்டத்தில், சுந்தர், “நானும் ரொம்ப நாளா தவிச்சிட்டிருக்கேன் இந்த ‘கம்பலை'க்கு அர்த்தம் புரியாம....நீராச்சும் சொல்லுவீர்னு பார்த்தா......இப்படி அம்போன்னு விட்டா எப்படி ??” என்று கேட்டிருந்தார்.

சுந்தர் கேட்கும்போது சும்மா இருக்கலாமோ? நாம் கேட்ட கேள்விக்கு நாமே பதில் கண்டுபிடித்து விடுவோம் என்று கொஞ்சம் தமிழ் ஆராய்ச்சி செய்ததில் ‘கம்பலை’ என்றால் சத்தம், ஆரவாரம், ’சவுண்டு கொடுப்பது’ என்பது தெரிந்து கொண்டேன்.

கண்ணீரும் கம்பலையுமாக என்பது ’அழுகையும் ஆத்திரமுமாக, சத்தமாக ஃபிலிம் காட்டி’ என்ற பொருளில் உபயோகிக்கப்படும் சொற்றொடர்.

சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக் காஞ்சியில் இந்தக் ‘கம்பலை’ 6 இடங்களில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. மதுரைக் காஞ்சி பாடியவர் :: மாங்குடி மருதனார். தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியனைப் புகழ்ந்து மொத்தம் 782 பாடல்கள் பாடி இருக்கிறார். (இந்த மாங்குடி தான் மயிலாடுதுறை - வைத்தீஸ்வரன் கோவில் வழியில் இருக்கும் மாங்குடியா என்பதை வேறு யாராவது எனக்குத் தெரியப்படுத்தவும்).

110வது பாடலில், இந்தக் கம்பலை வருகிறது:

இரு பெயர்ப் பேரா யமொடு இலங்கு மருப்பிற் களிறு கொடுத்தும் பொலந் தாமரைப் பூச் சூட்டியும் நலஞ் சான்ற கலஞ் சிதறும் பல் குட்டுவர் வெல் கோவே! கல் காயுங் கடுவேனி லொடு இரு வானம் பெயலொ ளிப்பினும் வரும் வைகல் மீன் பிறழினும் வெள்ளமா றாது விளையுள் பெருக நெல்லி னோதை அரிநர் கம்பலை . (110)

அதேபோல் 120, 430, 530, 550, 620-வது பாடல் வரிகளிலும் இதே கம்பலை பெரும் சப்தம், ஆரவாரம் என்ற பொருட்களில் கையாளப்பட்டிருக்கிறது.

அதேபோல், மூன்றாம் திருமுறை, திருஞானசம்பந்தரின் தேவாரத்திலும் ’கம்பலை’யைக் கண்டேன்::

கொம்ப லைத்தழ கெய்திய நுண்ணிடைக் கோல வாள்மதி போலமு கத்திரண்
டம்ப லைத்தகண் ணாள்முலை மேவிய வார்சடையான்
கம்ப லைத்தெழு காமுறு காளையர் காத லால்கழற் சேவடி கைதொழ
அம்ப லத்துறை வான்அடி யார்க்கடை ............ (நன்றி: www.thevaaram.org)

’அடியார்கள் ‘ஹர ஹர’வென்று பெரு முழக்கம் செய்து பணிந்து எழுந்து போற்றும் இளங்காளையைப் போன்ற உடற்கட்டு கொண்ட சிவன்’ என்று பாடுகிறார் சம்பந்தர்.

இப்போதைக்கு இத்தனை கம்பலை போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?!




Saturday, June 27, 2009

யாம் பெற்ற இன்பம் -3

2008 செப்டம்பர்- அக்டோபர், சென்னை:

’ஜக்குபாய்’ முதல் கட்ட பாங்காக் படப்பிடிப்பில் சில சீன்கள் (சரத்-ஷ்ரியா-கவுண்டமணி காம்பினேஷன்ஸ்) எடுக்கப்பட்டு, கொஞ்சம் என் வேலை முடிந்ததும், இயக்குனர் ரவி என்னிடம் “பட்டயா பீச்ல ஃபைட் சீன்ஸ் எடுக்க வேண்டியிருக்கு. சரத் இருந்தா போதும். உங்க ஜாக்கி சான் வேலையெல்லாம் இதுல காட்டத் தேவை இருக்காது. நீங்க பீச்சுக்கு வந்தா கூட்டத்தை சமாளிக்கவே எங்களுக்கு நேரம் சரியாப் போயிடும். அதுக்காக நீங்க ஹாலிவுட்டுக்கு திரும்பிட வேணாம். வேணும்னா சென்னைக்குப் போய் ரெஸ்ட் எடுத்துக்குங்க. மறுபடியும் நாம எப்ப மீட் பண்ணணும்னு சொல்றேன்” என்றார்.

“டேய், எல்லே சார் பின்னாடியே மாடு, கன்னுக்குட்டி எதுவும் போயிடாம ஏர்போர்ட் வரைக்கும் போய் பாத்துங்கப்பு” என்று அசிஸ்டெண்டுகளுக்கும் கறாரான கண்வழி ஆர்டர் போடப்பட்டது.

“கிருஷ்ணா, கிருஷணா!” என்று நான் கன்னத்தில் போட்டுக்கொண்டேன்.

இருந்தாலும், பலத்த செக்யூரிட்டியையும் தாண்டி, முக்கியப்பட்ட சிலர் கண்ணீரும், கம்பலையுமாக (அது என்னங்ணா, ‘கம்பலை’? யாராச்சியும் பதில் சொல்லுங்ணா)எனக்கு விடை கொடுக்க முடியாமல் ஏர்போர்ட்டில் கேவிக்கேவி, தேம்பித்தேம்பி அழுதார்கள்.

சுவர்ணபூமி ஏர்போர்ட்டே அழுகையில் வழுக்கியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

“நான் இப்ப எங்க போயிட்டேன்னு நீ/நீங்க இப்படி அழுது ஆகாத்தியம் பண்றீங்க. ரெண்டு வாரம் சென்னையில தான இருக்கப்போறேன். அப்படி ரொம்பத் தாங்கலைன்னா சொல்லுங்க. ஒரு போன் போட்டா ஓடி வந்துடறேன். சென்னை மூன்று மணி நேரத் தொலைவில தானே இருக்கு? பிளாக்பெர்ரில, ஃபேஸ்புக்ல, ட்விட்டர்ல, புறா மூலமா டெய்லி ஹாய் சொல்றேன். போதுமா?” என்றெல்லாம் பஞ்சாபியிலும் குஜராத்தியிலும் மாற்றி மாற்றி நான் சமாதானம் சொல்ல நேர்ந்தபோது, பச்சைத் தமிழ் அசிஸ்டெண்ட் (செக்யூரிட்டி) டைரக்டர் பாஷை புரியாததால் ‘ஙே’ என்று பேய் முழி முழித்ததை நான் ரசித்தேன்.

“ஒண்ணுமில்லப்பா. பாங்காக்ல ஃபுல்கா ரொட்டி, மட்டன் குஸ்கா எங்க கிடைக்கும்னு சொல்லிக்கிட்டிருக்கேன்” என்று நான் சொன்னதை மதுரைத் தமிழர் சுத்தமாக நம்பவில்லை.

சென்னை திரும்பியாயிற்று. அலும்னி கிளப், போட் கிளப், பிரசிடென்சி கிளப் என்று எல்லா இடங்களிலும் தரிசனம் கொடுத்தாயிற்று. அடையார் கேட், தாஜ், ரெயின்ட்ரீ என்று சுக வாசஸ்தலங்கள் எல்லாமே போரடித்துப் போய் விட்டது.

ஊர் முழுக்க முல்லைச் சிரிப்பும், சரசரக்கும் பட்டுப் பாவாடையும், அகல் விளக்குகளுமாக நவராத்திரிக் கொண்டாட்டங்கள். எல்லோரும்- மகா பொடுசுகளிலிருந்து கெழ போல்டுகள் வரை அத்தனை பேரும்- பயங்கர பிசி. எனக்கு மட்டும் சுத்தமாக எந்த வேலையுமே இல்லை. சிமெண்ட் உதிர்ந்த மோட்டுவளை டிசைனை எத்தனை நேரம் தான் முறைத்துக் கொண்டிருப்பது?

எதிர், பக்கத்து வீடுகளிலிருந்து சுண்டல், சுண்டலாக வாண்டுகள் படையெடுப்பு, தாங்கவே முடியவில்லை. நானாவித பரிமள விநோத சுண்டல்களால் நான் தொண்டை அடைத்துப் போய் மேலும் விக்கித்து சோகமானேன்.

ஊரெங்கும் விழாக் கோலத்தில் இருக்கும்போது நானும் ஒரு பட்டுப் பாவாடை கட்டிக்கொண்டு பக்கத்து வீட்டுக் கொலுவில் போய் உட்கார்ந்து ‘பஜ பஜ மானஸ ...’ என்று பாடலாமா? ஊஹூம். அடி விழும்.

மனசு ரொம்பவும் தான் பேதலித்துக் கிடக்கிறது.

“டீ இவளே! கீதோபதேசம் போட்டிருக்கேன் வந்து பாரேன்!” நானும் ரங்கோலி போடக் கற்றுக் கொள்ளலாமா? ரங்கோலி என்பது ஹிந்தியா, பஞ்சாபியா, குஜராத்தியா?

தனிமை என்னை மிகவும் வாட்டியது. பாங்காக் பக்கமே வரக்கூடாதென்று தடா வேறு. கொஞ்சம் ஆறுதலுக்காக தி.நகர் ‘மன்சூக்’ஸில் குஜராத்திச் சாப்பாடு சாப்பிட்டுப் பார்த்தேன்.

இரண்டு வேளையும் ஷ்ரீ- மன்னிக்கவும், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் சொல்ல ஆரம்பித்தேன்.

ஸ்வாமி ராமாவின் ‘Living with the Himalayan Masters', பால் பிரண்டனின் 'A Search in Secret India', பாபாஜி நாகராஜின் கிரியா யோகாவெல்லாம் படித்து முடித்தாயிற்று. புதிதாக ஏதாவது சுப்ரபாதம் இயற்றலாமா, சுந்தர காண்டம் படிக்கலாமா என்றெல்லாம் ஆன்மீகத்தனமாக யோசிக்கலானேன்.

ஷட்சக்ரபேதனம் என்றெல்லாம் சொல்கிறார்களே, இதெல்லாம் நமக்கு சரிப்படுமா என்பது புரியவில்லை. புகை நடுவே ஏதோ புலப்படுவது போல் தெரிந்தது.

ஒரு நாள் நண்பர் ஒருவர் கூப்பீட்டாரேயென்று வெளியே போகக் கிளம்பினவன் சம்பந்தமே இல்லாமல் மவுண்ட் ரோடு சமதா புக்ஸ் பக்கம் போய் வண்டியை நிறுத்தினேன். ஓனர் கிருஷ்ணா தீவிரமான லலிதாம்பிகை பக்தர். உண்மையாக யோசித்துப் பார்த்தால் அங்கே எதற்காகப் போனேன் என்பது இன்னமும் இன்றுவரை தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அங்கே நடந்த சில நிகழ்வுகள் ஆச்சரியமானவை.

லலிதாம�பி��

இந்த லலிதாம்பிகை பக்தி மேட்டர் பற்றி சீரியசாக எழுத ஆரம்பித்தால் பீகார் யோகா, பிராணாயாமம், ஸ்வாமி நிரஞ்சனானந்தா, யோக நித்ரா, குடுமி வெங்கட்ராமன் மூலம் பெரிதாக நான் ஏமாந்த கதைகள் ஏன்று எல்லாம் எழுத வேண்டி வரும். இப்போது அந்தக் கதைகள் வேண்டாம்.

கிருஷ்ணாவுக்கு எதிரே ஜோல்னாப் பையுடன் யாரோ ஒரு வெள்ளைக்காரர்- ஆன்மீக நாட்டம் அதிகமுள்ளவர் போல் தெரிந்தது- திருமீயச்சூர் போகும் வழி பற்றி. லலிதாம்பாள் கோவில் பற்றியெல்லாம் விபரம் கேட்டுக் கொண்டிருந்தார். கிருஷ்ணா அவரிடம் பேசிக் கொண்டிருந்ததிலிருந்து எனக்கு யாரோ ’பளிச்’சென்று என்னிடம் நேரடியாகச் சொல்வது போல் புரிந்தது என்னவென்றால்:

“சும்மாத்தானே கோவில் மாடு மாதிரி ஊரை சுத்தி வந்து கிட்டிருக்கே. லலிதா சஹஸ்ரநாமம் படிச்சா மட்டும் போதுமா? திருமீயச்சூர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயே, ஏன் அங்கே ஒரு முறை போய் வரவேண்டுமென்று உன் மர மண்டையில் ஏறவே இல்லை? அங்கே போகும் வழி பற்றி சொல்கிறேன் பார்”

எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

“எட்றா வண்டிய, திருப்புடா திருச்சி பக்கம்” என்றேன்.

எதற்கு திருச்சி பக்கம்?

சொல்கிறேன்.

(உச்சி வரை போவோம்)

Thursday, June 25, 2009

கவர்னரின் காதலி

ஒரு வார காலம் ஒரு பிரபல முதலமைச்சரைக் காணோம் என்றால் நாடு என்ன ஆகும்?

வீட்டிலே கேட்டால், “இதோ, தெருக்கோடிக்குப் பால் பாக்கெட் வாங்கப் போயிருக்காருங்க, வந்துருவாரு, இப்டியே குந்துங்க” என்று பீலா விடுகிறார்கள்.

ஆஃபீசுக்குப் போனால், “அடேடே, மீட்டிங் முடிந்து இப்போது தானே வீட்டுப் பக்கம் போனார்” என்று காதில் பூ சுற்றுகிறார்கள்.

ஆளு இருக்காரா, பூட்டாரா என்பது கூடத் தெரியாத திகைப்பு. போலீஸ் கையைப் பிசைகிறது. FBI "எனக்குத் தெரியாது சாமி” என்று ஒதுங்கிக் கொள்கிறது.

அமெரிக்க மீடியா சவுத் கரோலினா கவர்னர் சான்ஃபோர்டைக் காணாமல் ஒரு வாரம் துடிதுடித்துப் போய் விட்டது.

எல்லா ஊர்களிலுமே அரசியல்வாதிகள் கிட்டத்தட்ட எந்நேரமும் மீடியா வெளிச்சத்தில் திளைப்பவர்கள்.

ஆரம்ப காலங்களில் “ஏண்டா எனக்குத் தனியா கட்-அவுட் வைக்கலே?” என்று மிரட்டி உருட்டுக் கட்டை, அதிரடி, கட்டைப் பஞ்சாயத்து, ஆயிரம் கார் பவனி என்று வளர்ந்து, அடுக்கடுக்கான சால்வைகள், ஆயிரக் கணக்கில் தொண்டர்கள், தினமும் பத்திரிகையில் புகழ் புராணம் என்றெல்லாம் பழக்கப்பட்டுப்போன பிறகு என்று திடீரென்று சொந்தப் பாட்டியைப் புதைத்த சுடுகாட்டுப் பக்கம் போய் வணங்கி வருவதற்குக் கூட தனிமை இல்லாமல் தவிப்பவர்கள்.

Photobucket

ஒரு வாரமாகக் காணாமல் (அர்ஜெண்டினா) போயிருந்த கவர்னர் நேற்று திடீரென்று திரும்பி வந்தார்.

அட்லாண்டா ஏர்போர்ட்டில் ஒரு பிரஸ் மீட்டில் “அர்ஜெண்டினாவில் ஒரு சின்ன வீடு கட்டி இருக்கிறேன். அங்கே போய் சின்னதாக ஒரு கிரகப் பிரவேசம், சாரி, அதெல்லாமில்லை. என்னை மன்னியுங்கள். அங்கே போய் ‘ஹோ’வென்று அழுது விட்டு இப்போது தான் திரும்புகிறேன்” என்றார்.

ரிபப்ளிகன் பார்ட்டி தலைவர்கள் தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.

சின்ன வீடு, சைடு வீடு, எதிர் வீடு சமாச்சாரங்கள் அமெரிக்க அரசியலில் புதிது இல்லை என்றாலும், கவர்னர் சான்ஃபோர்டு 2012 அதிபர் தேர்தலுக்கான ஒரு பிரகாசமான நம்பிக்கை நட்சத்திரம் என்று நினைத்தவர்கள் பலர்.

ஒபாமாவுக்குச் சரியான போட்டியாளர் என்று வர்ணிக்கப்பட்டவர். இப்போது ”ஒரு அர்ஜெண்டியன் தோழியுடனான நட்பு கொஞ்சம் அர்ஜெண்டாக இறுகிப் போய் விட்டது உண்மை தான். கடந்த ஒரு வருடத்தில் மூன்றே மூன்று முறை தான் நான் அங்கே போய்...” என்று இழுக்கிறார்.

அது சரி, கவர்னர் பதவி?

அதை ராஜிநாமா செய்யும் ஐடியாவே கொஞ்சம் கூட இல்லையாம்.

நடத்துங்கப்பா!

Sunday, June 21, 2009

யாம் பெற்ற இன்பம் -2

எல்லா சென்னை சினிமா கம்பெனிகளுக்கும் பொதுவான இரண்டு சட்டங்கள் உண்டு.

1. முதல் ஷெட்யூல் எப்போதுமே படு கிராண்டாக, விலாவாரியான விபரங்களுடன் இருக்கும்.

2. முதல் ஷெட்யூல் கடைசி நிமிடத்தில் கண்டிப்பாக மாற்றப்படும்.

இந்த இரண்டு பொது விதிகளையும் நான் கிழக்கு பதிப்பகத்தின் அடுத்த ‘ஹாலிவுட் அழைக்கிறது’ பதிப்பில், ‘சிலேட்டு, பல்ப்பம், ஸ்டோரி போர்டு’ அத்தியாயத்தில் கண்டிப்பாகச் சேர்த்து விலாவாரியாக விளக்கி விடுகிறேன்.

2007 டிசம்பரில் நான் என் சகதர்மிணியுடன் ஆஸ்திரேலிய திக்விஜயம் முடித்திருந்தபடியால், மெல்பர்னின் சந்து பொந்துகள், எனக்கு மந்தவெளி எட்டாம் நம்பர் கடை ரேஞ்சுக்கு தெரியும், சிட்னியின் ராஜபாட்டைகள் ஆழ்வார்பேட்டை அளவில் மிகப் பரிச்சயம். அடிலேய்ட், கேர்ன்ஸ், க்வீன்ஸ்லேண்ட், அயர்ஸ் ராக், விக்டோரியா, டாஸ்மேனியா, மலையாளி சேட்டன்கள் மட்டுமே கடை போட்டிருக்கும் இன்னும் சில ஊர்கள் என்று நாங்கள் அப்போது சுற்றாத இடமே இல்லை. ஆஸ்திரேலியா விசிட் பற்றி ஏன் தனிப் பதிவு போடவில்லை என்று செல்லமாக திட்டித்தீர்த்த, திட்டிக் கொண்டிருக்கும் நண்பர்கள் அநேகம். கண்டிப்பாகப் போடுகிறேன்.

“மெல்பர்ன்ல எந்த சந்துல எப்படி அரிஃப்ளெக்ஸ் 435 காமெரா வெச்சா என்ன ஆங்கிள்ல எந்த பீச்ல என்னென்ன எவ்வளவு பெரிசாத் தெரியும்னு நான் சொல்றேன்” என்று நான் பொதுவாக ஜம்பம் அடித்து வைத்திருந்தேன்.

இந்த இடத்தில் சமீபத்திய ‘ஹாட் டாபிக்’கான ஆஸ்திரேலிய-இந்திய மாணவர்கள் முட்டல், மோதல் பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும். ஆஸ்திரேலியாவில் படித்து, என்னுடன் வேலை பார்த்த பல நண்பர்களை, பாங்க் ஆசாமிகளை நான் நன்றாக அறிவேன். ‘சிஸ்கோ’வில் நான் சீனியர் மேனேஜ்மெண்ட் குப்பை கொட்டியபோது என் சமஸ்தானம் ஆஸ்திரேலியா, நியுஸிலண்ட் வரை கணிசமாகப் பரவி இருந்தது. நேரில் நான் போய் வந்தபோதும், மீட்டிங்குகளிலும் அவர்களை அண்மையில் கவனித்துக் கணித்திருக்கிறேன்.

பொதுவாக ஆஸ்திரேலியர்கள் மகா சுகவாசிகள். ‘திங்கள் முதல் வெள்ளி வரை பீச், பீட்ஸா, பார்ட்டி, சனி, ஞாயிறில் கன்னா பின்னாவென்று கண் மண் தெரியாத மேலும் பார்ட்டி’ என்பதே ஆஸ்திரேலிய தேசீய குறிக்கோள். உலகத்தின் மற்ற இடங்களில் என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியாது. அது பற்றி அவர்கள் கவலைப்படுவதுமில்லை. அது ஒரு மகாப் பெரிய கண்டம். அங்கே போனால் நமக்கும் மற்றெல்லாம் மறந்து விடும் என்பதே உண்மை.

"காலை எழுந்தவுடன் cold beer, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல steak. மாலை முழுவதும் coffee and beer என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா” என்பது ஆஸ்திரேலியர்களுக்காக அழ. வள்ளியப்பா எழுதிய குழந்தைப் பாட்டு, அதுவே அவர்களுடைய தேசீய கீதம். அவ்வப்போது beerக்குப் பதிலாக கொஞ்சம் லோக்கல் shiraz, merlot என்று மாற்றிக் கொள்வார்களே தவிர, மற்றபடி பெருமளவில் ஸ்ருதி பேதம், தப்புத் தாளம் இருக்காது. வெள்ளைத் தாமரைப் பூவொத்த காற்றாடிப் பட்ட கனபாடி சரஸ்வதிகளும் இந்த ஜன சஞ்சார சிருங்காரங்களில் அடக்கம். காற்றோட்டமென்றால் அப்படியொரு காற்றோட்ட திவ்ய ஆனந்த பரிமள தேசம். எத்தனை பீச்சுகள், எத்தனை பரிமாணங்களில் கோவணாண்டி கோஷ்டிகள். பார்க்கும்போதே மூச்சு முட்டுமடா சாமி!

Australia Beach

இது தான் ஆஸ்திரேலியா. பார்ட்டி பண்ணுவதே அவர்கள் கர்ம யோகம், மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம் எல்லாம்.

இந்த ஆஸ்திரேலிய அடிநாதம் சரிவரப் பிடிபடாமல், நம்மூர் அசட்டு டென்ஷன் அம்மாஞ்சிகள், “மன்னிக்கவும். உற்சாகம் என்றாலே எனக்கு உவ்வே. நான் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன். நான் இங்கே வந்து மூன்று வாரமாகியும், இன்னமும் 378-வது வாய்ப்பாடு எனக்கு மனப்பாடம் ஆகவில்லையே என்று கவலையாக இருக்கிறது. எங்கள் கிராமத்து எல்லை முனீஸ்வரப் பூசாரியின் நொண்டித் தங்கைக்கு எப்பாடு பட்டேனும் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு டொனேஷன் தருவதாய் வாக்களித்து விட்டேனே. அதற்காக இன்னும் 20 மணி நேரம் தினமும் ஓவர்டைம் செய்ய வேண்டி இருக்கிறதே, அதற்குப் பிறகு, என் ஒரே அழுக்குச் சட்டையைத் துவைத்து ஓட்டின் மேல் உலர்த்த வேண்டுமே” என்று எதிலும் கலந்து கொள்ளாமல் உம்மணாமூஞ்சிகளாய் இருப்பதால் தான் இது ஒரு சமூகப் பிரச்னையாக ஆகிப்போனது. ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லார் அறிவிலாதார்’ என்று பல்லவன் பஸ்ஸில் படித்து ஒன்றும் புரியாமல் பின் மண்டையையைச் சொறிந்து கொண்டால் மட்டும் போதுமா?

‘தம்’ கேட்டார்களாம் ஒரு வெள்ளை வெற்று கோஷ்டிப் பயல்கள். வேலைவெட்டி இல்லாமல் வீண் வம்புக்கு அலைகிறவர்கள்.. பார்த்தாலே தெரியும், தம்-வம்புக்கு அலைகிற சொறி நாய்களென்று. அங்கே போய் “நான் தம்மே அடிப்பதில்லையே” என்கிற சுய விளக்க விமர்சனமும், புகை எதிர்ப்பு அன்புமணிப் பிரச்சாரமும் எதற்கு? “இந்தா மச்சி அஞ்சு டாலர். வோணும்னா சொல்லு, நம்ம நாயர் கடையாண்ட கணக்குல வாட்டர் பாக்கிட்டும் ஊறுகாயும் வாங்கிக்க. இறுதி வரை இழுத்து இன்பத்திலே கருகிப் போ கருமாந்திரமே” என்று சமயோஜிதமாக நாம் செயல்பட்டால் எல்லா படேலுக்கும் சிலையே வைத்து மகிழ்வான் மொக்கை வெள்ளையன்.

மும்பையிலும் டெல்லியும் கூட அடிக்கடி வெள்ளைக்கார டூரிஸ்ட் பெண்களை அத்து மீறி ரப்சர் செய்து விடுகிறார்கள் நம் ஊர் பொறுக்கிகள். அதற்காக இந்தியாவுக்குப் போவதே ஆபத்து என்கிற பிரசாரம் எடுபடுமா? வேறு மேட்டர் கிடைக்காத மீடியாவும் இதையெல்லாம் வைத்தே அசை போடுகிறது.

ஆஸ்திரேலியாவுக்குக் கிளம்ப நான் நாள் குறித்துச் சட்டி, பொட்டியெல்லாம் சரி செய்யும்போது, சென்னையிலிருந்து கூப்பிட்டு “சார், பொட்டிய ப்ளேன்ல இருந்து எறக்குங்க. இல்லாட்டி பைலட்டை பாங்காக் பக்கமா வண்டியத் திருப்பச் சொல்லுங்க” என்றார்கள்.

நான் பதைபதைத்தேன். “ஏம்ப்பா அந்தம்மா, அம்மம்மாவுக்கெல்லாம் ஷெட்யூல் சேஞ்ச்னு தெரியுமா? தனியா அங்க போய் அவுங்க மாட்டிக்கிட்டு, யாராவது தம் கேட்டு, ஏதாவது ஏடாகூடமா ஆயிடப் போவுது?”

“கவலையே படாதீங்க பாஸ். அல்லாரும் அல்ரெடி பாங்காக்கில தான் பீச்ல கலாய்ச்சிட்டிருக்காங்க. உங்களுக்குத்தான் வெயிட்டிங்”

(உச்சி வரை போவோம்)