என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, June 19, 2009

யாம் பெற்ற இன்பம் -1

இமயமலைக்குச் செல்லும் பாதை, லாஸ் ஏஞ்சல்ஸ், பாங்காக், சென்னை, திருமெய்ச்சூர், கூத்தனூர், மயிலாடுதுறை வழியாகத்தான் என்று நான் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டும். டெல்லிக்கு ஃப்ளைட் போட்டு ரிஷிகேஷ் போவது ரஜினி ரூட். அண்ணன் எவ்வழி, அவ்வழி நம் வழி அல்ல. அதெல்லாம் அரதப் பழசு. நம் வழி தனி வழி!

himalaya

ஜூலை 2008:

லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு ஜூலை இரவில் என் செல் போன் சந்தோஷமாகக் கூவியது. என்னை எழுப்புவதில அதற்கு அவ்வளவு சந்தோஷம். கண்டா கண்ட நேரத்தில் அலைபேசி அலறினால் அது இந்தியாவிலிருந்து வரும் கால் தான் என்பது அநேகமாக எல்லா ‘என் ஆர் ஐ’களுமே தெரிந்து வைத்திருக்கும் பால பாடம்.

அதிகாலை மூன்று மணிக்கு எழுப்பி, “என்ன சார், நல்லா தூங்கிக்கிட்டிருந்தீங்களா?” என்பது தான் எப்போதுமே முதல் வாக்கியமாக அருளப்படும். செம தூக்கக் கலக்கத்தில் நான், “ஆங்..மா..பே..புஸ்” என்று ஏதாவது பெனாத்துவதைப் பொருட்படுத்தாமல் அடுத்த கேள்வியாக “இப்ப அங்க என்ன மணி ஆவுது?” என்று கேட்கும் நண்ப பாபிகள் அநேக அநேகம். தான் யார் என்பதை லேசில் சொல்லிவிட மாட்டார்கள். பத்தாயிரம் மைல் தள்ளி இருந்தாலும், பயங்கர தூக்கத்தில் எழுப்பினாலும் நம்மை அடையாளம் கண்டு கொண்டு விடுவார்கள் என்பதில் அன்னாருக்கு அசாத்திய நம்பிக்கை.

உலகத்தின் எந்த மூலை முடுக்கில் இப்போது சரியாக என்ன நேரம் என்று துல்லியமாகத் தெரிவிக்கக் கூடிய நெட் வசதிகள் எங்கெங்கும் பரவி இருந்தாலும், என் சென்னை சினிமா நண்பர்களுக்கு அதெல்லாம் வேப்பங்காய் சமாச்சாரம். இருக்கவே இருக்கிறார் நம் எல்லே நண்பர், அவரைத் தூக்கத்தில் எழுப்பி என்ன நேரம் இப்போது என்று விசாரித்துத் தெரிந்து கொண்டால் போகிறது!

அப்படித்தான் நண்பர் கே. எஸ். ரவிக்குமார் ஆஃபீசிலிருந்தும் அவருடைய தொண்டரடிப் பொடிகள் என்னைக் கூப்பிட்டுக் குசலம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். வழக்கமான இரவா/பகலா?, அட்சயரேகையா/பூமத்திய ரேகையா?, PSTயா/ESTயா? உபயகுசலோபரிகளுக்குப் பிறகு, “கொஞ்சம் இருங்க சார். டைரக்டரே உங்க கிட்ட போன்ல கால்ஷீட் பத்திப் பேசணும்ங்கறாரு”

நான் இப்போது நன்றாக விழித்துக் கொண்டு விட்டேன் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

“வணக்கம், ராம் சார், நீங்க ‘ஜக்குபாய்’ படத்துக்காக நேரா ஆஸ்திரேலியா வரும்படியா இருக்கும். கண்டிப்பா வந்துருவீங்கள்ல?”

தமிழில் பெரும் இயக்குனர்களில் ஒருவரான கே.எஸ்.ஆர்- அதுவும் அப்போது தான் ‘தசாவதாரத்’தின் பெரும் வெற்றியில் திளைத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் எந்த ஒரு நடிகரை எப்போது நடிக்கக் கூப்பிட்டாலும், உடனே அவர்கள் ஓடி வரச் சம்மதிப்பார்கள் என்பதும் நீங்கள் அறிந்ததே. நிலைமை அப்படி இருக்க, எதற்காக இயக்குனர் எல்லேயாருடன் இப்படி சந்தேகாஸ்பதமாக, கவலையுடன் உரையாட வேண்டும்?

இங்கே தான் ஒரு ஃப்ளாஷ்பேக்- கடந்த கால நிகழ்வுக் குறிப்பாய்யா, இதுக்குத் தமிழ்ல? - அவசியமாகிறது.

’ஜீன்ஸ்’ படத்தில் நான் எல்லே ஏர்போர்ட்டில் ஐஸ்வர்யாவின் கைத் தலம் பற்றியதும், ‘பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’ ரேஞ்சில், அம்மணி என் கைப் பற்றை விட முடியாமல் பாச மிகுதியில் பலப்பல ‘டேக்’குகள் வாங்கிக் கன்னம் சிவந்ததும், பிறபாடு அதே பற்று மிகுதியால் பாசக்காரப் பிணைப்பில் கட்டுண்டு நான் அநேக பல ‘கான்’களுடனும், ‘ஓபராய்’களுடனும் முட்டல்கள், மோதல்களைத் தொடர நேர்ந்ததும், கடோசி கடோசியாக அபிஷேக்ஜி உயர்ந்த மனிதனாக உள்ளே நுழைந்ததும், நான் ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று பாடிக் கையசைத்து பேக்ரவுண்டிலிருந்து விலகியதும்,‘நெட்’டில் உலா வந்த கர்ண பரம்பரைக் கனவுக் கதைகள்.

அப்போதே நான் எங்களூர் தாடிக்காரர் ரேஞ்சுக்கு ஒரு சபதம் போட்டிருந்தேன்: இனிமேல் யாரையும், குறிப்பாக இளம் கன்னிப் பெண்ணணுங்குகளைத் தொட்டு நடிப்பதில்லையென்று. அநாவசியமாகவோ, அனாயாசமாகவோ அவர்களைத் தொட்டெழுப்பி அவர்கள் நெஞ்சில் கனல் மூட்டுவானேன், அப்புறம் அது கொழுந்து விட்டெறிந்து, என் ‘செல்’லே கதியென்று அவர்கள் கிடக்க...வேண்டாமடா சாமி! ஹாலிவுட்டிலும் கூட நான் ஏஞ்சலீனா ஜோலீ, ஜெனிஃபர் லோபெஸ், ஷகீரா போன்ற அழகிகளுடன் நெருங்கி நடிக்க நான் சம்மதித்ததில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். ஹும்ம்.

shriya

“சரத் குமார் ஹீரோ, ஷ்ரியா ஹீரோயின், நீங்க ஹீரோயினுக்கு கார்டியனா, ஆஸ்திரேலியாவில இருக்கிற ஒரு அட்டர்னி ரோல் பண்றீங்க அவங்களோட நிறைய காம்பினேஷன்ஸ்” என்றெல்லாம் என்னிடம் இயக்குனர் என் ரோல் பற்றிச் சொல்லும்போதே, “அடாடா, மீண்டும் ஒரு அழகுப் பெண்ணோடு நடிக்க வேண்டுமா? அதுவும் இந்தப் பெண் ‘மழை’யில் நனைவதற்கென்றே பிறந்த பஞ்சாப் மேனி கொண்டவளாயிற்றே, கட்டிப் பிடிக்கின்ற ஸீன் ஏதாவது இருந்து விட்டால் என்னாவது நம் பிரம்மச்சரிய விரதம்?” என்று நான் மனதுக்குள் படபடத் தேன். கண் வேர்த் தேன். கால் சோர்ந் தேன்.

“சரி ரவிஜி, மெல்போர்ன் வந்துடறேன். கண்டிப்பா!”

“சார், நீங்க வேற, வராம கிறாம இருந்துறாதீங்க. உங்க போட்டோவைப் பார்த்ததில இருந்து அந்தப் பொண்ணு சரியா சாப்பிடறதில்லை, தூங்கறதில்லை. ஹீரோவ மாத்தினாலும் மாத்திங்கப்பா, என் கார்டியனை மட்டும் மாத்திறாதீங்கன்னு ஹிந்தியிலயும் பஞ்சாபிலயும் மாத்தி மாத்திப் பொலம்பிக்கிட்டிருக்குது. கொஞ்சம் உங்க விரதத்திலேயிருந்து இறங்கி வந்து அருள் பாலிங்க சார்” என்று அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் அழுத ஞாபகம்.

இமயமலைக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம் என்பவர்கள், அடுத்த போஸ்டிங் வரை காத்திருக்க வேண்டியது தான்!

(உச்சி வரை போவோம்)

11 comments:

Sridhar V said...

:)) நல்ல பிக்கப் ஆயிடுச்சு. பட்டயக் கெளப்புங்க.

Tag-ல ஐஸ்வர்யா ராய் பேரு போடாம் ஷ்ரேயா பேரு மட்டும் போட்டிருக்கும் நுண்ணரசியல் என்னவோ?

கார்டியன்-னா ஹீரோயினுக்கு தாத்தா ரோலா சார்?

Vassan said...

எல்லே எப்படி இருக்கீங்க...

முழு கட்டுரையை படிக்கவில்லை.

பண்ணித்தமிழ் படிக்கத் தூண்டவில்லை, திரைப்படம் சம்பந்தப்பட்டது என்பதாலும்.

ஒன்றே ஒன்று!


>>திருமெய்ச்சூர்<<

இதை திருமீயச்சூர் என உடன் திருத்தவும். இதை அவ்வூர் மக்கள் சார்பாக
1/2 திருமீயச்சூரான் அடியேன் வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஆயில்யன் said...

//சார், நீங்க வேற, வராம கிறாம இருந்துறாதீங்க. உங்க போட்டோவைப் பார்த்ததில இருந்து அந்தப் பொண்ணு சரியா சாப்பிடறதில்லை, தூங்கறதில்லை. ஹீரோவ மாத்தினாலும் மாத்திங்கப்பா, என் கார்டியனை மட்டும் மாத்திறாதீங்கன்னு ஹிந்தியிலயும் பஞ்சாபிலயும் மாத்தி மாத்திப் பொலம்பிக்கிட்டிருக்குது//


:)))))))))))))

ஆரம்பமே அட்டகாசம்! இன்னும் நிறைய நிறைய கதைகள் கேக்க இண்ட்ரஸ்டிங்கா இருக்கோமாக்கும் :))

ஷைலஜா said...

வந்துட்ட்டீங்களா ராம்?:) ஸ்ரேயா படம் வேற கெடக்கலியாக்கும்?:)


\\\’ஜீன்ஸ்’ படத்தில் நான் எல்லே ஏர்போர்ட்டில் ஐஸ்வர்யாவின் கைத் தலம் பற்றியதும், ‘பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’ ரேஞ்சில், அம்மணி என் கைப் பற்றை விட முடியாமல் பாச மிகுதியில் பலப்பல ‘டேக்’குகள் வாங்கிக் கன்னம் சிவந்ததும், பிறபாடு அதே பற்று மிகுதியால் பாசக்காரப் பிணைப்பில் கட்டுண்டு நான் அநேக பல ‘கான்’களுடனும், ‘ஓபராய்’களுடனும் முட்டல்கள், மோதல்களைத் தொடர நேர்ந்ததும், கடோசி கடோசியாக அபிஷேக்ஜி உயர்ந்த மனிதனாக உள்ளே நுழைந்ததும், நான் ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று பாடிக் கையசைத்து பேக்ரவுண்டிலிருந்து விலகியதும்,‘நெட்’டில் உலா வந்த கர்ண பரம்பரைக் கனவுக் கதைகள்.

அப்போதே நான் எங்களூர் தாடிக்காரர் ரேஞ்சுக்கு ஒரு சபதம் போட்டிருந்தேன்\\




:):) காலைல நான் கிச்சன் போய் பொங்கல் செய்யறதா இதப்படிச்சி விழுந்துவிழுந்து சிரிச்சிட்டு இருக்கறதா?:)


\\\அனாயாசமாகவோ அவர்களைத் தொட்டெழுப்பி அவர்கள் நெஞ்சில் கனல் மூட்டுவானேன், அப்புறம் அது கொழுந்து விட்டெறிந்து, என் ‘செல்’லே கதியென்று அவர்கள் கிடக்க...வேண்டாமடா சாமி! ஹாலிவுட்டிலும் கூட நான் ஏஞ்சலீனா ஜோலீ, ஜெனிஃபர் லோபெஸ், ஷகீரா போன்ற அழகிகளுடன் நெருங்கி நடிக்க நான் சம்மதித்ததில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். ஹும்ம்.
\\


ஐயோ போதுமே:):)


\\ கொஞ்சம் உங்க விரதத்திலேயிருந்து இறங்கி வந்து அருள் பாலிங்க சார்” என்று அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் அழுத ஞாபகம்.

இமயமலைக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம் என்பவர்கள், அடுத்த போஸ்டிங் வரை காத்திருக்க வேண்டியது தான்!

\\\

காத்திருக்கோம் !!! எவ்ளோ நாளாச்சு நீங்க இப்படி பதிவெழுதி?:)

சென்ஷி said...

//Tag-ல ஐஸ்வர்யா ராய் பேரு போடாம் ஷ்ரேயா பேரு மட்டும் போட்டிருக்கும் நுண்ணரசியல் என்னவோ? //

ஷ்ரேயாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைங்கற சமூக அக்கறையா இருக்கும் :))))

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

ஸ்ரீதர மாமா.

தாத்தாவாவாவா?

எம் தாய் கேட்டிருக்க வேண்டும் இதை, பச்சைத் தமிழச்சியவள், பச்சைப் பெயிண்டாலேயே உம்மை மூழ்கடித்திருப்பாள்.

எம் நாய் கேட்டிருக்க வேண்டும் இதை. பிடுங்கித் தின்றிருக்கும் உம் குரல் வளையை இந்நேரம்.

எம் பஞ்சாப் பாலகி கேட்டிருக்க வேண்டும் இதை. பாங்க்ராவாலேயே உம்மை சதாய்த்திருப்பாள் பாவையவள்.

படம் ரிலீஸாகட்டும். நீர் பொறாமைத் தீயில் வெந்து ...சரி, சில பல காரணங்களால், இப்போது பொறுமை காக்கிறேன். போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். எம் கடன் பணி செய்து கிடப்பதே.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

பாதித் திருமீயச்சூரானின் வேண்டுகோளுக்கிணங்கி யாமும் இனிமேல் அப்படியே பகர்வோம்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள ஷைலாஜி,

இரண்டு மாத முன்பு நான் பெங்களூரு ஜெயநகர் வந்திருந்தும் உங்களைக் கண்டு கொள்ளாமல், காணாமல் போனதற்கு முதலில் மானசீக மன்னிப்பு இதன் மூலம் கோரப்படுகிறது.

அடுத்த முறை கண்டிப்பாக நேரில் வருகிறேன்.

உங்கள் அன்புக்கு எப்போதும் நன்றி.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

சென்ஷிஜி,

ஒன்றே சொன்னாலும் நன்றே சொன்னீர்! வாழ்த்துகள். அது சரி, அது என்னங்கண்ணா பேரு ஏதோ வாயில ஈஷற ஜவ்வு கேசரி மாதிரி?! எதுனா கம்யூனிச மேட்டரா?

கருப்புசாமி குத்தகைதாரர் said...

திருச்சி மெயின்கார்ட் கேட் அருகே சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பிச்சைத் தொழிலாளியைப் பார்த்தேன். அநேகமாக இதே உடைதான். இப்படியேதான் மார்புக் கச்சை கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தது. முகசாயலும் இதுவேவா? சரியாக நினைவில்லை.கே.எஸ். ரவிகுமாரும் பார்த்திருப்பாரா? அதே காஸ்ட்யூம் பிடித்துவிட்டாரே! பெரிய ஆள்தான்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

;-)

படத்துல வர ஸ்டில் இல்லை இது! படம் இன்னும் ரிலீசாகவில்லை. அநேகமாக இந்த / அடுத்த மாதக் கடைசியில்?