என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Tuesday, September 06, 2011

கொழிக்கிறது சைனா! 11

கலை நிகழ்ச்சி முடிந்து இரவு படுக்கும்போது சீன இடுப்பழகிகளும் சொப்பனசுந்தரிகளும் கனவில் வந்து என்னைப் படுத்துவார்கள் என்று எதிர்பார்த்தேன். நடக்கவில்லை..

என் போதாத காலம், என் கனவில் வந்ததோ ஒரு தொண்டு கிழம். கையில் கைத்தடியுடன் முக்கி முனகி மலை, மேடு, காடெல்லாம் ஏறிக்கொண்டு ....என்னடாவென்று கொஞ்சம் ’க்ளோஸ் அப்’பில் ஜூம் பண்ணிப் பார்த்து,

”பேரு என்னய்யா?” என்றால் ஏதோ “யுவான் சுவாங்”காம்!

இன்றைக்கு கிட்டத்தட்ட 1,459 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா வந்த சீன கலாசார தூதுவர் அந்நாளில் மட்டுமல்ல இந்நாளிலும் சீனாவில் பெரிய பிரபலம். பணக்காரக் குடும்பத்தில் பிறந்தாலும் ஒரு சரித்திர ஆய்வாளராகப் பெயர் எடுக்கவேண்டுமென்று ஆசைப்பட்டு நாடெங்கும் சுற்றித் திரிந்த புத்தத் துறவி + யாத்திரிகர் + சரித்திர ஆசிரியர் + இன்ன பிற புகழ்ச்சிகளுக்கு சொந்தக்காரர்.

சீனாவின் பல பகுதிகளிலும் அலைந்து திரிந்த யாத்திரிகர் யுவான் சுவாங், பல சீனக் குறுநில மன்னர்களின் ஆதரவுடன், வெளிநாடுகளிலும், குறிப்பாக புத்தமதம் தோன்றிய இந்தியா, திபேத் போன்ற நாடுகளிலும் தன் ஆய்வுகளைத் தொடர விரும்பினார். அது புத்த மதம் தழைத்திருந்த காலம். எங்கு நோக்கினும் புத்தமத விகாரங்கள், ஆலயங்கள், ஸ்தூபிகள். இந்தியாவில் தோன்றினாலும் சைனாவில்தான் பௌத்தம் செழித்து வளர்ந்தது.

Photobucket

என் மூதாதையர்கள் கைபர் கணவாய் வழியாக வந்தார்களா என்பது எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக யுவான் கைபர் வழியாக இந்தியாவில் நுழைந்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. காந்தாரம் (இப்போது ஆஃப்கானிஸ்தானத்தில் இருக்கும் Khandhar), புருஷபுரம் (பாகிஸ்தானில் இருக்கும் பெஷாவர்), கனிஷ்கப் பேரரசர்கள் கட்டிய ஸ்தூபிகள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, இந்துஸ் நதியைத் தாண்டி காஷ்மீர் வந்திருக்கிறார். காஷ்மீரம் எப்போதுமே நிலமெல்லாம் ரத்தமாக இல்லாமல் அப்போது புண்ணிய பூமியாக இருந்திருக்கிறது. ஆயிரக் கணக்கில் பௌத்தத் துறவிகள், புத்த மடாலயங்கள். அங்கே ஒரு குருவிடம் இரண்டு வருடங்கள் குருகுலவாசம் செய்து யுவான் பாடம் படித்திருக்கிறார்.

அந்த காலகட்டத்தில் ஹிந்துஸ்தான் பேரரசு அங்கெல்லாம் பெரும் புகழுடன் வியாபித்திருந்தது. மேலைநாடுகள் மட்டுமன்றி கீழைநாடுகளும் பாரதத்தை ஒரு பெரும் கலாச்சார ஒளிவிளக்காக மரியாதை செய்தன. 2,000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் பௌத்த மத மாநாடுகள் பெரும் அளவில் சங்கமக் கொள்ளைகள் இல்லாமல், மைய மோசடிகள் இல்லாமல் ஒழுங்காக நடந்திருக்கின்றன. குஷானப் பேரரசர் கனி(ஷ்கரி)-ன் நேரடி மேற்பார்வையில் மஹாயானம், ஹீனயானம் இன்னும் பல புத்தமத உட்பிரிவுகள் பற்றிய ஆய்வுகள், கருத்தரங்குகள் நடந்திருக்கின்றன. ஆனால் பந்தக்கால் நட்டதிலிருந்து பகலிரவாகத் தொடர்கொள்ளைகள் நடக்கவில்லையாம். எங்கெல்லாம் புத்தமதத் துறவிகள், கல்வெட்டுகள், விகாரங்கள் இருந்தனவோ அங்கெல்லாம் யுவான் சுவாங் போய், குறிப்பெடுத்துக்கொண்டு அவற்றைப்பற்றி எழுதி இருக்கிறார்.

காஷ்மீரத்திலிருந்து தற்போதைய ஃபெரோஸ்பூர் சென்று அங்கே வினிதப்ரபா என்கிற புத்தத்துறவியிடம் யுவான் பாடம் கேட்டிருக்கிறார். கோசலதேசம் சென்று அங்கே பௌத்த விஹாரங்களைப் பார்வையிட்டிருக்கிறார். பிறகு, பஞ்சாப், கிருஷ்ணர் அவதரித்த மதுரா, புத்தர் பிறந்த லும்பினி, அவர் போதி ஞானம் பெற்ற அரசமரம், மரணம் அடைந்த குசிநகரம், முதன்முதலில் பிரசங்கம் செய்த சாரநாத், வைசாலி, பாடலிபுத்ரம் (இன்றைய பாட்னா), புத்தகயா என்று மனுஷன் ஒரு இடத்தையும் விட்டுவைக்கவில்லை!

அந்தக்காலத்தில் சம்ஸ்கிருதம் அதிகாரம் பெற்ற உலகமொழியாக இருந்தது மட்டுமல்ல, அறிஞர்களின் ஏகோபித்த ஆதரவும் பெற்ற மொழியாக இருந்தது. 'வடமொழியே, உன்னை செம்மொழி ஆக்குகிறேன் பார்’ என்று யாரும் வரிந்து கட்டிக்கொண்டு மக்கள் பணத்தைக் கோடிகோடியாகக் கொள்ளையடிக்க நினைக்காத நல்ல காலம் அது. இந்துமதம் தவிரவும் பல மத சம்பிரதாயங்கள், ஆய்வுகள், பொழிப்புரைகள் சம்ஸ்கிருதத்தில் இருந்ததால், வடமொழியில் புலமை அதிகம் பெற்றவர்கள் பேணப்பட்டார்களாம். அரைகுறை ஜால்ராக்களுக்கு டாக்டர் பட்டம், பதிலுக்கு பதில் வாழ்த்துப் பட்டயம், பட்டத்துக்குப் புட்டி, பட்டிகளுக்குப் பாட்டி மன்றம் எல்லாம் அப்போதெல்லாம் கிடையவே கிடையாதாம். நாலந்தாவில் பயில்வதற்காகவே பல தேசங்களிலிருந்தும் அறிஞர்கள் இந்தியாவுக்கு வந்துகொண்டே இருந்த காலம் அது.

யுவான் சுவாங்கும் நாலந்தா யுனிவர்சிட்டியில் போய் நயாபைசா கேபிடேஷன் ஃபீஸ் கொடுக்காமல் மகாஞானியான சிலபத்ராவிடம் நேரடி சிஷ்யராகச் சேர்ந்து சம்ஸ்கிருதம், ஹிந்துமதக் கொள்கைகள், யோகசூத்திரங்கள், புத்த மத இலக்கியங்கள் எல்லாவற்றையும் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.

இந்திய ஞானிகளும் எந்த வஞ்சனையும் இல்லாமல் எல்லாவற்றையும் யுவான் சுவாங்குக்கு சொல்லிக் கொடுத்ததுமல்லாமல் விலை மதிப்பற்ற ஒரிஜினல் ஓலைச் சுவடிகளையும் பரிசாக அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். யானைகள், ஒட்டகங்கள், கள்ளிப்பெட்டிகள் எல்லாவற்றிலும் ஓலைச்சுவடிகளை நிரப்பி யுவன் சுவாங் சீனாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

அடேங்கப்பா! இந்த யுவான் சுவாங் லேசுப்பட்ட ஆளில்லை என்பது தெரிகிறது. இருந்தாலும் எதற்காக அவருக்கு இவ்வளவு பில்டப்பு இன்றைக்கு?

Photobucket

ஏனென்றால் இன்று நாம் முதலில் பார்க்கப்போவது Wild Goose Pagoda. பண்டில் பண்டிலாக இந்தியாவிலிருந்து எடுத்து வந்த ஓலைச் சுவடிகளை பாதுகாப்பாக வைப்பதற்கும், மேற்கொண்டு அறிஞர்கள் அவற்றை ஆராய்ந்து பயில்வதற்கும் வசதியாக இந்த புத்த விகாரம் யுவான் சுவாங்கால் கட்டப்பட்டிருக்கிறது. நம்முடைய பல யோக சூத்திரங்களை, சம்பிரதாயங்களை, பௌத்த மத நூல்களை சம்ஸ்கிருதத்திலிருந்து சீனமொழிக்கு அவர் மொழி பெயர்த்திருக்கிறார்.

போகிறபோக்கில் ”இந்தியாவிலிருந்து ‘எங்கள்’ ஒரிஜினல் சுவடிகளை யுவான் சுவாங் ’திரும்ப’ கொண்டு வந்தார்” என்று கைடு ஜார்ஜ் பீலா விட்டதை நான் கண்டுகொள்ளவில்லை. ஒரே முறைப்பில் “அடங்குங்கடா’ என்றேன். அவனும் இருமல் வந்தமாதிரி நடித்து டாபிக் மாற்றினான்.

Photobucket

Photobucket

மாவோவின் கலாசாரப் புரட்சியின்போது சீனாவில் மத போதனைகள் தடை செய்யப்பட்டன. பல புத்த விகாரங்கள் சூறையாடப்பட்டன, இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டன. புத்தத் துறவிகள் அவமானப்படுத்தப்பட்டனர், கட்டாய வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த வெறியாட்டத்திற்கு உல்கப் புகழ்பெற்ற இந்த இடமும் தப்பவில்லை. சமீப காலங்களில் கொஞ்சம் புத்தி தெளிந்து அந்த வெறியாட்டங்கள் நிறுத்தப்பட்டவுடன், இந்த இடமும் ஓரளவு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. விலை மதிப்பற்ற ஒரிஜினல் ஓலைச்சுவடிகளின் கதி என்ன என்கிற விபரம் கேட்டால் யாருக்கும் சரியான பதில் தெரியவில்லை.

100 வருடங்கள் கழித்து எங்கிருந்தாவது நோண்டி எடுத்த இந்த சுவடிகளின் ஆதாரத்தின்படி புத்தர் பிறந்ததே சீனாவில்தான் என்றொரு 'Buddha -Made in China' மார்க்கெட்டிங் உஜாலா அரங்கேற்றப்படலாம்

இப்போதைக்கு பல இடங்களில் பழைய கற்கள், புதுப்பித்த இடங்கள், ஒட்டுப்போட்ட சுவர்கள் எல்லாம் நன்றாகவே இளிக்கின்றன.

கம்யூனிஸ்டுகளின் சூறையாட்டத்திற்குத் தப்பிய சில தங்க விக்கிரகங்கள், ஓவியங்கள், முழுநீள சீலைச்சித்திரங்கள் அங்கே இப்போது காணக்கிடைக்கின்றன.

Photobucket

Photobucket

Photobucket

பௌத்த விகாரங்களைப் பார்த்து முடித்த பிறகு, மதிய சாப்பாடு. பிறகு, ‘Muslim Quarter' என்கிற இடத்திற்குப் போனோம்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஸ்வாமி கோவிலில் ஆனந்தமாக ஸ்வாமி தரிசனம் முடிந்து, துளசி தீர்த்தம், ஜடாரி, பிரசாதம் வாங்கிக்கொண்டு, அப்படியே மடப்பள்ளியில் புளியோதரையையும் ஒரு ரவுண்டு கட்டிவிட்டு, அங்கிருந்து நேராக ஜாஃபர்கான்பேட் அசைவ மார்க்கெட் போனது மாதிரி இருந்தது இந்த நிகழ்ச்சி நிரல்.

Photobucket

இஸ்லாமிய நாடுகளுடன் வர்த்தக உறவுகள் ஏற்பட்டபோது, இஸ்லாம் மதமும் சீனாவுக்குள் நுழைந்திருக்கிறது. 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதி ஒன்றைச் சுற்றிய பகுதியே இங்கே முஸ்லிம்கள் வாழும் இடமாக மாறிப்போய்விட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். மசூதியில் இப்போது விசேஷ நாட்களில் மட்டுமே தொழுகை நடக்கிறதாம். இஸ்லாமிய முறைப்படி பெண்களுக்கு இங்கே தொழுகையில் அனுமதி கிடையாது.

கிட்டத்தட்ட சென்னை ராயப்பேட்டை + ஐஸ் ஹவுஸ், டாக்டர் பெசண்ட் ரோடு ஏரியா வாசனை. கொஞ்சம் சென்னை காசி செட்டி தெருவையும் இதில் சேர்த்துக் கலந்து கொள்ளலாம். மிக மிகக் குறுகலான சந்துகள். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகியும் புதுப்பிக்கப்படாத பழங்கால சின்னஞ்சிறு வீடுகள், கடைகள். ஒரே நேரத்தில் இருவர் மட்டுமே நடந்து செல்லக்கூடிய அளவுக்குக் குறுகலான சந்து மார்க்கெட்டுகளில் கைவினைப் பொருட்கள், ப்ளாஸ்டிக் சாமான்கள், பட்டு ஸ்கார்ஃப்கள், டெர்ரகோட்டா வாரியர்ஸ் பொம்மைகள், வளைகள் என்று என்னவெல்லாமோ கொட்டி வைத்திருக்கிறார்கள்.

Photobucket

ரோடு சைடு கையேந்தி பவன்களில் சகலவித ஜீவராசிகளின் சகலவித உறுப்புகளும் பலவித வாசனா அநுபவங்களில் தாளிதம் ஆகிக்கொண்டிருந்த திவ்யபரிமள சுகந்த சுகானுபவம், அடடா, அடடா! சுவாசிக்க ஆயிரம் நாசி வேண்டும்.

இருக்கின்ற தம்மாத்துண்டு ’சாலை’யில் “ஐயோ இங்கே குரங்குக் குடல் வேகிறதே” என்று என் மனைவி பயந்து எதிர்சாரிக்குத் தாவினால், நான் அங்கே “அய்யய்யோ, பல்லி வால் வருவல்” என்று இந்தப்பக்கம் தாண்டிக் கொண்டிருப்பேன்.

ஸ்க்யூபா டைவிங் எங்கள் ப்ரொக்ராமில் இல்லாமலிருந்தாலும், சின்னதாக ஒரு போர்ட்டபிள் ஆக்சிஜன் டேங்க் வாங்கிவராத முட்டாள்தனத்தை நினைத்து நினைத்து நான் முட்டிக்கொள்ளாத முட்டுச்சந்தே சீனாவில் இல்லை.

சீனா முழுவதும் எங்கும் எதற்குமே ’ஒரே விலை’ கிடையாது.

எல்லாமே ‘கை மேல் துணி போட்டு விரல்களால் விலை பேசுகிற’ மாட்டுத்தாவணி வியாபாரம்தான்!

சைனாவின் இந்த வியாபார விசேஷம் பற்றி நான் இதுவரை குறிப்பிட மறந்துபோனேன் என்றே நினைக்கிறேன். பெய்ஜிங்கின் பெருநகர மார்க்கெட்களாகட்டும், ச்ஷியான் கிராமத்து செவ்வாய்க்கிழமை சந்தைகளாகட்டும், முஸ்லிம் குவார்ட்டர் மூத்திரசந்து முட்டுக்கடைகளாகட்டும், ஒரு ஐட்டத்துக்கும் விலை எழுதி ஒட்டுகிற வழக்கம் சீனாவில் அறவே கிடையாது. எல்லாவற்றுக்குமே பேரம் தான். பேரம் பேசிப்பேசியே பிராணன் போவது சைனாவின் அன்றாட நிகழ்ச்சி. பத்து பைசா ஐட்டத்தைக் கடைக்காரர் 12,000 ரூபாய் என்று விலைசொல்ல, அதுவே மஹாளய பேரத்தின் பேராரம்பம் என்றறியா வெளிநாட்டு டூரிஸ்டுகள் ‘ஹா’வென்று அலறி, கண்கள் செருக, உடலில் நீலம் பாய்ந்து, ‘மடார்’ என்ற சத்தத்துடன் ப்ளாட்ஃபாரத்தில் மண்டையைப் போடுவது சீனக் கடைத்தெருக்களின் அன்றாட நிகழ்ச்சி.

தாகசாந்திக்கு ஒரு ‘கோக்’ வேண்டுமென்றால் இதே கொடுமை. தவித்தவாய்க்கு ஒரு மடக்கு தண்ணீர் வேண்டுமென்றாலும் இதே அநியாயம். இந்த பேரம் பேசுகிற டெக்னிக் முதலில் கொஞ்சம் சுவாரசியமாக இருந்தது. அப்புறம் கடுப்பு தாங்க முடியவில்லை.

ஆங்கிலமும் தெரியாது, ‘அ, ஆ’ வும் தெரியாத நிரட்சரகுட்சிகள் அவர்கள் என்பதால் எதற்கெடுத்தாலும் ஒரு கால்குலேட்டரைக் கையில் எடுத்து அவர்கள் அதில் ஒரு விலை போடுவதும், அதை நாம் பிடுங்கி அதை ‘சீ’ என்று துப்பி, ‘C' என்று அழித்து, பதில் விலை போடுவதும், சைனா நம்மைக் கேவலமாகப் பார்த்து இன்னொரு விலை போடுவதும், நாம் மறுபடியும் ’சீ’+‘C' ...அய்யய்யோ, கொடுமையிலும் கொடுமை.

நம் மூஞ்சியில்தான் டூரிஸ்ட் என்று எழுதி ‘இங்கே ஏமாறப்படும்’ என்று நெற்றியில் போர்டும் ஒட்டியிருக்கிறதே! தெருவெங்கும் திரியும் பல கோடி சீன வியாபாரிகள் ‘சட்’டென்று நம் கைத்தலம் பற்றுவதும், ’மைத்துனன் தம்பி மதுசூதனனா இவன்?” என்று நாம் திடுக்கிட்டுத் திரும்புவதும், “யூ ஹௌ மச்?” என்றவன் வினவுவதும் “என்னடா கண்றாவி இது?” என்று பாஷாமூலப்பொருள் தேடுவதும், “ஒன்லி சீப், டன் டாலர்ஸ்” என்றவன் மேலே, மேலே தொடர்வதும், “வுட்றா கைய” என்று நாம் பதறுவதும் ஒவ்வொரு மணித்துகளும் நிகழ்கிற சீனானந்த அநுபவமே. கண்டாமுண்டா சாமான்களின் கருவூலமே சீனா என்பதும், அத்தனை கோடி சீனர்களும் ஏதாவதொரு பாக்கெட்டில் ஒரு கால்குலேட்டரை ஒளித்து வைத்துக்கொண்டுதான் திரிகிறார்கள் என்பதும் உண்மை. எந்த நிமிடமும் உங்கள் கை பற்றப்படலாம். ‘அலேக்’காக உங்கள் கண்முன் ஒரு விலை போடப்படலாம். எதற்கு, என்ன, ஏன் வாங்கப்போகிறோம் என்பதெல்லாம் தேவையில்லாத விஷயம்.

சீனப்பெண்களுக்கு ஆண்டவன் ஆங்காங்கே வைக்கவேண்டிய சில விஷயங்களைச் சரியாக வைக்காமல் போனதுமட்டுமல்ல, அச்சம்+மடம்+நாணம்+பயிர்ப்பு எதையுமே அவர்கள் கண்ணில்கூடக் காட்டவில்லை. திடீரென்று ஒரு சீனக் கிழவியோ குமரியோ நம் இடுப்பைப் பிடித்துக் கிள்ளி, “ஐ லவ் யூ, ஹாப்பி பர்த் டே!, யூ ஆர் ப்யூட்டிஃபுல்” என்று ஏதாவது சம்பந்தமே இல்லாமல் உளறிக் கொட்டினால், அவள் வாட்சோ, செருப்போ, ஏதோ ஒரு பீத்தலோ விற்பவள் என்பதறிக. அசடு வழிந்து ஏதாவது நாம் பேச ஆரம்பித்தால் அவள் அட்டை மாதிரி ஒட்டிக்கொண்டு டாலரைக் கறக்காமல் விடமாட்டாள் என்பது அனுபவ பாடம்.

நாங்களெல்லாம் ஒரு குரூப்பாக வேறு திரிகிறோமல்லவா? எவனாவது ஒரு வெள்ளை சொட்டையன் “இதைப்பார், இந்த சீப்பை நான் மூன்றே டாலருக்கு வாங்கிவிட்டேன்” என்று பீற்றிக்கொண்டு மார்தட்டுவதும், “அடேய் அபிஷ்டு, மூன்றே செண்ட் கொடுத்து நான் முப்பது சீப்பு அதே பிராண்ட் அதே கடையில் வாங்கியிருக்கிறேன் பார்” என்று இன்னொரு மொட்டையன் அவனைச் சீண்டுவதும் எங்கள் குரூப்பின் அன்றான நடவடிக்கைகள். நடுத்தெருவில் ’ஷாக்’காகி பேஸ்தடித்து நிற்பது என்பது எங்கள் தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாகவே ஆகிப்போனது.

பலமணிநேர இழுபறி, திட்டு-வசவு, சட்டைபிடி சண்டை, காறித்துப்பல்களுக்குப் பிறகு தப்பித்தவறி விலை படிந்துவிட்டால், ஒரு இந்திய-சீன உடன்பாடு ஏற்பட்டுவிட்டால், அங்கே நடக்கவிருக்கும் ஃப்ராடின் தீவிரம் மிக அதிகமாகவே இருக்கும். ஒரே செகண்டில் பொருளை மாற்றி விடுவார்கள். டூப்ளிகேட் சாமான்களை எடுத்து நம் கையில் திணித்து “நௌ கிவ் அக்ரீட் ப்ரைஸ்’ அழிச்சாட்டியம்தான்.

எங்கள் குருப்பில் நானும் என் மனைவியும் மட்டுமே வடிகட்டிய அக்மார்க் இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள். இன்னொரு பங்களாதேஷ் டாக்டர் குடும்பமும் எங்களைப் போன்றது. அதாவது பண்டமாற்று, பரிவர்த்தனை, பேரம், டகால்டி என்றால் என்னவென்று எங்கள் டிஎன்ஏவிலேயே சொல்லப்பட்டிருக்கிறது.

மற்ற எல்லோருமே பரந்த நெற்றி படைத்த வெள்ளையர் அல்லது பரம்பரை என்றால் என்னவென்றே தெரியாத தென்னமெரிக்கர்கள். ஆசிய பரம்பரை ஜீன்ஸ் கொண்ட நாங்கள் கேட்ட பதில் விலையில் கடுப்பான சீனர்கள் மகா எரிச்சல் ஆவது கண்கொள்ளாக் காட்சி. சீன மொழியின் காலி வார்த்தைகள் அனைத்தும் எங்களுக்கு ஒரே நாளில் மனப்பாடம் ஆகிவிட்டன.

“மவனே, உன்னியலாம் எவ்ன்டா இங்ஙன உள்ளாற வுட்டது? வந்துட்டான் சாவுகிராக்கி. கேட்டத குட்த்துட்டு தொரைங்க நாமத்தைப் போட்டுகினு போவுறாமேறி நீயும் போவத்தாவலை? கஸ்மாலம்” ரேஞ்சுக்கு சீனர்களால் நாங்கள் கொஞ்சப்பட்டோம்.

வெள்ளைத்தோல்காரர்களுக்கு இது ஏதோ ஒரு விளையாட்டு என்ற நினைப்பு. அதாவது எதையாவது ’சீப்’பாக வாங்கிக்கொண்டு வந்து, “இந்தப் பீத்தலுக்கா இவ்வளவு?” என்று மனைவி மண்டையில் மொத்தும்வரை. ஸ்போர்ட்ஸ் ஸ்வெட்டர்களுக்கும், ஷூக்களுக்கும் அமெரிக்க ஒரிஜினல் விலையைவிட சீன டூப்ளிகேட்டுகளுக்கு அதிகம் அழுத புண்ணியாத்மாக்களைக் கண்டு நான் வள்ளலார் போல் நெஞ்சம் பதைபதைத்தேன். ஆடிய உயிர்களைக் கொன்றபோதெல்லாம், அநியாய விலையில் எல்லாவற்றையும் எங்கள் தலையில் கட்டியபோதெல்லாம் நான் கலங்கினேன்.

சீனர்கள் சிரித்ததோ, அது ஆணவச் சிரிப்பு!

(தொடரும்)

Tuesday, August 23, 2011

கொழிக்கிறது சைனா! 10

‘டெர்ரகோட்டா வாரியர்ஸ்’ பார்த்தாயிற்று. அது பற்றிய புல்லரிக்கும், புல்வெட்டிய, கிணறுதோண்டிய கதைகள் எல்லாம் கேட்டாயிற்று. இருந்தாலும் எங்கேயோ ஏதோ கொஞ்சம் இடிக்கிறதே என்று எனக்குத் தோன்றியது.

கேட்காமல் என்னால் இருக்கமுடியுமா?

Photobucket

“இந்த பொம்மைங்க எல்லாம் வேற ஒரு எடத்துலே இருந்து வெட்டி எடுத்து இங்க கொண்டு வந்து வெச்சிருக்கீங்களா?”

“இல்லையே. இங்கேயேதான் வெட்டினோம், இங்கேயேதான் கிடைத்தன. இங்கேயேதான் இன்னமும் அவை நிற்கின்றன”

“இதே ஸ்பாட்லயா?”

“ஆமாம், இதேதான்”

“சத்தியமாக?”

“சத்தியமாக”

“நிச்சயமாக?”

“நிச்சயமாக”

“யாரிடம் விடுகிறாய் பீலா? எவனிடம் விடுகிறாய் டூப்பு?”

கேட்க நினைத்தேன், கேட்கவில்லை.

பெரிய செவ்வகமாக தரையில் தோண்டியதில் ரத கஜ துரக பதாதிகள் எல்லோருமே இங்கே, இங்கே, இங்கேயேதான் கிடைத்தார்கள் என்று மாய்ந்து மாய்ந்து சொல்கிறார்கள்.

“எந்த இடத்தில் முதன்முதலில் கிணறு வெட்ட ஆரம்பித்தீர்கள்?”

“அதோ அங்கேதான்” என்று அவர்கள் காட்டிய இடம் நாங்கள் நின்று பார்த்துக் கொண்டிருந்த பெரிய செவ்வகத்தின் 90 டிகிரி மூலை!

“அது எப்டிப்பா கரெக்டா ஈசான்ய மூலையிலே போய் கரெக்டா அந்த ஸ்பாட்ல நின்னுண்டு ஒரு தட்டு தட்டினான்? உடனே உள்ளே பார்த்தா உள்ளாற ஒரு பொம்மை. அதுக்கு பின்னாடியே ஆயிரக்கணக்கான பொம்மைகள் அணிவகுப்பு. அதற்கும் பின்னாலேயேயும் சைடுலயும் கரெக்டா, கச்சிதமா, தோண்டத்தோண்ட, ‘கற்றனைத்தூறும் மணற்கேணி’ மாதிரி?”

என் கேள்விக்கெல்லாம் ஏது பதில்? பேந்தப்பேந்த மாண்டரீனில் முழித்தார்கள், செஷுவானில் முழித்தார்கள். இன்னும் எத்தனையோ மொழிகளில் முழித்தார்கள். எல்லோருக்கும் என்மேல் செமகடுப்பு.

நான் என்ன “உம்மாச்சிய நேர்ல காட்டு” என்றா ஹிரண்யகசிபு மாதிரி கேட்டேன்?

என் கேள்வியின் அசைக்கமுடியாத லாஜிக் அவர்களைக் கடுப்பேற்றியது.

“ஒண்ணு, நீங்க இந்த பொம்மைகளை வேற இடத்துல தோண்டி எடுத்துக்கொண்டு வந்து இங்கே நிறுத்தி இருக்கலாம். அல்லது, நடுவிலே எங்கேயாவது வெட்டி எடுத்து, அதற்குப் பிறகு ஒரு ஆர்டரா வைக்கலாமுன்னு ...”

Photobucket

ஊஹும், இல்லவே இல்லையாம். அவசர அவசரமாக அதை மறுக்கிறார்கள். அந்த செவ்வகத்தின் ஒரு மூலையில் முதல் பொம்மை கிடைத்தது, பின்னர் ஆயிரக்கணக்கான பொம்மைகளை அதன் பின்பு, அதன் பின்னால், அதன் பக்கவாட்டில்தான் கண்டோம்.” என்று சாதிக்கிறார்கள்.

இதில் ஏதோ ஒரு பொய் சூட்சுமம் இருக்கிறது. ஆனால் அதை இப்போது இங்கே நோண்டினால் நம்மை ஊருக்குத் திரும்பவிடாமல் நொங்கெடுத்து விடுவார்கள் என்றுமட்டும் எனக்குத் தெரிந்தது. ஊருக்குப்போய் நிதானமாக இதை ஆய்வு செய்யவேண்டும் என்று ஒரு மெண்டல் மார்க் பண்ணிக்கொண்டேன்.

Photobucket

””எல்லாமே ‘மேட் இன் சைனா’ தான். இல்லையா?” என்று கேட்டேன். என் ஜோக்கை அவர்கள் ரசிக்கவில்லை.

என்னை முறைத்த கைடுகளும் சிப்பாய்களும் “வந்துட்டாண்டா கேள்வி கேட்க, பெரிய திருவிளையாடல் நக்கீரன்னு நினைப்பு” என்கிற முறைப்புடன் அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். அங்கிங்கென்னாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருந்த காமெராக்களை சுட்டிக் காட்டியபடி ஏதோ செல்போன்களிலும் பேசிக் கொண்டார்கள்.

Iron Curtain என்று சும்மாவா சொல்கிறார்கள் ?!

ருசிகரமான ஒரு பழைய தகவலும் கேள்விப்பட்டேன்.

1998ல் அதிபர் க்ளிண்டன் சைனா விசிட் வந்தபோது இங்கே வந்தாராம்.

எல்லாவற்றையும் பார்த்து வியந்தபிறகு, “இதை முதன்முதலில் வெட்டி எடுத்த ஆளை நான் பார்க்கவேண்டுமே” என்றாராம்.

கம்யூனிச நாடல்லவா? தனிமனித உயர்வு நவிலல் எல்லாம் அங்கே ஆராதிக்கப்படக்கூடாத விஷயமல்லவா? அந்த ஆள் பற்றி யாருக்குமே எதுவும் தெரிந்திருக்கவில்லை.

ஆனால், “யோவ், யாருய்யா மொதல்ல இங்கே வெட்டினது? அந்த ஆளைப்புடிச்சு இங்கே இழுத்துட்டு வாங்கய்யா, தொரை பார்க்கணும்கறாரில்ல” என்று சீன அரசாங்கம் அவசர அதிரடி உத்தரவு போட்டதாம்.

அதே கிராமத்து மூலையில் பன்றி மேய்த்துக்கொண்டு பராக்கு பார்த்துக்கொண்டிருந்த, முதலில் அங்கே தோண்டியதாகச் சொல்லப்படும் 3, 4 பேரில் ஒருவரான ‘யாங்’ என்பவரைத் தேடிக்கண்டுபிடித்துக் குளுப்பாட்டி இழுத்துவந்து, அவசரமாக அந்தக் கோவணாண்டிக்கு ஒரு ’சூட்’டையும் மாட்டி, க்ளிண்டன் முன்னால் நிறுத்தினார்களாம்.

அஜால் குஜால் க்ளிண்டன் பயங்கர மார்க்கெட்டிங் பேர்வழி ஆயிற்றே! ‘யாங்’கிடம் பேசி, கை குலுக்கி அவரை குஷிப்படுத்திய க்ளிண்டன், அவரிடம் ஒரு ஆட்டோகிராஃப் கேட்டாராம். யாங் பேந்தப்பேந்த முழித்திருக்கிறார். ஏனென்றால் ‘யாங்’ ஒரு நிரட்சரகுட்சி. இடது கைப்பெருவிரல்நாட்டை விட மோசம், எழுதப் படிக்கத் தெரியாதவர். பாவம்!

கிண்டர்கார்டன் குழந்தை மாதிரி ஒரு பேப்பரில் சும்மாவானும் தன் கையெழுத்து என்று மூன்று கோழிமுட்டை படங்களைப் போட்டு “இந்தாரும்” என்று க்ளிண்டனிடம் யாங் நீட்டினாராம். அதைப்பார்த்த க்ளிண்டன், ’இதென்ன மாமா?’ என்று வியக்க, சீனப் பிரதமர், அதிபர், அமைச்சர் குழாம், தூதரகப் பிரதிநிதிகள் என்று அத்தனை பேரும் கோரஸாக, ஏற்கனவே இடுங்கிய கண்களை இன்னமும் இடுக்கிக்கொண்டு பேய் முழி முழிக்க, சைனாவுக்கு ஒரே அவமானமாகப் போய்விட்டதாம்.

உடனே 5,6 முதியோர் கல்வி ஸ்பெஷலிஸ்ட் வாத்தியார்கள் ரெடி பண்ணப்பட்டார்களாம். அறுபத்திச் சொச்சம் வயதில் ‘யாங்’கின் ஆர்த்ரைடிஸ் கைவிரல் பிடித்து ஆற்று மணலில் ’அஹம் ப்ரம்மஹத்தி ஹை’ என்று அட்சராப்யாசம் ஆரம்பித்ததாம்.

க்ளிண்டன் அந்தண்டை போனவுடன் யாங்கை ஆசைதீரப் புளியம் விளாறால் நாலு விளாறு விளாறினார்கள் என்று கூட நான் கேள்விப்பட்டேன்.

இந்தக் கொடுமை யாருக்குமே வரக்கூடாத ஒன்று.

சாகிற காலத்தில், ‘சங்கரா, சங்கரா அல்லது கௌதமா, புத்தா’ என்று கிடக்கவேண்டிய கடைசி காலத்தில் ‘அ,ஆ’ வா? யாங் மனது விம்மி வெடித்து சீறிச் சினந்து அழுதாராம். பயனில்லை. சீனப் பிரதமரே சொல்லிவிட்டார். அரிச்சுவடி பாஸ் பண்ணியே ஆகவேண்டும் என்ற கட்டாயம்.

மிகுந்த சோகத்தில், உண்ணாவிரதமாக, பாம்பு, பல்லி எதையுமே தொடாமல் வெஜிடேரியனாக மாறிக்கூட பார்த்தாராம். ஊஹும். சீன அதிபர் சொல்லிவிட்டார். சீக்கிரமே எழுத்துக்கூட்டி யா ..ங்.. என்று கையெழுத்து போட்டே ஆகவேண்டிய அவசியம்.

அப்படி இப்படி அடித்துப் பிடித்து ஆறு மாதத்தில் கோணல் மாணலாக ஒரு கையெழுத்து போடச் சொல்லிக் கொடுத்தார்களாம்.

வருமுன் காப்போனாக, அடிஷனலாக ஒரு ஏழெட்டு ‘யாங்’களையும் பேக்ரவுண்டில் தயார் செய்து வைத்துவிட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

Photobucket

பக்கத்து ம்யூசியத்தில் $25 கொடுத்து ஒரு Terracotta Warriors புத்தகம் வாங்கினால், ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்த ‘யாங்’ கையெழுத்து போட்டுக் கொடுத்துக்கொண்டிருந்தார்! ”உங்கள் ஷிஃப்ட் முடிந்தவுடன் அடுத்த யாங் வருவாரா?” என்று நான் பவ்யமாக விநயத்துடன் கேட்டேன்.

அவர் யோசித்து பதில் தருவதற்குள் நான் அவசர அவசரமாக அங்கேயிருந்து பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டேன்.

Photobucket

பகவான் கிருஷ்ணனே பகவத் கீதையில் கையொப்பம் இட்டுக்கொடுத்ததாக நினைத்து என் அமெரிக்க நண்பர்கள் பக்திப் பரவசத்துடன் ஆனந்த பாஷ்பத்துடன் அந்த புத்தகங்களைக் கண்களில் ஒற்றிக் கொண்டார்கள்.

மாலையில் ஒரு ‘டிம் ஸம்’ டின்னர் ஷோ!

’டிம் ஸம்’ என்பது நம் ஊர் உப்பு கொழுக்கட்டை. அதைக்கூட நான் ஒழுங்காக சாப்பிடமுடியாமல் அநேக மிருக அங்க அவயவ பதார்த்தங்கள் ஆங்காங்கே பார்வையாக வைக்கப்பட்டன. கொழுக்கட்டைக்குள் எவனாவது தேளையும் பூரானையும் வைப்பானா? அதை சாப்பிட்டுத் தொலைத்தால்’துங்கக் கரிமுகத்துத்தூமணி’ பிள்ளையார் தொந்தி என்னாவது?

நல்லவேளையாக அவர்களுக்கு இட்லி, தோசை செய்யத் தெரியாது. தெரிந்திருந்தால் நாய் வால் இட்லி, கோட்டான் பிருஷ்டதோசை என்று எதையாவது பண்ணி நம்மை வாந்தி எடுத்தே சாகவைப்பார்கள்.

எப்படிப்பட்ட கிராதகன்கள் இவர்கள்?

சாப்பாடு கிடக்கட்டும், இரவு ஹோட்டலில் போய் ஏதாவது ’பீரா’ய்ந்துகொள்ளலாம் என்று அந்த தியேட்டரின் மேடை பக்கமாக நாற்காலியைத் திருப்பிப் போட்டுக்கொண்டேன்.

எதிர்பார்த்தமாதிரியே, சைனாவின் முதலாம் சக்ரவர்த்தியின் பொற்காலம் பற்றிய நிகழ்ச்சி.

கதை என்ன என்கிறீர்களா?

Photobucket

பன்னாடை ஏழைப்பெண், ஆனால் அவளோ அழகு தேவதை. அடுத்தவேளை சோத்துக்கு வீட்டில் ஒரு ஓணான்கூட இல்லாத ஏழ்மையிலும் அவள் ‘நான் வளர்கிறேனே மம்மி’ என்று ஆங்காங்கே புஷ்டியுடன் வளர்கிறாள். சக்ரவர்த்தியின் சொத்து திருவனந்தபுரத்து பத்மநாபரைவிட அதிகமென்பது பற்றிக் கேள்விப்பட்டு அவருடைய காதலுக்கு ஏங்குகிறாள், ஆசைப்படுகிறாள்.

Photobucket

சீன சமூகமே அதை எதிர்க்கிறது. மகாராஜாவை மணக்கவும் முடியாமல் சொத்தை மறக்கவும் முடியாமல் துடிக்கும் அந்தப் பராரிப் பெண் கடைசியில் தற்கொலை செய்துகொள்ளத் துணிகிறாள். மலை உச்சியிலிருந்து அவள் குதிக்கும்போது மகாராஜாவே வெள்ளைக் குதிரையில் ஓடிச்சென்று அவளை .... என்று நான் ஊகித்திருந்த கதை சுத்தமாக அங்கே நடக்கவே இல்லை.

Photobucket

மகாராஜா முதல் வருவோன் போவோன், வாயில்காப்போன் வரை ஏன் எல்லோருமே ஜிம்னாஸ்டிக்ஸ் சாகசவீரர்களாய்த் திகழ்கிறார்கள் என்பதை என்னால் கடைசிவரை ஊகிக்கவே முடியவில்லை. ஒருவேளை இது வீராவேச ஜானரோ?

பெண்கள் எல்லோருமே ஒரே மாதிரி சாளைக்கண், சப்பைமூக்கு சிவப்பு சுந்தரிகளாய் இருப்பதால் யார் இதிலே ஹீரோயின், யார் சேடிகள்? ஒருவேளை கம்யூனிச சித்தாந்த நாடு என்பதால் எல்லோருமே சேடிகள்தானோ என்கிற என் மனப் பிராந்தி கடைசிவரை என்னைவிட்டு அகலவில்லை.

Photobucket

அநாவசியமாக ஒவ்வொருவரும் ஒவ்வொருத்தரையும் பார்த்து அடிக்கடி சிரித்துக்கொள்கிறார்கள். சில சமயாம் ஆடியன்ஸையும் பார்த்து. ஒருவேளை இது காமெடியோ?

மகாராஜா தன் பதவிக்கேற்ற கௌரவத்துடன் தங்கக் கட்டிலில் சிரித்துக்கொண்டு சும்மா கொலு வீற்றிருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. எனக்குத் தூக்கிவாரிப் போடும்படி திடீரென்று மகாராஜா வேட்டியை சரியாகக்கூட செருகிக் கொள்ளாமல் வேகவேகமாக எழுந்து நாற்காலியிலிருந்தே ஆடத் துவங்கி விடுகிறார். சரி, போகட்டும் இது ரொமாண்டிக் சீன் போல இருக்கிறது என்று நாம் நினைத்தால், ஆடிக்கொண்டே திடீரென்று நட்டநடு ஸ்டேஜில் கத்தியை உருவி அருகிலே நிற்கும் அமைச்சன், தளபதி, வேலைக்காரன், ஸீன் தூக்குகிறவன், உப்புக்கடலை விற்கிறவன் என்று அத்தனை பேரையும் போட்டுத் தள்ளிவிடுகிறார். நாம் குலை நடுங்கி, ஏதேது இந்த ஆள் கீழே குதித்துவந்து நம்மையும் துவம்சம் செய்துவிடுவானோ, மத்தியானமே நாம் டெர்ரகோட்டாவையெல்லாம் கிண்டல் செய்தது தெரிந்துபோயிற்றோ என்று பயப்படும்போது மந்தகாசமாய் பூவாய்ச் சிரித்து மந்திபோல் பின்பக்கமாகவே ஒரு நடை நடந்து கட்டிலில் கரெக்டாக அமர்கிறார். ஒருவேளை இதுதான் பின்நவீனத்துவமோ?

Photobucket

யாரோ ஒருத்தன் நரி வேஷம், புலி வேஷம் எல்லாம் போட்டுக்கொண்டு ஆடி ஆடிக்களைத்து அங்கேயே சென்டர் ஸ்டேஜில் பிராணனையும் விடுகிறான். ஏன் ஆடுகிறாய், எதற்காக ஆடுகிறாய், ஆட்டத்தை நிறுத்துவாயா, மாட்டாயா, எவ்வளவு நேரம்தான் ஆடுவாய் என்றெல்லாம் கேட்க ஒரு நாதி இல்லை. ஒருவேளை இதுதான் P. வாசுவின் ‘புலிவேசம்’ படத்திற்கான ஒரிஜினலோ?

எல்லாப் பெண்களும் உயரே உயரே போய் எல்லா பக்கங்களிலும் எல்லாவற்றையும் வளைத்து வளைத்து ஆடுகிறார்கள். ”சரி, இது கயண்டு விழப்போகிறது, அய்யய்யோ, அது அவிழ்ந்து விழுந்தால் ...?” என்றெல்லாம் நாம்தான் மிரள்கிறோமே தவிர, ஒரு வார்ட்ரோப் மால்ஃபங்ஷனும் நிகழவில்லை.

Photobucket

“அய்யோ, இது விழுந்து தொலைக்கப் போகிறதே, விழுந்தாலும், இவள் ஆடுகிற ஆங்கிளைப்பார்த்தால் அங்கே அல்லவா அடிபட்டுத் தொலைக்கும்?’ என்று நான் அஞ்சாத நிமிடம் இல்லை. அநாவசியமாக என் மனம் பதைபதைத்தது. ஒருவேளை இது டெர்ரர் தீமோ?

அட்டகாசமான கலர், கலரான ’செட்’கள், பிரமாதமான லைட்டிங். எல்லாவற்றிலும் ஒரு ஜிம்னாஸ்டிக்ஸ் குதியல், துள்ளல், டைவ் அல்லது தாவல். வெளியே வரும்போது $15 ஒரிஜினல் டிவிடி என்றார்கள். வாங்கிவிட்டேன். சரியான தயாரிப்பாளர் மாட்டியதும் நான் இந்த சரித்திரத்தைப் படைத்து, குலவையெல்லாம் சேர்த்து உங்களுக்கு தமிழ்ப்பொங்கல் இடுவேன். ஒரே ஒரு மூங்கிலைவைத்து பிஜிஎம் பண்ணிவிட ரஹ்மான் விருப்பப்படுகிறார். சரியென்று சொல்லி விட்டேன்/

இடுப்பு என்கிற சமாச்சாரத்தையே ஆண்டவன் சீனர்களுக்கு இல்லாமல் செய்துவிட்டான். இன்னும் ஒரு விஷ்யத்திலும் அவன் கொஞ்சம் வஞ்சனை செய்திருப்பது என்னை மிகவும் பாதித்தது. நல்லவேளையாக சில்க் துணி நிறைய ஸ்டாக் இருப்பதால் நான் பயந்த அளவுக்குப் பஞ்சம் தலை விரித்தாடவில்லை.

கூர்ந்த, ஆழமான, செறிவான சீன வசனங்கள் என்னை மிகவும் கவர்ந்தன!

(தொடரும்)




Monday, August 15, 2011

கொழிக்கிறது சைனா! 9


Beijing to Xian!

முக்கால்வாசி சீனச் சொற்கள் ‘X, Y அல்லது Z'ல் ஆரம்பிப்பதால் அவற்றை முதலில் சொல்லிப் பார்க்கும்போது பக்கத்தில் யாரும் இல்லாமல் இருப்பது உசிதம். எத்தனை பேர் மேல்தான் எச்சில் நீர்வீழ்ச்சியைப் பீய்ச்சி அடிப்பது?

Xian என்பது கிட்டத்தட்ட “ச்ஷியான்”. பெய்ஜிங்கிலிருந்து ஆயிரம் கிலோமீட்டர்கள் தென்மேற்காக, சீனாவின் 'மஞ்சள் நதி’ டெல்டாவின் இதயப் பகுதியில் இருக்கிறது. ஏதென்ஸ், ரோம், நைல் நதிக்கரையிலுள்ள கெய்ரோ போல இதுவும் ஒரு பழைய நதிக்கரை நாகரிக சின்னம்.

மேரியாட் ஹோட்டலை விட்டுக்கிளம்பி, முதன்முதலில் வந்திறங்கிய அதே பெய்ஜிங் விமான நிலையத்திற்கு வந்துசேர்ந்தோம். அங்கிருந்து 2 மணி நேரத்தில் ச்ஷியான்!

3100 வருடங்கள் பழமைபெற்ற ச்ஷியான், 11 அரச வம்சாவளிகள் கோலோச்சிய இடம். பத்தாம் நூற்றாண்டிலேயே பத்து லட்சம் மக்கள் வாழ்ந்த தொன்மையான இடம். ஏர் சைனாவில் வழக்கம்போல் சாப்பாட்டுக் குளறுபடிகள் பற்றி இங்கே எழுதுவதாக இல்லை! பெய்ஜிங் அளவுக்குப் பெரிய ஹோட்டல் வசதி இல்லை. Xian Grand Noble Hotel-ல் தங்கினோம். வசதிகள்தான் சற்றுக் குறைவே தவிர, ‘ரேட்’ விவகாரங்களில் குறை இல்லை.

Photobucket

மறுநாள் காலையில் ”முதலில் என்ன பார்க்கப் போகிறோம்?” என்று கேட்டேன்.

‘யோவ் டாங்’ என்று பதில் வந்தது. ஏதேனும் திட்டுகிறானோ என்று முறைத்ததில் ‘யோவ் டாங்’ என்றால் ’குகை வீடு’ என்று புரிந்தது. பெய்ஜிங், ஷாங்ஹாய் போன்ற நகரங்களைத் தவிர, வடக்கு, மற்றும் வடமத்திய சைனாவின் ஏனைய இடங்களில் 90 சதவீதம் சீனர்கள் இந்த மாதிரி குகை வீடுகளில்தான் வசிக்கிறார்களாம்.

டூரிஸ்ட் பஸ்ஸைத் திடுமென்று நடுரோட்டில் நிறுத்தி “வாங்க, போய் பார்க்கலாம்” என்றார்கள். என்னடா இது மலையையே காணோம், எப்படி குகை, எங்கே குகை என்று யோசித்தபடியே இறங்கினேன்.

குகை என்றால் மலைக்குகை மாதிரி அல்ல. வீடுகளையே கொஞ்சம் தாழ்வான இடங்களில் தரையை நோண்டி நோண்டித்தான் கட்டி இருக்கிறார்கள். வெளியே இருந்து நுழைந்தால் ஒரு வாசல் ஏரியா, அப்படியே உள்ளே ஒரு ‘லிவிங் ஏரியா’, அதற்கும் உள்ளே ஒரு சின்ன கிச்சன் ஏரியா. எல்லாமே சின்னச்சின்ன ஒட்டுக்குடித்தனங்கள் மாதிரிதான்.

நம் கிராமத்துக் குடிசைகள் போலத் தரையில் நன்றாக மெழுகி இருக்கிறார்கள். தூங்குவதற்கென்று பக்கவாட்டில் சின்னச்சின்ன ’குகை’கள். எங்கேயும் ஜன்னல்கள் கிடையாது. வீட்டுக்குள்ளேயே சின்ன காய்கறித் தோட்டம். பூசணி மாதிரி ஏதோ ஒன்று காய்த்திருந்தது. கத்திரி, தக்காளிச்செடிகள் பார்த்தேன்.

என்னதான் தம்மாத்துண்டு வீடு என்றாலும் திடுதிப்பென்று அத்தனை பேரும் அதற்குள்ளே கூட்டமாக நுழைவதில் எனக்குத் தயக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

மின்சார வசதிகள், சின்னதாக ‘கேஸ்’ அடுப்பு, எல்லாம் பார்த்தோம். குளிக்க, பாத்ரூம் வசதிகள் வெளியே தனியாக, தரையில் ஒரு ஓட்டை போட்டு! விசிட்டர்கள் அடிக்கடி வருவதால் இந்த ‘குகை வீட்டில்’ கொஞ்சம் வசதிகள் அதிகமாக இருந்தனவோ என்னவோ! வாசலில் ஒரு மொபெட், சின்னதாக ஒரு ஃப்ரிஜ் கூடப் பார்த்த ஞாபகம் எனக்கு!

நமக்கு இதெல்லாம் ஒன்றும் புதுசில்லை, இதையெல்லாம்விட மிக மோசமான கண்டிஷனில் நம் நாட்டில் கோடிக்கணக்கான வீடுகள் இருக்கின்றன என்று நினைத்துக்கொண்டேன். குடிசை பார்த்திராத அமெரிக்க சகாக்கள் விழுந்து விழுந்து ‘க்ளிக்’கிக் கொண்டார்கள்.

ச்ஷியான் வந்திறங்கி இருப்பதன் மிக முக்கிய காரணம் The Terracotta Warriors பார்ப்பதே. யார் அந்த மண் வீரர்கள்? அது ஒரு சுவாரசியமான கதை!

1974ல் இதே ஏரியாவில் ஒரு கிராமத்தில் கிணறு வெட்ட மண்ணைத் தோண்டி இருக்கிறார்கள். 15 அடி ஆழத்தில் ‘நங்’கென்று ஏதோ இடித்திருக்கிறது. என்னடாவென்று உள்ளே இறங்கிப் பார்த்தால் ஒரு மனிதச் சிலையின் தலை மாதிரி தெரிந்திருக்கிறது. அதைத் தூசி தட்டி, வெட்டித்தனியாக எடுத்துக்கொண்டு போய் கிராமத்தில் மற்றவர்களிடம் காட்டினால், ’ஏதோ தெய்வக்குத்தம்யா, புத்தன் தல மாதிரி இருக்குது, நம்மள பலி வாங்கிரும்’ என்று பலர் பயந்து ஓடி இருக்கிறார்கள்.

சில தைரியசாலிகளும், கிராமத்துப் பெரிசுகளும் அதிகாரிகளைக் கூட்டிக்கொண்டுவந்து, இன்னும் கொஞ்சம் பக்கவாட்டில் வெட்டிப் பார்த்ததில் இதே மாதிரி சிப்பாய் மண் பொம்மைகள் எக்கச்சக்கமாகப் புதைந்து கிடப்பது தெரியவந்திருக்கிறது. உடனே அரசு அதிகாரிகள் அங்கே வந்து ஏரியாவை வளைத்து விட்டார்கள். அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கண்டுபிடித்த விஷயங்கள் உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தின.

Photobucket

Photobucket

சைனாவின் முதலாம் சக்ரவர்த்தி என்று அழைக்கப்பட்ட க்வின் ஷீ ஹுவாங்குக்கு மரண பயம் எக்கச்சக்கமாக இருந்திருக்கிறது. தன் 13ம் வயதிலேயே அரசாளவந்த அந்த சின்னப்பையன் சாவா மருந்து ஒன்று வேண்டும் என்று கிட்டத்தட்ட 8,000 சிப்பாய்களை “அப்படிப்பட்ட ஔஷதம் எங்கே கிடைக்கும், கண்டுபிடித்துக்கொண்டு வாருங்கள்” என்று நாடெங்கும் விரட்டி இருக்கிறான்.

“இதேதடா வம்பு, ஒண்ணுங் கிடைக்கல சாமி” என்று திரும்பி வந்தால் நம்மையே போட்டுத் தள்ளிவிடப் போகிறானே இந்த பித்துக்குளிப் பொடியன் சக்ரவர்த்தி என்று பல சிப்பாய்கள் அந்தப் பிராந்தியத்தைவிட்டே ஓடிப்போய் விட்டார்களாம். திரும்பி வந்தவர்களில் சிலர் நவபாஷாணம், கரடிப்பொடி என்று என்னென்னவோ கதையெல்லாம் விட்டிருக்கிறார்கள். ”டெய்லி கொஞ்சம் பாதரசம் சாப்பிட்டீங்கன்னா சும்மா அப்டியே ‘டங்’குன்னு ..” என்று ஏதேதோ ஆலோசனைகள்!

அப்படி ஓட்டமாக நாட்டைவிட்டே ஓடிப்போன ஒரு குரூப்தான் ஜப்பானையே கண்டுபிடித்ததாக ஒரு சின்ன கிளைக் கதையும் விடுகிறார்கள்.

ஜப்பான்காரன் காதில் இந்த விஷயம் அரசல்புரசலாக விழுந்ததால்தான் அவன் சீனாக்காரனை அவ்வப்போது ‘மொத்து மொத்’தென்று இன்றைக்கும் போட்டு சாத்துகிறான் என்பது என் துணிபு.

Photobucket

நிற்க. ஓடிப்போன சிப்பாய்கள்தான் திரும்ப வரவில்லையேதவிர, மகாராஜா ’சாவே இல்லாத அமிர்த’த்தைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளைக் கொஞ்சமும் தளர விடவில்லை. பாதரசம் அந்த நாட்களில் மிகவும் அபூர்வம். ஏகப்பட்ட மலையை வெட்டிபோட்டால் கொஞ்சூண்டு பாதரச தாது கிடைக்கும். ஆனால் அது பயங்கரமான விஷம் என்பது தெரியாமல் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணவில் சேர்த்துக்கொண்டு கடைசியில் அந்த ’மெர்குரி பாய்ஸனிங்’காரணத்தாலேயே சக்ரவர்த்தி தன் 50வது வயதிலேயே அல்பாயுசாக மண்டையைப் போட்டிருக்கிறார்.

திஹாரோ, சொர்க்கமோ, நரகமோ, போகிற இடத்திலேயும் தன்னைக் காப்பாற்ற ஒரு மகா சேனை வேண்டுமென்று மகாராசாக்கள் நினைப்பது வழக்கம்தானே! எக்கச்சக்கமான ரத கஜ துரக பதாதிகளை மண்ணில் செய்து தன்னுடன் சேர்த்துப் புதைத்துவிடும்படி மகாராஜா கட்டளையும் போட்டாயிற்று. 700,000 சிப்பாய்கள் பல ஆண்டுகள் உழைத்து, பூமிக்கு அடியில் சகரவர்த்திக்கு அலங்காரக் கல்லறை கட்டி இருக்கிறார்கள். அதைச் சுற்றிவர பாதாள சுரங்கங்கள், நிலவறைகள், ரகசிய அறைகள் என்று என்னென்னவெல்லாம் கட்டமுடியுமோ அத்தனையும் கட்டி இருக்கிறார்கள். கணக்கே இல்லாத அளவுக்குத் தஙக்ம், வைர, வைடூரிய ஆபரணங்கள், புதையல்கள் கல்லறையைச் சுற்றிலும் இருப்பதாக இன்றும் நம்புகிறார்கள். அந்தக் கல்லறை இன்னமும் திறக்கப்படவில்லை. பல மாடர்ன் டெக்னிக்கள், லேசர் டெஸ்ட்கள் செய்து, கல்லறையைச் சுற்றிலும் பாதரச ஆறுகள் ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

Photobucket


Photobucket

2000 வருடத்திற்கு முன் எழுதப்பட்ட Records of the Grand Historian என்கிற குறிப்புகளில் பாதரச ஏரிகள், தங்க, வைர, வைடூர்யங்களால் ஆன நவரத்தினத் தேர்கள், குதிரைப்படைகள், யானைகள், 6000க்கும் மேற்பட்ட காலாட்படைகள் பற்றிய விபரங்கள் எல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றன.

எல்லாம் மகா ரகசியமாக இருக்கவேண்டும் என்பதற்காக அநேகமாக அத்தனை கைவினை வேலைக்காரர்களுமே அவர்கள் வேலை முடிந்தவுடன் அங்கேயே சாகடிக்கப்பட்டும் இருக்கிறார்கள்.

காலப்போக்கில் மண்ணுக்குள் புதைந்தே கிடந்த அந்த ஆயிரக்கணக்கான மண் சிப்பாய்களில் ஒருவனுக்குத்தான் 1974ல் கதிமோட்சம் கிட்டி அவன் வெளியே எடுக்கப்பட்டிருக்கிறான்.

சுற்றிவர தோண்டிப் பார்த்தபிறகுதான் இந்தப் புதையலின் பிரம்மாண்டம் அவர்களுக்குக் கொஞ்சமேனும் உறைக்க ஆரம்பித்திருக்கிறது.

திருவனந்தபுரம் அனந்தபத்மநாபஸ்வாமி கோவிலின் 5 அண்டர்கிரௌண்ட் சேம்பர்களுக்கே நாம் வாய் பிளந்து கிடக்கிறோம். இங்கே புதையுண்டு கிடப்பதோ ஒரு நவரத்தின நகரம் என்றே தோன்றுகிறது. விலை மதிப்பெல்லாம் போடுமளவுக்குக் கணினிகள் வளரவில்லை.

’8,000 காவலாட்கள், 130 தேர்கள், 530 குதிரைகள், 150 குதிரைப்படைகள்’ என்கிறது ஒரு எஸ்டிமேட். தோண்டத்தோண்ட ஆச்சரியங்கள் இன்னமும் காத்திருக்கின்றன என்பது மட்டுமே நிச்சயம்.

ஒரு முக்கியமான விஷயம். எல்லாமே தத்ரூபமான வடிவமைப்பில். அதாவது சாம்பிள்கள் மாதிரி சின்ன சைஸ்களில் எதுவுமே கிடையாது! ஆஜானுபாகுவான ஆறடி உருவச்சிலைகள். குதிரைகள் என்றால் நிஜம் குதிரை மாதிரியே உருவ அமைப்பு.

Photobucket

வெளியில் எடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கலைப் பொக்கிஷத்திலும் படு நுட்பமான கலையம்சம் பொருந்திய வேலைப்பாடுகள் தெரிகின்றன. வில்லாளிகள், வெண்கலத் தேர்கள், படை சிப்பந்திகள்! காலாட்படைகளிலும் ஒருவர் போல் இன்னொருவர் கிடையாது. அதிலும் மேலதிகாரிகள், படைத் தளபதிகள், சேனாதிபதிகள் என்று எல்லாமே ஒரு கட்டுக்கோப்பான கட்டமைப்புடன், அவரவர்க்கு உண்டான சீருடையுடன் இருக்கிறார்கள்.

Photobucket

Photobucket

Terracotta Soldiers என்றழைக்கப்படும் இந்தக் காவலாளிகள் கூட்டத்தில் கிட்டத்தட்ட 1000 பேர்கள் மட்டுமே இதுவரை தோண்டி எடுக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் தோண்டப்படவேண்டிய இடங்கள் எக்கச்சக்கம்!

அந்த இடத்தையே வளைத்து பிரம்மாண்டமான கூரை அமைத்து, விசிட்டர்களை வரிசையாக வலம் வரவிடுகிறார்கள். ஆங்காங்கே மேல் விபரங்கள் சொல்ல அறிவிப்புப் பலகைகள் இருக்கின்றன. கூட்டம் அம்முகிறது!

Circle Vision முறையில் எல்லா பக்கங்களிலிருந்தும் பார்க்கும்படியாக 20 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப்படம் ஒன்று தொடர்ந்து விபரம் சொல்லியபடியே ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு பப்ளிக் தியேட்டர்களுக்குள் இருக்கவேண்டிய பழக்கவழக்க முறைகள் சைனாக்காரர்களுக்கு சுத்தமாகக் கிடையாதென்பதால் எல்லோரும் ஒரே நேரத்தில் ‘காச் மூச்’சென்று இரைந்து கத்திக்கொண்டே பாப் கார்ன், கோக் குடித்துக் கொண்டிருந்தார்கள். எவ்வளவு தடவை ‘உஷ், உஷ்’ஷென்றாலும் கேட்பாரில்லை.

எல்லோராவின் அற்புதமான தேர் சிற்ப வேலைப்பாடுகளை நிம்மதியாகப் பார்க்கவிடாமல், அங்கே வந்திருந்த பள்ளிக்கூடப் பிள்ளைகள் ‘ஹோ’வென்று கத்திக்கொண்டு ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தது, கண்டுகொள்ளாமல் நின்ற வாத்திகள்- அந்தக்கொடுமை என் மனதில் நிழலாடிற்று. நாமெல்லாமே காட்டான்ஸ் என்பது நிதர்சனம்!

’சைனா கொழிக்கிறது!’ என்பது ச்ஷியானில் நன்றாகவே தெரிகிறது. பத்து வருட முன்பு அந்த ஏரியா முழுவதும் ரசாயன, இரும்பு சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனங்கள் இருந்தனவாம். எங்கே பார்த்தாலும் புகைக்கூண்டுகள், கண் எரிச்சல், காற்றில் மிகவும் தூசி, மாசு, இப்படித்தான் இருந்ததாம். இப்போது அத்தனை உற்பத்தி நிறுவனங்களையும் அப்புறப்படுத்தி விட்டார்கள். எங்கே பார்த்தாலும் புத்தம் புது மல்டிப்ளெக்ஸ்கள், அபார்ட்மெண்ட்கள், பல மாடி ஆபீஸ் கட்டிடங்கள். எங்கள் கைடுகளே ஆச்சரியப்பட்டுப் போனார்கள். உலகத்தில் உள்ள க்ரேன்களில் பத்தில் ஆறு சைனாவில்தான் இருக்கிறது என்பார்கள். அதில் பாதிக்குமேல் நாங்கள் அங்கே பார்த்தோம்.

ஒரு முக்கியமான விஷயம்: தனியார் நிறுவனங்கள் பல கட்டிடங்களைக் கட்டினாலும், சீன அரசாங்கமும் தன் பங்குக்கு எக்கச்சக்கமான அபார்ட்மெண்ட்கள், ஆபீஸ்களை சைனாவெங்கும் கட்டி வருகிறது. என்னால் எழுத்தில் சொல்லி மாளாது. அவ்வளவு புத்தம்புது கட்டிடங்கள், பல்லாயிரக் கணக்கில்! ச்ஷியான் போன்ற சிறு நகரங்களுக்கு அத்தனை கட்டிடங்களுக்கும் ஆட்கள் வருவார்களா என்று கேட்டால் அதுபற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலை இல்லையாம். ஏகப்பட்ட அந்நியச் செலாவணி கையிருப்பில் இருப்பதால், உள்நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், நாட்டை மேம்படுத்தவும் இப்படிச் செய்வதாகச் சொல்கிறார்கள். மல்டைலேன் ’வழ வழ’ ஹைவேக்களும், புத்தம்புது ரோடுகளும் இதில் அடக்கம்!

ட்ரில்லியன் கணக்கில் இப்படி அரசுப்பணம் புழங்கும்போது ஊழல் இருக்காதா என்று கேட்டேன். “இருக்கிறது. இல்லாமல் இல்லை. ஆனால் மிக மிகக் குறைவு. கண்டு பிடிக்கப்படுபவர்கள்மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கிறோம். மூன்றே மாதங்களில் விசாரணை முடித்துத் தூக்கில் தொங்க விடப்பட்டவர்கள், வேலை போனவர்கள், கட்டாயமாக ரிட்டையர் ஆக்கப்பட்டவர்கள் பட்டியல் மிகப்பெரிது” என்றார்கள். கேட்கவே ஆனந்தமாக இருந்தது!

ஊழலுக்கு எதிராக அவ்வளவு கண்டிப்பாக இல்லாவிட்டால் சைனா இவ்வளவு பெரிய பொருளாதார மாற்றத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது. 3000 வருடங்கள் தூங்கிக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் முப்பதே வருடங்களில், அதுவும் கடந்த 15 வருடங்களில் அவர்கள் நடத்திக் காட்டி இருக்கும் வளர்ச்சி மகத்தானது. இந்தியா இதிலிருந்து கற்றிருக்கவேண்டிய பாடங்கள் அதிகம். நாம் இன்னமும் கற்றுக்கொள்ளவில்லை என்பது எனக்கு மிகுந்த வருத்தத்தையே அளித்தது.

“ஊழலை எல்லாம் நீங்க மட்டும் ஒழிச்சிடமுடியுமா?” என்று பாரதப் பிரதமர் சமூக ஆர்வலர்களைப் பார்த்து வெட்கமில்லாமல் கேட்பதும், “ஸ்விஸ் வங்கிகளில் இந்தியப் பணம் பல்லாயிரக்கணக்கான கோடிகள் இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காகவெல்லாம் நாம் ஆக்‌ஷன் எடுக்கமுடியாது” என்று நாட்டின் பொருதாளார மந்திரி சொல்வதும், நாளொரு ஊழலும், பொழுதொரு ஊழல் பெருச்சாளியும் கண்டுபிடிக்கப்பட்டாலும் “யாரோ ஏதோ சொல்கிறார்கள் என்பதற்காக நாங்கள் எதுவும் செய்யமாட்டோம்” என்று ஆளும் கட்சியான காங்கிரஸ் அடாவடி செய்வதும், ”யார் என்ன சொன்னாலும் ஒன்றுமே வாயைத் திறக்கவே மாட்டேன்” என்று சோனியா காந்தி அண்ட் கம்பெனி அழுகுணி ஆட்டம் ஆடி நாட்டையே சுரண்டி நாசம் செய்வதும் ...

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால் ...;-(

(தொடரும்)







Thursday, August 11, 2011

கொழிக்கிறது சைனா! 8

இதற்குமேல் பெய்ஜிங்கில் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை என்கிற அளவிற்குப் பார்த்தாயிற்று. இனிமேலும் சீன கலாச்சார சின்னங்கள், சீன வாழ்க்கைமுறை என்று எதையாவது பார்த்தால் வாந்தி வரும் என்றே தோன்றியது.

ஒவ்வொரு புண்ணியபூமியிலும் நமக்கு மிகவும் பிடித்த ஏதாவதொன்றை அங்கிருந்து கிளம்பும்போது விட்டுவிடவேண்டுமென்பது நம் பாரத சம்பிரதாயம். காசிக்குச் சென்றால் எதையாவது விட்டுவிட வேண்டுமென்பார்களே, அதைப்போல் நான் பெய்ஜிங்கில் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுகின்ற வழக்கத்தை விட்டொழித்தேன். அந்தக்கதையை உங்களுக்குச் சொல்லவே இல்லையே!

முதன்முதலாக பெய்ஜிங்கில் இறங்கிய அன்று என் இரவு நேர சூப்பர் மார்க்கெட் விஜயம் பேய், பிசாசு, பில்லி, சூனிய பயத்துடன் சோகமாக முடிந்ததைச் சொல்லியிருந்தேன் அல்லவா?

இப்பொழுது பகல்வேளை தானே? இந்த ஊரைவிட்டே கிளம்பப்போகிறோம். லேசாகப் பசிக்கிறாற்போல் இருக்கிறதே. கடை, கண்ணிக்குப்போய் எதையாவது வாங்கலாமே? என்ன வாங்கலாம்?

சோடா? பீடா?

பீடா ஆசையெல்லாம் அதீதம். ’மாவா’, ‘140 ஜர்தா’ என்று எதையாவது போட்டுத் தொலைத்தால், ஓபியம் போதை மருந்து அடிக்கிறோம் என்று சீனன் நினைத்துப் பங்குகேட்டாலும் கேட்பான். அல்லது உள்ளே பிடித்துப் போட்டுவிடுவான்.

அதனால், சும்மனாச்சிக்கும் போய், தலையைச் சொறிந்தபடி “ஒரு எட்டு கடைவரைக்கும் போயிட்டு வரேன்மா” என்றேன்.

“என்ன, பொட்டிக்கடையில திருட்டு தம்மா? இல்லாட்டி ’பார்ல ஒரு ஸ்காட்ச் கல்ப்பா? என்ற அநாவசிய அன்பார்லிமெண்டரி கேள்விகள் வரத்தான் செய்தன. இல்லையென்றும் சொல்லமுடியாது. ஆமாமென்றாலும் பிரச்னை.

அதனால் சாதுவாக ”ஒரு உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட் வாங்கிட்டு வரேன்” என்று அபாயம் ஏதுமில்லாத ஒரு பொதுநல அறிவிப்பு செய்தேன்.

அபசகுனமாக அவள் ‘போகாதே போகாதே என் கணவா! பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்’ ரேஞ்சில் தலைவிரித்துப் போட்டபடி என்னை ஒரு லுக்கு விட்டாள். வேண்டாமென்று தலையாட்டினாள். நான் அதற்கெல்லாம் அசருவேனா?

”சர்த்தான் போமே” என்று மனசுக்குள் சொல்லியபடி பக்கத்தில் இருந்த சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்தாகிவிட்டது.

Photobucket

எல்லா பேக்கேஜ்களின் மீதும்- ஐ ரியலி மீன் எவ்ரிவேர்! -பூச்சி பூச்சியாய்ப் பறக்கிறமாதிரி சைனீஸ் எழுத்துகளே. மருந்துக்கும் ஒரு வார்த்தை ஆங்கிலம், ஒரே ஒரு கேரக்டர்? நஹி. ஒரு ஆங்கில வார்த்தைக்காக நான் ஏங்கின ஏக்கத்தில் கோடியில் ஒரு பங்குகூட ஒரு ஒரிஜினல் வெள்ளைக்காரன் அவன் ஆயுளில் செம்மொழி ஆங்கிலத்துக்காக ஏங்கியிருக்கமாட்டான்.

Photobucket

Photobucket

சுற்றிச் சுற்றிப் பார்த்தால் சிப்ஸ் ரகங்களை எங்கே வைப்பார்கள் என்பதே தெரியவில்லை. ஒன்றையுமே வாங்காமல் எல்லாவற்றையும் ஒரு தினுசாகப் பார்த்துக்கொண்டே, பாக்கேஜ்களைத் திருப்பித்திருப்பிப் பார்த்துக்கொண்டே செல்வதால், ‘இது ஏதோ ஷாப்லிஃப்டிங் கேஸ்’ என்கிற பாணியில் சில பேர் என்னை முறைத்தார்கள். எல்லாமே மிருக அங்க போஜனாம்சங்களாகவே எனக்குத் தோன்றின. வாசனைகளோ, அதி தீவிரம். என் நாசித் துவாரங்களில் நுழைந்த தீவிர நாற்றக் காற்றுத்துகள்கள் என் ஜீவனையே ஒரு உலுக்கு உலுக்கி, அடி வயிற்றிலிருந்து ஆர்ப்பரித்துக் கிளம்பின.

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

அசட்டுச் சிரிப்பு சிரித்தபடி அவர்களிடம் ஆங்கிலத்தில் “ஹலோ, ஹௌ ஆர் யூ?” என்றால் முறைப்பு இன்னும் அதிகமானதுதான் மிச்சம். சைனீஸ் மொழியில் இதை எப்படிச் சொல்வது என்று கைடு சொல்லிக் கொடுத்திருந்தானே!

ஆங், நினைவுக்கு வந்துவிட்டது. ”நீஹாவ், நீ ஸம் யாங்?” இல்லை இல்லை, “நீ மியாவ், நான் குய்யாங்”. நோ, ”நாந்தான் சுய்யாங், நீ சுள்ளான்ங்”, சே, என்ன சனியனோ? சரியான நேரத்தில் அது இப்போது மறந்துபோய் விட்டது.

உபயகுசலோபரி இருக்கட்டும், ’சிப்ஸ் வேண்டும்’ என்பதை எப்படி ஜாடையில் சொல்வது? உருளைக்கிழங்கு மாதிரி கை முஷ்டியை மடக்கிக்காட்டித் தரையில் தோண்டி, அங்கிருந்த இரும்பு வாணலியில் வறுப்பது மாதிரி வறுத்து, ‘அபுக்கா அபுக்கா’ என்று வாய்க்குள் போட்டுத் திணித்துக்கொள்வது மாதிரி ஜாடையில் நடித்துக் காட்டினேன்.

“சே, இதுதானே, சிம்பிள்! இதற்கு ஏன் இவ்வளவு அதீத நடிப்பை மெண்டலாய்க் கொட்டுகிறாய்? நீ என்ன விக்ரமா?” என்று தரதரவென்று என் கையைப் பிடித்து இழுத்துச்சென்று அந்த சிப்பந்திகள் காட்டிய இடத்தில் பன்றி நகக்கணுக்கள், கோட்டான் காது, வௌவால் பிருஷ்டமுடி என்று என்னென்ன கண்றாவிகளோ இருக்க, நான் பலவந்தமாக என் கையை விடுவித்துக்கொண்டு கடையின் இன்னொரு மூலைக்கு வேகமாக ஓடி அங்கே கண்ட சிப்பந்திகளிடன் என் ஓரங்க நடிப்பு / ஜாடை / ‘அபுக்கா அபுக்கா’வைத் தொடர்ந்தேன்.

ஏழெட்டு சிப்பந்திகள், அசிஸ்டெண்ட் மேனேஜர், ஜி எம், எல்லோருமே தத்தம் வேலைகளை அப்படியே விட்டுவிட்டு என் கைதேர்ந்த நடிப்பைக் காண ஓடி வந்துவிட்டார்கள். ஒரு பயலுக்கும் ‘பொடாடோ’, ‘சிப்ஸ்’, வறுவல், முறுகல், வாணலி, பாக்கெட், உறைப்பு, உப்பு, ஹாட்சிப்ஸ் என்று எந்தப் பதமும் புரியவில்லை. நானும் இதை அவ்வளவு இலேசாக விடுவதாக இல்லை.

உருளைக்கிழங்குச் செடியின் பாகங்கள், அதற்கு ‘சொய்’யென்று நீரூற்றுதல், அது பூ பூப்பது, காலங்கள் மாறுவது, கொடியாகிச் செடியாகிப் பின் பூமிக்குள்ளே மண்ணுக்கடியில் அது காய்ப்பது, அதைப்பறித்து சீராக அதன்மேல் ஒட்டியிருக்கும் களிமண்போகக் கழுவுவது, அங்கேயிருந்த ஒரு கத்தியைக் கையிலெடுத்து அதைப் பதமாக ‘சரக் சரக்’கென்று சீவுவது, மேற்சொன்ன எண்ணெய் வாணலியில் ’பாமாயில்’ ஊற்றிப் பொறிப்பது, அப்போது வரும் ‘சொய்ங்ங்’ இன்ப நாதம், பிறகு அதை அப்படியே பொன்முறுவலாக எடுத்து, மேலே கொஞ்சமாக மிளகுப்பொடி, உப்பு தூவி ... என் நடிப்பைக் காண இப்போது கடைக்கு வந்திருந்த அத்தனை பேருமே அங்கே கூடி விட்டார்கள்.

க்ளோஸ்டு சர்க்யூட் டீவியில் என்னை நானே பார்க்க முடிந்தது. என்னைச் சுற்றி செம கூட்டம். எனக்கும் ஏகப்பட்ட குஷி. மோனோ ஆக்டிங்கைக் கொஞ்சம் ஹை கியரில் போட்டேன்.

இந்த வர்ஷனில் மெஷினால் உருளை நடுவது, ஆட்டோமேடிக் வாட்டர் ஸ்ப்ரிங்க்ளரால் தோட்டத்தில் நீர் பாய்ச்சுவது, எலெக்ட்ரிக் பொடாடோ கட்டரால் வெட்டுவது, எலெக்ட்ரிக் ஓவனில் பொரிப்பது, பேக்கேஜிங் மெஷின், அதன் ’திடும் திடும்’ சத்தம், ’சர்ர்ரக்’ கட்டிங் சவுண்ட், ஆங்காங்கே கொஞ்சம் பிஜிஎம் எல்லாமே சேர்த்துக்கொண்டேன். ஜி.வி. பிரகாஷ் மாதிரி காப்பியெல்லாம் அடிக்கவில்லை. அனைத்தும் என் சொந்தச் சரக்கே. எல்லோரும் என்னை உற்சாகமாக ஊக்குவிக்கிறார்கள் என்று நினைத்து நான் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன்.

கத்தி, கபடா, வாணலி, இலுப்பக்கரண்டி எல்லாவற்றையும் ’சடார் சடாரெ’ன்று நான் ஸ்பீடாகக் கையிலெடுத்துக் கையாண்ட வேகம், காஸ் அடுப்பு கொளுத்திய லாகவம், என் ‘சொய்ங்ங்’ செய்முறை சத்தம் எல்லாம் சேர்ந்து அவர்களுக்கு பயம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். செக்யூரிட்டி ஆட்கள் அங்கே அவசரமாக வரவழைக்கப்படுவதை டீவியில் பார்த்தேன்.

நிலைமை கட்டுக்கடங்காமல் போவது தெரிந்தது. கை, கால்களில் விலங்கு மாட்டி அதலபாதாள சீனச்சிறைக்கு இழுத்துச் செல்லப்படுவதற்குள் எப்படியாவது அங்கேயிருந்து ‘எஸ்’ஸாவது மிக அவசியம் என்று என் அந்தராத்மா எச்சரித்தது. ஏற்கனவே சீனாக்காரனுக்கும் இந்தியனுக்கும் ஆகாது. ஆர்மியையும் கூப்பிட்டிருப்பார்களோ? ‘இந்திய ஒற்றன் சூப்பர் மார்கெட்டில் அணுகுண்டு வைக்கும்போது பிடிபட்டான்” என்று ஏதாவது செய்தி போட்டுவிட்டால்?

ட்விட்டரில் சோனியாவையும் மண்ணுமோகனையும் கன்னாபின்னாவென்று ட்விட்டிக் கொண்டிருப்பதால் அவர்கள் உதவிக்கு வரமாட்டார்கள். அந்த ராவுல் பையனும் என்னை ‘இந்தியாவில் வளர்ந்த அமெரிக்க ஒற்றன்’ என்று சர்ட்டிஃபிகேட்டே கொடுத்துவிடுவான். ஒபாமா உதவிக்கு வரலாம். ஆனால் பொருளாதாரப் பிரச்னையே அவருக்கு தலைக்குமேல். தொண்டனுக்கு உதவவேண்டும் என்று “We can do" என்றெல்லாம் அழகாக ஸ்டேட்மெண்ட் விடுவார், ஆனால் எதையுமே செய்யமாட்டார்.

ஏற்கனவே நம் இந்திய வெளியமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா ஒரு அரை லூசுக் கிழம். எந்த மீட்டிங் போனாலும் தப்புத்தப்பாக யார் பேப்பரையெல்லாமோ எடுத்து என்னென்னவோ படிக்கிறது, பார்லிமெண்டில் தினமும் எதையோ பெனாத்தித் தொலைக்கிறது. ஏதோ குத்து ரம்யா பேத்திக்குட்டி அழகாக இருக்கிறாளே என்கிற ஒரே காரணத்துக்காக அந்த அம்னீஷியா கிழத்தை ...வேண்டாம், அவர் கதையா இங்கே முக்கியம்? நான் உயிர் தப்பிப்பதே மிக அவசியம்.

Photobucket

“வேண்டாம், வேண்டாம், எனக்கு சிப்ஸே பிடிக்காது, உருளைக்கிழங்கு ஒழிக, வறுவல் ஒழிக, அமெரிக்க Lay's கம்பெனியும் சேர்ந்தே ஒழிக” என்று நான் கோஷம் போட்டுக்கொண்டு கடையை விட்டே சடுதியில் வெளியேறினேன்.

சீனப்படையும் வெற்றிகரமாக வாபஸ் வாங்கப்பட்டது.

மறுபடியும் ஹோட்டல் ரூம். சிப்ஸ் கறைபடாத என் சட்டையையும், மெல்லாத என் வாயையும், வெற்றிக்கனி இல்லாத என் வெற்றுக்கையையும் என் மனைவி கவனிக்கத் தவறவில்லை.

“மனுஷன் சாப்பிடுவானா உருளைக்கிழங்கு சிப்ஸெல்லாம்? அதையெல்லாம் சாப்பிட்டால் வாயுத்தொந்தரவு, உப்புசம், மலச்சிக்கல், ஏப்பம், அஜீரணம், தலைவலி எல்லாமே வரும் தெரியுமா, அந்த உப்பு எக்கச்சக்கமா கரிக்கும், ப்ளட் ப்ரஷர் வரும்” என்று நான் சமாளிக்க ஆரம்பித்தேன்.

“சே, அப்படியென்ன ஒரு மனுஷனுக்கு நாக்கு நீளம்? சிப்ஸ் சாப்பிடாட்டா செத்தா போய்டுவீங்க?” என்ற சஹஸ்ரநாமாவளி வேறு. கன்னாபின்னா ராகம், கடுப்பு தாளம்.

நான் வாழ்க்கையே வெறுத்துப்போய்விட்டேன். கேவலம், தம்மாத்துண்டு சிப்ஸ் சாப்பிடலாமென்ற சாதாரண மனித ஆசை எப்படியெல்லாம் என்னை அலைக்கழித்து விட்டது?

விரக்தியே மனதில் மேலோங்கியது.

புஷ்பேஷு ஜாதீ
புருஷேஷு விஷ்ணு
நாரீஷு ரம்பா
நகரேஷு காஞ்சி

என்று காளிதாசனோ, பாரவியோ பாடியதில் “சிப்சேஷு பாம்பிங், பாம்பேஷு பெய்ஜிங்” என்று வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளட்டும். பாம்பு சிப்ஸை சீனர்களே தின்று தொலைக்கட்டும்.

எனக்குப் பிடிக்காதைய்யா உருளைக்கிழங்கு சிப்ஸ், சே! மனுஷன் சாப்பிடுவானா அதையெல்லாம் என்றுதான் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுகிற பழக்கத்தை பெய்ஜிங்கிலேயே நான் விட்டுவிட்டேன்.

(தொடரும்)




Monday, August 08, 2011

கொழிக்கிறது சைனா! 7

நேற்றுவரை மலை, காடு, மேடு, குட்டிச்சுவர், சுற்றுச்சுவர் என்றெல்லாம் வெயிலில் அலைந்து திரிந்தாகிவிட்டது. நல்ல கால் வலி!

”இன்று காலை Temple of Heaven போகப்போகிறோம், மாலையில் 2008 ஒலிம்பிக்ஸ் நடந்த இடத்தைப் பார்வையிடுகிறோம், பிறகு Summer Palace, ஒரு போட் ரைட், பிறகு ...” என்று அடுக்கிக்கொண்டே போனான் கைடு.

அதென்ன Temple of Heaven?

ஒவ்வொரு குளிர்கால சங்கராந்தியின்போதும், அதாவது Winter Solstice, டிசம்பர் 21 வாக்கில், நாம் முன்னரே சொன்ன ‘க்விங்’ மற்றும் ‘மிங்’ பேரரசர்கள் இந்தக் கோவிலுக்கு ‘சுத்த பத்தமாக’ வருகை புரிந்து பூஜைகள், யாகங்களில் பலி எல்லாம் நடத்துவார்களாம்.

அதென்னய்யா ‘சுத்த பத்தம்’ என்று விசாரித்தேன்.

டிசம்பர் குளிராக இருந்தாலும் பரவாயில்லை என்று அரசர்கள் அங்கே கோவிலுக்கு வந்து வெளியே டெண்ட் அடித்து, அந்தப்புரப் பெண்களின் அணைப்பில்லாமல், குடி, கூத்து எதுவும் இல்லாமல் ‘மடி’யாக 3 நாட்கள் தங்குவார்களாம். சீன மத குருமார்களின் சொல்படி பூஜைகள், ஆடு, மாடு பலிகள் எல்லாம் நடக்குமாம். பெரிய வட்டவடிவமான பலிபீடம் இன்றும் அங்கே இருக்கிறது. நட்டநடுவில் சிவப்புக் கறை தெரிகிறது. தெறித்த ரத்தம் ஓடி வழிய வழி செய்திருக்கிறார்கள். ரத்தப் பொறியல் எல்லாம் உண்டா என்று நான் கேட்கவில்லை. இல்லாமலா இருந்திருக்கப்போகிறது? குடல் மசியல் என்று ஏதாவது மெனு சொல்வார்கள். எனக்கு இது தேவையா?!

அந்தக் கோவிலின் விசேஷ அம்சங்கள் சிலவும் பார்த்தோம். கோவிலென்றால் உள்ளே ‘உம்மாச்சி’ சிலை எல்லாம் கிடையாது. பூஜை மணியோ, விசேஷமான பூஜை உபகரணங்களோ தென்படவில்லை. ஆனால் அலங்கரிக்கப்பட்ட மேடை இருக்கிறது. தூண்களிலெல்லாம் தங்க நகாசு வேலைப்பாடு, மஞ்சள் சீலைகள். சீன மதகுருமார்கள் அங்கே உள்ளே உட்கார்ந்து மந்திர பரிபாலனம் பண்ணியிருக்கலாம்.

Photobucket

வெளியே ‘Hall of Prayer of Good Fortunes' இருக்கிறது. சீன வாஸ்துப்படி, அந்த இடத்தில்தான் சொர்க்கமும் பூமியும் ஒன்றாகக் கலக்கின்றனவாம். கி.பி. 1420ல் கட்டப்பட்ட பிரம்மாண்டமான அந்த 120 அடி மர ஹாலில் நான்கு சீஸன்களையும் குறிக்க நான்கு பெரிய தூண்கள், 12 மாதங்களையும், ஒரு நாளின் 24 மணி நேரங்களையும் குறிப்பால் உணர்த்த சின்னச்சின்ன தூண்கள், வெள்ளைப் பளிங்கினால் ஆன படிக்கட்டுகள், நீலவானக் கலரில் கூரை எல்லாமே அழகாக இருக்கிறது.

பல நூற்றாண்டுகளாக உலகத்தின் நிறம் சிவப்பு, சொர்க்கத்தின் கலர் நீலம் என்று சீனர்கள் திடமாக நம்பினார்கள். சென்ற நூற்றாண்டில் ஸர் சி. வி. ராமன் என்கிற ஒரு அய்யர் வந்து ”அதெல்லாம் சுத்த அபத்தம்டா அபிஷ்டுகளா, ஆகாயம் நீலமென்பதே மகாமாயம் இல்லியோ” என்றெல்லாம் சொல்லி, Raman Effect ப்ரூஃப் காட்டி, ஒரு நோபல் பரிசும் வாங்கிக்கொண்டு போனபின்னர்தான் இந்தியாவின் மீது சீனப் படையெடுப்பு நிகழ்ந்தது என்பது காண்க.

Photobucket

Photobucket

சீனர்களுக்கு இரும்பின் மீது ஏதோ கடுப்பென்று நினைக்கிறேன். அவ்வளவு பெரிய கட்டிடத்தில் ஒரு ஆணி கூடக்கிடையாது. உங்கள் புது வீட்டை நீங்கள் துணிந்து ஒரு சீனனுக்கு எப்போது வேண்டுமானாலும் வாடகைக்குக் கொடுக்கலாம். கிச்சனில் வேண்டுமானால் செத்த பாம்பு நாத்தம் அடிக்குமேதவிர, சுவற்றில் ஒரு ஆணி அடித்துக் காலண்டர் மாட்டிவிடமாட்டான். அதற்கு நான் கேரண்டி. ஆணி என்றால் சீனனுக்கு அலர்ஜி.

2008 ஒலிம்பிக்ஸ் மறக்கமுடியாத ஒரு வைபவம். சீனர்களால் ஒலிம்பிக்ஸெல்லாம் ஒழுங்காக நடத்தமுடியாது என்று அமெரிக்காவும் ஏனைய மேற்கத்திய மீடியாக்களும் தினமும் கொக்கரித்து வேப்பிலை அடித்ததை என்னால் மறக்கமுடியவில்லை. “பத்து மாதம்தான் இருக்கிறது. இன்னமும் அவர்கள் ரோடு போட்டு முடிக்கவில்லை, பாலம் கட்டவில்லை, பாத்ரூம் இல்லை. ரயிலெல்லாம் ஓடுமா? தண்டவாளங்கள் எங்கே?” என்றெல்லாம் அமெரிக்க மீடியா தினமும் கொக்கரிக்காத நாளில்லை.

ஆனால் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட முகூர்த்தத்தில், “ததேவ லக்னம் சுதினம் ததேவா, தாராபலம் சந்த்ரபலம் ததேவா” என்ற பிள்ளையார் மந்திரத்துடன் சைனா அட்டகாசமாக ஒலிம்பிக்ஸை ’ஓஹோ’ என்று ஆரம்பித்து, நடத்தி முடித்ததும் உலக மீடியாக்கள் வாய் பிளந்ததும் மறக்கமுடியாத சரித்திர நிகழ்ச்சிகள்.

அவர்களென்ன இந்தியர்களா அல்லது ஒலிம்பிக்ஸ் தானென்ன காமன்வெல்த் கேம்ஸா? ”அடாடா, எவ்வளவு பெரிய சான்ஸ்! சீனாவில் நான் பிறக்காமல் போய்விட்டேனே” என்று கல்மாடி இன்றும் திஹாரில் கேவிக்கேவி அழாத நாளில்லையாம்.

’பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் சூப்பர்’ என்றவுடனே 180 டிகிரி அபௌட் டர்ன் அடித்து, சீனர்களின் நிர்வாகத் திறனை, கட்டிடக்கலை நிபுணத்துவத்தை, கட்டுப்பாட்டை, தேசீய வீரியத்தை அமெரிக்க மீடியாக்கள் வானளாவப் புகழவும் தவறவில்லை.

அப்படிப்பட்ட புகழ்பெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நிகழ்ந்த இடங்களைப் பார்வையிடச் சென்றோம். ஒரு பத்து இருபது கோடி சீன டூரிஸ்ட்களும் எங்களோடு சேர்ந்துகொண்டார்கள்.

போகும் வழியில், அதிமேதாவித்தனமான IBM கட்டிடத்தையும் பார்த்தோம்.

Photobucket

பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் நடந்த மெயின் ஸ்டேடியத்தை வெளியிலிருந்து பார்த்தால் ஒரு மிகப்பெரிய பறவைக்கூடு மாதிரி இருக்கிறது. ‘Bird Nest' என்று சீன மீடியாவே கிண்டல் செய்கிறதாம்.

Photobucket

”நாமும் உசேன் போல்ட் மாதிரி 100 மீட்டர்ஸ் ஓடிப் பார்க்கலாம் அல்லது மார்க் ஃபெல்ஃப்ஸின் ரெகார்டை நீந்தி முறியடிக்கலாம்” என்றால் எல்லாவற்றையும் பூட்டு போட்டு கதவைச் இறுக சாத்தி வைத்திருக்கிறார்கள். பிரபலமான பொது இடமாயிற்றே, அங்கே எவனாவது ‘சீன ஜனநாயகப் பிரகடனம்’ பண்ணிவிடாமல் இருக்க ஆங்காங்கே போலீஸ் தலைகள் தென்படாமல் இல்லை.

சைனாவின் மிகச்சிறந்த பாத்ரூம்களை அங்கே கண்டோம். அதெல்லாஞ்சரிதான், ஏன் சைனீஸ் பாத்ரூம்களில் எங்கேயுமே கண்ணாடியே கிடையாது? விருப்பமிருப்போர் இந்த விஷயத்தை சீன உளவியல் ஆராய்ச்சி செய்து பிஹெச்டியே வாங்கலாம்.

மறுபடியும் ஒரு லஞ்ச். வழக்கம்போல் நாய்க்குட்டி பால் குடிக்கும் தம்மாத்துண்டு சைட் ப்ளேட். இலேசான நிணநாற்றத்தோடு வேகவைத்த சில வெஜிடபிள்கள். நீத்தார் கவளம் மாதிரி ஒட்டியும் ஒட்டாமலும் சில சோற்றுருண்டைகள். கூஜாவில் தண்ணீர். தர்ப்பைப் புல் மாதிரி சாலட். பிதுர்பிதாமகர்களின் ஆத்மசாந்திக்காக ஹோட்டலிலேயே நான் எழுந்து ‘கா கா கா’ என்று கத்தி காகத்தைக் கூப்பிட நினைத்தேன். மட்டமான ‘வீக்’ பியரானாலும் எக்ஸ்ட்ராவாக ஒரு பியர் எனக்கு விசேஷமாகக் கொடுக்கப்பட்டதால் சும்மா இருந்து தாகசாந்தியானேன்.

சாப்பிட்டபிறகு ‘லைட்’டாக ஒரு பார்க் பக்கமாகச் சென்றோம். பார்க் என்றால் குப்பை, கூளமேதும் இல்லாமல் ‘பளிச்’ ரகம். அங்கே பல முதியவர்கள் அட்டகாசமாக ஹ்ரிதிக் ரோஷன் போஸெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஜர்தா பீடாவைப் போட்டுக் குதப்பித்துப்பி நம் ஸோகால்டு பார்க்களில் நாம் நாஸ்தி பண்ணுவதையும், கஞ்சா கேஸ்கள் அங்கே கவுந்தடித்துப் படுத்திருப்பதுவும் என் நினைவில் வர, வழக்கம்போல் என் காதுகளில் புகை. அப்புறம் கொஞ்சம் கூலாகி யோசித்ததில் இதெல்லாமே ஒரு செட்டப்பு மாமு!’ என்கிற உண்மை என்னைச் சுட்டது. இருந்தாலும் வெற்று சீரியல்களில் மூழ்கிக் கிடக்காமல் அந்தக் கிழவர்கள் ஜிம்னாஸ்டிக்சில் வெளுத்துக் கட்டிக்கொண்டிருப்பது பார்க்கவே ஆனந்தமாக இருந்தது.

Photobucket

”பாலும் தெளிதேனும் பாகும் பருப்புவிமை நான்கும் கலந்து ..” நாம் முத்தமிழ் வித்தகத்தை வேண்டிக்கொண்டிருக்கையில் சீனர்கள் “பாம்பும் நெளிதேளும் பீஃபும் நத்தையும் கலந்துனக்கு நான் தருவேன், கங்குக் கனல்முகத்து டிராகனே, ஜிம்னாஸ்டிக்ஸ் மட்டுமே தா” என்று அவர்கள் தங்கள் சீனத்துக் கடவுளிடம் வேண்டியதாகவே எனக்குத் தோன்றியது!

Photobucket

அம்மாவுக்கு மட்டும்தான் ’குளுகுளு’ கொடநாட்டில் பங்களா, ஹைதராபாத்தில் திராட்சைத்தோட்டங்கள் என்றெல்லாம் இல்லை. அந்தக் காலத்திலும் சீன சக்ரவர்த்தி(னி)கள் சம்மர் பேலஸ், விண்டர் பேலஸ் என்று பொளந்து கட்டி இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு சம்மர் பேலசுக்குத்தான் இப்போது போய்க்கொண்டிருக்கிறோம். பெய்ஜிங்கில் வெயில் கும்பகோணத்து மே மாதக் காட்டுவெயிலுக்கு சற்றும் குறையாத சூட்டுப்பட்டறை என்று முன்னமேயே சொல்லி இருந்தேன் அல்லவா?

Photobucket

அப்படிப்பட்ட வெயில் காலத்தில் பவர்கட்டில் அவஸ்தைப்பட்டுக்கொண்டு, கிழிசல் பனை விசிறியைக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு, ஆற்காட்டாரைத் திட்டிக்கொண்டு அவஸ்தைப்பட, வியர்வைக்குளியல் போட்டு நாற, சாம்ராஜ்யாதிபதிகள் என்ன சாமான்னியர்களா?

“ஊருக்கு வெளியால கட்றா ஒரு ‘லேக்’கு! வுட்ரா அதுல தண்ணிய” என்று உத்தரவு போட்டு ஒரு செயற்கை ஏரியே உருவாக்கப்பட்டிருந்தது.

வெயில் தலைக்கெறி விட்டால் போதும், உடனே ஒரு அரசாணை பறக்கும்: “எட்றா வண்டிய, வுட்ரா லேக்குக்கு’தான்.

அந்த ஏரியைச் சுற்றி தாமரைத் தடாகங்கள். இயக்குனர் இமயம் ’அலைகள் ஓய்வதில்லை 2’வுக்கு ’ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாட்டு ஷூட் செய்ய பெய்ஜிங்குக்கு தாராளமாகச் செல்லலாம். ஊரெங்கும் தாமரைக் குளங்கள். மகாவிஷ்ணுவைத்தான் எங்கேயும் பார்க்கமுடியவில்லையே தவிர, தாமரைத் தண்டு பொறியல், தாமரைக் கிழங்கு வறுவல் என்று சீனச் சமையலிலும் தாமரை இல்லாத இடம் இல்லை.

Photobucket

Photobucket

ஏரியின் ஒரு கரையில் பிரம்மாண்டமான பளிங்கினாலான பெரிய ஓடம். வெள்ளைப் பளிங்கு ஓடம். ஓடம் எப்படி மிதக்கும் என்கிறீர்களா? இந்த ஓடமும் மிதப்பதில்லை. ஒரு கரையில் தரைதட்டித்தான் நிற்கிறது இந்த அலங்கார ‘போட்’

Photobucket

மாலை நேரங்களில் அம்மா, மன்னிக்கவும், சீன சக்ரவர்த்தினிகள் அங்கே உட்கார்ந்து டீ குடித்தபடி அமைச்சர்களைத் தூக்கியடித்து, சே, என்ன ஆயிற்று இன்று என் தமிழுக்கு? அமைச்சர்களோடு கோலோச்சியபடி தர்பார் நடத்துவார்களாம். அவர்களை சந்தோஷப்படுத்துவதற்காக காகித ஓடங்கள் மாதிரி சின்னச்சின்ன ஓடங்களில் சீனக் கப்பற்படை வீர தீர விளையாட்டுகள் நிகழ்த்துமாம். ”ஆஹா, மாதம் மும்மாரி பெய்கிறதே, பேஷ், பேஷ்!” என்று எல்லோரும் அகமகிழ்வார்களாம்.

பிறிதொரு காலத்தில் ஜப்பானிய கடற்படை சீனக் கப்பற்படையை ரவுண்டு கட்டித் துரத்தித் துரத்தி அடித்தபோதுதான் சீனர்கள் கப்பல் என்றால் என்ன, கப்பற்படை என்றால் என்ன என்று புரிந்துகொண்டார்களாம்.

இன்றைய சைனா தன் கப்பற்படையை வலிமையாக்கிக்கொள்ள எக்கச்சக்கமாக செலவழிக்கிறது. பார்க்க!

Photobucket

(தொடரும்)





Wednesday, August 03, 2011

கொழிக்கிறது சைனா! 6

சரி, வெறும் சுவருக்கு இத்தனை கூட்டமா? என்றுதான் முதலில் நினைத்தேன்.

நான் ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ பார்த்திருக்கிறேன். காலேஜ் வாசலில் எங்கள் ஃபேவரைட் குட்டிச்சுவரில் அமர்ந்தபடி நண்பர்களுடன் எங்களுக்காகவே அங்கே உலா வரும் தமன்னாக்களை, தீபிகாக்களை நோட்டம் விட்டிருக்கிறேன். அதையெல்லாம் விட சமீபகாலத்தில் என்னை மிகவும் இம்ப்ரஸ் செய்த சுவர் சென்னை ‘போட் கிளப்’ ஏரியாவில் கலாநிதி அண்ட் பிரதர் அந்த ஏரியாவையே வளைத்துப்போட்டு எழுப்பியிருக்கும் மாபெரும் காம்பௌண்ட் சுவரே. அதைவிடப் பெரியதா இன்னொரு காம்பவுண்ட் சுவர் என்கிற அசுவாரசியம் எனக்கு முதலில் இருந்தது உண்மை.

ஆனால், பஸ் ஜன்னல்வழியே தூரத்திலிருந்து பார்த்ததுமே எனக்கு அந்தச் சீனப்பெருஞ்சுவர் பிடித்துப்போயிற்று.

அடாடா! சீனப் பெருஞ்சுவர் பிரம்மாண்டத்தின் உச்சகட்டம், ஒரு பழம் கலாசாரத்தின் அழிவிலா அடையாளம்.

இந்தியாவின் கலாசார, அழகுச்சின்னம் என்னவென்றால் தாஜ்மஹால், மதுரை மீனாட்சியம்மன் கோவில், அஜந்தா, எல்லோரா சிற்பங்கள் என்று எக்கச்சக்கமாக சொல்லிக்கொண்டே போகலாம். அமெரிக்காவைப் பொருத்தவரை சுதந்திரதேவி சிலை, நயாகரா நீர்வீழ்ச்சி, கிராண்ட் கேன்யன் என்று அடுக்கிக்கொண்டு போகலாம்.

சீனாவைப் பொருத்தவரை எல்லாமே அந்த சீனப் பெருஞ்சுவர் என்றுதான் தோன்றுகிறது. சீனப் பெருஞ்சுவரைப் பார்ப்பதற்காகவே வெளிநாட்டு, உள்நாட்டு டூரிஸ்ட்கள் அங்கே குவிகிறார்கள்.

நாட்டின் வடக்கு எல்லையில் மலை முகடுகளில் இந்தச் சுவர் வளைந்து நெளிந்து ஏறி இறங்கிச் செல்வதால், இதை முதலில் சென்று அடைவதற்கே, ஒரு ‘வின்ச்’ மூலம் மேலே, மலை உச்சிக்குப் போகவேண்டி இருக்கிறது. ஸ்விஸ் ஆல்ப்ஸ் மலையில், கொடைக்கானலில், பழனி மலையில் எல்லாம் இருக்குமே, அதைப்போல. ஒவ்வொரு சின்ன gondola பெட்டிக்குள்ளும் நான்கு பேர் உட்காரலாம். எல்லாமே ஆட்டோமேடிக்தான் என்றாலும் அடிவாரத்திலும் மலை உச்சியிலும் அதன் ஒழுங்கான இயக்கத்தைக் கண்காணிக்க ஆட்கள் போட்டிருக்கிறார்கள்.

Photobucket

சுவர் என்று சொல்வதைவிட அதை ஒரு சுற்றுப்பாதை என்றே சொல்லவேண்டும். அதன் அகல, உயர கனபரிமாணங்கள் ஆங்காங்கே மாறிக்கொண்டே சென்றாலும் அதில் ஒரு ஒழுங்கு தெரிகிறது. கிட்டத்தட்ட 25 அடி அகலப்பாதை. பல இடங்களில் 15 முதல் 20 அடி உயரம். ஆங்காங்கே காவல் மேடைகள். அங்கே இருந்தபடி காவலாளிகள் கீழே நடப்பதை நோட்டமிடலாம், அம்பு விடலாம். நாட்கணக்கில் கூட அங்கே தங்கிக் கொள்ளலாம்.

சீனாவின் கிழக்கே Shanhaiguan என்ற இடத்திலிருந்து மேற்கே Lop Lake வரை. அதாவது சைனாவுக்கு மேற்கே இருக்கும் மங்கோலியாவின் தெற்கு பார்டர் இதுவே. பல கிளைகளுடன் இந்தச்சுவர் 5,500 மைல் நீளம் பரவி இருக்கிறதாம். சில இடங்களில் பள்ளத்தாக்குகளும், ஆழமான ஆருகளும், இயற்கையாகவே அமைந்த மலை முகடுகளும் இதில் அடக்கம்.

Photobucket

சாதாரணமாக ஒரு கிரௌண்ட் ப்ளாட்டுக்கு காம்பவுண்ட் கட்டுவதற்கே நமக்கு மூச்சு திணறிப்போய் விடுகிறது. யார்தான் இதையெல்லாம் கட்டி, எப்படி முடித்தார்கள்?

சைனாவின் மங்கோலிய வட எல்லை பயங்கரமான குளிர் பிரதேசம். வருடத்தில் ஆறு மாதங்களுக்கு மட்டுமே வேலைசெய்யமுடியும், கிறிஸ்து பிறப்பதற்கு எட்டு நூற்றாண்டுகள் முன்னரே அவர்கள் இந்த சீனச் சுற்றுச்சுவர் வேலைகளை ஆரம்பித்து விட்டார்கள் என்பது பிரமிப்பூட்டும் செய்தி.

Photobucket

அதாவது, செங்கல் எப்படிச் செய்வது என்கின்ற வரைமுறை அப்போது தெரியாது. சுண்ணாம்புக் காளவாய்கள் கிடையாது. ஆங்காங்கே கிடைத்த பாறைகளை உடைத்தும், மண்ணை நன்றாக இடித்துப்பொடியாக்கிக் கிடித்தும் இந்தச் சுவர் கட்டப்பட்டிருக்கிறது. சிமெண்ட் கிடையாது, ஜல்லி கிடையாது, சுண்ணாம்பு கிடையாது. உலோக, உபகரண வசதிகள் கிடையாது. வெறும் கைகளாலேயே இப்படிக் கட்டி இருக்கிறார்கள் என்பது தெரியவரும்போது நம் பிரமிப்பு சீனர்களின் உழைப்பின் மேல் மிகுந்த மரியாதையை உண்டாக்குகிறது.

கி.மு. 221ல் Qin Shi Huang என்கிற முதலாம் சீன சக்ரவர்த்திதான் அப்போதிருந்த மாநிலங்களின் சின்னச்சின்ன வெளிச்சுவர்களை எல்லாம் ஒருங்கிணைத்தாராம். அந்த புராதனச் சுவர்கள் காலப்போக்கில் மண்மேடாக மாறி அழிந்துவிட்டனவாம்.

Photobucket

கி.பி. 14ம் நூற்றாண்டில் ‘மிங்’ சக்ரவர்த்திகள் மறுபடியும் இந்த சுற்றுச்சுவர் வேலைகளை இன்னமும் ஜரூராக ஆரம்பித்திருக்கிறார்கள். இடைப்பட்ட சில நூற்றாண்டுகளில் சீனர்கள் செங்கல் பண்ணுகிற விதம், பாறைகளைப் பிளந்து உடைத்து ஜல்லி, சின்னச் சின்ன கற்கள் செய்யும் விதம் எல்லாவற்றையும் அறிந்து கொண்டார்கள். எனவே, இந்தப் புதிய சுவர் கட்டுகிற பணி தீவிரமாக முடுக்கிவிடப்பட்டு, கிட்டத்தட்ட 3000 மைல்களுக்குமேல் இது முடிக்கப்பட்டிருக்கிறது.

மிகவும் கரடுமுரடான, மரங்கள் நிறைந்த, வனவிலங்குகள் இருந்த காட்டுப் பிரதேசம், எந்தவிதமான ரோடு வசதிகளும் கிடையாது. இந்த வேலைகளில் ஈடுபட்டு அந்த மதில்சுவற்றிலேயே உயிர் நீத்தவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் என்பது ஒரு பெரிய சோகம். ‘வின்ச்’சில் செல்லும்போது நாம் கீழே பார்த்தாலேயே குலைநடுங்குகிறது.

Photobucket

ஆனால் ஒரு வழியாக மங்கோலியாவை சீனா ‘ஸ்வாஹா’ பண்ணி அதையும் சீன சாம்ராஜ்யத்தின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தபிறகு, இந்த சுற்றுச்சுவர் வேலைகள் கொஞ்சம் மந்தகதியில்தான் நடந்திருக்கின்றன. ஆனாம் இப்போதைய சீன அரசு பல புனர்நிர்மாண வேலைகளை துரித கதியில் முடுக்கி விட்டிருக்கிறது.

கண்ணுக்கெட்டாமல் புதைந்தும், காடுகளில் மறைந்தும் கிடந்த பல இடங்களை இன்னமும் சீனர்கள் கண்டுபிடித்து இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது வியப்பூட்டும் செய்தி. இன்னமும் பல இடங்களில் பின்தங்கிய சீன கிராமத்தவர்கள் இந்த சுவரை இடித்தும் உடைத்தும் கற்களை எடுத்துக்கொண்டுபோய் வீடு கட்டிக்கொள்கிறார்களாம். அரசாங்கம் அதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறது.

Photobucket

பல இடங்களில் இந்த சுற்றுச்சுவரின் அகல நீளங்கள் மாறினாலும், அந்த சுவற்றின் மீது குதிரைகள், காலாட்படைகள் நடந்துசெல்ல வசதியாகவே கட்டி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 20 அடிக்குக் குறையாத அகலம். ஆங்காங்கே ஏறி இறங்க படிக்கட்டுகள் இருந்தாலும் காலப்போக்கில் வெயில், பனி, மழை என்று இயற்கைச் சீற்றங்களில் பல இடங்களும் உடைந்தும் பெயர்ந்தும் நம்மை பயமுறுத்துகின்றன.

Photobucket

இவ்வளவு தூரம் வந்துவிட்டு இந்த சாதாரண சிரமங்களைப் பொருட்படுத்த முடியுமா? ‘ஜீன்ஸ்’ படத்தில் ‘அதிசயமே அசந்துபோகும் அதிசயம்’ அங்கே நடனம் ஆடிய புண்ணியபூமி அல்லவா? அலுப்பெல்லாம் பார்க்கமுடியுமா? நாங்களும் பாறையைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டோம். கொஞ்சம் வீராவேசமாக அந்த மதில் மேல் பூனையாக ஜாக்கிரதையாகச் சுற்றினோம். சமதளம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்கு நடக்கினும் வலி, வியர்வை, சுளுக்கே.

”அதோ அந்தப் பறவை போல ...” என்று எம்ஜிஆர்த்தனமாக கைடு வேகவேகமாக நடக்க நாங்களும் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியபடி தொடர்ந்தோம் அல்லது தொடர முனைந்தோம். மாதாமாதம் பலப்பல டூரிஸ்ட்களுடன் அங்கே வாக்கிங் போவதால் ஜார்ஜ் அநாயாசமாக முன்னேறினான். அங்கேயிருந்து எங்கு நோக்கினும் பிரமாதமான வியூ என்பதால் காமெராக்கள் ‘கிளிக்’கிட்டபடியே இருந்தன.

சீனப் பெரும் சுவரைப் பார்க்கும்போது ஆதி காலத்திலிருந்தே சீனர்களின் ‘பூமி தாகம்’ நன்றாக புலப்படுகிறது. 1950களில் ஜவஹர்லால் நேருவின் 'பஞ்ச் ஷீல்’ அபத்தத்தால் சீனர்கள் தங்கள் பூமி தாகத்தைத் தணித்துக்கொள்ள அப்பாவி திபேத்தை அடித்து, அதன் தலைநகர் ‘லாஸா’வை ஒடுக்கி, ஆயிரக்கணக்கில் திபேத்தியர்களைக்கொன்று, மடாலயங்களை அழித்து, திபேத்தை உலையில் போட்டுக்கொண்டபோது நாம் எதுவும் செய்யாமல் கையைப் பிசைந்துகொண்டு நிற்கவேண்டியதாயிற்று. சுதந்திரம் வாங்கி ஏழெட்டு வருடங்கள்தான் ஆகி இருந்த நிலையில் நாம் சீனாவுடன் நல்லுறவு வேண்டி ‘ஹிந்தி-சீனி-பாய்-பாய்’ என்று வழிந்தோம், குழைந்தோம்.

ஆனால் திபேத்தைக் காக்க முடியாவிட்டாலும், தலாய்லாமாவுக்கு நாம் இடம்கொடுத்து ஆதரித்த கடுப்பில் சீனா உள்ளுக்குள் நறநறத்துக்கொண்டிருந்தது. நம் தோளில் கைபோட்டுக்கொண்டே நம் காலை வாருவதில் சீனர்கள் வல்லவர்கள். இமயமலை அடிவார எல்லைக்கோடுகளில் ஏதோ பிரச்னை என்று ஒரு லுல்லாயி காரணம் காட்டி, ஆனால் லடாக்கிலும், மக்மோகன் எல்லைக்கோட்டிலும் அக்டோபர் 20, 1962ல் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் சீனர்கள் இந்தியாமீது படை எடுத்தார்கள். இந்தியா இதைச் சற்றும் எதிரிபார்க்கவில்லை. கிழக்கில் டவாங்க், மேற்கே ரெஸாங் லா போன்ற சில இடங்களை நாம் இழந்தோம்.

14,000 அடி உயரத்திற்கு மேற்பட்ட பனிக்குளிர் போரில் நமக்கு எந்தவிதமான முன் அநுபவமுமோ அதற்கேற்ற உபகரணங்களோ உடைகளோ இல்லாத கொடுமையால் நாம் சீனர்களிடம் அடி வாங்கினோம். ”அதெல்லாம் வலிக்கவே இல்லை. சைனா ஆக்கிரமித்த பொட்டல் காடு ஒரு வேஸ்டான இடம், அங்கே not a blade of grass grew என்றெல்லாம் அசட்டுத்தனமாகப் பேசி அப்போது நம் ராணுவ மந்திரியாக இருந்த வி.கே. கிருஷணமேனனும் நேருவும் செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டனர். கிருஷ்ணமேனனின் ஆதரவாளரான நேருவுக்கும் சைனாவின் நம்பகமற்ற போக்கு சரியான நோஸ்கட்டாக அமைந்தது. பார்லிமெண்டில் ஏற்பட்ட அமளியில் கிருஷ்ணமேனன் பதவி விலகும்படி ஆயிற்று.

இதெல்லாம் பழங்கதையாக இருந்தாலும், இதிலிருந்து நாம் கற்ற, கற்றிருக்கவேண்டிய மிக முக்கியமான பாடம்: மிகப் பழங்காலந்தொட்டே சீனர்கள் நில ஆக்கிரமிப்புவாதிகள் என்பதே. வழக்கம்போல் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் வெள்ளைக்காரர்கள் இதையெல்லாம் தூபம் போட்டுக் கிளப்பிவிட்டு இந்தியா அடிவாங்குவதை வேடிக்கை பார்த்தார்கள் என்பதும் ஒரு உபபாடம்.

இன்றைக்கும் தன்னை அந்தப் பிராந்தியத்தின் மிகப்பெரிய ‘தாதா’வாக, வல்லரசாகப் பிரகடனம் பண்ணிக்கொள்ள சைனா செய்துவரும் ஆகாத்தியங்கள் மிகவும் பல:

எங்கேயோ இருக்கிற பிலிப்பைன்ஸை ஒட்டியுள்ள சின்னஞ்சிறு ஸ்ப்ராட்லிஸ் தீவுகளில் சைனா சொந்தம் கொண்டாடி அவர்களை வம்புக்கு இழுக்கிறது. இந்த வரைபடத்தைப் பார்த்தாலே சைனா எந்த அளவுக்குத் தன் கடல் ஆதிக்கத்தைப் பெருக்கி இருக்கிறது என்பது தெளிவாகும்!

Photobucket

ஆனால் நம் கச்சத்தீவைத் தாரை வார்த்துவிட்டு நாம் இப்போது தம்மாத்துண்டு இலங்கையிடம் மன்றாடுகின்றோம். என்ன ஒரு அவலம் ;-( இலங்கையிடமும் பாகிஸ்தானிடமும் சைனா வலியச்சென்று நட்பு பாராட்டுவதில் உட்காரணம் இல்லாமல் இல்லை. இந்தியா அசட்டையாக இருந்தால் நாம் சைனாவின் ஆதிக்கத்தால் சுற்றி வளைக்கப்படுவோம்.

இந்தக் கொடுமையை எல்லாம் நான் என் சக அமெரிக்க பயணிகளுக்கு அவ்வப்போது காமெடியாகவும் கொஞ்சம் சீரியசாகவும் எடுத்துரைத்தபோது, ஜார்ஜின் முகத்தில் புன்னகை எக்கச்சக்கம். பிரகாசமோ 10000 வாட்ஸ்!

“திபேத் எங்ளுதுதான்பா. சும்னாச்சிகும் அவனுங்க கொரலு வுட்டா நாங்க கம்னு கெடப்பமா? அதேங் மண்டயில ஒரு போடு போட்டம். இப்ப வாலச்சுருட்டிகிட்ட கெடக்கறானுவ. திபேத்து மலையுச்சி ‘லாஸா’வுல இருந்து மூணே மணி நேரத்துல கீழ டெல்லிங்கறது எங்குளுகு தெர்யாதாங்காட்டியும்! இது எம்மாம்பெர்ய மிலிட்டரி விசயம்” என்று அவன் கொக்கரித்தபோது என் ப்ளட் ப்ரஷர் எகிறியது.

”மானங்கெட்டவனே, எதற்கு விடுகிறாய் கதை? யாரைக் கேட்கிறாய் பதில்? போரடித்து போராடித்து கேராகிக் கிடக்கும் எங்கள் மேலைநாட்டு டூரிஸ்ட் கூட்டம் சீனர்களின் உடல்களையும் போரடித்து பாம்புத்தலைகளாய் நெற்கதிர்களாய்க் குவித்துவிடும், ஜாக்கிரதை! சரித்திரத்தையே மாற்றி எழுதிவிட்டதாக என் முன் கூறிய உன்னை இனியும் உயிரோடு விட்டுவைப்பது என் குற்றம். துடிக்கிறது என் மீசை. அடக்கு அடக்கு என்கிறது டூர்நாடி வந்த நட்புமுறை” என்று கட்டபொம்மனாய்ப் பொங்கி எழுந்தேன்.

மனைவி முறைத்ததால் மிகவும் கஷ்டப்பட்டு அடங்கினேன்.

(தொடரும்)