என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, July 29, 2011

கொழிக்கிறது சைனா! 5

சைனாவில் இறங்கி இரண்டு, மூன்று நாட்கள் ஆகிவிட்டன. இரண்டா, மூன்றா, இல்லை நாலா? கொஞ்சம் ‘கேரா’கத்தான் இருக்கிறது இன்னமும். மணி, நாள், கிழமை எதுவுமே நினைவில் இல்லை!

பெய்ஜிங் வெயிலும் வியர்வையும் சீன உணவுப் பழக்கவழக்கங்களும் ஓரளவு பழக்கப்பட ஆரம்பித்து விட்டன என்றுதான் சொல்லவேண்டும். கொஞ்சம் தீவிரமாக யோசித்தால் இன்று எங்கள் பயணத்தின் நாலாவது நாள் என்று தோன்றுகிறது.

பெய்ஜிங் நகர எல்லை தாண்டி வடமேற்காகப் பயணம். சீனாவை 400 வருடங்கள் கட்டியாண்ட ‘மிங்’ அரசகுலத்தாரின் ராஜ கம்பீரம் பொருந்திய சமாதிகளைக் காலையில் பார்வையிடப் போகிறோம் என்று சொல்லி இருந்தார்கள்.

பெய்ஜிங்கின் டிராஃபிக் நெரிசல், வான் முட்டும் புத்தம்புது கட்டிடங்கள், ஹைவேக்களில் நெளியும் புது மாடல் வோல்க்ஸ்வேகன்கள், ஔடிகள், பென்ஸ் கார்கள் எல்லாம் வேடிக்கை பார்த்தவாறே சென்றோம்.

Photobucket

அநேகமாக உலகப் புகழ்பெற்ற எல்லா கார் கம்பெனிகளுமே சைனாவில் சொந்த ஃபேக்டரி வைத்திருந்தாலும், உள்நாட்டில் அவற்றின் விலை கடுமைதானாம். இப்போதும் சாதாரண சீனக் குடிமகனின் சராசரி மாத சம்பளம் சில நூறு டாலர்களே. பெட்ரோல் விலையும் கடுமை. அப்படியிருக்க “யார் தான் இந்தக் கார்களை ஓட்டுகிறார்கள்?” என்று கேட்டேன்.

“முக்கால்வாசியும் தாய்வானிலிருந்து மெயின்லாண்ட் சைனா திரும்பிய பணக்கார சீனர்கள், வெளிநாட்டு தொழில் முதலாளிகள், கம்பெனி எக்சிக்யூடிவ்கள் அல்லது சைனாவில் அரசியல் அந்தஸ்து மிக்க கம்யூனிஸ்ட் அதிபர்கள்” என்று பதில் வந்தது கைடிடமிருந்து. காதில் கொஞ்சம் புகையையும் கவனித்தேன்.

Photobucket

அப்படியானால், சாதாரண குப்பனும் சுப்பனும் என்ன ஓட்டுகிறார்கள்? சைக்கிளா? அதுவும் இல்லை!

ஒரு காலத்தில் சைனா என்றாலே ஆயிரக் கணக்கில் தெருவெங்கும் சைக்கிள் ஓட்டிச்செல்லும் சீனர்கள் என்கிற பிம்பம் என் மனதிலும் பதிந்திருந்தது. ஆனால் அதை கம்யூனிஸ்ட்கள் கஷ்டப்பட்டு உடைத்திருக்கிறார்கள். பெய்ஜிங், ஷாங்ஹாய் போன்ற பெருநகரங்களுக்குள் சைக்கிள்களுக்கு அனுமதி இல்லை. அப்படியே ஓட்டினாலும் எங்காவது வீட்டருகே ஒரு ஓரமாக “வாடிக்கை மறந்ததும் ஏனோ, எனை வாட்டிடும் கேள்விகள் ஏனோ” என்று பாடியபடி ஓட்டிக்கொள்ளலாம். மெயின் ரோட்டில் அதற்கெல்லாம் அனுமதி கிடையாது.

சாமான்னியர்கள் கார்கள் வாங்குவது கடினம் என்று சொன்னேன் அல்லவா? அப்படியே அடித்துப்பிடித்து கார் வாங்கினாலும் லைசென்ஸ் ப்ளேட் வாங்குவதற்கென்றே தனியாக ஏலம் உண்டாம். அங்கே போய் பணம் கட்டி, எந்த நம்பர் வேண்டுமென்று சொல்லி- 9ம் நம்பருக்கெல்லாம் எம் எல் ஏ, எம் பி சிபாரிசு வேண்டுமென்று சொல்லவே தேவை இல்லை- ஏலத்தில் எடுத்து, எல்லாம் நாம் அடிக்கிற அதே கூத்துதான் அங்கேயும்.

Photobucket

காரும் முடியாது, மோட்டார் சைக்கிளும் வேண்டாமென்று பஸ், அண்டர்கிரௌண்ட் ரயில் என்று பயணிப்பவர்களே 90 சதவீதத்திற்கும் மேல். ரயில்களில் எந்நாளும் தீபாவளிக் கூட்டம். ரயில்களுக்குள் மக்களை நசுக்கித் திணிப்பதற்காகவே ‘People Pushers' என்கிற அரசாங்க அதிகாரிகள் இருப்பதையும், கையுறையுடன் அவர்கள் அதை பலாத்காரமாகச் செய்யும் முறையையும் யூட்யூபில் ஒரு முறை பார்த்திருக்கிறேன். அதுபற்றியெல்லாம் கேட்டால் நம் வழிகாட்டிகள் வழவழா கொழகொழாவென்று வழுக்கி விடுகிறார்கள்.

மோட்டார் சைக்கிள்களிலும் 1.5 ஹார்ஸ்பவருக்கு மேற்பட்ட பெரிய ஹார்லி டேவிட்சன், கவஸாகி, ஹோண்டா போன்ற பெரிய வண்டிகளுக்கு பர்மிஷன் நஹி. சின்னச்சின்ன மோபெட்களுக்கு ஓகே. அதிலும் முக்கால்வாசி வண்டிகள் பேட்டரியால் மட்டுமே இயங்குபவை. தினந்தோறும் அவை சார்ஜ் பண்ணப்படவேண்டும். அத்தனை வண்டிகளையும் நிறுத்தி வைக்க பார்க்கிங் வசதிகள் போதாது. அதனால் நாலாவது மாடி, ஆறாவது மாடி என்றெல்லாம் தோரணம் தோரணமாக வாரணமாயிரம் சார்ஜ் ஒயர்கள் அசிங்கமாக பில்டிங் எங்கும் தொங்குவது வாடிக்கை. டூரிஸ்ட்கள் சாதாரணமாக நடமாடும் இடங்களில் இவை அதிகமாகக் கண்ணில் தென்படுவதில்லை!

அந்த பேட்டரிகள் ரீசைக்கிள் பண்ண முடியாதவை. காலாவதியான அத்தனை லட்சக்கணக்கான மொபெட் பேட்டரிகளையும் சீனர்கள் எங்கே கொண்டுபோய்க் கொட்டுகிறார்களோ, தெரியவில்லை.

இங்கே இன்னொரு விஷயத்தையும் குறிப்பிடவேண்டும். சைனாவில் ஆறு மாடிகளுக்கு மேற்பட்ட கட்டிடங்களுக்கு மட்டுமே ‘லிஃப்ட்’ வசதிகள். ஆறு மாடிகளுக்கு உட்பட்ட எல்லா கட்டிடங்களுக்கும் கண்டிப்பாக லிஃப்ட் இல்லை. சீனர்கள் மாடி ஏறி இறங்கி உடற்பயிற்சி பண்ணட்டும் என்கிற நல்லெண்ணத்தில் அரசாங்கமே அப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறதாம். அதனால்தானோ என்னவோ சீனர்களில் குண்டர்கள், ஊளைச் சதைக்காரர்கள் மிக அபூர்வம். சீனக் குட்டிகளும் டக்கராகவே இருக்கிறார்கள். இது எப்படி இருக்கு ?!

நல்லவேளையாக எங்கள் ஹோட்டல் 30 மாடி கட்டிடம். எக்ஸ்பிரஸ் எலிவேடர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தரத்தில் தூக்கிப்போய் நிறுத்துகின்றன.

உயிரோடு இருக்கும்போது ஊரை அடித்து உலையில் போட்டுக்கொண்டால் மட்டும் போதாது இந்த சாம்ராஜ்யதிபதிகளுக்கு. செத்தபின்னரும் தம் சமாதி கொண்டாடப்படவேண்டும், அங்கே கூட்டம் கூடவேண்டும், சமாதியில் சூடம் காட்டவேண்டும், மாலை போடவேண்டும், செருப்பு காண்டிராக்ட் விடவேண்டும் என்கிற நல்லெண்ணம் அவர்களுக்கு இருந்திருக்கவேண்டும். அதிலும், மிங் பரம்பரையைச் சேர்ந்த மன்னர்கள் பலருடைய சமாதியும் ஒரே இடத்தில் என்றால், கொண்டாட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்!

இந்தக் கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் இங்கே ஒரு அவசரமான கேள்வி: சென்னையின் மெயின் அட்ராக்‌ஷனான ஜெமினி பாலத்தருகே இருந்த வுட்லண்ட்ஸ் ஹோட்டலைப் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக இழுத்துமூடி அங்கே ஒரு ‘செம்மொழிப் பூங்கா’ அமைத்தார்களே, மகா கேனத்தனமாக, அங்கே யாருக்கும் சமாதி ஸ்பேஸ் ரிசர்வ் செய்யப்பட்டுவிடவில்லைதானே?!

சென்னையே நெருக்கடி மிக்க போஸ்டல் ஸ்டாம்ப் சைஸ் ஊர் என்றாலும், மக்கள் கொஞ்சம் ரிலாக்ஸாகக் கூடி காஃபி சாப்பிட்டு ஜாலியாக இருக்க மிக சௌகரியமாக இருந்த இடம் அந்த ‘டிரைவ் இன் வுட்லணட்ஸ்’. அப்படிப்பட்ட பொது இடத்தை, பல காதலர்களின் சொர்க்க பூமியை, பல பிசினஸ் மீட்டிங்களின் உறைவிடத்தை, P. B. ஸ்ரீனிவாஸ் அவர்களின் கற்பனா ஊற்றிடத்தை இப்படி நாராசமாக அழித்து அங்கே ஒரு வெத்துப் பூங்கா அமைத்தவர்களை என்னால் மன்னிக்கவே முடியாது. எனக்கும் அங்கே எத்தனையோ ஆனந்த நினைவுகள், ம்ஹும். சரி, சரி, புலம்பல் போதும், சைனா பக்கம் திரும்புவோம்.

சீன வாஸ்துப்படி தலைமாட்டில் மலை, கால்மாட்டில் நீர்நிலை, சுற்றிவர பச்சைப்பசேல் மரங்கள் இருந்தால் அது சொர்க்கமேதானாம். அதனால்தானோ என்னவோ, மிங் பேரரசர்கள், பெய்ஜிங் நகருக்கு வெளியே இருந்த மரகத பச்சைப் பள்ளத்தாக்கில் தங்கள் சமாதிகளை தாங்களே கட்டிக்கொள்ள முடிவெடுத்தார்கள். வடக்கே இருந்து வரும் காற்றில் தீய சக்திகள், பிசாசுகள் இருப்பதாகவும், வடக்கே மலைத்தொடர் இருந்தால் அவை உள்ளே நுழையாமல் தடுக்கப்படும் என்றும் அவர்கள் நம்பினார்களாம். வடக்கு வாழ்கிறது-தெற்கு தேய்கிறது’கலாட்டா இல்லாத ஊரே இல்லை போலிருக்கிறது. யுவான் சுவாங்தான் இந்த அபஜருத்து வேலைகளையெல்லாம் இந்தியாவிலிருந்து சீனாவுக்குக் கொண்டுசென்றிருக்கவேண்டும். இந்த யூனா சூனாவோடு எனக்கு ஒரு பிரச்னை இருக்கிறது. அதைப் பிறகு சொல்கிறேன்.

Photobucket

ஆரவாரமில்லாத அமைதியான இடம். ஏக்கர் கணக்கில் மரங்களும், பச்சை மரகதப் புல்வெளிகளும் கலந்த ராஜபாட்டை மாதிரி பெரிய சாலை. சாலையின் இருமருங்கிலும் புதிதாக நடப்பட்டு நன்றாக பராமரிக்கப்பட்டிருக்கும் நெடிய மரங்கள். எந்த நேரத்திலும் வந்தியத்தேவனை வெள்ளைப்புரவியில் எதிர்பார்த்தேன்.

அப்படியே காலார நடந்து சென்றால் அங்கே வெயிலே தெரியாதபடி ‘ஜிலு ஜிலு’வென்ற காற்று. அந்த ராஜபாட்டை தான் மிங் மன்னர்களின் சமாதிக்குச் செல்லும் வழி. வழியெங்கும் ஒவ்வொரு பக்கத்திற்கும் 18 என்று கணக்குவைத்து 36 பெரிய பெரிய சிற்பங்கள். சிற்பங்களில் மன்னர்கள், படைத் தளபதிகள், யானைகள், சிங்கங்கள், ஒட்டகங்கள். சில மிருகங்கள் நம் யாளி போல் கற்பனையில் உதித்த கற்காவியங்கள்.

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

சீனர்களுக்கும் நாடக நடிகர் எஸ்ஸ்ஸ். வ்வீஈஈ. ஸ்ஸ்ஷேக்கர் மாதிரி எண் கணிதத்தில் ஏகப்பட்ட நம்பிக்கை. ஒன்பது என்பது மிகவும் விரும்பப்பட்ட எண். ஏற்கனவே Forbidden Palace ல் 9999 அறைகள் என்று பார்த்தது நினைவில் இருக்கிறதில்லையா? 8ம் நம்பரையும் அதிர்ஷ்ட எண்ணாகவே பாவிக்கிறார்கள். 4 ஒத்துக் கொள்ளாதாம்.

பொம்மைகள் பார்த்தபடி கொஞ்ச தூரம் ராஜபாட்டையில் பயணித்தபிறகு, திடீரென்று “ஆச்சு, அவ்ளோவ்தான்” என்று ஒரு சமாதியையும் பார்க்காமலேயே எங்களை பஸ்ஸில் ஏற்றிவிட்டார்கள். ”சீனப் பிசாசை எல்லாம் ஏன்யா கண்ல காட்டலை?” என்று நாங்களும் சண்டை போடவில்லை. கேள்வி கேட்காமல் ’இதுவும் கடந்துபோம்’ என்று பஸ்ஸில் ஏறிவிட்டோம். பிரதமர், ஜனாதிபதி என்று நிஜமாகவே வேலை இல்லாதவர்கள் வந்தால்தான் அங்கெல்லாம் அழைத்துப் போய் சாஸ்திர சம்பிரதாயத்துக்கு ஒரு மலர் வளையம் வைக்கச் சொல்வார்கள் போலிருக்கிறது என்று நானே எனக்கு சமாதானம் சொல்லிக்கொண்டேன்.

ஒரு லோக்கல் ஹோட்டலில் சாப்பாட்டை முடித்துக்கொண்ட பிறகு, நம் டூரிஸ்ட் வழிகாட்டிகள் ஒரு பெரிய Jade நகைக்கடைக்கு எங்களை அழைத்துச் சென்றார்கள். Jadeக்குத் தமிழில் என்னவென்று தெரியவில்லை. நிச்சயமாக நாம் நவரத்தினங்கள் என்று சொல்கிற வைரம், வைடூரியம், முத்து, மரகதம், மாணிக்கம், பவளம், புஷ்பராகம், கோமேதகம், நீலம் என்ற ஒன்பதிலும் இது சேர்த்தி இல்லை என்றாலும் ஜேடில் பண்ணப்பட்ட நகைகல், சிற்பங்கள் எல்லாமே அதி அற்புதம். விலைகளும் அப்படியே. ஒரு சின்ன ஜேட் கல்லுடன் மோதிரம் $ 30, ஜேட் வளையல் $ 400. ஜேட் பொம்மைகள், மேஜைகள் $ 10,000 வரை கூட விற்கின்றன.

Photobucket

“இங்ஙன க்ளிண்டன் வந்தாஹ, ஹிலரிக்கு மால வாங்கிக் கொடுத்தாஹ, ப்ராட் பிட் வந்தாஹ, ஏஞ்ஜெலினாவுக்கு ஒட்டியாணம் வாங்கிக் கொடுத்தாஹ, சல்மான் கான் வந்தாஹ யார் யாருக்கெல்லாமோ என்னென்னவோ வாங்கிக் கொடுத்தாஹ” என்று சேல்ஸ் பெண்கள் விற்பனாராகம் பாடுகிறார்கள். அவ்வப்போது மட்டுமே தமிழ்ப்படங்களில் தலைகாட்டும் அடிப்பொடி நடிகன் நான் என்பதால் என் ரேஞ்சுக்கு ஒரு ஆயிரம் டாலரில் ஒரு ஜேட் சில்லையாவது என் தலையில் கட்டிவிட அவர்கள் மிகவும் துடித்தார்கள்.

“அய்யோ, பாருங்களேன், பச்சைன்னா பச்சை, எப்படிப்பட்ட பச்சை, சும்மா சல்லுன்னு” என்று என் இவள் வேறு ஒத்து ஊதினாள். ”அதென்ன ஸ்பெஷல் பச்சை? ஆல பச்சைஸ் ஆர் தி ஸேம். பச்சை என்பது ஏழு நிறங்களில் ஒன்று” நான் சொன்னது யார் காதிலும் விழவில்லை.

Photobucket

சில்லு என்றால் நிஜமாகவே சின்ன கல்லுச்சில்லு. ஹீரோயினைப் பார்ப்பதற்கு முன ஹீரோ அசட்டுச் சிரிப்புடன் கிராமத்துக் குளத்தில் சைடுவாக்கில் வீசி எறிவானே, அதே சில்லு. கொஞ்சநேரம் தவ்வித்தவ்விப் போய் குளத்தில் முழுகிச் சாகுமே அதே மாதிரி சில்லு. அதில் ஏதோ டிசைன் வரைந்திருக்கிறார்கள். இல்லையென்று சொல்லவில்லை.

ஜில்லென்று ஏசி போட்டு, சின்னச்சின்ன உடைகள் போட்டு சீனத்து சுந்தரிகள் முல்லையாய்ச் சிரித்து மயக்கி சில்லை பச்சைக் கலரில் தந்தால் அதற்காக அதை வாங்க நானென்ன அவ்வளவு டுபுக்கா? ”டாலருக்குப் பதிலாக வேண்டுமென்றால் ஆசை அத்தானிடமிருந்து ஒரு முத்தம் ...” என்று நான் ஆரம்பித்தேன். என் மனையாள் முறைத்தாள். மேற்சொன்ன சீ. சுந்தரிகள் “சீச்சீ” என்று கண்ணாலேயே படபடவென்று சொல்லிப் ’படாரெ’ன்று ஷோகேஸ்களை மூடினார்கள்.

சக அமெரிக்க டூரிஸ்ட்களில் சிலர் இந்த்ச் சில்லுகளெல்லாம் ஏதோ தேவலோகத்தில் தெய்வதச்சன் செய்ததென்று நினைத்து அவற்றை அள்ளி மடியில் கட்டிக்கொண்டார்கள். நம் கைடு வழிகாட்டிகளோ 10% தமக்கே தமக்காக வரப்போகும் சந்தோஷத்தில் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே ஜேடுஃப்ராடுபுராணம் பாடினார்கள்.

சென்னை டு மயிலாடுதுறை என்று ஏதாவதொரு ஆம்னி பஸ் பிடித்தால், கரெக்டாக மாமண்டூர் வந்ததும் ஊருக்கு ஒதுப்புறமாக ஒரு ஹோட்டலில் பஸ் நிற்கும். சொந்தக் காரில் வருகிற எந்த சுயமரியாதை உள்ளவனும் அங்கெல்லாம் நிற்கக்கூடமாட்டான். ஆனால் நாமெல்லாம் பஸ்ஸாளிகளல்லவா? எனவே, அத்தனை பிரயாணிகளும் அங்கேதான் சாப்பிடவேண்டிய கட்டாயம். பஸ் நின்றவுடனே டிரைவரும், கண்டக்டரும் அந்தர்தியானமாகி, மேற்சொன்ன ஹோட்டலின் பிறிதொரு ஸ்பெஷல் அறையில் திருப்தியாக, ஃப்ரீயாக நளபாகம் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். நாம் சர்வரிடம் “என்னய்யா எழவு இட்லி இது, கல்லாட்டம் கீது? போண்டாவாய்யா இது, புண்ணாக்குல பண்ணினதா?” என்று மயிர்பிடி சண்டை போட்டுக் கொண்டிருப்போம்.

சைனாவிலும் அத்தகைய திருச்சேவை எங்களுக்கு ஆங்காங்கே தொடர்ந்தது. நமக்கோ ஒரு அட்சரம் கூட சீன பாஷை தெரியாது. “படம் பார்த்துக் கதை சொல்” என்றால் மெனு படத்தைப் பார்த்தாலே நமக்கு ஆயிரம் வாந்திகள் ஒரே நேரத்தில் அடிவயிற்றிலிருந்து புறப்படும். அதனால் தான் “ஈஸ்வரோ ரக்‌ஷது” என்று வழிகாட்டிகள் ஃபோர்க் நீட்டிய இடத்தில் பசியாறினோம்.

சாப்பிட்டபின் நாங்கள் செல்ல இருந்த இடம், உலக மகா அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர்!

(தொடரும்)

6 comments:

saravanakumar said...

நாமே போய் வந்த உணர்வு. நல்ல கட்டுரை. சீனபெருஞ்சுவர் அத்தியாயம் விரைவில் எதிர்பார்க்கிறோம்.

ILA (a) இளா said...

ஊடால உங்க படத்தையும் போட்டது நுகபிநி

V.Rajasekar said...

தலைவரே !!! சைனா கொழிக்கிறது - ஒவ்வொரு எபிசோடும் காமடி பட்டைய கிளப்புது.
எப்போ அடுத்த போஸ்ட் ???

MSATHIA said...

அட.. உங்களுக்கும் ஒரு சிகப்பு பின்னணி இருக்கா.. கட்டுரை எல்லா பாகத்தையும் படிச்சிட்டேன். உங்க எழுத்து நடை அபாரம்.

துளசி கோபால் said...

அடடா........ படங்கள் அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது!!!!! அந்த யானை சூப்பரு!!!!

கானகம் said...

//பிரதமர், ஜனாதிபதி என்று நிஜமாகவே வேலை இல்லாதவர்கள் வந்தால்தான் அங்கெல்லாம் அழைத்துப் போய் சாஸ்திர சம்பிரதாயத்துக்கு ஒரு மலர் வளையம் வைக்கச் சொல்வார்கள் போலிருக்கிறது என்று நானே எனக்கு சமாதானம் சொல்லிக்கொண்டேன்.//

:-)))