2008 செப்டம்பர்- அக்டோபர், சென்னை:
’ஜக்குபாய்’ முதல் கட்ட பாங்காக் படப்பிடிப்பில் சில சீன்கள் (சரத்-ஷ்ரியா-கவுண்டமணி காம்பினேஷன்ஸ்) எடுக்கப்பட்டு, கொஞ்சம் என் வேலை முடிந்ததும், இயக்குனர் ரவி என்னிடம் “பட்டயா பீச்ல ஃபைட் சீன்ஸ் எடுக்க வேண்டியிருக்கு. சரத் இருந்தா போதும். உங்க ஜாக்கி சான் வேலையெல்லாம் இதுல காட்டத் தேவை இருக்காது. நீங்க பீச்சுக்கு வந்தா கூட்டத்தை சமாளிக்கவே எங்களுக்கு நேரம் சரியாப் போயிடும். அதுக்காக நீங்க ஹாலிவுட்டுக்கு திரும்பிட வேணாம். வேணும்னா சென்னைக்குப் போய் ரெஸ்ட் எடுத்துக்குங்க. மறுபடியும் நாம எப்ப மீட் பண்ணணும்னு சொல்றேன்” என்றார்.
“டேய், எல்லே சார் பின்னாடியே மாடு, கன்னுக்குட்டி எதுவும் போயிடாம ஏர்போர்ட் வரைக்கும் போய் பாத்துங்கப்பு” என்று அசிஸ்டெண்டுகளுக்கும் கறாரான கண்வழி ஆர்டர் போடப்பட்டது.
“கிருஷ்ணா, கிருஷணா!” என்று நான் கன்னத்தில் போட்டுக்கொண்டேன்.
இருந்தாலும், பலத்த செக்யூரிட்டியையும் தாண்டி, முக்கியப்பட்ட சிலர் கண்ணீரும், கம்பலையுமாக (அது என்னங்ணா, ‘கம்பலை’? யாராச்சியும் பதில் சொல்லுங்ணா)எனக்கு விடை கொடுக்க முடியாமல் ஏர்போர்ட்டில் கேவிக்கேவி, தேம்பித்தேம்பி அழுதார்கள்.
சுவர்ணபூமி ஏர்போர்ட்டே அழுகையில் வழுக்கியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
“நான் இப்ப எங்க போயிட்டேன்னு நீ/நீங்க இப்படி அழுது ஆகாத்தியம் பண்றீங்க. ரெண்டு வாரம் சென்னையில தான இருக்கப்போறேன். அப்படி ரொம்பத் தாங்கலைன்னா சொல்லுங்க. ஒரு போன் போட்டா ஓடி வந்துடறேன். சென்னை மூன்று மணி நேரத் தொலைவில தானே இருக்கு? பிளாக்பெர்ரில, ஃபேஸ்புக்ல, ட்விட்டர்ல, புறா மூலமா டெய்லி ஹாய் சொல்றேன். போதுமா?” என்றெல்லாம் பஞ்சாபியிலும் குஜராத்தியிலும் மாற்றி மாற்றி நான் சமாதானம் சொல்ல நேர்ந்தபோது, பச்சைத் தமிழ் அசிஸ்டெண்ட் (செக்யூரிட்டி) டைரக்டர் பாஷை புரியாததால் ‘ஙே’ என்று பேய் முழி முழித்ததை நான் ரசித்தேன்.
“ஒண்ணுமில்லப்பா. பாங்காக்ல ஃபுல்கா ரொட்டி, மட்டன் குஸ்கா எங்க கிடைக்கும்னு சொல்லிக்கிட்டிருக்கேன்” என்று நான் சொன்னதை மதுரைத் தமிழர் சுத்தமாக நம்பவில்லை.
சென்னை திரும்பியாயிற்று. அலும்னி கிளப், போட் கிளப், பிரசிடென்சி கிளப் என்று எல்லா இடங்களிலும் தரிசனம் கொடுத்தாயிற்று. அடையார் கேட், தாஜ், ரெயின்ட்ரீ என்று சுக வாசஸ்தலங்கள் எல்லாமே போரடித்துப் போய் விட்டது.
ஊர் முழுக்க முல்லைச் சிரிப்பும், சரசரக்கும் பட்டுப் பாவாடையும், அகல் விளக்குகளுமாக நவராத்திரிக் கொண்டாட்டங்கள். எல்லோரும்- மகா பொடுசுகளிலிருந்து கெழ போல்டுகள் வரை அத்தனை பேரும்- பயங்கர பிசி. எனக்கு மட்டும் சுத்தமாக எந்த வேலையுமே இல்லை. சிமெண்ட் உதிர்ந்த மோட்டுவளை டிசைனை எத்தனை நேரம் தான் முறைத்துக் கொண்டிருப்பது?
எதிர், பக்கத்து வீடுகளிலிருந்து சுண்டல், சுண்டலாக வாண்டுகள் படையெடுப்பு, தாங்கவே முடியவில்லை. நானாவித பரிமள விநோத சுண்டல்களால் நான் தொண்டை அடைத்துப் போய் மேலும் விக்கித்து சோகமானேன்.
ஊரெங்கும் விழாக் கோலத்தில் இருக்கும்போது நானும் ஒரு பட்டுப் பாவாடை கட்டிக்கொண்டு பக்கத்து வீட்டுக் கொலுவில் போய் உட்கார்ந்து ‘பஜ பஜ மானஸ ...’ என்று பாடலாமா? ஊஹூம். அடி விழும்.
மனசு ரொம்பவும் தான் பேதலித்துக் கிடக்கிறது.
“டீ இவளே! கீதோபதேசம் போட்டிருக்கேன் வந்து பாரேன்!” நானும் ரங்கோலி போடக் கற்றுக் கொள்ளலாமா? ரங்கோலி என்பது ஹிந்தியா, பஞ்சாபியா, குஜராத்தியா?
தனிமை என்னை மிகவும் வாட்டியது. பாங்காக் பக்கமே வரக்கூடாதென்று தடா வேறு. கொஞ்சம் ஆறுதலுக்காக தி.நகர் ‘மன்சூக்’ஸில் குஜராத்திச் சாப்பாடு சாப்பிட்டுப் பார்த்தேன்.
இரண்டு வேளையும் ஷ்ரீ- மன்னிக்கவும், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் சொல்ல ஆரம்பித்தேன்.
ஸ்வாமி ராமாவின் ‘Living with the Himalayan Masters', பால் பிரண்டனின் 'A Search in Secret India', பாபாஜி நாகராஜின் கிரியா யோகாவெல்லாம் படித்து முடித்தாயிற்று. புதிதாக ஏதாவது சுப்ரபாதம் இயற்றலாமா, சுந்தர காண்டம் படிக்கலாமா என்றெல்லாம் ஆன்மீகத்தனமாக யோசிக்கலானேன்.
ஷட்சக்ரபேதனம் என்றெல்லாம் சொல்கிறார்களே, இதெல்லாம் நமக்கு சரிப்படுமா என்பது புரியவில்லை. புகை நடுவே ஏதோ புலப்படுவது போல் தெரிந்தது.
ஒரு நாள் நண்பர் ஒருவர் கூப்பீட்டாரேயென்று வெளியே போகக் கிளம்பினவன் சம்பந்தமே இல்லாமல் மவுண்ட் ரோடு சமதா புக்ஸ் பக்கம் போய் வண்டியை நிறுத்தினேன். ஓனர் கிருஷ்ணா தீவிரமான லலிதாம்பிகை பக்தர். உண்மையாக யோசித்துப் பார்த்தால் அங்கே எதற்காகப் போனேன் என்பது இன்னமும் இன்றுவரை தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அங்கே நடந்த சில நிகழ்வுகள் ஆச்சரியமானவை.

இந்த லலிதாம்பிகை பக்தி மேட்டர் பற்றி சீரியசாக எழுத ஆரம்பித்தால் பீகார் யோகா, பிராணாயாமம், ஸ்வாமி நிரஞ்சனானந்தா, யோக நித்ரா, குடுமி வெங்கட்ராமன் மூலம் பெரிதாக நான் ஏமாந்த கதைகள் ஏன்று எல்லாம் எழுத வேண்டி வரும். இப்போது அந்தக் கதைகள் வேண்டாம்.
கிருஷ்ணாவுக்கு எதிரே ஜோல்னாப் பையுடன் யாரோ ஒரு வெள்ளைக்காரர்- ஆன்மீக நாட்டம் அதிகமுள்ளவர் போல் தெரிந்தது- திருமீயச்சூர் போகும் வழி பற்றி. லலிதாம்பாள் கோவில் பற்றியெல்லாம் விபரம் கேட்டுக் கொண்டிருந்தார். கிருஷ்ணா அவரிடம் பேசிக் கொண்டிருந்ததிலிருந்து எனக்கு யாரோ ’பளிச்’சென்று என்னிடம் நேரடியாகச் சொல்வது போல் புரிந்தது என்னவென்றால்:
“சும்மாத்தானே கோவில் மாடு மாதிரி ஊரை சுத்தி வந்து கிட்டிருக்கே. லலிதா சஹஸ்ரநாமம் படிச்சா மட்டும் போதுமா? திருமீயச்சூர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயே, ஏன் அங்கே ஒரு முறை போய் வரவேண்டுமென்று உன் மர மண்டையில் ஏறவே இல்லை? அங்கே போகும் வழி பற்றி சொல்கிறேன் பார்”
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
“எட்றா வண்டிய, திருப்புடா திருச்சி பக்கம்” என்றேன்.
எதற்கு திருச்சி பக்கம்?
சொல்கிறேன்.
(உச்சி வரை போவோம்)