என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, February 29, 2008

ஒரு ஞான சூரியனின் அஸ்தமனம்

சென்ற இரண்டு நாட்களாக, என்னுடைய 'ப்ளாக்'கில் இந்தப் பதிவை எழுத முடியாமல் நான் தவித்திருக்கின்ற தவிப்பு கொஞச நஞ்சமல்ல. எவ்வளவு நேரம் தான் ஒத்திப் போட்டாலும் இதைச் செய்தே ஆக வேண்டிய கட்டாயம் இப்பொழுது. எழுதவே மனமில்லாமல் தான் இதைப் பதிவு செய்கிறேன்.

எந்த குருவுக்கு மரணமே இல்லை என்று நான் நினைத்திருநதேனோ, எந்த எழுத்துலக ஜாம்பவானுக்கு முடிவே இல்லை என்று நான் நினைத்திருந்தேனோ, எந்த நண்பருக்கு எதுவும் அசம்பாவிதம் நேரவே நேர்ந்து விடாது என்று நான் அசட்டையாய் இருந்தேனோ, அநத ஞான சூரியன் அஸ்தமனமாகி விட்டது என்கிற இடிச் செய்தி என் உறக்கத்தைக் கலைத்து என் காதுகளில் இறங்கியபோது நான் துடித்துப் போனேன்.

கடந்த இரண்டு, மூன்று வருடங்களாகவே சுஜாதாவின் உடல் நிலை மோசமடைந்து வந்தாலும், ஒவ்வோரு முறையும் அவரைக் காணும்போதும், அணைத்து அழைத்துச் செல்லும்போதும், நான் அதை உணர்ந்து வந்தாலும், "அவருக்கெல்லாம் ஒன்றும் ஆகி விடாது" என்கிற பொய்யை நான் நம்பி வந்தேன்.

பச்சை மூங்கில் பாடையில் அவரைத் தொட்டு வழியனுப்பும்போது தான், அவரை இனி பார்க்கவே போவதில்லை என்கிற உண்மை என்னைச் சுட்டது. சுஜாதாவின் சுஜாதா என் லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில் அவர்கள் இருவரும் களித்திருந்த பழைய கணங்களை அழுகையுடன நினைவு கூர்ந்தபோது நான் தவித்துப் போனேன். அவருடைய வாரிசுகள், என் நன்பர்கள் என்னை கட்டிக்கொண்டு கலங்கி அழுதபோது, நான் வாயடைத்துப் போனேன்.

என் எழுத்தலக கக்கரவர்த்தி ஒன்றும் சாமான்னியரைப் போல் செத்துப் போய் விடவில்லை. அவருடைய அந்நியோன்ய நண்பர்கள, திரையுலக சகாக்கள், இலக்கிய நண்பர்கள், ரசிகர்கள், அனைவரும் புடை சூழத்தான் அவர் இன்று எங்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார்.

ஒரு ம்கோன்னத ஆல விருட்சம ஊழிக் காற்றில் விழுந்து கிடக்கையில், ஆங்காங்கே அதன் நிழலில், சில சின்ன்ஞ்சிறு செடிகள் அபத்தமாகப் பூத்து நிற்குமே, காற்றில் அசைந்து ஒன்றுக்கொன்று முகமன் சொல்லிக் கொள்ளுமே, அதைப் போல, பாலகுமாரனும், சங்கரும், மணி ரத்னமும், சுஹாசினியும், கனிமொழியும, ராஜீவ் மேனனும் நாங்கள் ஒருவரை ஒருவர் கண்டு கொண்டோம், அறிமுகங்கள் செய்து கொண்டோம், சோகப் புன்னகைகளில் சோர்வுடன் பேசிக் கொண்டோம். பாரதி ராஜா, பார்த்திபன், வசந்த், விவேக், விகடன், குமுதம் குழும ஆசிரியர்கள், பிரசுரகர்த்தாக்கள், மணியன் செல்வன் போன்ற ஓவிய வல்லுனர்கள, எஸ். பி. முத்துராமன், சாய்மீரா நடராஜன், எஸ். வி. சேகர், தேசிகன், என்று எங்கெங்கும் நண்பர்கள், ரசிகர்கள் புடைசூழத்தான் என் ஞான சூரியன் பெசண்ட் நகர் சுடுகாட்டை நோக்கி அஸ்தமனம் ஆனார்.

என் எழுத்துகளில் ஒரு துளியேனும் நீங்கள் ரசித்தீர்களென்றால் அதுவும் என் எழுத்துலக ஞான குருவான அமரர் சுஜாதாவுக்கு இன்றே, இப்பொழுதே சமர்ப்பணம்.

மிகுந்த வருத்தத்துடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

4 comments:

துளசி கோபால் said...

நெஞ்சார்ந்த ஆழ்ந்த அனுதாபங்களும் அஞ்சலிகளும் அவருக்குச் சமர்ப்பிகின்றோம்.

அவருடைய எழுத்துக்கள் என்றும் நம்முடன் வாழும்.

Radha Sriram said...

என்னவோ போங்க மனசு கனத்துதான் போயிருக்கு.இத யாராலும் நிறுத்த முடியாதே..!! உங்களோட வருத்தத்துல நானும் பங்கு எடுத்துக்கரேன்.

Sundar Padmanaban said...

எல்லேஜி

ரெண்டு மூணு நாளா செய்திகள் எதையும் பார்க்காமலிருந்திருக்கக் கூடாதா என்றுதான் இப்போது வரை தோன்றிக்கொண்டிருக்கிறது.

He will live with us through his creations for the rest of our lives.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள துளசி, ராதா மற்றும் சுந்தர்,

உங்கள் பதிவுகளுக்கு நன்றி. நம் துக்கத்தை நம்க்குள்ளாவது் சொல்லிச் சொல்லித்தான் ஆற்றிக்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து எழுதுகிறேன்.

எல்லே ராம்