Tuesday, August 10, 2010
ஐஃபோன், ஐயையோஃபோன்!
த்ரேதாயுகத்தில் நான் கம்ப்யூட்டர்லேண்ட் என்கிற நிறுவனம் நடத்திவந்தபோது, ஆப்பிளுக்கும் நாங்கள் பல கிளைகளில் டீலர்ஷிப் வைத்திருந்தோம். IBM, Compaq, HP, Zenith, AST, Leading Edge என்று பல கம்பெனிகளுடன் நாங்கள் நல்ல முறையில் வியாபார உறவு வைத்திருந்தாலும், ஆப்பிளுடன் மட்டும் எப்போதும் ‘க்ஷணச் சித்தம், க்ஷணப் பித்தம்’ தான்!
அவர்கள் அடாவடித்தனத்துக்கு எல்லையே இல்லை. ஹெர்குலிஸ் சைசுக்கு இருந்த IBM கம்பெனியை ’84ல் எதிர்த்த பொடிசு என்பதால் ஆப்பிளுக்கு எப்போதுமே ஒரு ரவுடி இமேஜ்தான். ஆப்பரேடிங் சிஸ்டத்திலிருந்து ஹார்டுவேர் வரை எல்லாமே ஒரு தனி ரூட். ’ஊருடன் ஒத்து வாழ்’ என்பதில் ஸ்டீவ் ஜாப்சுக்கு எப்போதுமே நம்பிக்கை இல்லை!
திடீரென்று நினைத்துக் கொள்வார்கள், மறுநாளே அத்தனை கிளைகளுக்கும், ஒவ்வொரு கிளைக்கும் $ 50,000 டாலருக்கு உதிரி சாமான்கள் (ஸ்பேர் பார்ட்ஸ்) வாங்குங்கள் என்று அதிரடி உத்தரவு போட்டுப் படுத்துவார்கள். ஸ்பேர்ஸ் என்ற பெயரில் அவர்களிடன் போணியாகாத அத்தனை கண்டாமுண்டான்களையும் எங்கள் தலையில் கட்டி விடுவார்கள். எதையும் திருப்பி அனுப்ப முடியாது, எதுவும் வியாபாரமும் ஆகாது. விலையோ, ஒவ்வொன்றும் யானை விலை, குதிரை விலை!
”எங்கள் ப்ராடக்சை நன்றாக விளம்பரம் செய்யுங்கள், பணம் தருகிறோம் என்பார்கள். சரி என்று நாம் முன் செலவு செய்து ஆயிரக்கணக்கில் நமக்குச் செலவான பிறகு, அவர்களிடமிருந்து ஒரு பைசா பேறாது. ஏதாவது சால்ஜாப்பு சொல்லி நம்மை அழவைப்பார்கள். HP எல்லாம் இந்த விஷயத்தில் மகா கௌரவமான கம்பெனி. டீலர்களை நஷ்டப்படவே விடமாட்டார்கள்.
‘89 என்று நினைக்கிறேன். ஒரு சுபயோக சுபதினத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, யார் வந்து Macintosh கம்ப்யூட்டர் கேட்டாலும், ஒரு ப்ரிண்டர், மென்பொருட்கள், உபகரணங்கள்- கிட்டத்தட்ட $ 3000 பெறுமான எல்லாமே- மூன்று மாதத்திற்கு இலவசமாகக் கொடுப்பதாக ஒரு பைத்தியக்கார ஸ்கீம்! பிடிக்கவில்லை என்றால் கஸ்டமர்கள் எல்லாவற்றையும் திரும்பக் கொடுத்து விடலாமாம்! மிகுந்த கட்டாயப்படுத்தி எங்களை இந்த ஸ்கீமை நடத்தவைத்தார்கள்.
மூன்று மாதம் கழிந்து அவனவனும் கேபிள், ரிப்பன் இல்லாத ப்ரிண்டர்கள், பேக்கிங் இல்லாத கம்ப்யூட்டர்கள், உடைந்த ஓட்டை உடைசல் டிஸ்க் டிரைவ்கள் என்று குப்பை குப்பையாய் திரும்பக் கொண்டுவந்தால் ‘எல்லாவற்றையும் கேள்வியே கேட்காமல் ரிடர்ன் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று எங்களுக்கு ஆப்பிளிடமிருந்து ஆட்டோவில் அன்புத் தாக்கீது! ஆனால், அத்தனை குப்பைகளையும் ஆப்பிளுக்குத் திருப்பி அனுப்பினால் எங்களுக்கு எல்லாவற்றுக்கும் முழு விலையில் சார்ஜ், ஃபைன்! என்ன அநியாயம்!
ஆப்பிள் முறைத்துக்கொள்ளாத டீலர்களே இல்லை. கம்பெனியை விட்டே ஜாப்சுக்கு கல்தா கொடுக்கப்பட்டு, பிறகு அவர் அடித்துப்பிடித்துத் திரும்பவும் அதே ஆப்பிளின் தலைவர் ஆனதெல்லாம் பெரும் பழங்கதை! கேவலம், ஒரு நூறு மில்லியன் கூடக் கையில் இல்லாமல் ஜென்ம எதிரி மைக்ரோசாஃப்டிடமே கையேந்திக் கடன் வாங்கும் நிலைமையில் கம்பெனி அப்போது கேட்பாரற்றுக் கிடந்தது.
ஸ்ட்ரெச்சரில் கிடந்த கம்பெனிக்கு ஐபாட் தான் அவர்களுக்கு ஆக்சிஜன் கொடுத்த முதல் தயாரிப்பு. ஆனானப்பட்ட ஐபிஎம், மைக்ரோசாஃப்டெல்லாம் ‘ஹா’வென்று வாய் பிளந்து கொட்டாவி விட்டுக்கொண்டிருந்த நேரத்தில், ஐபாட் ஒன்றை வைத்தே கம்பெனியை ஸ்திரப்படுத்தியது ஜாப்சின் புத்திசாலித்தனம்! ஐபாட் ஆப்பிளில் மட்டுமே ஸ்திரமாக ஒழுங்காக வேலை செய்யும். மற்ற ஆபரேடிங் சிஸ்டம்சுடன் எப்போதுமே சண்டைதான். திடீர் திடீரென்று பாட்டுகள் காணாமல் போகும், அல்லது எல்லாவற்றையுமே அழித்துவிட்டு கல்லுளிமங்கனாய் ஐபாட் ஜடமாய உட்கார்ந்திருக்கும்!
அடுத்ததாக ஐஃபோன் மிகப்பெரிய வெற்றியாம். ஆனால் ஆப்பிள் தன் மூடிய கட்டமைப்பைக் கிஞ்சித்தும் மாற்றுவதாயில்லை. நானும் ஐபோன் வாங்குவதாய் இல்லை! இப்போது ஐஃபோன் 4 ஏகப்பட்ட பிரச்னைகள் என்கிறார்கள்.
HTC Evo 4G உபயோகிக்கிறேன். பிரமாதமான ஃபோன், காமெரா, ஸ்பீட், கூகுள், ஜிமெயில், ஆண்ட்ராய்ட் கனெக்டிவிடி எல்லாமே!
இலவசமாக ஸ்டீவ் ஜாப்சே கெஞ்சிக் கொஞ்சிக் கொடுத்தாலும் அந்த ஐயையோஃபோன் எனக்கு வேண்டவே வேண்டாம்!
Friday, July 09, 2010
செவ்வடையான மசால்வடையே!
------------------------------
’செவ்வடையான மசால் வடையே!’ என்று இப்போது நாம் ஆர்க்கெஸ்ட்ராவோடு பாட்டுப் பாடலாம், ஆர்ப்பரிக்கலாம், கோடிகளைச் செலவழித்துக் குனியமுத்தூரில் கோலாகலமாகக் கொண்டாடலாம். ஜனாதிபதி முதல் ஜால்ரா கவிஞர்கள் வரை நேரே வரச்சொல்லி ஆர்டர் போட்டு, மசால் வடை புகழ் பாடச் சொல்லி ஆனந்த ஏப்பம் விடலாம்.
ஆனால் மசால் வடையின் செவ்வடை ஸ்டேட்டஸ் அவ்வளவு சுலபமாகப் பெறப்பட்டதல்ல!
ஆதிகாலத்திலிருந்தே பலப்பல தினுசு வடைகள் உலகெங்கும் மெயின் டிஷ்ஷாகவும், சைட் டிஷ்ஷாகவும் அசை போடப்பட்டு வந்தாலும், ’செவ்வடை அந்தஸ்து எந்த வடைக்கு?’ என்கிற கேள்வி மட்டும் பல டீக்கடைகளிலும், ‘பார்’களிலும் கேட்கப்பட்டுவந்த கேள்விதான்.
‘என்று தணியும் இந்த தயிர்வடை தாகம்? என்று மடியும் எங்கள் கீரைவடை மோகம்?’ என்று புரட்சி மகாகவி பாரதியாரையே புலம்பவைத்த மேட்டர் அல்லவா!
’செவ்வடையான மசால் வடை’க்குத்தான் எவ்வளவு எதிரிகள், எவ்வளவு அரசியல் உள்குத்துகள்?
இது பற்றிய நமது நிருபரின் கைப்பக்குவக் கிளறல்!
*************************

பாரெங்கும் ஆயிரக் கணக்கான வடைகள் இருந்தாலும், ஏன் இந்தியாவிலேயே பலாப்பழ வடையிலிருந்து, பம்பளிமாஸ் வடை வரை இருந்தாலும், தென்னகத்தில் புழங்கும், குறிப்பாகச் சென்னையில் மணக்கும் மசால் வடையே செவ்வடை அந்தஸ்துக்கு உரியது என்று இந்திய அரசும் அறிவித்திருக்கிறது. இதன் பின்னணி அரசியல் என்ன? ஆலூ வடை, தயிர் வடை, கீரை வடை, காலிஃப்ளவர் வடை, வெங்காய வடை போன்ற இந்திய வடைகளுக்குள்ளும் இந்த செவ்வடை ஸ்டேடசுக்குக் கடும் போட்டி. மற்ற எல்லா வடைகளையும் ஊசிப்போனவை, உப்பு போதவில்லை, ‘கப்’படிக்கிறது, காரம் போதவில்லை என்றெல்லாம் சொல்லித் துப்பி மசால் வடை மட்டுமே செவ்வடை ஏன்று வாய் கொள்ளாமல் எல்லோரையும் சொல்லவைத்தது எப்படி?
ஐக்கிய நாடுகள் சபை இது குறித்து வெளிபிட்ட குறிப்பொன்றில், ‘எவ்வடை செவ்வடை?’ என்பதையெல்லாம் இனிமேல் தீர்மானிக்க ஊசவடோ என்கிற ஜப்பானியர் ஒருவடை -மன்னிக்கவும், ஒருவரை- நியமித்திருக்கிறது என்பது தெரியவந்தது.
என்னடா இது மசால்வடைக்கு வந்த சோதனை, ஜப்பானுக்கும் மசால் வடைக்கும் என்னய்யா சம்பந்தம் என்றெல்லாம் கேட்டால் நாம் வடைத்துரோகி ஆகி விடுவோம் என்று பயமாகவும் இருக்கிறது. இருந்தாலும் அவரையே ஒரு முறை துணிந்து இதுபற்றிக் கேட்டுவிடுவோம் என்று அவரைத் தொலைபேசினேன்.
சம்பிரதாயமாக முதலில் ஏழெட்டு தடவை குனிந்து நிமிர்ந்து ’யூகோசோ இரஷாய் மாஷிடா’ என்று நாங்கள் வணக்கங்கள் சொல்லிக்கொண்ட பிறகு நான் முதுகுவலியுடன் என் சந்தேகத்தைக் கேட்டேன்:
”அறுவடைவீடுகொண்ட திருமுருகா’ என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு முருகன் ஆறு வடைகளை ஒரே நேரத்தில் எப்படி அபேஸ் செய்தார் என்கிற பிரமிப்பு வரும். நக்கீரரும் ஆறு வடைகளைப் பற்றித்தானே பொதுவில் புகழ்ந்திருக்கிறார், இதிலே மசால் வடைக்கு மட்டும் அப்படி என்ன தனி மகிமையை நீங்கள் கண்டீர்கள்? செவ்வடையாக மசால்வடையை மட்டும் எப்படி அங்கீகரித்தீர்கள்?”
ஊசவடோ ஒரு முறை ஜப்பானிய மொழியில் கனைத்துக் கொண்டார்.
”திருமுருகாற்றுவடையில் ஆறுவடைகளைப் பற்றிச் சொல்லி இருப்பதாகச் சொல்வதே முதலில் தவறு. 'ஆறு' என்றால் வழி; 'ஆற்றுப்படுத்துதல்' என்றால் 'வழிகாட்டுதல்'. 'ஆற்றுவடை' என்பது தமிழ்க் கவிதை வகைகளில் ஒன்று. ஒரு வள்ளலிடம் பரிசுகள் பல பெற்றுத் தன் வறுமை அழிந்த ஒருவன், வறுமையில் வாடும் இன்னொருவனை அந்த வள்ளல் இருக்கும் இடம், போகும் வழி, வள்ளலின் ஊர், பெயர், அவன் குணங்கள் யாவற்றையும் சொல்லி, "அங்கே போய் உன் வறுமையை நீக்கிக்கொள், பெரிய விருந்து இல்லாவிட்டாலும், வடையாவது கிடைக்கும்" என்று ஆற்றுப்படுத்துவது இப்பாடல் வகையின் இலக்கணம். திருமுருகாற்றுவடை என்ற நூலில் முருகன் இருக்கும் ஆறு தலங்களின் பெருமைகளைக் கூறி ஆத்மவடைக்கும் வழிகாட்டுகிறார் நூலாசிரியர் நக்கீரர்.
’ஆற்றுவடையில் சொல்லப்பட்ட ஆறு வீடுகள்’ என்ற வழக்கு மாறி, பின்பு படைவீடு, ஆறுபடை வீடு , ஆறு வடை வீடு என்று பேச்சு வழக்கிலும், நூல்களிலும் வரத் தொடங்கின என்பது தணிகைமணி செங்கல்வராய பிள்ளை போன்ற அறிஞர்களின் கருத்து. அருணகிரிநாதர் கூட 'ஆறுபடை வீடு' அல்லது ‘ஆறுவடை வீடு’ என்கிற சொற்றொடர்களைப் பயன்படுத்தாமல், 'ஆறு திருப்பதி' 'அறுபத நிலை' 'ஆறு நிலை' போன்ற சொற்றொடர்களையே பயன்படுத்தினார். குமரகுருபரர் கூட ஆறு வடை வீடு என்று சொல்லவில்லை. 'ஆறு திருப்பதி கண்டாறெழுத்தும் அன்பினுடன் கூறுமவர் சிந்தை குடிகொண்டோனே' என்கிறது கந்தர் கலிவெண்பா. குமரகுருபரர் 17-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். அதனால்... ஆறு படை வீடுகள் என்ற தொடர் கடந்த 400-ஆண்டுகளில் வந்த ஒரு சொற்றொடர் என்பது தெளிவாகிறது. ஆறுவடை என்கிற பதமே தற்காலப் புழக்கத்தில் இருக்கிறது”
இப்படிப் போட்டு சாத்து சாத்தென்று சுத்தத் தமிழில் சாத்தினால் நான் என்ன செய்வேன்? ’சயோனாரா’ கூடச் சொல்லாமல் லைனை உடனே கட் செய்துவிட்டேன்.
இந்த ஓட்டை வடை மேட்டர் இவ்வளவு சீரியஸான மேட்டர் என்பது தெரியாததால், வேறு யாரைக் கேட்டுத் தெளியலாம் என்று நான் யோசித்தேன்.
சுள்ளிக்காட்டுப் புலவர் ஒருவரை செல்போனில் பிடித்தேன்.
’எனக்கு டை பிடிக்கும், அடை பிடிக்கும், சொல்லடை பிடிக்கும், துடியிடை பிடிக்கும், நன்னடை பிடிக்கும், ஏன் எனக்கு செவ்வடையான மசால்வடையும் மிகப் பிடிக்கும்’
ஆஹா, யாப்பு, காப்பு, ஆப்பு என்று செமத்தியாக ஏதோ மாட்டிக்கொண்டேன் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.
’என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக மசால்வடை செய்யுமாறே’ என்று திருமூலரே திருமந்திரத்தில் என் புகழைப் பற்றிச் சொல்லி விட்டார்’ என்று சொந்த சரக்கைப் பற்றி ஆரம்பித்தார் சுள்ளிக்காட்டார்.
திருமந்திரத்துக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம், அவர் அப்படியா சொன்னார் என்று நான் திரு திருவென்று விழிக்கையில் அவர் தொடர்ந்தார்:
”மசால்வடையை மட்டம் தட்டிப்பேசுவது ஆரிய, பார்ப்பன சூழ்ச்சி. அது பலிக்காமல் போனதால் இப்போது மசால்வடையும் கைபர் கணவாய் வழியாக இங்கே வந்ததுதான் என்று ‘சோ’ போன்றவர்கள் சொல்லி வருவது கண்டனத்திற்குரியது. மாஷாபூபம் என்கிற மொத்தை வடையைத்தான் சவுண்டி பிராமணர்கள் காலம் காலமாகச் சாப்பிட்டு ஊரையே நாறடித்து வந்தார்கள் என்பதற்கு சிலப்பதிகாரத்திலேயே குறிப்பு இருக்கிறது.
’நீலவிதானத்து நித்திலப் பூப்பந்தர்க்கீழ்
வான் ஊர் மதியம் சகடனைய வானத்துச்
சாலியொரு மீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மசால்வடை காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார் கண் நோன்பென்னை’
என்று சிலப்பதிகார நூல் கண்ணகி_கோவலன் திருமணச் சடங்கைக் கூறுகிறது. அங்கே நெருப்பிலே இடப்பட்டது மசால்வடையே அன்றித் தயிர் வடையல்ல, சாம்பார் வடையுமல்ல. சாம்பாரையோ, தயிரையோ நெருப்பிலே போட்டால் அது அணைந்து போய் துர்சகுனமாகும் என்பது பகுத்தறிவுத் தமிழருக்குத் தெரியாததல்ல. மசால்வடை நின்று திகுதிகுவென்று எரியும், கமகமவென்று மணக்கும். எலிப்பொறியில் மசால்வடை மணத்துக்காக எலி சிக்குவது போல் என் அன்பினால், காதலினால் உன்னைக் காலம் காலமாகச் சிறை வைக்கப் போகிறேன் என்று மணமகன் சொல்வதாக இங்கே அது குறிப்பினால் உணர்த்தப்படுகிறது.
இங்கே இன்னொரு கருத்தையும் நான் சொல்லிவிடக் கடமைப்பட்டிருப்பதை நினைவு கூர்கிறேன். ‘மாமுது பார்ப்பான்’ என்பது மகா கெழபோல்ட்டான அய்யரைக் குறிக்கும். ஏன் அழகான பிராமண இளைஞனை அங்கே சடங்கு செய்யச் சொல்லாமல் வயதான முதியவரைக் கூப்பிட்டிருக்கிறார்கள், அவன் மேல் ஏன் பெண் வீட்டாருக்கு நம்பிக்கை வரவில்லை என்கிற முக்கியமான விஷயத்தை நான் உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன். இதற்கும் ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிபோலாமா?’வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
‘மசால்வடை காட்டிட’ என்கிற வரிகளை உற்றுக் கவனியுங்கள். தீப ஆராதனை கூட அந்தக் காலத்தில் இருந்தது கிடையாது. கையில் மசால்வடையை வைத்துக்கொண்டு தீப ஆராதனை போல் மேலும் கீழும் ஆட்டி ஆட்டி, நெருப்பையும் சுற்றிச் சுற்றி வருவதே பழந்தமிழர் வழக்கம். பிறகு தான் அது தாலியாகப் பெண்ணின் கழுத்தில் ஏறும். இதை வடைத்தாலி என்றும் கூறுவர். சமீபத்திய பெரும் இதிகாசப் படமொன்றில் நான் இந்த ஐடியாவைச் சொல்லி, பெரிய இயக்குனர் ஒருவரும் இதை ஒரு பாடல் காட்சியில் சேர்த்திருக்கிறார். உசிரே போனாலும் இந்த மாதிரி உதிரிக் காட்சிகளின் உள்குத்தை நீங்கள் ரசிக்காமல் இருக்கக்கூடாதென்பதை இங்கே சொல்லிக் கொல்வதும் என் கடமை. எடிட்டிங்கில் இது கட் பண்ணியிருக்கப்படலாம்., அமிதாபுக்கெல்லாம் இது புரியாது.
சொல்லப்போனால் தங்கத்தில் தாலி கட்டுகின்ற சடங்கு கூட சிலப்பதிகாரத் தமிழரிடையே இருந்தது கிடையாது. தங்கத்தின் விலை கன்னாபின்னாவென்று பிற்காலத்தில் எகிறப்போகிறது, ஒரு கிராம் தங்கம் வாங்கக்கூடக் காசில்லாமல் தமிழன் சிங்கி அடிக்கப் போகிறான் என்பது சிலப்பதிகாரத்திலேயே உட்கருத்தாய்ப் பொதிந்திருக்கிறது. பிற்காலத் தமிழருக்கும் பொருந்தும் வகையில் மஞ்சள் மசால்வடையில் மஞ்சள் நூலைக்கட்டி அதை மணாளன் மங்கையின் கழுத்தில் கட்டி, மங்கையும் அதையே மணாளனும் முதல் மசால் வடையுமே தன் பாக்கியம் என்றெடுத்துக் கண்ணில் ஒத்திக்கொள்கிற வழக்கம், ஒரு கடி கடிக்கிற வழக்கம்தான் (மணாளனை அல்ல, மசால் வடையை) தமிழ்ப் பெண்களின் வழக்கம். அதை விடுத்துத் தமிழ்ப் பெண்களின் கற்புக்கே மாசு கற்பிக்கும் வழியில் வடநாட்டுப் பெண்கள் இங்கே வந்து மசால் வடையாவது மண்ணாங்கட்டியாவது, கல்யாணத்திற்கு முன்பே மசால்வடையை ஒரு வெட்டு வெட்டுவதில் தப்பில்லை என்று சொல்வது விந்தையிலும் விந்தை.”
சார், சார்! போதும், போதும். நீங்க எங்கேயோ கோவில் கட்டற ரேஞ்சுக்குப் போயிட்டீங்க. அப்படியே நிப்பாட்டிக்கறது தான் உங்களுக்கும் எனக்கும் நல்லது”
வெளிநாட்டுக் கிழாரும் சொல்லிவிட்டார், உள்நாட்டுத் தமிழ்ப் புலவரும் சொல்லிவிட்டார், இன்னும் ஒரே ஒரு அரசியல்வியாதியைவாவது கேட்டு விடலாம் என்று தெருமாவைப் பிடித்தேன் போனில்.
**********************
”நாம் அன்றாடம் கலந்தடிக்கும் சாம்பார் வடைக்கும் தயிர் வடைக்கும் கூட செவ்வடை அந்தஸ்து கிடையாதா, தெருமா? இது அடுக்குமா?”
”கிடையவே கிடையாது. சிங்களவனின் சதியால் மல்லுங், சம்போல், சொதி போன்ற சிங்கள ஐட்டங்களுக்கும் செவ்வடை அந்தஸ்து கொடுக்கவேண்டுமென்று அலைகிறது ஒரு ராஜபக்ஷய பட்டாளம். இந்த சதிக்கு ’ரா’ போன்ற நம் உளவு நிறுவனங்களும் துணை போவதே நம் கேவலத்தை, அவலத்தை, வெட்கக்கேட்டை சுட்டிக் காட்டுகிறது. நீண்ட தூர இந்திய ரயில் பயணங்களில் இந்த ஐட்டங்களை செவ்வடை என்று பொய் சொல்லி விற்பதற்கான ஒரு ஒப்பந்தம் இலங்கையுடன் போடப்பட்டிருக்கிறதென்பது எனக்கும் தெரியும். இரயில்களில் செவ்வடை தவிர வேறு எதையாவது யாராவது விற்க முனைந்தால் சும்மா இருக்காது எங்கள் ’செவ்வடை காப்புப் படை’. தண்டவாளத்தைப் பெயர்த்தெடுத்தாவது நாங்கள் இந்த சதியை முறியடிப்போம். ஆனால் அதற்கு முன்னாலேயே எங்கேயாவது துருப்பிடித்த தண்டவாளங்கள் உடைந்து நொறுங்கி விழுந்தால் அதற்கும் எங்கள் செவ்வடை காப்புப் படைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நான் இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன். என் தம்பி கோமானின் கருத்தும் இதேதான் என்று போட்டுக் கொள்ளுங்கள்”
இவ்வளவு பேரைக்கேட்டுவிட்டு சினிமாக்காரர்கள் யாரையும் கருத்து கேட்காமல் விட்டால் எப்படி?
”வெளிநாட்டுப் படப்பிடிப்பிலே நான் இருந்தாலும் உள்நாட்டு செவ்வடை விடயங்கள் எனக்குத் தெரியாமல் போகலாமென்று மனப்பால் குடித்தவர்கள் சற்றே மனங்குமுறிக் கமற நேரிடலாம். ஏனென்றால் கருப்புச் சட்டை போட்டாலும் நானும் செவ்வடைக்காரனே என்பதை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்த லாபமும் இல்லையென்றாலும் அதைச் சொல்லாமல் விட்டுவிட்டால் பொருட்குற்றம் வந்துவிடுமோ என்று நான் பயப்படுவதாக யார் வேண்டுமானாலும் ஒரு நிலைப்பாடு எடுத்துக் கொள்ளட்டும். பரமக்குடி தமிழ்ப் பாட்டி சுட்ட வடையும் மசால்வடையேயன்றி மற்றேதுமில்லை. இது பற்றித் தென்னாப்பிரிக்காவிலே படமெடுக்க நான் ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்து வைத்துக்கொண்டு கிரேக்க நாட்டு ஃபைனான்சுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். அதிலே நான் செவ்வடை மசால்வடையாகவே நடிப்பதாக வரும் செய்திகளின் உண்மைத்தொனியை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் உங்கள் ஊகத்திற்கே விடலாமா என்று நான் யோசிக்கிறேன்”
இத்தனை பிரபலங்களைப் பேட்டி கண்டபின், சு. சுவாமியைப் பேட்டி காணாவிட்டால் எப்படி இதெல்லாம் பூரணமாகும் என்று நான் யோசித்துக்கொண்டே இருக்கும்போது என் செல்பேசி ஒலித்தது.
“இந்த மசால் வடை - செவ்வடை மேட்டர்ல நீங்க யார் யாரைப் பேட்டி கண்டேள், அவா என்னென்ன சொன்னாள்ங்கறதெல்லாம் நேக்கு எஃப்பிஐ ரிப்போர்ட்ஸ் கொடுத்துட்டா. இன் ஃபேக்ட் நான் இப்ப சான் ஃப்ரான்சிஸ்கோவில தான் இருக்கேன். நீங்க என்னைக் கேட்கலைன்னாலும் நான் சொல்றேன் எழுதிக்குங்கோ. ஜூனியர் கக்கன்ஜி தெரியுமில்லியா, அவரும் இப்ப என் கூடத்தான் வந்திருக்கார். அவர் தான் அடுத்த தமிழ்நாட்டு முதல்வர். அம்மாவும் ஓகேன்னு கொடநாட்லேர்ந்து சொல்லிட்டா.
இந்த செவ்வடை மேட்டர்லாம் சுத்த ஹம்பக். சோனியாவும் கருணாநிதியும் சேர்ந்து பண்ற அட்டகாசம். ஒபாமாவே என்னை போன்ல கூப்பிட்டுச் சொல்லிட்டார். நான் வோர்ல்ட் கோர்ட்ல இது பத்திக் கம்ப்ளெய்ன் பண்ணி இருக்கேன். ‘தி ஹேக்’ல ஆர்க்யூ பண்ண டேட்ஸ் கொடுத்துட்டா. முப்பது பில்லியன் நஷ்ட ஈடு கேட்டு போபால் விக்டிம்சுக்குத் தந்துடுவேன்.
செவ்வடையாவது, வெங்காய அடையாவது? எல்லாமே சுத்தப் பேத்தல். ஓட்டையே இல்லாத மசால் வடையிலே எப்படிப்பா தாலியை கோர்ப்பாளாம்?
இன் ஃபேக்ட் இந்த வடைக்கெல்லாம் ஆதிமூலமே அமெரிக்காள் சாப்டற பேகிள் (Bagel) தான். மாவுல ஓட்டை இல்லாட்டா பேகிள். ஓட்டை போட்டுட்டா அது டோநட் (doughnut). எங்க டோநட்டையும் சேப்பு டோநட்டுன்னு சொல்லுங்கோன்னு அமெரிக்காள் பிடிவாதம் புடிக்றாளா, என்ன? நம்மளோட இட்லி, தோசை, வடை எல்லாமே ரொம்ப ஹெவி வாயுப் பண்டம். இதையெல்லாம் ரெகுலரா சாப்டா, ராக்கெட் இல்லாமலேயே நாம் சந்திரனுக்குப் போய்டலாம்னு யாரோ தமிழ்நாட்ல தப்புத்தப்பா சொல்லிக் கொடுத்திருக்கா.
ஒரு ரகஸ்யம் சொல்றேன். சசிகலா கிட்டே மட்டும் சொல்லிடாதீங்கோ. டோநட்லேருந்து தான் வடையே வந்துது.
நான் திரும்ப வந்து ‘முருகன் டோநட் கடை’ன்னு ஆரம்பிக்கப் போறேன். அவஸ்யம் திறப்பு விழாவுக்கு வந்துடுங்கோ!”
எனக்கு வயிற்றைக் கலக்குவது போல் இருந்தது. நானே லைனை கட் பண்ணி விட்டேன்.
இவ்வடை தோற்கின் எவ்வடை ஜெயிக்கும்?!
************************ நன்றி: கல்கி
Friday, May 28, 2010
ஏப்ரல் சென்னையில் மூன்று வாரங்கள்!
மார்ச் மாதத்திலிருந்தே சுட்டெரிக்கும் சென்னை சூரியன் பற்றி எனக்கு காபரா செய்திகள் வந்து கொண்டிருந்தன. சென்ற வருடம் ஏப்ரலில் காய்ந்து கருகி வியர்த்து, பாதி மாதத்திலேயே பாய்ந்தோடி எல்லே திரும்பியது நினைவில் சூடாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்!
‘வெயிலோடு உறவாடி, வெயிலோடு விளையாடி’ யெல்லாம் பாட்டில் கேட்க மட்டுமே ஆனந்தம். இந்த வருட 2010 வெயில் என்னை அந்த அளவுக்கு போட்டுச் சாத்தி விட்டது.
ஏப்ரல் முதல் வார சென்னையில் ஒரு பின்னிரவு நேரத்தில் வந்து இறங்கியபோதே எரிச்சல். ஹாங்காங்கிலிருந்து லக்கேஜ் கட்டக்கடைசியாக வந்து சேர்ந்தது. வழக்கம்போல் ஏர்போர்ட் மகானுபாவன்கள் ஏர் கண்டிஷனை ஆஃப் செய்து வைத்திருந்தார்கள். (டிபார்ச்சர் லவுஞ்சிலும் ஏசி, ஃபேன் எல்லாவற்றையும் இரவு நேரங்களில் எப்போதும் ஆஃப் செய்து- வேண்டுமென்றே ஃபேன் கனெக்ஷன்களைத் துண்டித்தும் வைத்து- பிரயாணிகளை நாறடிக்கும் ஒரே இண்டர்நேஷனல் ஏர்போர்ட் என்கிற பெருமை சென்னைக்குப் பல வருடங்களாகவே உண்டு).
வர வேண்டிய காரைக் காணோம். ஏழெட்டு தடவை போனுக்குப் பிறகு தூக்கம்+சப்பைக் கலக்கத்தில் டிரைவர் “சார், இன்னிக்கா வரீங்க? நாளைக்குன்னுல்ல நெனச்சேன்!”
என்றைக்குத்தான் அந்த ஏர்போர்ட்டைச் சரிசெய்வார்களோ, ஆண்டவனுக்கே வெளிச்சம். லக்கேஜை வெளியில் உருட்டிக்கொண்டு வரும்போதே கரடுமுரடான, மேடுபள்ளப் பாதையில் எல்லாமே சாய்ந்து கொட்டுகிறது. நான் மட்டும் தனியாக அல்ல, சக பிரயாணிகளும் இருட்டில் அல்லாடுகிறார்கள். ‘டிரைவரைக் காணோமே’ என்று இருட்டில் அலையும் என் போன்ற திக்கற்ற பார்வதிகளைக் குறிவைத்தே ஒரு கழுகு வியாபாரிக் கூட்டம் அலைகிறது. “சார், நம்ம வண்டில வாங்க சார்”, “டேய், என்கிட்ட மோதாதே, சாரு என்னியத்தான் மொதல்லியே பார்த்தாரு. இல்லியா சார்?”, “இப்ப இன்னான்ற நீயு?”- குப்பென்ற சாராய நெடி.
தலையில் அடித்துக்கொள்கிறேன்.
அங்கீகாரமில்லாத ஓட்டை வண்டி, செக்யூரிடிகளுடனும், பார்க்கிங் குத்தகைக்காரர்களுடனும் மல்லுக்கட்டும் லுங்கி டிரைவர், அநியாய விலை- எல்லா எரிச்சலையும் தாண்டி காஸ்மோபாலிட்டன் கிளப்புக்கு வண்டியை விடச் சொன்னேன். போகும் வழியில் ஒரு திடீர் யோசனை. தி. நகர் ஆபீசில் எட்டிப்பார்த்து விட்டுப் போனாலென்ன? 24 பை 7 தானே!
ஆபீசின் ஏசி சுகமும், கெஸ்ட் ஹவுசின் புதுப் படுக்கை, தலையணையும் காஸ்மோபாலிடன் ஐடியாவையே என்னை கேன்சல் செய்ய வைத்தன. தூக்கக் கலக்கத்தில் கிளப் ரிசப்ஷனிஸ்ட் “என்ன ரிசர்வேஷன்? ஏது ரிசர்வேஷன்? எதுக்காக ரிசர்வேஷன்” என்று அனத்தியதும் இன்னொரு காரணம்.
படுக்கும்போது கிட்டத்தட்ட விடிகாலை நாலு மணி ஆகிவிட்டாலும், அதிக நேரம் தூங்கமுடியவில்லை. சீக்கிரமே எழுந்து காஃபியைத் தேடி அலைய ஆரம்பித்தேன். ஆங்காங்கே ஒரு சில டீக்கடைகளில் கொஞ்சம் ‘மினுக் மினுக்’கென்று வெளிச்சம் தெரிந்தாலும், இந்த நகரம் விழித்துக்கொள்ள இன்னும் ஒரு இரண்டு மணி நேரமாவது ஆகுமென்பது தெரிந்து மேலும் மேலும் நடக்க ஆரம்பித்தேன்.
ஏழு மணி வாக்கில் முருகன் இட்லி உபயத்தில் ‘ஜகதோத்தாரணா’ என்று பாடமுடிந்தாலும், வெயில் சுளீரென்று பின் கழுத்தில் இறங்குவதையும், வியர்வை ஆறாகப் பெருகி ஓடுவதையும் நினைத்து, “ஆஹா, வசம்மா ம்ம்ம்மாட்டிக்கிட்டம்” என்று மனது அழுவாச்சியாவதை மறுக்க முடியவில்லை!
(தொடரும்)
Friday, March 19, 2010
வீட்டுத் தலைவனுக்கு ஒரு நாள் விடுமுறை!
“ஏங்க, எத்தனை நாளாச்சு உங்ககிட்ட சொல்லி? என் வண்டியில ரைட் சைட் மிர்ரர் அட்ஜஸ்ட் பண்ணவே முடியாம அறுந்து தொங்குது. ஆக்சிஜன் சென்ஸார் மாத்தணும்னு வேற சொன்னீங்க. அப்படியே காரையும் கொஞ்சம் வாஷ் பண்ணி ...ம்ஹும். நான் சொல்றது என்னிக்குத்தான் உங்க காதுல விழுந்திருக்கு? ஏற்கனவே இருபத்தி நாலு மணி நேரமும் நெட்ல, இப்போ இந்த ட்விட்டர் சனியன் வேற வந்திருச்சா, வேற வினையே வேண்டாம்”
அம்மாவோடு பெண்ணும் பின்பாட்டில் சேர்ந்து கொண்டாள்.
“அப்பா, ஏன் என்னோட கார் ஸ்லோ ஸ்பீட்ல கொஞ்சம் உதறர மாதிரியே இருக்கு. இதுல இஞ்சின்னு ஒண்ணு இருக்கா, இல்லியா? போன மாசம் தானே மெகானிக் கிட்ட எடுத்துட்டுப் போனே? அவன் உன்னை ரொம்பவும் மொட்டை அடிக்கறாம்பா. அவன் கேரேஜ்ல வேலை செய்யுற கார், வெளியே வந்தவுடனே இந்தப் பாடு படுத்துது? இந்த வாரம் நான் ரொம்ப பிசி. அடுத்த வாரம் என்னிக்கு நீ இதை எடுத்துட்டுப் போயி சரி பண்ணலாம்னு நாளன்னிக்கு ஈவினிங் 4 டு 5 சொல்றேன்”
இருமுனைத் தாக்குதலிலிருந்து தப்பிக்க, சமயோசிதமாக, பையனைக் கூப்பிட்டேன், ‘அவதார்’ பார்த்து விடலாம் அவனுடன் என்கிற அடிமன நப்பாசையுடன்.
“ஹலோ, அப்பாவா? கூப்பிட்டிங்களா? என்ன விஷயம்? சீக்கிரம் சொல்லுங்க. மீட்டிங்ல இருக்கேன்”
“ இல்லடா, உன் கார் ஆயில் சேஞ்ச் பண்ணி ரொம்ப நாளாச்சே. அதான் அதைப் பண்ணிட்டு நாம ரெண்டு பேரும் ...”
“அதுக்கெல்லாம் இப்ப நேரம் இல்லைப்பா. என்னோட டிரக் சும்மா தான் நிக்குது. அதை வேணும்னா எடுத்துட்டுப் போய் டிங்கரிங் பண்ணிடுங்க. என் ஃப்ரண்ட்ஸ் எடுத்துக்கிட்டுப் போய் எங்கேயெல்லாமோ இடிச்சுட்டுக் கொண்டு வந்து சைலண்டா கொடுத்துடறாங்க. ஓகேப்பா. அப்புறம் பேசலாம். வேற கால் வருது. பை”
என் சொந்தங்களின் கார் புலம்பல்கள் இருக்கட்டும். என் சொந்தக் காரை எடுத்துக்கொண்டு போய் ட்யூன் பண்ணி, கொஞ்சம் அப்டேக் வால்வ் சத்தத்தை சரி பண்ணி, வாஷ் பண்ணி ...ஊஹும், அதற்கு இன்றும் நேரம் கிடைக்காது.
“ஏங்க, இன்னிக்கு உங்களுக்கு லீவு தானே?”
“இல்லியே, நான், வந்து, ஒரு அரை நாள், வந்து லேட்டா...”
“அப்ப ஒண்ணு செய்யுங்க. சண்டே பார்ட்டிக்கு ஒரு 40, 50 சேர்ஸ் தேவையா இருக்கும். பையன் டிரக்கை எடுத்துக்கிட்டு போய், எல்லாத்தையும் என் ஃப்ரண்ட் வீட்டில இருந்து கொண்டு வந்துட்டீங்கன்னா, 200 டாலர் மிச்சம்”
“இல்லம்மா, பையன் டிரக்ல ...”
”மசம்சன்னு ஏதாவது காரணம் சொல்லாதீங்க. சேர்களெல்லாம் டிரக்லயே கொண்டு வந்தப்பறமா, டேபிள்ஸ் எங்கேயிருந்து வரணும்னு சொல்றேன். பை”
ஆங்காங்கே நசுங்கிய பித்தளைச் சொம்பு மாதிரி இருந்த பையனின் புது டிரக்கில் அவன் நட்பு நாயகர்களின் ஆழம் தெரிந்தது. டிரக்கை எடுத்து வந்தபிறகு தான் அதன் பின்வாசலைத் திறக்க சாவி இல்லை என்பதும், அலாகாபாத் திருவேணி சங்கமத்தில் முழுக்கினால் கூட அதன் புற அழுக்கு போகாதென்பதும் தெள்ளெனத் தெரிந்தது.
கள்ளச்சாவிகள் எதுவுமே வேலை செய்யாமல் நாள் களைத்துப்போனபோது, 30 ஒற்றைச் சாவிகள் வீட்டு அலமாரிகளில் ஆங்காங்கே கிடைத்திருப்பதாகவும், அதில் எது வேலை செய்யலாமென்று பார்க்கும்படியும் ஒரு அவசர டெக்ஸ்ட் மெசேஜ்.
சாவி கிடைக்குமா, கிடைத்தாலும் அது வேலை செய்யுமா, அந்த வண்டியில் 40 நாற்காலிகளை ஒரேயடியாக ஒரே நேரத்தில் ஏற்றிவர முடியுமா? இதன் டைமென்ஷன்ஸ் என்ன? லாஜிஸ்டிக்ஸ் என்ன? போன்ற கேள்விகளெல்லாம் நானே என்னைக் கேட்டுக்கொண்டு பதிலும் தேடியாக வேண்டிய நிலமை.
இந்தக் கொடுமைக்கு ஆபீசுக்கே போய்த் தொலைத்திருக்கலாம்.
யார் செய்த புண்ணியமோ, டிரக்கின் சொர்க்கவாசல் எப்படியோ திறந்து விட்டது.
நாற்காலிகளை வண்டியில் ஏற்றலாம் என்று பார்த்தால், அத்தனையும் ராஜா ராணி சைசில், கை மடங்காமல், கால் மடங்காமல், பாரிசவாயு, பக்கவாதத்தால் பல்லிளித்து, பி. வாசு படத்து பண்டரிபாயாய் செண்டிமெண்டுடன் விறைத்து நின்றன. வெட்டைவெளியில் கிடந்த அந்த நாற்காலிகளில் ஆயிரம் குருவிகளும், ஐநூறு காக்காய்களும் லெட்ரின் கட்டி சுகபேதி வாழ்க்கை வாழ்ந்த செப்பேட்டு சுவடுகள் வெட்ட வெளிச்சத்தில் நாறித் தொலைத்தன.
“ஐ திங்க் ஒன்ஸ் யூ வாஷ் தீஸ் சேர்ஸ், எவ்ரிதிங் வில் பி ஓகே, ரைட்?”
“வேண்டாம், வேண்டாம். நானே பார்த்துக்கொள்கிறேன்”
நாங்கள் கண்ணன் பரம்பரை அல்லவா? ‘ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜா’
எல்லா சேர்களையும் மொத்தமாக ஸ்விம்மிங் பூலில் அமிழ்த்தி விடலாமா அல்லது அவை மேல் பெட்ரோலைக் கொட்டி க்ளைமேக்ஸ் காட்சி மாதிரி ஏதாவது செய்து விடலாமா என்று யோசித்த வண்ணம், “ஓகே. ஐ வில் க்ளீன் தெம்” என்றேன்.
நடமாடும் கொலுவண்டி மாதிரி ஒருவழியாக அத்தனை நாற்காலிகளையும் டிரக்கில் மூன்றடுக்காய ஏற்றி ‘ஆடாது அசங்காது வா கண்ணா’ என்று மத்யமாவதியில் பாடியபடி ஃப்ரீவேயில் ஏறினால் இரண்டே நிமிடங்களில் டிரக் மக்கர் பண்ணி நின்று விட்டது.
அடாடா, என்னிடம் யார் எந்த வண்டியைக் கொடுத்தாலும் பெட்ரோலை சுத்தமாக உறிஞ்சி எடுத்தபின்னர் தானே கொடுப்பார்கள்? இந்த பால பாடம் இன்று மட்டும் எப்படி மறந்தே போனது?
இந்தப்பக்கம் 8 லேன்கள், அந்தப் பக்கம் 8 லேன்கள் என்று அசுர வாகனங்களும் 18 வீலர்களும் அலறிச் செல்லும் அமெரிக்க ஃப்ரீவேயில் பெட்ரோல் இல்லாமல் ஒரு ஓரமாக பேஸ்தடித்து நான் நின்றிருக்கின்ற முதல் நாள் இன்றுதான்.
AAA-வைக் கூப்பிட்டால் “16 டிஜிட் மெம்பர்ஷிப் நம்பர் என்ன? காரின் லைசென்ஸ்ப்ளேட் நம்பர் என்ன? கார் எஞ்சினில் பொறித்திருக்கும் ரகசிய எண் என்ன? என்று கே.பி. சுந்தராம்பாள் மாதிரி என்னென்னவோ கேள்விகள் மெஷின் குரலில் கேட்டபிறகு, மனிதக்குரலில் ”அங்கேயே நில்லுங்கள். ஜாக்கிரதை. வண்டியை விட்டு இறங்கவேண்டாம். அரை மணி நேரத்தில் வந்து விடுகிறோம்” என்கிற கரிசனம் வேறு.
தனிப் புலமபலை மனைவியிடம்தானே புலம்பமுடியும்? “என்னம்மா இது, சேர்ஸ் மகா த்ராபையா இருக்கும்போலே இருக்கே? வழக்கம் போல வாடகைக்கே எடுத்திருக்கலாமோ?”
“அவ வீட்ல இருக்கற சேர்ஸ் சுமாரா தான் இருக்கும்னு எனக்குத் தெரியாதாக்கும்? அதெல்லாம் மொதல்லயே யோசிச்சு வெச்சுட்டேன். நீங்க வீட்டுக்குப் போனப்பறமா, ஸ்பேர் ரூம்ல சேர் கவர்ஸ் மூடி வெச்சிருக்கேன். அதையெல்லாம் எடுத்து, வாஷ் பண்ணி, ஐயர்ன் பண்ணி, ஹலோ, ஹலோ, காலை கட் பண்ணிட்டீங்களா?”
போனில் கூட யாரிடமும் எதுவும் பேசப் பிடிக்காமல், “என்னடா இது எல்லேக்கு வந்த சோதனை?” என்று வெயிலில் களைத்து நிற்கும்போது இன்னொரு டிரக் என் முன் வந்து அவசரமாக நின்றது. அட, AAA அதற்குள்ளே வந்து விட்டதா? இல்லை, உற்றுப் பார்த்தால் ‘மெட்ரோ ஹெல்ப் லாஸ் ஏஞ்சல்ஸ்’ என்று ஏதோ எழுதி இருந்தது.
நாங்கள் கட்டுகிற மோட்டார் வரி உண்மையாகவே பலன் தரும் நேரம்.
“என்ன உதவி வேண்டும்? ஒரு கேலன் பெட்ரோல் தந்தால் அடுத்த பெட்ரோல் பங்க் வரை போய் விடுவீர்களா?”
“கண்டிப்பாக. எரிபொருள்தரு கோமானே, உங்கள் குலம் ஏற்றம் பெற்றுப் பல்லாண்டு வாழ்க”
லஞ்சம் கிடையாது. டிப்ஸ் சந்தோஷமாக வாங்கிக்கொள்ளப்பட்டது.
வண்டி சீறி எழுந்து, நான் “அப்பாடா” என்பதற்குள் ஆபீசிலிருந்து போன். “லேப்டாப் கையில வெச்சிருக்கீங்களா, சார்? முடிஞ்சா நெட்வொர்க் ஆக்செஸ் பண்ணி ...”
நான் ரிட்டையர் ஆனபின் காசி, ராமேஸ்வரம் எல்லாம் போவேனோ தெரியாது. கண்டிப்பாக இங்கே எனக்கு கார் மெகானிக் வேலை காத்திருக்கிறது.
ஒரே குறை. காசு மட்டும், பத்து பைசா கூட துட்டு பேறாது!
Thursday, February 18, 2010
ஆள், படை, அடியாள் சேனை, அடிப்படைத் தேவை!
துப்பாக்கிச்சூடுகள், என்கௌண்டர்கள், ரவுடிகள் மோதல், அசோக் நகர், அண்ணா நகர் போன்ற மேல்தட்டுக் குடியிருப்புகளில் கூட அடுக்கடுக்கான கொலை சம்பவங்கள், செயின் பறிப்பு, போதை மருந்துக் கும்பல் என்று பத்திரிகைகள் அன்றாடம் அலறுகின்றன.
ஆட்சியாளர்கள் காதில் இதெல்லாம் விழுகிறதா என்றே தெரியவில்லை. அவர்களுக்கு வால் பிடித்து ஜால்ரா போடவே போலீசுக்கு நேரம் போதவில்லை போலும்!
சென்னையில் எனக்குத் தெரிந்து பல நடிகர்கள், ரியல் எஸ்டேட் தொழில் பண்ணுபவர்கள் சின்னச்சின்ன அடியாள் கும்பல்களை வேலைக்கு வைத்திருக்கிறார்கள். தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறதோ இல்லையோ, கட்டைப் பஞ்சாயத்தில் நமக்குத்தான் அகில இந்தியாவிலும் முதலிடம்!
சென்ற வருடம், தி. நகரில் “எங்கள் வீட்டு வாசலில் காரை நிறுத்தாதே” என்று தாடி நடிகர் ஒருவரின் வீட்டு வாசலில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட அவர்கள் வீட்டு அடியாள் கும்பல், தயாராக வைத்திருந்த உருட்டுக் கட்டைகளுடன் கார்களை அடித்து நொறுக்கி, மிகவும் சாதாரண, நடுத்தர வர்க்க, பொறுப்புள்ள வேலைகளில் இருக்கும் குடிமக்களை அடித்து, உதைத்து, கை கால்களை உடைத்து விரட்டிய சம்பவம், என்னை சென்னை பற்றியே திகிலுறச் செய்கிறது.
அடிதடிகளில் கொஞ்சமும் பரிச்சமில்லாத என் நண்பன் ஒருவன், வாக்குவாதத்தை தடுக்கப்போய், தர்ம அடி வாங்க நேர்ந்த விழுப்புண்களை என் கண்முன் காட்டியபோது என்னால் நம்பவே முடியவில்லை. இத்தனைக்கும் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் ப்ளாட்ஃபாரம் ஓரமாகத்தான் காரை நிறுத்தியதாக அவர்கள் சொன்னார்கள். உருட்டுக்கட்டைப் போர்ப்படை வீரர்களை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை என்பது உண்மை.
டாடா சுமோவிலும் ஆட்டோக்களிலும் ஏதாவதொரு கட்சிக் கொடி போட்டுக்கொண்டு விட்டால் யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்யலாமா?
அசந்தர்ப்பமாக எங்கேயோ ஏதோ ஜோக் அடிக்கப்போய், அதையே ஒரு சாக்காக வைத்துக்கொண்டு நடிகர் ஜெயராம் வீடு தாக்கப்பட்ட நிகழ்ச்சி முடிவதற்குள்ளாகவே, அடுத்து இன்னொரு பயங்கரம்!
அஜீத் பெயரைச்சொல்லி ஒரு அடியாள் கும்பல் ஸ்டண்ட்மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்தின் வீடு புகுந்து காரை நொறுக்கியதாம்.
பத்திரிகைகளில் போடுகிறார்கள், டீவியில் காட்டுகிறார்கள் என்பதற்காகவே சில்லறைக் கட்சி சித்தர்கள் ஓவராக உதார் விடுவது, மகா கேவலம்!
என்று தணியும் இந்த தீவிரவாத மோகம் ?!
Thursday, February 11, 2010
(ஆதி கால) சாம்கோ!
தென்சென்னையின் அரசியல், கலாச்சார, ஆன்மீக, பாரம்பரிய பின்புலன் தெரியாத வெளியூர் வாசகர்களுக்கான ஒரு சிறு முன்னறிவிப்பு:
சென்னை என்றால் தென்சென்னை தான். தென்சென்னை என்றால் மைலாப்பூர் தான்! அபிராமபுரம் என்பது மைலாப்பூரை ஒட்டிய வளமான ஒரு சிறு பகுதி. ‘தம்மாத்துண்டு’ ஏரியா தான் என்றாலும் ஆழ்வார்பேட்டைக்கும் மைலாப்பூருக்கும் இடையே இருப்பதால் இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஏரியா ஆகிப்போனது.
அதுவும் இப்போது இருக்கும் ஆழ்வார்பேட்டை ரவுண்ட் தாணா பகுதி ஒரு அபத்தமான சின்ன ஃப்ளைஓவரின் கீழ் தற்போது மறைந்து கிடந்தாலும், அப்போது மேற்கு மூலையில் கமல் வீடு, கிழக்கு மூலையில் சாம்கோ ஹோட்டல். பாக்கி இன்னும் எல்லா மூலைகளிலும் பெட்ரோல் பங்குகள், ஆட்டோ ஸ்டாண்டுகள், பெட்டிக்கடைகள் என்று ‘ஷகரா’ன கலகலப்பான ஏரியா.
சமீபத்தில் எழுத்தாள நண்பர் ச.ந.கண்ணன் (சக சாப்பாட்டுராமன் என்பதறிக)சென்னையின் எந்தெந்த ஹோட்டல்களில் எந்தெந்த சைவ, அசைவ ஐட்டங்கள் நன்றாக இருக்கும், இருக்காது என்பது பற்றியெல்லாம் ஒரு திறனாய்வே எழுதி இருந்ததைப் படித்துக் கொஞ்சம் பொறாமை கலந்த பசியேப்பம் விடும் வாய்ப்பு / எரிச்சல் எனக்குக் கிடைத்தது.
வரலாற்று முக்கியம் வாய்ந்த ‘சாம்கோ’ பற்றி நாங்கள் தனி மடல்களில் சம்பாஷிக்கலானோம். தற்சமய சாம்கோ ரொம்பவும் மாடர்னாக ஆகி விட்டதாகவும் சர்வீஸ் அம்பேல் ஆகி விட்டதாகவும் அவர் புலம்பி இருந்தார்.
ஆதிகால சாம்கோ எப்படி இருந்தது?
அசைவ ஐட்டங்களுக்கு அது ஒரு மெக்கா என்பதாலும், மேல் மாடியில் ‘தெரிந்தவர்களுக்கு மட்டும்’ ஏர் கண்டிஷன், தாகசாந்திக்கான ‘பூத்’ வசதிகள் உண்டென்பதாலும் இளைஞர்களிடையே அப்போது சாம்கோ படு பிரசித்தம்.
என் நண்பர்கள் குழாமில் பலரும்- பிராமண நண்பர்கள் உட்பட - அசைவரே. சமோசா, பரோட்டா, ஆப்பம் போன்ற வெஜிடேரியன் ஐட்டங்கள் அங்கே என் அய்யர் குழாம் நண்பர்களிடையேயும் படு பிரசித்தம். அதுவும் சாம்கோ டீ என்றால் ஆண்டவனே அவ்வப்போது நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டு அங்கே வந்து, சர்வர் ‘மொஹமது’ கையால் இளைப்பாறி விட்டுச் செல்வது வழக்கம். ஓனர், சர்வர்கள் எல்லோருமே அப்போது மலையாளி முஸ்லிம்கள். விருந்தோம்புவது அவர்கள் ரத்தத்தில் ஊறிப்போன நல்ல விஷயம். அவசரத்தில் மணிபர்ஸ் கொண்டு வராவிட்டாலும் அடுத்த நாள் வந்து பில் பணத்தைக் கட்டிக் கொள்ளலாம்.
கொண்டாட்ட வைபவங்களுக்கு மாடி தான் வசதி. கீழே சாப்பிட வருபவர்களில் பலரும் அன்றாடத் தொழிலாளிகள் அல்லது அவசரத்திற்கு ஒரு சாயா அடித்து விட்டுப் போகிறவர்கள்.
ரெகுலர்சுக்காக, மாடியில் ‘பூத்’கள் நிறைந்து விட்டால் கொஞ்சம் நிழலாக வேறு ஏற்பாடுகள் செய்து கொடுப்பார்கள். அவசரத்திற்கு ஒரு எடுபிடி ஓடிப்போய் ஐஸ்கோல்ட் பியர் வாங்கி வருவான். அல்லது அசமஞ்சம் மாதிரி ஒரே ஒரு சிங்கிள் டீயுடன் உட்கார்ந்து நாற்காலி தேய்ப்பவர்கள் நாசூக்காக எங்களுக்காக விரட்டப்படுவார்கள். மொட்டை மாடி மாதிரி கொஞ்சம் திறந்தவெளி என்பதால் புகை போகவும் வசதி.
வாரக்கடைசிகளில் அங்கே இடம் கிடைக்க ஜாதகத்தில் குரு உச்சத்தில் இருக்கவேண்டும். அல்லது ஓனர் பாவாவின் அருட்கடாட்சம் வேண்டும்.
பிரியாணியோ, டீயோ, ஃபுல் கட்டோ, அவரவர் வசதிக்கேற்ப சாப்பிட்டு முடித்துக் கீழே வந்தால் சாம்கோவை ஒட்டிய பெட்டிக்கடையில் ஒரு பீடாவோ சோடாவோ சாப்பிடாவிட்டால் ஜென்மம் கடைத்தேறாது என்கிறது ஆழ்வார்பேட்டை தலபுராணம். ஜர்தா 120, 140 என்று சக்கைப்போடு போடும். 555, ப்ளேயர்ஸ் எல்லாம் கிடைக்கும்.
அவ்வப்போது கமலஹாசன் அங்கே வந்து போவது வழக்கம். சாம்கோவுக்கு எதிரே கமல் வீட்டை ஒட்டி இருந்த இன்னொரு பெட்டிக்கடை வாசலில் தான் நானும் கமலும் முதன்முதலில் அறிமுகமானோம். அறிமுகப்படுத்திய நண்பன் ‘கல்லி’ என்கிற கல்யாணசுந்தரம். நல்ல மனசுக்காரன். தடாலடியாக ஏதாவது சொல்வான். சில சமயம் செய்யவும் செய்வான். அப்படித்தான் ஒரு நாள் என்னை கமலிடம் அறிமுகம் செய்கிறேன் என்று அழைத்துப் போய் அதை செய்தும் காட்டினான். காந்தியும் நேருவும் சாய்ந்தாற்போல் பேசிக்கொள்ளும் கருப்பு-வெள்ளை புகைப்படம் ஒன்றை நீங்கள் பார்த்திருப்பீர்களே, அதே போல் கமலும் நானும் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை அந்தக் கடைக்காரர் அங்கே பல வருடங்கள் மாட்டிவைத்து, வேண்டாம், பீலாவின் சு.த. நெடி எனக்கே தாங்க முடியவில்லை. விட்டு விடுகிறேன்.
கமல் நல்ல நண்பரான பிறகு, என் ஸ்கூட்டரை அல்லது காரை அவர் வீட்டிலேயே விட்டுவிட்டுச் செல்லுமளவுக்கு எனக்கு சுதந்திரம் கிடைத்தது. அப்போது கமலின் செக்ரட்டரியாக இருந்த சேஷாத்ரி என்ன ஆனான் என்பது தெரியவில்லை. சில வருஷங்களுக்கு முன்பு கூட, சாம்கோ மேற்கு மூலைக்குக் குடி மாறிய பிறகு, கமல் சிம்ரனை அழைத்து வந்து தன் பால்ய நினைவுகளை அங்கே பகிர்ந்து கொண்டதாகச் சொன்னது ஒரு காற்றுவழிச் செய்தி.
நிற்க, இது கமல் புராணம் இல்லை, சாம்கோ புராணம் என்பதால் மீண்டும் சாம்கோ பற்றியே பேசுவோம்.
பல விடலைப் பசங்களுக்கு முதலில் தீர்த்தானந்த சிட்சை கிடைத்த புண்ணிய ஷேத்திரமே சாம்கோ தான். சாம்கோவில் வாந்தியெடுத்து ஞானஸ்நானம் பெறாதவர்களை நண்பர்கள் குழாமிலிருந்தே ஜாதிப் பிரஷ்டம் செய்து விலக்கி வைப்பதெல்லாம் அப்போது சர்வ சகஜம். சும்மனாச்சிக்கும் ”வயிற்றைப் பிரட்டியது, வாந்தி வருவது போல் இருந்தது” எல்லாம் செல்லுபடியாகாது. பத்து பேராவது பார்க்கும்படி பீச்சி அடித்தவர்கள் நண்பர் குழாத்தின் உள்வட்டத்துக்குள் அநாயாசமாக ப்ரமோஷன் ஆவார்கள்.
அப்போதெல்லாம் சென்னையில் ஃப்ரீயான குடியாட்சி கிடையாதென்பதால், திடீரென்று சாம்கோவும் மோடியின் குஜராத் மாதிரி அவ்வப்போது விறைத்துக்கொண்டு நிற்கும். உள்ளே நுழையும்போதே “ஏசி சர்வீஸ் கிடையாது சார்” என்பார்கள். ”ஓஹோ, மாசக் கடைசி, போலீஸ் தொல்லை போலிருக்கிறது” என்று நாம்தான் குறிப்பறிந்து புரிந்துகொள்ள வேண்டும்.
அப்போது கூட “எந்தா சேட்டா?” என்று மொகமது கோஷ்டியின் முகவாயைப் பிடித்துக் கொஞ்சி காரியங்கள் சித்தியாவதும் உண்டு. காவல்நிலைய நிர்ப்பந்தங்கள் அதிகமாக இருந்தால் அவர்களே ஆங்காங்கே சில ‘லுக் அவுட்’களை போஸ்டிங்கில் போடுவார்கள். எப்படிப்பட்ட நெருக்கடி, எமர்ஜென்சி நேரங்களிலும் நெருக்கமான பழக்கத்தால் எங்கள் குழாமுக்காக மட்டுமே சாம்கோ பின்னிரவு வரை திறந்திருந்ததும் உண்டு.
அசைவ ஐட்டங்கள் பிரமாதம் என்று அசைவ நண்பர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வட இந்திய வெஜ் ஐட்டங்களும் அட்டகாசமாகவே இருந்த நினைவு. விலையும் சல்லிசு தான்.
அந்த சாம்கோ பீடாக்கடைக்கும் ரஜினி விசிட் செய்து ஜர்தா வாங்கிச் சென்றிருப்பதாகச் சொல்வார்கள். நான் பார்த்ததில்லை.
சாம்கோ மேற்கு மூலைக்கு இடம் மாறியதும் ஓரிரு முறை போய் வந்திருக்கிறேன். பழைய camaraderie இல்லை. விலையும் அதிகம். இப்போது இன்னும் ஹை கிளாசாக, மோசமாகப் போய் விட்டதாகச் சொல்கிறார்கள்.
பாரதி இருந்த வீடு மாதிரி பழைய சாம்கோவை ஒரு வரலாற்றுச் சின்னமாக அறிவித்திருக்கலாம். ப்ச், செய்யவில்லை. தப்பு பண்ணிவிட்டோம்.
‘மார்பு துடிக்குதடி கண்ணம்மா’ என்று வேண்டுமானால் இப்போது புலம்பலாம்!
Thursday, February 04, 2010
சென்னையில் கொசு ஒழிப்பு போராட்டம்!
“ஆமா, எல்லா போராட்டமும் நடத்திக் கிழிச்சிட்டாங்க இந்தம்மா! இப்ப கொசு ஒழிப்பு போராட்டமா?!” என்று ஆளும் கட்சியினர் கிண்டல் செய்திருப்பதிலிருந்து இந்தப் போராட்டத்திற்கு அரசு ஆதரவில்லை என்பது தெரிகிறது.
எதை எடுத்தாலும் அதை அரசியலாக்கிவிடுகிற நம் கொள்கையை விடுங்கள்.
நிஜமாகவே சென்னையில் கொசுத் தொல்லை தாங்க முடியாத ஒரு கொடுமைதான்.
கூவத்தை சுத்தப்படுத்துகிறேன் என்று கோடிக்கணக்கில் செலவு செய்வதற்குமுன், ஏகப்பட்ட மருந்து, ரசாயனப் பொருட்களைத் தினமும் காற்றில் பரவ விடுவதற்கு முன் இப்படிச் செய்தாலென்ன?
ஒரு சில வகை மீன்கள் வளர்ப்பதால் கொசு உற்பத்தி தடுக்கப்படுவதாக நான் படித்தேன்.
சென்னை மாநகராட்சி கவனத்திற்கு:
http://www.redlasso.com/ClipPlayer.aspx?id=7124cc5f-6c6f-461b-b52d-728af0306334
Sunday, January 31, 2010
ப்ளாகரா, வோர்ட்ப்ரஸ்ஸா?
இத்தனை நாளாய் இங்கே வருபவர்களை அங்கே வாருங்கள் என்றும் அலைக்கழித்தாயிற்று. இதை இப்படியே ’அம்போ’ என்று விட்டுவிடுவது சரியல்ல, நம் வாசகர்களுக்கு அது நாம் செய்யும் துரோகம் என்று அந்தராத்மா இடித்துரைக்கிறது.
காலைச் சிற்றுண்டி கோபாலபுரத்தில், மதியச் சாப்பாடு சி.ஐ.டி காலனியில் என்றெல்லாம் முதல்வர் மாதிரி சமர்த்தாக வகுத்துக்கொள்ள எனக்குத் தெரியவில்லை. அங்கே இருந்தால் இந்த ஞாபகம், இங்கே வந்தால் அந்த நினைவு என்று அல்லாடுகிறேன்.
இரண்டு இடத்திலும் அதே சாப்பாடு என்று வைத்துக்கொண்டால், அஜீரணமாகி விடாதோ?
இங்கே எந்த மாதிரி மெனு, அங்கே எப்படி எப்படி என்று ஒரே குழப்பம்.
‘ரொம்ப குழப்பமாக இருக்கும்போது, ஜோக்கரைக் கீழே போடு’ என்று ரம்மியில் ஒரு சித்தாந்தம் இருக்கிறது. அப்படி ஏடாகூடமாகப் பண்ணி, இந்தப் பக்கத்து ஆள் முறைக்க, அந்தப் பக்கத்து ஆட்டக்காரர் தொடையில் கிள்ள, ஆட்டமே ரணகளமான நினைவுகளும் என்னை பயமுறுத்துகின்றன.
ஜெயகாந்தனின் பிரபல சிறுகதை தலைப்பு ஒன்றுதான் ஞாபகம் வருகிறது:
நான் என்ன செய்யட்டும், சொல்லுங்கோ?!
Friday, January 15, 2010
ஒரு ஜுரியின் டயரி - 1
எங்கே?..> www.writerlaram.com
கைதிகள் மட்டும் தான் டயரி எழுத வேண்டும் என்பதில்லை. ஜூரிகளும் எழுதலாம்.
ஜூரி தெரியுமில்லையா, ஜூரி?
'ஜூரி என்றால் என்ன? பூரி மாதிரி ஏதாவது சாப்பிடுகிற பண்டமா? என்று கேட்கப்போகும் அஞ்ஞானிகளுக்கான ஜூரி பற்றிய ஒரு சின்ன ‘விக்கி’ (’விக்கி’ என்றால் என்ன என்று படுத்தக்கூடாது. அப்புறம் சைனாவுக்கே ஆப்பு வைத்துவிட்டு அங்கிருந்து கூகுள் எஸ்கேப் ஆவது போல், நானும் உங்கள் நெட்வொர்க்கை DoS அட்டாக் பண்ணி ப்ரௌவுசரின் டவுசரை அவிழ்த்து விடுவேன், ஜாக்கிரதை!)
மரியா கேரியைத் தெரியும், மர்லின் மன்ரோவைத் தெரியும், ஏஞ்சலீனா ஜோலியைத் தெரியும், ஆனால் ஜூரியைத் தெரியாதா?
என்ன இளிப்புங்கறேன்? ஜூரிங்கறது லேட்டஸ்ட் நடிகை இல்லைங்காணும், ஜுரிங்கறது ஒரு அமெரிக்க சட்ட திட்ட வரைமுறை! அமெரிக்காவில் ‘ஜூரி’ சிஸ்டம் என்று ஒன்று இருக்கிறது.

ஒரு ஜட்ஜ் -ஒரே ஒரு ஜட்ஜ் மட்டும்- ஒரு கேஸை விசாரித்து தீர்ப்பு சொல்வது நம் இந்திய நாட்டு சட்ட முறை. அவர் எக்கச்சக்கமாக சொத்து சேர்த்து வைத்திருக்கலாம், RTI ஆக்டுக்கே அல்வா கொடுத்து மாசக் கணக்கில் டபாய்க்கலாம், ஏக்கர் கணக்கில் வேலி போட்டு ஊரையே வளைத்துப் போட்டிருக்கலாம். அல்லது பத்து பைசா சேர்த்து வைக்காத தக்கணாமுட்டி ஜட்ஜாகவும் இருக்கலாம்.
ஆனால் கோர்ட்டில் அவர் விசாரித்துச் சொல்வது தான் தீர்ப்பு. அந்தத் தீர்ப்பு உங்களுக்குப் பிடிக்காவிட்டால் மேல் கோர்ட்டுக்கு நீங்கள் அப்பீல் செய்கிறேன் என்று நடையாக நடக்கலாம். அங்கேயும் உங்களுக்கு இன்னொரு ஜட்ஜிடம் ஆப்பு தான் என்றால் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகிறேன் பேர்வழி என்று கேஸை இழு இழுவென்று இழுத்தடித்து சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் சம்மன் போட்டே சாகடிக்கலாம். மொத்தத்தில் கேஸ் விசாரணைக்கு வரும்போது அதில் சம்பந்தப்பட்ட அத்தனை பேருமே மண்டையைப் போட்டு விடுவார்கள். இது இந்திய முறை. ரொம்பவும் விளக்கமாக அப்பெல்லேட் கோர்ட், ஜுடிஷியல் பெஞ்ச், கான்ஸ்டிட்யூஷனல் ஸ்டூல் என்றெல்லாம் குருட்டுச் சட்டத்தின் இருட்டு அறைகளில் புகுந்து புறப்பட்டு இது பற்றியெல்லாம் விளக்கமாகச் சொல்வது இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல!
புழுதிக் கிராமத்தில் பதினெட்டுப் பட்டிக்கு நடுவே ஆல மரம், பித்தளைச் சொம்பு, அழுக்கு ஜமக்காளம், அதை விட அழுக்காக ஒரு ஐம்பது பேர் கூடி நின்று ... ‘ என்று தமிழ் சினிமாக்களில் வழக்கமாக வருமே ஒரு சீன், நினைவிருக்கிறதா? ஹீரோவின் நொண்டித் தங்கையை வில்லன் கற்பழித்து விடுவான், அவள் “சொந்த மானம் போனாலும் பரவாயில்லை, என் குடும்ப மானம் பறி போய் விட்டதே” என்று ஒரு பாட்டையும் பாடி நம்மைச் சாவடித்துக் கடைசியில் தூக்கில் தொங்கலாம் என்று ஆரம்பிக்கும்போது, மரக் கதவை உதைத்து வீழ்த்தி, ஹீரோ தங்காச்சியைத் தோளில் தூக்கிச் சுமந்தபடி கொண்டு வந்து மேற்சொன்ன ஆல மரத்தடி அழுக்குக் கும்பலின் நடுவே போட்டு விட்டு, மூச்சு வாங்கியபடி நீதி கேட்பானே, அந்த சீனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
படத்தின் பட்ஜெட்டுக்குத் தக்கபடி ஊர்த் தலையாரியோ, வெட்டியானோ, பஞ்சாயத்து பிரசிடெண்டோ அல்லது பெரிய கவுண்டரோ அங்கே மரத்தடியில் நடுநாயகமாக ’கெத்’தாக உட்கார்ந்து ஒரு சொம்பு தண்ணீரையும் குடித்து முடித்து விட்டுத் தீர்ப்பு சொல்லுவாரே, ஞாபகம் இருக்கிறதா?
‘தாவணி விலகிய தங்கை மீது காமெரா எக்ஸ்ட்ரா க்ளோசப், பிறகு சிவப்புத் துண்டைப் போட்டுத் தாவணி தடுக்காமல் தங்கையைத் தாண்டுவது’, ‘கன்னத்தில் அலகு, நாக்கில் சூடத்தோடு சத்தியம் செய்’, வில்லனே நொ. தங்கையை மணந்து கொள்ளவேண்டும்’ - என்று ‘ஜட்ஜ்’ ஏதாவது தீர்ப்பு சொல்லித் தொலைப்பார். அந்தப் பட மேட்டரை அப்படியே விட்டு விடுவோம். போரடிக்கும் ஒரு பின்னிரவில் அதை நாம் விஜய் டீவியில் பார்த்து அழுது கொள்ளலாம். நமக்கு இங்கே தேவையானது இந்த சிச்சுவேஷனில் நடந்த மேட்டர்.
மேற்படி ஆல மரத்தடி தலையாரி / வெட்டியான் / பிரசிடெண்ட் / கவுண்டர் தான் அங்கே ஜட்ஜ், ஜுரி எல்லாமே. ஜூரர் என்பது ஒருமை. பல ஜூரர்கள் சேர்ந்து ஒரு ஜூரி. மெஜாரிட்டி ஒபினியன் தான் ஜெயிக்கும்.
’ஒரு ஜூரரின் டயரி’ என்றால் ஏதோ ஜன்னிக் கேஸ் மாதிரி எனக்கே பயமாகத் தெரிவதால் ‘ஒரு ஜூரியின் டயரி’.
அப்பாடா, இப்போது தலைப்பை விளக்கியாகி விட்டது. இனிமேலாவது மேட்டருக்கு வருகிறேன்.
இந்தியாவைக் குறுநில மன்னர்கள் கோலோச்சிய காலத்தில் பனிஷ்மெண்ட் என்றால் மாறு கால், மாறு கை, பையனைத் தேர்க்காலில் போட்டு நசுக்கியது, சிபிச் சக்கரவர்த்தி பையன் சதையை கிலோக் கணக்கில் கசாப் வெட்டியது, தேர் சக்கரத்தில் யாரோ யாரையோ நசுக்கியது, கண்ணகி ஒரு சைடு மேட்டரையே திருகி எறிந்தது, அதனால் மதுரையில் தினகரன் எரிந்து சாம்பலானது, மன்னிக்கவும், மதுரையே பற்றி எரிந்தது போன்ற தீர்ப்புக் காட்சிகள்.
வெள்ளைக்காரன் காலத்தில் பழைய மன்னர் சிஸ்டம் எல்லாம் வேஸ்ட், ’ப்ளடி இண்டியன் ப்ரூட்ஸ்’ என்று எல்லாரையும் திட்டி எல்லாவற்றையும் மாற்றினான். இந்த ஜூரி சிஸ்டம் தான் பெஸ்ட் என்று பண்ணினான்.
அமெரிக்காவில் ஆரம்பத்திலிருந்தே இந்த ஜூரி சிஸ்டம் தான். அதுவும் கிரிமினல் கேஸ்களுக்குக் கண்டிப்பாக ஜீரி தான்.
நான் ஜுரி வேலை பார்த்த முதல் அமெரிக்க கேஸ், ‘கலக்கப் போவது யாரு?’
(சட்டம் தன் வேலையைச் செய்யும்)
Wednesday, January 13, 2010
www.writerlaram.com is live now!
அதனால் இன்று, இப்போது அடக்கி வாசிக்கிறேன்!
www.writerlaram.com is live now!
See you there!
இட்லி வடையில் www.writerlaram.com பற்றி!

தை பிறந்தால் www.writerlaram.com பிறக்கும்!
Tuesday, January 05, 2010
ஜக்குபாய், வேட்டைக்காரன் ஆன கதை!
Sunday, January 03, 2010
தக்கார், தகவிலர், தரூர்!
Saturday, January 02, 2010
விடுமுறை நாட்களும் இரண்டாம் தரப் பிரஜைகளும்!
Friday, January 01, 2010
யாகாவாராயினும் ஷோ காக்க!
Thursday, December 31, 2009
ஹாப்பி நியூ இயர் 2010 !
Tuesday, November 10, 2009
சொல்லித் தெரிவதில்லை ......!
(2009 நியூ யார்க் தமிழ் சங்க விழா மலருக்காக எழுதியது)
பச்சை அட்டையோ, கள்ளத் தோணியோ, ஆந்திராவிலிருந்து போலி விசாவோ, எப்படியோ அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தாயிற்று. ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்த, அவர் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்த’ இந்தியாவை விட்டு வெளியே வந்தாயிற்று.
அப்பாடா!
பீச்சாங்கரையில் மட்டுமன்றி எங்கே வேண்டுமானாலும் சர்வ சுதந்திரமாகத் திரியும் ஜாஜ்வல்ய அம்மணமணிகள், பதினாறு லேன் ஹைவேக்கள், பதினெட்டு வீல் டிரெய்லர்களில் ஏகப்பட்ட கார்கள், விண்ணை முட்டி மேகங்களில் மறையும் கட்டிடங்கள் என்று எல்லாவற்றையும் ‘ஹா’வென்று வாய் பிளந்து, எச்சில் வழிந்து வியந்து பார்த்து முடித்தாயிற்று.
இலைதழை சாண்ட்விச்சுக்கும், வெஜிபர்கருக்கும், ஸ்பகெட்டிக்கும், பீட்சாவிற்கும் நாக்கைப் பழக்கிக் கொண்டாயிற்று. கொஞ்சம் கஷ்டப்பட்டால், அட, அமெரிக்க ஆக்செண்ட் கூட அவ்வளவு கஷ்டமாகத் தெரியவில்லையே! ஆரம்ப காலத்தில் புது டாலர் நோட்டைக் கொடுத்து ஒரே ஒரு ‘கோக்’ வாங்கும்போது கை இழுத்துக் கொள்ளும். 15% டிப்ஸ் என்றால் மார்வலியே வரும். அந்த மரண வலியெல்லாம் நாளாவட்டத்தில் மறத்துப் போய் நாமும் அமெரிக்கப் பழக்க வழக்கங்களில் ஊறிப்போய் விட்டோம். கொஞ்சம் கொஞ்சமாக பேஸ்பால், பாஸ்கெட்பால், ஃபுட்பால் என்று எல்லாவற்றிலுமே நாமும் கிட்டத்தட்ட அமெரிக்கர்களாகவே ஆகி விட்டோம் என்று உணர்கிறீர்களா?
அது தான் இல்லை!
அவ்வப்போது அடிநாக்கு சூடான ஒரு சரவணபவன் காஃபிக்கும், சுடச்சுட ஒரு ப்ளேட் மைசூர் போண்டாவுக்கும் ஏங்குவதை நம்மால் மறுக்க முடியுமா? ஆபீசில் திருட்டுத்தனமாக யூட்பிலோ திருட்டு விசிடியிலோ ஒரு வடிவேலு-விவேக் காமெடி பார்த்து விழுந்து விழுந்து சிரிக்காமல் இருக்க நம்மால் முடியவில்லையே! தீபாவளி, பொங்கல் என்று பண்டிகை நாட்கள் வந்தால், அடி வயிற்றில் ஒரு ‘எம்ப்டி’ உணர்வுடன், சோகமாக ஆஃபீஸ் போக நேர்கையில் மனசு என்ன பாடுபடுகிறது? சே, என்னடா இந்த அமெரிக்க வாழ்க்கை!
‘What is Deepavali, dad?” என்று பையன் கேட்டால், அணுகுண்டு வெடிச்சத்தத்தையும், புத்தாடை சந்தோஷங்களையும், புது சினிமா கலகலப்பையும், நண்பர்களுடனான கொண்டாட்டங்களையும் நம்மால் வார்த்தைகளில் அவ்வளவு சுலபமாக விவரித்து விட முடிகிறதா?
அதை விடுங்கள், “Narakasura was killed by Lord Narayana in the year 50,000 BC. Can I have tomorrow off to celebrate that?” என்று உங்களால் உங்கள் மேலதிகாரியிடம் கேட்டு விட முடியுமா? வெள்ளைக்கார அசுரன் நம்மை உடனே பஸ்பமாக்கி விடமாட்டானா?
இங்கேயும் இல்லாமல் அங்கேயும் இல்லாமல் நம்மையும் அறியாமல் NRI-களாகிய நாம் ஒரு விநோத பிராணிகளாக ஆகி வருகிறோம் என்பதே நிதர்சனம். ஒரிஜினல் தலப்பா கட்டுப் பிரியாணிகளாகவும் இல்லாமல ஹைதராபாத் பிரியாணிகளாகவும் இல்லாமல் நாம் ஒரு தக்காணாமுட்டி ஃபாரின் ஊசல் பிரியாணிகளாகி விட்டோம் என்பதே உண்மை!
உண்மை சுடுமல்லவா? என்னையும் அது ஒரு தடவை மிகவும் சுட்டுப் பாடாய்ப் படுத்தியது, அந்த ரோஷத்தில் நானும் “அமெரிக்காவுடைய சங்காத்தமே இனி வேண்டாம், பேசாமல் மூட்டையைக் கட்டிக்கொண்டு தாய்நாட்டிற்கே திரும்பப் போய், அன்னைத் தமிழுக்கே தொண்டு செய்து, பச்சைத் தமிழனாகவே இனிமேல் வாழ்வது” என்று முழு ஜுரத்தில் ஜன்னி கண்ட மாதிரி பிதற்றிக் கொண்டு, கூடவே குடும்பத்தாரையும் ‘தர தர’வென்று ஏர்போர்ட்டுக்கு இழுத்துக்கொண்டு சென்னையில் போய் இறங்கினேன். மனைவி, மக்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் என்று யார் பேச்சையும் நான் கேட்பதாயில்லை. பிறந்த பொன்நாட்டுப் பற்றின் உச்சகட்டத்தில் நான் பிதற்றிக் கொண்டிருந்த நேரம் அது. எந்த மருந்துக்குமே அது சரிப்படுவதாய் இல்லை.
“பசங்களுக்கு ஸ்கூல்?” என்று பதறிய மனையாளைத் தடுத்து நிறுத்தினேன். “நாமெல்லாம் அங்கே படித்து ஆளாகவில்லையா? இதெல்லாம் ஒரு பிரச்னையா? அப்துல் கலாம் கார்பரேஷன் ஸ்கூலில் படிக்கவில்லையா?”
“தங்குவதற்கு வீடு?” என்று அம்மா பயந்தாள். “தனியொருவனுக்கு வீடில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்று தைரியமாக பாரதியை ‘மிஸ்கோட்’ பண்ணினேன். அம்மா தலையில் அடித்துக்கொண்டு எனக்காக வேப்பிலை தேடினாள்.
“உத்யோகம் புருஷ லட்சணமல்லவா? அங்கே போய் என்ன வேலை செய்வதாக உத்தேசம்?” என்று என்னை மடக்கப் பார்த்தார்கள் என் உறவினர்.
நானா அதற்கெல்லாம் மசிவேன்?
“ஆலைகள் செய்வோம், கல்விச் சாலைகள் செய்வோம்! தேவையானால், புத்தம் புது கணினிச் சோலைகள் செய்வோம்” என்று நான் ஆரம்பித்தவுடன் அத்தனை பேரும் ஓடியே போய் விட்டார்கள்.
ஆனால் …. விஜய் டீவியில் கோபிநாத் ஸ்டைலாக இழுத்துச் சொல்வது போல் ‘நடந்தது ….. என்ன?’
முதலில், ‘வீடுதேடு படலம்’!
ஆரம்பத்தில் தனி வீடாகத்தான் பார்க்கத் தொடங்கினோம். ஊருக்கு வெளியே, காற்றோட்டமாக, தோட்டம், துரவு என்று இயற்கை அன்னையின் எழில் கொஞ்சும் இடமாகப் பார்ப்பதாகத்தான் ஐடியா.
ஆனால், அவுட்ஹவுஸ் கக்கூஸ் மாதிரி தம்மாத்துண்டு வீட்டை வைத்துக்கொண்டு வீட்டுக்காரர்கள் எங்களைப் படுத்திய பாடு இருக்கிறதே, அதைச் சொல்லி மாளாது. எனக்கே மறந்து போயிருந்த என் ஜாதி, குலம், கோத்திரம் எல்லாவற்றையும் தோண்டித் துறுவி தீர விசாரித்தார்கள். என் முன்னோர்கள் கைபர் கணவாய் வழியாக வந்தார்களா? ஏன் வங்காள விரிகுடா வழியாக நீந்தி வரவில்லை? சிப்பாய் கலகத்தில் பங்கு பெற்றவர்களா? தெலுங்கு கலப்பில்லாத தமிழர்களென்றால், மதுரை சங்கத் தமிழர்களா அல்லது அதற்கும் முந்தைய லெமூரிய கண்ட சங்கத் தமிழர்களா? உங்க வீட்ல மாறாப்பை இப்படிப் போடுவாங்களா அல்லது அப்படிப் போடுவாங்களா? நாமமா, பட்டையா, குடுமியா, கருப்புச் சட்டையா?” கவிச்சி சமைப்பீங்களா இல்லாட்டி வெறுமனே சாப்பிட மட்டும் தான் செய்வீங்களா? அதையும் ஹோட்டலிலேயே சாப்பிடுவீங்களா இல்லாட்டி வீட்டுக்கு எடுத்தாந்து இங்க சாப்பிடுவீங்களா?” என்றெல்லாம் விதம் விதமாகக் கேட்டு முடித்து, ”அய்ய, நீங்க அவிங்களா? அது நமக்கு சரிப்பட்டு வராதுங்களே!”
‘இவன் கிடக்கிறான் பிசாத்து. இன்னும் பிரம்மாண்டமான வீடு காட்டுகிறேன்’ என்று புரோக்கர் எங்களை வேறு இடத்துக்கு இழுத்துச் சென்றார்.
நிஜமாகவே பெரிய வீடுதான். வீடும் புதிது மாதிரி தான் தெரிந்தது. ஆனால் வீட்டுக்கு அப்ரோச்சே கிடையாது. “அதோ, அப்பால ரோட்டாண்ட காரை நிப்பாட்டிட்டுப் பொடி நடையா இந்த ஒத்தையடிப் பாதையில மடிச்சு மடிச்சு வந்தீங்கன்னாக்க ரொம்ப சுளுவுதாங்க”
“ரோட்டிலே விளக்கே இல்லியே, இருட்டிலே பாம்பு கடித்தால்?”- என் மனைவியின் பயம் நியாயமானது. பயத்தைக் காட்டிக் கொள்ளாமல் வீட்டுக்கு உள்ளே போன எனக்கு அதிர்ச்சி. வீடு பிரம்மாண்டமாக இருந்தாலும், வீட்டைச் சுற்றி உள்வட்டமாக பிரதானமாக ஓடிக்கொண்டிருந்தது ஒரு ஆல் ரவுண்ட் மேல் மாடி. ரூமெல்லாம் கிடையாது. ஒரே ஒரு பெரிய ஹால் மட்டுமே வீடு. இது சோழா ஆர்கிடெக்சரா, கலிங்கா ஸ்டைலா, பல்லவர் குகைக் கோயிலா? என்று நான் குழம்பிக் கொண்டிருந்தபோது ப்ரோக்கர் சொன்னார்: “காமெரா வைக்க சௌகரியமா கட்டி இருக்காங்க சார்” ஒஹோ, இது ஷூட்டிங்கிற்காகக் கட்டிய வீடா? அது தான் 256 ப்ரைமரி கலர்களிலும் குழைத்துக் குழைத்து எல்லா இடங்களிலும் மொசைக் கலர் வாந்தியாக இருக்கிறதா? எங்கள் எல்லோருக்குமே அந்த கலர் பேந்தாவால் தலை சுற்றல் வந்து விட்டது. ஒருவரை ஒருவர் கைத் தாங்கலாகப் பிடித்துக்கொண்டு மெதுவாக வெளியே வந்தோம்.
ஊருக்கு வெளியே தப்பித் தவறி எனக்கு இடம் எனக்குப் பிடித்துப் போனால், எருமை மாட்டு மந்தை, பன்றிக் கூட்டத்தையெல்லாம் தாண்டித் தாண்டி நான் வர மாட்டேன் என்று மக்கர் பண்ணுவாள் என் மனைவி. ஆடு, மாட்டையே பார்த்திராத என் குழந்தைகளுக்கு வீட்டுக்கு அருகேயே ஒரு மிருகக் காட்சி சாலை என்றால் ஒரே ஜாலி. ம்ஹும், அதற்கும் ஒரு பெரிய ‘நோ சான்ஸ்! சாணி, சகதி, ஈ மொய்க்கிறது, கொசு கடிக்கிறது, வீட்டு வாசலிலேயே பன்றிக் காய்ச்சலா? இது தேவையா நமக்கு?’
இயற்கை அன்னையின் மடி வேண்டாம், சுடுமென்று குடும்ப முடிவு செய்தோம்.
சரி, நகரத்துக்கு உள்ளேயே இடம் பார்க்கலாமென்று நந்தனம் அருகே ஒரு பெரிய ஃப்ளாட்டாகப் பார்த்தோம். கன்னா பின்னாவென்று வாடகை கேட்டாலும், இடம் சுமாராக இருந்தது. வீட்டுக்காரர் துபாயிலோ, சவுதியிலோ வேலை பார்ப்பதாகவும் சில நாட்கள் லீவில் வந்திருப்பதாகவும் சாதுவாகச் சொன்னார். அந்த வீட்டுக்காரம்மா மட்டும் எதற்கெடுத்தாலும் வேலைக்காரியிடம் எரிந்து விழுந்து கொண்டிருந்தாள். கூடவே ஒரு வயசாளி மாமனார் கிழம்- ஏதாவது வம்பு கிடைக்காதா என்று எங்கள் கூடவே தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. எவ்வளவோ எங்களை அனத்தினாலும், நாங்கள் அதிகமான வாடகைக்கு ஒப்புக்கொண்டிருந்ததால், வீடு படிந்து விடும் போலத்தான் தோன்றியது. பால் கூட காய்ச்சி சாப்பிட்டு விட்டோம். வீட்டை இன்னொரு முறை சுற்றிப் பார்க்கலாமென்று கிளம்பினேன். அந்த வயசாளிக் கிழமும் என்னோடு ஒட்டிக்கொண்டது. பேச்சுவாக்கில், “What is your daughter mad about?” என்று நான் அமெரிக்க ஆங்கிலத்தில் சாதாரணமாகக் கேட்டதை, அந்தக் கிழம் சரியாகப் புரிந்து கொள்ளாமல் உல்டா பண்ணி, தன் பெண்ணிடம் உடனே போய் “இந்த ஆள் உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்று சொல்கிறான்” என்று போட்டுக் கொடுத்து விட்டது. அவ்வளவு தான்! ஏற்கனவே முசுடியான அந்த பைபோலார் லூசு, “பால் காய்ச்சி விட்டாலும் பரவாயில்லை, பெருமாள் படத்தைத் தூக்கிக்கொண்டு கிளம்புங்கள்!” என்று எங்களை விரட்டி விட்டாள். நான் என்ன தப்பு பண்ணினேன் என்பது எனக்கு முதலில் புரியவில்லை. பிறகு தான் தெரிந்தது, என் அமெரிக்க ஆங்கிலப் பிரயோகம் அங்கே விளைவித்த வினை!
வாடகை வீடெல்லாம் வேண்டாம், சொந்தமாகவே ஒரு புது ஃப்ளாட் வாங்கி விடலாமென்ற ஞானோதயம் தோன்றியவுடன், பெசண்ட் நகர் பீச்சருகே ஒரு புது ஃப்ளாட்டைத் தேர்ந்தெடுத்தோம். “ஒரே மாசத்துல ஃப்ளாட் ரெடியாயிடும். அது வரைக்கும் மேல ஒரு சின்ன ஒன் பெட் ரூம் ஃப்ளாட்டில அத்தனை பேரும் தங்கிக்குங்க” என்ற பில்டரின் ஜீவகாருண்ய குணத்தை நாங்கள் வியந்தோம். அதாவது, நாட்டு நடப்பு, அரசியல், விலைவாசி ஏற்றம், சிமெண்ட், ஸ்டீல் விலை பற்றி தினமும் பேசிப்பேசியே அவர் வாராவாரம் வாடகையை ஏற்றிய லாகவமும், புது ஃப்ளாட்டின் தினந்தோறும் ஏற்றப்பட்ட விலை நிலவரமும் சரிவரப் புரியும் வரை.
என்ஆர்ஐ- என்று ஒருவன் வந்து சிட்டியில் இறங்கி விட்டால் பாங்க் மேனேஜர்களுக்கு எப்படித்தான் மூக்கில் வியர்க்குமோ! ‘அமெரிக்காவில் பாதியையாவது பெயர்த்துக் கையோடு எடுத்து வந்து விட்டிருப்பான் இவன்’ என்கிற நினைப்பில், எப்போது பார்த்தாலும் ‘டெபாசிட் குடுங்க’ என்கிற போன் கெஞ்சல்கள், எதிர்பாராத அதிகாலை, பின்னிரவு நேரங்களில் அதிரடி வீட்டு விஜயங்கள்!
காய்கறி வியாபாரி, கோவில் கும்பாபிஷேகம், அம்மனுக்குக் கஞ்சி, கிரைண்டர் சேல்ஸ்மேன், இஸ்திரி, பாங்க் மேனேஜர், பால்காரி, வாட்ச்மேன், டிரைவர், கேபிள் டீவி, பிச்சைக்காரன், பண்டிகை இனாம், வம்புக்கு அலையும் பக்கத்து ஃப்ளாட் மாமிகள் என்று எல்லோரும் மாற்றி மாற்றி விடாமல் தொடர்ந்து அடித்ததில் எங்கள் காலிங் பெல் கலகலத்துப் போய் ஒரே மாதத்தில் உயிரையே விட்டு விட்டது. அதற்கெல்லாம் யாரும் அசரவில்லை. ‘டங்டங்’கென்று எந்நேரமும் கதவை எல்லோரும் இடிக்க ஆரம்பித்து விட்டார்கள். ப்ளைவுட் கதவு வளைந்தே போய் விட்டது. ஓடி ஓடிப்போய் கதவைத் திறந்தே என் மனைவி ‘கிட்டத்தட்ட நெர்வஸ் ரெக்’ ரேஞ்சுக்கு வந்து விட்டாள். ரோட்டில் சைக்கிள் மணி அடிக்கும் சத்தம் கேட்டால் கூட இவள் எழுந்து வாசல் பக்கம் ஓட ஆரம்பித்தவுடன் எனக்கும் கவலையாகி விட்டது.
அமெரிக்காவில் சும்மா கலர் க்ரேயானால் கிறுக்கிக்கொண்டிருந்த குழந்தைகளுக்குக் கழுதை மூட்டையில் ஹோம் வொர்க்கா! நாங்கள் சரியாக சொல்லிக் கொடுப்பதில்லை என்று எங்களை டீச்சர் ஸ்கூலுக்கு வரச் சொன்னாளாம். எனக்கு மூன்றாம் வாய்ப்பாடே மறந்து போய் விட்டது. அங்கே மூன்றாம் வகுப்பிலேயே கால்குலஸ்!
சதா புரோக்கர்களின் அனத்தல், பாங்க் மேனேஜர்களின் புடுங்கல், கொசுக்கடி, மூட்டைப்பூச்சி, பள்ளிக்கூட வீட்டுப்பாட சுமை, தெருவெல்லாம் மூத்திர நாற்றம், மாடிப்படியெல்லாம் வெற்றிலை எச்சில் கறை, எதற்கெடுத்தாலும் லஞ்சம், அய்யோ, அய்யோ!
ஒரு சுபயோக சுபதினத்தில் யாருக்கும் சொல்லிக் கொள்ளாமல் நாங்கள் அமெரிக்காவுக்குத் திரும்பவும் ஓடியே வந்து விட்டோம்,
பரவாயில்லை சாமி, கொஞ்ச நாளைக்கு ‘ஸ்டார்பக்ஸ்’ காஃபியிலேயே சமாளித்துக் கொள்கிறேன்! பஜ்ஜி, சொஜ்ஜி, போண்டாவும் வேண்டாம், வெய்ட் போடுகிறது.
மன்மதக் கலை மட்டுமல்ல, வாழும் கலையும் சொல்லித் தெரிவதில்லை.
சூடு பட்டால் தான் தெரிகிறது!