என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Tuesday, October 22, 2013

வருகிறேன் தேவதையே!

(மிமி 'வருகிறேன் தேவைதையே!' என்ற பெயரில் ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளிவந்தது. 2000 என்று நினைக்கிறேன். இன்று 'கர்வாசௌத்' மிமியை மறு பிரசுரம் செய்யவும் என்று செல்லமாய் ஆர்டர் போட்ட என் பெங்களூர் நண்பனுக்கு நன்றி!)


'மிமி' என்றால் ஏதோ 'ஜிம்மி' மாதிரி நாய்க்குட்டி பெயராக இருக்கிறதே என்று நினைக்காதீர்கள். மிமி குதிரைக்குட்டி மாதிரி அமெரிக்க போஷாக்குகளுடன் வளர்ந்த அழகான பெண். ஏகப்பட்ட வளர்த்தி. சூப்பர் கிளாமர். அவளைப்பற்றிப் படிக்க ஆரம்பித்தால் அப்புறம் என்னை யாரும் கண்டு கொள்ள மாட்டீர்கள் என்பதால் அடியேனைப் பற்றிய சில அவசர விவரங்கள்: 

நான் நம்ப ஊரில் ஐ.ஐ.டியில் படித்து முடித்து, அப்பா அம்மாவுக்கு ஏர்போர்ட்டில் நமஸ்காரம் செய்து H1ல் அமெரிக்கா வந்து அங்கே இங்கே முட்டி மோதிக் கடைசியில் இங்கே வந்து க்ரீன் கார்டுக்காக கம்ப்யூட்டரில் வேலை செய்பவன். கம்ப்யூட்டர் என்றால் நாள் முழுக்க மானிட்டரையே முறைத்துப் பார்த்துக் கொன்டிருக்கும் ஸாப்ட்வேர் ஜாதி இல்லை. ஹார்டுவேரை நோண்டிக்கொன்டிருக்கும் ஹார்டுவேர் ஜாதியும் இல்லை. நெட்வொர்க் மேனேஜர் என்பது பெருமையான நாமகரணமாக இருந்தாலும், நெட்வொர்க்கிலோ, ஸாப்ட்வேரிலோ, கேபிளிலோ, எங்கே எது புடுங்கிக்கொண்டாலும் எனக்குத்தான் 'பீப்' செய்வார்கள். 'கம்ப்யூட்டர் மேட்டரா, கூப்பிடு அந்த எக்ஸ்பர்ட்டை...' என்று என்னைத்தான் கூப்பிடுவார்கள். பல பட்டறையான வேலை...

ஒரு மாதிரி சகலகலாவல்லவனாக இருந்ததில் பெரிய சௌகரியம் இருந்தது - அதாவது பல தரப்பட்ட மனிதர்களிடமும் மனுஷ’களிடமும் நெருங்கிப் பழகுகின்ற வாய்ப்புக் கிடைத்தது. அப்படிப்பட்ட மனுஷ’களில் ஒருத்திதான் மிமி- நம் கதையின் கதாநாயகி.

கதாநாயகி என்றால் அவளுடைய அங்க லக்ஷணங்களைப் பற்றி விவரம் தராமல் தமிழ்க்கதை மேலே நகர முடியாது என்பதால் கீழ்க்கண்ட விவரங்கள்: வெறும் 38-24-36 மட்டுமில்லை. அமெரிக்காவில் அதற்குப் பஞ்சமுமில்லை. ஆனாலும் நம்ப ஆளிடம் ஒரு தனி மதர்ப்பு இருந்தது. 

"யூ ஆர் ப்யூட்டிஃபுல்" என்றால் 'அதுதான் தெரியுமே, அதனாலென்ன இப்பொழுது?' என்கிற மாதிரிப் பார்வை மட்டுமே வரும். பேச்சு வராது. கண்டுக்கவே மாட்டாள். 'உலகமே தன் காலடியில் கிடக்கிறது' ரொ‘ம்ப சாதாரணமான விஷயம் என்கிற மாதிரிப் போய்க்கொண்ருப்பாள். அப்பனோ, அம்மாவோ, அல்லது அடுத்தாத்து மாமா உபயமோ, ஜ“ன்ஸ்களில் கொஞ்சமாக கறுப்பு கலந்திருந்ததால் உடம்பு சிவப்பாக இருந்தாலும் கறுப்பர்களின் உடம்பு வாகும் கலந்திருந்தது. மார்பு மற்றும் பிருஷ்ட பாகங்களில் வஞ்சனை இல்லாமல் வள்ர்ந்தவள். ரொட்டி (அல்லது 'மீட்') எங்கே வாங்குகிறளோ? 

சுத்தத் தமிழில் சொல்ல வேண்டுமானால் 'குட்டி செம கட்டை'.

இவள் கம்ப்யூட்டருக்கு மட்டும் வியாதியே வராதா என்று நான் பல நாள் வியந்ததுண்டு. வந்தாலும் சின்னதாக எதாவது ஜலதோஷம் மாதிரிச் சின்னச் சின்ன சமாசாரங்கள் தான் வரும். நான் போய்த்தொட்ட உடனேயே உடம்பு சரியாகிவிடும் (கம்ப்யூட்டருக்கு). நான் ஒருத்தன் வந்து பக்கத்தில் நிற்பதையே கண்டு கொள்ளமாட்டாள். "பிரமாதமாக வாசனை வருகிறதே, என்ன பர்ஃப்யூம்?" என்று நான் மோப்பம் பிடித்தால் மூன்று நிமிஷம் கழித்து "பாய்ஸன்" என்று பதில் வரும். என்னைக் கண்டு கொள்ளவே மாட்டாள். கொடுமையாக இருக்கும். நான் யார், என் பர்சனாலிட்டி என்ன?

என் பர்சனாலிட்டி பற்றி இது வரை நான் தன்னடக்கம் காரணாக எழுதவில்லை என்றாலும் எழுத வேண்டிய தருணம் வந்து விட்டது.

ஆறடி உயரமும், சுருட்டைத்தலையும், கோதுமைக் கலரும் "தோளொடு தோள் நோக்கின் நாள் பல செல்லுமாதலால்....." என்று கம்பன் பாடிய மாதிரி புஜ பராக்கிரமும்....(சரி,சரி,சர்ரி...என்று ஆண் ரசிகர்கள் எரிச்சலுடன் பொறாமைப்பட ஆரம்பிப்பதால் இத்துடன் என் அழகு விவரங்களை விட்டு விடுகிறேன். பிழைத்துப் போங்கள்). நம்மூரில் வெள்ளைக்காரர்களை நாம் வாய் பிளந்து பார்ப்பது போல் இங்கேயும் நம்ப ஊர் கம்ப்யூட்டர் பசஙகளை வெள்ளைக்காரக் குட்டிகள் டாவடிப்பது ஒன்றும் புதுசில்லை. மன்மத சமாசாரங்களில் நம்ப பசங்கள் சோடையுமில்லை. அதுவும் என்னை மாதிரி ஆறடி உயரமும், சுருட்டைத்தலையும்....(சரி,சரி...விட்டு விடுகிறேன்)

ஆக மொத்தம், ப்ளேன் தயாரிக்கும் எங்கள் ஏரோஸ்பேஸ் கம்பெனியில் இல்லாத கம்ப்யூட்டர் இல்லை; ரிப்பேர் ஆகாத கம்ப்யூட்டர் இல்லை. நான் நோண்டாத கம்ப்யூட்டரும் இல்லை. நோண்டும்போது என்னிடம் வழியாத குட்டைப்பாவாடையுமில்லை - இந்த மிமிக்குட்டியைத் தவிர. என்னுடைய ஆண்மைக்கே இந்த மிமியின் பராமுகம் ஒரு சவாலாகி விட்டது. 

நானும் 'ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்க' முடிவு செய்தேன். மிமியுடைய பக்கத்து மேஜைக் கம்ப்யூட்டர்களை அக்கறையுடன் அட்டெண்ட் பண்ணினேன். லேட்டஸ்ட் ப்ளேபாய் ஜோக்குகளைச் சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்தேன். எல்லோருக்கும் என்னை மிகவும் பிடித்துப்போயிற்று. நான் வழிய, அவர்கள் வழிய, ஆஃபீசே ஒரே ஜொள சமுத்திரமாயிற்று. 

ஆனாலும் மிமி மட்டும் நம் கதையின் ஆதார புருஷனும், ஆண் சிங்கமுமாகிய, ஹாண்ட்ஸம் (சரி, சரி, சர்ரி .....) என்னைக் கண்டு கொள்ளவேயில்லை.

நடிகர் விஜயகாந்த் ஒரு படத்தில் பாடுவார்- "கடை வீதி கலகலக்கும் என் அக்கா மவ, அவ நடந்து வந்தா...பஸ் ஸ்டாண்டே பளபளக்கும் பச்சைக்கிளி அவ நடந்து வந்தா ..." என்று. அதே மாதிரி மிமி போகும் போதும் வரும் போதும் ஆஃபீசில் ஒரு கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது. என் போன்ற பலரது பெருமூச்சும் ஏக்கமும் வழக்கமாய்ப் போனது. 

இந்தப் படியாத மாட்டை எப்படிப் படியவைப்பது என்று நான் யோசித்திருக்கலானேன்.

*************************************************************

திடீரென்று ஒரு நாள் என் போன் மணி அடித்தது. 

மறு முனையில் யார் என்று உங்களுக்கு இன்னுமா தெரியவில்லை? எத்தனை நாளாய்த் தமிழ்க் கதை படிக்கிறீர்கள்? 'ஹஸ்கி' என்பார்களே அந்த மாதிரிக்குரலில்- மிமி! 

'குழலினிது யாழினிது என்பர் நம் மிமி குரல் கேளாதவர்' என்று அவசரமாக ஒரு குறள் கம்போஸ் செய்தேன்.

"இந்தப் பாழாய்ப்போன கம்ப்யூட்டர் காலையில் இருந்து படுத்துகிறது. ஈமெயில் பார்க்கமுடியவில்லை, ப்ரின்டிங் சரியில்லை, ஹார்டு டிஸ்க் சத்தம் போடுகிறது..."

நான் பதறிப் போனேன். அந்தக் கம்ப்யூட்டரைச் சும்மா விடப் போவதில்லை. என்ன திமிர் அதற்கு? என் மிமியிடமா விளையாடுகிறது?

அடுத்த கணமே, "நான் அங்கே வருகிறேன், தேவதையே! கவலைப்படாதே. அங்கே பாய்ந்து வந்து அந்த அரக்கனைக்கொன்று உன்னைக் காக்க வெள்ளைப் புரவியில் விரைவில் வருகிறேன். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? நாட்டிய பதாகையில் தீட்டிய மீனம் உவாமதிக்கு உறு மாசு அவாவொடு நக்கும்" தமிழில் நான் என்னென்னவோ பிதற்றியது கண்டு பக்கத்து மேஜைக்காரன் ஆம்புலன்ஸைக் கூப்பிட ஆயத்தமானான்.

எலிவேட்டருக்கு வெயிட் பண்ணாமல் பத்து மாடிகளையும் ஓடியே கடந்தேன்.

******************************************************

மூச்சிறைக்க அங்கே நான் போய்ச் சேர்ந்தபோது அவளுடைய மெஷினுக்கு ஒன்றும் பெரிய நோயில்லை. நேற்று பார்த்த இடத்திலேயே போட்ட சாணி மாதிரி அங்கேயே தான் கிடந்தது. போன இரண்டாவது நிமிஷமே என்ன ப்ராப்ளம் என்று தெரிந்து விட்டாலும் ஒரு மணி நேரமாவது இழுத்தடித்தேன். மிமியும் ரொம்பவும் மாறியிருந்தாள். திடீரென்று குரலில் கொஞசல் அதிகமாயிருந்தது. வேண்டுமென்றே என் மேல் உராசினது தெரிந்தது. பர்ஃப்யூம் வாசனை ரொம்ப நெருக்கத்தில் என்னைப் படுத்தியது. அவள் சேரிலேயே உட்காரும்படி என்னைப் படுத்தினாள். அப்பா, என்ன சூடு!

"எனக்கு ஒன்றுமே தெரியவில்லையே, எல்லாம் சொல்லித்தருகிறாயா?" என்றாள். 

கீபோர்டில் கை ரொம்பவும் மேலே பட்டது. மௌஸ் வளை ஓசையில் கொஞ்சியது. பேனாவைத் தவற விட்டுவிட்டு இரண்டு தடவை குனிந்து எடுத்தாள்.

இன்று நான் யார் முகத்தில் விழித்தேன்! 

"மிமி! நீ கவலையே படாதே. நான் எல்லாவற்றையும் சொல்லித் தருகிறேன். உனக்கு ஆய கலைகள் அறுபத்தி நான்கினையும், பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கினையும் நான் கலந்து..." எனக்கு நெற்றியில் வியர்க்க ஆரம்பித்தது. உள்ளுக்குள் ஜுரம். "இத்தனை நாளாச்சோ திங்களே உனக்கு என் முகம் தெரிய..." 

ரொம்பவும் தான் பெனாத்துகிறான் என்று நினைப்பீர்கள். அதுவும் உண்மைதான்.

இருந்தாலும், உங்கள் கனவுக்கன்னி சின்டி க்ராஃபோர்டோ, ஐஸ்வர்யா ராயோ, அவளை ஆறு இன்ச் பக்கத்தில் நினைத்துக் கொள்ளுங்கள். 

அங்கங்கே உடலில் கிழிந்த ஜ“ன்ஸ் (தொடையிலும்), மிக மெலிய மேல் டீஷர்ட், (கறுப்பு பிரா! மவனே, ஒனக்கு இன்னிக்கு மச்சம்டா!), அசாத்தியமாய்ப் படுத்தும் அந்தக் கண்கள், சற்றே பிரிந்து சேரும் சிவப்பு உதடுகள், சென்ட் வாசனை. பொறுக்க முடியலைங்ணா!

இருபது சேடிப் பெண்கள் வெள்ளை டிரஸ்ஸில் பாரதிராஜா படம் மாதிரி கோரஸாக, ராஜு சுந்தரம் கொரியாகிரஃபியில் டான்சாடத் தயரானார்கள். A.R. ரஹ்மான் கீபோர்டு, கிடாருடன் சுருதி சேர்த்தார். மணிரத்தினம் சொல்லி P.C. ஸ்ரீராம் இருட்டடிக்கத் தயாரானார்.

என்றைக்கும் இல்லாமல் எப்படி இன்றைக்குப் படிந்தாள்? என்னமாய்க் கொஞ்சுகிறாள், எதாவது விஷயம் இருக்குமோ என்று விசாரிக்க ஆரம்பித்த கம்ப்யூட்டர் லாஜிக் மூளையை இன்னொரு பக்க எமோஷனல் மண்டை தட்டியது. 'சும்மா இர்ரா சொங்கி, சீமைப் பசு மடியை யாராவது தடவிப் பார்க்காமல் இருப்பதுண்டோ, அதுவும் தானமாகக் கிடைக்கும்போது?'

"இன்று ஈவினிங் எதாவது ப்ரொக்ராம் இருக்கிறதா?" என்று அவளே கேட்டபோது நான் தரையிலேயே இல்லை. எகிறியதில் கூரை இடித்தது, இருந்தும் கூலாக இருக்க முயற்சித்தேன்.

'என்னடா இது, அவளே படிந்தது மட்டுமில்லாமல் வீட்டுக்கும் கூப்பிடுகிறாளா? ஆச்சரியமாக இருக்கிறதே!'

சாயங்காலம் காருக்கு ஆயில் மாற்ற வேண்டிய அவசியம், என் சின்னப் பையனுக்கு ஹோம் வொர்க் சொல்லிக்கொடுக்க வேண்டிய வேலை, வீட்டில் ஏதோ பூஜை என்று காலையில் மனைவி சொன்னது.எல்லாம் அவசர அவசரமாக மறக்கடிக்கப்பட்டது.

"வேறேது நிலவு உன்னைத் தவிர, இங்கு வேறேது உறவு நம்மைத் தவிர ...." மனசுக்குள் பாடிக்கொண்டே அவள் அட்ரஸை வாங்கிக்கொண்டேன். 21 வயது தேவதை ஒன்று பக்கத்தில் உட்கார்ந்து இப்படிப் பேசினால், வீட்டுக்குக் கூப்பிட்டால் உங்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். பொறாமைப்படாதீர்கள்.

ஆபீசில் சக விடலைகள் என்னை வெட்டுவது போல் பார்த்தார்கள். வழக்கமாய் என்னிடம் வழியும் ம்ற்ற பெண்கள் முகத்தை நொடித்துக்கொண்டு போனார்கள். 

'சாயங்காலம் என்ன விசேஷம்?' என்று வேண்டுமென்றே கேட்காமல் விட்டேன். 

'அவளுக்கு பர்த் டேயா? வீட்டிலேயேவா இல்லை வெளியிலே எங்கேயும் போவோமா?' 

எதையும் கேட்டு, ப்ளஸன்ட் சர்ப்ரைஸைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது என்று முடிவு செய்தேன்.

எல்லாம் ஒரு இன்ப எதிர்பார்ப்புதான்!


*************************************************************

முதல் காரியமாக பீப்பரை ஆஃப் செய்தேன். 

ஆபீஸ் வேலைகளை வேகவேகமாக முடித்துவிட்டு மிமி வீட்டுப் பக்கம் அவசரத்தில் பறக்கும்போது காரில் ஏகப்பட்ட சண்டை மண்டை உடைந்தது - எனக்கும் என் மனச்சாட்சிக்குக்கும் தான். 

"கல்யாணம் ஆன கழுதை நீ. எவளோ ஒரு தே.. கூப்பிடுகிறாளாம், இவனும் வெட்கம் இல்லாமல் போகிறானாம். முண்டம். பாதிக்கிழத்துக்கு என்ன குஷி, பால்யம் திரும்புதோ?"

டிரைவிங் மிர்ரரில் ஒரு தரம் மனச்சாட்சியை முறைத்து, "ஷட் அப்" என்றேன்.

"தப்பப்பா, நீ அப்பனல்லவா? தப்புப்பா நீ செய்வதல்லவா?" என்று பாட ஆரம்பித்த மனச்சாட்சியை ஆஃப் பண்ணுவதற்காகவே ரேடியோவைப் பெரிசாக வைத்தேன்.

அழுது புரண்டு அடம் பிடித்துப் பார்த்த ம. சாட்சி கடைசியில் மௌனமாக அழுது கொண்டிருந்தது.

*************************************************************
லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகரத்தின் புறக்கோடியில் இருந்தது அவள் வீடு. இப்போது தான் குளித்தது மாதிரி ஒரு சின்ன பூந்தோட்டம். பூத்தொட்டிகள். மிமி மாதிரியே வீடும் 'சிக்'கென்று இருந்தது. 

காலிங் பெல்லை அமுக்கிய கடைசி நொடி வரையிலும் மனச்சாட்சி சண்டை போட்டுப்பார்த்து ஜடாயு மாதிரிப் படாரென்று கீழே செத்து விழுந்தது.

மிமி 'பளிச்'சென்று டிரஸ் பண்ணிக்கொண்டு வந்து கதவைத் திறந்தாள். ஆஃபீஸ் டிரஸ்ஸின் சட்ட திட்டங்களிலிருந்து அவள் அங்கங்கள் சுதந்திரம் பெற்று மதர்த்திருந்தன. அழகாகச் சிரித்தாள். வேறு ஒரு பர்ப்யூம்! இதன் பெயரையும் கேட்க வேண்டும்.

'கேட்கலாம், கேட்கலாம். ஏன் பதறுகிறாய்? கிணற்று நீரை வெள்ளமா கொண்டு போய் விடும்?'

கை குலுக்கி வரவேற்றாள். "நான் சொன்ன உடனேயே வருகிறேன் என்று நீங்கள் ஒப்புக்கொண்டதில் எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?" லேசாகக் கண்ணடித்தாள்.

"உன் சந்தோஷம் என் பாக்கியம்"

தயாராய்க் கொணர்ந்திருந்த மலர்ச்செண்டைக் கொடுத்தேன். 

வீட்டுக்கு உள்ளேயும் அவளை மாதிரியே வாசனையுடன் இருந்தது. என் வீட்டுக் கிச்சன் மசாலா நெடி அநாவசியமாக ஞாபகம் வந்து மறைந்தது.

'வேறு யாரும் இல்லை போலும்' என்று மனசில் ஒரு சின்ன சந்தோஷம் தித்தித்தது.

உள்ளே நுழையும்போது வேண்டுமென்றே மேலே கை பட்டது தெரிந்தது. உட்காரச் சொன்னாள்.

"ஏதாவது சாப்பிடுகிறீர்களா?"

"ஒன்றும் வேண்டாம், பசியே இல்லை. ஏன் என்று தெரியவில்லை"

இவளிடம் எப்படிப் பேசுவது, எதைப்பற்றி என்ன ஆரம்பிப்பது என்று குழம்பினேன்.

இவ்வளவு அழகு, இத்தனை தனிமையிலா, எனக்கே எனக்கு மட்டுமா? 

"பிஃடி கேஜ“ தாஜ் மஹல் எனக்கே எனக்கா?" உன்னி கிருஷ்ணன் மானசீகமாகக் கொஞ்சினார்.

"சோஃபாவில் ஏன் ஓரமாக உட்காருகிறீர்கள்? இப்படிக் கிட்டவே வரலாமே. என்னிடம் என்ன பயமா? நான் என்ன அந்நியமா? இது ஆஃபீஸ் இல்லையே!"

"அடேய் துஷ்டா, துர்மதியாளனே! நீ என்ன குலம், என்ன கோத்திரம், எப்பேர்ப்பட்ட பரம்பரை. மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டிப் போரடித்த குடும்பம்...அடியே காந்தா, உனக்கு துரோகம் செய்தேன், இன்று கட்டுடலை இழந்தேன், கதறுகின்றேன்..."

ஜடாயு பகவான் பிராணனை விட்டும் பிதற்றுவதை விடவில்லை.

"ஷட் அப், ஜடாயு" என்றேன்.

"What? Did you say something in your language?"

"No, no. He is fine. He is dead. I mean....I mean I am just dead tired"

மிமி அருகில் வந்து என் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். "ரொம்பவும் தான் கடினமாக வேலை செய்கிறாய்"

ஒரே நேரத்தில் பஞ்சும் நெருப்பும் பட்ட மாதிரி...ஐஸ் கிரீமையும் ஹாட் குலாப் ஜமுனையும் ஒரே நேரத்தில் நீங்கள் விழுங்கியதுண்டா?

"முதலில் எதாவது சாப்பிடுகிறாயா'? பால் வேண்டுமா? அல்லது எதாவது ஸ்ட்ராங்காக ....?"

என் நியூரான்கள் ஹைப்பர் ஸ்பீடில் எகிறின. 'முதலில்' என்றால் பிறகு என்னென்ன உண்டு? அவை எப்போது? எந்த வரிசையில்? பாதாதி கேசமா, கேசாதி பாதமா?

"பாலா? நான் என்ன பச்சைப் பாப்பாவா? கொஞ்சம் விட்டால் என்னை மடியில் போட்டு ஃபீடிங் பாட்டைலை வாயில் வைத்து விடுவாய் போல இருக்கிறதே!" வழிந்தேன்.

"ஜில்லென்று ஏதும் பீர் மாதிரி கிடைக்குமா?"

"ஷ்யூர். இதோ வருகிறேன்" என்று கிச்சன் பக்கம் மறைந்தாள். அவளையே பார்த்திக் கொண்டிருந்தேன். அடா, அடா! சிங்க்ரனைஸ்டு ஸ்விம்மிங் மாதிரி என்ன அழகான அப் அண்ட் டவுன் மூவ்மெண்ட்ஸ்!

சுற்றுமுற்றும் பார்த்தேன். எங்கிருந்தோ ஜாஸ் ம்யூசிக் வழிந்தது. சோபா கம் பெட் வசதியாகவே இருந்தது. அந்தப் பக்கம் தான் பெட் ரூம் போலும். மெலிதான வெளிச்சம் தெரிந்தது. 'கிங் சைஸ் பெட்டாக இருக்குமோ' என்கிற என் சந்தோஷக் கனவைக் கலைக்கிற மாதிரி லேசான சத்தம். பகல் கனவிலிருந்து சற்றே விழித்தேன்.

பியர் நுரையுடன் மிதந்து வந்தாள்.

எப்படி ஆரம்பிக்கப் போகிறாள்? முதலில் நானா அல்லது அவளா?

"என்ன சப்தம், மிமி? மெய்டா? மெய்டை இன்னுமா வீட்டுக்கு அனுப்பவில்லை?"

"ஓ! அதைச் சொல்கிறீர்களா? அது மெய்டு இல்லை, மார்க்"

பதட்டத்தில் என் பியர் கொஞ்சம் கீழே சிந்தியது.

'மார்ககாவது, ஸைபராவது? யாரிந்தப் புது வில்லன்? என்ன வயசு? அய்யகோ. வெண்ணெய் திரண்டு வருகையில் தாழி உடைந்திடுமோ? பிரசிடென்சி கைக்கெட்டுகையில் ரீகௌண்ட் ஆகி விடுமோ?'

"மார்க்கிடம் உங்களைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறேன். இல்லையா மார்க், இங்கே வாயேன்"

மார்க் வரப்போகும் மார்க்கமாகவே என் விழிகள் தவித்திருந்தன. தொண்டை தாகத்தில் தவித்தது. தோள்கள் தினவெடுத்தன. க்ளைமாக்சுக்கு முன்னர் வரப்போகும் கவர்ச்சி வில்லனைக் கடித்துக் கசக்கி எறிந்து கட்டழகுக் காரிகையைக் கைப்பிடித்துக் கட்டியணைத்துக் கட்டிலில் ...(கை வசம் வேறு 'க' இல்லாததால் இத்துடன் தப்பித்தீர்கள்).

அப்பாடா! 

என்ன ஒரு ஆன்ட்டி க்ளைமாக்ஸ்!

மார்க் என்பவன் கார்ப்பெட்டை விடச் சற்றே உயரத்தில் தொண்டரடிப்பொடியாய்க் குழைந்து நுழைந்தான். பொடியன் நாலடியாரை விடக் குறைந்த பச்சா என்பது என் மூளையில் ரிஜிஸ்டர் ஆனதும் பதட்டம் குறைந்தது. அந்தப் பொடியன் மார்க் இவளுடைய தம்பி போலும்... ..

மச்சான்!

'வாங்க மச்சான்! 'தெனாலி தேவ மச்சான் மாதிரிப் பொடி மச்சான்!'

'வாங்க மச்சான், வாங்க! வந்த வழியப் பாத்துப் போங்க!'

பொடியன் மரியாதை கலந்த பயத்துடன் வாய் திறந்தான்: "உங்களுடைய அபாரமான கம்ப்யூட்டர் திறமைகள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்குக் கூடக் கணினி பற்றிச் சொல்லித் தருகிறீர்களா, ப்ளீஸ்?"

பூஜை வேளையில் இதென்ன, கரடி? 

பரவாயில்லை. தேவி பிர(‘)சாதத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். 

பியரை ஒரு இழுப்பு இழுத்தேன், "இதென்ன பெரிய விஷயம். இப்போதே ஆரம்பித்தால் போகிறது" ஓரக்கண்ணால் மிமியின் சந்தோஷத்தைப் பார்த்தபடியே சொன்னேன். " வா, உன் கம்ப்யூட்டர் ரூமுக்குப் போகலாம்".

மச்சானுக்கு C++ கற்றுக் கொடுக்க ஆரம்பித்தால் நான் அடிக்கிற 'போரி'ல் மரவட்டை மாதிரி சுருண்டு போய் விட மாட்டானா சுருண்டு! எண்ணி மூன்றே மிடத்தில் அவனைச் சமாளித்து விட்டுத் திரும்பவும் இங்கே வந்து விட்ட இடத்தில் தொட(ர)லாம்.

மிமி ஓடி வந்து என் கைகளைப் பற்றிக் கொண்டாள். நான் க்ளைமாக்சுக்குத் தயாரானேன். அடுத்த ரீலில் தான் க்ளைமாக்ஸ் என்று னைத்திருந்தேன். டைரக்டர் அதற்குள்ளேயே தயாராகி விட்டாரா என்ன?

"உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்று தவித்துக் கொண்டிருக்கிறேன். தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களே?"

"சேச்சே, என்ன வேண்டும் சொல் கிளியே. இந்த மார்க்கின் கழுத்தைத் திருக வேண்டுமா? இதென்ன இன்று நேற்று வந்த சொந்தமா, இவன் என்ன இடையில் வந்த பந்தமா? நமக்குள்ளே எதற்கு இதெல்லாம். எப்படி இருந்தாலும் உன்னை நான் இனிமேல் தப்பாக ..."

"முதலில் ஆபீசில் யாருக்கும் சொல்லிவிட மாட்டேன் என்று சத்தியம் செய்யுங்கள். ப்ராமிஸ்?"

அவள் கைகள் பஞ்சு போல் இருந்தன. பாலகுமாரனின் பச்சை வயல் மனசு அநாவசியமாக ஞாபகம் வந்தது. "ப்ராமிஸ், மிஸ், கிஸ்" என்றேன்.

எனக்குப் புரிந்து விட்டது. தம்பியைப் பற்றி இது நாள் வரை என்னிடம் சொல்லாததற்கு மன்னிப்புக் கேட்கிறாள். இஃதென்ன பெரிய விஷயமா?

"நான் ரொம்ப நாளாகவே நீங்கள் வேலை செய்யும் நேர்த்தியை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்பா, எவ்வளவு ஞானம்! எப்படியாவது உங்களை விட்டு என் பையனுக்கு கம்ப்யூட்டர் சொல்லித்தர வேண்டுமென்று நினைத்தேன். அதெப்படி நான் கேட்டவுடன் உடனேயே ஒப்புக்கொண்டீர்கள். யூ ஆர் ரியலி க்ரேட்"

பையனா, என்ன விளையாடுகிறாள? 

"மார்க்கா, உன் பிள்ளையா? இஃது சாத்தியமாவது எங்ஙனம்? உனக்கு என்ன பதின்மூன்று வயதில் பிறந்தானா? மானசீக சிசு கர்ப்பமா? ஏன் பொய் சொல்கிறாய் பெண்ணே?"

மிமி கண்களில் பொலபொல. அருகில் மிக அருகில் நான் இருந்ததால் அந்த உப்பும் எனக்கு இனித்தது உண்மை. 

"மார்க்குடைய அப்பன் ஒரு பொறுக்கி. சின்ன வயதில் என்னை நான் அவனிடம் இழந்தேன். நான் கர்ப்பமாகி இருக்கிறேன் என்று தெரிந்தவுடன் ஊரை விட்டே ஓடிப்போய் விட்டான் பொறுக்கி ராஸ்கல். இத்தனை நாளாக என் பையனைத் தனியாகத்தான் வளர்த்து வருகிறேன். நம் ஆஃபீசில் யாருக்கும் இதுவரை இதெல்லாம் தெரியாது. நானும் யாரையும் ஏறெடுத்தும் பார்த்தில்லை, உங்களைத் தவிர. என் ஆதார புருஷனே நீங்கள் தான். நன்றாகப் படிக்கவைத்து உங்களை மாதிரி ஒரு பெரிய கம்ப்யூட்டர் எஞ்சினீயர் ஆக்கப் போகிறேன் என் பையனை. மார்க்குக்கு இன்று முதலே கம்ப்யூட்டரில் பாடம் ஆரம்பித்து விடுங்கள்".

என் நெஞ்சில் ஏதோ மாட்டிக் கொண்ட மாதிரி, எச்சில் கூட விழுங்க முடியவில்லை. 

சமாளிப்பாக, "எப்போதோ நீ வழுக்கி விழுந்தால் என்ன? அதெல்லாம் மிகப் பழங்கதை. நீ சின்னப் பெண்ணாக இருந்த போது அறிந்தும் அறியாமலோ, தெரிந்தும் தெரியாமலோ, சிறு பிராயத்தில் செய்து விட்ட சின்னத் தப்பு. அதை நாம் மறந்து விடலாம். உனக்காக நீ ஒரு வளமான எதிர்காலத்தைத் தேடிக்கொள்ள வேண்டாமா? வேண்டும். வேண்டியே ஆக வேண்டும். நான் உனக்கு அதற்காகவே உதவி செய்யக் காத்துக் கிடக்கிறேன், கடமைப் பட்டிருக்கிறேன். கைப்பிடிக்கவும் காத்திருக்கிறேன்.உனக்கு வயசே ஆகவில்லையே. இத்தனை திரட்சியும், கண்களில் மருட்சியும் வேஸ்டாக விட மாட்டேன். எங்கள் ஊரில் குந்தி தேவி கூட இப்படித்தான் ......"

"தேங்க் யூ. கண்டிப்பாக. I know what you mean. I appreciate your concern. You are really a very great man. What a great culture you come from. ஆனால் என்ன பண்ணுவது? உங்களுடைய அருமையான கலாச்சாரம் மாதிரி எங்கள் நாட்டில் இல்லையே. உங்கள் ஊரில் எல்லாம் அரேஞ்ச்டு மேரேஜாமே. ஆமாம். உங்களுக்கு கல்யாணம் ஆகி விட்டதா? உங்கள் வைஃப் வெரி லக்கி. அதுவும் என் பையன் மார்க்குக்கு ஒரு சல்லிக் காசு கூட வாங்கிக் கொள்ள'மல் நீங்கள் இப்படிச் சொல்லித்தர சம்மதித்தது என் பாக்கியம். என்னால் மறக்கவே முடியாது. வாரத்தில் ஒரு மூன்று நாள் சொல்லிக் கொடுத்தாலே போதும். சீக்கிரம் பிடித்துக் கொள்வான். படு சுட்டி ..."

என் தொண்டையிலிருந்து எழுந்த செருமல், இருமல், எரிச்சல் சப்தங்களை அவள் என் சம்மதமாக எடுத்துக் கொண்டாள் போலும்.

"அப்புறம் இன்னுமொரு விஷயம். ஒவ்வொரு வாரமும் நீங்கள் மார்க்குக்கு வந்து கம்ப்யூட்டர் சொல்லிக் கொடுக்கும்போதெல்லாம் எனக்கும் வெளியில் என் புது பாய் ஃப்ரண்டு டாம்மியுடன் போக முடியும். பேபி சிட்டிங் செலவும் எனக்கு மிச்சம். அட, மணிஅடிக்கிறது பாருங்கள்"

என் கையைப் பிடித்துப் பொடி (எக்ஸ்) மச்சான் தன் கம்ப்யூட்டர் ரூமுக்கு இழுத்துப் போகையில் காலிங் பெல் அடித்ததும், "My date is here" என்று அவள் சந்தோஷித்ததும், கதவருகில் முத்த / தழுவல் சப்தங்களும், குலாவல்களும் என் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றின. 

*************************************************************

நான் பின்னிரவில் கதவைத் தட்டியபோது, என் மனைவி, "என்ன இப்படிப் பண்றேள்? இன்னிக்குத்தான் காரடையான் நோம்புன்னு நாலு நாளாச் சொல்லிண்டிருக்கேனே காதில வாங்கிண்டா தானே. எப்பப் பாத்தாலும் ஒரு ஆபீஸ், ஒரு ஓவர்டைம். சித்தே அப்படியே நில்லுங்கோ ஒரு நமஸ்காரம் பண்றேன். என்னதான் பத்தாயிரம் மைல் கடந்து வந்தாலும் நம்ப பக்கத்து வழக்கத்தையெல்லாம் விடமுடியுமா?" பேசிக் கொண்டே போனாள்.

"சீக்கிரமா ஆசிர்வாதம் பண்ணுங்கோ. அடுப்பில பாயசம் பொங்கறது. நீங்க சாப்பிட்ட அப்புறம் தானே நான் சாப்பிடணும். சீக்கிரமா வாங்கோ. மொதல்ல இப்படிக் கிழக்கு பார்த்து நில்லுங்கோ. நமஸ்காரம் பண்றேன்"

இப்படிப்பட்ட பொக்கிஷத்தை வீட்டில் வைத்துக்கொண்டா நான் மோசம் போகப் பார்த்தேன்?

"உன் புருஷனுக்கு நல்ல புத்தி வரணும்" என்று ஆžர்வாதம் செய்தேன்.

**************************************************************

2 comments:

Sethu Subramanian said...

உலகே மாயம் கனவே மாயம் தேவதையும் மாயம் மச்சானும் மாயம்.
மனையாளே நிரந்தரம் ஏன் ஏன் இந்த உண்மை இப்படிக் கசக்கிறது?

ஷைலஜா said...

ஆஹா ரொம்பநாளைக்குப்பிறகு உங்க வலைப்பூ வந்தேன் வாசித்தேன் ரசித்தேன்:) சுஜாதா பாணில எல்லா விஷயங்களையும் எழுதியதையும் கவனித்தேன்:)

//"இப்படிப்பட்ட பொக்கிஷத்தை வீட்டில் வைத்துக்கொண்டா நான் மோசம் போகப் பார்த்தேன்?"உன் புருஷனுக்கு நல்ல புத்தி வரணும்" என்று ஆžர்வாதம் செய்தேன்.*//

பஞ்ச் பிரமாதம்!!!