என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, December 03, 2010

தேவை, கொஞ்சமாவது முதுகெலும்பு!

ஸ்பெக்ட்ரம் 2G Scam பற்றி எரிகிறது.

சர்வதேச சந்தைகளில் இந்தியாவின் ஊழல், நம்பகத்தன்மை பற்றிய பல ஆதாரமான அடிப்படைக் கேள்விகள் எழுந்துள்ளன.

வட இந்திய மீடியாக்கள் மட்டுமே இதை அதிகமாக, துணிச்சலுடன் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

நம் தமிழ்த் திருநாட்டில் “எங்கேயோ எண்ணெய் மழை பெய்கிறதாம்’ பாணியில் பல இருட்டடிப்பு வேலைகள் மீடியாவில் தொடர்கின்றன. அரசு ஆதரவு பத்திரிகைகளும், தொலைக்காட்சி மீடியாக்களும், இன்னும் சில அரசியல் பச்சோந்திகளும் வாய்மூடி மௌனிகளாக இந்த கேவலத்துக்கெல்லாம் ‘ஒப்புதல் சாட்சியம்’ அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆக்சிஜனுக்கு அடுத்தபடியாக செல்போன்கள் இன்றியமையாதவை ஆகிவிட்ட காலம் இது.

நம் எதிரி நாடுகளாக நம்முடன் சண்டையிட்ட, சண்டை போட்டுவரும் சைனா, பாகிஸ்தான் போன்ற விரோதி நாட்டு கம்பெனிகள் நேரடியாகவோ, பினாமிகள் மூலமோ இங்கே வந்து இந்திய டெலிகாம் துறையில் காலூன்றி விட்டார்கள் என்கிற தகவல் அதிர்ச்சி தரக்கூடியது. பல பந்நாட்டு நிறுவனங்களுடன் நாம் வர்த்தகம், தொழில் செய்வது வேறு. இது வேறு. மீடியா, டெலிகாம் துறைகளில் அமெரிக்காவில் இப்படி வேறு யாரும் காலூன்றி விடமுடியாது.

1985-ல் நியூஸ் கார்பரேஷன் என்கிற பலகோடி மீடியா நிறுவனத்தின் சேர்மன் தன்னுடைய கம்பெனி அமெரிக்காவில் காலூன்ற வேண்டும், பல அமெரிக்க மீடியா கம்பெனிகளிலும் முதலீடு செய்யவேண்டும் என்பதற்காகவே ஆஸ்திரேலியரான ரூபர்ட் மர்டாக் அமெரிக்கக் குடியுரிமைக்காக விண்ணப்பிக்க நேர்ந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

பல வெளிநாட்டு டெலிகாம் கம்பெனிகளுக்கெல்லாம் கேள்வி முறையில்லாமல் மானாவாரியாக இந்தியாவில் கோலோச்ச அனுமதி தந்திருப்பது நாட்டின் இறையாண்மைக்கே வெடி வைக்கும் அதிர்வேட்டு என்பது சாதாரண பாமரனுக்கும் புரிய ஆரம்பித்திருக்கிறது.

எப்படி இதெல்லாம் நிகழ்ந்தது என்கிற வேதனை ஒரு பக்கம். சரி, இனிமேலாவது ஏதாவது செய்து இந்த இழப்பையெல்லாம் சரிக்கட்ட முடியுமா என்று பார்ப்பது இன்னொரு பக்கம்.

Photobucket

”இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனத்தின் பெயரில் உரிமம் பெற்று, பிறகு வெளி நாட்டு நிறுவனத்துக்கு அதைத் தாரை வார்த்து இருக்கிறார்கள். ஒரு நிறுவனத்தின் பூர்வீகம் பாகிஸ்தான் என்கிறார்கள். தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தான் நாட்டு உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ... இவற்றுக்கும் அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்துக்கும் இடையிலான தொடர்பு பற்றி விசாரித்தார்களா? நம் நாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சக்திகளுக்கு ஆதரவு கொடுக்கும் நாட்டில் இருந்தபடியே, நமது நாட்டின் ரகசியங்களை அந்த டெலிகாம் சிஸ்டம் மூலம் இடைமறித்துக் கேட்க மாட்டார்களா?'' என்று டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி கேட்கிறார் விகடன் பேட்டியில்.

கையில் பல ஆதாரங்களை, ஆவணங்களை வைத்துக்கொண்டு தான் அவர் பேசுவதாகத் தெரிகிறது.

''அரசுக்கு வர வேண்டிய ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ரூபாய் நஷ்டம். சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. ஊழல் பணம் 10 சதவிகிதம் ராசாவுக்குப் போனதா? 30 சதவிகிதம் கருணாநிதி குடும்பத்தினருக்குப் போனதா? 60 சதவிகிதம் பணம் சோனியா வின் இரண்டு சகோதரிகளுக்குப் போனதா என்கிற கோணங்களில் சி.பி.ஐ. விசா ரிக்க வேண்டும். ஹவாலா மூலம் துபாய், மாலத் தீவு களுக்குப் பணம் போய் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். ஸ்பெக்ட்ரம் ஊழலில் வெளிநாட்டு வங்கிகளில் நடந்த பணப் பரிமாற்றம் குறித்த தகவல்களை அமெரிக்காவிடம் கேட்டு வாங்கலாம் என்று நம் பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். ஆனால், இந்தத் தகவல்களை நம்முடைய சி.பி.ஐ-யும், 'ரா' உளவு நிறுவனமும் ஏற்கெனவே வாங்கிவிட்டதாகக் கேள்விப்படுகிறேன். ஆதாரங்கள் கையில் வந்துவிட்டன. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்களா என்று பார்ப்போம்!''

மத்திய அரசாங்கத்தின் நேரடிப் பொறுப்பிலேயே சிபிஐயும் ராவும் இன்னும் பல உளவு நிறுவனங்களும் இருப்பதால் வீட்டைப்பூட்டி திருடனிடமே வீட்டுச்சாவியைக் கொடுத்திருக்கும் அவலம் இந்தியாவில் நிகழ்ந்திருக்கிறது.

ஏதோ சுப்ரீம் கோர்ட் என்று ஒன்று இருப்பதாலும், அங்கே கொஞ்சமாவது நீதிமான்கள் நிலைத்திருப்பதாலுமே, தள்ளாடினாலும் உண்மை, நேர்மை, சத்தியம் எல்லாம் இன்னமும் உயிருடன் இருக்கின்றன. அந்தக் குரல்வளையையும் நெறித்துவிடத் துடிக்கும் அசுர சக்திகள் அநேகம் உண்டு.

CBI, RAW போன்ற நம் நாட்டு உளவு, பாதுகாப்பு நிறுவனங்களில் முதுகெலும்பு, நேர்மை, நாணயம் உள்ளவர்கள் ஒரு சிலராவது இருப்பார்கள் என்று நம்புவோம்.

அடுத்த பூகம்ப விக்கிலீக்ஸ் இந்தியாவிலிருந்து வெடித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை!

5 comments:

Santhappanசாந்தப்பன் said...

அண்ணே, கருணாநிதி, திமுக எதிர்ப்பு என்ற அளவில் யோசிக்காமல், இந்திய நலன் என்ற அளவில் யோசித்திருக்கலாம்.

வருமான வரித்துறை, ராடியா பேசிய 5400 தொலைபேசி பேச்சுக்களை ஒலிப்பதிவு செய்துள்ளது. வெளியிடபட்டது சொற்பமே.

ராடியா, பர்க்கா மற்றும் இன்னபிறர் திமுகவிடம் பேசியது மட்டுமே வந்துள்ளது. இதே விவகாரங்களில் காங். தரப்பில் யார், யார் பேசினார்கள், என்ன பேசினார்கள் என்பது நமக்குத் தெரியாது.

ராடியாவின் இதற்க்காக, 60 கோடி வாங்கினேன் என்று ஒத்துக் கொண்டுள்ளார். அவர் 2% கமிஷன் பெற்றுக்கொண்டார் என்று கணக்கிட்டால், மொத்தம் அடித்தது 2000 கோடி. இதில் இந்திய அளவில் எவ்வளவு பேருக்கு எவ்வளவு பங்கு என்பது நமக்குத் தெரியாது.

சட்டப் பேரவை தேர்தல் வரும் நேரத்தில், திமுகவை பேசவிடாமல் செய்து, அதிக சீட்டுகள் வாங்கும் அரசியல் உத்தியாகவே இதைப் பார்க்கிறேன். வட இந்திய சேனல்கள், தென்னாட்டில் குறை சொல்ல படையெடுத்து வருவார்கள். காங்கிரஸின் ஏகோபித்த ஆதரவோடு இந்தமுறை சுழற்றி அடிக்கிறார்கள்.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள சாந்தப்பன்,

தேசிய நலன், பாதுகாப்பு பற்றிக் கவலையுடன் யோசித்ததன் விளைவுதானே இந்தப் பதிவே!

திமுக, ராசா மற்றும் பலர் இன்னும் இதில் பின்னிப் பிணைந்திருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதைச் சொல்லாமல் எதுவுமே சொல்ல முடியாது. இடைவிடாமல் இதைச்சொல்லிச் சொல்லி கருணாநிதியைச் சாடிவரும் ஜெயா டீவி கூட காங்கிரசை அவ்வளவாகத் தாக்காமல் செய்து வரும் ’ஆடு பகை, குட்டி உறவு’ ராஜ தந்திரம் குமட்டல் வரவழைக்கிறது.

நீங்கள் சொல்வதுபோல், எல்லோருமே எலெக்‌ஷன் கணக்கு தான் போடுகிறார்கள் என்பது நிதர்சனம், வெட்கம்!

‘மானத்தை வித்தாவது ஒரு முழம் துணி வாங்கிவிட’த் துடிக்கும் கேவலமே நான் சுட்டிக்காட்ட விழைந்தது.

இந்தியாவே துண்டாடப்பட்டு விட்டால், அப்புறம் ஊழலாவது, மண்ணாங்கட்டியாவது!

எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி!

Jayashree Govindarajan said...

//இடைவிடாமல் இதைச்சொல்லிச் சொல்லி கருணாநிதியைச் சாடிவரும் ஜெயா டீவி கூட காங்கிரசை அவ்வளவாகத் தாக்காமல் செய்து வரும் ’ஆடு பகை, குட்டி உறவு’ ராஜ தந்திரம் குமட்டல் வரவழைக்கிறது//

இது மிக முக்கியமான கருத்து. ஜெ காங்கிரஸைக் கண்டுகொள்ளாதைவிட ஜெ-யின் இந்தச் செயலை பலரும் கண்டுகொள்ளாதது எரிச்சல். மன்மோகன்சிங் பாவம்; அவரால் சோனியா கூட்டத்தை எதுவும் மீறி செய்யமுடியாது என்று பாவமன்னிப்பு அளிப்பதும்கூட. பதவியை வைத்துக்கொண்டு பலரை பணியவைத்திருக்கலாம் அல்லது பதவி போனால் போகட்டும் எனத் தூக்கி எறிந்துவிட்டு அவரே பலரைத் தோலுரித்திருக்கலாம்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அந்த நாள் ராஜாக்களின் அரசியல் சூழ்ச்சிகள் வெள்ளை ஏகாதிபத்யத்துக்கு,
இரை!
இந்த நாள் மந்திரிகளின் ஊழல் விளையாட்டுகள், இந்திய தாய்த் திரு நாட்டின் இறையாண்மைக்கே இரை!!
பக்கத்தில் பாகிஸ்தான்..
வடகிழக்கே வல்லூறாய் சீனா..
ஏன் இந்த விபரீத விளையாட்டு?
எங்கே தான் நாம் போகிறோம்,ராம்?

அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.

ஆர்.ஆர்.ஆர்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இதைப் படித்து விட்டு உடன் இன்னொரு ப்ளாக் சென்றால் அது மனதை நெகிழ்த்து விட்டது. அதன் லிங்க். நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.

http://aarellen.blogspot.com/