என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Wednesday, October 13, 2010

அவாளோட ராவுகள் -2

அவாளோட ராவுகள் -2
_______________________

பெண்ணினத்துக்கு விழிப்பியம் வந்தே விட்டது. பாரதி இனிமேல் தன் நீள் உறக்கத்தை நிம்மதியாகத் தொடரலாம்.

'நவராத்திரி என்பது அம்பாளைக் கொண்டாடிப் பெண்டிர் நோன்பு நோற்று மகிழும் பண்டிகையே அல்ல. ஆணினத்தை அடிமைப்படுத்தி அவலப்படுத்துவதே இதன் முதற் பெரும் நோக்கம்'- என்று நான் ஒரு ஆராய்ச்சி ஸ்டேட்மெண்ட் விட்டாலும் விட்டேன். அதற்கு இவ்வளவு பெரிய ரியாக்ஷன் வருமென்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

வீட்டு வாசலில் மலைமலையாய்க் கடிதங்கள். இருக்கிற போஸ்ட் பாக்சின் அளவு போதவில்லை என்று தபால்காரர், அடுத்த வீடு, அதற்கடுத்த வீடு, அடுத்த தெருவிலுள்ள பெட்டிகளிலெல்லாம் என் வாசகர் கடிதங்களைத் திணித்துத் திணித்து வைத்திருக்கிறார்.

"'சந்திரமுகி'யில் யார் நன்றாகத் திறமை காட்டுவார்கள், சிம்ரனா, ஸ்நேகாவா?' " என்கிற ஆன்ம விசாரத்தில் நாடே ஆழ்ந்து கிடக்கும்போது, என் போன்ற எழுத்தடியார் சிலர் அநாவசியமாக இண்டர்நெட்டில் என்னென்னவொ எழுதி எங்கெங்கோ போடுகிறோம். இதையெல்லாம் யாருமே படிப்பதில்லை என்பது சந்தோஷமாகத் தெரிந்த ஒன்று தான். அதனால்தான் இவ்வளவு அதிபயங்கர எதிர்விளைவுகளுக்குத் தயாராக இல்லாமல் நான் அசட்டையாக இருந்து விட்டேன்.

லாஸ் ஏஞ்சல்சில் இந்த நவராத்திரி நேரத்தில் வழக்கமாகச் சுண்டல் மழை பெய்யும். பாயச ஹைவேக்களில் ஊர்திகள் வழுக்கும். என் கட்டுரைக்குப் பிந்திய வானிலையில் வெப்பம் மட்டுமே மிக அதிகமாகச் சுடுகிறது.

எழுதியதற்கு மறு நாளிலிருந்து எனக்குக் காலை கா·பி கட் பண்ணப்பட்டு விட்டது. பழங்காலச் சமையல் பதார்த்தங்கள் ·ப்ரீசரிலிருந்து விறைத்து வந்து தட்டைக் குளிரில் நடுங்க வைக்கின்றன. முக்கியமான விருந்தாளிகளை அமரவைக்கும் ஸ்பிரிங் குத்தும் நடு ஹால் சோ·பாவிலே தான் என் வாசம் என்றாகி விட்டது. கிட்டத்தட்டப் போர் முனையிலிருந்து செய்திகளைச் சுடச் சுடத் தரும், துப்பாக்கிச் சூடுகளுக்கு நடுவே உயிர் தப்பிக்கும், சிப்பாய்ப் பத்திரிகையாளன் நிலையில் நான் இருக்கிறேன்.

இருப்பினும், எதிர்ப்புகள் எப்படி வரினும், ஒரு அதி முக்கிய சமூகவியல் விஞ்ஞான ஆராய்ச்சி அமுங்கிப் போய் விடக்கூடாதே என்கிற ஒரே ஒரு காரணத்தால் மட்டுமே நாம் இதைத் தொடர்கிறோம்.

---------------- -------------------- --------------------


ரிஷிமூலம், நதிமூலம் என்றெல்லாம் எரிச்சலில்லாத சில நான்-மெடிகல் மூலங்கள் இருப்பது நமக்குத் தெரியும். இந்த சமாச்சாரத்தின் ஆதிமூலம் என்னவென்பதை இப்போது அலசுவோம்.

நம் NRI நாயகன் -'கௌரவ ஜெயில்' கோது மாதிரி ஒரு அப்பிராணி- சின்னஞ்சிறு விடுப்பில் சென்னைக்குச் சென்றிருப்பான். இன்னும் இரண்டே நாட்களில் அமெரிக்கா திரும்பவேண்டுமே என்கிற பெருங் கவலையில் இளைத்துக் கருத்திருப்பான். நண்பர் குழாம் வலிந்தூட்டிய ரம்மும் கிங்·பிஷரும் சேர்ந்து பின் மண்டையில் இடி இடிக்கும், 'சங்கீதா'வும் 'சரவணபவனு'ம் அடிவயிற்றில் ரகளை பண்ணியிருக்கும். 'பொன்னுசாமி'யும் 'வேலு'வும் மேல்வயிற்ரில் தனி ஆவர்த்தனம் வாசித்திருப்பார்கள்.

சென்னையின் சுகந்தங்களை இவ்வளவு சீக்கிரம் மறந்து 'ஒரு செயற்கை வாழ்வைப் புலம் பெயர்ந்து அயல் நாட்டில் வாழத்தான் வேண்டுமா?' என்று மனச்சாட்சி கேள்வி கேட்டபடி தகிக்கும். ஒரு பெட்டியும் பூட்டாது. பூட்டுகிற ஒரே பெட்டியில் எலி பெருங்கடி கடித்திருக்கும். கைப் பைகளில் ஜிப்புகள் வாய் பிளந்திருக்கும். வீரம் களைத்திருக்கும். பாரம் கனத்திருக்கும்.

மிகக் குழப்பமான காலகட்டம் இது.

இருந்தாலும் ஒரு வழக்கமான அசட்டுத்தனம் செய்வான். அமெரிக்காவுக்குப் போன் போட்டு, "என்னம்மா, உனக்கு ஏதாவது எடுத்துட்டு வரணுமா?"

சம்பிரதாயமான சாதாரணக் கேள்வி தான். இதற்கு வசனம் தேவையில்லை. ஆனாலும், பல பெண்மணிகள் "மறந்துடாதீங்க, அப்பளம், கருவடாம், ஆவக்கா ஊறுகா, அக்கா கிட்ட சொல்லி என் அளவு ஜாக்கெட்' என்று ஆரம்பித்து அரை மணி நேரம் லிஸ்ட் கொடுப்பார்கள்.

ஏற்கனவே தலை சுற்றியிருக்கும் நம் நாயகனுக்குக் கொஞ்சம் மசக்கை மாதிரி வாந்தி கூட வரும்.

"ஹலோ, ஹலோ, லைன்ல இருக்கீங்கல்ல, வெச்சுட்டீங்களோனு பாத்தேன். அப்பறமா, அடுத்த மாசம் நவராத்திரி கொலு வருதே. நீங்க ஒண்ணு செய்யுங்க. எங்க அம்மாவோட கூடவே போய்க் கொஞ்சம் பொம்மை வாங்கிட்டு வந்துருங்க"

'ஏதோ சின்னக்குழந்தைக்குக் கிலுகிலுப்பை வாங்கி வரச் சொல்கிறாள், ஈதென்ன பிரமாதம்' என்கிற நினைப்பில் நாயகன் வழக்கம் போல், சரியாகப் புரிந்து கொள்ளாமல், முகம் கோணாமல், தலையாட்டுவான்.

ஆபத்து அங்கே தான் உருவாகும். அது தான் கொலுமூலம்.

மாமனார் வீட்டிலிருந்து ஒரு படையே பஸ்ஸிலும் ஆட்டோவிலும் பறந்துபோய், 'காதி கிராமோத்யோக் பவன், காதி கிரா·ப்ட், கர்நாடகா பஜார், கைரளி' என்று 'க' வரிசையில் ஆரம்பித்து '·' வரை வகை வகையாக அரை இஞ்சிலிருந்து ஆள் உயரம் வரை பொம்மைகள், படங்கள், பீடங்கள், சிலைகள், சீலைலள் என்று வாங்கி வந்து நடுக் கூடத்தில் அடுக்கி விடுவார்கள்.

அத்தானின் எதிரிலேயே அமெரிக்காவுக்குப் போன் போடப்பட்டு 'அத்தான் பாவம், ரொம்ப சமத்து. எல்லாத்தையுமே அமெரிக்காவுக்கு எடுத்துட்டுத்தான் போவேன்னு அடம் புடிக்குறாரு. நீ ரொம்பக் கொடுத்து வெச்சவடி, இவளே, அப்படியே இந்த நவராத்திரிக்கு ஆரெம்கேவியில 'புதுசு மாமா புதுசு'ன்னு ஒரு சீரிஸ் வந்திருக்கு. அதுல நாலு பொடவையும் அவரையே வாங்கியாரச் சொல்லு. அளவு ஜாக்கெட்டு என் கிட்டத்தானே இருக்குது"

நடுக்கூடமே கலகலக்கும். வளையல்கள் சிரிக்கும். வாண்டுகள் பறபறக்கும். நம் நாயகனின் பல் நறநறக்கும்.

யு கெட் தி பாயிண்ட், மை லார்ட்ஸ்?

சணல் கட்டிய அழுக்கு அட்டைப்பெட்டிகளில் தசாவதார செட்டையும், யாளிகளையும், யானைகளையும், கருடசேவை செட்டையும், கீதோபதேசத்தையும், சீதாராமலட்சுமணபரதசத்ருக்னசமேதஸ்ரீ ஆஞ்சநேயரையும் ஏர்போர்ட்டில் WMD போல் பார்ப்பார்கள். எந்த ஸ்டாண்டர்ட் ஏர்போர்ட் பெட்டிகளிலும் அடங்காமால் தஞ்சாவூர்ச் செட்டியார் சிரிப்பாய்ச் சிரிப்பார்.

"பொட்டிங்கள்லாம் செம வெய்ட் சார். எல்ஸ்ட்ரா பேமெண்ட் ஒரு இரண்டாயிரத்து முந்நூறு டாலர் ஆவுதே' என்று கவலைப்படாமல் ஏர்போர்ட் சிப்பந்தி கண்ணாடி வழியே மொழிவார்.

நம் நாயகனுக்குச் 'சொரேல்' என்று இழுக்கும். வெறும் மண் பொம்மைகளுக்கு இத்தனை அதிகப்படி சார்ஜா?

"வேணாம்னா கீழ எடுத்துப் போட்றுங்க. ஏய் பீட்டர், இதையெல்லாம் எடுத்துக் கடாசு. நெக்ஸ்ட்"

பீட்டர் எதையாவது எடுத்துக் கடாசி உடைத்து விட்டால் கலாசார யுத்தமே நிகழ்ந்துவிடும் பேரபாயம் இருக்கிறது. 'எல்லாவற்ரையும் அத்தான் பத்திரமாக எடுத்துப் போகிறாரா?" என்பதை வேவு பார்ப்பதற்காகவே ஒரு பெருங் கூட்டம் கண்ணாடி வழியே கண் கொத்திப் பாம்பாய்ப் பார்த்திருக்கும். எதையேனும் தூக்கிக் குப்பைத் தொட்டியில் வீசி விட்டால், பத்தாயிரம் மைல் தள்ளிக் கட்டாயம் வெடித்து விடக்கூடிய யுத்த பயத்தில் நாயகன் ஏர்போர்ட் ஆ·பீசரைக் கெஞ்சுவான்: வழிவான்.

கேவலமான காட்சி இது. "கஸ்டம்ஸ் ராமமூர்த்திக்கு இன்னிக்கு நைட்டூட்டி இல்லியா சார்? ஏர்போர்ட் மேனேஜர் கூட என் மாமனாரோட ஒண்ணுவிட்ட தம்பிக்கு ..."

நாயக ’பாவ’த்தைக் கேட்கத்தான் ஆள் இருக்காது.

பரமாத்மா மகாவிஷ்ணுவின் மர தசாவதாரம் அவருடைய பல கைகளாலேயே மடிக்க முடியாத மரப்பாச்சி செட். அற்பர்கள் இரண்டு சோனிக் கையாலா மடிக்கமுடியும்? சியட்டிலில் போயிங் 747 கட்டுபவர்களை நிற்கவைத்துச் சுட வேண்டும். கார்கோ ஹோல்டுக்குள்ளும் போகாமல், கையோடு விமானத்துள்ளும் எடுத்துப் போக முடியாமல், கடாசவும் குடியாமல் பன்னாட்டு விமான நிலையத்தில் பல நாயக நண்பர்கள் அழுது புலம்புவதை நான் கண்ணாரக் கண்டிருக்கிறேன்.

அடியேன் கதையையும் ஒரு முறை சொல்லி அழுது விடுகிறேன். அன்பு வாசகர்கள் உங்களிடம் சொல்லாமல் யாரிடம் நான் சொல்லி அழ? பப்பளக்கும் பலப்பல வைரவைடூரியப் போலி நகைகளுடன் பகவான் வெங்கடாசலபதியை நான் பட வீரப்பன் போல் திருப்பதியிலிருந்தே கடத்துகிறேன் என்று சந்தேகித்த கஸ்டம்ஸ் அதிகாரி ஒருவர் ஒருமுறை என்னைத் தன் மீசையை ஒதுக்கியபடி ஓரங்கட்டினார். நான் பவ்யமாக, 'சார், லார்ட், காட், ஸ்வாமி, உம்மாச்சி, கண்ணைக் குத்திடும்' என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்ததை அவர் கண்டுகொள்ளவில்லை. பூட்சைக்கூடக் கழட்டாமல், அகிலமெல்லாம் தரையில் புரண்டு அங்கப் பிரதசிணம் செய்து தொழும் ஆண்டவனை முதலில் படுக்கவைத்து எம்ஆர்ஐ மாதிரி ஏதோ செய்தார்கள். 'ஒரிஜினல் பாபாலால் டைமண்ட்ஸ்' என்றான் ஒரு ஜுனியர் கஷ்டம்ஸ் பிரகிருதி. நான் முறைத்தேன். 'ஓகோ' என்று பதிலுக்கு என்னை முறைத்து அங்கேயே ஐந்தாறு பேரோடு ஒரு அவசர மீட்டிங் போட்டான்.

பிலிப்ஸ் ஸ்க்ரூ டிரைவர் கிடைக்காமல் நெயில்கட்டர் மாதிரி எதையோ வைத்துப் பகவானை நெம்பி நெம்பிப் பார்த்தார்கள். உலலளந்த பெருமாள் அப்போதும் சிரித்தபடியே இருந்தார். நான் அழ ஆரம்பித்தேன். கடைசிச் சோதனையாக, அப் படத்தை அவர்கள் 220 வோல்ட்டில் செருகித் தீவிரமாக ஆராய முற்பட, அப்பிராந்தியமே பழைய எண்ணெயில் பப்படம் சுட்ட புகை போல கமற, பிரத்தியேகமாக அப்படம் 110 வோல்டேஜுக்காகத் தயாரானது என்கிற உண்மை எல்லோருக்குமே படு லேட்டாக என்னால் சொல்லப்பட.... வேண்டாம், என் சொந்த சோகங்களும், ஜோடித்த சோகங்களும் என்னோடே போகட்டும். நாயகன் கதைக்கே திரும்புவோம். பக்தர்களை ஆண்டவன் ரொம்பவும் தான் ஏர்போர்ட்டில் சோதிக்கிறார்.

அப்பாடு பட்டு அத்தனை சாமிகளையும் பொம்மிகளையும் நம் மதுரை வீரன் எடுத்து வந்து அமெரிக்க லிவிங் ரூம் கார்ப்பெட்டில் வைத்தால், அய்யகோ, அந்தக் காட்சி காண்பவர் எவரையுமே கலங்கடித்து விடும். கை போன கன்னியரையும், தலை இல்லாக் கடவுளரையும், வில்நசுங்கிய வீரராமரையும், வீணையின் தந்தி அறுந்த மீராபாயையும் கண்டு நாயகி பெருங்குரலில் கண்ணகியாய் ஓலமிடுவாள்:

"உங்களுக்குக் கொஞ்சமாவது ஒரு இது இருக்கா? லலிதா புருஷனப் பாருங்க, பெங்களூர்லேருந்து ஒர் சந்தனக் கட்டிலையே பண்ணிக் கொணாந்திருக்காரு. மேட்சிங்கா டைனிங் டேபிள் வேற. நம்ம நளினி புது வீட்ல ரோஸ்வுட் ஊஞ்சல், ஒரு கீறல் இல்லாம வந்து சேரலியா? உங்களுக்கு இதுக்கெல்லாம் சமத்தே போறாதுங்க. சும்மா ரெண்டே ரெண்டு பொம்மை கொண்டு வாங்கன்னா, எல்லாத்தயும் வாங்கி ஒடச்சிக் கூடையில மொத்தமாப் போட்டுக் கொண்டாந்திருக்கீங்க. எங்க அம்மா மனசு என்ன பாடு படும்?"

நம் நண்ப நாயக மனம் படும் பாடு பற்றி எவரும் கிஞ்சித்தும் கவலைப்படார்.

மறு நாள் முதல் ஆ·பீசிலிருந்தும், 'ஆபீஸ் டெப்போ' போன்ற கடைகளிலிருந்தும் கோந்து முதலான ஒட்டு சாமான்கள், குயிக் ·பிக்ஸ், பெயிண்ட் வகையறாக்கள் தருவிக்கப்பட்டு, முதல் உதவி, பேண்டேஜ், எமர்கென்சி அறுவை சிகிச்சை போன்றவை அதே நடுக் கூடத்தில் நடக்க ஆரம்பிக்கும்.

கடவுளர் மீண்டும் உயிர் பெறுவர். நடன மாது சிருங்காரச் சிரிப்புடன் தொட்டவுடன் மீண்டும் நடம் ஆடுவாள். குணப்படுத்தப்பட்ட்ட குதிரைகளேறிக் கண்ணன் மீண்டும் கீதோபதேசம் செய்வான்.

தானே தன் கையால் எல்லாவற்றையும் சரி செய்து விட்டதாக அம்மாவிடம் அவள் பீற்றோ பீற்றென்று பீற்றிக் கொள்ளும்போதும், 'அதனால பரவால்லம்மா, அடுத்த விசிட் இவர் வரும்போது கல்யாண செட்டு வாங்கிக் குடுத்துடுங்க' என்னும்போதும் நாயகன் காட்டவேண்டிய முக பாவம்: வெறும் 'கப்சிப் கபர்தார்' மட்டுமே.

வர்ஷ ருதுவின் புரட்டாசி ஆரம்பத்தில் ப்ரீ-நவராத்திரி வியூயிங் என்று ஒன்று ஐந்திரக் கண்டத்தில் உண்டு. இப்போது எது ·பேஷன், எந்தக் கலர் புடவைக்கு எந்த நகை மேட்சாகும் என்பது போன்ற அத்தியாவசியத் தகவல்கள் தவிர, எந்த சாமிக்கு இந்த வருஷம் மேற் படி ப்ரமோஷன், பார்பி, கென், பொம்மைகளை இந்துத்வாப் படிகளில் வைக்கலாமா, கூடாதா என்றெல்லாம் நங்கையர் கூடிக் கூடிப் பேசுவார்கள்.

எந்தெந்த பொம்மைகளை யார் யார் எப்படி உடைத்து எடுத்து வந்தார்கள், எந்த அன்னை தெரசா அதற்கு எப்படி வைத்தியம் பார்த்தார் என்கிற விபரங்களும் அலசப்படும்.

அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் தான் 'கொலுப்படி கட்டுவது எப்படி?' என்கிற பேச்சு எழுந்தது.

(ஹவாயியில் ஆயுத பூஜைக்குள் முடித்து விடலாம். கவலைப்படாதீர்கள்.)

-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

பி.கு.2: முதல் பி.கு. வுக்கு வந்திருக்கும் அநேக பதில்கள் அலசப்படுகின்றன. பொறுமை, ப்ளீஸ்!

பி.கு: இது ஒரு மீள்பதிவு. நான் நினைவலைகளில் நீந்தி மூழ்கியதன் விளைவு, நீங்களும் அனுபவிக்கிரீர்கள், பாவம்!

4 comments:

ILA (a) இளா said...

அட்டகாசமான ஆரம்பம்னு 2வது பகுதியைத்தான் சொல்லுவேன். ஹ்ம்ம், நல்லாத்தான் எழுதறீங்க :)

துளசி கோபால் said...

நானும் அந்த அலைகளில் நீந்தி, மூழ்கி முத்து எடுத்துக்கிட்டே இருக்கேன்.

என்னென்னெ செட்ன்னு நோட் பண்ணியாச்சு. அடுத்தமுறை கோபால் இந்தியா வரும்போது, 'ஆசையா' எனக்காக வாங்கி வரணுமாம்:-)

Anonymous said...

ஹாஸ்யமான நடை, கீப்-இட்-அப்...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட்ட’ஹாஸ்ய’மாய் இருக்கு!