என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Tuesday, January 05, 2010

ஜக்குபாய், வேட்டைக்காரன் ஆன கதை!

’ஜக்குபாய்’ படத்தில் நான் ஒரு நல்ல வேஷம் கட்டி ஆடி இருப்பதை நாட்டு மக்கள் அனைவருமே அறிவார்கள்! அந்த அளவுக்கு நானும் முடிந்த இடங்களிலெல்லாம் சுய தம்பட்டம் அடித்து நாட்டு மக்களைப் பயமுறுத்தி வந்திருக்கிறேன் என்று தான் நினைக்கிறேன்.

படத்திற்காக சென்ற வருடம் நான் பாங்காக், கோலாலம்பூர், மெல்பர்ன், சென்னை என்றெல்லாம் போய் உலகமெங்கும் நடிப்பைப் பிழிந்துவிட்டு வந்ததை பிபிசி தொடர் ஒளிபரப்பே செய்ய நினைத்ததாகக் கேள்வி. ஒரு தமிழ்ப் பட டப்பிங்கிற்காக ‘எல்லே’யிலிருந்து எல்லை தாண்டி இந்தியா வரை சென்று வந்த என் சாதனை கின்னஸில் பொறிக்கப்படுவதாகவும் நான் ஒரு பின்னிரவில் பியர் மயக்கத்தில் கனவு கண்டேன்.

”அப்படியா? சொல்லவே இல்லையே!” என்று வாய் பிளப்பவர்கள் இப்போதாவது என் அளப்பரிய அருமை, பெருமை, நடிப்புத் திறமை ...வேண்டாம், இத்தோடு நிப்பாட்டிக்கொண்டு ப்ளாக் தலைப்பு மேட்டருக்குள் நுழைகிறேன்.

படம் பிரமாதமாக வந்திருப்பது எனக்குத் தெரியும். படத்தை இன்னமும் முழுதாகப் பார்க்காவிட்டாலும், சில பல பகுதிகளைப் பார்த்து சந்தோஷப்பட்டிருக்கிறேன். சரத், ஷ்ரேயா, இயக்குனர் ரவிக்குமார், ஒளிப்பதிவாளர் ராஜசேகர் என்று எல்லோருடைய அசுர உழைப்பையும், அசாதாரண திறமைகளையும் அருகாமையில் நின்று பார்த்தவன் நான். (என்னுடைய அசுர அல்லது தேவ உழைப்பைப் பற்றி நானே எழுதிக்கொள்ள இந்த பாழாய்ப்போன நாணம் தடுக்கிறது.)

முதலில் படம் ஆகஸ்ட் 15 ரிலீஸ் என்றார்கள். அப்புறம் செப்டம்பர், அப்புறம் அக்டோபர். பின்னர், “இல்லை இல்லை. தீபாவளிக்குக் கண்டிப்பாக” என்றார்கள். ஊஹும். அதுவும் நடக்கவில்லை. அப்புறம் பெரிய கார்த்திகை, சின்னக் கார்த்திகை, அமாவாசை, பௌர்ணமி, சந்திர கிரகணம் என்று ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனதில் பலருக்கும் மன வருத்தம்.

என் அகில உலக ரசிகர்கள் கொதித்தெழுந்ததை நான் உண்ணும்விரதம் மேற்கொண்டு அடக்க நேர்ந்தது. ”தற்கொலையெல்லாம் பண்ணிக்கொள்ளக் கூடாது. பண்ணிக் கொண்டால் அப்புறம் படம் சரியாகத் தெரியாது. பொறுமையாக இருங்கள்” என்று என் ரசிகமணிகளை நான் தடுத்தாட்கொண்டேன்.

கடைசியாக இயக்குனர் K. S. ரவிக்குமாரிடமிருந்தே நான் கேள்விப்பட்ட நம்பகமான ரிலீஸ் தேதி ஜனவரி 14! கடைசி கட்ட எடிட்டிங் வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருவதாக டிசம்பர் கடைசியில் சொன்னார்.

ஜனவரியில் ஊருக்குப் போய் ரிலீஸ் வைபானுவங்களில் திளைத்துத் திக்குமுக்காடிக் கேடயங்கள் பல வாங்கி, புதுத் தயாரிப்பாளர்களிடம் அடுத்த பட அட்வான்ஸ்களை ஸ்விட்சர்லாந்துக்கே நேரே டாலரில் அனுப்பச் சொல்லி .... என்ற என் எண்ண ஓட்டங்களில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது.

எனக்கு ரொம்பவும் அழுவாச்சியாக வருகிறது.

”படம் நெட்டில் கிடைக்கிறதாமே?!” என்று கேட்டு முதலில் சென்ற வாரம் ஒரு லிங்க் அனுப்பினவர் தமிழோவியம் கணேஷ் சந்திரா. எனக்கு ஒரே ஷாக்! அந்த லிங்க் வேலை செய்யவில்லை. செய்திருந்தாலும் நான் அங்கே இருந்து டவுன்லோடு பண்ணிப் பார்த்திருக்க மாட்டேன். கேவலமான ப்ரிண்ட், மழை பெய்யும், ஒளி சொறியும், சவுண்ட் டமாரச் செவிடு ஆகும் அல்லது பாதிப் படத்தில் சொல்லாமல் கொள்ளாமல் ஏதாவது அம்மண சைட்டுக்குத் தாவி என் மனைவியிடம் குட்டு வாங்க வைக்கும் என்பதால் நான் இந்த டவுன்லோட் சமாச்சாரம் பக்கமே தலைவைத்துப் படுப்பதில்லை.

அப்புறம், இந்த ஒரு வாரத்தில் பல பேர் இந்த விவகாரம் பற்றி ”DVD கிடைக்கிறதாமே, அதிலே நீங்கள் இருக்கிறீர்களா? இல்லை, எடிட்டிங்கில் ஷ்ரேயா டான்சை மட்டும் வைத்துக்கொண்டு உங்கள் நடிப்புப் பொழிவை திருட்டு டிவிடிக்காரர்கள் தூக்கி விட்டார்களா?” என்று என்னிடம் கேட்டு விட்டார்கள் அல்லது எனக்கு எழுதி விட்டார்கள்.

இந்த மாதிரி அநியாயங்களெல்லாம் நிகழாமல் இருக்க அமெரிக்காவில் மிகக் கடுமையான சட்ட திட்டங்கள் இருக்கின்றன. மீறுபவர்களை அவை உடனே தண்டிக்கவும் செய்கின்றன. நம் ஊரில் வெறுமனே சட்ட திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. அது தான் பெரிய சோகம். எதற்கெடுத்தாலும் எல்லா தயாரிப்பாளர்களும் முதன் மந்திரி வீட்டுக்குப் படையெடுத்து, சட்டத்தை நிறைவேற்றுங்கள், ப்ளீஸ் என்று கெஞ்சிக் கொண்டிருக்க முடியுமா?

’வேட்டைக்காரன்’ திருட்டு டிவிடிக்களைத் தேடி விஜய் தலைமையில் ஒரு படையும், ‘ஜக்குபாய்’ திருட்டு டிவிடிக்களைத் தேடி நண்பர் சரத் தலைமையில் ஒரு படையும் சென்னையில் அலைந்து திரிந்து, சரத் கையும் களவுமாக ஒருவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்திருப்பதாகவும் செய்திகள் இன்று வெளிவந்திருக்கின்றன.

கோடிக்கணக்கில் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நஷ்டம் ஆவதை எப்படிப் பொறுமையாக பார்த்துக்கொண்டிருக்க முடியும்? தமிழ்நாட்டு நடப்பை நினைத்து அழுவதா சிரிப்பதா தெரியவில்லை!

படம் ரிலீஸ் ஆக மிகவும் தாமதம் ஆனதால். என் நடிப்பை உடனே பார்க்கவேண்டுமென்ற ஆர்வக் கோளாறினால் என் ரசிகர்கள் யாரும் எந்தத் தப்பும் செய்து விடவில்லை என்று மட்டும் உறுதியாக மட்டுமல்ல, இறுதியாக மட்டுமல்ல, அறுதியிட்டும் நான் சொல்லத் தயார்!

6 comments:

ஆயில்யன் said...

//என் நடிப்பை உடனே பார்க்கவேண்டுமென்ற ஆர்வக் கோளாறினால் என் ரசிகர்கள் யாரும் எந்தத் தப்பும் செய்து விடவில்லை //

ஆமாம் !

ஆமாம் உண்மை :)

படம் ப்ரீ ரிலீஸுல முன்னாடி வந்தது தெரிஞ்சு கொதிச்சு போட்ட மாதிரியா இருக்கு பதிவு!

ஒரே சிரிப்பு சிரிப்பால்ல வருது பல வரிகளில்....! :))))

டகிள் பாட்சா said...

ராம்

வர வர உங்களுக்கு ஞாபக மறதி ஜாஸ்தியாகிவிட்டது போலும். முதலில் உங்களுக்கு லின்க் அனுப்பிச்சது நான். பேர் கணேஷ் சந்திராவுக்கா!

அது சரி! கமல் இன்னா புச்சா ஏதோ கண்டுபிடிச்சி உளறியிருக்காரே! தீவிரவாதிகளுக்கும் திருட்டு டிவிடி ஆசாமிகளுக்கும் தொடர்பாமே! நல்ல பூ சுத்தல். தனி மனித பேராசையால் எங்கிருந்தாலும் சுட்டு விற்றுவிடுகிறார்கள். இந்த தடவை ‘ஜக்குபாய்’ ரீரிக்கார்டிங் பண்ணு முன்பே லாபில் இருந்து திருடப்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் போட்டி நடிகர் படம் ரிலீசானால் மொத்தமாக முதல் நாள் ஷோக்களை புக் செய்து மிக குறைந்த விலைக்கு வாசலில் விற்று படத்தை flop செய்யப்பார்ப்பார்கள் சில நடிகர்கள். இப்போது லாபிலும் தியேட்டரிலும் திருடி டிவிடி போட்டோ நெட்டில் போட்டோ எதிரியை பழி வாங்குகிறார்கள். இது உடன் பிறந்தே கொல்லும் வியாதி.பார்ப்பவர்களை பழிப்பது waste.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

அன்புள்ள ஆயில்ஸ்,

இனிமேல் கொதித்து என்ன ஆகப் போகிறது? ‘இடுக்கண் வருங்கால் நகுக’!

ரஜினி சொல்லியிருக்கிற மாதிரி படத்தை உடனடியாக ரிலீஸ் செய்தால், இதையே பப்ளிசிடியாக மாற்றி, வெற்றியாக முடித்து விட முடியுமோ? ஆனால் அதுவும் தயாரிப்பாளர்களுக்குப் பெரிய ரிஸ்க்.

கஷ்டமான முடிவு தான். இல்லையா?

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

டகிள்ஜி,

நீங்களும் பல நல்ல நண்பர்களும் என்னைத் தொடர்பு கொண்டாலும், உண்மையில் ஆராய்ச்சி மணியை முதலில் அடித்தது பிள்ளையார் தான்!

கமல் கமெண்ட்ஸ் ‘பொதுவாக’ என்று நினைக்கிறேன்!

யாருடைய படம் வேதனைக்குள்ளாகிறது என்பது இங்கே முக்கியமில்லை. சட்டம் தன் வேலையை சரிவரச் செய்வதில்லை, குற்றவாளிகள் பேயாட்டம் போடுகிறார்கள் என்பதே உண்மை.

அந்த ‘லேப்’பை அத்தனை பேரும் உடனே புறக்கணிக்க வேண்டாமா? தயாரிப்பாளருக்கு நஷ்ட ஈடு கிடைக்க வேண்டாமா?

Anonymous said...

Kollywood steals stories, scences etc.Has it ever bothered about such unethical acts.

Anonymous said...

I understand that this is a serious issue.But film world has better access to those in power than others.In how many cases has the govt. acted so swiftly.General public wont shed tears for kollywood's problems like this.