என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Friday, February 04, 2005

திருமதிப்பாச்சி -1

கடலூர் தைலாபுரத்தில் டாக்டர் அய்யா ராமதாஸ் அவர்களின் வீடு சாதாரணமாகவே தொண்டர்கள், குண்டர்கள், மரம்வெட்டிகள், காடுவெட்டிகள், கரைவேட்டிகள் என்று பரபரப்பாக இருக்கும். இன்று வழக்கத்தை விட அதிகமாகவே அங்கே பரபரப்பு தென்பட்டது.

'சர்'ரென்று சீறி வந்த காரிலிருந்து திருமாவளவன் இறங்கினார். 'வாழ்க சிறுத்தை அடக்கிய மறத் ...' என்று ஏதோ வாழ்த்த ஆரம்பித்த நாலு பேரையும் பார்த்துச் சீறினார்.

"அடப் போங்கய்யா அப்பால. ஏற்கனியே அந்த அம்மா ஆப்பு மேல ஆப்பா வெக்குது. இவுனுங்க வாழ்த்த வந்துட்டானுங்க."

தடுப்பதற்கு வேட்டி இல்லாததால், பேண்டணிந்த திருமா பரபரவென்று படியேறினார்.

கட்சி ஆஃபீசின் முன் அறையில் ராமதாஸ் கவலையோடு அமர்ந்திருந்தார்.

"வாங்க திருமா. சொல்லி அனுப்பின உடனேயே வந்துட்டீங்க. மேட்டர் சீரியஸ்தான்"

"புரியுதுங்க. அந்த விருமாண்டியாச்சியும் கொஞ்சம் பயந்த ஆளு. 'பாபா' படப் பொட்டிங்கள நாம புடுங்கித் தீவுளி கொண்டாடின மாதிரி ஏதாச்சியும் ஏடாகூடமாச் செஞ்சுடுவம்னு அவருக்குக் கொஞ்சமாச்சியும் பயம் இருந்துது. நாமளும், 'என்னய்யா டைட்டில் வைக்கற? 'மும்பை' தமிளா, இல்லை 'எக்ஸ்பிரஸ்' டமிலாய்யான்னு அவரைக் கலாய்ச்சிகினு ஜாலியா தொழில் பண்ணிகினிருந்தம். இந்த அம்மா இதுல திடீர்னு தலையிட்டு, "யோவ்! ஒயுங்க மொறயா மொதல்ல சன் டீவி, ஸ்டாலின் அல்லாப் பேரையும் மாத்திச் சீர் திருத்தம் பண்ணிட்டு அப்புறமா இங்க வாங்கய்யான்னு கொம்பு சீவி விடுது. டேய் தம்பி, அந்த ஜாக் ஃப்ரூட் ப்ளேட்டை இப்டித் தள்ளுடா. உங்க பேரே வடமொழிப் பேராம், அதை இராமநேசன்னு மொதல்ல மாத்தற வழியப் பாருங்கங்குது பாருங்க, டமாசு"

பாதிப் பலாச் சுளையை வாயில் போட்டிருந்த டாக்டருக்கு அடி நாக்கே கசந்தது. "சமயம் பார்த்து இந்த ஆள் நம்ம பேரு, ஊரு, அட்ரஸு எல்லாத்தையுமே மாத்திடப் பாக்கறாம் பார்ரா" என்று கொதித்தார். அடுத்த சீட் அலாட்மெண்டில் இதை மறக்கக் கூடாதென்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார். கோபத்தை வெளியில் காட்டிக் கொள்ள முடியவில்லை.

"அத விட்டுத் தள்ளுங்க, திருமா. தங்காச்சி அப்படித்தான் எதுனா சொல்லினு கெடக்கும். நாம தான் அண்ணன்காரனா லட்சணமா அத்தையெல்லாம் கண்டுக்கக் கூடாது. பேரு மாத்தறதெல்லாம் அபத்தம்ங்க. உங்க ஒரிஜினல் பேரைச் சொன்னா இப்ப உங்க வூட்லயே கூட யாருக்கும் தெரியாது. நானு உங்கள அவசர அவசரமா எமர்ஜென்சி செஷனுக்குக் கூப்பிட்டதே இந்தத் 'திருமதிப்பாச்சி' மேட்டராங்க."

"அய்யா, அதை நானும் கேள்விப்பட்டேனுங்க. நாடே அமளிதொமளிப்படுது. இந்தப் படம் ரிலீசானப்புறம் அந்த விஜய்ப் பையன் நேரா ஹாலிவுட்டு தான்னு பேசிக்கறாங்க. 'ஒரே ஒரு ரோல் தரேன்னு சொல்லுங்க, இந்தச் சந்திரமுகியையும் ஜக்குபாய் ஆக்கிப்புடறேன்னு ஹைதராபாத்லேருந்து ரஜினி தவிக்கிறாராம். இன்னா கதை, யாரு மியூசிக்கு ஒண்ணுமே புரியலை. அஞ்சு ஹீரோயினாம். விஜய்-த்ரிஷாவோட 'மாமி மாமி, நீதான் என் சுனாமி, இப்பயே இங்கயே காமி காமி'ன்னு ஒரு கெட்டபாட்டு டூயட்டு இருக்குதாம்."

டாக்டர் ஏகக் கடுப்பில் இருந்தார். "நீங்க பேசறதப் பார்த்தா படத்துல ஒரு ஏரியாவாச்சியும் வாங்காம விட மாட்டீங்க போலத் தெரியுது. யாரு ம்யூசிக் போட்டா நமக்கு என்னாங்க? டைட்டில் மொதல்ல தமிழா இல்லியான்னு ஒரு எழவும் புரியலை. அதை டிஸ்கஸ் பண்ண உங்களைக் கூப்பிட்டா, நீங்க படபுராணம் பாடுறீங்க"

திருமா சுதாரித்துக் கொண்டார்.

"மன்னிச்சுக்குங்க டாக்டர். கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன். கையோட ஏழெட்டு தமிழ்ப் புலவர்களையும் புடிச்சிட்டு வந்திருக்கேனில்ல, யோவ் டிரைவர், எங்கய்யா அந்தாளுங்க எல்லாம்?"

சிங்கிள் டீயை மரத்தடியில் சீப்பியிருந்த நாலைந்து பேர் அலறியடித்து ஓடி வந்தார்கள்.

"இவிங்க அல்லாருமே தமிழ் மீடியத்துலயே முதுகலை, மூத்தகலையெல்லாம் முடிச்சி இப்ப வேலையில்லாம மொடங்கிக் கெடக்கறவங்க தான். தாராளமா நீங்களே கேளுங்க"

டாக்டர் பலாக் கொட்டையைத் 'தூ' என்று துப்பினார்.

"ஏன்யா, இன்னாய்யா டைட்டில் வெக்கறான் அந்த பாத்ரூம் பாகவதர்? 'திருமதிப்பாச்சி'ன்னா என்னய்யா அருத்தம்?"

ஒடிசலாக ஓரமாக நின்றிருந்த தமிழ் மூதறிஞர் தொண்டைகொண்டான், தைரியம் வருவதற்காகக் கொஞ்சம் செருமிக் கொண்டார்:

"அய்யா, ஞானறிந்த தமிழ் மொழியில் இதுகாறும் அஃதோர் சொற்பிரயோகங் குறித்துச் செப்பேடுகளில் சுரண்டியாய்ந்து குறிப்பெடுக்குங்கால் மரபில் வழுக்குறித்து மாணாக்கர் தம் சுவடியில் எழுத்தாணி கொண்டிலக்கியம் பகர்ந்தாற்போலே அன்றில்..."

"இந்தாள யாருய்யா உள்ளார விட்டது?" என்றார் மருத்துவர். அவருக்குக் கோபம் தலைக்கேறி விட்டது. "இந்த டைட்டில் என்ன லாங்குவேஜ்னு கேட்டாக்க, இந்த ஆளு எந்த லாங்குவேஜுலயோ பேசி என் பிராணனை வாங்கறான்யா. என்னங்க திருமா, இந்தாளை எங்க புடிச்சீங்க?"

திருமா தன் டிரைவரை முறைத்தார். ஹோல்சேலாக நாலைந்து பேரை ஓட்டுநர் காண்டிராக்டாக ஓட்டி வந்தபோதே அவர் கொஞ்சம் சந்தேகித்திருந்தார். "இரு, இரு, உன்னை அப்புறமா வெச்சிக்கறன்" என்று அவரும் பல்லைக் கடித்தார். அவருடைய டிரைவர் அவசரமாகத் தும்மியபடியே டிக்கிக்குப் பின்புறம் பம்மினார்.

"யாராச்சியும் ஒருத்தர் சொல்லுங்கய்யா, போதும். அந்தட் டைட்டில் தமிழ் தானா?"

'தம் சொந்த இன்ப உற்சாகபான வாசனை பிறற்கெதற்கு?' என்று அடக்கமாகக் கொஞ்சம் வாய் பொத்தி 'மப்'பில் இருந்த தமிழினிப்பேரிடி தரணிக்கொண்டானால் இனியும் வாய் பொத்தி வாளாவிருக்க முடியவில்லை.

"பாத்ரூம்ங்கறது தமிழ் இல்லிங்க. பாகவதர்ங்கறதும் வடமொழிதாங்க. 'குளியலறைக் கதைசொல்லி'ன்னு வேணும்னா அதைத் தமிழாக்கம் பண்ணலாம். அவரு அய்ருங்கரதுனால எப்டி வேணும்னாலும் யாரு வேணும்னாலும் திட்டலாங்க. அவரு தொடச்சிக்கிட்டுப் போயிடுவாரு. அம்மா தலையிடாத வரைக்கும் பிரச்னை இல்லிங்க. பேருல பாத்ரூமுங்கறதுனால இந்தத் திரிசாப் பொண்ணு ..."

"அந்த ஆளை அப்டியே தூக்கிட்டுப் போயி தேவனாம்பட்டிணம் சுனாமிப் பள்ளத்துல தள்ளுய்யா' என்று திருமா கர்ஜித்தார்.

"இதெல்லாம் ஒண்ணும் வேலைக்கு ஆவறதாத் தெரியலிங்க தலைவரே. பத்திரிககைக்காரனுங்க வேற எதுனா அறிக்கை கொடுங்கன்னு மொய்க்கறானுங்க. நானே ஒண்ணு எழுதிட்டு வந்துட்டேன். அதை நீங்க வழக்கமா படிக்கறா மாதிரி மெதுவாப் படிச்சி முடிச்சிடுங்க"

வேண்டாவெறுப்பாக அதை வாங்கிப் பார்த்த மருத்துவர், "அந்த ரிப்போர்ட்டருங்களை உள்ளார வரச் சொல்லுய்யா" என்றார். கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக்கொண்டார். எரிச்சலுடன் படிக்க ஆரம்பித்தார்.

"தமிழ் சினிமாப் படத் தலைப்புகளைத் தனித் தமிழில் மட்டுமே வைத்திடுதல் வேண்டுமென்று நானும் தம்பி இளஞ்சிறுத்தை, வீரச் சிங்கம் திருமாவும் தனித்தோர் போராட்டம் நடத்தித் தரணியெங்கும் வெற்றி முரசு கொட்டி வருவதைத் தமிழகமே அறியும்." போறும்ங்க, திருமா மீதிய நீங்களே படிச்சிடுங்க. எனக்குக் கொஞ்சம் தலை சுத்துது.

மானசீகமான அடுத்த தேர்தல் சீட் அலாட்மெண்டில் கொடுக்கப்போகும் ஒரு சீட்டில் திருமா பாதி சீட்டை அக்கணமே இழந்திருந்தார்.

அது தெரியாத திருமா தொடர்ந்தார்: "திருமதியென்பது தமிழென்பதைச் சிங்களவர் அறிவர். சிங்கப்பூராரும் அறிவர். எமக்கோ, என் கூடத் தோள் கொடுக்க வந்திருக்கும் மருத்துவர் இராமநேசருக்கோ அதில் பிரச்னை இல்லை. ஆனால் அத்தலைப்பின் அடுத்த பாதியில் இருக்கிறது கயவர்களின் சூக்குமம். பச்சைத் தமிழனின் கொடி பாரெங்கும் பரவித் தழைத்து இலெமூரியாக் கண்டத்தை அவன் அடக்கி ஆண்டு வந்தான் ஒரு காலம். குள்ள நரியாம் வடதேச ஆரியர் அங்கே படையெடுத்து வந்து இலெமூரியாவையே அழித்தொழித்தபோது, அவர்கள் தமக்குள்ளே சைகையில் பேசிய மொழியாம் குன்சு. அந்தக் குன்சு மொழியைத் திரும்பவும் வழக்கில் கொண்டு வந்து தமிழினத்தையே வேறோடு அறுத்துப்போட இந்நாள் ஆரியர் செய்யும் தந்திரமே இது என்பதில் எமக்கோ, எங்கள் தானைத் தலைவர்கள் எவருக்குமோ ஐயம் சிறிதுமில்லை. இதை வன்மையாகக் கண்டித்துப் பல போராட்டங்களை எங்கள் கூட்டணித் தலைவர்கள் விரைவில் சென்னையில் வெளியிட இருக்கிறார்கள். வணக்கம், வாழ்க தமிழ், ஒழிக குன்சு."

திருமா அறிக்கையைப் படித்து முடிக்குமுன்னரே அறிவாலயத்திலிருந்தும் டெல்லியிலிருந்தும் பறந்து வந்திருந்த டெலிபோன் கோபக் கணைகளுக்கு மருத்துவர் பதறியபடியே பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்.

(எடுப்போம்)






3 comments:

வானம்பாடி said...

எல்லே சாரு, சந்தடி சாக்குலே தைலாபுரத்தை திண்டிவனத்திலேருந்து கடலூருக்கு மாத்திட்டியேபா. மத்தபடி ரொம்ப டமாசா கீதுபா..

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

மூர்த்திகாரு,

போற போக்குலே எதுனா இப்படிக் கொளுத்திப் போட்டுப் போறியளே, இது ஞாயமா? அது யாருன்னு எனக்குத் தனிமடலாவது போடுங்க, தலையப் பிச்சிக்கிட்டிருக்கேன்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

சுதர்சன்,

சுனாமி வேகத்துல கடலூர் திண்டிவனத்துக்கிட்டயே வந்திருச்சின்னு எதுனா கப்ஸா வுடலாம். ஆனா வோணாம். தப்பைக் கரீட்டாப் புட்சி என் காதைத் திருகினதுக்கு ஒரு டாங்க்ஸ்மா.