என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Monday, December 13, 2004

ஜாக் அய்யர் -1

கோனேரிராஜமங்கலம் கல்யாணசுந்தரம் அய்யர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் இல்லையா? கோனேரிராஜமங்கலம் என்பது திருநெல்வேலிக்கு மிக சமீபம். மனுஷன் ரொம்பவும் சாது. நல்ல தமிழ்ப் பண்டிதர். வடநூல், வானநூல், ஜோதிடம், கர்நாடக சங்கீதம் என்று ய கலைகள் அறுபத்தி நான்கில் அல்மோஸ்ட் ஐம்பதில் படு ஞானஸ்தர்.

பரம்பரையாகவே தாமிரபரணிக் கரையில் வளர்ந்த நல்ல வசதியான குடும்பம். யாரிடமும் கை கட்டி உத்தியோகம் பார்ப்பதெல்லாம் மானபங்கம் என்று நினைக்கிற அளவுக்குச் செல்வமும் செல்வாக்கும் நிறைந்த பரம்பரை. எள்ளுத் தாத்தா, கொள்ளுத் தாத்தா காலத்தில், ‘மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானை கட்டிப்’ போரடித்தார்களாம். அப்புறமாக யானை லத்தி எல்லாம் அள்ளி மாளாமல் சமர்த்தாக டிராக்டர் வாங்கி விட்டார்கள்.

கோமதி மாமி அவருக்கு வாய்த்த தங்கம். மாமியுடைய கள்ளிச்சொட்டு காப்பியும், நளபாகக் கை மணமும், பயந்த சுபாவமும் அந்த ஏரியாவிலேயே மிகப் பிரசித்தம். ரொம்பவும் வாத்ஸல்யமான தம்பதி. திண்ணையில் சீட்டாடும் மாமாவுடைய கண் பார்வையிலேயே குறிப்பறிந்து மாமி 'இன்றைக்கு மத்தியானம் பக்கோடாவா, போண்டாவா, இல்லை புளித்த அடையா?' என்று முடிவு செய்து கல்லை அடுப்பில் போட்டு விடுவாள் என்றால் பாருங்களேன். அப்படிப்பட்ட அந்நியோன்னிய தம்பதிகளுக்கு வெகுநாட்கள் வரை குழந்தை பாக்கியம் இல்லை.

அதனால் குழந்தைப் பேறு வேண்டுமென்று வடக்கே தல யாத்திரை என்று கிளம்பி ஹரித்வார், காசி என்றெல்லாம் சுற்றி விட்டுக் கடைசியில் பூரியும் போய் விட்டு வந்தார்கள்.. பூரி போனபிறகு தான் மாமி வாந்தி எடுக்க ஆரம்பித்தாள். வடக்கத்திய பூரியின் கடலை எண்ணெய் தான் வாந்திக்குக் காரணம் என்று முதலில் சும்மா இருந்துவிட்டார்கள்.

ஆனால் கோமதி மாமி வயிற்றில் புழு, பூச்சி எல்லாம் தோன்றியிருப்பதாக நாட்டு வைத்தியர் சொன்னதும் அவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. பூரி ஜெகன்னாதர் தரிசனம் ப்ராப்தி ஆன பிறகே மாமி கருவுற்றதால் பையன் பிறந்தால் ‘ஜெகந்நாதன்’ என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.

கல்யாணசுந்தர மாமா ஏகப்பட்ட சந்தோஷத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் மேற்சொன்ன ஆய கலைகளில் இன்னொன்றையும் கை வசப்படுத்தலானார்.

அதாகப்பட்டதே சோழிப்ரஸ்ன சாஸ்திரம்.

கை நிறையச் சோழிகளை அடுக்கிக் கொண்டு ‘கலீரெ’ன்று சீட்டுத் திண்ணையில் வீசி எறிந்து அவை அசைந்து விழுந்து ஆடி நிற்கும் வகை, வனப்பு, பாங்கு, நேரம், யோகம், கோணம், பாகை எல்லாவற்றையும் பார்த்துக் கணக்குப் போட்டு ஏதோ ஒரு பழைய சுவடிக் கட்டையும் படித்தபடி மாமா 'ப்ரஸ்னம்' சொல்ல ஆரம்பித்தார்.

சரஸ்வதி கடாட்சமோ, ப்ரஸ்ன தேவதையின் பரிபூர்ண அநுக்ரஹமோ, கொஞ்ச நாளில் அந்தக் கலையில் அவர் மிகத் தேர்ந்து அதிலேயே அமிழ்ந்து மகிழவும் ஆரம்பித்து விட்டார்.

சிமெண்டுத் திண்ணையின் ஈரச் சிலிர்ப்பு, சுவடியின் மக்கல் வாசனை, சோழியின் ‘கலீர்’, கருப்பு சிலேட்டில் பல்ப்பக் கிறுக்கலின் ‘கிறீச்’, தனக்குத்தானே பேச்சு. கடைவாயில் அதக்கிய பன்னீர் வாசனை, நெற்றியில் அன்றரைத்த சந்தனம், அக்குளில் அத்தர் மணம் என்று ஒரு மாதிரியான கதம்ப குதூகல நிர்வாணக் கடைநிலை ஆகிப் போனது அய்யருடைய ப்ரஸ்னானந்தம்.

ஆரம்பத்தில், 'காணாமற்போன கருப்பு எருமை மாடு எந்த வேலியில் எதை மேய்ந்து கொண்டு நிற்கிறது?', 'எதிர்த்த வீட்டுச் சாம்பல் பூனைக்குட்டி எத்தனை குட்டி போடும்?', 'வசந்தா மாமியின் சின்னப் பெண் ஷீலாக்குட்டி எந்த மாதம் ருதுவாவாள்?' போன்கிற லோகாயத விஷயங்களில் ஆரம்பித்து, அவரது ப்ரஸ்ன ஞானம் குறுகிய காலத்திலேயே வெகு விஸ்தாரமாகி விட்டதை மெச்சத்தான் வேண்டும்.

காலையில் பல் தேய்த்து விட்டுக் காப்பிச் சொம்பும், ஹிண்டு பேப்பருமாய் அவர் வந்து திண்ணையில் உட்கார்ந்தால் அந்தத் தெருவே களை கட்ட ஆரம்பித்து விடும்.

"சாமி, மாமரத்தில அணிலையே காணலை. இன்னிக்காவது அணில் கிடைக்குமா, கிடைக்காதா? வெறும் பூனைய எத்தினி நாணைக்குத் துண்றது? ஜோளிய உருட்டுங்க, பார்த்துடுவம்" என்று அணிற் குறவன் கேட்பான்.

'ராமா, ராமா/ என்று தலையில் அடித்துக் கொண்டாலும் அவனுக்கும் அய்யர் ப்ரஸ்னம் பார்க்கத் தவறுவதில்லை.

"ஏம்ப்பா கல்யாணம். இன்னிக்கி 3 மணி ரேசுல அந்தக் கழுதை ‘ப்ளாக் க்வீன்’ எந்தப் ப்ளேஸ்ல வரும்?" என்பார் சாமண்ணா.

“இன்னிக்கி ஆலோடியில நெல்லு உலர்த்தினா மழை கிழை வருமாடா கல்யாணம்? பார்த்துச் சொல்லு” என்பாள் அடுத்த வீட்டுப் பாட்டி.

கல்யாணசுந்தர மாமாவும் சந்தோஷமாய்க் ‘கலீர்’ உருட்டுவார்.

ஆனால், ஆதி சங்கர பகவத் பாத்ர் என்ன சொல்கிறார்? ‘அற்பப் பதரே, பூலோகத்தில் எந்த சந்தோஷமுமே நிலையானது இல்லை’ என்கிறார். அந்தப் ப்ரஸ்ன சந்தோஷத்திற்கும் அங்கே பங்கம் வர ஆரம்பிந்தது.

பங்கம் வந்தது 52 பேரால். அதென்ன 52 என்று ஒரு கணக்கு? இதைக் கொஞ்சம் சொஸ்த விஸ்தாரமாகச் சொல்லவேண்டும். இல்லாவிட்டால் தப்பர்த்தம் ஆகி விடும்.

ஆண்டாண்டு காலமாய்ப் பரம்பரை பரம்பரையாய்க் கல்யாணசுந்தரம் அய்யர் வீட்டுத் திண்ணையில் நடந்து வந்தது ஒரு சீட்டாட்ட சுகானுபவம். கிட்டத்தட்ட கிராமத்துப் பெரிசுகள் எல்லோருமே அதில் அவ்வப்போது பங்கு பெறுவார்கள் என்றாலும் ஒரு நாலைந்து பேர் அதில் நிரந்தர அங்கத்தினர்கள். கிராமத்தில் ஏதாவது காலரா, வைசூரி போன்ற பயங்கரங்கள் எப்போதாவது தலை தூக்கினால் மட்டுமே திண்ணைக்கு லீவு கிடைக்கும். மற்றபடி அடை மழை, அறுவடைக் காலம், கத்திரி வெயில் என்று எதற்கும் லீவு விடுவது வழக்கம் இல்லை. சாக்குப் படுதாவோ, வெட்டிவேர் தட்டியோ, சீசனுக்கு ஏற்றபடி திண்ணை போர்த்திக் கொள்ளும். அல்லது காற்று வாங்கும்.

பண்டிகைக் காலங்களில் தெருவை அடைத்துகத் தென்னங் கீற்றுக் கொட்டகை போட்டு உள்ளே திண்ணையில் குதூகலங்கள் தொடர்வதும் உண்டு.

ஆண்டாண்டு காலமாய்த் திண்ணையில் அரசோச்சி மகிழ்ந்த ஐம்பத்திருவருக்குப் புது வரவாய் வந்தேறிய பிரஸ்னத்தினால் ஏகப்பட்ட நெருக்கடியாகி விட்டது உண்மை. இந்தப் புது பிரஸ்ன பிசினஸ் பிடிக்காத பல நிரந்தரச் சீட்டாட்ட அங்கத்தினர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் பற்கடியோடு பொறுமை காத்தனர். 'மோகம் முப்பது நாள்' மாதிரி இந்தப் 'ப்ரஸ்னம் ஒரே மண்டலத்தில தானாகவே ஓடிப் போயிடும்' என்று பலர் மனப் பால் குடித்தாவர்கள். முகச் சுளிப்புகள் அதிகரித்தன. மாமா சிலேட்டால் முகத்தை மறைத்துக்கொண்டார். சுவடியைச் சத்தம் போட்டு வேறு படிக்க ஆரம்பித்தார். வெற்றிலை, பாக்கு போடாத உறுப்பினர்கள் கூட அடிக்கடி வாசலில் போய்த் துப்பி விட்டுப் பராக்கு பார்த்தபடி சோம்பல் முறிக்க ஆரம்பித்தார்கள். கல்யயணசுந்தரம் கண்டுகொள்வதாயில்லை. 'ப்ரஸ்னேதி கவசம் பாடலி புதரம் இதி மஹா மந்த்ரம்'னு இந்த மகிமை பத்தி அர்த்த சாஸ்திரத்லயே என்ன சொல்றான்னா...' என்று அய்யர் பொழிப்புரையுடன் ஆரம்பிக்கலானார். நொந்து நூலாய்ப் போன மேற்சொன்ன நி. உ. க்கள் வெளிப்படையாகவே கமற ஆரம்பித்தார்கள்.

ஏதாவது புது வரவென்றால் கிராமத்து மைனர்கள் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பார்கள். கண்டு கொள்ளாமல் விட்டுப் பிடிப்பார்கள். ஆனால், மாமாவின் தொடர் ப்ரஸ்னத் தொடுப்பினால் எல்லோருக்குமே ஏகக் கடுப்பாகி விட்டது.

கல்யாணசுந்தரம் அய்யர் சீட்டுக்கும் ப்ரஸ்னத்திற்குமாய் இங்குமங்குமாய் எகிடுதப்பாய்ப் பால் மாறுவது பலருக்கும் பிடிக்கவில்லை.

ஒரிஜினல் சீட்டுத் திண்ணையாக வளர்ந்து மலை போல் நின்ற சிமெண்டுத் திண்ணையில், கொஞ்ச நாட்களாகக் கல்யாணசுந்தரமைய்யர் ஜிலீர் கலீரென்று கண்டமேனிக்கும் சோழிகளை வீசுவதால் ஏற்பட்ட களேபரத்தால், ஆட்டின் குவீன்களும், இஸ்பேடு ராஜாக்களும் திடீரென்று வேட்டிகளுக்கடியிலும் துண்டுகளுக்கு இடையிலுமாகக் காணாமல் போக, சீட்டுக் கிளப் மெம்பர்களிடையே பிரச்னை ஒரு நாள் பெரிசாக வெடித்தது.

எல்லை தாண்டிய ஊடுறுவலை எத்தனை நாள் தான் பொறுத்திருக்க முடியும்? எல்லோரும் வாஜ்பாய் மாதிரி மத்தியானம் தூங்கிக்கொண்டு ஆண்டாண்டு காலமாய் அசமஞ்சமாய் இருந்து ஆட்சியையும் கோட்டை விட்டுப் பேஸ்தடிக்க் முடியுமா?

விசாலமாகப் பெரிதாக இருந்தாலும், இருப்பதோ ஒரே திண்ணை. அங்கே சீட்டா? பிரஸ்னமா? எதற்கு முதன்மை?

இது பற்றித் தீர ஆராய்ந்து உடனே முடிவெடுக்கும்படி உறுப்பினர்களால் ஒரு 'ஒரு நபர் குழு'வொன்று உடனே நிறுவப்பட்டது. அடுத்த ஜமாபந்திக்கு இன்னும் ஆறு மாத காலம் இருப்பதாலும், வேறு உருப்படியான வேலை எதுவுமே இல்லாத காரணத்தாலும், கர்ணம் பதவிக்குரிய பரம்பரை மரியாதையாலும், கிராமத்துக் கர்ணம் கிச்சாமி அக்குழுவின் தலைவரானார். கிச்சாமியின் மூதாதையர் தம் சொத்தில் முக்காலே மூணு வீசத்தைச் சீட்டிலேயே தொலைத்திருப்பதால் அவரே இதற்குத் தக்க தார்மீகத் தலைவர், தம் பக்கமே தீர்ப்புச் சொல்வார் என்று பலரும் உள்ளூர நினைத்ததில் தவறில்லை.

கிச்சாமி ப்ரஸ்னப் பிடாரியை ஊரை விட்டே அடித்து விரட்டப்போவதாகப் பல உறுப்பினர்கள் மனசுக்குள் நினைத்து மகிழ்ந்தார்கள். அவரும் அப்படிச் செய்யத்தான் ஆசைப்பட்டார். ஆனால கல்யாணசுந்தரத்திடம் அவர் கைமாத்தாய் மூவாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருப்பதும், ஏதாவது ஏடாகூடமாகப் 'பதினெட்டுப்பட்டி+அழுக்கு ஜமக்காளம்+நாட்டாமைத் தீர்ப்பு இது தான்யா' என்று சொன்னால் இருக்கிற இரண்டு மா நிலத்தையும், தென்னந்தோப்பையும் கோபத்தில் கல்யாணம் ஜப்தி செய்து விடலாம் என்கிற தொலைநோக்குள்ள நிஜ பயத்தாலும் கிச்சாமி யோசித்து ஒரு நல்ல தீர்ப்பு சொன்னார்.

அதன் வண்ணம் ‘பாதித் திண்ணை சீட்டுக்கு, மீதித் திண்ணை சோழிக்கு’ என்று ஒரு ஜெண்டில்மென்ஸ் அக்ரிமெண்ட் ஒரு வழியாக- பலத்த கோப ஆரவாரங்களுக்கிடையே- ஆர்ஜிதமாகியது.

ஆனாலும், இஸ்ரேல்-பாலஸ்தீன் மாதிரி அதிலும் கசமுசா தொடர்ந்தது. வீசிய சோழிகள் வெறுமனே அந்தரத்தில் நிற்குமா? விசிறியடித்த சீட்டுக்கள் வெகுளியாய்த் தரையில் மல்லாந்து கிடக்குமா? சீட்டுக்கும், சோழிக்கும் லட்சுமண ரேகையா தெரியும்? சாக்பீசால் வரைந்த எல்லைக்கோடு பற்றி அவை கவலையே படவில்லை.

சோழிகள் பாலஸ்தீனத் தற்கொலைப் போராளிகள் மாதிரித் திடீர் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் முன்னேறிச் சீட்டாட்ட வேட்டிகளுக்குள் புகுந்து படுத்தின. கலைத்துப்போட்ட சீட்டுக் கட்டுகளோ இஸ்ரேல் டாங்குகள் போல் சோழிகளின் முன்னேற்றச் சீறலைத் தடைப்படுத்தி அழித்தன. சீட்டு மும்முரத்தில் சாமண்ணா தூள் பகோடா என்று நினைத்துத் தற்கொலைச்சோழிகளை வாயில் போட்டுக்கொண்டு இரண்டு பற்களை இழந்து குழறினார்.

அழிச்சாட்டியமாக வேட்டிக்குள் புகுந்து மர்ம ஸ்தானங்களில் கேலி பேசிக் 'கலீர், ஜிலீரெ'ன்று சிரித்த சோழிகளை அவசரமாக உதறுமுகமாகப் பட்டாமணியம் வேட்டியை அவிழ்த்து உதறப் போக, நடவு வேலை முடிந்து அந்த வழியாக வந்த குடியானவப் பெண்கள் பயந்துபோய் அலற, அன்று காலைதான் வேலியிலிருந்த தன் கோவணத்தைக் காகம் கவர்ந்து போயிருந்ததென்கிற உண்மை அவருக்குத் தாமதமாக நினைவு வர, அதே நேரம் அவருடைய அடிமடியிலிருந்து இரண்டு அதிமுக்கிய துருப்புச் சீட்டுகள் மல்லாந்து வீழ்ந்து அவரைக் காட்டிக்கொடுக்க, 'ஆஹா, திருட்டு படவா" என்று பெரிய பண்ணை சீனு அலற, மொத்தத்தில் ரணகளம். 'விநாச காலே விபரீத சோழீநாம்' என்கிறது ப்ரஸ்னப்ரயோக சாஸ்திரம்.

வார்த்தைகள் தடிக்க ஆரம்பித்தன. கிச்சாமியின் அவசரத் தலையீட்டால் காஷ்மீர அமைதி சில நொடிகளுக்கு நீடித்தது.

ஆனால், "என்னங்காணும் கேயெஸ் அய்யர், எப்பப் பார்த்தாலும் சோழியும் சுவடியுமா பேஸ்தடிக்கிறீர்? ஒழுங்கா ஒரு ஏஸ் கார்டு எறக்கத் துப்பில்லை. பல்ப்பத்தால கிறுக்கிண்டே நேத்திக்குத் துருப்பைப் போட்டுட்டீர்" என்றார் ஒரு ஆயுட்கால நி. உ.

"மோட்டு வளையப் பார்த்துண்டு என்னய்யா சோகமா சம்ஸ்கிருதத்துல பினாத்திண்டிருக்கீர்? க்ளாவர் ராஜாவை எந்த மசிருக்கு எறக்கினீர்?"- ஏற்கனவே சீட்டுச் சேராமல் ஏகக் கடுப்பில் இருந்தது சின்னப் பண்ணை.

வாயில் அடக்கிய புகையிலையைத் துப்பிவிட்டு, வருமுன் காப்போனாகக் கிச்சாமி எதையோ சொல்லுமுன், கோஃபி அன்னன் மாதிரிக் அடக்கப்பட்டுக் கைமர்த்தப்பட்டார்.

"ஓய் கல்யாணம், என் கையில எத்தனை துருப்புச் சீட்டு இருக்குன்னு கரெக்டா ப்ரஸ்னத்தில சொல்லிப்புட்டீர்னாக்க, நான் மொட்டையடிச்சுண்டு ஊரை விட்டே ஓடிடறேன்யா."- இது எதிர் வீட்டு சாமண்ணாவின் கிண்டல் சவால்.

எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

கல்யாணம் மாமாவுக்கு எரிச்சல் தாங்கவில்லை.

'முணு முணு'வென்று ஏதோ மந்திரம் சொல்லி ரோஷத்துடன் சோழிகளை வேகமாக வீசினார். அவை விழுந்து ஓடிக் குலுங்கி நின்றவுடன், தரையோடு தரையாகத் தன் மூக்கைத் தேய்த்து அவற்றின் கோண, பாகை, பாவனை, பிரதேச வாஸ்து எல்லாம் ஆராய்ந்து பார்த்தார். எல்லோரும் இன்னமும் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

சுவடியை நெற்றியில் தட்டிச் சிரித்தபடி கல்யாணம் சொன்னார்: "அடேய் மரமண்டை சாமண்ணா, ப்ரஸ்னப்படி மொத்தம் 3 துருப்பு தான் உன்கிட்ட இருக்கணும். அந்த நாலு கிளாவரையும் துருப்புன்னு நெனச்சுண்டு தப்பாய்ச் சொருகிண்டிருக்காய். தப்பாட்டம் ஆடி இன்னைக்கி வெங்குட்டு கையால செருப்படி வாங்கப் போறாயாக்கும்"

அவ்வளவு நெத்தியடியான மிகச் சரியான யூகத்தைச் சாமண்ணா எதிர்பார்க்கவில்லை. சீட்டுகளை விசிறியடித்தபடி கோபத்தோடு அந்தத் திண்ணையிலிருந்து இறங்கிப்போனவர் போனவர் தான். ஆளையே அப்புறம் காணவில்லை. ஊர்க் கோடியில் நாவிதன் ராசுவிடம் மொட்டை அடித்துக் கொண்டாரா என்கிற மேற்படி விவரம் சரிவரத் தெரியவில்லை.

மொத்தத்தில் சீட்டாட்ட கோஷ்டி நெல்லிக்காய் மூட்டையாய்க் கலைந்து அடுத்த தெரு பட்டாமணியம் வீட்டுக்குக் குடி போனது.

ப்ரஸ்னம் சந்தோஷமாய்த் தனிக் குடித்தனம் ஆரம்பித்தது.

- (இன்னும் வருவார்)

7 comments:

துளசி கோபால் said...

அன்புள்ள ராம்,

அசத்திட்டேள் போங்கோ! அட்டகாசமா வந்திருக்கு!

என்றும் அன்புடன்,
துளசி.

மாயவரத்தான் said...

கோனேரிராஜமங்கலமா...?! திடீர்னு படிச்ச உடனே நான் கோனேரிராஜபுரம்னு நெனச்சிகிட்டு அடிச்சுபிடிச்சு ஓடி வந்தேன்...! (அது எங்க ஊருக்கு பக்கத்திலே இருக்கு! அதான் மண் வாசனை!) சூப்பர் எல்லே சார்!

ரா.கா.கி.யிலே அப்ளிகேஷன் போட்ட போது என்னை 'உள்ளே' விடாம மூணு நாளைக்கு வெச்சிருந்ததை எத்தனை வருஷம் ஆனாலும் மறக்க மாட்டேன் சாரே!!!

- Mayavarathaan @ Subisha (http://mayavarathaan.blogspot.com)

Anonymous said...

¸À¡Ä¢ «ñ½¡ò§¾,
º×츢ÂÁ¡¸£È¢Â¡ ? «í¸É ÍõÁ¡ ¯ì¸¡óÐì¸¢Û þÕó§¾ý.
ƒ¡ì «ö¨ÃÅ¢ðÎ, þí¹É «öƒ¡ì Àñ½¢ôÒðÊí¸§Ç. ¦¿ºÁ¡Ö§Á
«öÂÕ ÝôÀá §º¡Æ¢ ¯ð¼¡÷É¡, ¿£Õ «¨¾Å¢¼ ÝôÀá §º¡ìÌ §º¡ì¸¡¸
±Ù¾¢Ã¢Õ.
«ýÒ¼ý
ºø§À𼡠ºóÐÕ
(Á£.ºó¾¢Ã§º¸Ãý)
À¢.Ì: ¦¸¡ý§ÉâÒÃòÐÄ ´Õ §ÀÁŠ ºí¸£¾ Å¢òÅ¡ý þÕ󾡧áøÄ¢§Â¡,
«Å÷ §À÷ ±ýÉ ?

Anonymous said...

http://tamil.sify.com/amudhasurabi/dec04/fullstory.php?id=13623448

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

துளசியம்மா, உங்களுக்கும் இந்தக் கதை புடிச்சிருக்கறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். ஆமா, இது என்ன இந்த 'நம்மூராளு' என்னவோ புதுக் கரடி வுடறாரே? 'மூணு நாளைக்கி' நான் அவரை உள்ளே விடலியாமே!

ராம்கி அண்ணாச்சி, அது எதுனா முகமூடி கலாட்டா நேரமா இருந்திருக்கலாம். மாடரேட்டர்ங்கற முறையில நான் கொஞ்சம் கண்டிப்பா இருக்கவேண்டிய சூழ்நிலையா இருந்திருக்கலாம். அதையெல்லாம் போயி இன்னும் மனசுல வெச்சுக்கலாமா? மறந்துடுங்கண்ணா. பேர்ல வேற ந்ம்ம தோஸ்தைத் தூக்கி வெச்சிருக்கீங்க, அவரை மாதிரியே உங்களுக்கும்- அதுவும் மாயவரத்தானுக்கு- பெரிய மனசு இருந்தே ஆவணும்ங்கண்ணா.

அப்பால, இந்த சல்பேட்டாக்காரருக்கும் வந்தனமுங்கோ. சாயங்கலாமா எட்டாம் நம்பர் கடைப் பக்கமா வாங்கண்ணா. ஒரு வூடு கட்டி ரவுண்டு போட்டுக்கிட்டே பழைய கதைங்கள்லாம் பேசலாம்.

மொத்தத்துல அத்தினி நண்பருங்களுக்கும் மறுபடி மறுபடியும் வந்தனமுங்கோ, நன்றிங்கோ. பொறவு பார்ப்பம்.

அப்படியே அய்யரு கதை ரெண்டாம் பாகமும் பார்த்துட்டு உங்க கருத்தைச் சொல்லோணும். வர்ட்டா?

என்றும் அன்புடன்,

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

மாயவரத்தான் said...

அண்ணாத்தே...

ரெண்டு மிஸ்டேக்ஸ்...

* ஒண்ணு நான் அந்த 'ரஜினி' ராம்கி இல்ல! அவர் என்னோட தோஸ்த்!
* ரெண்டு...நான் எந்த தப்பும் செஞ்சு அதனால ரா.கா.கி.யிலே நீங்க உள்ளே விடாம இல்லே..! மூணு நாளைக்கு நீங்க ரொம்ப பிஸியா இருந்திருப்பீங்க போலருக்கு! என்ன ஆச்சுன்னு ஒரு நாலஞ்சு மெயில் எழுதின அப்புறம் தான் உறுப்பினரா ஆக்கினீங்க! அதை சொன்னேன்..

அது சரி..யாரது உங்க ப்ரெண்டு?!

நாகு (Nagu) said...

சூப்பரா இருக்கு. நான் ஏதோ அந்த காலத்து புதுமைப்பித்தன் கதையை போட்டிருக்கீங்கன்னு மேலயும் கீழயும் பேரு போட்டிருக்கான்னு பாத்தேன்..