என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Wednesday, October 06, 2004

சர்வாதிகாரியாக நானிருந்தால் ...

'சர்வாதிகாரியாக நானிருந்தால்?'
-------------------------------------------
(லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்)

அழுக்குக்கரை வேட்டியில்
அரைக்கிலோ எண்ணெய்ச்சிக்கோடு
அக்குளில் சிவப்புத்துண்டால்
ஆனந்தமாய் நான் சொறிந்தபடி

தூணில் சாய்ந்திருந்தால்
கானம் இசைத்திருந்தால்
வீணே படுத்திருந்தால்
ஆஹா பொறுக்குமோ சந்தவசந்தம்?

அவசரமாய் எழு சீக்கிரம்
அல்வா கிளறியது போதும்
பொட்டலம் கட்டிப்போடென்று
மிரட்டுகிறார்கள் விரட்டுகிறார்கள்
தர்ம அடியாம் எழுதாவிட்டால்
ஆட்டோ வருமாம்
ஆசையாய்த் தட்டுமாம்

·பாஸ்ட்·பூட் காலமய்யா
நளபாகம் என்ன செய்யும்?
தலைப்பை அவர்களே
தருவார்களாம்
கலப்பையை மட்டும்
நான் ஓட்டினால் போதுமாம்

அடுப்பில்
அண்டா கொதிக்கிறது
ரசம் பதைக்கிறது
ஆங்காங்கே அரிக்கிறது
சொறியவும் நேரமில்லை
செப்புகிறேன் அவசரமாய்

----------------------------

மூத்தோனுக்கும்
மூப்பில்லா
வசந்த இளைஞருக்கும்
முதற்கண்
என் வணக்கம்
---------------------------

'சர்வாதிகாரியாக நானிருந்தால்?'

நான் சொல்லுவது இருக்கட்டுமய்யா
நாடென்ன சொல்லுமிதற்கு
நாமெல்லாம் தெளிவோமென்று
நண்பர்களை முதலில் கேட்டேன்

"எலுமிச்சை தலையில் தேய்
எரவாடிக்கு வேண்டிக்கொள்
வைத்தீஸ்வரனும் பரவாயில்லை
பைத்தியம் தெளிந்துவிடுமெ"ன்று
பகர்ந்தார்கள் கொடியவர்கள்

மங்கை பகர்வாள் உண்மையென்று
மாண்புமுகு மனையாளைக் கேட்டேன்

சிந்திய மூக்கும் சிவந்த கோபமுமாய்
வெடித்துக் குமுறினாள் வேகமாக:
"இப்போது மட்டுமென்ன
இங்கே ஜனநாயகமா?
எனக்குத்தான் நாதியுண்டா?
எல்லாம் என் தலையெழுத்து
எப்போதும் கொத்தடிமை
நாற்பது கிலோவுக்குமேலெனக்கு
நகையுண்டா நட்டுண்டா?
நல்ல காக்ராவில்
நாலைந்து டஜன் தானுண்டா?
ஆயிரம் ஜோடிக்கு மேல்
எனக்குத்தான் செருப்புண்டா?
சர்வாதிகாரி நீர் என்பதில்
சந்தேகம் வேறொரு கேடா?
சாட்சிக்கு வேண்டுமானால் என்
சொந்தங்கள் கூப்பிடவா?"
சதாய்த்தாள் கொதித்தாள்
என் சந்திரபாய் ஜக்குமுகி
பயம் கலந்த பணிவன்புடன்
நான் ஜகா வாங்கினேன்

பணியகத்தில் கேட்டால்தான்
பதில் கிடைக்கும் இதற்கென்று
பகர்ந்தேன் பண்பான
பல தொழிலாளிகளிடமும்

"எப்போது? ஏனிது? எவன் சொன்னது?
பாஸ், நீங்களா? சர்வாதிகாரியா?"
பதறித்தான் போனார்கள் என்
கண்ணின் கருமணிகள்

"சொன்னவன் யார்? சொல்லுங்கள் சீக்கிரம்
அவன் வாயில் போடவேண்டும்
அரைக்கிலோ சர்க்கரை
அப்புறம் தேன் பால்
அப்படியே சிங்கிள் மால்ட்"
ஒரே குரலில் ஓநாய்கள்
பணியிடத்துக் கருங்காலிகள்

உண்மை தெரிய
ஒரே வழிதான் இருக்கிறது

கண்ணாடி முன் நின்றேன்
காதலாகிக் கசிந்துருகினேன்
நரைதெரியா அழகு நண்பா
சிரிக்காமல் சொல்லப்பா
இருந்திருந்து உனக்கென்ன
இருபத்தி ஐந்திருக்குமா?

கண்ணாடி நண்பன்
கண்சிமிட்டிச் சொல்வான்:

சர்வாதிகாரியாக நீயிருந்தால்
ஐம்பதாயிரம் கோடிச்செலவில்
அணைகளோடு நதியிணைப்போ
வெளிநாட்டு மருமகளோ
உள்நாட்டு தாடிச்சிங்கமோ
ஊர்வலமோ வெடிகுண்டோ
அரசியலோ அடிதடியோ
ஒன்றுமே இருக்காதப்பா

பசியோ பட்டினியோ
ஜாதிச் சண்டைகளோ
சாலைகளில் நெரிசலோ
மறந்தே போகுமப்பா

சாலையில் துப்பினால்
நீ கசையடிப்பாய்
ஜிப்பைத் திறந்தாலே
கத்திரி போடுவாய்

சாம்பார் வரும் குழாய்களில்
சட்னி வரும் வீடு தேடி
அனைவருக்கும் பிரியாணி
அவ்வப்போது பொட்டலங்கள்
குழைந்த வயிறுகள்
கும்மென்றாகி விட்டால்
கூப்பாடு குறைந்து விடும்
ஊர்வலங்கள் தூங்கிவிடும்
குறட்டை ஓங்காரத்தில்
அமைதிப்புறா அசைந்தாடும்
நாடே அயர்ந்துவிடும்

சாயங்காலவேளைகளில்
ஊரெங்கும்
உற்சாகம் ஊற்றெடுக்க
உடனே நீ வழி செய்வாய்
சிங்காரச் சென்னையில்
சிருங்காரமும் ரீங்காரமிடும்

ஓடிப்போய் உடனே சொல்லி
ஊரைக்கூட்டியொரு பேட்டி கொடு
பேப்பரைப் பார்க்காதே
தாப்பரைச் சீண்டாதே
அம்மா போல் சீறாதே
அம்மம்மா உன் புகழ்
அகிலமெல்லாம் பரவிவிடும்
அனைவருமே சிரிப்பார்கள்
என்றான்
என் நல்ல நண்பன்


No comments: