என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Sunday, January 31, 2010

ப்ளாகரா, வோர்ட்ப்ரஸ்ஸா?

இரண்டு பெண்டாண்டிக்காரன் மாதிரி இது ஒரு அவஸ்தை என்று தெரியாமல், வோர்ட்ப்ரஸ்ஸிலும் www.writerlaram.com என்றொரு குடித்தனம் போட்டாயிற்று.

இத்தனை நாளாய் இங்கே வருபவர்களை அங்கே வாருங்கள் என்றும் அலைக்கழித்தாயிற்று. இதை இப்படியே ’அம்போ’ என்று விட்டுவிடுவது சரியல்ல, நம் வாசகர்களுக்கு அது நாம் செய்யும் துரோகம் என்று அந்தராத்மா இடித்துரைக்கிறது.

காலைச் சிற்றுண்டி கோபாலபுரத்தில், மதியச் சாப்பாடு சி.ஐ.டி காலனியில் என்றெல்லாம் முதல்வர் மாதிரி சமர்த்தாக வகுத்துக்கொள்ள எனக்குத் தெரியவில்லை. அங்கே இருந்தால் இந்த ஞாபகம், இங்கே வந்தால் அந்த நினைவு என்று அல்லாடுகிறேன்.

இரண்டு இடத்திலும் அதே சாப்பாடு என்று வைத்துக்கொண்டால், அஜீரணமாகி விடாதோ?

இங்கே எந்த மாதிரி மெனு, அங்கே எப்படி எப்படி என்று ஒரே குழப்பம்.

‘ரொம்ப குழப்பமாக இருக்கும்போது, ஜோக்கரைக் கீழே போடு’ என்று ரம்மியில் ஒரு சித்தாந்தம் இருக்கிறது. அப்படி ஏடாகூடமாகப் பண்ணி, இந்தப் பக்கத்து ஆள் முறைக்க, அந்தப் பக்கத்து ஆட்டக்காரர் தொடையில் கிள்ள, ஆட்டமே ரணகளமான நினைவுகளும் என்னை பயமுறுத்துகின்றன.

ஜெயகாந்தனின் பிரபல சிறுகதை தலைப்பு ஒன்றுதான் ஞாபகம் வருகிறது:

நான் என்ன செய்யட்டும், சொல்லுங்கோ?!

Friday, January 15, 2010

ஒரு ஜுரியின் டயரி - 1

Simulcast மாதிரி இது ஒரே நேரத்தில் இங்கேயும் Simulpublish பண்ணப்படுகிறது!

எங்கே?..> www.writerlaram.com

கைதிகள் மட்டும் தான் டயரி எழுத வேண்டும் என்பதில்லை. ஜூரிகளும் எழுதலாம்.

ஜூரி தெரியுமில்லையா, ஜூரி?

'ஜூரி என்றால் என்ன? பூரி மாதிரி ஏதாவது சாப்பிடுகிற பண்டமா? என்று கேட்கப்போகும் அஞ்ஞானிகளுக்கான ஜூரி பற்றிய ஒரு சின்ன ‘விக்கி’ (’விக்கி’ என்றால் என்ன என்று படுத்தக்கூடாது. அப்புறம் சைனாவுக்கே ஆப்பு வைத்துவிட்டு அங்கிருந்து கூகுள் எஸ்கேப் ஆவது போல், நானும் உங்கள் நெட்வொர்க்கை DoS அட்டாக் பண்ணி ப்ரௌவுசரின் டவுசரை அவிழ்த்து விடுவேன், ஜாக்கிரதை!)

மரியா கேரியைத் தெரியும், மர்லின் மன்ரோவைத் தெரியும், ஏஞ்சலீனா ஜோலியைத் தெரியும், ஆனால் ஜூரியைத் தெரியாதா?

என்ன இளிப்புங்கறேன்? ஜூரிங்கறது லேட்டஸ்ட் நடிகை இல்லைங்காணும், ஜுரிங்கறது ஒரு அமெரிக்க சட்ட திட்ட வரைமுறை! அமெரிக்காவில் ‘ஜூரி’ சிஸ்டம் என்று ஒன்று இருக்கிறது.



ஒரு ஜட்ஜ் -ஒரே ஒரு ஜட்ஜ் மட்டும்- ஒரு கேஸை விசாரித்து தீர்ப்பு சொல்வது நம் இந்திய நாட்டு சட்ட முறை. அவர் எக்கச்சக்கமாக சொத்து சேர்த்து வைத்திருக்கலாம், RTI ஆக்டுக்கே அல்வா கொடுத்து மாசக் கணக்கில் டபாய்க்கலாம், ஏக்கர் கணக்கில் வேலி போட்டு ஊரையே வளைத்துப் போட்டிருக்கலாம். அல்லது பத்து பைசா சேர்த்து வைக்காத தக்கணாமுட்டி ஜட்ஜாகவும் இருக்கலாம்.

ஆனால் கோர்ட்டில் அவர் விசாரித்துச் சொல்வது தான் தீர்ப்பு. அந்தத் தீர்ப்பு உங்களுக்குப் பிடிக்காவிட்டால் மேல் கோர்ட்டுக்கு நீங்கள் அப்பீல் செய்கிறேன் என்று நடையாக நடக்கலாம். அங்கேயும் உங்களுக்கு இன்னொரு ஜட்ஜிடம் ஆப்பு தான் என்றால் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகிறேன் பேர்வழி என்று கேஸை இழு இழுவென்று இழுத்தடித்து சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் சம்மன் போட்டே சாகடிக்கலாம். மொத்தத்தில் கேஸ் விசாரணைக்கு வரும்போது அதில் சம்பந்தப்பட்ட அத்தனை பேருமே மண்டையைப் போட்டு விடுவார்கள். இது இந்திய முறை. ரொம்பவும் விளக்கமாக அப்பெல்லேட் கோர்ட், ஜுடிஷியல் பெஞ்ச், கான்ஸ்டிட்யூஷனல் ஸ்டூல் என்றெல்லாம் குருட்டுச் சட்டத்தின் இருட்டு அறைகளில் புகுந்து புறப்பட்டு இது பற்றியெல்லாம் விளக்கமாகச் சொல்வது இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல!

புழுதிக் கிராமத்தில் பதினெட்டுப் பட்டிக்கு நடுவே ஆல மரம், பித்தளைச் சொம்பு, அழுக்கு ஜமக்காளம், அதை விட அழுக்காக ஒரு ஐம்பது பேர் கூடி நின்று ... ‘ என்று தமிழ் சினிமாக்களில் வழக்கமாக வருமே ஒரு சீன், நினைவிருக்கிறதா? ஹீரோவின் நொண்டித் தங்கையை வில்லன் கற்பழித்து விடுவான், அவள் “சொந்த மானம் போனாலும் பரவாயில்லை, என் குடும்ப மானம் பறி போய் விட்டதே” என்று ஒரு பாட்டையும் பாடி நம்மைச் சாவடித்துக் கடைசியில் தூக்கில் தொங்கலாம் என்று ஆரம்பிக்கும்போது, மரக் கதவை உதைத்து வீழ்த்தி, ஹீரோ தங்காச்சியைத் தோளில் தூக்கிச் சுமந்தபடி கொண்டு வந்து மேற்சொன்ன ஆல மரத்தடி அழுக்குக் கும்பலின் நடுவே போட்டு விட்டு, மூச்சு வாங்கியபடி நீதி கேட்பானே, அந்த சீனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

படத்தின் பட்ஜெட்டுக்குத் தக்கபடி ஊர்த் தலையாரியோ, வெட்டியானோ, பஞ்சாயத்து பிரசிடெண்டோ அல்லது பெரிய கவுண்டரோ அங்கே மரத்தடியில் நடுநாயகமாக ’கெத்’தாக உட்கார்ந்து ஒரு சொம்பு தண்ணீரையும் குடித்து முடித்து விட்டுத் தீர்ப்பு சொல்லுவாரே, ஞாபகம் இருக்கிறதா?

‘தாவணி விலகிய தங்கை மீது காமெரா எக்ஸ்ட்ரா க்ளோசப், பிறகு சிவப்புத் துண்டைப் போட்டுத் தாவணி தடுக்காமல் தங்கையைத் தாண்டுவது’, ‘கன்னத்தில் அலகு, நாக்கில் சூடத்தோடு சத்தியம் செய்’, வில்லனே நொ. தங்கையை மணந்து கொள்ளவேண்டும்’ - என்று ‘ஜட்ஜ்’ ஏதாவது தீர்ப்பு சொல்லித் தொலைப்பார். அந்தப் பட மேட்டரை அப்படியே விட்டு விடுவோம். போரடிக்கும் ஒரு பின்னிரவில் அதை நாம் விஜய் டீவியில் பார்த்து அழுது கொள்ளலாம். நமக்கு இங்கே தேவையானது இந்த சிச்சுவேஷனில் நடந்த மேட்டர்.

மேற்படி ஆல மரத்தடி தலையாரி / வெட்டியான் / பிரசிடெண்ட் / கவுண்டர் தான் அங்கே ஜட்ஜ், ஜுரி எல்லாமே. ஜூரர் என்பது ஒருமை. பல ஜூரர்கள் சேர்ந்து ஒரு ஜூரி. மெஜாரிட்டி ஒபினியன் தான் ஜெயிக்கும்.

’ஒரு ஜூரரின் டயரி’ என்றால் ஏதோ ஜன்னிக் கேஸ் மாதிரி எனக்கே பயமாகத் தெரிவதால் ‘ஒரு ஜூரியின் டயரி’.

அப்பாடா, இப்போது தலைப்பை விளக்கியாகி விட்டது. இனிமேலாவது மேட்டருக்கு வருகிறேன்.

இந்தியாவைக் குறுநில மன்னர்கள் கோலோச்சிய காலத்தில் பனிஷ்மெண்ட் என்றால் மாறு கால், மாறு கை, பையனைத் தேர்க்காலில் போட்டு நசுக்கியது, சிபிச் சக்கரவர்த்தி பையன் சதையை கிலோக் கணக்கில் கசாப் வெட்டியது, தேர் சக்கரத்தில் யாரோ யாரையோ நசுக்கியது, கண்ணகி ஒரு சைடு மேட்டரையே திருகி எறிந்தது, அதனால் மதுரையில் தினகரன் எரிந்து சாம்பலானது, மன்னிக்கவும், மதுரையே பற்றி எரிந்தது போன்ற தீர்ப்புக் காட்சிகள்.

வெள்ளைக்காரன் காலத்தில் பழைய மன்னர் சிஸ்டம் எல்லாம் வேஸ்ட், ’ப்ளடி இண்டியன் ப்ரூட்ஸ்’ என்று எல்லாரையும் திட்டி எல்லாவற்றையும் மாற்றினான். இந்த ஜூரி சிஸ்டம் தான் பெஸ்ட் என்று பண்ணினான்.

அமெரிக்காவில் ஆரம்பத்திலிருந்தே இந்த ஜூரி சிஸ்டம் தான். அதுவும் கிரிமினல் கேஸ்களுக்குக் கண்டிப்பாக ஜீரி தான்.

நான் ஜுரி வேலை பார்த்த முதல் அமெரிக்க கேஸ், ‘கலக்கப் போவது யாரு?’

(சட்டம் தன் வேலையைச் செய்யும்)

Wednesday, January 13, 2010

www.writerlaram.com is live now!

’டண்டணக்கா டண்டணக்கா’ன்னு என்ன தலைவா இது? சுய தம்பட்டத்துக்கு ஒரு அளவே இல்லையான்னு நீங்கள் கேட்பது எனக்குப் புரியாமல இல்லை.

அதனால் இன்று, இப்போது அடக்கி வாசிக்கிறேன்!

www.writerlaram.com is live now!

See you there!

இட்லி வடையில் www.writerlaram.com பற்றி!

இன்றைய மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 13-1-2010 ல் நம் புது சைட் பற்றிய இட்லி வடையின் நக்கல்! எனக்குத் தேவை தான்!




இந்த மாதிரி பேரவை
ஆரம்பிக்கும் நோய் போல writerxxx என்று எல்லோரும் ஆரம்பித்துவிடுகிறார்கள். எங்கே நாம இவர்களை ரைட்டர் என்று சொல்ல மாட்டோமோ என்று பயம். இவர்களா ரைட்டர் என்று போடுக்கொள்கிறார்கள். எனக்கு ஒரு டவுட் போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டர் என்று ஒருவர் இருப்பார், அவர்களும் வெப் சைட் ஆரம்பித்தால் ரைட்டர் என்று தான் போட்டுக்கொள்வார்கள். அப்ப நம்ம தமிழ் ரைட்டர்ஸ் பாடு படு திண்டாடம் தான். தற்போதைய புது xxx - laram தப்பா நினைச்சுக்கதீங்க இது அந்த சமாச்சாரம் இல்லை! இப்படியே கலக்கல் கபாலி, பாத்ரூம் பாகவதர் என்று பொங்கல் தினத்திலேர்ந்து நமக்கு எனிமா கொடுத்துவிடுவார்! அப்துல் கலாம் என்னடா என்றால் இளைஞர்கள் எல்லாம் அரசியலுக்கு வாங்க என்கிறார். ஆனால் நம்ம மக்கள் பிளாக் எழுதி அதில அரசியல் செய்கிறார்கள். இளைஞர்கள் ரொம்ப கெட்டுபோய்விட்டார்கள்.

தை பிறந்தால் www.writerlaram.com பிறக்கும்!

”சாதாரண ப்ளாக் ரைட்டருக்கும் உங்களை மாதிரி எழுத்தாளருக்கும் ரொம்ப வித்தியாசம் உண்டு. உங்களை மாதிரி எழுத்தாளரெல்லாம் தனியா சொந்தமா ஒரு சைட் வெச்சுக்கணும்யா” என்று பல நாட்களாக என்னை என் ஆசிரிய நண்பர்கள் உசுப்பேற்றி வந்ததன் பலனை நீங்கள் இனிமேல் அனுபவிக்கப் போகிறீர்கள்!

www.writerlaram.com பொங்கல் ரிலீஸ்!

அப்படியானால் இந்த ப்ளாகின் எதிர்காலம்?

கண்டிப்பாக பொற்காலம் தான், கவலையே படவேண்டாம். (ரொம்பத்தான்! என்னவோ அவனவனும் இதை நினைத்து நினைத்துத் தொண்டையில் சோறு இறங்காமல் தவிக்கிறானுங்களா என்ன? என்ன ஒரு பில்டப்டா சாமி, எனக்கே தாங்கலை!)

ப்ளாகில் எழுத வேண்டிய விஷயங்கள், www.writerlaram.com ல் எழுத வேண்டிய சமாச்சாரங்கள் என்று தனித்தனியே பிரித்து வைத்துக்கொண்டு ரம்பம் போட வேண்டியது தான்!

‘கால் காசுன்னாலும் கவருமெண்டு காசு’ மாதிரி, ‘காணி நிலம் வேண்டும்’ என்று பாரதித் தாத்தா பாடிய மாதிரி, இனிமேல் என் சொந்த சைட், www.writerlaram.com !

அடிக்கடி www.writerlaram.com வருமாறு உங்களை அன்புடன் அழைக்கிறேன்!


Tuesday, January 05, 2010

ஜக்குபாய், வேட்டைக்காரன் ஆன கதை!

’ஜக்குபாய்’ படத்தில் நான் ஒரு நல்ல வேஷம் கட்டி ஆடி இருப்பதை நாட்டு மக்கள் அனைவருமே அறிவார்கள்! அந்த அளவுக்கு நானும் முடிந்த இடங்களிலெல்லாம் சுய தம்பட்டம் அடித்து நாட்டு மக்களைப் பயமுறுத்தி வந்திருக்கிறேன் என்று தான் நினைக்கிறேன்.

படத்திற்காக சென்ற வருடம் நான் பாங்காக், கோலாலம்பூர், மெல்பர்ன், சென்னை என்றெல்லாம் போய் உலகமெங்கும் நடிப்பைப் பிழிந்துவிட்டு வந்ததை பிபிசி தொடர் ஒளிபரப்பே செய்ய நினைத்ததாகக் கேள்வி. ஒரு தமிழ்ப் பட டப்பிங்கிற்காக ‘எல்லே’யிலிருந்து எல்லை தாண்டி இந்தியா வரை சென்று வந்த என் சாதனை கின்னஸில் பொறிக்கப்படுவதாகவும் நான் ஒரு பின்னிரவில் பியர் மயக்கத்தில் கனவு கண்டேன்.

”அப்படியா? சொல்லவே இல்லையே!” என்று வாய் பிளப்பவர்கள் இப்போதாவது என் அளப்பரிய அருமை, பெருமை, நடிப்புத் திறமை ...வேண்டாம், இத்தோடு நிப்பாட்டிக்கொண்டு ப்ளாக் தலைப்பு மேட்டருக்குள் நுழைகிறேன்.

படம் பிரமாதமாக வந்திருப்பது எனக்குத் தெரியும். படத்தை இன்னமும் முழுதாகப் பார்க்காவிட்டாலும், சில பல பகுதிகளைப் பார்த்து சந்தோஷப்பட்டிருக்கிறேன். சரத், ஷ்ரேயா, இயக்குனர் ரவிக்குமார், ஒளிப்பதிவாளர் ராஜசேகர் என்று எல்லோருடைய அசுர உழைப்பையும், அசாதாரண திறமைகளையும் அருகாமையில் நின்று பார்த்தவன் நான். (என்னுடைய அசுர அல்லது தேவ உழைப்பைப் பற்றி நானே எழுதிக்கொள்ள இந்த பாழாய்ப்போன நாணம் தடுக்கிறது.)

முதலில் படம் ஆகஸ்ட் 15 ரிலீஸ் என்றார்கள். அப்புறம் செப்டம்பர், அப்புறம் அக்டோபர். பின்னர், “இல்லை இல்லை. தீபாவளிக்குக் கண்டிப்பாக” என்றார்கள். ஊஹும். அதுவும் நடக்கவில்லை. அப்புறம் பெரிய கார்த்திகை, சின்னக் கார்த்திகை, அமாவாசை, பௌர்ணமி, சந்திர கிரகணம் என்று ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனதில் பலருக்கும் மன வருத்தம்.

என் அகில உலக ரசிகர்கள் கொதித்தெழுந்ததை நான் உண்ணும்விரதம் மேற்கொண்டு அடக்க நேர்ந்தது. ”தற்கொலையெல்லாம் பண்ணிக்கொள்ளக் கூடாது. பண்ணிக் கொண்டால் அப்புறம் படம் சரியாகத் தெரியாது. பொறுமையாக இருங்கள்” என்று என் ரசிகமணிகளை நான் தடுத்தாட்கொண்டேன்.

கடைசியாக இயக்குனர் K. S. ரவிக்குமாரிடமிருந்தே நான் கேள்விப்பட்ட நம்பகமான ரிலீஸ் தேதி ஜனவரி 14! கடைசி கட்ட எடிட்டிங் வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருவதாக டிசம்பர் கடைசியில் சொன்னார்.

ஜனவரியில் ஊருக்குப் போய் ரிலீஸ் வைபானுவங்களில் திளைத்துத் திக்குமுக்காடிக் கேடயங்கள் பல வாங்கி, புதுத் தயாரிப்பாளர்களிடம் அடுத்த பட அட்வான்ஸ்களை ஸ்விட்சர்லாந்துக்கே நேரே டாலரில் அனுப்பச் சொல்லி .... என்ற என் எண்ண ஓட்டங்களில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது.

எனக்கு ரொம்பவும் அழுவாச்சியாக வருகிறது.

”படம் நெட்டில் கிடைக்கிறதாமே?!” என்று கேட்டு முதலில் சென்ற வாரம் ஒரு லிங்க் அனுப்பினவர் தமிழோவியம் கணேஷ் சந்திரா. எனக்கு ஒரே ஷாக்! அந்த லிங்க் வேலை செய்யவில்லை. செய்திருந்தாலும் நான் அங்கே இருந்து டவுன்லோடு பண்ணிப் பார்த்திருக்க மாட்டேன். கேவலமான ப்ரிண்ட், மழை பெய்யும், ஒளி சொறியும், சவுண்ட் டமாரச் செவிடு ஆகும் அல்லது பாதிப் படத்தில் சொல்லாமல் கொள்ளாமல் ஏதாவது அம்மண சைட்டுக்குத் தாவி என் மனைவியிடம் குட்டு வாங்க வைக்கும் என்பதால் நான் இந்த டவுன்லோட் சமாச்சாரம் பக்கமே தலைவைத்துப் படுப்பதில்லை.

அப்புறம், இந்த ஒரு வாரத்தில் பல பேர் இந்த விவகாரம் பற்றி ”DVD கிடைக்கிறதாமே, அதிலே நீங்கள் இருக்கிறீர்களா? இல்லை, எடிட்டிங்கில் ஷ்ரேயா டான்சை மட்டும் வைத்துக்கொண்டு உங்கள் நடிப்புப் பொழிவை திருட்டு டிவிடிக்காரர்கள் தூக்கி விட்டார்களா?” என்று என்னிடம் கேட்டு விட்டார்கள் அல்லது எனக்கு எழுதி விட்டார்கள்.

இந்த மாதிரி அநியாயங்களெல்லாம் நிகழாமல் இருக்க அமெரிக்காவில் மிகக் கடுமையான சட்ட திட்டங்கள் இருக்கின்றன. மீறுபவர்களை அவை உடனே தண்டிக்கவும் செய்கின்றன. நம் ஊரில் வெறுமனே சட்ட திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. அது தான் பெரிய சோகம். எதற்கெடுத்தாலும் எல்லா தயாரிப்பாளர்களும் முதன் மந்திரி வீட்டுக்குப் படையெடுத்து, சட்டத்தை நிறைவேற்றுங்கள், ப்ளீஸ் என்று கெஞ்சிக் கொண்டிருக்க முடியுமா?

’வேட்டைக்காரன்’ திருட்டு டிவிடிக்களைத் தேடி விஜய் தலைமையில் ஒரு படையும், ‘ஜக்குபாய்’ திருட்டு டிவிடிக்களைத் தேடி நண்பர் சரத் தலைமையில் ஒரு படையும் சென்னையில் அலைந்து திரிந்து, சரத் கையும் களவுமாக ஒருவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்திருப்பதாகவும் செய்திகள் இன்று வெளிவந்திருக்கின்றன.

கோடிக்கணக்கில் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நஷ்டம் ஆவதை எப்படிப் பொறுமையாக பார்த்துக்கொண்டிருக்க முடியும்? தமிழ்நாட்டு நடப்பை நினைத்து அழுவதா சிரிப்பதா தெரியவில்லை!

படம் ரிலீஸ் ஆக மிகவும் தாமதம் ஆனதால். என் நடிப்பை உடனே பார்க்கவேண்டுமென்ற ஆர்வக் கோளாறினால் என் ரசிகர்கள் யாரும் எந்தத் தப்பும் செய்து விடவில்லை என்று மட்டும் உறுதியாக மட்டுமல்ல, இறுதியாக மட்டுமல்ல, அறுதியிட்டும் நான் சொல்லத் தயார்!

Sunday, January 03, 2010

தக்கார், தகவிலர், தரூர்!

சஷி தரூரை நான் சென்ற ஆண்டு (2009) ஆரம்பத்தில் சந்தித்தேன்.

அப்போது தான் சென்னையில் ’பிரவஸி பாரதிய திவஸ்’ நடந்து முடிந்திருந்தது

என் சென்னை நண்பன் வீட்டில் ஒரு பார்ட்டி. ஹைகோர்ட் ஜட்ஜ்கள், சென்னையின் பிரபல புள்ளிகள் தவிரவும், தென்னாப்பிரிக்கத் தமிழ் பிசினஸ் புள்ளிகள், தமிழ் சினிமா பேர்வழிகள், ஆங்காங்கே கொஞ்சம் அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள் என்று கலந்து கட்டியான, விவரமான புத்திசாலிக் கூட்டம்.

வாழ்நாளில் பெரும்பாலும் வெளிநாட்டில் கழித்திருந்த, ஐ.நா அமைப்பில் வேலை பார்த்த புத்திசாலி பிரமுகராகவே சஷி எனக்கு அறிமுகமானார். (அப்போது நான் அவருடைய The Great Indian Novel படிக்க ஆரம்பித்திருந்தேன், முடித்திருக்கவில்லை). சஷி, கேரளாவில் காங்கிரஸ் டிக்கெட்டில் நிற்கப்போவதாக அப்போதே பேச்சு அடிபட்டது. அவ்வப்போது இந்தியா வந்து போகும் பெரிய என்ஆர்ஐ புள்ளிகளில் ஒருவராகத் தான் அவர் தெரிந்தார்.

நல்ல நகைச்சுவை உணர்ச்சி, எல்லாவற்றிலும் ஒரு வெளிப்படையான கருத்து என்று ஒரு உருப்படியான ஆளாக இருக்கிறாரே, இவர் இந்திய அரசியல் கட்டாயங்களுக்குள் மாட்டி மீளுவாரா என்கிறாரா சந்தேகம் எனக்கு அப்போதே வந்தது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடியன் எம்.பி. ரூபி தல்லாவை சஷி அனுசரணையுடன் கவனித்துக் கொண்டார். தென்னாப்பிரிக்க பிசினஸ் பார்ட்டிகளுடன் நல்ல அரட்டை. பார்ட்டி நன்றாகக் களை கட்டி இருந்தபோது, சஷியுடன் கொஞ்சம் பர்சனலாக வம்பளக்கவும் நேரம் கிடைத்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் வரும்போது கண்டிப்பாக மீட் பண்ணுவோம் என்றார்.

அதற்கப்புறம், அவர் திருவனந்தபுரத்தில் எலெக்‌ஷனுக்கு நின்று ஜெயித்தது, cattle class பற்றி ட்விட்டரில் கிண்டலடித்தது, அது என்னவென்றே புரியாமல், நம் அசட்டு, அழுமூஞ்சி அம்மாஞ்சி அரசியல்வாதிகள் அவரைக் கண்டித்தது, ராஜிநாமா செய்யச் சொல்லி வற்புறுத்தியது- எல்லாமே நீங்களும் படித்துத் தலையில் அடித்துக் கொண்டிருப்பீர்கள்.

சமீபத்தில் வெளிநாட்டு டூரிஸ்டுகளுக்கு மிகவும் இடைஞ்சல் ஏற்படுத்தக்கூடிய சில விதிமுறை மாற்றங்களை உள்துறை அமைச்சர் சிதம்பரம் அறிவித்தபோது, சஷி உடனே அதைக் கவலையுடன் கண்டித்தது மட்டுமல்லாமல், “மும்பைக்குள் நுழைந்த தீவிரவாதிகள் விசா வைத்திருக்கவில்லை!” என்ற நகைச்சுவை ’ட்வீட்’டுடன் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றினார்.

மறுபடியும் டிவிட்டரா என்று டெல்லியே கலவரப்பட்டது. தியாக ஜோதி அன்னை சோனியா சொன்னாரென்று ஓடிப்போய யாராவது சஷியின் ப்ளாக்ப்பெர்ரியைப் பிடுங்கித் தூர வீசிக் கடலில் எறிந்து விடுவார்களோ என்று நான் கவலை கொண்டேன்.

ஒரு ஜூனியர் அமைச்சர் இது மாதிரி எல்லாம் வெளிப்படையாகப் பேசக்கூடாது என்று சீனியர் எஸ். எம். கிருஷ்ணா அவரைக் கண்டித்ததும், ‘இதையெல்லாம் நாலு சுவர்களுக்குள் மட்டுமே நாம் பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும்’ என்றதும் நீங்களும் படித்திருப்பீர்கள்.

நம் பழுத்த அரசியல் பெருச்சாளிகள் ஊழல் கோமாளிகளையும், கூஜா ஜால்ராக்களையும் மட்டுமே சகித்துக்கொள்வார்கள் என்பது தெரிந்ததே. சஷி தரூரின் புத்திசாலித்தனம் அவர்களால் சகித்துக்கொள்ள முடியாத ஒன்று. He is so out of place among our old jokers!

இந்தியாவின் அபத்த அரசியல் சித்து விளையாட்டுகளை சஷி தரூர் தாக்குப் பிடிப்பாரா? ‘தாவோஸ்’ மாதிரி வேறெங்கும் வெளிநாட்டு ஐ. நா. வேலைகளுக்குத் தாவி விடும் நாள் வெகு தூரத்தில் இல்லையா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Saturday, January 02, 2010

விடுமுறை நாட்களும் இரண்டாம் தரப் பிரஜைகளும்!

சில படிமங்கள், ஆவணங்கள், காசோலைகள் ஆகியவற்றை அவசரமாக இந்தியாவுக்கு அனுப்ப நேர்ந்ததால், இந்த விடுமுறை நாட்களில் FedEx, DHL போன்ற அதியசுரவேக வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ள நேர்ந்தது.

கச்சா எண்ணெய் விலை கன்னா பின்னாவென்று உயர்ந்தபோது, தங்கள் ‘ரேட்’டையும் ஆகாய உயரத்திற்கு அவசரமாக ஏற்றிய இந்த நிறுவனங்கள், ஆயில் விலை ஓரளுவுக்கேனும் குறைந்த பின்னரும், தங்கள் ரேட்டை அப்படியே சொர்க்க உலகத்தில் தான் வைத்திருக்கிறார்கள் என்பது ஒரு பெரிய எரிச்சல்.

என்னைப் போன்ற சாமானியன் எரிச்சல் பட்டு என்ன ஆகப்போகிறது? வர வர கோபத்தில் மனையாளைக் கூட கோபித்துக்கொள்ள முடியவில்லை. பதிலுக்கு முறைக்கிறாள். பசங்கள் ஏற்கனவே நம்மைக் கண்டுகொள்வதில்லை. ஐஸ் கோல்டாக ஒரு சில பியர்களைப் போட்டு வேண்டுமானால் நாம் சமாதி நிலை எய்த முயற்சிக்கலாம்.

$25 க்கு அனுப்பிக் கொண்டிருந்த அதே கடித பார்சல்கள் இப்போது $ 55 - $ 75 என்றால் எரிச்சல் வருமா, வராதா? அதுவும் வேலை நேரங்கள் சரி பாதியாகக் குறைக்கப்பட்டு .... வேண்டாம், டீடெய்ல்ஸ் கேட்காதீர்கள். என் ப்ளட் ப்ரஷர் எகிறுகிறது! ஏகப்பட்ட அலுவலகங்கள் மூடப்பட்டிருப்பது கூகுளுக்கே தெரியாத ரகசியம்.

எந்த ஆபீஸ் எப்போது திறந்திருக்கும் என்று கண்டு பிடிப்பதே தனி சுவாரசியம்.

‘ஒழிந்து போகிறான்கள் இந்த முதலாளித்துவக் கோமாளிகள், நமக்குக் காரியம் ஆகவேண்டும்’ என்று பார்த்தால், விடுமுறை நாட்களில் அவர்கள் அடிக்கும் கூத்தே தனி!

நிஜமாகவே தனித் தனி தான்!

அநேகமாக எல்லா வெள்ளையர்களுமே, அல்லது விஷயம் தெரிந்த மேனேஜ்மெண்டாருமே லீவில்! ‘ஙே’ என்று விழித்துக்கொண்டு ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாத தாற்காலிக வேலையாட்களே ஆங்காங்கே ஆபீஸ்களில் வியாபித்திருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்திலோ, பத்து நாட்களிலோ அவர்களுடைய வேலை காலாவதியாகப் போகின்ற சோகம் அவர்கள் கண்களில் அப்பிக் கிடக்கிறது.

அடித்துப் பிடித்து அலுவலகங்களில் எப்பாடு பட்டேனும் நுழைந்தாலும், அங்கே யாருமே எந்த வேலையுமே செய்வதாகத் தெரியவில்லை.

ஏன் படாத பாடு பாட்டு, எப்பாடு பட்டேனும் நுழையவேண்டும்? திறந்த வீட்டில் ஜிம்மி நுழைவதற்கும் உண்டோ தடை?

யெஸ், யுவர் ஆனர்!

எங்கேயோ ஒரு மட சாம்பிராணி ஆகாய விமானத்தில் எதையாவது எக்குத் தப்பாகப் பண்ணிவிட்டால், அமெரிக்க தேசமே அல்லவா கெக்கே பிக்கேயென்று பிருஷ்ட பாகத்தில் யாரோ கிள்ளி விட்ட மாதிரி துள்ளித் தள்ளாடுகிறது? ஆங்கோர் முட்டாள் கோவணத்தை அவிழ்த்து குச்சியைக் கொளுத்தித் தன்னையே கொளுத்திக் கொண்டதாகக் கேள்விப்பட்டாலே போதுமே, அமெரிக்க நிர்வாகமே அல்லவா பயத்தில் ஸ்தம்பித்துப் போகிறது?

டிஃபென்ஸ் பட்ஜெட்டை ஒரு ஐநூறு மில்லியன் மேலே தூக்கு! எல்லா பாசஞ்சர்களையும் நிர்வாணமாக்கு! அத்தனை பசங்களையும் எக்ஸ்ரே எடு! சீட்டை விட்டு எழுந்தானா, சுட்டுத் தள்ளு! பாத்ரூமையெல்லாம் லாக் அப் செய்! அய்யோ தாங்கலைடா சாமி இந்தக் கெடுபிடி!

அதனால் தான் என் போன்ற அப்பிராணி சாதாரணப் பிரஜைகள் கூட எந்த அலுவலகத்துள்ளும் சுலபமாக ஜிம்மி ஸ்டைலில் வாலாட்டி நுழைய முடிவதில்லை.

‘பஸ்ஸரை அமுக்கு’, ‘பல்லைக்காட்டி இளி’, ‘கையொப்பம் இடு’, ‘காலை அகட்டி நில்’, ‘ஓரமாகப் போ’, ‘உரக்கப் பேசாதே’, ‘கேஷா? நோ, நோ’, ‘க்ரெடிட் கார்டா, நெவர், நெவர்’ என்று ஆங்காங்கே ஏகப்பட்ட புதிய ஆத்திச்சூடி கெடுபிடிகள்!

இத்தனை கெடுபிடிகளையும் தாண்டி நான் கட்டபொம்மன் சிரிப்புடன் நுழைந்தால்,

பால் பாயிண்டால் நகம் சீவுதல், இல்லாத முடியைச் சரிசெய்தல், எதிர்நோக்கிய சுவற்றை முறைத்தே வீழ்த்துதல் போன்ற வீர விளையாட்டுகளில் இப்புது மாந்தர் ஈடுபட்டிருக்கிறார்கள்.

பார்த்தாலே தெரிகிறது, அத்தனை பேருமே கருப்பர் அல்லது மெக்சிகோ தேசத்து சலவாளிகள்! அட, ஒரு சாம்பிளுக்கூட ஒரு வெள்ளைத் தோல் எங்கேயுமே கிடையாது. ஓஹோ, வெள்ளையர்கள் அத்தனை பேருமே ஜாலி வெக்கேஷனில்!

எனக்கு உதவவேண்டும் என்கிற உத்வேகம் கருப்பர்கள் / மெக்சிகன்கள் செயல்பாட்டில் தெரிந்தாலும், “இதெல்லாமே எனக்கும் புச்சு மச்சி, இன்னும் ரெண்டு நாளோ மூணு நாளோ வெரட்டிப் புடுவானுங்க தொரைமாருங்க. நீ வேற ஏன்யா படுத்தற?”- அவர்கள் கண்களில் வெளிப்படையாகத் தெரிந்தது.

ஆனாலும், ஆளாளுக்குப் பாசமாகக் குசலம் விசாரிக்கிறார்கள்: ‘ அடேடே! இந்தியாவா? பலே, பலே! பாரதம் ஒரு புண்ணிய பூமி என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இதை அனுப்ப நீங்கள் ஒரு நாலு நாள் கழிந்து வந்தால் பெட்டர்! மகாத்மா காந்தி நலமாக இருக்கிறாரா? ஹௌ ஈஸ் நேரு?”

“உனக்கு எல்லா விதங்களிலும் உதவ வேண்டும் என்று தான் நினைக்கிறேன், அர்ஜுனா! ஆனால் உன் கர்ம பலன்களிலிருந்து நீ விடுபடப் போவது எங்ஙனம்?” என்று கண்ணனே அங்கலாய்த்தானாமே, அதே விஷுவல் எஃபெக்ட்!

ஊஹும்! என்ன முட்டி மோதிப்பார்த்தாலும், டெம்பரரி ஆட்களின் பாஸ்வோர்ட் வேலை செய்ய மறுக்கிறது, கணினி அவர்களைக் கடுப்படிக்கிறது. “என்னிய வுட்ரு மச்சி, இது சரிப்படாது. நாம வேற ஆட்டம் ஆடலாமா?” என்று டெம்பரரி ஆட்களின் கண்கள் பனிக்கின்றன. அவசரமாக பாத்ரூம் நோக்கிப் படையெடுக்கிறார்கள்.

நான் வேலை முடியாமல் வெளியேறுகிறேன். வெள்ளையர்கள் வெக்கேஷனென்று வெளியேறியதால் ஒரு சமுதாயமே ஸ்தம்பித்தல்லவா நிற்கிறது ?!

Welcome to equality!










Friday, January 01, 2010

யாகாவாராயினும் ஷோ காக்க!

ஹார்வர்ட்!

அகில உலகப் புகழ் பெற்ற பணக்கார அமெரிக்கப் பல்கலைக் கழகம்!

பாஸ்டன் நகரத்தின் அழகுக்கு அழகு சேர்க்கும் மணிமகுடங்கள் ஹார்வர்டும், கேம்ப்ரிட்ஜும் என்றால் மிகை இல்லை.

சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி வருடங்களில் ஒரு நாள்.

பாஸ்டன் நகரத்து நடுக்கும் பேய்க் குளிரில் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஒரு வயோதிக தம்பதி இறங்கி வருகிறார்கள். அவர்களைப் பார்ப்பதற்கே கொஞ்சம் பாவமாக இருக்கிறது. பாவம், பட்டிக்காட்டு தம்பதி என்பது அவர்கள் அணிந்திருந்த கசங்கல் உடை, நடை, பாவனையியிலேயே தெரிகிறது!

அந்தப் பெண்மணி அணிந்திருந்த ஸ்கர்ட் அவர் கையாலேயே தைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்தப் பெரியவர் அணிந்திருந்த தொள தொளா கோட்டிலும் ஆங்காங்கே ஓட்டைகள், ஒட்டுகள்!

மெதுவாக நடந்து வந்து ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் தலைவர் அலுவலக வாசலில் இருவரும் களைப்புடன் உட்காருகிறார்கள்.

காகம் கொண்டுவந்து போட்ட விநோத வஸ்து மாதிரித் தலைவரின் செக்ரட்டரி அவர்களை வேண்டாவெறுப்பாகப் பார்க்கிறார். 'ஏதோ சத்திரத்தில் உண்டைக்கட்டி சாப்பிட வேண்டிய கோஷ்டி இங்கே வந்து ஏன் கழுத்தை அறுக்கிறது? இந்த அழுக்கு கோஷ்டியை உள்ளே விட்டால் தலைவர் நம்மிடம் கோபிப்பாரே?'

"அப்பாயிண்ட்மெண்ட் இருக்கிறதா?"-குரலில் எரிச்சலுடன் கேட்கிறார்.

"இல்லையே."

"அப்படியென்றால் தலைவரைக் காண வெகு நேரமாகும்"

"பரவாயில்லை. காத்திருக்கிறோம்"

"தலைவர் மிகவும் பிஸி, இப்போது அவரைப் பார்க்க முடியாது" என்றால் "பரவாயில்லை, இருந்து பொறுமையாக அவரைப் பார்த்து விட்டே செல்கிறோம்" என்கிறார்களே! என்ன கொடுமை இது?!

மணிக் கணக்கில் அந்த வயோதிக தம்பதி காத்திருக்க நேரிடுகிறது. கடைசியில் தலைவரே வெளியே வந்து எரிச்சலுடன் கேட்கிறார் "உங்களுக்கு என்னதான் வேண்டும்?"

தொண்டையைச் செருமிக்கொண்டு கிழவனார் ஆரம்பிக்கிறார்: "ஒன்றுமில்லை. எங்கள் பையன் இங்கே படித்துக் கொண்டிருந்தான். சின்னப் பையன். 15 வயது தான். துரதிர்ஷ்டவசமாக அவன் இறந்து போய் விட்டான்"

"ஹார்வர்ட் என்றால் அவனுக்கு கொள்ளைப் பிரியம். அதனால், அவன் நினைவாக நாங்கள் ஏதாவது இங்கே செய்ய நினைக்கிறோம். ஒரு சிலை..." அந்த அம்மாள் கொஞ்சம் தயக்கத்துடன் இழுத்தாள்.

"என்னது? செத்துப்போன எல்லா மாணவர்களுக்கும் இங்கே சிலை வைத்தால் இந்த இடம் மயானக் காடாக அல்லவா ஆகி விடும்? இது என்ன பள்ளிக்கூடமா, சுடுகாடா? எங்கள் மரியாதை என்னாவது?"

சற்று நேரம் தயக்கமான மௌனம்.

"சிலை வேண்டாம். சின்னதாக ஒரு கட்டிடம் கட்டித் தரலாமா?"

'என்னது இது, என்ன சொன்னாலும் இந்தக் காட்டான்கள் இங்கேயிருந்து நகர மாட்டார்களோ? இவர்களுக்குக் கொஞ்சம் உறைக்கும்படியாகவே சொல்வோம்'

பல்கலைக்கழகத் தலைவர் இடிச் சிரிப்பு சிரித்தார் : "பட்டிக்காட்டுத்தனமாகப் பேசுகிறீர்களே! ஒரு கட்டிடம் கட்ட என்ன செல்வாகும் தெரியுமா?"

ஒன்றும் பேசாமல் அந்த வயோதிக தம்பதி, தலைவரே மேற்கொண்டும் பேசட்டும் என்று பொறுமையோடு காத்திருந்தார்கள்.

"இது வரை நாங்கள் இங்கே கட்டி இருக்கின்ற கட்டிடங்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?" கை தேர்ந்த நாடகக் கலைஞன் போல் தலைவர் இந்த இடத்தில் அவர்களை ஏளனமாகப் பார்த்து, ஒரு எஃபெக்டுக்காகக் கொஞ்சம் நிறுத்தி உரத்த குரலில் "ஏழரை மில்லியன் டாலர்கள்! அதற்கு எத்தனை சைபர்கள் என்றாவது உங்களுக்குத் தெரியுமா?" என்று ஷோ காட்டினார்!

லேலண்ட் தன் மனைவி ஜேன் பக்கமாகத் திரும்பி அவளை நோக்கினார். "போகலாம் வாருங்கள்" என்றாள் ஜேன்.

"அப்பாடா! சரியான பைத்தியங்கள், நம் பொன்னான நேரத்தை வீணடித்துக் கொண்டு .." என்று சலிப்புடன் தலைவர் உள்ளே திரும்பினார்.

"மொத்தக் கட்டிடங்களின் விலையே அவ்வளவு தானா? வாருங்கள். வெறும் சிலை வேண்டாம். நாம் நம் பையனின் நினைவாக ஒரு பல்கலைக் கழகத்தையே உருவாக்கி விடலாம்" என்றார் ஜேன் ஸ்டான்ஃபர்ட்.

1891ல் அப்படி உருவானது தான் கலிஃபோர்னியாவின் உலகப் புகழ் பெற்ற ஸ்டான்ஃபர்ட் பல்கலைக் கழகம்!